பூ 28:
திவ்யா எவ்வளவு தான் விமலுக்கு தெரியக் கூடாது என்று ஒவ்வொரு விஷயத்தைப் பார்த்து பார்த்து செய்திருந்தாலும், விஷயம் எப்படியோ விமலின் காதினை எட்டியிருந்தது. அதிலும் முக்கிய ஆதாரமாக இருப்பவன், இப்போது அவளுடைய பாதுகாப்பில் இருக்கிறான் என்று தெரிந்த போது, அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. திவ்யாவிடமிருந்து இப்படி ஒரு அதிரடி செய்கையை அவன் எதிர்பார்க்கவில்லை. கனகவேலுவுக்கு தெரியாது என்று நினைத்த விமல், அவரின் காதிற்கு விஷயம் செல்வதற்குள், திவ்யாவிடம் பேசித் தீர்த்து விடுவது என்ற முடிவிற்கு வந்திருந்தான்.
வீட்டில் வைத்து பேசலாம் என்றால் அங்கே ராதிகா இருக்கிறார். அவரின் முன்னிலையில் பேசினால், விஷயம் எப்படியும் கனகவேல் காதிற்கு சென்று விடும் என்று நினைத்தான் விமல்.
நேராக திவ்யா இருந்த கம்பெனிக்கு சென்றவன்,
“உன்கிட்ட கொஞ்சம் பேசணும் திவ்யா..?” என்றான்.
“என்ன அவசரம்..?” என்றாள் பட்டும் படாமல்.
“எதுக்காக அவனை உன்னோட கஸ்ட்டடியில் வச்சிருக்க..? அவனை விட்ரு. தேவையில்லாத பிரச்சனைல தலையிடாத..?” என்றான் விமல்.
அவனுக்கு விஷயம் தெரிந்து போனதில் அவளுக்கும் கொஞ்சம் அதிர்ச்சி தான். அவனுக்குத் தெரியாமலேயே அனைத்தையும் முடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தாளே..!
“விட முடியாதுன்னு சொன்னா..?” என்றாள் தெனாவெட்டாக.
“ப்ளீஸ் திவ்யா..! நான் பண்ணது தப்புத்தான். தயவு செஞ்சு அவனை விட்டுரு. விஷயம் மாமா காதுக்கு போனா, பெரிய பிரச்சனை ஆகிடும்..!” என்றான் விமல்.
“செய்யறதை எல்லாம் செஞ்சுட்டு இத்தனை நாள் நல்லவன் மாதிரி வேஷம் போட்டுட்டு இருந்திருக்க..! இப்போ உன்னோட அயோக்கியத்தனம் எல்லாம் வெளிய தெரியப் போகுதுன்னு சொன்ன உடனேயே, கய்யோமுய்யோன்னு கதற வேண்டியது.. உனக்கெல்லாம் மன்னிப்பே கிடையாதுடா அயோக்கிய நாயே..? உன்னை பிள்ளை மாதிரி தான் வளர்த்தார் எங்கப்பா. பதிலுக்கு நீ என்னடா பண்ணி வச்சிருக்க.. என்னோட அக்காவையே கொலை பண்ணியிருக்க..” என்றாள்.
“பிள்ளை மாதிரி வளர்த்தார்ன்னு சொல்லாத..? அந்த ஆளுக்கு ஒரு அடிமை தேவைபட்டது. அதுக்குத் தான் என்னைய வளர்த்தார், அது தான் உண்மையும் கூட..” என்றான்.
வந்தனாவை கொலை பண்ண உனக்கு எப்படி மனசு வந்தது..?”
“அது கொலை இல்லை, விபத்து..” என்றான்.
“தானா நடந்தா தான் அது விபத்து. நீ ஆள் வச்சு பண்ணது எல்லாம் விபத்துல சேராது. எல்லா உண்மையையும் ஒத்துகிட்டு, பேசாம சரண்டர் ஆகிடு. இல்லைன்னா உனக்குத் தான் பிரச்சனை..!” என்றாள்.
“என்னடி மிரட்டுறியா..? நான் எதுக்குடி சரண்டர் ஆகணும். உங்கப்பன் தான் உள்ள போகணும். அந்த ஆள் பண்ண எல்லா விஷயத்துக்கும் நான் மட்டும் தாண்டி சாட்சி..!” என்றான் விமல்.
“அப்போ, வந்தனா விஷயத்துல நடந்த எல்லா தப்புக்கும் காரணம் நீதான்.. அப்படித்தனா..?” என்றாள்.
“ஆமா..! நான் தான். என்ன பண்ண முடியும் உன்னால..? இல்ல உங்கப்பன், அந்த அமைச்சரால என்ன முடியும். உங்கப்பன் குடுமி என்னோட கையில.. மரியாதையா என்னை கல்யாணம் பண்ணிட்டு, குடும்பம் நடத்துற வழியைப் பாரு..!” என்றான் எகத்தாளமாய்.
“முடியாதுன்னு சொன்னா..?” என்றாள்.
“நீ முடியாதுன்னு சொன்னாலும், உங்கப்பனால அப்படி சொல்ல முடியாதே..? அந்த ஆளுக்கு எல்லாத்தையும் விட பதவி தான் முக்கியம். அந்த ஆளு எப்ப எப்படி இருப்பார்ன்னு எனக்கு மட்டும் தாண்டி தெரியும். எனக்கு எந்த பயமும் இல்லை..!” என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே வெளியே வந்தார் கனகவேல்.
அவரை அங்கு பார்த்த அதிர்ச்சியில் கொஞ்சம் திகைத்தவன்,
“மாமா..! சென்னைல இருந்து எப்போ வந்திங்க..?” என்றான் திடீரென்று நல்லவன் போல்.
“நீ வரதுக்கு முன்னாடியே நான் வந்துட்டேன்டா..!” என்றார் கனகவேல்.
“ஹோ..! அப்ப எல்லாத்தையும் கேட்டாச்சு அப்படித்தான..?” என்றான் விமல்.
“இதை கேட்டுத்தான் தெரியனுமா..? இதுல நீ சம்பந்தப்பட்டிருப்பேன்னு நான் முன்னாடியே சந்தேகப் பட்டேன். இப்போ உறுதியாகியிருக்கு அவ்வளவு தான்..!” என்றார்.
“நீங்க அதுக்காக அமைதியா இருந்திருக்க மாட்டிங்க மாமா..! ஏன்னா..? உங்க குடுமி என்னோட கையில இருக்குன்னு உங்களுக்கு நல்லாத் தெரியும். அந்த பயம் தான் உங்களை இவ்வளவு நாள் அமைதியா இருக்க வச்சிருக்கு..!” என்றான் விமல்.
“டேய்.. நான் உனக்கு மாமன்டா.. அரசியல்ல பல விஷயத்தைப் பார்த்தவன், நேத்து பிறந்த உனக்கே இவ்வளவு இருக்கும் போது, எனக்கு எவ்வளவு இருக்கும்..? இப்போவரைக்கும் நடந்த இல்லீகல் எல்லாமே உன்னோட பேர்ல தாண்டா நடந்திருக்கு. எல்லாத்தையும் நீதான் பண்ணியிருக்க. இப்போ போலீஸ் வந்தா கூட, நீதான் மாட்டுவ. கூடவே இருந்து இப்படி பண்ணிட்டானே அப்படின்னு ஒரு அழுகையை போட்டு, என்னோட கெப்பாசிட்டிய இன்னும் கூட்டிக்குவேன். கொஞ்சமாவது மூளையோட யோசிடா..!” என்றார் கனகவேல்.
“பொய் சொல்லாதய்யா..?” என்றான்.
“பொய்யில்லை விமல் மாமா..! நிஜமோ நிஜம். நீங்க உங்க பேர்ல மாத்துன பிராப்பர்ட்டி எல்லாமே இப்போ என்னோட பேர்ல இருக்கு..!” என்றாள்.
“நான் கையெழுத்து போடாம எப்படி நடக்கும்..?” என்று வெகுண்டெழுந்தான் விமல்.
“எங்க கையெழுத்து இல்லாம, நீ எப்படி மாத்தின..அதே மாதிரி தான் இதுவும்..!” என்றாள் திவ்யா.
“இன்னும் கொஞ்ச நேரத்துல போலீஸ் வரும். ஜாலியா உள்ள போய் களி திண்ணு..!” என்றார் கனகவேல்.
“அப்பா, எனக்கு என்னவோ இப்பவும் இவனை ஜெயிலுக்கு அனுப்ப மனசில்லை. இவன் புத்தி எப்பவும் மாறாது. பேசாம இவனைப் உங்க பாணியில கவனிங்க..” என்றாள்.
“என்ன இருந்தாலும் தங்கச்சி பையன் திவ்யா. இத்தனை வருஷம் வளர்த்துட்டேன். மனசு வரலை..!” என்றார்.
“அப்பா, இவன் வந்தனாவுக்கு பண்ணதை எல்லாம் நினைச்சுப் பார்த்தா இப்படி பேச மாட்டிங்க..!” என்றாள் மூக்கு விடைக்க,
“வேண்டாம் திவ்யா. பழசை பத்தி பேச வேண்டாம். இந்த ஜெயில் தண்டனை கூட அவனை திருத்தலாம்..!” என்றார் கனகவேல்.
அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவன் அங்கிருந்து தப்பித்து செல்ல முற்பட, தடுக்கப் போன திவ்யாவை,
“போகட்டும் விடு திவ்யா..!” என்று தடுத்து விட்டார்.
“டாடி, அவன் தப்பிச்சுப் போறான். அவன் வெளிய இருக்குறது ரொம்ப டேஞ்சரஸ்..!” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க, நிதானமாய் சிரித்துக் கொண்டிருந்தார் கனகவேல்.
“என்ன டாடி..? நான் சொல்லிட்டே இருக்கேன். நீங்க சிரிச்சிட்டு இருக்கீங்க..? என்று அவள் கோபப் பட, அப்போது ஒருவன் உள்ளே ஓடி வந்தான்.
“மேடம், நம்ம விமல் சாருக்கு ஆக்சிடென்ட். லாரி அடிச்சுடுச்சு..!” என்றான் ஒருவன்.
“என்னது..?” என்று அதிர்ந்தவள், கனகவேலை பார்க்க,
“ஆமா..’ என்பதைப் போல் கண்களை மூடித் திறந்தார் கனகவேல்.
“என்னடா சொல்றிங்க..? எப்படி ஆச்சு..! உடனே அவனை ஹாஸ்பிட்டல் கொண்டு போங்க..!” என்று பொய்யாய் பதறினார். அவன் சென்றவுடன் திவ்யாவிடம் திரும்ப,
“அப்பறம் ஏன்ப்பா, இவ்வளவு நேரம் அப்படி பேசுனிங்க..?” என்றாள்.
“பேசும் போது பார்த்து பேசணும் திவ்யா. நம்ம வாயில இருந்து வார்த்தையை வர வைச்சு, அதை ரெக்கார்ட் பண்றது தான் அவன் திட்டம். அவன் உள்ள வரும் போதே, அதுக்கெல்லாம் ரெடியா தான் வந்தான். அதான் அப்படி பேசுனேன். எந்த தப்பை செஞ்சாலும் தடயம் இல்லாம செய்யணும். இப்போ அவனுக்கு நடந்தது ஆக்சிடென்ட். அவ்வளவு தான்..!” என்றார் கனகவேல் அதிராமல்.
“டாடி..!!” என்றவளுக்கு பேச்சே வரவில்லை.
“நான் வளர்த்த பையன் தான். ஆனா, இப்படி என் பொண்ணையே கொலை பண்ற அளவுக்கு துணிஞ்சிருக்கான். இவன் காலை சுத்துன பாம்பு. நாம அடிக்காம விட்டா, இவன் நம்மளை கடிக்காம விட மாட்டான்” என்றார் கனகவேல்.
கனகவேல் மகிழ்ச்சி அடைந்தாரோ என்னவோ, வந்தனாவின் ஆத்மா மகிழ்ச்சி அடைந்திருக்கும்.
“திவ்யா, இனி விஜய் சம்பந்தப்பட்ட விஷயங்கல்ல தலையிடக் கூடாது. உன் அக்காவோட இறப்புக்கு அவன் காரணமில்லைன்னு தெரிஞ்ச பிறகு, அவனைப் பழிவாங்கனும்ன்னு நினைக்கிற எண்ணமே உனக்கு இருக்கக் கூடாது.. இனி உன்னோட தலையீடு எதுவுமே அந்த குடும்பத்தில் இருக்கக் கூடாது. அப்படித்தான் இருப்பேன்னு நீ சொன்னா, நீ திரும்பி அமெரிக்கா போய்டு..!” என்றார்.
“அந்த குடும்பத்துக்கு நீங்க ஏன் இவ்வளவு முக்கியத்துவம் குடுக்குறிங்கன்னு இப்போ வரைக்கும் எனக்குக் காரணம் புரியவேயில்லை டாடி..!” என்றாள்.
“அந்த வீட்டு பொண்ணுமேல நான் அபாண்டமா பழி சுமத்தின கொடுமைக்குத் தான், கடவுள் என்னோட பொண்ணை எடுத்துகிட்டார் போல..!” என்றார். ஆனால் அதையும் மீறிய ஒரு காரணம் இருந்தது. அதை அவர் திவ்யாவிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. ஏன், யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை. அதற்கு காரணம் வித்யா தான்.
என்னதான் வித்யா அவரின் முன்னால் மனைவி என்றாலும், அவரைப் பிரிந்த சில வருடங்களிலேயே, அவர் செய்த தவறின் முழுத்தன்மையும் அவரை முகத்தில் அறைந்தது. இப்போதும் வித்யாவை பார்க்கும் போது, அவரின் மனதிற்குள் சிறு வலி ஏற்படுவதை அவரால் மறுக்க முடியாது.
பதவிக்காக, மனைவியின் பத்தினித் தன்மையை கேள்வி கேட்டவர் கனகவேல். ஆனால், அந்த பதவி கிடைத்தவுடன், மீண்டும் அதே மனைவியின் நினைவுகள் வருவது தான், அவர் இழப்பின் அளவு. அதன் பக்குவப்பட்ட நிலைதான், வித்யாவின் பெண்ணையும் தன் பெண்ணைப் போல் நினைப்பது. அதற்காகவே திவ்யாவை அவர்களின் விஷயத்தில் இருந்து ஆரம்பத்தில் இருந்தே ஒதுங்கியிருக்க சொன்னார். அதற்காக அவர் சொன்ன காரணங்கள் வேறாக இருக்கலாம். ஆனால் அதன் உண்மைத் தன்மை இது மட்டுமே.
“என்னப்பா..? திருந்திட்டிங்க போல..?” என்றாள் திவ்யா.
“இதோ பார் திவ்யா…! எல்லாத்தையும் உனக்கு விளக்கனும்ன்னு அவசியம் கிடையாது. நான் வாழ்க்கையில் ஒரு பெரிய தப்பு செஞ்சிருக்கேன். இல்லைன்னு சொல்லலை. ஆனா, வித்யா எப்பவுமே ஒரு நல்ல மனைவியாதான் இருந்திருக்கா. அவளோட வீட்ல இருக்கவங்க, என்னோட அரசியல் ஆசைக்கு கை கொடுக்கலைன்னு, நான் அபாண்டமா பேசினேன். நாங்க பிரிஞ்சோம். ராதிகாவை கல்யாணம் பண்ணேன், வித்யாவுக்கும் கல்யாணம் ஆச்சு. ரெண்டு பேருமே, எங்களோட அடுத்த வாழ்க்கையை பார்த்துட்டு போயிட்டோம். யாரும் ஒருத்தரை ஒருத்தர் பழிவாங்க நினைக்கலை..” என்றார்.
“அப்பா பிளீஸ்..! பேசினதையே பேசி அறுக்காதிங்க ..! நடந்த எந்த விஷயத்துக்கும் விஜய் காரணமில்லைன்னு தெரிஞ்சப்பவே, என் மனசுல அப்படி ஒரு எண்ணம் இல்லை. நீங்களா எதையாவது கற்பனை பண்ணி பேசிட்டு இருக்காதிங்க. வாங்க, ஆக்சிடென்ட் ஆனவனை பார்க்கப் போகலாம். இல்லைன்னா, நம்ம மேல சந்தேகம் வந்துடாது..!” என்று திவ்யா சொல்ல,
“ஐயோ ஆமாம்மா..! இதை எப்படி மறந்தேன்..!” என்ற கனகவேல்,
“ஐயோ..! விமல்..” என்றபடி ஓடினார்.
“மனுஷன் இங்க இருந்தே பெர்ப்பாமன்ச ஆரம்பிச்சுட்டார் போல… திவ்யா நீயும் அதையே பாலோ பண்ணு..!” என்று தனக்குத் தானே கூறிக் கொண்டவள் தந்தையின் பின்னால் சென்றாள்.
கனகவேல் திருந்தி விட்டார் என்று இல்லை. சிலரை எப்போதும் யாராலும் மாற்ற முடியாது. எத்தனையோ நிஜ கனகவேல்கள் இன்றளவும் இருக்கத்தான் செய்கின்றனர். செய்கிற தப்பைக் கூட சரியாக செய்கிறவர்கள், நன்றாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நூறு சதவிகிதம் நல்லவர்களும் இல்லை. நூறு சதவிகிதம் கெட்டவர்களும் இல்லை. இதில் கனகவேலைப் போன்றோர் எப்படி என்று யாராலும் சொல்ல முடியாது.எந்த நேரத்தில் என்ன செய்கிறார்கள், என்ன நினைக்கிறார்கள் என்பது அவரைப் போன்றோருக்கு மட்டுமே வெளிச்சம். அவரைப் போன்றோர் செய்யும் தப்புக்கள் வெளியே தெரிந்தாலும், அதை கேட்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் நம்மைப் போன்றோர் போல் தான், நிறைய பேருக்கு. அந்த விஷயத்தில் இவருக்கு கடவுள் கருணையும் கொஞ்சம் இருக்கிறது. விமலுக்கு அதுவும் இல்லாமல் போய்விட்டது போல. ஆடு, வளர்த்தவன் கையாலேயே வெட்டுப்பட்டுவிட்டது.
ஒரு கதையில் அனைவரும் ஒரேயடியாக திருந்தி தான் ஆகவேண்டுமா என்ன..? விதி விலக்காய் சில ஜென்மங்கள் இருந்து விட்டு போகட்டுமே..???
விஜய் வீட்டில்…
வேகமாய் துளசியின் அறைக்குள் நுழைந்தார் வள்ளிப் பாட்டி. அவர் வந்த வேகத்தில் என்னவோ ஏதோ என்று துளசி பயந்து போக,
“பயப்படாத துளசி..! நான்தான்..” என்றார்.
“எதுக்கு பாட்டி, திருடன் மாதிரி வரீங்க..?” என்றாள் துளசி சிரிப்புடன்.
“உங்களுக்குள்ள எல்லாம் சரியா போய்டுச்சா..?” என்றார் வள்ளி எடுத்த எடுப்பில்.
“என்ன எங்களுக்குள்ள..? என்ன சரியாகிடுச்சா..?” என்றாள் புரியாமல்.
“நீ விஜய் ரூம்க்குள்ள இருந்து காலையில தான வந்த..? நான் பார்த்தேன். அவன்மேல உனக்கு இருந்த கோபம் எல்லாம் போயிடுச்சா..?” என்றார் ஆர்வமாக.
“இதைக் கேட்கத்தான் இவ்வளவு அவசரமா வந்திங்களா..?” என்றாள் மேலும் கீழும் பார்த்தபடி.
“ஆமா துளசி..! எவ்வளவு சந்தோஷமா இருக்கு. என் வயித்துல பாலை வார்த்த..” என்றார் வள்ளி.
“உங்க வயித்துல தீய வார்க்காம இருக்கணும்ன்னா, பேசாம போய்டுங்க. உங்க கற்பனைக்கு ஒரு அளவே இல்லையா..? நான் அவனுக்கு கேக்கு குடுக்கப் போனேன்..!” என்றாள்.
“கேக் குடுத்துட்டு வர இவ்வளவு நேரமா..?” என்றார் வள்ளி.
“ஐயோ பாட்டி..! நான் கேக் குடுத்துட்டு அப்பவே வந்துட்டேன். இப்போ காலையில பிரவீன் ஒரு பைல் கேட்டான். அதைக் கேட்கத்தான் போனேன்..!” என்றவள் பல்லைக் கடிக்க,
“பைல் கேட்க போனியா..? நான் கூட என்னமோன்னு நினைச்சேன். வெறும் பைல் தானா..?” என்று பாட்டி தன்னுடைய ஏமாற்றத்தை முகத்தில் காட்ட,
“தாய்கிழவி, இருந்தாலும் உங்களுக்கு இம்புட்டு குசும்பு ஆகாது. இந்த வயசுல ஓவர் கற்பனை உடம்புக்கு ஆகாது..!” என்றாள் சிரித்தபடி.
“கற்பனை தான், அது என்னைக்கு நிஜமாகும்ன்னு தான காத்துகிட்டு இருக்கேன்..” என்று பெருமூச்சு விட்டார் பாட்டி.
“கவலைப்படாதிங்க.. சீக்கிரம் நிஜமாகிடும்..!” என்றாள் துளசி.
“என்ன சொன்ன..?” என்றார் மீண்டும்.
“ஒன்னும் சொல்லலையே..?” என்றாள்.
“ஏண்டி இந்த வயசான காலத்துல என்னைப் போட்டு படுத்துற.. பாட்டி பாவம் துளசி.. உண்மையை சொல்லு..!” என்றார் வள்ளி. அவரைப் பார்க்க, துளசிக்கே பாவமாய் இருந்தது போல,
“நீங்க எதிர்பார்க்குற எல்லாமே நடக்கும், நல்லாவே நடக்கும்.. போதுமா..?” என்றாள்.
“இந்த வார்த்தையை உன் வாயில இருந்து கேட்க எத்தனை நாள் ஆகியிருக்கு..?” என்று பாட்டி அவளுக்கு திருஷ்டி சுத்த,
“பாட்டி..!” என்று சிணுங்கினாள். துளசி கொஞ்சம் கொஞ்சமாக பழைய துளசியாக மாறிக் கொண்டிருந்தாள். அவள் மனதில் ஊசியாய் குத்திக் கொண்டிருந்த ஒரு விஷயத்திற்கு மட்டும் விடை கிடைத்து விட்டாள், அவளைப் போல் மகிழ்ச்சியானவள் யாரும் இருக்க முடியாது.
“இன்னைக்கு சேலையை கட்டு துளசி. அப்படியே விஜய்யைக் கூட்டிட்டு கோவிலுக்கு போயிட்டு வாயேன்..!” என்றார் வள்ளி.
“நாளைக்கும் சேலை தான் கட்டனும். இன்னைக்கும் சேலையா, முடியவே முடியாது..!” என்றாள்.
“பிறந்த நாள் அன்னைக்கு சேலை கட்டினா தான் என்னவாம்..?” என்றார்.
“பார்க்கலாம் பார்க்கலாம்..!” துளசி, அவரை கீழே அனுப்ப, அவர் சென்றவுடன் தனக்குள் சிரித்துக் கொண்டாள். நேற்று இரவு நடந்தது அவளுக்கு நியாபகத்தில் வர, அவளுக்கு தன்னைக் குறித்தே ஆச்சர்யம். அவனின் பிடியில் மயங்கி கட்டுண்டு இருந்து, மயக்கம் தெளியும் நேரம், அவனின் முகத்தையும் பார்க்காமல் அறைக்கு ஓடி வந்து விட்டாள். இப்போது பைல் தேடி போன போதும், அவன் குளித்துக் கொண்டிருக்க, வந்து விட்டாள். வள்ளி வேறு இப்படி வந்து பேசி விட்டு சென்றிருக்க, முதன் முறையாக பெண்ணிற்கே உரிய சிறு வெட்கம் பூத்தது அவள் முகத்தில்.
பிரவீனும், அருணும் இந்த காட்சியைப் பார்த்திருந்தால் ஓட்டித் தள்ளியிருப்பார்கள். துளசியின் நல்ல நேரம், அவர்களின் கண்ணில் அவள் படவில்லை.
‘இன்னைக்கு இவளை எப்படியாவது கரெக்ட் பண்ணி வெளிய கூட்டிட்டு போகணும்..!’ என்று தனக்குத் தானே பேசிக் கொண்டே, கிளம்பிக் கொண்டிருந்தான் விஜய்.
“பொண்டாட்டியை கரெக்ட் பண்ணி, வெளிய கூட்டிட்டு போற முதல் புருஷன் நீயாதான் இருப்ப விஜய்..” என்று பிரவீன் பின்னால் இருந்து கமெண்ட் அடிக்க,
“வாடா நல்லவனே..! ஏன் சொல்ல மாட்ட.. என்னோட பொழப்பு தான் இங்க சிரிப்பா சிரிக்குதே..? எல்லாம் என் நேரம்..!” என்றான் விஜய்.
“அதை விடு விஜய்.. உனக்கு ஒரு குட் நியூஸ் சொல்லவா..?” என்றான் பிரவீன்.
“என்ன நியூஸ்..?” என்றான் விஜய்.
“அந்த விமல்க்கு ஆக்சிடென்ட்..! அவன் ஸ்பாட் அவுட்..!” என்றான் பிரவீன்.
“இது தான் அந்த குட் நியூஸா..! நான் கூட என்னமோன்னு நினைச்சேன்..!” என்றான் விஜய்.
“உனக்கு இதுல சந்தோசம் இல்லையா விஜய்..?”
“சந்தோசம் இல்லைன்னு சொல்ல மாட்டேன். அதே சமயம் கொஞ்சம் வருத்தமாவும் இருக்கு..!” என்றான் விஜய்.
“இது ஆக்சிடென்ட் மாதிரி தெரியலை. எனக்கு என்னவோ அந்த கனகவேல் மேல தான் சந்தேகமா இருக்கு..”
“உனக்கு சந்தேகமே வேண்டாம், கண்டிப்பா இது அவர் வேலை தான். அந்த ஆள் புத்தி தெரிஞ்சும் இவன் இப்படி ஆட்டமா ஆடியிருக்கக் கூடாது..” என்றான் விஜய்.
“அது என்னவோ உண்மைதான்..! இனியாவது நம்ம வம்புக்கும், வழிக்கும் வராம இருப்பாங்களா..?” என்றான் பிரவீன்.
“நம்மகிட்ட வம்பு வச்சுக்க வாய்ப்பே இல்லை. ஏன்னா, நடந்த எல்லா விஷயத்துக்கும் விமல் தான் காரணமா இருந்திருக்கான். இப்ப, உண்மையெல்லாம் ஓரளவுக்கு தெரிஞ்சிருக்கும். சோ, நம்மை எதிரியா நினைக்க வாய்ப்பே இல்லை..!” என்றான் விஜய்.
“உனக்கு..??” என்றான் பிரவீன்.
“தொழில்லன்னு பார்த்தா, கண்டிப்பா எப்பவும் இருக்குற போட்டி இருக்கத்தான் செய்யும். என்னோட வழிக்கு அந்த ஆளும், அவர் பொண்ணும் வராத வரைக்கும், நானும் அவங்க வழிக்கு போக மாட்டேன்..!” என்றான் விஜய் தெளிவாக.
“சரி ஆபீஸ் கிளம்பலாமா..?”
“என்ன பிரவீன்..? விளையாடுறியா..? நான் இன்னைக்கு துளசியை வெளிய கூட்டிட்டு போகலாம்ன்னு நினைச்சுட்டு இருக்கேன்..!” என்றான் விஜய்.
“வாய்ப்பில்லை ராஜா..! இன்னைக்கு புது மெஷின் சம்பந்தமா, நம்ம பார்ட்னர்ஸ் கூட முக்கியமான மீட்டிங் இருக்கு. இதுக்கு நீ கண்டிப்பா இருந்தே ஆகணும். ஜஸ்ட் த்ரீ ஹார்ஸ். அதுக்கப்பறம் வந்து நீ உன் பொண்டாட்டி கூட வெளிய போனாலும் சரி, உள்ளயே இருந்தாலும் சரி…!” என்றான் கிண்டலாக.
“இருடா, எனக்கும் காலம் வரும். பவிகிட்ட சொல்லி கவனிக்க சொல்றேன்..!” என்றான் விஜய்.
“நீ அப்படி சொல்லிகின்ன, அவ என்னை கவனிச்சிதான் உண்டு. எங்க..? எல்லாருக்கும் நல்லது தான் செய்றேன். ஆனா, கடவுள் என்னவோ என்னைத்தான் வச்சு செய்றார்..!” என்று பிரவீன் சோகமாக சொல்ல,
“ஏன் மச்சான் ஏன்..?” என்றான் விஜய்.
“உங்க நீலாம்மாக்கு மூணு மாசம் கழிச்சு தான் கல்யாணம் வைக்கணுமாம். அதுவரைக்கும் நான் இப்படி புலம்பிட்டே இருக்கணும். அதுல அவங்களுக்கு அப்படி ஒரு சந்தோசம். என்னைக் கண்டா அவங்களுக்கு எப்படி இருக்கோ தெரியலை..! மூணு மாசம்… ஒரே வீட்ல… சத்திய சோதனை தான்..!” என்றான் பிரவீன்.
“என்னோட கம்பேர் பண்ணும் போது, உனக்கு சோதனை கொஞ்சம் கம்மி தான் மச்சான். விடு என்ஜாய் பண்ணு. மூணு மாசம் லவ் பண்ணு, அப்பறம் கல்யாணம் பண்ணு..!” என்றான் விஜய்.
“”உன் தங்கச்சிக்கு லவ்வுன்னா என்னன்னு புரிய வைக்கவே எனக்கு மூணு மாசம் ஆகிடும்டா..! போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும்..! இப்படியே உங்க நீலாம்மா பண்ணிட்டு இருக்கட்டும், அப்பறம் உன் தங்கச்சி ‘அம்மா, நான் மூணு மாசம்..’ அப்படின்னு சொல்ல போறா..?” என்றான் கடுப்பாக.
“டேய்..! நான் அவளுக்கு அண்ணன்டா.. என்கிட்டேயே இப்படி பேசுற..?” என்று விஜய் பொய்யாய் முறைக்க,
“வாங்க நல்லவரே, நீங்க என் தங்கச்சியை பேசாததா..? உங்களுக்குன்னா மட்டும் அப்படியே ஜிவ்வுன்னு ஏறுதோ..? ஒழுங்கா கல்யாணத்தை சீக்கிரம் வைக்க சொல்லுடா..!” என்றான் பிரவீன்.
“என்னடா மிரட்டுற..?” என்று விஜய் கேட்க,
“இப்போ மிரட்டலோட விடுறேன். நாளைக்கு பேசி முடிக்கும் போது, நீ சரியா பேசுற. இல்லை மவனே, துளசியை கூட்டிட்டு நான் அந்த வீட்டுக்குப் போய்டுவேன்..!” என்றான்.
“இதென்னடா புது விதமான மிரட்டலா இருக்கு..!”
“எல்லாம் அப்படித்தான். நேரமாச்சு கிளம்பலாமா..?” என்றவன் விஜயை கையேடு அழைத்துக் கொண்டு செல்ல,
“இருடா, துளசிகிட்ட சொல்லிட்டு வரேன்..!”
“அதெல்லாம் வந்து சொல்லிக்கலாம் வா..!” என்றவன், அவனைக் கிளப்பிக் கொண்டு போய்விட்டான்.
பேபி பிங்க் நிறத்தில் இருந்த அந்த ஷிவான் புடவை, துளசிக்கு அவ்வளவு அம்சமாய் இருந்தது. புடவையில் தான் மேலும் அழகாய் தெரிவதைப் போல் உணர்ந்தாள். கிறங்கடிக்கும் அழகுடன் கிளம்பி வெளியே வந்தவள், அப்போது தான விஜய்யும், பிரவீனும் வேகமாய் வெளியே செல்வதைப் பார்த்தாள்.
அவ்வளவு தான்.. அப்படியே அவளுக்கு முகம் தொங்கிப் போனது. அன்று காரணமே இல்லாமல் அவள் மனம் சிறகடித்துக் கொண்டிருந்தது. விஜய் வெளியே கிளம்பி செல்கிறான் என்றவுடன், மனதிற்குள் அடித்த சிறகுகள் எல்லாம் அப்படியே அடங்கி விட்டது.
“விஜய்.. எங்க கிளம்பிட்டான்..?” என்றார் வள்ளி.
“எனக்கென்ன தெரியும்..? அவன் எங்க போறான்னு..? என்னவோ சொல்லிட்டு போற மாதிரி..!” என்று எறிந்து விழுந்தாள் துளசி.
அவளின் சத்தத்தில் வெளியே வந்த வித்யா, மகளின் அழகில் மெய்மறந்து நின்றார்.
“ரொம்ப அழாகாயிருக்க துளசி..! முதல்ல சுத்தி வைக்கணும்..!” என்றார் வித்யா.
“கடுப்பைக் கிளப்பாதிங்கம்மா..! இப்ப இது ரொம்ப முக்கியமா..?” என்றவள் மீண்டும் அறைக்குள்ளேயே சென்று விட்டாள்.
“இவளுக்கு என்னம்மா ஆச்சு..?” என்றார் வித்யா புரியாமல்.
“அவளுக்கு, விஜய் கிளம்பி ஆபீஸ் போயிட்டான்னு கோபம்..!” என்றார் வள்ளி.
“விஜய் ஆபீஸ் போனதுக்கு இவ ஏன் இப்படி கோபப்படுறா..?” என்றார் வித்யா புரியாமல்.
“அடியே மக்கு..! புருஷன் வேலைக்கு போறப்ப, யாராவது மூஞ்சியைத் தூக்குவாங்களா..? அதுலயும் உன் மக.. சொல்லவே வேண்டாம். ஆனா, இன்னைக்கு அப்படி இருக்கான்னா.. என்ன அர்த்தம்…?” என்றார் வள்ளி.
“என்ன அர்த்தம்..?” என்றார் வித்யா மீண்டும் புரியாமல்.
“ஒரு மண்ணும் இல்லை..! நீ போய் வேலையை பாரு. நான் பார்த்துக்குறேன்..!” என்றவர் வேகமாக பிரவீனுக்கு போன் செய்தார்.
“சொல்லுங்க பாட்டி..!” என்றான் பிரவீன்.
“இன்னைக்கு எதுக்கு பிரவீன் அவனைக் கூட்டிட்டு போற..? இங்க உன் தங்கச்சி மூஞ்சி போற போக்கை பார்க்க முடியலை..!” என்று வள்ளி சொல்ல,
“எல்லாம் காரணமா தான் பாட்டி. நீங்க நினைச்சதை எல்லாம் இந்த பிரவீன் இன்னைக்கு முடிச்சு வைப்பான். பதிலுக்கு நீங்க என்ன செய்யணும்..?” என்றான் பிரவீன், பீடிகையுடன்.
“என்னடா செய்யணும்..?” என்றார்.
“ரொம்ப நடிக்காதிங்க பாட்டி. நான் என்ன கேட்பேன்னு உங்களுக்குத் தெரியும். ஒழுங்கா, கல்யாணத்தை சீக்கிரம் வைக்கிற வழியைப் பாருங்க. வாழ்க்கையிலையே நீங்க எனக்கு செய்ற உருப்படியான வேலை அது தான்..!” என்றான் பாவமாய்.
“சரிடா..சரிடா..! பாட்டி எதுக்கு இருக்கேன்…! நீ கவலைப் படாத.. எல்லாம் சிறப்பா செஞ்சுடுவோம்..!” என்றார் வள்ளி. அவருக்கும் இப்படிப் பேசத் தெரியும் என்று சமீப காலமாக தான் உணர்ந்து கொண்டான் பிரவீன்.