பூ 25:
வீட்டிற்கு கோபமாக சென்ற திவ்யா, யாரிடமும் பேசாமல் நேராக சென்று அறைக்குள் முடங்கினாள். விமலும் எரிச்சலுடன் இருந்ததால் அப்படியே அமர்ந்திருந்தான். கனகவேல் அப்போது தான் சென்னை கிளம்பிக் கொண்டிருந்தார்.
“என்ன? திவ்யா அதுக்குள்ள வந்துட்டா? மீட்டிங் முடிஞ்சதா..? அசோசியேஷன் எலக்சன் வேற வருதுல்ல. அதைப்பத்தி அங்க ஏதும் பேசினாங்களா..? இந்த தடவை யார் எலக்சன்ல நாமினேட் ஆகியிருக்கா..?” என்றார் விமலைப் பார்த்து. அவன் பதில் எதுவும் சொல்லாமல் அப்படியே அவரைப் பார்த்திருக்க, அவன் பதில் சொல்லாததால் சற்று கோபமாய் பார்த்தார் கனகவேல்.
“உன்கிட்ட தான் கேட்குறேன் விமல். என்ன நடந்தது..? திவ்யா எங்க..?” என்று அவர் மீண்டும் கேட்க,
“திவ்யா வந்த உடனே ரூம்குள்ள போய்ட்டாங்க. சாப்பிடவும் வரலை. எதுவும் பேசவும் இல்லை. விமலும் அப்ப இருந்து இப்படித்தான் உட்கார்ந்திருக்கான்..” என்று ராதிகா சொல்ல, விமலின் முகத்தைப் பார்த்து யோசனைக்கு சென்றவர்,
“அங்க விஜய் வந்திருந்தானா..?” என்றார் சரியாக.
“ஆமா..!” என்றான் விமல் எரிச்சலாய்.
“என்ன விமல்..? மாமா கேட்குறதுக்கு இப்படி பதில் சொல்லிட்டு இருக்க..?” என்று ராதிகா கேட்க,
“வேற எப்படி பதில் சொல்ல சொல்றிங்க..? எப்பப் பார்த்தாலும் கும்பிடு போட்டுதான் பதில் சொல்லனுமா..?” என்றவன் அங்கிருந்து சென்று விட்டான்.
“வரவர இவனோட நடவடிக்கை எதுவும் எனக்கு சரியா படலைங்க. எது கேட்டாலும் கோபப் படுறான். நீங்க இல்லாதப்ப அவன்கிட்ட பேசவே முடியலை..” என்றார் ராதிகா.
“இதையேன் நீ என்கிட்டே முன்னாடியே சொல்லலை..” என்றார்.
“நான் ஏதாவது டென்ஷன்ல இருப்பான்னு நினைச்சு விட்டுட்டேங்க. ஆனா, இப்பல்லாம் எப்பவுமே இப்படித்தான் இருக்கான்..” என்றார் ராதிகா.
“திவ்யா..” என்றார் சற்று சத்தமாக.
எரிச்சலுடன் கதவைத் திறந்து வந்தவள்,
“என்ன டாடி..?” என்றாள் கோபமாக.
“என்ன நடந்தது..? ஏன் ரெண்டு பேரும் இப்படி முகத்தைத் தொங்கப் போட்டுட்டு இருக்கீங்க..?” என்றார்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை..!” என்றாள் மேம்போக்காய்.
“அசோசியேஷன் தலைவருக்கு அடுத்து யாரை நாமினேட் பண்ணியிருக்காங்க..?” என்றார்.
“அந்த ராஜ சேகர் இறந்துட்டதால, அவர் பையன் அந்த விஜய்யைத் தான் நாமினேட் பண்ணியிருக்காங்க. அவன் சித்தப்பா சுந்தர சேகர் வேலை தான் இதெல்லாம்..!” என்றாள் எரிச்சலுடன்.
திவ்யா சொன்னதும் கனகவேலின் புருவம் யோசனையில் சுருங்கியது.
“அந்தப் பையனா..? அவன் வந்தா எல்லாத்தையும் குடைவான். பிரச்சனையாகுமே..?” என்றார்.
“தெரிஞ்சா சரி..! நீங்க தான் அவன்கூட வம்புக்கு போக வேண்டாம்ன்னு சொல்றிங்க. அவனும் அவன் பொண்டாட்டியும் மாத்தி மாத்தி என்னை வம்பிழுத்த்துகிட்டே இருக்காங்க..!” என்றாள்.
“என்ன நடந்தது..?”
“அந்த துளசி, என்னையும் விமலையும் அறைஞ்சிட்டா..!” என்று வன்மம் முகத்தில் தாண்டவமாட திவ்யா சொல்ல,
“நீ என்ன பண்ண..?” என்றார்.
“என்னப்பா..? இப்பல்லாம் நான் என்ன சொன்னாலும் நம்பாம, என்னையவே திருப்பி கேள்வி கேட்குறிங்க..? என்மேல நம்பிக்கை இல்லையா உங்களுக்கு. நீங்க இவ்வளவு பெரிய பதவியில இருந்து என்ன பிரையோஜனம். அவனைப் பார்த்து பயப்பட தான செய்யறிங்க..?” என்றாள்.
“இதுக்குப் பேர் பயம் இல்லை..!” என்றார்.
“பயம் இல்லாம வேற என்ன..? நான் என்னவோ வம்புக்காரி மாதிரி என்னையும் வம்புக்குப் போகாத அப்படி இப்படின்னு சொல்றிங்க..? என்ன தான் நினைச்சுட்டு இருக்கீங்க..?” என்றாள்.
“இப்போதைக்கு சூழ்நிலை சரியில்லை திவ்யா. அவங்க கல்யாணத்துல நீ பண்ண கலவரம் வரைக்கும் போதும். தொழில்ல இருக்குற போட்டியை தொழில்ல மட்டும் பார்த்துக்கலாம். தேவையில்லாம அவங்க சொந்த பிரச்சனைல எல்லாம் தலையிட வேண்டாம்..!” என்றார்.
“எனக்கு நல்லாப் புரிஞ்சு போய்டுச்சு டாடி. நான் அடி வாங்கினது உங்களுக்குப் பெரிசா தெரியலை. அவங்க என்னை அவமானப் படுத்தியிருக்காங்க. அது உங்களுக்குப் பெரிசா தெரியலை. ஆனா, நான் அவங்களை எதுவும் சொல்லிடக் கூடாது. அவங்களுக்கு முன்னாடி நீங்கதான் வரிஞ்சுகட்டிட்டு வரீங்க.. பழைய மாமனார் வீட்டுப் பாசம் இன்னும் உங்களை விட்டுப் போகலை போல..!” என்றாள் நக்கலாய்.
“வாய் இருக்குன்னு எதை வேணும்ன்னாலும் பேசலாம்ன்னு அர்த்தம் கிடையாது திவ்யா. இதுக்குப் பேர் பயம் இல்லை, சாணக்கியத்தனம். எல்லா விஷயத்திலும் நெஞ்சை நிமிர்த்திட்டு இருந்தா, பிரச்சனை அவனுக்கில்லை, நமக்குத்தான். ஏன்னா, அவன் ஒழுங்கா தான் இருக்கான். மறைமுக வேலை பார்க்குறது எல்லாமே நாமதான். அப்போ நாமதான் கவனமா இருக்கணும். சும்மா இருக்கவனை போய், நீ ஏன் சொரிஞ்சு விடுறன்னு தான் கேட்குறேன்..?” என்றார் கனகவேல்.
“அது உங்க பாலிசி டாடி..! அவனையெல்லாம் கண்டுக்காம அமைதியா இருந்தாத்தான் எதுவும் நடக்கும்ன்னா அப்படி எந்த ஒரு நல்லதும் நடக்கத் தேவையில்லை..!” என்றாள் திமிராக.
“நல்லது நடக்கத் தேவையில்லை சரி. இது வரைக்கும் செஞ்ச தப்பெல்லாம் வெளிய வராம இருக்கணும் இல்லையா..? அதுக்காகத் தான் சொல்றேன். வீணா அவனோட பிரச்சனையைக் கூட்டாத..?” என்றார் கனகவேல்.
“எப்படி டாடி..? உங்களால இப்படி பேச முடியுது. எனக்கு மட்டும் என்ன ஆசையா..? ஆனா, அவன்னால தான் வந்தனா செத்திருக்கா. அவன் மட்டும் கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா, இந்நேரம் என் அக்கா உயிரோட இருந்திருப்பா. இப்போ அவளோட இடத்துல அந்த துளசி இருக்குறதை என்னால பார்க்கவே முடியலை. அதுலயும் அவளுக்கு இருக்குற திமிருக்கு அளவே இல்லாம போய்டுச்சு..!” என்று திவ்யா சொல்ல,
“வந்தனா சாவுக்கு அவன் காரணமில்லை திவ்யா..!” என்றார் கனகவேல்.
“இப்ப கூட நீங்க ஏன் அவனுக்கு வக்காலத்து வாங்குறிங்கன்னு புரியலை டாடி. அவன் காரணமில்லாம வேற யார் காரணமா இருக்க முடியும். நீங்க காரணமா..?” என்றாள் திவ்யா.
“சொன்னாலும் சொல்லாட்டியும் நானும் ஒரு காரணம் தான். அவ உயிரோட இருக்குற வரைக்கும் வந்தனா அருமை தெரியலை. பொண்ணை இழந்ததுக்கு அப்பறம் தான் சில விஷயம் புரியுது. இதே, உன்னோட இடத்துல வந்தனா இருந்திருந்தா, நான் இவ்வளவு வாக்குவாதம் செய்ய வேண்டி வந்திருக்காது..!” என்றார் கனகவேல்.
“அப்போ நான் உயிரோட இருக்குறது தான் உங்களுக்குப் பிரச்சனை. அப்படித்தான..?” என்றாள்.
“இந்த விதண்டாவாதம் தான் வேணாம்ன்னு சொல்றேன். ஆனா உங்க அக்கா சாவுக்கு கண்டிப்பா அவன் காரணமா இருந்திருக்க மாட்டான். அப்ப சொன்னதைத் தான் இப்பவும் சொல்றேன். அவனுக்கு அந்த வயசுலையே முதுகுல குத்துற பழக்கம் கிடையாது. எதையும் நேராத்தான் செய்வான்..!” என்றார்.
“அப்போ வந்தனா எப்படி இறந்தா..? அவன் கூட்டிட்டு போகாம இருந்திருந்தா, அந்த ஆக்சிடென்ட் நடந்திருக்காதுல்ல…”
“அது தான் இப்போ வரைக்கும் எனக்கும் புரியாத புதிரா இருக்கு. நானும் கட்சி கட்சின்னு இருந்ததுல, சில விஷயங்கள் என்னோட கவனத்துக்கு வராமலேயே போயிருக்கு. அப்படியே வந்திருந்தாலும், சில விஷயங்களை என்னோட தன்மானத்துக்காக நான் கையாண்டு இருக்கேன். இப்போ வரைக்கும் வந்தனா விஷயத்தில் எனக்கு ஒரு குழப்பம் இருந்துகிட்டே தான் இருக்கு..!” என்று கனகவேல் பேசிக் கொண்டிருக்க, இவர்களின் பேச்சை எல்லாம் உள்ளே இருந்து கேட்டுக் கொண்டிருந்த விமலுக்கு பக்கென்று இருந்தது. ஏற்கனவே விஜய் சொன்ன செய்தியிலேயே பாதி பயந்திருந்தான். இப்போது, கனகவேல் வாய் மொழியாக சில விஷயங்களை கேள்விப் பட்ட பிறகு, இதற்கு பிறகும் தான் அமைதியாக இருந்தால், மாட்டிக் கொள்வோம் என்பது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தது.
கனகவேல் பேசியது திவ்யாவை கொஞ்சம் குழப்பியிருக்க, அப்போதைக்கு அமைதியாக சென்று விட்டாள். ஆனால் விமல் அதற்கடுத்து செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் தீயாய் செய்து கொண்டிருந்தான்.
விஜய்யும் துளசியும் சேர்ந்து வருவதைப் பார்த்த வள்ளிக்கும், வித்யாவிற்கும் மனதிற்குள் அப்படி ஒரு மகிழ்ச்சி.
“நான் சொல்லலை வித்யா..? விஜய் கூடிய சீக்கிரம் எல்லாத்தையும் சரி பண்ணிடுவான்..!” என்று வள்ளி பாட்டி சிலாகிக்க,
“அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்குறதைப் பார்க்கவே எவ்வளவு சந்தோஷமா இருக்கும்மா..” என்ற வித்யாவிற்கு மகிழ்ச்சியில் நெஞ்சம் நிறைந்து போனது.
“நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா வந்ததுக்கே, ஒரு பாசமலர் படமே ஓட்டிட்டு இருக்காங்க, பாட்டியும், அத்தையும். தயவு செஞ்சு அவங்க மூடை நீ ஸ்பாயில் பண்ணிடாத..!” என்றான் விஜய் சன்னமான குரலில்.
“என்னைப் பார்த்தா உனக்கு எப்படிடா தெரியுது.. எப்பவும் சண்டை கட்டிட்டு இருக்க சண்டை கோழி மாதிரியா..?” என்று துளசி முறைக்க,
“சொன்னாலும் சொல்லாட்டியும் நீ சண்டை கோழிதாண்டி. பார்த்தேனே, உன்னோட பெர்பார்மன்ஸ.. என்னா அடி. இன்னும் ரெண்டு நாளைக்கு அந்த திவ்யா அதையே தான் நினைச்சுட்டு இருப்பா..!” என்றான் விஜய்.
“அவ நினைக்கிறாளோ இல்லை.. நீதான் அவளையே நினைச்சுட்டு இருக்குற மாதிரி இருக்கு..?” என்றாள் ஒரு மாதிரிப் பார்த்துக் கொண்டு.
“அம்மா தாயே..! ஆளை விடுடி.. இந்த பொண்டாட்டிங்க டிசைனே இதானோ..?” என்று அவன் சிரிக்க, இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வள்ளிக்கு அப்படி ஒரு சந்தோசம்.
விஜய் ஒவ்வொரு வார்த்தையிலும், அவள் தனக்கு மனைவி என்பதை அவளுக்கு நினைவு படுத்திக் கொண்டே இருந்தான்.
“என்ன விஜய்..? ரெண்டு பேரும் தனியா போனிங்க..? இப்போ சேர்ந்து வந்திருக்கிங்க..?” என்றார் வள்ளி.
“எப்படி போனோம் அப்படின்றது முக்கியமில்லை. எப்படி வந்தோம் அப்படின்றது தான் முக்கியம் இல்லையா விஜய்..?” என்ற பிரவீனின் குரலில் திரும்பிய விஜய்,
“நீயும் வந்துட்டியாடா..!” என்றான்.
“நீங்களே வந்துட்டிங்க. நான் வர மாட்டேனா..?” என்றான் பிரவீன்.
“விஜய் அப்பறம் ஒரு முக்கியமான விஷயம்ப்பா..!” என்றார் வித்யா.
“என்னங்கத்தை..?”
“இல்லை..! கல்யாணம் நடந்து முடிஞ்சதுல இருந்து ஒரே பிரச்சனை. அண்ணா இறந்து எப்படியோ இப்பதான் எல்லாரும் கொஞ்சம் மனசை தேத்தி வந்திருக்கோம். துளசிக்கு தாலி பிரிச்சு கோர்த்துட்டா, நல்லா இருக்கும்ன்னு தோணுது..” என்று வித்யா சொல்ல, பல்லைக் கடித்தாள் துளசி.
“அம்மா, உங்களுக்கு வேற வேலையே இல்லையா..?” என்றாள் துளசி.
“ஆமாம்மா..! அவளே டிவேர்ஸ் வாங்க போறா..? அப்பறம் எதுக்கு இந்த சடங்கு சம்பிரதாயம் எல்லாம். அதுமட்டுமில்லாம மாமா இறந்து ஒரு மாசம் தான் ஆகுது. அதுக்குள்ள இப்படி பண்ணலாமா..?” என்றான் பிரவீன் வேண்டுமென்றே.
விஜய் அவனை முறைக்க..’பொறு’ என்பதைப் போல் ஜாடை காட்டினான் பிரவீன்.
காரில் விஜய்யின் பேச்சிலும், செய்கையிலும் கொஞ்சம் இளகியிருந்த துளசியின் மனம், இப்போது உள்ளுக்குள் ஆட்டம் கண்டது.
‘டிவேர்ஸ் நீதானே கேட்ட. அதைத்தான் பிரவீன் சொல்றான். அதுக்கு ஏன் நீ பீல் பண்ற..? நீ கேட்ட ஒரு விஷயத்தை உனக்கு நியாபகத்துக்குக் கொண்டு வரும் போதே இவ்வளவு வலிக்குதே, அப்போ விஜய்க்கு எப்படி இருக்கும்..?’ என்று துளசியின் மனம் அவளைக் கேள்வி கேட்க ஆரம்பித்தது.
“என்ன பிரவீன்..? நல்ல விஷயத்தைப் பத்தி பேசும் போது, திருப்பியும் பழைய பல்லவியையே பாடுற. அவளே சும்மா இருக்கா, நீ அவளுக்கு நியாபகப்படுத்திட்டு இருக்கியா..?” என்று வள்ளி கோபத்துடன் சொல்ல,
“நான் உண்மையை சொன்னேன் பாட்டி. எனக்கு விஜய்யோட சந்தோஷமும் முக்கியம். அதே சமயம் என் தங்கச்சியோட சந்தோஷமும் முக்கியம். இனி துளசி என்ன சொல்றாளோ அது தான் முடிவு. இனி நான் அவளுக்கு மட்டும் தான் சப்போர்ட் பண்ணுவேன்..!” என்றான் பிரவீன் உறுதியான குரலில்.
“டேய்..! ஓவரா சீன் போட்டு உள்ளதையும் கெடுத்துடாத..?” என்றான் விஜய், வாயைத் திறக்காமலேயே முணுமுணுத்த படி.
“கொஞ்சம் வெயிட் பண்ணு மாப்பிள்ளை. இப்ப பாரு என் தங்கச்சி பெர்பாமன்ஸ..!” என்று பிரவீன் சொல்ல, புரியாமல் பார்த்தான் விஜய்.
“மாமா இறந்து ஒரு மாசத்துல இப்படி விசேஷம் பண்ணலாமா பாட்டி..?” என்றாள் மறைமுக சம்மதத்துடன்.
“அதெல்லாம் பண்ணலாம்டா..! நான் ஜோசியரைக் கேட்டுட்டேன். கெட்டது நடந்த வீட்ல நல்லது நடக்குறது ரொம்ப நல்லதுன்னு தான் சொன்னார். வர வெள்ளிக்கிழமை, தாலியை பிரிச்சி கோர்த்திடலாம்..!” என்றார் வள்ளி.
“ம்ம்ம்..!” என்றவள் அங்கிருந்து நடையை கட்டிவிட்டாள் அவளின் அறைக்கு.
“நிஜமாவே இது துளசி தானா..?” என்று வித்யா அதிர்ச்சியுடன் கேட்க,
“பாரு விஜய்.. இவ கொஞ்சம் திருந்துனா கூட, அதை பெத்த தாயாலையே நம்ப முடியலை. நம்ம துளசியோட டிசைன் அப்படி..!” என்ற பிரவீன் சிரிக்க,
‘நீயேண்டா அப்படி பேசுன..?” என்றான் விஜய் புரியாமல்.
“துளசியோட குணத்தைப் பத்தி தான் உனக்கு நல்லா தெரியுமே. இதை செய்ன்னு சொன்னா செய்ய மாட்டா. அதே சமயம் செய்யாதன்னு சொன்னா வீம்புக்கு செய்வா..! சிம்பிள் லாஜிக்.. அப்ளை பண்ணி பார்த்தேன் கொஞ்சம் வொர்க் அவுட் ஆகுது..! ஏதோ நண்பனுக்கு என்னால முடிஞ்சது..!” என்றான் பிரவீன்.
“நான் இதை மறந்தே போயிட்டேன்டா..! எனிவே நியாபகப் படுத்துனதுக்கு நன்றி மச்சான்..!” என்றான் விஜய்.
“ஆமா, கார்ல வரும் போது என்னடா வைத்தியம் பார்த்த. கோபமா இருந்த துளசி முகத்துல இங்க வந்து பார்த்தா துளி கூட கோபம் இல்லை..?” என்றான் ஆச்சர்யமாய்.
“அவசியம் சொல்லியே ஆகணுமா..?”
“சொன்னா, எனக்கு புயூச்சர்ல யூஸ் ஆகும்..!” என்று பிரவீன் ஆர்வமாக கேட்க,
“சொல்ல மாட்டேன்..!” என்று சிரிப்புடன் சொல்லிவிட்டு சென்று விட்டான் விஜய்.
இவர்களின் பேச்சை எல்லாம் கேட்டும் கேட்காதவன் போல், போனில் மட்டும் கவனம் இருப்பதைப் போல் காட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான் அருண். விஜய்யின் பதிலில் அவனுக்கும் சிரிப்பு வர, சன்னமாக சிரித்துக் கொண்டான்.
“நல்லா வருவிங்கடா..!” என்று பிரவீன் நினைத்துக் கொண்டிருக்கும் போது, உள்ளே வந்தாள் பவித்ரா.
“என்ன பவி..? சீக்கிரம் வந்துட்ட..?” என்றான் பிரவீன்.
“இன்னைக்கு பைனல் எக்ஸாம் மாமா..! அதான் சீக்கிரமே வந்துட்டேன்..!” என்றாள்.
“பிரண்ட்ஸ் கூட வெளிய போகலையா..?” என்றான்.
“அப்படியே நம்ம வீட்ல போக விட்டுட்டாலும். ரூல்ஸ் ராமனுஜம் காலையிலேயே போக கூடாதுன்னு சொல்லிட்டார்..!” என்றாள் பாவமாய்.
“என்ன பவி..? தாத்தாகிட்ட சொல்லவா..?” என்று வள்ளி மிரட்ட,
“வள்ளி..! நீதான் எனக்கு வில்லி..!” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்று விட்டாள் பவித்ரா. பிரவீன் தான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“மிஸ்டர். பிரவீன், இது உங்களுக்கு அவ சீக்கிரம் வரதா..? டைம் என்னன்னு பார்த்திங்கல்ல..? அவ, சலிப்பா சொல்லிட்டு போறதுலையே தெரியலை..ஆல்ரெடி மேடம் ஊர்சுத்திட்டு தான் வராங்க. பாட்டி இருக்காங்கன்னு எப்படி பில்டப் குடுத்துட்டு போறா பாருங்க. நீங்களும் நம்பி அப்பாவியா பார்த்துட்டு இருக்கீங்க. நான் தான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்ல. இதெல்லாம் வேலைக்கு ஆகாத கேஸ். இப்படியே போனா, நீங்க பார்த்துகிட்டே தான் இருக்கணும். கூப்பிட்டு விளக்கமா சொன்னாலும் என் தங்கச்சிக்கு ஒன்னும் விளங்காது..! ஸ்ட்ரெயிட்டா கல்யாணத்தை பண்ணிடுங்க..!” என்று அருண் சொல்ல, அதுவரை இதைப் பற்றி மறந்திருந்த வள்ளி, இப்போது யோசனைக்குப் போனார்.
“டேய்..! நீயா எதையாவது உளறி வைக்காத..!” என்று பிரவீன், நீலாவைப் பற்றிய எண்ணத்தில் சொல்ல,
“நான் உளர்றேன்..? நல்ல காமெடி. அப்ப இப்படியே கடைசி வரைக்கும் பார்த்துட்டே இருங்க..!” என்றவன், அவன் வேலையைப் பார்க்க, பிரவீன் அப்படியே அமர்ந்துவிட்டான். அவனுக்கே தெளிவான நிலைப்பாடு தேவையாய் இருந்தது.
அன்றைய இரவு விஜய்க்கு சோதனையாய் அமைந்தது. மனம் முழுவதும் துளசியின் நியாபகம் மட்டுமே நிறைந்திருந்தது. அவளை அணைத்த நிமிடங்களே அவனுக்குள் மீண்டும் மீண்டும் வந்து அவனை இம்சித்துக் கொண்டிருந்தது.
“என்னடா இது கட்டி தானடா பிடிச்சேன். அதுக்கே தூக்கம் வர மாட்டேங்குது..?” என்று புலம்பும் நிலைக்கு வந்திருந்தான் விஜய். அவனின் என்ன இடுக்குகளில் எல்லாம் துளசி தான் நிறைந்திருந்தாள்.
அவள் திவ்யாவை அடித்தது முதல், அவளிடம் பேசியது வரை, அனைத்தையும் நினைத்து நினைத்து பூரித்துப் போனான் விஜய். அவளுக்குள் அவன் மீதான உரிமை உணர்வின் வெளிப்பாடு தான், துளசியின் பேச்சுக்கள் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். அதையெல்லாம் நினைத்துக் கொண்டே இருந்தவனுக்கு, துளசியின் பேச்சு ஒரு இடத்தில் ஸ்ட்ரைக் ஆக, பட்டென்று எழுந்து அமர்ந்தான் விஜய்.
“துளசி ஏன் அப்படி சொன்னா..?” என்ற கேள்வி அவன் மூளையைக் குடைந்து கொண்டிருக்க,
‘’ஒருவேளை அவளுக்கு எதுவும் தெரிஞ்சிருக்குமோ..? அதான் அமைதியா இருக்காளோ.?’ என்று அவனே கேள்வி கேட்டு அவனே பதிலும் யோசித்துக் கொண்டிருந்தான்.
“தூங்கியிருப்பாளா..?” என்று அவன் கேட்க,
‘எனக்கென்ன தெரியும். போய் பாரு..!’ என்றது அவனின் மனம்.
“அவகிட்டயே கேட்டுத் தெரிஞ்சிக்கலாம்..!” என்றவன், வேகமாக வெளியே வந்து பக்கத்து அறைக்குள் செல்ல, அப்போது தான் குளித்து விட்டு வெளியே வந்த துளசி, பட்டென்று விஜய் வரவும், சட்டென்று மீண்டும் குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
“விஜய்.. நீ எதுக்கு இப்போ இங்க வந்த..? கதவைத் தட்டிட்டு வரமாட்டியா..?” என்றாள் கடுப்புடன்.
சில வினாடிகள் தான் என்றாலும், அவள் துண்டுடன் உள்ளே சென்ற காட்சியே அவன் மனக்கண்ணில் வந்து வந்து போக,
“டேய் விஜய்..! உனக்கு நேரமே சரியில்லை. இன்னைக்கு நடக்குறது எல்லாமே சோதனைக்கே நடக்குது. போற போக்கை பார்த்தா எஸ்.ஜே. சூர்யா ரேஞ்சுக்கு ஆயிடுவேன் போல..!” என்று நொந்து கொண்டான் விஜய்.
“உன்னைத்தான் விஜய்..!” என்று உள்ளே இருந்து கத்திக் கொண்டிருந்தாள்.
“உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..!” என்றான், முடிந்த வரை குரலை கொஞ்சம் நிமிர்வாய் வைத்துக் கொண்டு.
“அதுக்கு இப்படியா வருவ. நான் கதவை லாக் பண்ணிட்டு தான வந்தேன். எப்படி திறந்த..?” என்றாள்.
“கதவு லாக் எல்லாம் போடலை. தொட்டவுடனே திறந்திடுச்சு..!” என்றான் சாதரணமாக.
“கொஞ்ச நேரம் வெளிய இரு விஜய்..!” என்றாள்.
“அதெல்லாம் முடியாது..! அப்படியே வா..!” என்றான் இதழ்களில் தேங்கிய புன்னகையுடன்.
“டேய்..! என்ன கிண்டலா..? கொஞ்சம் பேசிட்டா போதுமே. இருக்க இடம் குடுத்தா, படுக்க பாய் கேட்குற..?” என்றாள் கோபமாய்.
“எனக்கு பாய் எல்லாம்வேண்டாம்.. நீ தான் வேணும்..!” என்று மைண்ட்வாய்சில் சொல்லுவதாக நினைத்து, விஜய் வாய்விட்டு உளறியிருக்க, உள்ளிருந்து கேட்ட துளசிக்கு, அந்த கோபத்திலும் முகம் சிவந்து போனது.
“தடிமாடு..தடிமாடு..! எப்படி பேசறான் பாரு. வெட்கமே இல்லாம. பாவமேன்னு கொஞ்சம் இரக்கப்பட்டா ஓவராத்தான் போயிட்டு இருக்கான்..!” என்று தலையில் அடித்தவள்,
“பெட்ல ட்ரஸ் எடுத்து வைச்சிருக்கேன் பாரு. அதையாவது எடுத்துக் குடுடா..!” என்றாள்.
“ஞான்..! இதை வேணும்ன்னா எடுத்துத் தரேன்.” என்றவன், எடுத்துக் கொண்டு போய் அவளிடம் கொடுக்க,
“கதவைத் திற துளசி..!..” என்றான்.
“அந்த வேலையே வேண்டாம்.. திரும்பவும் யாரோ வர மாதிரி இருக்கு..?” என்றாள்.
“இல்லையே யாரும் இல்லையே..?” என்று அவன் கதவுப் பக்கம் திரும்பிப் பார்க்க, பட்டென்று அவன் கையில் இருந்த உடையை உருவிக் கொண்டு கதவை அடைத்தாள் துளசி.
“வடை போச்சே..!” என்று நின்று கொண்டிருந்தான் விஜய். அவன் அப்படி நிற்கும் போதே வெளியே வந்த துளசி, அவனை முறைத்து வைக்க…
“இப்ப எதுக்கு முறைக்கிற துளசி..” என்று முகத்தை பார்மலாக வைத்துக் கொண்டான்.
“நீ செய்ற வேலைக்கு முறைக்காம கொஞ்சுவாங்களா..?” என்றாள்.
“இங்க பாரு..! என்மேல எந்த தப்பும் இல்லை. கதவை நீ சரியா லாக் பண்ணாததுக்கு நான் பொறுப்பாக முடியுமா..?” என்றான்.
“சரி என்ன விஷயம்..?” என்றாள்.
“அது வந்து..வந்து..!” என்ற விஜய்யின் வார்த்தைகள் காற்றில் பறந்து கொண்டிருக்க…
“என்னடா வந்து போயின்னு கதை அளந்துட்டு இருக்குற..?” என்று துளசி திட்டிக் கொண்டிருக்க, விஜய்யின் பார்வையோ அவளிடத்தில் இல்லாமல் வேறு எங்கோ இருந்தது.
“அங்க என்னடா பார்த்துட்டு இருக்க..?” என்று தன்னைக் குனிந்து பார்க்க, அவள் அணிந்திருந்த இரவு உடையின் மேல் சட்டையில் மேல் பட்டன் போடாமல் இருக்க, பட்டென்று அவனுக்கு முதுகு காட்டி திரும்பியவள், அதை போட்டு விட்டு திரும்ப, அங்கு விஜய் இல்லை.
“என்ன இன்னைக்கு எல்லாமே தப்புத் தப்பா நடக்குது..? இவன் வேற இப்படிப் பார்த்து வைக்கிறான். இவனுக்கு என்னமோ ஆயிடுச்சு. திருந்திட்டானா..? இல்லை எப்பவும் இப்படித்தானா..?” என்று நினைத்துக் கொண்டவளுக்கு, கொஞ்சம் வெட்கமும் வந்து தொலைத்து.
“என்னமோ கேட்கணும்ன்னு சொன்னானே..? எதுவும் கேட்காம போய்ட்டான்..? என்ன பேச வந்திருப்பான்..?” என்றவள் அவனைத் தேடி போக,
அங்கு விஜயோ..
“உனக்கு இன்னைக்கு கண்ணுல எல்லாமே தப்புத் தப்பாத்தான் படுது விஜய். நிலைமை இப்படியே போனா, அவ கையால அடிவாங்குனாலும் ஆச்சர்யப் படுறதுக்கு இல்லை..” என்றவன், மீண்டும் நடந்ததை நினைக்க,
வாயைக் குவித்து மூச்சை வெளியேற்றியவன்,
“ஷி ஸ் வெரி டேஞ்சரஸ்..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்தாள்.
“இப்ப எதுக்கு வந்த..? எதுவும் பேசாம எதுக்கு திரும்பி வந்த..?” என்றாள்.
“நத்திங் துளசி..! நீ போய் தூங்கு..!” என்றான்.
“டேய்..! என்னைப் பார்த்தா லூசு மாதிரியா இருக்கு..?”
‘உன்னப் பார்த்து நான் தான்டி லூசாகிட்டு இருக்கேன்..!’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.
“வாயைத் திறந்து பேசு விஜய்..!” என்றாள் கோபமாக.
‘இருடி..! வாயைத் திறந்தா காத்து தான் வருது. கொஞ்சம் கூட பாதிப்பே இல்லாம இவளால மட்டும் எப்படி இப்படி இருக்க முடியுது. நான் தான் அப்பப்போ லூஸ் கண்ட்ரோல் ஆகிடுறேன்..’ என்று நினைத்துக் கொண்டான்.
“என்ன சொல்ல வந்த..?
“தலையை சரியா துவட்டலையா..? பாரு ஈரமா இருக்கு. போய் நல்லா காய வை..!” என்றான்.
“டேய் நான் என்ன கேட்டுட்டு இருக்கேன்..! நீயென்ன பேசிட்டு இருக்க..?” என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவளை இழுத்து அணைத்தவன், அவளின் செவ்விதழ்களை சிறைப் பிடித்திருந்தான்.
அத்தனை ஏக்கங்களையும், பிரிவையும், துயரையும் அந்த ஒற்றை முத்தத்தில் அவளுக்குள் கடத்திக் கொண்டிருந்தான் விஜய். அவளுடைய வாசத்தை மூச்சுக் காற்றின் வழியாக உள்ளிழுத்துக் கொண்டிருந்தான்.
சொல்ல வந்த விஷயமும், கேட்க வந்த விஷயமும் அங்கே அந்தரத்தில் ஆடிக் கொண்டிருந்தது.