பூ 23:
வேண்டா வெறுப்பாக விஜய்யின் அறைக்குள் சென்ற துளசிக்கு, விஜய் இருந்த நிலையைப் பார்த்து அவளுக்குள் மறைக்கப்பட்டிருந்த உணர்வுகள் அனைத்தும் அவளையறியாமல் வெளியே வந்தது. என்னதான் மனதிற்கு கடிவாளம் போட்டாலும், சில விஷயங்களில் மனம் நம்முடைய பேச்சை மீறித்தான் விடுகிறது. துளசியின் மனமும் இப்போது அவளுடைய உணர்வுகளை வெளியே தள்ளிக் கொண்டிருந்தது.
கொஞ்சம் தயக்கமாக இருந்தாலும், அதை வெளியே காட்டாமல் இருப்பதில் துளசியை மிஞ்ச யாருமில்லை.
“விஜய்..!!” என்றாள் நீண்ட நாட்களுக்குப் பிறகு, குரலில் அவ்வளவு அன்புடன். அவள் இப்படியெல்லாம் பேசி நாட்கள் என்ன ஆண்டுகளே ஆகிவிட்டது. அவளின் குரல் விஜய்யின் காதுகளை எட்டாமல் இருக்க, அவனின் தோளைத் தொட்டு அவனை உலுக்கினாள்.
“விஜய்..!!” என்றாள் மீண்டும். அவளுடைய தொடுதலில் உயிர் வரப்பெற்றவன்,
“ஞான்… என்ன துளசி..?” என்றான். வார்த்தைகளில் கூட இவ்வளவு வெறுமை இருக்குமா என்று அன்று தான் துளசி உணர்ந்தாள்.
“சாப்பிடு..!”
எனக்குப் பசியில்லை துளசி..! வேண்டாம்..! என்று மறுத்து விட்டான் விஜய்.
“நீ இப்படியே இருக்குறதால, போன மாமா திரும்பி வரப் போறதில்லை. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருப்ப..? கொஞ்சமாவது சாப்பிடு விஜய்..!” என்றாள்.
“அவர், என்னாலதான துளசி இறந்தார்? ஒரு மகனா அவருக்கு நான் எதுவும் செய்யலைன்னாலும், அவர் சாவுக்கு காரணமாகாம இருந்திருக்கலாம்..! அந்த குற்ற உணர்ச்சியே என்னைக் கொன்னுட்டு இருக்கு. இதுல சாப்பாடா முக்கியம்..!” என்றான் விரக்தியான குரலில்.
தன்னைப் போலவே அவனும் குற்ற உணர்ச்சியில் இருக்கிறான் என்று நினைக்கும் போதே, துளசிக்கும் கண்கள் கலங்கியது.
“நீ மட்டும் காரணம் இல்லை விஜய்… நானும் ஒரு காரணம் தான்..! நானும் அன்னைக்கு அப்படி நடந்திட்டு இருந்திருக்கக் கூடாது.! உன்னோட வாட்ஸ்அப் எடுத்துப் பாரு. மாமா உனக்கு கண்டிப்பா கடைசியா ஏதாவது மெசேஜ் அனுப்பியிருப்பார். ஏன்னா, எனக்கும் அனுப்பியிருந்தார் ” என்றாள் துளசி கலங்கிய கண்களுடன்.
“என்ன சொல்ற துளசி..?நிஜமாவா..?” என்றவன் பரபரப்புடன் செல்போனைத் தேட,
“இப்ப வேண்டாம் நான் போனதுக்கு அப்பறம் பாரு..! அவர் சொன்னதுல இருந்து எனக்கு ஒன்னே ஒன்னு தான் புரிஞ்சது.. வாழ்க்கையில் எதுவும் நாம தீர்மானிக்கிறது இல்லைன்னு..!” என்றாள்.
அந்த இறுகிய மனநிலையிலும், விஜய்க்கு அவளுடைய பேச்சு, கொஞ்சம் ஆறுதலும், ஆச்சர்யமும் தான். அவளுடைய குணத்தைப் பத்தி தான் நன்றாகத் தெரியுமே..?
“இப்ப நான் என்ன பண்ணனும்..?” என்றான் அவள் கண்களை நேராகப் பார்த்து. அது அவளுக்கு ஒரு புது உணர்வைக் கொடுக்க,
“சாப்பிடனும்..!” என்றாள் பார்வையை லேசாக வேறு புறம் திருப்பி. அவனுக்குத் தெரிந்தவரை துளசி எதையும் கண்களைப் பார்த்து தான் பேசியிருக்கிறாள். சண்டையாக இருந்தாலும், சமாதானமாக இருந்தாலும். இந்த துளசி அவனுக்கு கொஞ்சம் புதிது. ஏன், அவளுக்கே அவள் புதிதாகத் தான் தெரிந்தாள்.
“சரி சாப்பிடுறேன்..!” என்றவன்,
“நீ சாப்பிட்டியா..?” என்றான்.
“இல்லை..!!” என்றாள். (உன்னை சாப்பிட வைக்க சொன்னவங்களுக்கு நான் சாப்பிட்டேனா இல்லையான்னு என்னைக்கு கவலைப்பட்டிருக்காங்க..! என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.)
“அப்போ நீயும் வா..! சேர்ந்தே சாப்பிடலாம்..!” என்று விஜய் சொல்ல, துளசி அந்த நேரத்தில் எந்த பிகுவும் பண்ணவில்லை.சாப்பிட்டு முடித்தவள்,
“எதையும் யோசிக்காம தூங்கு விஜய்..! எது நடக்கணுமோ அது தான் நடக்கும். நாம கவலையோட இருக்குறதால… எதுவும் நடந்துட போறதில்லை…” என்றவள் அங்கிருந்து கிளம்ப,
“துளசி..!” என்ற விஜய்யின் குரலில் திரும்பினாள்.
“தேங்க்ஸ்…!” என்றான். அந்த ‘துளசியும்’ ‘தேங்க்ஸும்’ அவளுக்கு எதையோ உணர்த்த, அவனை ஆழ்ந்து பார்த்தவள்,
“ம்ம்ம்..!” என்று அவள் சொல்ல,
“அப்பறம் இன்னொரு விஷயம்..!” என்று நிறுத்தியவன், அவளின் கண்களைப் பார்த்து,
“உன்னைப் பத்தி வேற யார் கவலைப் படலைன்னாலும், நான் கவலைப் படுவேன்..!” என்றான். துளசி அவனை முறைத்து வைக்க,
“உன்னோட புருஷன் விஜய்யை சொல்லலை. பழைய விஜய் அப்படித்தான இருப்பான். அதைத் தான் சொல்ல வந்தேன்..!” என்றான்.
‘உன்னோட புருஷன் விஜய்’ என்பதை அவன் அழுத்தி சொன்னதைப் போல் தோன்றியது துளசிக்கு.
‘நான் மனசுல நினைக்கிற விஷயம் எல்லாமே உனக்குத் தெரிஞ்சிருந்தா, இவ்வளவு பஞ்சாயத்தே இல்லையே..? நீ ரொம்ப லேட் விஜய்..!’ என்று நினைத்துக் கொண்டவள், வேகமாக அங்கிருந்து சென்று விட்டாள். ஆனால் அவளின் அந்த ஒருநிமிட யோசனை கூட, விஜய்க்கு பலவித யோசனையை ஏற்படுத்தியது.
அவள் சென்ற பின்பு, வேகமாய் போனைத் தேடி எடுத்தவன், அதில் தந்தையின் தகவலைத் தேட, துளசி சொன்னது போல், அவருடைய எண் அவனுக்கான தகவலை தாங்கி நின்றது. அதை வேகமாக ஒப்பன் செய்து படித்தவனுக்கு, மனதில் ஒரு சிறு வலி உண்டானது. அதே சமயம் தன்னைப் பற்றிய அவருடைய புரிதலை எண்ணி கொஞ்சம் ஆறுதல் அடைந்தான்.
“நடந்த விஷயங்களை பிரவீன் சொன்னபோது, கண்டிப்பா நீ அந்த பொண்ணை கல்யாணம் பண்ணியிருக்க மாட்டேன்னு நான் நூறு சதவிகிதம் நம்பினேன் விஜய். என் பையனைப் பத்தி எனக்குத் தெரியாதா..? அந்த நம்பிக்கையில் தான் துளசிக்கும் உனக்கும் கல்யாணன்னு சொன்னப்போ நான் சரின்னு சொன்னேன். எனக்கு உடம்பு என்னவோ பண்ணுது. எனக்கு எது நடந்தாலும் அதுக்கு ஒருபோதும் நீ காரணமாக மாட்ட விஜய். உன்னுடைய கோபம் நியாயமானது. உண்மையை நானாவது உன்கிட்ட சொல்லியிருக்கணும். அதுக்காக இந்த அப்பாவை மன்னிச்சுடு விஜய். என்னை வெறுக்க மட்டும் செஞ்சிடாத. எனக்குன்னு ஒரு ஆசை இருக்குன்னா.. அது வேறென்ன இருக்கப் போகுது..? நீ துளசி கூட சேர்ந்து வாழ்றது தான். மனைவியோட அருமை, இல்லாதவனுக்கு தான் விஜய் தெரியும். நீயும் என்னை மாதிரி ஆகிட கூடாது. கல்யாணம் விளையாட்டு காரியமில்லை. துளசியும் கூடிய சீக்கிரம் இதை புரிஞ்சுப்பா. இந்த அப்பாவோட அன்பு எப்பவுமே உனக்கு இருக்கும் விஜய்..!” என்று முடிந்திருந்தது அந்த தகவல்.
அதைப் படித்த விஜய்க்கு என்னவென்றே சொல்ல முடியாத ஒரு உணர்வு. அதை எப்படி வெளிக் காட்டுவது என்றே அவனுக்குத் தெரியவில்லை. அதைப் பகிர்ந்து கொள்ளவும் அருகில் யாருமில்லை.
‘நீங்க இதை அனுப்பின உடனே நான் பார்த்திருந்தா, ஒருவேளை உங்களை காப்பாத்தியிருக்கலாம்..! எல்லாமே என்னோட முட்டாள் தனத்தால் வந்ததுப்பா..!’ என்று தனக்குத் தானே மறுகிக் கொண்டான் விஜய்.
ராஜசேகரின் இறப்பில் இருந்து மீள, அந்த குடும்பத்திற்கு சில நாட்கள் தேவைப்பட்டது. அதிலும் விஜய்க்கு கொஞ்சம் கூடுதலாகத் தேவைப்பட்டது. அவர் இறந்து முப்பது நாட்கள் ஆகியிருந்தது. அன்று அவருக்கு முப்பதாம் நாள்..செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து முடித்திருந்தனர்.
“நீ ஆபீஸ் கிளம்பு விஜய்..! பிரவீனும், அருணும் எவ்வளவு சமாளிக்க முடியும்..!” என்றார் ரத்னவேல்.
“நாளைக்கு இருந்து நான் ஆபீஸ் வரேன் பிரவீன். என்னால உனக்கு தான் ஜாஸ்தி டென்ஷன்..” என்றான் விஜய்.
“துளசியும் நம்ம கம்பெனிக்கே வரட்டும் விஜய்..” என்று ரத்னவேல் சொல்ல,
“தாத்தா.. நான்தான் அப்பா பிஸ்னஸ பார்த்துட்டு இருக்கேனே..? அப்பறம் எப்படி விஜய் கூட போக முடியும்..?” என்றாள்.
“இனி பிரவீன் அங்க முழுசா பார்க்கட்டும். பிரவீனுக்கு பதில் நீ விஜய் கூட ஆபீஸ் போம்மா..!” என்றார் தாத்தா.
“என்ன தாத்தா..? விளையாடுறிங்களா..? அப்படியெல்லாம் பட்டுன்னு விட்டுட்டு வர முடியாது.” என்றாள் துளசி.
“தாத்தா எதுக்கு சொல்றாருன்னு புரிஞ்சுக்க துளசி. முன்னாடி வேற, இப்ப வேற. இப்ப நீ விஜய்யோட பொண்டாட்டி. அவனோட பிஸ்னஸ பார்க்குறதுல உனக்கு என்ன பிரச்சனை இருக்கப் போகுது..?” என்றார் சுந்தர்.
“சாரி மாமா..! கண்டிப்பா என்னால முடியாது. தாத்தா எதுக்கு சொல்றாருன்னு எனக்கும் தெரியுது. விஜய் கூடவே இருந்தா மட்டும் நான் மனசு மாறிடுவேனா..? டிவேர்ஸ்க்கு கூட ஒரு வருஷம் வெயிட் பண்ணனும். அதான் அமைதியா இருக்கேன். என்னோட அமைதியை நீங்க தப்பா நினைச்சா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது. என்னால முடிஞ்ச அளவுக்கு பொறுமையாவே சொல்லியிருக்கேன்னு நினைக்கிறேன்..!” என்றவள் கிளம்பி வெளியே சென்று விட்டாள்.
“என்ன சுரேஷ்..? துளசி இப்படி பேசிட்டு போறா..? நீங்களும் அமைதியா இருக்கீங்க..?” என்றார் சுந்தர்.
“என்னை என்ன செய்ய சொல்றிங்க மச்சான்..? துளசி மேல இன்னும் எனக்கு நம்பிக்கை இருக்கு. அவளுக்கும் கொஞ்சம் டைம் குடுப்போம்..!” என்று சொல்ல,
“இன்னும் எத்தனை நாளைக்குங்க..?” என்றார் வித்யா. அதுவரை பார்வையாளனாய் இருந்த விஜய்,
“நான் பேசலாமா..?” என்றான். அனைவரும் அவனைப் புரியாமல் பார்க்க,
“யார் சொன்னாலும், சொல்லலைன்னாலும் துளசி தான் எனக்கு மனைவி. அவளை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு நான் பார்த்துக்கறேன். நீங்க எல்லாரும் எங்களைப் பத்தி கவலைப் படுறதை இதோட விட்டுடுங்க..” என்றவன் வித்யாவின் அருகில் சென்று, அவரின் கையைப் பிடித்துக் கொண்டான்.
“என்னைய நம்பித் தான அத்தை அவளை எனக்கு கட்டிக் குடுத்திங்க. அந்த நம்பிக்கை எப்பவும் பொய்யா போகாது. நான் சைன் பண்ணா மட்டும் தான் அவளுக்கு டிவேர்ஸ் கிடைக்கும். அதுக்கு இந்த ஜென்மத்துல வாய்ப்பில்லை. நீங்க எதுக்கும் கவலைப் படாதிங்க..! இதை என் அப்பா இருக்கும் போதே சொல்லியிருந்தா, ஒருவேளை அவர் உயிரோட இருந்திருப்பாரோ என்னவோ..? இதை காரணமா வச்சு, இனி யாருக்கும் எந்த மனக்கஷ்ட்டமும் வேண்டாம்..!” என்றான் தெளிவாக.
விஜய்யின் இந்த தெளிவான பேச்சிலேயே அனைவருக்கும் நம்பிக்கை பிறந்தது. வள்ளிக்கும், ரத்னவேலிற்கும் நீண்ட நாட்களுக்குப் பிறகு முகத்தில் அப்படி ஒரு சந்தோசம்.
“எனக்குத் தெரியும் விஜய். நீ எப்பவும் நாங்க வருத்தப்படுற மாதிரி எதுவும் செய்ய மாட்டேன்னு..!” என்று வள்ளிப் பாட்டி அவனைக் கட்டிக் கொண்டு, கண்ணீர் விட,
“எதையும் நினைக்காம சந்தோஷமா இருங்க பாட்டி. நம்ம வீடு கூடிய சீக்கிரம் பழைய மாதிரி மாறும்.. அதுக்கு நான் பொறுப்பு..!” என்றான் விஜய்.
விஜய்யின் மனதிலும் அது தான் இருந்தது. கடந்த காலத்தை யோசிப்பதை விட, எதிர்காலத்தை எப்படி பிரச்சனையில்லாமல் கொண்டு செல்வது என்பது தான் அவனுடைய யோசனையாக இருந்தது.
அடுத்த நாள் விடியல் அவனுக்கு ஒரு புது விடியலாகவே இருந்தது.
“விஜய் கிளம்பிட்டானா..? இன்னைக்கு அசோசியேஷன் மீட்டிங் இருக்கு. விஜய் கிளம்பலைன்னா நான் தான் போகணும்..!” என்று சொல்லிக் கொண்டிருந்தார் சுந்தர்.
“ஏங்க..? அருணை அனுப்ப வேண்டியது தானே..?” என்றார் நீலா.
“என்ன செய்யனும்ன்னு எனக்குத் தெரியும் நீலா. நீ என்ன எண்ணத்துல இருக்கேன்னு எனக்குப் புரியலை. ஆனா, விஜய் தான் எனக்கு மூத்த பிள்ளை. அதுல எந்த மாற்றமும் இல்லை. உன்னோட சின்ன அசைவை கூட அம்மா கண்டு பிடிச்சுடுவாங்க. பார்த்து நடந்துக்க..!” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“நான் கிளம்பிட்டேன் சுந்தரப்பா..!” என்றபடி சாப்பிட வந்து அமர்ந்தான் விஜய். நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஜம்மென்று வந்தவனை சுந்தர் பாசமாக பார்த்து வைத்தார்.
“இப்போதான் பழைய விஜய்யைப் பார்த்த மாதிரி இருக்கு..!” என்று சுந்தர் சொல்ல,
“இனி எப்பவும் இப்படித்தான் பார்ப்பிங்க சுந்தரப்பா..!” என்று அவன் சொல்ல, விஜய்யின் ‘சித்தப்பா’ இப்போது ‘சுந்தரப்பா’ ஆகியிருப்பதை மனதிற்குள் குறித்துக் கொண்டார்.
“என்ன விஜய்..? ஆபீஸ் கிளம்பியாச்சா..?” என்றபடி வள்ளிப் பாட்டியும், ரத்னவேல் தாத்தாவும் சாப்பிட அமர, அதே நேரத்தில் அங்கு வந்தாள் துளசி.
நீலநிற ஜீனும், வெள்ளை நிறத்தில் முழுக்கை சட்டையும் அணிந்து வர, அவளின் உடையைப் பார்த்த பாட்டிக்கு கொஞ்சம் எரிச்சலாக வந்தது.
“கல்யாணம் ஆய்டுச்சு துளசி. இனியாவது புடவை கட்டலாம்ல..!” என்றார்.
“இன்னைக்கு அசோசியேஷன் மீட்டிங் இருக்கு பாட்டி. அதுக்கு இது தான் சரிப்பட்டு வரும்.” என்றாள்.
“இருந்தாலும்..!” என்று அவர் ஏதோ சொல்ல வர,
“பாட்டி பிளீஸ்..! எனக்கு இது தான் கம்பர்டபிள். நான் காலையில நல்ல மூட்ல கிளம்பிட்டு இருக்கேன். தயவு செஞ்சு அதை ஸ்பாயில் பண்ணிடாதிங்க..!” என்று பொறுமையாகவே சொல்ல, பாட்டி விஜய்யைப் பார்க்க, அவனோ துளசியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
“எந்த டிரஸை போட்டா என்ன..? எல்லாத்துலையும் இவ அநியாயத்துக்கு பிகரா தான் தெரியறா..? நிஜமாவே அப்படித்தான் இருக்காளா..? இல்லை என்னோட கண்ணு சரியில்லையா..?” என்று யோசித்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
அவன் பார்ப்பது துளசிக்கும் தெரிந்து தான் இருந்தது. இருந்தாலும் அவள் வாயைத் திறக்காமல் இருந்ததற்கு காரணம் வள்ளி தான். மறுபடியும் ஆரம்பித்து விடுவார் என்பதால் அமைதியாக இருந்தாள்.
வள்ளி சற்று திரும்பிய நேரம்,
“என்னடா பார்வை..? கண்ணை நோண்டிடுவேன், ஜாக்கிரதை..!” என்றாள் முணுமுணுப்பாக.
“நான் உன்னையப் பார்க்கலை..!” என்றான் அசால்ட்டாய்.
“நீ பார்த்தை நான் பார்த்தேன்னு சொல்ற பழைய லாஜிக்கை எதிர்பார்க்குறியா..?” என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு.
“நான் அப்படி சொல்லவேயில்லை. இப்பவும் சொல்றேன் நான் உன்னைப் பார்க்கலை… என் பொண்டாட்டியைத் தான் பார்த்தேன்..! என்றான் அடக்கிய சிரிப்புடன்.
அவனின் பதிலில் திகைத்தவளுக்கு, பட்டென்று பதில் வரவில்லை.
“ஆங்..! இப்படியே இரு. இந்த அமைதி கூட அழகாத்தான் இருக்கு..!” என்ற விஜய் எழுந்து கைகழுவ சென்று விட்டான்.
“இவனுக்கு திடீர்ன்னு என்ன ஆச்சு..? பேச்செல்லாம் ஒரு மார்க்கமா பேசிட்டு இருக்கான்..?” என்று துளசியும் யோசித்தபடியே எழுந்து செல்ல, எதிரில் வந்த விஜய்யை கவனிக்காமல் அவன் மேல் மோதி விட்டாள்.
“சா..சாரி..!” என்று அவள் விலக,
“இருக்கட்டும் பரவாயில்லை. எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நீ இன்னொரு தடவை மோதணும்ன்னாலும் எனக்கு ஓகே தான்..!” என்ற விஜய் நமட்டு சிரிப்பு சிரிக்க,
“போடாங்..!!” என்று பல்லைக் கடித்தாள்.
“இருந்தாலும் இவ்வளவு மரியாதை ஆகாதுமா..!” என்றபடி கிளம்பிவிட்டான் விஜய்.
“ஏன் விஜய்..? ரெண்டு பேரும் சேர்ந்தே போகலாம்ல..?” என்று வித்யா கேட்க,
“ரெண்டு பேரும் ஒரே ஆபீஸ்ன்னா பரவாயில்லை அத்தை. நீங்க என்ன நினைச்சு சொல்றிங்கன்னு எனக்குப் புரியுது. திடீர்ன்னு எல்லாம் அவளை மாத்த முடியாது. கொஞ்சம் கொஞ்சமாதான் மாத்த முடியும்..” என்றவன்,கிளம்பிவிட்டான்.
“எங்கம்மா அவன்..?” என்று கடுப்புடன் வந்தாள் துளசி.
“என்ன துளசி இது..? இன்னுமா அவன் இவன்னு பேசிட்டு இருக்க..? பேர் சொல்லி கூட கூப்பிடாத. மாமான்னு சொல்லு, முடியலையா போங்க வாங்கன்னு பேசிப் பழகு..!” என்றார்.
“எப்பா சாமி..! இந்த வீட்ல யாருகிட்ட நின்னு பேசுனாலும் அறிவுரையை அவுத்து விட்டுறிங்க. ஆளை விடுங்கப்பா..!” என்றவள், அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை.
கனகவேல் வீட்டில்…
“அப்பா இன்னைக்கு அசோசியேஷன் மீட்டிங் இருக்குப்பா..!” என்று திவ்யா சொல்ல,
“விமலை கூட்டிட்டு போமா. அவனுக்கு எல்லாமே தெரியும்..! நான் சென்னை கிளம்புறேன்மா. கட்சி மீட்டிங் இருக்கு..!” என்றார்.
“என்னப்பா நீங்க..? எதுக்கெடுத்தாலும் விமலை கூட்டிட்டு போக சொல்றிங்க..?” என்று எரிச்சலடைந்தாள் திவ்யா. அந்த எரிச்சலுக்குக் காரணம் அவனுடைய சமீபத்திய நடவடிக்கைகள் தான்.
விஜய்-துளசி கல்யாணம் நடந்ததில் இருந்து விமலின் போக்கு எதுவும் திவ்யாவுக்குப் பிடிக்கவில்லை. அவனுடைய முகத்தில் ஏதோ ஒன்று இருப்பதாகவே அவளுக்குப் பட்டது. விமலின் குணம் பற்றியும் அவளுக்குத் தான் நன்றாகத் தெரியுமே. திவ்யா எப்படியும் விமலுக்குத் தான் என்ற எண்ணத்தில் அவன் சுற்றுவதாகவே அவளுக்குப் பட்டது.
“இப்ப ஏன் திவ்யா இவ்வளவு கோபம் உனக்கு..? மாமா ஒன்னும் தப்பா சொல்லலையே..?” என்றான் விமல்.
“அவர் சரியா சொன்னதாகவும் எனக்கு நியாபகம் இல்லை. உங்களுக்கு..? நான் அவர்கிட்ட பேசிட்டு இருக்கும் போது.. இடையில நீங்க ஏன் வரீங்க..?” என்று திவ்யா கேட்க,
“சாரி மாமா..! என்ன இருந்தாலும் உங்க தொழில், உங்க குடும்பம். அதுல நான் தலையிட்டது தப்புத்தான் மாமா..!” என்று அவன் வருத்தமான குரலில் பேச, கனகவேலிற்கு கோபம் வந்தது.
“என்ன திவ்யா..? விமல் யாரு..? நான் பார்த்து வளர்த்த பையன். என்னோட தங்கச்சிப் பையன். அவனை இப்படி எடுத்தெறிஞ்சு பேசாத. உனக்குக் கல்யாணம் ஆகி, வரப் போற மருமகன் கிட்ட பொறுப்பை ஒப்படைக்கிற வரைக்கும் விமல் தான எல்லாத்தையும் பார்த்துக்கணும்..!” என்று கனகவேல் சொல்ல, விமலைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தாள் திவ்யா.
“அது என்னவோ உண்மைதான்ப்பா..! கவலைப் படாதிங்க விமல் மாமா, இந்த பொறுப்பு எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான் அப்பறம் நீங்க நினைச்ச மாதிரி கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கலாம்..! இல்லையாப்பா..!” என்றாள்.
“ஆமாம்ம்மா..!” என்று அவர் சொல்ல, அவர்கள் இருவரின் பேச்சிலும், விமலுக்கு உள்ளே எறிந்தது.
“யோவ் மாமா..? என்னா வில்லத்தனம் உனக்கு. உனக்கு செருப்பா இருந்து வேலை பார்க்குறவன் நானு. உனக்கு வேற மாப்பிள்ளை கேட்குதா…? இப்பக் கூட என்னோட நியாபகம் உனக்கு வரலைல. உன்னை கவனிச்சுக்கிறேன்யா.” என்று அவரைப் பார்த்து மனதிற்குள் கருவிக் கொண்டவன், திவ்யாவைப் பார்த்தும் சிரித்து வைத்தான்.
“அப்போ நம்ம கிளம்பலாமா திவ்யா..?” என்றான் விமல்.
“ஹோ..! ஷயர் மாமா. இன்னைக்கு டிரைவர் வேற லீவு. நீங்களே காரை எடுங்களேன். நான் இப்போ வந்திடுறேன்..!” என்று அவளும் பாலீசாக பேசி வைக்க,
“நான் உனக்கு டிரைவரா..? உனக்கு இருக்குடி. அன்னைக்குத் தெரியும் இந்த விமல் யாருன்னு..!” என்று நினைத்துக் கொண்டவன் காரை எடுக்க சென்றான்.
“விமல் ஏதாவது பிரச்சனை பன்றானா திவ்யா..?” என்றார் கனகவேல்.
“என்னப்பா திடீர்ன்னு இப்படி கேட்குறிங்க..?”
“இல்ல..! அவனைப் பார்த்தாலே இப்பல்லாம் கடுப்பாகுறியே அதான் கேட்டேன்..!” என்றவர்,
“அசோசியேஷன் மீட்டிங்ன்னா… அந்த RRS பேமிலியும் வரும். தேவையில்லாம போய் அவங்ககிட்ட வம்பை வளர்க்காதம்மா..!” என்றார்.
“அவனுங்க வருவது கொஞ்சம் சந்தேகம் தான் டாடி..! ஒரு கலவர கல்யாணம், ஒரு சாவு விழுந்திருக்கு. இதையெல்லாம் அவனுக தாண்டி வரவே இன்னும் நாள் பிடிக்கும்..!” என்றாள்.
“இவ்வளவு தாம்மா உனக்குத் தெரிஞ்ச விபரம். உன்னை விட அந்த குடும்பத்தைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். நீ ஏதும் வம்பை கூட்டாம இருந்தா சரி..!” என்பதோடு விட்டுவிட்டார்.
கனகவேலின் மகளுக்கு சொல்லியா தரவேண்டும்..?
அந்த மீட்டிங்கில் துளசி ஏற்கனவே வந்து அமர்ந்திருக்க, உடன் வருவதாய் சொன்ன சுரேஷ் வரவில்லை.
திவ்யா மற்றும் விமலின் கண்ணில் முதலில் பட்டது துளசி தான். அவர்களைப் பார்த்தவுடன் அவள் கால் மேல் கால் போட்டு அமர, அதைப் பார்த்த திவ்யாவுக்கு உள்ளுக்குள் அப்படியே தீப்பிடித்தார் போன்று எறிந்தது.
“என்ன..? இவ வரமாட்டான்னு நினைச்சா.. ஆளுக்கு முன்னாடி வந்து உட்கார்ந்திருக்கா..?” என்று மனதிற்குள் கறுவிக் கொண்டே திவ்யா சென்று அமர, அவளுக்குப் பின்னால் வந்த விமல், துளசியை பார்த்துக் கொண்டே வந்து அவளின் அருகில் அமரப் போக, துளசி அவனை முறைத்த முறைப்பில் அப்படியே பின்வாங்கி, எதிர்புறம் சென்று அமர்ந்தான்.
விஜய்யும், பிரவீனும் ஒன்றாய் உள்ளே நுழைய… விஜய்யைப் பார்த்த திவ்யாவிற்கு இப்போதும் அவனை அவ்வளவு பிடித்தது. அவளுடைய பார்வையில் அவன் அடுத்த பெண்ணின் கணவன் என்கிற எண்ணம் சுத்தமாக இல்லை.
வந்தவன் துளசியின் அருகில் உரிமையாக அமர, துளசிக்கு உள்ளுக்குள் ஏதோ தடம் புரண்டது. ஒருபுறம் கணவன் மறுபுறம் அண்ணன் என அமர்ந்திருந்தவளைப் பார்த்த திவ்யாவிற்கு அப்படி ஒரு எரிச்சல்.
‘வரமாட்டாங்கன்னு பார்த்தா.. வந்து ஜோடியா உட்கார்ந்திருக்காங்க..!’ என்று முனுமுனுக்க,
“என்ன திவ்யா..? அவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டு பிரிஞ்சிருப்பாங்கன்னு சொன்ன..? இங்க என்னடான்னா ஜோடிப்புறா மாதிரி வந்திருக்காங்க..!” என்றான் விமல் நக்கல் குரலில்.
“என்ன கிண்டலா..? செம்ம கடுப்புல இருக்கேன். மரியாதையா அமைதியா இருந்துக்குங்க..!” என்றாள்.
“நான் என்ன சொல்ல வரேன்னா..?” என்று அவன் இழுக்க,
“ஒன்னும் சொல்ல வேண்டாம்..!”
அவள் பார்க்கிறாள் என்று தெரிந்து தானோ என்னவோ, விஜய் மேலும் நெருங்கி அமர்ந்தான். துளசியின் தோளோடு தோள் உரசிக் கொண்டிருக்க, துளசிக்குத் தான் அவஸ்தையாய் இருந்தது.
“இப்ப எதுக்கு தள்ளிட்டே வர விஜய்..? இது மீட்டிங் ஹால். பார்க்குறவங்க என்ன நினைப்பாங்க..?” என்றாள்.
“அவனுக வயிர் எறியணும்ன்னு தான் உரசுறதே..!” என்று துளசியின் பக்கம் திரும்பி அவன் முனுமுனுக்க, துளசிக்கு அது புது வித அவஸ்தையை கொடுத்தது. அந்த மீட்டிங் முடியும் வரை திவ்யாவின் கவனம் இவர்கள் மேல் தான் இருந்தது.
இன்று, தான் செமத்தியாய் வாங்கப் போவதை அறியாத விமலும், அவ்வப்போது துளசியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.