சரண்- 24
உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்?
வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் – கொதித்திருக்கும்
கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்
எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ
துன்பக் கவிதையோ கதையோ?
இரு கண்ணும் என் நெஞ்சும்
இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ?
நேரம் இரவு எட்டைக் கடந்திருக்க, பத்ரன் மிகவும் பதட்டமாக இருந்தார்… காலையில் ஆடு மேய்க்கவென போயிருந்த அரூபி இன்னும் வந்திருக்கவில்லை… மாலை வரை ஆடுகளோடு அவளைப் பார்த்ததாக கூட சென்றவர்கள் கூற, அதன் பிறகு அவளைக் காணவில்லை என்றும், ஆடுகளை அவர்களே பத்திக் கொண்டு வந்துவிட்டதாகவும் கூறினர்… அதைக் கேட்டதில் இருந்தே பத்ரனுக்கு இருப்பு கொள்ளவில்லை…
ஆண்கள் சிலர் அவளைத் தேடிச் சென்றிருந்தனர். பத்ரனும் தனக்குத் தெரிந்த, அவள் செல்லும் இடங்களில் எல்லாம் சென்று தேடிப் பார்த்து விட்டார்… வைத்தியரும் பக்கத்து ஊருக்குச் சென்றிருந்ததால் அவருக்கு இதைப் பற்றி ஒன்னும் தெரியவில்லை. மெல்ல மெல்ல கூட்டம் அதிகரிக்க, பத்ரனின் இதயம் தாறுமாறாகத் துடித்தது… வெற்றியிடம் இதைப் பற்றி கூற வேண்டும் என நினைத்தாலும், மங்கைக்கு உடல் நிலை சரியில்லை என தர்மபுரி வரை சென்றிருந்தனர். அவர்களாக வரும் வரை விசயத்தை சொல்ல முடியாது…
பெண் வேறு எங்கு போனாளோ, இல்லை யாரேனும் அவளை… இல்லை விலங்குகளிடம் மாட்டிக் கொண்டாளா…? என பலவாறு யோசனைகளில் பயத்துடனே தேடிக் கொண்டிருந்தார்… நாளை புகழ் இங்கே வருவதாக இருந்தது… அவன் வந்து அரூபியிடம் பேசிக் கொள்ளட்டும் என எல்லோரும் ஒரே முடிவாக முடித்து விட, புகழும் வருவதாக ஒத்துக் கொண்டான்… மற்றவர்கள் இன்னும் நான்கு நாட்களில் இருக்கும் மருத்துவமனை திறப்பு விழாவிற்கு வருவதாக இருந்தது.
நேரம் அந்தியைத் தொடுவதை உணர்ந்த அபி, ஆடுகளை எல்லாம் ஒன்று கூட்டி வீடு நோக்கி விரட்ட ஆரம்பித்தாள்… அப்போது அவளின் பின் புற மாராப்பை ஒரு கரம் பிடித்து இழுக்க, முந்தானை எதிலோ மாட்டிக் கொண்டது போல என தான் முதலில் நினைத்தாள்.
ஆனால் அது மேலும் இழுக்கவும் தான் பயந்து திமிற, அவளது கொண்டையை மொத்தமாக பிடித்த அந்த பாரஸ்ட்காரன், “ஏன்டீ… உன்னைத் தொட்டா எவனோ ஒருவனுக்கு கோபம் வருது எப்படி… அவன் யாருடி, வந்து உன் ஊரையே சிட்டி மாதிரி மாத்திட்டான். இப்படியெல்லாம் வசதி செஞ்சிக் கொடுத்தா உங்களை கையில பிடிக்க முடியாது. பார்த்தா பெரிய பணக்காரன் மாதிரி இருக்கான்… அப்படி என்னடி சொக்குப் பொடி போட்டு மயக்கின, உனக்கு ஒன்னுனா உயிரையும் எடுக்கத் தயங்க மாட்டேன்னு சொல்றான்.. என்ன உன்னை வச்சிருக்கானா அவன்…” என வார்த்தைகளை விசமாய் கக்கிக் கொண்டிருந்தான்…
அன்று அரூபியைத் தொட்டான் என்று தபேரா சொன்னதுமே வெற்றி முடிவெடுத்திருந்தான் அந்த நாயின் கையை உடைத்தே ஆக வேண்டுமென்று. அதை செய்தும் இருந்தான்… அவனும் வெற்றியின் பணபலத்தையும் அரசியல் செல்வாக்கையும் பார்த்து பயந்து, காலில் விழுந்து ஓடிவிட்டான்…
ஆனால், மனதுக்குள் வன்மம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. பெண் தனியாக கிடைக்கும் நேரத்திற்காக காத்துக் கொண்டிருந்தான். ஒரு மாதமாக அவனும் நோட்டமிட்டுக் கொண்டுதான் இருந்தான். இன்று மதியமே வெற்றியும் மங்கையும் தர்மபுரியை நோக்கிச் சென்றதைக் கவனித்து தான் இவளிடம் வந்தான்…
பயம் விலகாது அவனையே பார்க்க, “என்னடி பார்க்கிற, உன்னைத் தொட்டா கொன்னுடுவேன்னு சொன்னான். நான் உன்னைத் தொடப் போறதில்லை, ஆனா ஒரு விசயத்தை மறந்துட்ட, ஒரு நாள் நைட் நீ வெளியே இருந்துட்டா, உங்களோட காட்டுவாசி கூட்டத்துல உன்னை மட்டும் இல்ல உன் தாத்தனையும் மொத்தமா போட்டு உயிரோடு எரிச்சுடுவாங்க உங்க காட்டு வாசிங்க… எனக்கும் அதுதான் வேணும்… ஆனா, பாரேன் தளதளன்னு இருக்குற உன்னை ஒன்னும் செய்யாம இருக்குறது அவ்வளவு கஷ்டம். வேற வழியில்லை உயிர் முக்கியம்…” என நக்கலாகப் பேச அரூபிக்கு உடலெல்லாம் தூக்கிப் போட்டது…
இப்போது இவனிடமிருந்து எப்படி தப்பிப்பது. அதுதான் முதலில் செய்ய வேண்டும். இவனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் நேரம் வேறு இருட்டத் தொடங்கி அவள் மூளையை சுறுசுறுப்பாக்கியது…
உதவிக்கு யாராவது இருக்கிறார்களா என சுற்றும் முற்றும் பார்த்தப்படியே பின்னால் நகர, அவள் யோசனையை உடனே கண்டுபிடித்தவன் “நீ தப்பிக்கனும்னு மட்டும் நினைச்சிடாத உன்னைத் தொடக்கூடாதுன்னு முடிவெடுத்திருக்கேன். அந்த முடிவை மாத்த வைச்சிடாத… உனக்கு உயிர் முக்கியமா… மானம் முக்கியமா…? நீயே முடிவு செய்துக்கோ… உயிர் முக்கியம்ன்னு நினைச்சுத் தப்பிக்க யோசிச்சா… நான் யோசிக்க மாட்டேன்… உன்னை நாசம் பண்ணிட்டு, கண்ட துண்டமா வெட்டி ஓநாய்க்கு வீசிட்டு போயிடுவேன்… எவனாலயும் என்னை எதுவும் செய்ய முடியாது. என்ன முடிவு பண்ணிருக்க…” காவலன் எனும் காமுகன் குரோதமாய் கேட்க,
பயம் வயிற்றைக் கவ்வ, அங்கிருந்த மரத்தின் அடியில் ஒடுங்கிப் போய் அமர்ந்தாள். விடாது பிராத்தனைகளை முன் வைத்து. இவனிடம் எப்படி தப்பிக்க முடியும்? என யோசனைகள் ஓட, மரத்தோடு மரமாக ஒட்டிக் கொண்டாள்… பெண்ணின் செய்கைகளைப் பார்த்தவன். அவளுக்கு எதிரே அமர்ந்து தன்னிடம் இருந்த மது பாட்டிலை திறந்து குடிக்க ஆரம்பித்தான்…
போதை ஏற, ஏற அவனது பேச்சும் வேறு விதமானது. வெளியில் வாட்டிய குளிர் உள்ளுக்குள்ளும் பரவத் தொடங்கியது… காட்டுக்குள் இருக்கும் மிருகங்களுக்கு கூட இந்தளவுக்கு பயந்தது இல்லை. ஆனால் இந்த இரண்டு கால் மிருகத்திடம் அத்தனை பயம். சுற்றிலும் கும்மிருட்டு. எது வழியென்று கூடத் தெரியாதளவுக்கு இருள் சூழ்ந்திருந்தது… ஆனால் ஏதோ ஒரு வழியில் இவனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என முடிவெடுத்து அவனைப் பார்க்க, அவனோ போதையில் தள்ளாடிய படியே அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
தன்னை நெருங்கவுமே தன் பலம் கொண்ட மட்டும் அவனைக் கீழேத் தள்ளியவள் திசை அறியாமல், தெரிந்ததாக பட்ட ஒரு திசையை நோக்கி ஓட ஆரம்பித்தாள். வில்லிலிருந்து புறப்பட்ட நாணைப் போல, ஒரு வேகம். கண் மண் தெரியாத ஓட்டம். முடிவில்லாத ஓட்டம். எங்கே ஓடுகிறோம் என்று கூடத் தெரியாத அளவிற்கு ஓட்டம். அவன் பின்னாடி வருகிறானோ? வந்து விடுவானோ என்ற பயத்தில் எடுத்த ஓட்டம். கண்கள் நாலா புறமும் சுழன்ற படியே ஓட, எதிரே நெடுஞ்சாலையில் தூரத்துப் புள்ளியாய் வெளிச்சம்…
அந்த வெளிச்சத்தை கடவுள் தனக்கே தன் வாழ்க்கைக்கே கொடுத்ததாக நினைத்து. அதை நோக்கி ஓட ஆரம்பித்தாள். சில நிமிடங்களில் மலையில் இருந்து இறங்கி அந்த வெளிச்சத்தை நெருங்க, அது ஒரு கார் எனத் தெரிய, ஓடி வந்த ஓட்டத்தின் கலைப்பில் கார் முன்னமே மயங்கி விழுந்து விட்டாள்…
தர்மபுரியில் மருத்துவமனைக்கு என சென்றிருக்க, அங்கே டெஸ்ட் அது இதுவென நேரமாகி விட்டது வெற்றிக்கு… அதோடு புகழும் தான் பக்கத்தில் வந்து விட்டதாகவும், அவன் வந்த காரைத் திருப்பினுப்பி விட்டு இவர்களோடு கிராமத்திற்கு வருவதாகவும் கூற, அவர்களும் சரியென்று காத்திருந்து புகழ் வந்ததும், அவனையும் கூட்டிக் கொண்டுதான் கொட்லாங்காடு திரும்பியிருந்தனர்…
ஆனால் என்ன நேரம் இரவைத் தாண்டிக் கொண்டிருந்தது. வழியில் ஏதேனும் மிருகங்கள் வந்து விடுமோ என பயத்தில் மெதுவாகத் தான் வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தான் வெற்றி… புகழும் மங்கையும் அபியை பற்றித்தான் அதிகம் பேசிக் கொண்டே வந்தனர்…
சட்டென்று வண்டி நிற்க, “என்ன வெற்றி… என்ன மாமா… என பதற,
“ஒன்னும்மில்லை வண்டி முன்னாடி ஏதோ விழுந்த மாதிரி, நீங்க இறங்க வேண்டாம் நான் பார்க்குறேன் .அது என்ன மனுசனா இல்ல விலங்கான்னு தெரியல” என அவசரமாக சொல்லிவிட்டு இறங்கி முன்னே வந்து பார்த்து, ‘புகழ்’ எனக் கத்தியபடி கீழே கிடந்தவளை தூக்கினான்…
அவன் கத்தலில் புகழும்ம் இறங்கி விட, அவன் கையில் அபியைப் பார்த்து அதிர்ந்து போய்விட்டான்… “என்னடா இது…? ரூபி… ரூபி எப்படிடா இங்க.”? எனப் பதறியவன், “ரூபி… ரூபி…” என அவளின் கன்னத்தில் தட்ட அதற்குள் மங்கையும் இறங்கி விட,
“நீ உள்ளே போ புகழ், இவளை பின்னாடி படுக்க வைக்கிறேன், வனி முன்னாடி உட்கார், சீக்கிரம் போகனும்… அங்க இவளைக் காணோம்னு எல்லாரும் பதறிட்டு இருப்பாங்க… கார்ல போகும் போதே அவளுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்துடலாம்” என வெற்றி கடகடவென சொல்ல,
“புகழோ “இல்ல வெற்றி, அவ முழிக்கவே மாட்டேங்குறா, தர்மபுரி போகலாம்… ஹாஸ்பிடல் போயிடலாம் வெற்றி…” என பதட்டமாக பேசியபடியே காரில் ஏற,
“புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேருக்கும் என்னைப் பார்த்தா டாக்டர் மாதிரி தெரியலையா? நான் பார்த்துக்கறேன். இப்போ அபியை நாம கிராமத்துக்கு கூப்பிட்டு போகனும் அது தான் முக்கியம். லேட் பன்ற ஒவ்வொரு நிமிஷமும் அவளுக்குத் தான் கஷ்டம். பத்ரன் தாத்தா வேற பயந்துட்டு இருப்பார்…” என மங்கை கோபத்தில் வெடிக்க,
வெற்றிக்கும் அதுவே சரியெனப் பட, “ஆமாம் புகழ்… அவங்க ஆளுங்க ஆறு மணிக்கு மேல வெளியே இருக்கக்கூடாது. அதைத் மீறி போனா உள்ளே சேர்க்க மாட்டாங்க. இப்போ இவளைக் காணோம்னு அங்கே பெரிய களேபரமே ஆகிருக்கும்…” என நிலைமையை எடுத்துச் சொல்ல, புகழுக்கும் இது தெரியும் தான். ஆனால் அடிப்பட்டு சுய நினைவின்றி கிடக்கும் அவளைப் பார்க்கும் போது மற்றதெல்லாம் பின்னால் போய் விடுகிறதே… மனதைக் கசக்கிய வலியைப் பொருத்துக் கொண்டு, தன்னிடம் சாய்ந்தவளை நெஞ்சோடு இறுக்கிக் கொண்டான்…
மங்கையும் ஏறிக் கொள்ள கார் பறந்தது… “வெற்றி மெதுவா போடா மங்கை இருக்கா பாரு, லேட் ஆனது ஆகிடுச்சு. அஞ்சு பத்து நிமிசத்துல என்னாகிடப் போகுது…” என அப்போதும் அவன் மங்கையைக் குறித்துப் பேச முன்னாள் இருந்தவர்களின் கண்ணில் நீர் பளபளத்தது…
டேஷ்போர்டில் இருந்த ட்ஸ்யூவை நீரில் நனைத்து புகழிடம் கொடுக்க, அவன் ரூபியின் முகமெங்கும் ஈரம் படும்படி அழுத்தி துடைத்து விட்டான்… மீண்டும் ஒரு ட்ஸ்யூவை வாங்கி அவளின் மூடிய கண்களில் வைத்து விட்டான். ஆனால் வாய் மட்டும் “ரூபி… ரூபி…” என அவளை எழுப்பிக் கொண்டே வந்தது…
கிராமத்தை நெருங்க நெருங்க அவர்களுக்கே அங்குள்ள வித்யாசம் புரிந்தது… அரூபியைக் காணவில்லை என எல்லோருக்கும் தெரிந்து, ஊர் மத்தியில் கூட்டம் கூடி பேசிக் கொண்டிருந்தனர். இவர்களின் வாகனத்தைப் பார்த்ததும் பத்ரன் பதறி ஓடி வந்து வெற்றியின் கையைப் பிடிக்க, மறுபக்கம் புகழ் அபியைத் தூக்கிக் கொண்டு இறங்கினான்…
புகழ் வந்துவிட்டான் என்பதில் மகிழ்ச்சி இருந்தாலும், கையிலிருக்கும் பேத்தியின் நிலை என்னவோ என பயந்து, “என்னாச்சு தம்பி…? என்ன…? அம்மாயிக்கு என்ன…? ஏன் இப்படி இருக்கா…? என புகழிடம் கேட்டுக் கொண்டே, “அம்மாயி… அம்மாயி…” என பேத்தியின் கன்னம் தட்ட, அவள் விழிக்கவே இல்லை…
புகழ் அவளைத் தூக்கி கொண்டு வெற்றி இருந்த வீட்டிற்குள் போக, மங்கை இருந்தாக வேண்டிய சூழல் என்பதால் தன் தோழிகளிடம் கண்காட்ட, அவர்கள் புகழின் பின்னே ஓடினர்… அரூபிக்கு மருத்துவம் பார்க்க…
இப்போது பத்ரன் முதற்கொண்டு ஊர் மக்கள் அனைவரும் வெற்றியையும் மங்கையையும் பார்க்க, வெற்றி தனக்குத் தெரிந்ததை, நடந்ததை தெளிவாகச் சொல்ல, என்ன சொல்வதென்றுத் தெரியாமல் அமைதிகாத்தனர் அனைவரும்… என்ன நடந்தது என்று அரூபி வந்து தான் சொல்ல வேண்டும் என காத்திருக்க, அப்போது ஒரு பெரியவர், “என்ன பத்ரா, என்ன செய்யலாம் நீயே சொல்லு, இங்குள்ள சட்ட திட்டங்கள் எல்லாம் உன் பேத்திக்கு தெரியும் தானே… தெரிஞ்சும் என்ன பண்ணி வச்சிருக்கா பார்த்தியா…? இதுக்குத்தான் சொன்னேன் பொட்ட புள்ளையை வளர்க்க வேண்டிய விதத்துல வளர்க்கனும்னு வயசு ஏற, ஏற, வளரனும் இன்னும் சின்னப் புள்ளையா இருந்தா இப்படித்தான்…” என பேச,
பத்ரனுக்கு பெருத்த அவமானமாகி விட்டது… தன் குடும்பதிற்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது… நான் என்ன பாவம் செய்தேன். என் சந்ததிகளுக்கே உண்டான சாபமா…? என சுய பச்சாதாபத்தில் அமைதியாக நிற்க,
“ஏய் பெருசு என்ன உனக்குத் தான் பேசத் தெரியும்னு பேசிட்டு இருக்கியா, நான் கட்டிக்கப் போற பொண்ணை நீ நாக்கு மேல பல்லப் போட்டு பேசுவியா…” என கஞ்சா கொடுத்த போதையில் மாரப்பன் ஊர் பெரியவரிடம் எகிற,
“எலேய் எடுப்பட்ட நாயே, என்ன பேசுற, பெரிய மனுசங்கள, போதையை போட்டுட்டா யார் என்னனு தெரியாதா…? அவங்க பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்… நம்ம பேச்சை பிறகு பார்க்கலாம்…” என மாரப்பனின் தாய் அவனை கூட்டத்தில் இருந்து தனியாக இழுத்துக் கொண்டு போனார்…
உள்ளே அரூபிக்கு மயக்கம் தெளிய வேண்டிய மருந்துகள் கொடுக்கப்பட்டிருந்தது… புகழோ அவளின் கையை கீழேயே விடவில்லை… கட்டியிருந்த புடவையில் பல இடங்களில் கிழிசல்கள் வேறு. உடனே மங்கையின் நைட்டி ஒன்றைக் கொடுத்து அவளுக்கு மாற்றச் சொல்லி வெளியே கிளம்ப, அப்போது தான் புரிந்தது அவன் அவளின் கையைப் பிடித்திருக்கவில்லை. அவள் தான் புகழின் கையைப் பிடித்திருக்கிறாள் என்று… அந்த கையை மீண்டும் அழுத்தமாகப் பிடித்துக் கொண்டவன், “அவ விடமாட்ட போல. நான் திரும்பிக்கிறேன், நீங்க மாத்துங்க…” என சொல்ல,
அவர்களுக்கும் வேறு வழி தெரியாமல் எப்படியோ அரூபிக்கு மாற்றி காயம் பட்ட இடங்களில் கட்டுப் போட்டு, கீழே விழுந்ததில் இடது கை அசைக்க முடியாமல் போக, கழுத்தோடு கையையும் சேர்த்து கீழே தொங்க விடாமல் தொட்டில் போலக் கட்டியிருந்தனர். இனி ஆள் மயக்கம் தெளிந்து எழ வேண்டும் என்றிருக்க, மூவரையும் போங்க, நான் இருக்கேன்…” என்று விட்டான்… இவர்களின் கதைத் தெரியுமென்பதால் வேறோன்றும் சொல்லாமல் வெளியே வர, அங்கே காரசாரமாக விவாதம் போய்க் கொண்டிருந்தது…
மயக்கத்தில் இருந்தவள் அவன் ஒரு கரத்தை விடாமல் பற்றியிருக்க, மற்றொரு கரமோ அவன் ராணியின் காயங்களை மிருதுவாக வருடிக் கொடுத்தது.வருடலின் சுகமோ, இல்லை மருந்தின் வீரியமோ பெண் மெல்ல கண்விழிக்க, அருவியாய் கொட்டும் காதலோடு அவளையே விடாது பார்த்திருந்த புகழ் தான் பட்டான். பிடித்திருந்த கையை மேலும் இறுக்கிக் கொண்டவள் காய்ந்த உதடுகளை நாவால் ஈரம் செய்து “வந்துட்டீங்களா..” என்றாள் மிகுந்த சிரமத்தோடு.
அந்த ஒரு வார்த்தை, அவளின் தேடல் பெண்ணின் நேசத்தைப் படம் பிடித்துக் காட்ட, எதையும் யோசிக்காமல் “ம்ம் வந்துட்டேன். என் ராணியைத் தேடி வந்துட்டேன்..” என்றவன், சற்று முன் அவள் ஈரம் செய்த அந்த செவ்விதழை தன்வசமாக்கியிருந்தான்.
“ம்ம்.. ம்ம்ம்…” என்று திமிறியவளும் சற்று நேரத்தில் அவனிடமே அடங்கிவிட, நீண்ட நெடிய முத்தம். முத்தமல்ல யுத்தம். இருவரின் பிரிவுக்கான தேடல். தேடலின் முடிவில் பெண்ணவள் சோர்ந்து விழ, அப்படியே நெஞ்சோடு சேர்த்துக் கொண்டான். பேசிக்கொள்ள ஆயிரம் இருந்தும் மௌனம் மட்டுமே பாஷையாகியிருந்தது இருவருக்கும்.
வெளியே ஊர் பெரியவரின் பேச்சைக் கேட்ட வெற்றி “ஐயா நான் தான் அவ்வளவு தூரம் சொல்றேன். அவ வேணும்னு செஞ்சிருக்க மாட்டா. ஏதோ பிரச்சினை. அவ வந்து சொல்லாம நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. அப்படி இருக்கும் போது விசாரிக்காம தீர்ப்பு சொல்றது சரியில்லீங்க..” என பதட்டமாக சொல்ல,
“தம்பி நீங்க எங்களுக்கு எவ்வளவோ நல்லது செஞ்சிருந்தாலும் இங்க உள்ள சட்டதிட்டங்கள்ல தலையிட முடியாது. இதே பத்ரனோட குடும்பத்தால தான் இவ்வளவு பிரச்சினையும் ஆரம்பிச்சு, இன்னைக்கு அவங்களால தான் எல்லாம் முடிவுக்கு வருதுன்னு நினைச்சா, மறுபடியும் அவன் பேத்தியே ஆரம்பிச்சு வச்சிருக்கா.. இதுக்கான முடிவை பத்ரனே சொல்லட்டும்.” என வெற்றியிடம் பேசியவர்,
பத்ரனிடம் திரும்பி “நீ சொல்லு பத்ரா என்ன செய்யலாம். இன்னைக்கு உன் பேத்தி செஞ்ச தப்பை வேற யாரும் செய்யக்கூடாது. அம்மாயி மேல தப்பில்லன்னு நாம விட்டோம்ன்னா நாளைகு எல்லோரும் இந்த தப்பை செய்வாங்க. அப்புறம் எல்லாமே மாறிப்போயிடும். இதுக்கு நீயே ஒரு முடிவை சொல்லு..” என பத்ரனின் தலையில் இடியை இறக்கிவிட்டு தன் வேலை முடிந்தது என்பது போல அமர்ந்துவிட்டார்.
அனைத்தையும் கேட்டு, சிறிது நேரம் அமைதியாக இருந்த பத்ரன் பின் ஊர் மக்களை நோக்கி, “இது என் குடும்பத்துக்கே உண்டான சாபம்ன்னு நினைக்கிறேன். அந்த காடுவெட்டி அய்யனார் ஏன் எங்களை மட்டும் இப்படி சோதிக்கானோ தெரியல. என் குடும்பத்தால உண்டான பிரச்சினையை நானே தீர்த்து வைக்கிறேன். அம்மாயி இனி இங்க இருக்க மாட்டா. அவளை இந்த ஊர்ல இருந்து விலக்கி வச்சிடலாம்.. இனி அவளுக்கும் நமக்கும் எந்த சம்மந்தமும் இல்ல” என மனதைக் கல்லாக்கிக் கொண்டு சொல்லி முடிக்கவும், புகழின் கையைப் பிடித்துக் கொண்டு அரூபி வெளியே வரவும் சரியாக இருந்தது.
தாத்தனின் பேச்சில் சிலையாகி விட்டவளின் காதில், அடுத்து அவள் என்ன செய்வாள் என்பதை உணர்ந்தவன் “உன் தாத்தா எது செஞ்சாலும் அது உன்னுடைய நல்லதுக்குத்தான் இருக்கும். நீ எதிர்த்து எதுவும் பேசாத.. அவர் ஏதோ சரியான திட்டத்தை தான் செய்ய போறார். சென்டிமென்டா பேசி, அவரை டென்சன் பண்ண, உன்னை கொன்னுட்டு நானும் இங்கேயே செத்துடுவேன்..” என காதுக்குள் முணுமுணுக்க, புகழின் பேசியதைக் கேட்டு அதிர்ச்சியில் மீண்டும் மயங்கி அவன் மேலே விழுந்திருந்தாள் அரூபி.