கருமமே கண்ணாக வேலை பார்த்துக் கொண்டிருந்த ஸ்ருதியைப் பார்த்தான் ராகவன். இப்போது அவன் லேசாக அந்த பக்கம் போனாலும் அவள் பார்வை அப்படியே அவன் பக்கம் திரும்பி விடும் என்று அவனுக்கு தெரியும். அவளை தொல்லை செய்ய கூடாது என்று எண்ணி சிறு சிரிப்புடன் அவனும் அவனுடைய வேலையை பார்த்தான்.
ஒரு வழியாக அவர்கள் அவார்ட் பங்க்ஸன்க்கு கிளம்பும் நாளும் வந்தது. ஸ்ருதி தனக்கு தேவையான அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருக்க “ஸ்ருதி”, என்று அழைத்த படி வந்தான் நவீன்.
“என்னண்ணா?”
“கடைசி நேரத்துல ஒரு ஆபரேஷன் பிக்ஸ் பண்ணிட்டாங்க மா. என்னால வர முடியாது. நீ போயிட்டு வந்துருவ தானே?”, என்று கேட்டான்.
“அண்ணா என்ன இப்படி சொல்ற? நான் மட்டும் தனியா எப்படி?”
“அதான் அந்த படத்துல வொர்க் பண்ணின எல்லாரும் தானே வராங்க. அப்புறம் என்ன? இந்த மாதிரி நிறைய வாய்ப்பு வரும். அதுக்கெல்லாம் நீ தனியா தான் டா போகணும். இப்பவே பழகிக்கோ”, என்று சொல்ல “ம்ம்”, என்றாள்.
சிறிது நேரத்தில் அவள் கிளம்பி தயாராக இருக்க அவளை அழைக்க கார் வந்து விட்டது. காரை அந்த படத்தின் புரடியூசர் தான் ஏற்பாடு செய்திருக்கிறார் என்று ஸ்ருதி எண்ணினாள். ஆனால் அதை ஏற்பாடு செய்திருந்தது ராகவன் தான்.
வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லி விட்டு காரில் ஏறினாள். கார் கிளம்பியதும் தான் டிரைவர் சீட்டுக்கு அருகே இருந்த இருக்கையில் அமர்ந்திருப்பவனைக் கண்டாள். அவனைக் கண்டதும் எப்போதும் போல அவளுக்கு ஆனந்த அதிர்வு உண்டானது.
“நீங்களா?”, என்று அவள் வியப்பாக கேட்க “நான் தானே உன்னை இதுல இழுத்து விட்டேன். அப்படினா உன்னை பொறுப்பா பாத்துக்க வேண்டியது நான் தான். இப்ப இருந்து அங்க இருந்து வர வரைக்கும் நீ என்னோட பொறுப்பு”, என்றான் ராகவன் .
“அது வரைக்கும் தானா? வாழ்க்கை முழுக்கவும் உன்னோட பொறுப்புல இருக்க தான் டா எனக்கு ஆசையா இருக்கு”, என்று மனதில் எண்ணிக் கொண்டாள்.
ஒரு வழியாக ஏர்போர்ட் சென்ற போது மற்றவர்களும் அங்கே இருந்தார்கள். அதற்கு பின் வந்த நேரங்களில் சொன்னது போல ஸ்ருதி அருகிலே இருந்தான் ராகவன்.
ஸ்ருதி மற்றும் ராகவனை நிறைய பேர் அப்போது தான் நேரில் பார்த்திருக்க அவர்களின் அழகு அனைவரின் கண்ணையும் கவர்ந்தது. ஆனால் ஸ்ருதியிடம் பேச வரும் யாரையுமே ராகவன் அனுமதிக்க வில்லை. அவளுக்கு பாடிகார்ட் போல இருந்தான்.
விமானத்தில் ஏறியதும் அவள் அருகே வேறு யாரும் அமர்ந்து விடுவார்கள் என்று பயந்தாள். ஆனால் ராகவன் அவள் அருகே அமர்ந்து விட அதற்கு பிறகு தான் நிம்மதியானாள்.
பிளைட் கிளம்பியதும் முதல் முறை என்பதால் அவள் பதற வேலை விஷயமாக அடிக்கடி சென்றிருந்த ராகவன் அவள் கையை இறுகப் பற்றிக் கொண்டான்.
அது தான் சாக்கென்று அவளும் அவன் நெஞ்சில் சாய்ந்து தன்னுடைய முகத்தை அவன் மேல் புதைத்துக் கொண்டாள். சிறு சிரிப்போடு அவளைச் சுற்றி தன்னுடைய கரத்தைப் போட்டு அனைத்துக் கொண்டான் ராகவன்.
சிறிது நேரம் கழித்து தான் இருக்கும் நிலை உணர்ந்து அவசரமாக அவனிடம் இருந்து விலகி அமர்ந்தாள். அவன் அவளையே பார்க்க “சாரி பயத்துல”, என்றாள்.
“பரவால்ல”, என்று சொல்லி அவன் புன்னகைக்க அதற்கு பிறகு தான் அவளுக்கு மூச்சே வந்தது. விமானப் பயணம் முடியும் வரைக்குமே இருவரும் வேறு எதுவும் பேசிக் கொள்ள வில்லை.
இது வரை இருந்த பயமும் ஸ்ருதியை விட்டு கொஞ்சம் அகன்றிருந்தது. அவன் அருகிலே இருப்பான் என்ற நம்பிக்கையால் கூட இருக்கலாம்.
அங்கே சென்றதும் அனைவருக்கும் தனி அறை கொடுக்க பட ராகவனோ அவளுடனே அந்த அறைக்குள் நுழைந்து சோதனை செய்தான்.
அவனுடன் தனித்து ஒரே அறையில் இருப்பது சிறு சங்கடத்தை தந்தாலும் அவன் தனக்காக பார்ப்பது அவளுக்கு சந்தோசமாகவே இருந்தது.
அந்த அறையையே நோட்டம் விட்ட ராகவன் “குளிச்சிட்டு வா ஸ்ருதி. சாப்பிட போகலாம். குளிச்சிட்டு வந்ததும் எனக்கு கால் பண்ணு. நம்ம கூட வந்தவங்க தானேன்னு அவங்க கூட எங்கயும் தனியா போகாதே”, என்றான். சரி என்னும் விதமாக தலையாட்டினாள்.
“என்னோட நம்பர் உன் கிட்ட இருக்கு தானே?”, என்று கேட்க அதற்கும் தலையை ஆட்டினாள்.
“சரி டோர் லாக் பண்ணிக்கோ. நான் பக்கத்து ரூம் தான். எனக்கு தெரியாம எதையும் செய்யாத”, என்று எச்சரித்து விட்டே சென்றான். அவன் சென்றதும் கதவை மூடியவள் மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள் .
அன்று மாலை தான் பங்ஷன் என்பதால் அனைவரும் நிதானமாகவே இருந்தார்கள்.
குளித்து முடித்தவள் மாற்றுடையை அணிந்து கொண்டு பாத்ரூமில் இருந்து வந்தாள். பின் அவள் ராகவனை அழைக்க முதல் ரிங்கிலே அதை எடுத்தான்.
இருவரும் உணவு உண்ணப் போனார்கள். அதற்கு பின்னர் அனைவரும் அவரவர் அறையில் முடங்கினார்கள். ஸ்ருதி வீட்டுக்கு அழைத்து பேசினாள். தேன்மொழி மற்றும் அமருக்கு கூட அழைத்து பேசினாள்.
மாலை ஆனதும் அனைவரும் அந்த பங்ஷன் நடக்கும் இடத்துக்கு சென்றார்கள். அடர் நீல வண்ண கோர்ட் சூட்டில் கம்பீரமாக இருந்த ராகவனை பார்க்க பார்க்க அவளுக்கு தெவிட்டவில்லை.
அறையில் இருந்து வெளியே வந்தவளைப் பார்த்து இமைக்கவும் மறந்தான். ஊதா வண்ண சில்க் காட்டன் புடவை அவளுடைய சிவந்த மேனியைத் தழுவி இருக்க அதில் ஆங்காங்கே பதித்திருந்த கற்கள் இரவு விளக்கில் பளிச்சிட்டது.
அழகு தேவதையாக அவனைப் பார்த்த படி வந்தவளைப் பார்த்த ராகவன் சுவாசிக்க மறந்தான். தங்களைச் சுற்றி இருக்கும் ஆட்களின் நினைவே இருவருக்கும் வரவில்லை.
அவளது மையிட்ட விழிகள் அவனை வசீகரிக்க அவனிடம் இருந்து வந்த வாசனை அவளை மயக்கியது. அவளது விழிகளுக்குள் மூழ்கி விடத் தவித்தான் ராகவன்.
அழகு நிலைய பெண் சொன்னதற்காக சேலையை அவள் ஒற்றை முந்தானையில் கட்டி இருக்க வெளியே தெரிந்த புடவையின் வேலைப் பாடுகள் அவள் அழகை மேலும் அதிகப் படுத்திக் காட்டியது.
செயற்கை சாயம் பூசிய அவள் இதழ்கள் அவனை வாவென அழைக்க தன்னைக் கட்டுப் படுத்தவே திணறிப் போனான். அந்த நொடியில் அவள் மீதிருக்கும் தன்னுடைய காதலை முழுமையாக உணர்ந்தான்.
அவளைத் தவிர வேறு யாராலும் அவனை சலனப் படுத்த முடியாதென்பதை. “கிளம்பலாமா டைம் ஆச்சு”, என்று படத்தின் தயாராளிப்பாளர் சொல்ல இருவரும் நடப்புக்கு வந்தார்கள்.
“போகலாமா ஸ்ருதி?”, என்று ராகவன் கேட்க “ஒரு நிமிஷம் போன் மட்டும் மறந்துட்டு வந்துட்டேன். எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு அறைக்குள் சென்றாள்.
“சார் நீங்க போங்க. நான் ஸ்ருதியை கூட்டிட்டு வரேன்”, என்று ராகவன் சொல்ல மற்றவர்கள் கிளம்பிச் சென்றார்கள். ஆனால் அனைவருக்குமே ராகவனும் ஸ்ருதியும் நண்பர்களா காதலர்களா என்று தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.
உள்ளே சென்றவளைக் காணுமே என்று எண்ணி அவன் அறைக்குள் செல்ல அவளும் கதவு அருகே வர அவன் மீது மோதி கீழே விழப் பார்த்தாள்.
அவள் சாயவும் அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான் ராகவன். இருவரின் பார்வையும் ஒன்றை ஒன்று கவ்விக் கொள்ள இருவருக்கும் பேச வார்த்தை வரவில்லை.
அவன் கரங்கள் அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்ள அவளால் நேராக நிற்கவே முடியவில்லை. கால்கள் தள்ளாட மேலும் அழுத்தமாக அவன் மீது சாய்ந்து கொண்டாள்.
அடுத்த நொடி அவன் இதழ்கள் அவள் இதழ்களை நெருங்க அவனது போன் அடித்தது. படக்கென்று அவனிடம் இருந்து விலகி நின்றவளுக்கு மூச்சு வேகமாக வாங்கியது.
“சார் தான் பண்ணுறாங்க. வா போகலாம்”, என்று சொன்ன ராகவன் அறையை விட்டு வெளியே செல்ல அவளும் கதவை அடைத்து விட்டு வெளியே வந்தாள்.
அவனுடன் பங்ஷன் நடக்கும் இடத்துக்கு நடந்து வரும் போது இவன் என்னவன் என்று பெருமிதத்தில் அவள் நெஞ்சம் விம்மியது. அவார்ட் பங்ஷன் என்பதால் அங்கே சிறப்பாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. நிறைய பேர் விருது வாங்கவும் அதைப் பார்க்கவும் வந்திருந்தார்கள்.
அவ்வளவு கூட்டத்தை ஸ்ருதி வியந்து போய் பார்த்தாள். அவளை தன்னருகே அமர வைத்துக் கொண்டான் ராகவன். அவளை தனியே விட அவன் அனுமதிக்கவே இல்லை.
அவளுடைய மனம் அந்த சூழலையும் ரசித்தது அதே நேரம் மனதுக்கு விருப்பமானவனின் அருகாமையும் ரசித்தது.
ராகவன் அவளுடைய நிழல் போல கூடவே இருக்க அது அவளுடைய மனதுக்கு இதத்தை தந்தது.
விழா ஆரம்பித்தது. ஒவ்வொருவருக்கும் வரிசையாக விருது வழங்கப் பட சிறந்த பாடகருக்கான விருது என்று அறிவித்து “ராகவன் அலைஸ் மதன்ராஜ் மேடைக்கு வரவும்”, என்று அறிவித்தார்கள்.
சிறு சிரிப்புடன் எழுந்து மேடையை நோக்கிச் சென்றான் ராகவன். அவன் மேடையில் நிற்க அவன் கையில் ஒரு மைக் கொடுக்க பட்டது. சிறு புன்னகையுடன் அவன் நின்றிருக்க அவனையே பார்த்திருந்தாள் ஸ்ருதி.
“சிறந்த பாடகருக்கு விருது கொடுக்கும் போது பாடகிக்கும் கொடுத்தே ஆகணுமே? ஸ்ருதி தேவேந்திரன் மேடைக்கு வரவும்”, என்று அழைத்தார்கள்.
அவள் திகைத்து போய் ராகவனைப் பார்க்க கண்களால் அவளை மேடைக்கு அழைத்தான். அதற்கு பின் தான் எழுந்து சென்றாள். தயக்கத்துடன் அவன் அருகே சென்று அவள் நிற்க இருவருக்கும் விருது வழங்கினார்கள்.
ஸ்கூல் காலேஜில் பாடி பழக்கம் என்பதால் இருவருக்குமே மேடை பயம் சுத்தமாக இல்லை.
இருவருக்கும் விருதை கொடுக்க சந்தோஷமாக வாங்கிக் கொண்டார்கள். “நன்றி”, என்று சொல்லி விட்டு அவர்கள் கீழே இறங்க போக “அது எப்படி நீங்க ரெண்டு பேரும் உடனே இறங்கலாம். உங்க கிட்ட பேச நிறைய விஷயம் இருக்கு. வாங்க வாங்க”, என்று தொகுப்பாளர் சொல்ல மீண்டும் மேடையில் நின்றார்கள்.
“எப்படி ரெண்டு பேரும் அவ்வளவு அழகா பாடினீங்க? அந்த பாட்டை ரசிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம். இப்பவும் நாங்க அதை கேக்க ஆசைப் படுறோம். பியு லைன்ஸ் எங்களுக்காக பாடுறீங்களா?”, என்று தொகுப்பாளர் கேட்க சரி என்று ஸ்ருதியை பார்த்தான்.
அவளும் தலையசைக்கவே அந்த டூயட் பாட்டை இருவரும் பாடினார்கள். மியூசிக் இல்லமாலே அவர்கள் பாடிய பாட்டு அருமையாக இருந்தது.
முழுப் பாட்டை பாடாமல் கொஞ்சம் மட்டும் பாடியவர்கள் “தேங்க்ஸ் யு”, என்று சொல்லி முடித்தார்கள்.
“ராகவன் ஸ்ருதி ரெண்டு பேரும் அருமையா பாடினீங்க. இப்ப நீங்க கடந்து வந்த பாதையை பத்தி சொல்லுங்க. முதல்ல ராகவன் நீங்க சொல்லுங்க”
“எங்க அம்மா மியூசிக் டீச்சர். அதனால எனக்கு சின்ன வயசுல இருந்தே இசைல ஈடுபாடு உண்டு. அப்பா அம்மா எனக்கு சப்போர்ட் பண்ணினாங்க. அப்புறம் இசை அமைப்பாளர் சேகர் சார் தான் என்னோட வெற்றிக்கு காரணம். அவர் தான் என்னோட குரு, சிறந்த வழி காட்டி. இந்த விருது எல்லாம் வாங்குவேன்னு நான் கனவுல கூட நினைக்கலை. இதுக்கு காரணம் இந்த படத்தோட டேரெக்டர், எங்க பாட்டை ரசிச்ச மக்கள். இப்ப விருது கொடுக்குற நீங்க தான். எல்லாருக்குமே எங்க நன்றிகள்”
“ஸ்ருதிக்கும் சேத்து பேசிட்டீங்க? சரி, ஹீரோ மாதிரி அழகா இருக்கீங்க? எப்ப படத்துல நடிக்க போறீங்க?”
“படத்துல நடிக்கிற ஆர்வம் எல்லாம் எனக்கு இல்லை. இசைத் துறைல இன்னும் பெரிய ஆளா வரணும். அது தான் என்னோட ஆசை”
“போச்சா, ஒரு அழகான ஹீரோ சினிமால வருவார்னு சந்தோஷப் பட்டோம். சரி சார் எப்ப எங்களுக்கு கல்யாண சாப்பாடு போடப் போறீங்க?”
“கூடிய சீக்கிரம்”, என்று சிரித்தான். அவன் வெட்கப் பட்ட அழகை கேமரா உள்வாங்கிக் கொண்டது. ஆண்களின் வெட்கம் கூட பேரழகு தானோ?
“ஏது? கூடிய சீக்கிரமா? பிக்ஸ் ஆகிருச்சா? பொண்ணு யாரு சார்?”, என்று தொகுப்பாளர் கேட்க “இன்னும் ஒரு மாசத்துக்குள்ள கண்டிப்பா சொல்றேன்”, என்று சொல்லி அனைவருக்கும் எதிர்பார்ப்பை தூண்டினான்.