மாயாவி 21 ::
வாழ்க்கையின் பாடத்தை…
மட்டுமல்ல உன் மனதையும்..
சேர்த்தே படிக்க முயல்கிறேன்!
ஆனால் அடிப்படையான நம்பிக்கையில்…
உன்னிடம் தோற்க வைக்கிறாயே!
என்னடி மாயவி நீ !
அலுவகத்தில் வேலை பளு அதிகமாக இருக்க அமுதனுக்கு குழலியிடம் கற்றுக் கொள்ள நேரம் கிடைக்காமல் போக இரண்டு நாட்களாக காலையும் மாலையும் அவள் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறான்.
காலை கவிக்கு முன்னே கிளம்பி அவள் இருப்பிடம் வந்து சிறிது நேரம் அவளுடன் அலுவக வேலை கற்றுக் கொண்டு அதன் பின் கவி வந்ததும் மூவருமாக அலுவகம் சென்றனர். இதற்காக ஊரில் இருந்து அவன் பைக்கை வர வைத்திருந்தான்.
அவர்களின் மதிய உணவு இடைவேளையில் கூட நேரம் கிடைக்கும் போது தனித் தனியாக தான் சாப்பிட்டனர். அந்த அளவிற்கு வேலையின் பளு கூடியிருந்தது. இந்த நேரத்தில் அனைவரின் கவனமும் ப்ராஜெக்ட் பிளானில் மட்டுமே இருந்தது.
ஒருவழியாக அமுதன் அதற்கான பிளானையும் டெண்டர் விவரங்களையும் முடித்து கொடுக்க, அதை பார்த்த குழலிக்கு ஆச்சர்யத்தில் விழிகள் விரிந்தது.
உண்மையில் அவள் சொல்லி கொடுக்கும் போது அவளுள் அவன் மேல் முழு நம்பிக்கை இல்லை… இன்னொரு பக்கம் அவளும் சரஸ்வதியும் அதற்காக வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் இரண்டு பேர் சேர்ந்தே இன்னும் முழுதாக முடிக்காத நிலையில் இவன் தனி ஆளாக அதை அத்தனை நேர்த்தியாக முடித்திருந்தான்.
அனைத்தையும் சரியாக கணித்து அவன் கொடுத்திருந்த டெண்டரை பார்த்த கவிக்கு மகிழ்ச்சி தாளவில்லை… அவனை இறுக அணைத்து, “நான் முன்னாடியே சொன்னேன்ல இவர்கிட்ட திறமை இருக்குன்னு…” என்று குழலியிடம் சிலாகித்தவன்,
“சூப்பர் அமுதன்… இவ்வளவு குறுகிய காலத்தில நீங்க இந்த அளவுக்கு பண்ணி இருக்கிறதைப் பார்க்க ரொம்ப பெருமையா இருக்கு…” என்று அவனை வாழ்த்த, சரஸ்வதியும் அவனை வாழ்த்தினாள்.
ஆனால் குழலிக்கோ குற்றஉணர்ச்சியாக இருந்தது… கவி நம்பிய அளவிற்கு கூட தான் நம்பாமல் போனோமே? நாம் வாய் வார்த்தையாக சொன்னதை அவன் செயலில் காட்டும் போது அதன் வீரியம் குறைவாகவே இருக்கும் என்று தான் அவள் இன்னொரு பக்கம் அதே வேலையை செய்து கொண்டிருந்தாள்… ஆனால் அவன் அனைத்தையும் வீழ்த்தி இருந்தானே…
காலம் கடந்து தன் வாழ்க்கையில் அடுத்த படியை எடுத்து வைத்திருந்த அமுதனுக்கு எல்லோரும் கொடுத்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும் அவன் மனதை நிறைக்கவில்லை… ஏனெனில் அவன் எதிர்பார்த்தது அவளின் ஒற்றை வாழ்த்தை… அது கிடைக்காமல் போக ஏமாற்றமாக உணர்ந்தான்…
“தான் செய்ததில் ஏதேனும் பிழை இருக்கிறதோ அவளுக்கு இதில் திருப்தி இல்லையோ…” என்று யோசித்தவாறே அவன் இடம் சென்றான்.
அன்றைய நாள் அப்படியே கழிய மாலை அவளுடன் இல்லம் செல்ல விருப்பம் இருந்தாலும் மனம் ஏனோ கணமாக இருக்க கவியுடனே சென்று விட, அவளின் மனம் மேலும் சோர்ந்தது.
மறுநாள் சைட்டிற்கு சென்று அங்கிருக்கும் வேலைகளை ஆய்வது பற்றி ஏற்கனவே இருவரும் பேசி வைத்திருக்க அதற்காக காலையே அவள் இல்லம் வந்து நின்றான்.
அடுத்து அடுத்து ஏதேனும் ஒரு வேலையிலாவது அவளிடம் பெயர் வாங்கிட வேண்டும் என்ற உத்வேகத்தோடு வீட்டின் அழைப்பு மணியை அழுத்த வெகுநேரம் அவளிடம் இருந்து பதில் வராததால் பதட்டமானவன் கதவை தட்ட ஆரம்பித்தான்.
“குழல் ! குழல் !” என்ற அவன் அழைப்பிற்கு மேலும் பதில் இல்லாமல் போக சிறிது நேர காத்திருப்பிற்கு பிறகு கதவை திறந்தவள்,
“சாரி! சாரி ! குளிக்க போயிருந்தேன்… உள்ள வாங்க…” என்றவளை ஆராய்ந்தவனின் கண்களில் அவளின் சோர்வு அப்பட்டமாக தெரிய,
“இப்ப தான் குளிச்சுட்டு வரேன்னு சொல்ற ஆனா நீ ஏன் இவ்வளவு சோர்வா இருக்க? உடம்புக்கு எதுவும் முடியலையா?” என்று கனிவாக அவன் கேட்டதும், உருக ஆரம்பித்த மனதை இறுக்கினாள்.
“இல்ல… இல்ல… இந்த வாரம் முழுக்க நிறைய வேலைல அதான் கொஞ்சம் சோர்வா இருக்கேன்…” என்றவள், “டிபன் செஞ்சி இருக்கேன் நீங்க சாப்பிட்டுட்டு இருங்க நான் ரெடி ஆகிட்டு வரேன்….” என்று அவள் அறைக்குள் சென்று புகுந்தவளை குழப்பமாக பார்த்தான்.
அவளின் சோர்ந்த முகத்தில் இருந்த வறண்ட விழிகள் வேறு ஏதோ கதை சொல்கிறதே என்று சாப்பிடும் எண்ணமும் இல்லாமல் யோசனையோடு அமர்ந்திருந்தவனை அழைத்தாள்.
“எழில் ! எழில் !”
“ஹான்! போகலாமா?”
“நீங்க சாப்பிடலையா?”
“இல்ல எனக்கு பசிக்கல… நான் வெயிட் பண்றேன்… நீ போய் சாப்பிட்டு வா…” என்றவனுக்கு மறுப்பாக அவள் சொல்ல,
“நீ பார்க்க ரொம்ப சோர்வா வேற தெரியற… நம்ம இன்னொரு நாள் போகலாம்…” என்றான்.
“இல்ல இல்ல நம்ம போகலாம்… வாங்க…” என்று அவள் அழைக்க, இருவரும் கிளம்பினர்.
அலுவகம் செல்ல வீட்டிற்கு வர என்று அனைத்துமே கவியின் கார் மூலமே… அமுதனின் பைக்கை அவன் மட்டுமே உபயோகித்து வந்தான்…
இப்போது கீழே இறங்கி வந்தவனின் கண்களில் நேற்று காலை இங்கு வந்த போது விட்டு சென்றிருந்த பைக் கண்ணில் பட அதிலே செல்லலாம் என்ற எண்ணம் உதித்ததும், மனையாளை திரும்பி பார்க்க அவளோ கேப் புக் செய்வதில் குறியாக இருந்தாள்.
“குழல்!”
“சொல்லுங்க!”
“வண்டி எதுக்கு? நம்ம பைக்லயே போகலாமே?” என்று அவன் கேட்டதும், தயக்கமாக அவள் பார்க்க,
“சரி உனக்கு பிடிக்கலைன்னா வேணாம்… காரிலே போகலாம்…” என்றான்.
“இல்ல இல்ல நான் இதுக்கு முன்னாடி பைக்ல போனதில்லை… கவி கூட எங்க போனாலும் நான் கார்ல தான் போயிருக்கேன் அதான் தயக்கமாவும் பயமாவும் இருக்கு…” என்றவளை பார்த்து,
“இனி பழகிக்கலாம்… நான் தான் இருக்கேன்ல… அப்புறம் என்ன பயம்? வா போகலாம்…” என்று அவன் அழைத்ததும் தட்டு தடுமாறி பைக்கில் அவன் பின்னே இடைவெளி விட்டு அமர்ந்தாள்.
பெங்களூரின் ட்ராபிக்கில் சென்றாலும் செல்லும் பாதை இன்னும் நீளாதோ என்று இருவரும் ஏங்கினர். அலுவக விஷயம் தாண்டி இதுவரை எதுவும் பேசாதிருந்தவர்கள் இன்று இப்படியே எங்கேனும் சென்று மனம் விட்டு பேசமாட்டோமா?
இளம் வயது காதலர்கள் போல வண்டியிலே இந்த நகரை வலம் வர மாட்டோமா? என்று நினைத்தவர்களின் எண்ணங்கள் சிறிதும் வெளியே கசியாமல் சைட்டிற்கு வந்தனர்.
அங்கு வந்ததும் சைட்டில் வேலைகளையும் வேலை செய்பவர்களையும் எப்படி கையாள வேண்டும் என்று அவள் சொல்ல சொல்ல மனதில் ஏற்றிக் கொண்டிருந்தவன் போக போக அவளின் சோர்வை உணர்ந்து,
“இன்னைக்கு இது போதும் நீ ரொம்ப டையர்டா இருக்க… காலையில சாப்பிட கூட இல்லை… வா கிளம்புவோம்…” என்று அவளை வலுக்கட்டாயமாக அழைத்து வந்தான்.
சிறிது தூரம் சென்றதும் திடீரென தன் முதுகிலும் இடுப்பிலும் ஏதோ பாரம் உணர்ந்தவன் திரும்பி பார்த்தவன் அதிர்ந்தான். பைக்கில் ஒற்றை பக்கம் கால் போட்டு அவன் இடுப்பை இறுக்கி பிடித்து அவன் முதுகில் கன்னம் வைத்து சாய்ந்தவாறு அமர்ந்திருந்தாள்.
அவளின் நெருக்கம் எதுவும் அவன் மனதில் பதியவில்லை. அவள் சுய உணர்வில் இல்லாமல் மயங்கி இருக்கிறாள் என்பதை அவளின் உடற்சூட்டின் மூலம் அறிந்தவன் எங்கே அவள் கீழே விழுந்து விடுவாளோ என்று பயந்து தன் இடுப்பில் இருந்த அவள் கைகளை இறுக்கமாக பிடித்தவாறு பைக்கை ஓரமாக நிறுத்தினான்.
அருகே செல்லும் வண்டிகளில் உதவி கேட்டவன் ஒருவர் வந்து வண்டியை தாங்கி பிடிக்கவும், அவளை பிடித்தவாறே இறங்கியவன் தோளில் அவளை சாய்த்து கொண்டு நின்றபடி ஆட்டோவை அழைத்தான்.
வண்டியை ஓரமாக நிறுத்தி பூட்டியவரிடம் சாவியை வாங்கி கொண்டு அவருக்கு நன்றி தெரிவித்து ஆட்டோவில் ஏறினான். அவளின் சோர்வை தாண்டி உடல்நிலை முடியாமல் இருந்திருக்கிறாள் அதை கூட தான் அறியவில்லை என்று நொந்தவன் மருத்துவமனை சென்றான்.
காய்ச்சலின் காரணமாகவே அவளின் மயக்கம் என்று ஊசி போட்டதும் சிறிது சிறிதாக மயக்கம் தெளிந்தாள். ஆனாலும் காலையில் சாப்பிடாதது இன்னும் அவளுக்கு தெம்பளிக்காமல் போக அவளை கைத்தாங்கலாக அழைத்து வந்து ஆட்டோவில் ஏற்றினான்.
சாப்பிட வெளியில் செல்லலாம் என்றவனிடம் மறுத்தவள் வீட்டிற்கு சென்று விடலாம் என்று சொல்ல, அவன் முறைத்தான்.
“இல்ல… என்னால வெளிய உட்கார்ந்து சாப்பிடற அளவுக்கு தெம்பு இல்ல வீட்டுக்கு போயிட்டா பொறுமையா சாப்பிட்டுக்கலாம்… எனக்கு கொஞ்சம் படுக்கணும் போல இருக்கு அதான்….” என்றவளின் பதிலில் அவன் திருப்தியாகாததை கண்டு அவளே அவனிடம் தனக்கு ஜூஸ் வேண்டும் என்று கேட்டாள்.
“இப்ப ஊசி போட்டதால கொஞ்சம் பரவால்ல… ஒரு ஜூஸ் மட்டும் வாங்கி கொடுங்க… வீட்டுக்கு போற வரைக்கும் அது போதும்… அப்புறம் வீட்ல போயி பார்த்துக்கலாம்…” என்றவளை அதிசியமாக பார்த்தாலும் அவள் சொன்னதை செய்தான்.
கணவன் மனைவி என்ற அவர்களின் உரிமையை ஒருவர் அறியாமலேயே மற்றவருக்கு உணர்த்திக் கொண்டிருந்தனர்.
ஜூஸ் வாங்கி கொடுத்து வீட்டிற்கு அழைத்து வந்தவன் அவளுக்கு உணவை பரிமாற, அவள் இரண்டு வாய் சாப்பிட்டதும் குமட்டிக் கொண்டு வந்தது.
“எனக்கு பிடிக்கலைங்க… வாந்தி வருது…” என்றவள் இன்னும் சோர்ந்து அமர,
“சாப்பிடாம எப்படி மாத்திரை போட முடியும்… எப்படி உடம்பு சரியாகும்…” என்று கடிந்தவன்,
“நான் போய் சாப்பிட வேற எதாவது வாங்கிட்டு அப்படியே ஜுசும் வாங்கிட்டு வர்றேன்…” என்று கிளம்பியவனை கைபிடித்து நிறுத்த அவனோ அதிர்ச்சியாக அவளை நோக்கினான்.
“எனக்கு என்னவோ பயமா இருக்கு… என்கூட இருங்களேன் ப்ளீஸ்…” என்று ஏக்கமாக கேட்டவளை பார்த்தவனுக்கு உருகியே போனது.
“உனக்கு உடம்பு சரியாகணும்ல… எனக்கு சமைக்க தெரியாதே… அதனால நான் போய் உனக்கு சாப்பிடறதுக்கு வாங்கிட்டு சீக்கிரம் வந்துடறேன்… அதுவரைக்கும் கொஞ்சம் நேரம் படு வா…” என்றவாறே அவளை அழைத்து வந்து அவள் அறையில் படுக்க வைத்து விட்டு வேகமாக வெளியேறினாலும் சாவியை எடுத்து வெளியே பூட்டிக் கொண்டே சென்றான்.
காய்ச்சலால் அவளின் உடலும் சோர்ந்து இருக்க தனியாக இருப்பதும் சேர்ந்தே இந்த பயம் என்று அவனுக்கு புரிந்தாலும் தன்னை அவளுக்கு துணையாக நிறுத்தியதை நினைத்து மகிழ்வாக இருந்தது.
அவள் சாப்பிட இலகுவாக உணவும் பழங்களும் வாங்கி கொண்டு வேகமாக வீட்டிற்கு வந்தவன் உணவோடு அவள் குடிப்பதற்காக வெந்நீர் எடுத்துக் கொண்டு அவள் அறைக்கு சென்றான்.
கைகளை கழுத்துக்கடியில் வைத்தவாறு கால்களை மடக்கி குறுக்கி படுத்துக் கொண்டு மருந்தின் வீரியத்தில் அப்போது தான் உறங்க ஆரம்பித்திருந்தாள்.
அவள் உறங்கும் நிலையை பார்த்து அவளை எழுப்ப மனமில்லாமல் இருந்தாலும் உணவும் மருந்தும் கொடுக்க வேண்டும் என்று அவளருகே சென்று அவளை எழுப்பினான்.
உறக்க கலக்கத்தில் இருந்ததாலோ அல்ல மனதில் உருபோட்டுக் கொண்டிருந்த கலக்கமோ பாதி விழி திறந்து எழுந்ததும் அவனை பார்த்து அவள் கூறியதை கேட்டு அதிர்ந்து நின்றான் எழிலமுதன்…