மாயாவி 7 :::
எந்தன் ஒற்றை வார்த்தைக்கு…
அடங்கிப் போகும் நீ !
உந்தன் நேர்மையான ஆளுமையால்…
என்னையே மிரள வைக்கிறாயே!…
என்னடி மாயாவி நீ !
மூவரும் அலுவகத்திற்கு வந்து சேரும் வரையிலும் கவி, அமுதனை கூடுமான வரை தங்களின் பேச்சில் இழுத்தாலும் அவன் பெரிதாக ஒன்றவில்லை…
அவனை அலுவகத்தில் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி தற்போதைக்கு சின்ன சின்ன ப்ராஜெக்ட் வேலைகளுக்கு முதலில் மேற்பார்வையாளராக என்ன என்ன செய்கின்றனர் என்று கவனிக்க சொன்னான்.
அவனுக்கு கம்பெனியில் வேலை செய்த முன் அனுபவங்கள் பெரிதாக இல்லாத காரணத்தினால் முதலில் இந்த கம்பெனியில் என்னென்ன மாதிரியான வேலைகள் செய்கிறோம் என்று அந்த கம்பெனி பற்றி மேலோட்டமாக தனிப்பட்ட முறையில் அவனே மீட்டிங் ரூமில் வைத்து சொல்லிக் கொண்டிருந்தான். உடன் குழலியும்…
ஆனால் கவி சொன்ன அனைத்துமே அவன் காதில் விழுந்தாலும் அதை அவன் மனதில் பதியவைக்காமல் பாதி நேரம் சுற்றி வேடிக்கையும் பாதி நேரம் போனையும் நோண்டிக் கொண்டு வெறும் ம்ம்ம் கொட்டியவனை முதல் முறையாக எரிச்சலாக பார்த்தாள் அவனின் மனையாள்…
“அவ்வளவு தான் அமுதன்.. நாம முன்னாடி வெறும் இன்டீரியர் டிசைனும் முக்கியமா குழலி டிசைன் பண்ற இந்த கார்டனிங் வேலை மட்டும் தான் பண்ணிட்டு இருந்தோம்… ஆனால் இப்ப ஒரு இரண்டு மாசமா தான் இந்த பில்டிங் கட்டற ப்ரொஜெக்ட்ல இறங்கினோம்… அதுக்கு சிவில் முடிச்சவங்க தேவைப்படவும் தான் உங்களை எடுத்தோம்….”
“நீங்க நம்ம கம்பெனிக்கு எல்லாம் நல்லா செஞ்சு கொடுப்பீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.. அப்புறம் பாருங்க உங்களை வைச்சே நமக்கு நிறைய ப்ராஜெக்ட் கிடைக்க போகுது…” என்று கவி அவனை ஊக்கப்படுத்துவது போல பேசியதை எல்லாம் காற்றில் பறக்க விட்டு அவன் கேட்ட கேள்வியில் கவிக்கே ஒரு நொடி கோபம் வந்தது.
பின்னே, இருக்கும் அத்தனை வேலையும் விட்டுட்டு காருவின் கணவன் என்ற மரியாதையில் தனிப்பட்ட முறையில் அவனிடம் பொறுமையாக இத்தனை நேரம் எல்லாவற்றையும் விளக்கினால், அவனோ …
“அவ்வளவு தானே… கம்பெனியில வேலைக்கு சேர்ந்தா முதல் நாள் எப்பவும் அறிமுகப்படுத்தறது மட்டும் தானே இருக்கும்.. நீங்க அதிகமாவே சொல்லியிருக்கீங்க… அதுவே போதும்… எனக்கு போர் அடிக்குது… மிச்சத்தை நாளைக்கு பார்க்கலாம்…அப்ப நான் கிளம்பவா…” என்று கேட்டானே பார்க்கலாம்… குழலிக்கோ கோபம் அதிகமாகியது… கவியின் ஒரு நிமிட கோபமும் தோழியின் முகத்தை பார்த்து பறந்தோட,
“ஹா ஹா ! முதல் தடவை இல்லையா… நானும் இன்னைக்கே எல்லாம் திணிச்சுட்டேன்… அதான் போர் அடிக்கும்… நீங்க வெளிய போயிட்டு கொஞ்சம் நேரம் கழிச்சு வந்தாலும் சரி, இல்லை நாளைக்கு வந்தாலும் சரி… நம்ம பொறுமையா பார்த்துக்கலாம்…” என்றவனை கொலைவெறியோடு முறைத்துக் கொண்டிருந்தாள் குழலி…
“அப்ப சரி ! நான் போயிட்டு நாளைக்கு வரேன்…” என்று சொல்லி கிளம்பி விட, குழலியோ நண்பனை வறுத்தெடுத்தாள்.
“நீ என்ன லூசா? நீ பண்றது எதுவும் சரியில்லை கவி… ஜஸ்ட் நம்ம பிசினஸ் என்னன்னு ஒரு பத்து நிமிஷம் பேசினத்துக்கே அவங்க கிளம்பிட்டாங்க… அவங்களுக்கு வேலை செய்யறதுக்கும் முக்கியமா இங்க இருக்கறதுக்குன்னு எதுக்குமே விருப்பம் இல்ல…”
“நீ பேசறதை கூட காதுல வாங்கல.. இத்தனைக்கும் அவங்க படிச்ச படிப்பை பத்தி தான் பேசின… அதுக்கே இப்படி… நம்ம புதுசா எடுத்திருக்க ப்ராஜெக்ட் எல்லாம் முடிக்கணும்.. நம்மகிட்ட டைம் இல்லை… இந்த நேரத்தில நமக்கு தேவைப்படற சிவில் என்ஜினீயருக்கு இவரை ஏன் நீ செலக்ட் பண்ண…” என்று காரமாக பேசியவளை இடைமறித்தவன்,
“ஹே !பூனை ! ரொம்ப வருஷம் அப்புறம் கம்பெனி அனுபவம்ல அதான்..வேற ஒண்ணுமில்லை…. போக போக சரியாகிடும்… நீ அவரை குறைச்சு எடை போடாத…”
“அவருக்கு விருப்பம் இல்லைனாலும் திறமை இருக்கு… எல்லாம் நான் பார்த்துக்கிறேன்… நீ டென்ஷன் ஆகாத…” என்றவனை முறைத்தவாறே,
“நான் அவங்களை எதுவும் குறை சொல்லல… இந்த மாதிரி ஒரு இக்கட்டான நிலையில புதுசா அவரை எடுக்காம அனுபவம் இருக்கறவங்களை எடுத்திருக்கலாம்… இல்லை அவரை இப்ப ட்ரைனியா போட்டிருக்கலாம்…”
“ப்ராஜெக்ட் கொடுத்திருக்கவங்களுக்கு நம்ம தான் பதில் சொல்லணும்.. நம்ம சொல்றதை அப்படியே ஏத்துக்கற அளவுக்கு அவங்க எல்லாம் சாதாரண ஆளுங்க இல்லை… நான் சொல்றது சொல்லிட்டேன்… அப்புறம் உன் இஷ்டம்.. நான் எதாவது சொன்னா தான் உங்க யாருக்கும் பிடிக்கலையே…” என்று அவனிடம் பொருமி விட்டு தான் இருப்பிடம் சென்றாள்.
இப்படி ஆளுக்கு ஒரு மூலைக்கு செல்ல கவி தான் விழி பிதுங்கி நின்றான்… இப்பவே கண்ணை கட்டுதே மொமெண்ட்…
காலை அலுவகத்திற்கு செல்லும் போது குழலியை அழைத்து செல்லும் கவி, மாலை சீக்கிரம் வேலை முடிந்தால் அவனே அழைத்து வருவான் அல்லது நம்பகமான டிரைவருடன் அனுப்பி வைத்து அவளின் பாதுகாப்பை உறுதி செய்பவன் இதுவரை ஒரு முறை கூட அவளின் வீட்டினுள் சென்றதில்லை…
வீட்டிற்கு வெளியே விட்டுட்டு சென்று விடுவான்… அதிகமான தமிழ் குடும்பங்கள் இருக்கும் பாதுகாப்பான இடத்தில் தான் தங்கவும் வைத்திருக்கிறான்…
குழலியை போன்று தனித்து வாழும் பெண்களைப் பற்றி அவதூறு பேச கடுகளவேனும் காரணம் தேடும் இந்த உலகில் அதற்கான வாய்ப்பளிக்காமல் இருவரும் ஒருவரை ஒருவரை விட்டு எப்போதும் விலகியே இருப்பர்…
இருந்தும் அவர்களின் நட்பை ஒரு சில விஷயங்களில் இந்த உலகத்திற்காக விட்டு கொடுக்கவும் மாட்டர்… ஏனெனில் எத்தனை பேரிடம் சென்று அவர்களின் உறவுக்கு விளக்கம் கொடுக்க முடியும்…
இன்று அவள் கணவனோடு இருக்கிறாள் என்ற மகிழ்ச்சியில் முதல் முறையாக அவள் வீட்டிற்கு சென்றான் அதுவும் அமுதனின் இருப்பை உறுதி செய்து விட்டே வந்திருந்தான்…
குழலி முகம் கழுவி விட்டு வந்து எல்லோருக்கும் காபி தயாரிக்க, கவி அமுதனிடம் பேசிக் கொண்டிருந்தான்.
“அப்புறம் பெங்களூர் எல்லாம் எப்படி இருக்கு அமுதன்? ரெஸ்ட் எடுக்க நேரா வீட்டுக்கே வந்துட்டிங்களா?’ என்று அவன் கேட்க, அவனோ
“எப்பவும் இப்படி தான் எதாவது பேசிட்டே இருப்பீங்களா? ஆபீஸ் முடிஞ்சும் நீங்களே தான் அவளை இங்க கூட்டிட்டு வந்து விடுவீங்களா? உங்களுக்கு அந்த அளவுக்கு நேரமிருக்கா?”என்று கவியிடம் எதிர் கேள்வி கேட்டான்.
அவனின் கேள்வியில் அந்நேரம் எல்லோருக்கும் காபி எடுத்து கொண்டு வந்திருந்த குழலி அதிர்ந்து கவியை பார்க்க அவனும் அதிர்ந்து போயிருந்தான்.
அவர்களின் அதிர்வை பார்த்த அமுதன் , “சாரி ! நான் எதுவும் தப்பான அர்த்தத்தில கேட்கல… நான் அந்த மாதிரி எல்லாம் யோசிக்கற ஆளில்லை… நீங்க நிறைய பேச ஆரம்பிச்சதும் எங்க ஆபீஸ் விஷயம் பேச போறீங்களோன்னு உங்களை டைவர்ட் பண்ண தான் அப்படி கேட்டேன்… ப்ளீஸ் தப்பா எடுத்துக்காதீங்க சாரி !” என்று மனதார கவியிடம் மன்னிப்பு கேட்டவனின் பார்வை தன்னாலேயே மனையாளிடமும் அதே மன்னிப்பை யாசித்தது.
இதுவரை யாருமே அவர்களின் நட்பை கேள்வி கேட்டதில்லை.. அமுதனும் அந்த அர்த்தத்தில் கேட்கவில்லை தான், இருந்தும் தங்களின் நட்பை இனி வரும் நாட்களில் அவன் சரியான முறையில் புரிந்து கொள்வானா என்று முதல் முறையாக இருவர் மனதிலும் ஒரு பயம் எழுந்தது…
“ஹலோ ! கவி ! கொஞ்சம் இந்த உலகத்துக்கு வாங்க !” என்று அமுதன் அவன் முன் கையை அசைத்து அவனை கலைக்க, அந்த குரலில் குழலியும் கலைந்து இருவருக்கும் காபி கொடுத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.
“ஹான் ! சொல்லுங்க அமுதன்… போர் அடிக்குது வெளியே போவோமா… அதுக்கு தான் உங்களை கூட்டிட்டு போக வந்தேன்” என்று கவி கேட்டதும்,
“அப்பாடா !இப்ப தான் இங்க வந்ததுல இருந்து எனக்கு பிடிச்ச மாதிரி பேசியிருக்கீங்க.. ஒரு ஐஞ்சு நிமிஷத்துல ரெடியாகிட்டு வரேன்… என்றவன் உள்ளே சென்றதும்,
அவனை பார்த்த இரண்டு தருணங்களை கவி யோசித்து பார்த்தான்… இவனுக்கு யாரிடம் எப்படி என்ன பேச வேண்டும் என்று தெரியவில்லை… எதிரே இருப்பவரின் மனநிலை எதையும் யோசிக்காமல் எதுவானாலும் முகத்திற்கு நேரே பேசி விடுகிறான்…வேலை விஷயத்திலும் அப்படியே…
இது எல்லா நிலையிலும் சரியில்லையே… அதே சமயம் அவர்களை தவறாகவும் நினைக்கவில்லை… உண்மையாகவே வருந்தி மன்னிப்பும் கேட்கிறான்…
இவனை எந்த கேட்டகரியில சேர்ப்பது என்று புரியாமல் இருக்க, குழலியும் அறையில் அதையே தான் யோசித்துக் கொண்டிருந்தாள்… இருவரின் யோசனையை அந்த நாயகனே வந்து கலைத்து,
“போகலாம் கவி!”
“காருகிட்ட சொல்லலையா…” என்று அவன் தயக்கமாக கேட்கவும்,
“அதெல்லாம் எதுக்கு நீங்க வாங்க நம்ம போவோம்…” என்று அவனை அடுத்து யோசிக்க விடாமல் அழைத்து சென்றான்.
கவி வெளியே வந்ததும் இருவரும் வெளியே செல்வதாகவும் கதவை பூட்டிக் கொண்டு பத்திரமாக இருக்கவும் சொல்லி அவளுக்கு குறுந்செய்தி அனுப்பி இருந்தான்.
மற்றது மறந்து இருவரும் நண்பர்களாக பெங்களூரை வலம் வந்தனர். அமுதனின் துள்ளல் மகிழ்ச்சி கவிக்கும் தொற்ற அவனும் சந்தோஷமாக சுற்றி வந்தான்.
இடையில் அமுதன் கேட்காவிடினும், தான் இன்று மட்டுமே அதுவும் நீங்க இருந்ததால் தான் வீட்டிற்கு வந்தேன்… என்று சொன்னதும்,
அமுதனோ, “அவ என்னோட மனைவி என்னோட உறவு இதெல்லாம் தாண்டி அவ ஒரு பொண்ணு… எதையும் யோசிக்காமல் ஒரு பொண்ணை தப்பா பேசற அளவுக்கு நான் மோசமானவன் இல்லை… நான் எதுவும் தப்பா நினைக்கல… நினைக்கவும் மாட்டேன்… ஃபிரியா விடுங்க…” என்று அவன் சொன்னதும் தான் கவிக்கு இயல்பாக மூச்சே வந்தது.
மாலை கிளம்பியவர்கள் இரவு உணவு முடித்துக் கொண்டே வீடு திரும்ப, கவி அவனை வீட்டின் வெளியே இறக்கி விட்டுட்டு நாளைக்கு பார்க்கலாம் என்று கிளம்பி விட்டான்.
நேற்று போல அல்லாமல் ஓரளவிற்கு இருவரும் அந்த வீட்டில் மற்றவரின் இருப்பை ஏற்க தொடங்கி இருந்தனர்.
மறுநாளில் இருந்து அவனை கொஞ்சம் கொஞ்சமாக அலுவக வேலைகளில் இறக்க கவி எடுத்த அனைத்து முயற்சியும் சுவற்றில் அடித்த பந்தாக அவனிடமே திரும்பி வந்தது. அப்படி இப்படி என அவன் இந்த அலுவகத்துக்கு வந்து மூன்று மாதமாகி இருந்தது…
கணவன் மனைவி இருவரிடையேயும் எந்த மாற்றமும் இல்லாமல் அனாவசியமும் அத்தியாவசியமும் இல்லாமல் வெறும் அவசிய பேச்சுவார்த்தை மட்டுமே நடந்தது..அதுவும் இந்த மூன்று மாதத்தில் விரல் விட்டும் அளவிற்கு இருந்தது…
“அமுதன் ! அந்த MG ரோடு பில்டிங் ப்ராஜெக்ட் தான் நம்மை முதல்ல முடிச்சு கொடுக்கணும்… அதுக்கான இன்னொரு பிளான் புதுசா கேட்டிருக்காங்க… அதெல்லாம் நீங்க தான் ரெடி பண்ணனும்… வாங்க போய் அந்த இடத்தை ஒரு முறை நேர்ல பார்த்துட்டு வரலாம்… அதுக்கு அப்புறம் நீங்களே ரெகுலரா அதை பார்த்துக்கோங்க…” என்று அவனை நம்பி கவி மிகப் பெரிய பொறுப்பை ஒப்படைத்து அவனை அழைத்து செல்ல,
அவனோ வெறுமனே இடத்தை எல்லாம் சுற்றி மட்டுமே பார்க்க, கவிக்கே பொறுமை குறைய ஆரம்பித்தது, இருந்தும் பொறுமை காத்தான்.
அமுதனின் இந்த அணுகுமுறையில் கவிக்கு விழி பிதுங்க குழலியோ எரிமலையாக உள்ளே கனன்று கொண்டிருந்தாள். அது வெடிக்கும் காலமும் சீக்கிரமே வந்தது…