மாயாவி 17 :::
உந்தன் பேச்சையும்
உன்னையும் விலக்கி
வைத்த என்னை…
இன்று உன்னுடன்…
பேசுவதற்காக என்னை…
தவம் இருக்க வைக்கிறாயே!
என்னடி மாயாவி நீ !
கொஞ்சம் கொஞ்சமாக அவனை மாற்றும் முயற்சியில் இறங்கிய அமுதன் முதலில் தடுமாறினாலும் அதன்பின் அதை நேர்த்தி செய்தான். தானே முன்வந்து அனைவரிடமும் பேசவும் வேலைகளை கற்றுக் கொள்ளவும் முயன்றவன் முதலில் எல்லாவற்றையும் கிரகித்தான்.
கவியுடன் சென்று தங்க ஆரம்பித்தவனுக்கு அவனின் வீடு வசதி எல்லாம் கண்டு தயக்கமாக இருந்தாலும் அவனின் இயல்பான மற்றும் உரிமையான பேச்சில் அவனோடு நெருக்கமானான்.
அதனால் தயக்கம் இல்லாமல் அவனிடம் தனக்கு தெரியாததெல்லாம் கேட்டு கற்றுக் கொண்டான். இதெல்லாம் அவன் வந்த இரண்டு நாட்களிலே நடக்கவும் கவிக்கே அவன் மாற்றம் குறித்து ஆச்சர்யமானது.
“சாப்பிட போகலாமா அமுதன்? மெஸ் மூடற நேரமாச்சு…” என்று கவி அழைக்கவும்,
“ம்ம்ம்! போகலாம் கவி… எப்பவும் இங்கயே தான் சாப்பிடுவீங்களா? வெளிய ஹோட்டல்லலாம் சாப்பிட மாட்டிங்களா? உங்க கிட்ட அந்த அளவுக்கு வசதி இருக்கே…” என்று அவனுடன் கிளம்பியவாறே அமுதன் கேட்கவும்,
“அந்த மெஸ் வைச்சிருக்கவங்க தமிழ் ஆளுங்க தான்… அதனால நம்ம வீட்டு சாப்பாடு போல இருக்கும்… தினமும் ஹோட்டல்ல சாப்பிட்டா உடம்பு என்னத்துக்கு ஆகிறது? காலையிலும் நைட்டும் இங்க சாப்பிடுவேன்… மதியம் நம்ம ஆபீஸ்ல சாப்பிடுவேன்… இதே பழகிடுச்சு…” என்றவனை பார்த்து,
“ஏன் உங்க பிரெண்ட் நல்லா தானே சமைக்கிறாங்க… அவங்களே உங்களுக்கு காலையும் மதியமும் கொண்டு வந்து தர்ற வேண்டியது தானே…” என்று கேட்டவனை பார்த்து இன்பமாக அதிர்ந்த கவி,
“நான் இது வரைக்கும் அவ சமைச்சு சாப்பிட்டது இல்லையே… ஆனால் அவ சமைச்சு கொண்டு வர்றேன்னு தான் சொல்லுவா எதுக்கு அதை சாப்பிட்டு ரிஸ்க் எடுக்கணும்னு நான் தான் வேணாம்னு சொல்லிட்டேன்…” என்று குறும்போடு சொன்னான்.
“அதெல்லாம் நல்லா தான் இருக்கும்…” என்று மனைவிக்கு சப்போர்ட் செய்தவனை பார்த்து,
“ஆஹான்! அப்ப நீங்க கொடுத்த வைச்ச புருஷர்ன்னு சொல்லுங்க… உங்க வீட்டம்மா கையில சாப்பிடணும்னு ஆசை வந்துடுச்சா என்ன?” என்றவனின் கேலியை உணர்ந்தவனுக்கு உள்ளே எங்கோ சில்லென்றிருக்க இதழின் ஓரம் சிரிப்பில் விரிய அதை கவியிடம் காட்டாமல் மறுபுறம் திரும்பிக் கொண்டான்.
மறுநாள் காலை கவியும் அமுதனும் குழலிக்காக காத்திருக்க, இருவரையும் முறைத்துக் கொண்டே காரின் பின் இருக்கையில் ஏறினாள்.
தன்னை விட்டுவிட்டு அவர்கள் இருவரும் இப்போது நெருங்கிய நண்பர்கள் போல் இருப்பது கண்டு அவளுக்கு உள்ளுக்குள் காய்ந்தது.
“அமுதன் எங்கயோ தீயிற வாசனை வருதுல்ல….” என்று கண்ணாடி வழியே குழலியை பார்த்து கொண்டே கவி சொல்ல, அவன் கேலியை உணர்ந்த அமுதனோ சிரிப்பை தன் வாய்க்குள் அடக்கி கொண்டான்.
“இப்ப கூட பாருங்க நீங்களும் நானும் பிரெண்ட் ஆகிட்டோம்னு உங்க வீட்டம்மா பொறாமையில் பொங்கறாங்க…” என்று கவி சொல்லவும்,
அமுதன் வேகமாக திரும்பி மனைவியை பார்த்தான். அவளோ பின்னிருந்தபடியே கவியின் தலையில் நறுக்கென்று கொட்டவும் அமுதன் வேகமா கீழே குனிந்தான்.
அவன் செயலை பார்த்த குழலியோ வெளியே வேடிக்கை பார்ப்பது போல திரும்பி கொண்டு சிரிக்க கவியோ அவளின் சிரிப்பை கண்டு மகிழ்ந்தவன்,
“என்ன அமுதன்? என்னை மட்டும் இந்த பூனைகிட்ட மாட்டி விட்டுட்டு நீங்க மட்டும் கீழே குனிச்சு தப்பிச்சுட்டீங்க… இதெல்லாம் செல்லாது… சொல்லிட்டேன்…” என்றவனை கணவன் மனைவி இருவருமே முறைத்தனர்.
“இந்த பச்சை மண்ணை இப்படி கொடுமை படுத்தறாங்களே இதை கேட்க யாருமே இல்லையா?” என்று காரை ஓட்டிக் கொண்டே கத்தியவனை மறுபடியும் தலையில் கொட்டிய குழலி, “ஒழுங்கா ரோட்டை பார்த்து வண்டிய ஓட்டு….” என்றாள்.
மூவருக்குமே அன்றைய காலை பொழுது என்னவோ அழகானது போல தோன்றியது. அதே மனநிலையில் அலுவகம் வந்து அன்றைய வேலையை தொடர, அமுதனோ தன் கற்றல் பணியை தொடர்ந்தான்.
கவிக்காக காத்திராமல் அங்கு வேலை செய்யும் ஊழியர்களிடம் சென்று தானே எல்லாவற்றையும் கற்றுக் கொண்டிருந்தான். ஒரு வாரம் கழித்து சரஸ்வதியும் பணியில் சேர வந்திருந்தாள்.
தனக்கு மேலதிகாரியாக யாரோ ஒரு ஆண் என்ற நினைத்து இருந்த அமுதன், அவனை விட சிறு வயது பெண்ணை பார்த்து ஒரு நொடி அதிர்ந்தாலும் உடனே தன்னை குட்டிக் கொண்டு,
“இவ்வளவு சின்ன வயசுல இந்த அளவுக்கு வந்திருக்கா, நீ எல்லாம் இவ்வளவு நாள் என்ன பண்ணி இருக்க?…” என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டான்.
அதற்கேற்றாற் போல சரஸ்வதியிடம் அந்த பதவிக்கு உரிய பந்தா பகட்டு கர்வம் இல்லாமல் தோழமையே இருந்ததை அவள் பேச்சிலே உணர்ந்து கொண்டான் அமுதன்.
“ஹலோ மேம்! கங்கிராட்ஸ்…” என்று அவளுக்கு வாழ்த்து தெரிவித்த அமுதனை பார்த்து,
“ஹலோ ப்ரோ… ஐ ஐம் சரஸ்வதி… இந்த மேம்னுலாம் கூப்பிட வேணாம்… பெயர் சொல்லியே கூப்பிடுங்க… நம்ம இரண்டு பேரும் சேர்ந்து தான் தீயா வேலை செஞ்சு இந்த கம்பெனியை தாங்க போறோம்…” என்றவளை இடைமறித்த கவி,
“ஆமா… ஆமா… அவங்களை மேம்னு கூப்பிடாதீங்க… அபிநய சரஸ்வதின்னு கூப்பிடுங்க…” என்றவனை முறைத்தவள்,
“நான் ஒன்னும் அபிநய சரஸ்வதி இல்லை…”
“அப்புறம் என்ன கலைநய சரஸ்வதியா?”
“ஹான்… இல்ல நவீன சரஸ்வதி…” என்று அவள் சொன்னதும் குழலியும் அமுதனும் உனக்கு இது தேவையா என்பது போல அவனை பார்த்து சிரித்தனர்.
“ஹலோ ! ஒரு கம்பெனி முதலாளி கிட்ட இப்படி தான் பேசுவீங்களா?” என்று கேட்டவனின் குரலில் காரம் இல்லாததை உணர்ந்தவள்,
“அதை பேசறதுக்கு முன்னாடி நீங்க யோசிங்க? இல்ல உங்களுக்கு மறந்து போச்சுன்னா இதை அப்ப அப்ப கேட்டுக்கோங்க…” என்றபடி தன் போனில் இருந்து,
“ஆமா ! இவர் பெரிய கப்பல் வியாபாரி போடா…” என்று கவுண்டமணியின் டைலாக்கை ஓடவிட, குழலி அவளுக்கு ஃஹைபை கொடுத்தாள்.
அன்று குழலி கவியை அடித்ததும் இப்போது இந்த சிரிப்பையும் எல்லாம் ஏதோ அதிசயம் போல பார்த்துக் கொண்டிருந்தான் அவள் கணவன்…
எப்போதும் இறுக்கமாக இருப்பவள் கவியிடம் மட்டுமே இயல்பாக இருக்கிறாள் என்பதை உணர்ந்தவனுக்கு சந்தோஷமாக இருந்தாலும் எங்கோ ஏதோ உடைவது போல் இருந்தது.
“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் கிளம்பறேன்…” என்று யாரின் பதிலுக்கும் காத்திராமல் அமுதன் கிளம்ப,கவியும் குழலியும் யோசனைக்கு சென்றார்கள்.
“எனக்கும் டிசைனிங் ஒர்க் கொஞ்சம் பார்க்க வேண்டி இருக்கு…. நானும் வரேன்… நீயே சரஸ்க்கு எல்லாம் சொல்லிடு…” என்று குழலியும் கிளம்பி விட்டாள்.
“என்னாச்சு? ஏன் அவங்க இரண்டு பேரும் ஒரு மாதிரி மூட் ஆப் ஆகிட்டாங்க…” என்று கேட்ட சரஸிடம்,
அவர்களின் உறவையும் அமுதனின் தற்போதைய முயற்சியையும் சொன்னவன்,
“நீ காலேஜில எங்களுக்கு ஜூனியரா இருந்தாலும் அப்ப இருந்து எனக்கு அப்புறம் காரு கொஞ்சம் நார்மலா பேசறது உன்கிட்ட தான்… அதான் இதெல்லாம் உங்கிட்ட சொல்றேன்… காரு உன்னை இங்க செலக்ட் பண்ணது வேணும்னா உன்னோட திறமைக்காக இருக்கலாம்…”
“ஆனால் அதுக்கு நான் ஓகே சொன்னதுக்கு காரணம் நீ எல்லாத்தையும் சரியா கையாளுவன்னு தான்…அதனால எல்லாத்தையும் கொஞ்சம் பார்த்துக்கோ… முக்கியமா அவங்க இரண்டு பேரையும்…” என்று சீரியசாக பேசியவனைப் பார்த்து,
அங்கிருந்த மேசையில் கையை முட்டு கொடுத்து கன்னத்தை அதில் தாங்கியவாறு அவனையே அசையாது பார்த்தவளை பார்த்து அதிர்ந்தான்.
“ஹலோ! என்னது இது இப்படி ஒரு அபிநயம் பிடிக்கற?” என்று கேட்டான்.
“நீங்க பேசும் போது உங்க முகத்தில ஒரு விஷயம் தெரிஞ்சுது அது என்னன்னு ஆராய்ச்சி பண்றேன்…” என்றவளை குழப்பமாக பார்க்க,
“நீங்க தீவிரவாதியா மாறி போற அளவுக்கு உங்க முகத்துல ஒரு தீவிரம் தெரியுது… உங்களை இதுக்கு முன்னாடி அப்படி பார்த்தது இல்லையா அதான் நான் பார்த்துகிட்டு இருந்தேன்…” என்று சிரியாமல் சொன்னவளை முறைத்தான்.
“பின்ன என்னங்க நமக்கு வராத விஷயத்தை நம்ம எப்பவும் முயற்சி பண்ண கூடாது… உங்களுக்கும் எனக்கும் இந்த தீவிரவாதம் எல்லாம் ஒத்து வராது… என்கிட்ட சொல்லிட்டீங்கல்ல கவலையை விடுங்க எல்லாத்தையும் பட்டி டிங்கேரிங் பார்த்து சரி பண்ணிடலாம்…” என்றவளை முறைத்து கொண்டே தலையசைத்தவன்,
“நீ இன்னும் கொஞ்சம் கூட மாறல… அப்ப காலேஜில பார்க்கும் போது எப்படி இருந்தியோ அப்படியே தான் இப்பவும் வாயடிக்கற…” என்றவனை பார்த்து,
“ஹா ஹா ! கூடவே பொறந்தது.. எப்படி போகும்…” என்று சிரிக்கவும் அவனுக்கும் அந்த சிரிப்பு தொற்றியது.
“அரட்டை போதும் வேலையை பார்ப்போம் வா…” என்றவன் அவளிடம் வேலை பற்றி எல்லாவற்றையும் விவரித்து என்று நேரம் ஓடியது.
குழலி அந்த பெண்ணிடமும் கவியிடமும் காட்டிய நெருக்கம் அமுதனுக்கு சுருக்கென்றது. தன்னிடம் இயல்பாக கூட பேசவில்லையே… இங்கு வந்து பத்து நாட்கள் மேலாகிறது அன்று வேலையில் சேரும் போது பேசியது… அதிலிருந்து இன்று வரை பேசவே இல்லை…
“தான் மறுபடியும் இங்கு வந்தது அவளுக்கு பிடிக்கவில்லையோ… தான் சரியாக எடுக்கும் முயற்சியில் அவளுக்கு தன் மீது நம்பிக்கை இல்லையோ…” என்று நினைத்தவனுக்கு மனம் கனத்தாலும் அவளிடம் நற்பேர் வாங்கவாது எல்லாவற்றையும் சீக்கிரம் சரி செய்ய வேண்டும் என்ற உத்வேகம் வந்தது.
குழலியோ, “அவருக்கு என்னை பிடிக்கவில்லையா? என்மேல இன்னும் கோபம் போகலையா? நான் மறுபடியும் ஏதேனும் சொல்லிவிடுவேன்னு தான் கவி கூட போய் தங்கி இருக்காரா? இவர் எல்லாத்தையும் சீக்கிரம் சரி பண்ணி மாமாவை பார்த்துக்க மாட்டாரா?” என்று தனக்குள்ளே உழன்று கொண்டிருந்தாள்.
மதிய உணவு இடைவேளையின் போது கவி , குழலி , அமுதன் , சரஸ் என்று நால்வரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்த கவியும் சரசும் அவர்களின் பேச்சால் அந்த இடத்தை கலகலப்பாக மாற்ற கணவன் மனைவி இருவரும் அதில் கலந்து கொண்டனர்.
“ஹே ! பூனை ! நீ மட்டும் வீட்டிலேயே சமைச்சு சாப்பிட்டு சாப்பிட்டு இப்படி காட்டு பூனை போல மாறி இருக்க… எங்களுக்கும் கொஞ்சம் சமைச்சு கொண்டு வந்து கொடுக்கலாம்ல… நாங்களும் கொஞ்சம் நல்லா இருப்போம்ல…” என்றவனை முறைத்தவாறே,
“என்னால முடியாது போடா…” என்றாள்.
“வெளியே சாப்பிட்டு சாப்பிட்டு கோமாவிற்கு போன என்னோட நாக்கை, நீ கொடுக்கற சாப்பாட்டை சாப்பிட்டு அதை தட்டி எழுப்பலாம்னு இருக்கேன்… கொஞ்சம் தயவு காட்டேன்…தினமும் இப்படி வெளிய சாப்பிடறது உடம்புக்கு ஒத்துக்கல…” என்று சோகம் போல கூறியவனின் முயற்சி புரிந்து,
“இவ்வளவு நாள் இல்லாம இப்ப என்ன புதுசா என்ன கேட்கற?…” என்றவள் ஓரக்கண்ணால் தன் கணவனை பார்க்க அவனோ தன் தட்டில் இருக்கும் பருக்கைகளை எண்ணிக் கொண்டிருந்தான்.
“ப்ளீஸ் பூனை!..” என்று அவன் கெஞ்சவும்,
“நமக்கு சோதனை எலி சிக்கி இருக்கு… அதனால சரின்னு சொல்லுங்க சீனியர்…” என்று சரஸ் வேறு சொல்லவும், அரை மனதாக சம்மதித்தாள்.
தன்னை நிலைப்படுத்தவும் தன் வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லவும் அமுதன் எடுக்கும் முயற்சியில் வெற்றி காண்பானா? அவனின் மாற்றத்தை புரிந்து கொண்டு அவன் முயற்சிக்கு துணைவியாக துணை புரிவாளா?