மாயாவி 8 :::
திமிரின் முழு உருவமாய்…
உன்னை பார்க்க வைத்த நீ !
அதே திமிரில் என்னை…
உன் கணவனாக கர்வம்…
கொள்ள வைக்கிறாயே!
என்னடி மாயவி நீ!
“அமுதன்! அந்த MG ரோடு பில்டிங் பிளான் ரெடி பண்ணீட்டிங்களா?” என்று கவி கேட்க ,
“இல்ல! நான் இப்ப தானே வந்தேன்…உடனே இவ்வளவு வேலையை கொடுத்து செய்ய சொன்னா எப்படி? நான் கொஞ்சம் பொறுமையா தான் செய்வேன்…” என்று அலுங்காமல் சொன்னவனை, கவி அலுப்பாக பார்க்க குழலியோ முறைத்துக் கொண்டிருந்தாள்.
“நம்ம நாளைக்குள்ள அந்த பிளானை சப்மிட் பண்ணனும் இல்லைன்னா அந்த ப்ராஜெக்ட் கையை விட்டு போயிடும்… நீங்க எந்த அளவுக்கு ஆரம்பிச்சிருக்கீங்கன்னு சொல்லுங்க நானும் வரேன் இரண்டு பேரும் சேர்ந்து இன்னைக்குள்ள முடிச்சுடலாம்…” என்று கவி அப்போதும் அவனுக்கு ஆதரவாக பேச,அவனோ…
“நான் இன்னும் ஆரம்பிக்கல…இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டு இருக்கேன்…” என்று அலட்சியமாக சொன்னவனை பார்த்து இருவரும் அதிர்ந்தனர்.
“என்ன சொல்றீங்க எழில்?” என்று முதல் முறையாக அவனிடம் நேரிடையாக அதுவும் அவன் பெயர் சொல்லி அழைத்தவளை ஆராய்ச்சியாக பார்த்தான்.
அவன் பார்வையின் பொருளை உணர்ந்தாலும் இத்தனை நாள் காத்த அமைதி அவளை தகர்த்தெறிய சொல்ல,
“என்ன நீங்க இப்படி சொல்றீங்க? உங்க கிட்ட வேலையை ஒப்படைச்சு மூணு மாசத்துக்கு மேல ஆகுது… நீங்க கத்துக்க அந்த மூணு மாசம் போதாதா… ஹான் ! முதல்ல நீங்க எப்ப ஆர்வமா கத்துக்கிட்டிங்க.. உங்க கவனமும் எப்ப வேலையில இருந்து இருக்கு… ஒன்னு வேடிக்கை இல்லைன்னா போன்ல தானே இருப்பீங்க…”
“உண்மையா உங்களுக்கு இந்த வேலையில சாரி சாரி வேலை செய்யறதுல ஆர்வம் இருந்திருந்தா இந்த மூணு மாசத்துல நீங்க பத்து பிளான் முடிச்சு கொடுத்து இருப்பீங்க…” என்று பொருமி கொண்டிருந்தவளை அவன் அமைதியாக பார்க்க, கவியோ பதட்டமாகி,
“காரு நீ அமைதியா இரு .. நம்ம வேற வழி எதுவும் யோசிக்கலாம்… அந்த கம்பெனிக்கு ஏற்கனவே வரைஞ்ச பிளான் வைச்சு எதாவது பண்ணுவோம்… அமுதனும் இங்க புதுசுல… விடு… பார்த்துக்கலாம்…” என்று அவளை அமைதியாக்க,
“ஆமா ! புதுசு தான்.. ஒத்துக்கிறேன்… அவரை நம்பி இவ்வளவு பெரிய வேலையை தூக்கி கொடுத்தல்ல உன்னை தான் சொல்லணும்… ஆரம்பத்திலேயே சொன்னேன் வேணாம்னு, என் பேச்சை கேட்டியா…”
“நம்ம கம்பெனி பேர்ல இது ஒரு கருப்பு புள்ளியா இருக்க போகுது பாரு… அவர் எல்லாம் சரியா பண்ணுவாரு அப்படி இப்படின்னு சொன்ன… இப்ப பாரு என்ன ஆகியிருக்குன்னு…” என்று படபடன்னு பொரிந்து தள்ளியவளை நிறுத்த முடியாமல் கவி திணற, அமுதனோ நிதானமாக அவளை ஏறிட்டு,
“என்னை பேசறதுக்கு உனக்கு எந்த அதிகாரமும் இல்ல…” என்று சொன்னவனை இடையிட்டு,
“ஏன் இல்ல? நான் இந்த கம்பெனியோட ஜிஎம்… எனக்கு எல்லா அதிகாரமும் இருக்கு… அதோட நான் எதுவும் தப்பா சொல்லலை…” என்று நிமிர்வோடு சொன்னவளின் நிமிர்வில் ஒரு நொடி அசந்தாலும், அதை வெளிக்காட்டாமல்
“ஓஓ! சரி தான்… ஆனா நானா இங்க வேலை கேட்டு வரலையே… நீங்களா தானே நான் மறுக்க மறுக்க வேலை போட்டு கொடுத்தீங்க…” என்று கவியை குற்றம் சாட்டுவது போல அவன் சொல்ல, குழலியின் கோபம் எல்லை மீற தொடங்கியது.
“நாட்ல எவ்வளவோ பேர் வேலை இல்லாம இருக்காங்க… அப்படியே கிடைக்கிற வேலையில பிடிச்சு பாதி பேர் பிடிக்காம பாதி பேர்னு இருக்காங்க… ஆனால் நீங்க இந்த லிஸ்ட்லயே வராத அளவுக்கு ஸ்பெஷல்…”
“உங்களை நம்பி உங்க திறமையை நம்பி உங்களுக்கு வேலை கொடுத்தும் அதுக்கான எந்த முயற்சியுமே எடுக்காம நீங்க நிம்மதியா காலத்தை ஓட்டறீங்கல்ல உங்களை கேட்காம நாங்க வேலை கொடுத்தது தப்பு தான்…” என்று கோபமாக பேசியவளை பார்த்து பொறுமையிழந்தவன்,
“ஹே ! நிறுத்து… நீ ரொம்ப அதிகமா பேசற… என்ன பேசற யார்கிட்ட பேசறன்னு கொஞ்சம் பார்த்து பேசு… நீ இந்த கம்பெனி ஜிஎம்னா அது உன்னோட…. அந்த அதிகார திமிரை என்கிட்ட காட்டாத…” என்று அதிக உஷ்ணத்தோடு பேசியவனைப் பார்த்தவள்,
“இங்க பாருங்க ! எனக்கு ஒருத்தர் பண்ற சரி தப்பு மட்டும் தான் பார்க்க தெரியும்… அதுக்கு அப்புறம் தான் நீங்க சொன்ன பதவி, எனக்கு வேண்டியவங்க, வேண்டாதவங்க எல்லாம்… அது எங்க அம்மாவாவே இருந்தாலும் அப்படி தான்…” என்று சொன்னவளின் குரலில் முன்னிருந்த கோபம் இல்லை ஆனால் ஒரு வித அழுத்தம் இருந்தது.
இருவரின் வார்த்தைகளும் கணமாக விழுவதை உணர்ந்த கவி, “காரு ! நீ உன் இடத்துக்கு போ… எதுவானாலும் நான் பார்த்துக்கிறேன்…” என்று சொன்னவனை முறைத்தவள்,
“நான் எதுக்கு போகணும்?” என்று காட்டமாக கேட்க,
அமுதன் வெளியேற நகரவும், கவி வேகமா வந்து அவனை நிறுத்தி, “காரு ! ப்ளீஸ்…” என்று கெஞ்சலாக சொன்னதும் இருவரையும் முறைத்து விட்டு நகர்ந்தாள்.
“அமுதன் ப்ளீஸ் ! அவ எப்பவும் இப்படி தான்… கொஞ்சம் சீரியசான ஆள்… ஆனா அவ சொல்றது எல்லாம் சரியா தான் இருக்கும்… அவ பேசறதை எதுவும் நீங்க தப்பா எடுத்துக்காதீங்க…” என்று அவனிடம் சமாதானம் பேசியவனை எந்த உணர்வுமின்றி பார்த்தவன்,
“ஆனால் நான் சீரியசான ஆளில்லை…” என்றான்.
அவன் வார்த்தையை கேட்டதும் பெருமூச்செடுத்தவன், “நம்மோட தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் மற்றவர்களை பாதிக்காத வரைக்கும் நீங்க சொல்றது சரி தான் அமுதன்… ஆனால் வாழ்க்கையில எல்லா நேரமும் இப்படி இருக்கறது சரியா வராதே… உங்க எண்ணங்கள் எல்லாம் வளையாத பாதைல இருக்கு, இதுல உங்களுக்கு மட்டும் தான் சந்தோசம் கிடைக்கும் ஆனால் போக போக நிம்மதி இருக்காது…”
“வாழ்க்கையோட நெளிவு சுளிவுகளை சரியா புரிஞ்சிகிட்டு அதை வாழ்ந்து பாருங்க அது கொடுக்கற சந்தோஷமும் நிம்மதியும் தனி தான்… ஒரு விஷயம் கையில சுலபமா கிடைச்சிட்டா அதோட அருமை தெரியாது…அதே மாதிரி எதிர்பார்க்கற விஷயம் கையில இல்லாத போது தான் அதோட அருமை தெரியும்…”
“உங்களால செய்ய முடிஞ்சு வேணும்னே இங்க வேலை செய்யாம இருந்தீங்களா இல்ல உங்க இயல்பே அப்படி தானான்னு எனக்கு தெரியல… அதே சமயம் உங்ககிட்ட எந்த பொய்யும் தெரியல… உங்க குடும்பம் உங்க அப்பாவை பத்தி யோசிங்க..”
“உங்களை நினைச்சும் குடும்பத்தை நினைச்சும் ரொம்ப கவலைப்படறார்… இங்க இந்த வேலை பிடிக்கலைன்னா சொல்லுங்க, உங்களுக்கு பிடிச்ச மாதிரி வேற வேலை ரெடி பண்ணலாம்…”என்று அவனுக்கு வாழ்க்கையின் நிதர்சனத்தை மெல்ல புரிய வைக்க முயல, அவனோ அமைதியாக இருக்க, இவன் தொடர்ந்தான்.
“நான் எல்லாம் உங்களை விட மோசமா இருந்தவன்… அப்ப கூட இந்த காரு தான்…” என்றவனின் பேச்சை இடைநிறுத்தி,
“நான் முன்னாடி சொன்னது தான் எனக்கு நிறைய பேசினா பிடிக்காது, அதை விட இப்படி அட்வைஸ் பண்றது சுத்தமா பிடிக்காது… நீங்க என்னை நம்பி வேலை கொடுத்தீங்க தான் நான் இல்லைன்னு சொல்லல….”
“அதுக்காக நீங்க சொல்றது எல்லாம் நான் கேட்கணும்னு அவசியம் இல்லை… சும்மா எல்லா டென்ஷனும் மண்டைக்கு ஏத்திக்கிட்டு, இருக்கும் ஒரு வாழ்க்கையை கெடுத்துக்கற எண்ணம் எனக்கு எப்போதும் இல்லை…” என்று சொல்லி விட்டு வெளியேறியவனை பார்த்த கவிக்கு என்ன செய்வதென்று புரியாமல் தெரியாமல் தலையில் கை வைத்து அமர்ந்தான்.
மாலை குழலியிடம் அமுதனிடம் எதுவும் கேட்க வேண்டாமென்று சொல்லி அவளின் வீட்டில் இறக்கி விட்டு சென்றான்.
எப்போதும் இருக்கும் அமைதியே அந்த வீட்டில் நிலவியது. இருவரிடையேயும் என்றுமே பேச்சுக்கள் இருந்ததில்லை. இவள் சமைத்து வைத்து விட்டு அவனை சாப்பிட கூட அழைக்கமாட்டாள். அவனும் அதெல்லாம் எதிர்பார்க்கமாட்டான்.
இருவரும் மற்றவரின் இருப்பையே இன்னும் முழுதாக ஏற்காதிருக்க இதில் எங்கிருந்து கணவன் மனைவியாக நினைப்பர்.
அமுதனுக்கோ அவளின் நியாயமான கேள்விகள் கூட திமிராகவும் அதிகாரமாகவும் தெரிய குழலிக்கோ தன்னை பிடிக்காமல் தான் அவன் இப்படி வேலையில் அலட்சியமாக இருக்கிறான் என்று யோசித்தவள் ஒரு முடிவோடவே வீட்டிற்கு வந்திருந்தாள்.
இரவு உணவு முடிந்ததும், அமுதன் சற்று நேரம் டிவி பார்த்துக் கொண்டிருக்க, இவள் அவனருகே சென்று,
“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…” என்றதும்,
“என்ன காலையில பேசினது எல்லாம் தப்பு… உங்களை மரியாதை இல்லாம பேர் சொல்லி எல்லாம் கூப்பிட்டு பேசிட்டேன்… என்னை மன்னிச்சுக்கோங்கன்னு சொல்ல வந்தியா ?” என்று அவன் கேட்க, அவளோ அவனை வெளிப்படையாக முறைத்துக் கொண்டே,
“நான் ஒரு விஷயம் செய்யறதுக்கு முன்னாடி வேணும்னா யோசிப்பேன் ஆனால் செஞ்சு முடிச்ச அப்புறம் யோசிக்க மாட்டேன்… அப்படி இருக்கும் போது நான் பேசினது எல்லாம் சரின்னு தெரிஞ்சும் நான் ஏன் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும்…” என்று அவனுக்கு திருப்பி கொடுத்தவளின் பதிலில் ஒரு நொடி அதிர்ந்தாலும்,
“அப்போ உனக்கும் எனக்கும் நடுவுல பேச வேற என்ன இருக்கு ?” என்று எரிச்சலாக கேட்டான்.
“நீங்க ஏன் இப்படி இருக்கீங்க?” என்று கேட்டவளை கேலியாக பார்த்து,
“எப்படி இருக்கேன்?” என்றான்.
“இப்படி கொஞ்சம் கூட பொறுப்பில்லாம… உங்களுக்கு வேலை பிடிக்கலைன்னா அன்னைக்கே மாமாகிட்ட முடிவை சொல்லி இருக்கலாமே… இப்ப உங்களை நம்பி அவ்வளவு பெரிய பொறுப்பு கொடுத்தும் நீங்க இப்படி அலட்சியமா இருந்தா எப்படி… இவ்வளவு நாள் தான் அப்படி இருந்தீங்க…இப்ப மாமாவுக்கும் உடம்பு சரியில்லைல… நீங்க தானே இனி குடும்பத்தை பார்த்துக்கணும்…” என்று அவள் கேட்டதும்,
“ஏன் என் சம்பாத்தியத்தை நம்பி தான் நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டியா? என் குடும்பத்தை பார்த்துக்க எனக்கு தெரியும்.. சும்மா நீயும் உன் பிரெண்டும் சேர்ந்து அட்வைஸ் பண்ணி எரிச்சலை கிளப்பாதீங்க…” என்று அவன் சொன்னதும், ஒரு பெருமூச்செடுத்தவள்,
“நம்ம இரண்டு பேரும் எதிர்பார்க்காம விருப்பம் இல்லாம நமக்கு இப்படி நடந்து போச்சு… நம்ம நல்லா இருக்கணும்னு இங்க இப்படி ஒன்னா வேற தங்க வைச்சிருக்காங்க… ஆனால் இதை எல்லாம் முக்கியமா என்னை நீங்க சகிச்சுட்டு இருக்கணும்னு கட்டாயம் இல்லை…”
“என்னால நீங்க இப்படி கஷ்டப்படவும் வேணாம்… உங்களுக்கு பிடிச்சது போல ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சிக்கோங்க… இது என்னோட முழு மனசோட தான் சொல்றேன்… நான் வேணும்னா மாமாகிட்ட மறுபடியும் பேசறேன்…” என்றவளை நிதானமாக ஏறிட்டவன்,
“ஓஓ! உனக்கும் எனக்கும் நடந்த கல்யாணத்தை என்ன பண்ணலாம்?…” என்று அவன் கேட்டதை உண்மையென்று நம்பி அவள் சீரியசாக பதில் சொல்ல, அவள் பதிலில் அங்கே அருகே இருந்த பூச்சாடி கீழே விழுந்து நொறுங்கியது.
“அடியேய்! உனக்கு கல்யாணம்னா என்ன விளையாட்டா போச்சா? கல்யாணம்ன்ற வார்த்தையை கூட சொல்ல முடியாம உங்களுக்கும் எனக்கும் இப்படி நடந்து போச்சுன்னு சொல்ற…”
“எனக்கு இந்த கல்யாணம் விருப்பம் இல்லை தான் , உன்கூட இருக்கறது பிடிக்கலை தான்… இங்கிருந்து போகணும்னு கூட நினைச்சேன் தான்… ஆனால் இந்த பந்தத்தை முறிக்கணும்னு நான் நினைக்கல… அதே சமயம் உன்கூட வாழறதை பத்தியும் யோசிக்கல…” என்று காட்டமாக பேசியவன்,
“அச்சோ ! மறந்தே போயிட்டேன் பாரு… ஏற்கனவே ஒரு முறை விவாகரத்து வாங்கினவல்ல அதான் எனக்கும் ஈஸியா அதை கொடுக்கிறேன்னு சொல்ற…” என்று அவளை வார்த்தையால் கடித்து குதறியவனை எந்த சலனமும் இல்லாமல் பார்த்தவளை,
“ எங்க அப்பாவுக்காக தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்ப இங்க வரைக்கும் வந்திருக்கேன்… தெரிஞ்சோ தெரியாமையோ பிடிச்சோ பிடிக்காமையோ எந்த காரணமா இருந்தாலும் உனக்கும் எனக்கும் இந்த ஜென்மத்துல ஒரு பந்தம் உருவாகிடுச்சு…”
“இனி அதுல இருந்து நானா உன்னை விடுவிச்சா மட்டும் தான் நீ வேற எதுவும் யோசிக்கணும்… எனக்கு எப்போதைக்கும் இந்த பந்தத்தை முறிக்கற எண்ணம் இல்லை… இதுக்கு மேல உன் விருப்பம்…” என்று சொல்லிவிட்டு அவளின் பதிலுக்கு காத்திராமல் அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்தான்.
அவன் பேசி சென்ற வார்த்தைகள் மனதை தைத்தாலும் எப்போதும் போல எந்த உணர்வினையும் வெளிக்காட்டாமல் அப்படியே நின்றிருந்தவள் தன்னறைக்கு சென்று படுத்தாலும் மனதின் ஓரம் எங்கோ ஒரு மூலையில் அவன் வார்த்தையில் நிம்மதி பரவுவதை தடுக்காமல் உறங்கிப் போனாள்.
அறைக்குள் வந்தவனின் கோபமோ குறைய மறுத்தது. “என்னவெல்லாம் பேசி விட்டாள் என்னையும் பேச வைத்து விட்டாள். பெரிய வேலையில இருக்காள்ல அந்த திமிறுல தான் இப்படி எல்லாம் பேசறா… நம்மை அவ இஷ்டத்துக்கு ஆட்டி வைக்க நினைக்கறா… நமக்கு இந்த டென்ஷன் எல்லாம் ஆகாது…” என்று பொறுமியவன் தீர்க்கமாக ஒரு முடிவெடுத்து இருந்தான்.
மறுநாள் அவன் எடுத்திருந்த முடிவின் பலன் அறிந்த குழலியோ அதிர்ந்து போயிருந்தாள்…