மாயாவி 18 :::
உனக்கென்று தனி…
உலகில் இருக்கும் நீ!..
என்னையும் உந்தன்…
உலகில் சேர்த்து கொண்டு…
எந்தன் தனிமையை…
தகர்த்தெறிய வைக்க மாட்டாயா…
என்று என்னை ஏங்க வைக்கிறாயே!
என்னடி மாயவி நீ!
இரண்டு நாள் கழித்து மாலை எப்போதும் போல மூவரும் வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமாக குழலியோ,
“எனக்கு கொஞ்சம் ஷாப்பிங் போக வேண்டி இருக்கு… அதான் வரல… நீங்க கிளம்புங்க… நான் பத்திரமா வீட்டுக்கு வந்துட்டு உனக்கு மெசேஜ் பண்றேன்…” என்று கவியிடம் சொல்ல,
“சரி பத்திரம் பூனை… வாங்க அமுதன் நம்ம கிளம்பலாம்…” என்று கவி அழைக்கவும், யோசனையோடே அவனுடன் சென்றான்.
கீழே சென்று காரில் ஏறி அமர்ந்தும் விட்டவன் திடீரென, “கவி! நீங்க கிளம்புங்க… எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு… நான் ஆட்டோல வீட்டுக்கு வந்துடறேன்.. நான் வந்த அப்புறம் சாப்பிட போகலாம்… அதுக்குள்ள வந்துடுவேன்…” என்று சொல்லியவாறே இறங்கியவனை பார்த்த கவி,
“என்ன வேலை அமுதன்? எதுவானாலும் நாளைக்கு பார்த்துக்கலாம் வாங்க…” என்றான்.
“இல்ல கவி… அது வந்து…. “ என்று இழுத்தவாறே தயக்கமாக நிறுத்தி அங்கும் இங்கும் அவசரமாக பார்த்த அமுதனை யோசனையாக பார்த்த கவிக்கு கீழே இறங்கி வந்து கொண்டிருந்த குழலியை பார்த்ததும் புரிந்து போனது.
“ஓஓஓ! உங்க ஆள் கூட வெளிய போறதுக்கு இப்படி கூட இருக்க பிரெண்டை கழட்டி விடறீங்க பார்த்தீங்களா? இதுக்கு தான் இந்த கமிட் ஆனவங்க கூட சேரக்கூடாதுன்னு சொல்றாங்க போல…. என்னடா இது கவிக்கு வந்த சோதனை…” என்று புலம்பியவனிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த அமுதனை பார்த்ததும் பக்கென்று சிரித்து விட்டான்.
“அமுதன்! சீக்கிரம் போங்க உங்க வீட்டம்மா உங்களை விட்டுட்டு கிளம்பிட போறாங்க…” என்றவனின் கேலியில் இருந்து தப்பித்து மனைவியிடம் வந்தான்.
தன்னருகே அவன் வந்த வேகத்தில் யாரோ என்று ஒரு நொடி அதிர்ந்ததை விட அவனை பார்த்து அதிர்ந்தவள்,
“இவங்க இன்னும் கிளம்பாம இங்க என்ன பண்ணறாங்க?” என்று மனதிற்குள் யோசித்தவாறு புக் பண்ணிய கேபிற்கு காத்திருக்க,
அவனோ “கூட நிற்கிறேன்ல என்ன ஏதுன்னு கூட கேட்கமாட்டாளா?” என்று அவனும் யோசிக்க வண்டி வந்து நின்றது.
அவனை பார்த்தவாறே அவள் சென்று பின்னிருக்கையில் ஏற அவனோ முன்னாடி ஏறி அமர்ந்ததும், “இவங்க நம்ம கூட வீட்டுக்கு வர்றாங்களா?” என்று நினைத்தவளுக்கு மனதின் ஓரம் எங்கோ நிம்மதியாக இருக்க அது ஏன் எதற்கு என்ற ஆராய்ச்சியில் எல்லாம் அவள் இறங்கவில்லை…
இப்படியாக இருவரும் யோசனையோடே மாலிற்கு சென்று அடைய வண்டிக்கான காசை குழலி கொடுக்கும் போது அமுதனுக்கு சுருக்கென்றது.
அவள் தனியாக செல்கிறாள் துணைக்கு செல்வோம், சந்தர்ப்பம் கிடைத்தால் அவளுடன் பேசலாம் என்று வந்தவன் இதை யோசிக்கவில்லை…
அன்று கவியுடன் செல்லும் போது அவள் தனியாக இருக்கிறாள் என்று யோசிக்காதவன், தந்தையிடம் உரிமையாக அவள் பணம் கொடுத்த போது அதை அவளின் திமிர் என்று யோசித்த அமுதன் இல்லையே இன்று நிற்பவன்…
தன்னை கணவனாக அவள் வாழ்க்கையிலும் மனதிலும் நிரந்தரமாக பதிய வைப்பதோடு அவளை மனைவியாக தன் மனதிலும் நிலைநிறுத்தும் மணாளனாக நிற்கிறானே…
அவனின் மனநிலை புரியாமல் வண்டியில் இருந்து இறங்கி ஏதோ யோசனையோடு நின்றவனை பார்த்து அவனுக்காக காத்திருந்தாள். திடீரென பக்கத்தில் கேட்ட வண்டியின் ஹாரன் சத்தத்தில் விழித்தவன் அவளை பார்த்ததும் அவள் உள்ளே நுழைய பின்னே சென்றான்.
வீட்டிற்கு தேவையான மளிகையையும் காய்கறிகளையும் தேடி தேடி எடுத்து ட்ராலியில் போட்டபடி வந்தவளின் அருகே அவள் செயல்களை வேடிக்கை பார்த்தவாறு அவளுடன் நடந்து வந்தான்.
தான் பேசினால் அவனுக்கு பிடிக்காது என்றபடி அவளும், தன்னிடம் பேச கூட பிடிக்கவில்லையோ என்றபடி அவனும் என இருவரும் யோசனையில் பேச்சுகளற்று இருந்தாலும் ஒருவர் மற்றவரின் அருகாமையை மனதிற்கு நெருக்கமாக உணர்ந்தது என்னவோ உண்மை… வார்த்தைகள் கட்டாத பிணைப்பை சில நேரம் இது போன்ற மௌனங்கள் கட்டி போடுகிறதோ…
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அந்த மாலில் வலம் வந்து வாங்கிய பொருள்களை எல்லாம் தூக்க கஷ்டப்படவளிடம் உதவ கையை நீட்டியவனை பார்த்து அவள் தயங்க, அவனோ அவளை முறைத்தவாறு அவளிடம் இருந்து பையை வாங்கினான். அவனின் அந்த உரிமையான செயலில் அவளின் மனம் குளிர்ந்தது.
இருவரும் வெளியே வர பையை கீழே வைத்து விட்டு அருகே இருக்கும் கடைக்கு சென்றவனை அவள் யோசனையாக பார்க்க, அவனோ கையில் இரண்டு பழச்சாறோடு வந்தவன் அவளிடம் ஒன்றை நீட்ட வெகு நாட்கள் கழித்து இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று மோதியது.
கணவனாக அவனிடம் இருக்கும் பணத்தில் அவளுக்கு வாங்கி கொடுத்த மகிழ்வு அவனிடமிருக்க, அவன் தன்னுடன் வந்ததிலே நிறைந்தவள் அவனின் இத்தகைய அக்கறையில் நெகிழ்ந்தாள்.
ஜுஸை குடித்ததும் அவள் வண்டி புக் செய்ய போனை எடுக்க அதற்குள் அவன் ஆட்டோவை அழைத்திருந்தான். பையை உள்ளே வைத்து விட்டு அவளை திரும்பி பார்த்ததும் உள்ளே வந்து அமர இவன் சற்று இடைவெளி விட்டு அமர்ந்தான்.
இருவருள்ளுமே ஒரு படபடப்பு அதை வெளியே காட்டாதவாறு இருக்க மிகவும் சிரமப்பட்டனர். வண்டியின் வேகத்தில் அருகே உள்ளவரை எங்கே உரசி விடுவோமே என்று அஞ்சி இருவரும் பதட்டப்பட, அவர்கள் மனமோ ஒருவரை ஒருவர் எப்போதோ அழுத்தமாக உரசி சென்று இருந்தது.
வண்டி குழலியின் இடத்தை அடைய வெளியே இறங்கியவன் ஆட்டோவை காத்திருக்க சொல்லிவிட்டு பையை எடுத்துக் கொண்டு போய் வீட்டிற்கு வெளியே இருந்தபடியே கொடுத்துவிட்டு கிளம்பி விட்டான்.
அவன் தன்னுடன் வீட்டிற்கே வருகிறான் என்ற எண்ணத்தில் இருந்தவள் திகைத்தாள். அப்போதும் ஏன் கிளம்பறீங்க என்று அவளும் கேட்கவில்லை, சென்று வருகிறேன் என்று அவனும் சொல்லிக் கொள்ளவில்லை.
உள்ளே வந்து கதவடைத்தவளுக்கு மனம் வெதும்ப வாங்கி வந்ததை கூட எடுத்து வைக்காமல் அப்படியே சென்று படுத்துக் கொண்டவள்,
“ஏன் அவங்க மறுபடியும் இங்க வரல? அப்புறம் எதுக்காக என்கூட வந்தாங்க? நான் தனியா போவேன்னு கூட துணைக்கு வந்திருந்தா இப்ப கூட தனியா தான் இருப்பேன்னு தெரியாதா?” என்றவளின் மனசாட்சி,
“நீ எப்ப இருந்து இதெல்லாம் எதிர்பார்க்க ஆரம்பிச்ச? அப்ப அவரை உன்னோட கணவனா ஏத்துக்கிட்டியா? உன்னால அவர் கூட நிம்மதியா சந்தோஷமா வாழ முடியுமா?” என்று கேட்க,
“ஏன் எனக்கும் குடும்பம் குழந்தைங்கன்னு வாழ ஆசை இருக்க கூடாதா? நானும் சராசரி மனுஷி தானே? கொஞ்சம் நேரம் முன்னாடி அவர் என்கூட இருந்தப்ப எனக்காக அவர் இருக்காருன்னு சந்தோஷப்பட்டது குத்தமா? மறுபடியும் இப்படி விட்டுட்டு போயிட்டாரு? என் வாழ்க்கை கடைசி வரைக்கும் இப்படியே இருந்துடுமா?” என்றவளின் எண்ணங்கள் சொன்ன சேதியில் திடுக்கிட்டவள் தலையை உலுக்கி கொண்டு,
“ச்சே சேச்சே என்ன இது? நான் எப்ப இவ்வளவு பலவீனமா மாறினேன்? நடக்காத விஷயத்தை போய் ஏதோ சின்ன பொண்ணு மாதிரி இந்த அளவுக்கு யோசிக்கிறேன்…” என்று வாய் விட்டே பேசியவள் வேகமாக எழுந்து சென்று வேலையில் தன்னை மூழ்கடித்தாள்… கூடவே அவளின் எண்ணங்களையும்…
அங்கு ஆட்டோவில் சென்றவனோ தன் மனையாளின் மனம் புரியாமல் எல்லாவற்றையும் எப்படி எப்போது சரி செய்து தனக்கென்று ஒரு வாழ்க்கையை அவளுடன் ஆரம்பிக்க போகிறோம் என்ற யோசனையில் இருந்தான்…
மறுநாள் காலையும் அவர்களுடன் வண்டியில் வராமல் போக, அமுதன் கேள்வியாக கவியை நோக்கினான்.
“மேடம் ! இன்னைக்கு எழுந்ததே லேட் தானாம்… அதான் நம்மள முன்னாடி போக சொல்லிட்டாங்க…” என்றான்.
நேற்று கிளம்பும் போது அவளின் கலங்கிய முகம் கண்முன்னே வர அதற்கான காரணம் என்னவென்று அறியமுடியாமல் இருக்க இப்போது அவள் உடன் வராதது வேற அவனை நெருடியது.
கவியும் சரஸ்வதியும் ஏதோ ஒரு முக்கியமான ப்ராஜெக்ட் பற்றி பேசி கொண்டிருக்க,
“கவி! உங்க பிரெண்ட் இன்னும் வரல… என்னாச்சுன்னு ஒரு போன் பண்ணி கேளுங்களேன்…” என்று பொறுமை காக்க முடியாமல் கேட்டவனை இருவரும் விசித்திரமாக பார்க்க,
“என்ன கவி?” என்று அமுதன் கேட்டான்.
“அவ வந்து அரை மணி நேரம் ஆகுது…” என்றதும் நேரே அவள் இருப்பிடம் சென்றதை அறியாமல் அவளும் இங்கு வருவாள் என்று காத்திருந்ததை நினைத்து அசடு வழிந்தவன் அதன்பின்னே வேலையில் கவனம் செலுத்தினான்.
மதிய உணவு இடைவேளையில் அங்கு வந்து சேர்ந்தவளின் கையில் பெரிய பையை கண்டதும்,
“பார்றா… பூனை சமைச்சு கொண்டு வந்திருக்கு போல? ஆனால் உனக்கும் எனக்கும் மட்டும் தானே அதுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய பை… ஒருவேளை ஆபீஸ்ல எல்லோருக்கும் சேர்த்து சமைச்சு கொண்டு வந்திருக்கியோ?” என்று கேட்டவனை முறைத்தவாறே சாப்பிட எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள்.
“சீனியர்! இவங்க இவ்வளவு பேசறதால மறுபடியும் நீங்க சமைச்சு கொண்டு வர்றதை மறு பரிசீலனை பண்ணலாம்னு நினைக்கிறேன்…” என்று சரஸ் சொல்லவும் இப்போது கவி அவளை முறைத்தான்.
தான் அங்கு அதிகப்படியோ என்று நினைத்த அமுதன், “கவி! நான் போய் சாப்பிட்டு வர்றேன்…” என்று அங்கிருந்து கிளம்ப, கவியும் சரியென்று தலையசைக்க குழலி அதிர்ந்து நின்றாள்.
“டேய் அவரை இங்கயே சாப்பிட சொல்லுடா… போக வேணாம்னு சொல்லு… அவருக்கும் சேர்த்து தான் கொண்டு வந்திருக்கேன்…” என்று படபடத்தவளை நிதானமாக பார்த்து,
“நான் கேட்டேன்னு எனக்கு சமைச்சு கொண்டு வந்திருக்கன்னு நினைச்சா நீ உங்க புருஷர்க்கு கொண்டு வந்திருக்க போல… உனக்கு வேணும்னா நீ கூப்பிடு… நான் ஏன் கூப்பிடனும்? எனக்கு பசிக்குது நான் சாப்பிடறேன்…” என்று அவன் வேலையை கவனிக்க, இவளோ கையை பிசைந்துக் கொண்டு நின்றாள்.
அமுதனோ மேசையில் இருந்த பைல்களை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு கதவருகே செல்ல,
“எழில்!” என்ற மனைவியின் அழைப்பில் திரும்பினான்.
“வாங்க சாப்பிடலாம்…” என்று அழைக்க,
“இல்ல வேணாம்! நான் கேன்டீன்ல போய் சாப்பிட்டுக்கிறேன்….” என்றவனை முறைத்தவள்,
“நீங்க கேன்டீன்ல போய் சாப்பிட தான் நேத்து கடைக்கு போய் எல்லாம் வாங்கிட்டு வந்து காலையிலே எழுந்து எல்லாம் சமைச்சு கொண்டு வந்தேனா? உங்களுக்கு தான் எடுத்துட்டு வந்திருக்கேன்… வாங்க…” என்றவளின் அதட்டலை ரசித்தவன் அதன்பின் எதுவும் சொல்லாமல் சாப்பிட அமர்ந்தான்.
இதை எல்லாம் கண்டும் காணாதவாறு அமர்ந்திருந்த கவியின் முதுகில் ஒன்று போட்டவள், “உனக்கு எல்லாம் நாளைக்கு இருந்து சாப்பாடு கிடையாதுடா…” என்றவளை பார்த்த சரஸ்,
“சீனியர்! நீங்க அவருக்கு இன்னைக்கே சாப்பாடு கொடுக்கல… அதை தெரிஞ்சு அவரே எடுத்து போட்டு சாப்பிட்டுட்டு இருக்காரு… இல்ல கவி…” என்று அவனை கிண்டல் செய்தவளை முறைத்தவன்,
எனக்கு சோறு தான் முக்கியம் என்பது போல அதனுடன் போரடிக் கொண்டிருக்க, “நீங்களும் உட்காருங்க சீனியர் சேர்ந்து சாப்பிடுவோம்…” என்று சரஸ் சொன்னதும் அவளும் அவர்களோடு இணைந்துக் கொண்டாள்.
அவர்களுடன் சாப்பிட அமர்ந்தாலும் கணவனுக்கு தேவையானதை பார்த்து பார்த்து பரிமாறியவள் அவனின் மாற்றத்தையும் புரிந்து கொள்வாளா?