“கடவுளே இவன் என்ன இப்படிச் சொல்றான்? அப்படின்னா இவன் மனசுல வேற ஒரு பொண்ணு இருக்கா?”, என்று கலங்கிப் போய் நின்றாள் ஸ்ருதி.
“ஸ்ருதி இப்ப உங்க டர்ன். இந்த விருது வாங்கினது பற்றி, உங்களைப் பத்தி சொல்லுங்க”
அவனைப் பற்றிய நினைவுகளில் இருந்தவள் அந்த கேள்வியை கவனிக்க தவறினாள். அவளைக் கண்ட ராகவன் “ஸ்ருதி”, என்று அழுத்தமாக அழைத்தான்.
“ம்ம்”, என்ற படி அவனை நிமிர்ந்து பார்க்க “பேசு”, என்றான்.
“எல்லாருக்கும் வணக்கம். எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த சேகர் சாருக்கும். அதுக்கு காரணமான ராகவன் சாருக்கும் என்னோட நன்றி”, என்று சொல்லி முடித்தாள். மற்ற நேரமாக இருந்தால் எதையாவது பேசியிருப்பாள். இப்போது அவளால் முடியவில்லை.
“ரொம்ப கியூட்டா இருக்கீங்க? கியூட்டாவும் பேசுறீங்க. அடுத்த பாட்டு எப்ப ரிலீஸ் ஆகும்?”
“வாய்ப்பு இருந்தா பாக்கலாம்”, என்று அவள் சொல்ல அனைவரும் சந்தோஷமாக கை தட்டினார்கள்.
“எங்க காதுகளை மட்டும் இல்லாம எங்க மனசையும் அமைதி படுத்தின உங்களுக்கு எங்க நன்றிகள்”, என்று தொகுப்பாளர் சொல்ல இருவரும் நன்றி என்று சொல்லி விட்டு கீழே வந்தார்கள்.
சீட்டில் வந்து அமர்ந்த பிறகும் அவள் ராகவன் சொன்னவற்றையே எண்ணிக் கொண்டிருந்தாள். அவன் மனதில் அவளுக்கு இடம் இல்லை என்று தெரியும். ஆனால் இன்னொரு பெண் இருக்கிறாள் என்று தெரியாது. அதனால் அலைபுறுதலுடன் அமர்ந்திருந்தாள்.
விழாவில் அதற்கு பிறகு என்ன நடந்தது என்று எல்லாம் அவளுக்கு தெரியாது. பங்ஷன் முடிந்ததும் பூங்கா அமைப்பில் இருந்த இடத்தில் உணவு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. பஃபே முறையில் இருந்ததால் தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டு அங்கிருந்த சேரில் அமர்ந்தார்கள்.
அங்கே எல்லாம் முடிந்ததும் மீண்டும் ஹோட்டல் அறைக்கு வந்தார்கள். எப்போதும் போல அவளுடனே அவளுடைய அறைக்குள் வந்தவன் பார்வையால் அந்த அறையை சோதனை செய்தான்.
“ஓகே ஸ்ருதி, நல்லா தூங்கு. குட் நைட். எந்த நேரமா இருந்தாலும் எந்த பிரச்சனையா இருந்தாலும் எனக்கு கால் பண்ணு. சரி டோர் லாக் பண்ணிக்கோ. நான் வரேன்”, என்று சொல்ல அவளோ தலை குனிந்து நின்றிருந்தாள்.
அவள் அப்படி இருக்கவும் “ஸ்ருதி”, என்று அழைத்தான். அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் கண்ணீர் தேங்கி இருக்க “ஏய் ஸ்ருதி என்ன ஆச்சு?”, என்று பதறிப் போய் அவள் அருகில் சென்றான்.
அவள் அவனையே ஏக்கமாக பார்க்க அவள் பார்வையின் பொருள் அவனுக்கு தெரிய வில்லை.
“என்ன ஆச்சு ஸ்ருதி?”, என்று அவன் கேட்க ஏங்கி ஏங்கி ஆழ ஆரம்பித்தாள். அடுத்த நொடி அவளை இழுத்து அணைத்த ராகவன் “இப்ப எதுக்கு டி இப்படி அழுதுட்டு இருக்க?”, என்று கேட்டான்.
அவள் மேலும் அழவும் அவள் முதுகை ஆதரவாக வருடி விட்டான். ஆனால் மனதில் இருக்கும் துக்கத்தைச் சொல்லாமல் அழுது கொண்டிருந்தவள் கிடைத்த அவன் அருகாமையை இழக்க மனதில்லாமல் அவனுக்குள் புதைந்தாள்.
அவளுடைய நெருக்கம் அவனைத் தூண்ட “ஸ்ருதி, படுத்து தூங்கு”, என்று சொல்லி அவளை விலக்க பார்த்தான். அவளோ பசை போட்டு ஒட்டியவள் போல அவனை ஒட்டிக் கொண்டு நிற்க சிறு சிரிப்புடன் அவனும் அணைப்பை இறுக்கினான்.
அவனுடைய இதழ்கள் அவளுடைய வெற்றுத் தோளில் பதிய ஸ்ருதி அவளாக இல்லை.
அவன் கைகள் அவளுடைய மேனியில் பதிய அவனுடைய உதடுகள் அவளுடைய இதழ்களை சிறை செய்தன. “இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?”, என்றெல்லாம் யோசிக்காமல் அவனால் கிடைக்கும் நினைவுகளை ஆழ்ந்து அனுபவித்து இதயம் என்னும் வங்கியில் பத்திரப் படுத்தினாள்.
அவனுக்கும் அந்த தனியறை, அவளது மயக்கம், அருகாமை, அவளது மேனியின் மென்மைகள் அனைத்தும் அவனது உணர்வுகளையும் சீண்ட ஆரம்பித்தது. அவளை மொத்தமாக எடுத்துக் கொள்ள அவன் தேகம் பரபரத்தது. ஆனாலும் அவளது தந்தை தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்று புரிய அவளை பார்த்தான்.
இப்போது அவள் முகத்தில் கண்ணீரும் கவலையும் இல்லை. முகத்தில் செம்மையும் கண்களில் மயக்கமும் மட்டுமிருக்க “எதையும் யோசிக்காம தூங்கு. நான் கிளம்புறேன். வா டோரை லாக் பண்ணிக்கோ”, என்று சொன்னவன் அவள் கதவைப் பூட்டியதும் அவனுடைய அறைக்குச் சென்று விட்டான்.
அறைக்குள் சென்றவன் அவள் நினைவில் படுக்க அவளோ கட்டிலில் படுத்து சற்று முன் நடந்ததை எண்ணி உடலும் உள்ளமும் உருகி தூக்கத்தை தொலைத்தாள்.
அடுத்த நாள் அவள் தயக்கத்துடன் அவனை ஏறிட அவனோ சாதாரணமாக இருந்தான். டீமில் இருந்த அனைவரும் சுற்றிப் பார்க்கச் சென்றார்கள். இவர்களும் சென்றார்கள். மதிய உணவை ஹோட்டலில் முடித்து விட்டு ஷாப்பிங் சென்றார்கள்.
ஸ்ருதி அவளது வீட்டினருக்கு தேன்மொழிக்கு அமருக்கு என்று வாங்க அதைப் போல ராகவனும் வாங்கினான். அவனுக்கும் சில பொருள்களை வாங்கினாள். மீண்டும் அறைக்கு வந்தவர்கள் ஊருக்கு கிளம்புவதற்கு தயாரானார்கள்.
அப்போது ஒரு கவரை எடுத்துக் கொண்டு ஸ்ருதியின் அறைக்கு வந்தான் ராகவன். அவள் அவனை கேள்வியாக பார்க்க “எல்லாம் எடுத்து வச்சிட்டியா ஸ்ருதி?”, என்று கேட்டான்.
“ம்ம்”, என்று அவள் முணுமுணுக்க “இந்தா”, என்று சொல்லி அவளிடம் அந்த கவரை நீட்டினான்.
அதை ஆர்வத்துடன் வாங்கியவள் “இது எனக்கா?”, என்று கேட்டாள்.
“இல்லை, நவீன் கிட்ட கொடுத்துரு”, என்று சொல்ல அவளது முகம் பியூஸ் போன பல்ப் போல ஆனது.
“ஓ”, என்று சோகமாக சொன்னவள் அதை அப்படியே பேகில் வைத்தாள். தான் வாங்கியதை அவனிடம் கொடுக்க வேண்டுமே என்ற கவலையில் இருந்ததால் அவனுக்கு நவீனை எப்படி தெரியும் என்று கேட்க மறந்து விட்டாள்.
“சரி நான் கிளம்புறேன். எல்லாம் எடுத்து வைக்கணும்”, என்றான் ராகவன்.
“ஒரு நிமிஷம், இது….”, என்று சொல்லி கவரை நீட்டினாள். அவன் வாங்குவானா மாட்டானா என்று அவளுக்கு கவலையாக இருந்தது.
அதை வாங்கிக் கொண்ட ராகவன் “யாருக்கு தேன்மொழிக்கும் அமருக்குமா?”, என்று கேட்டான்.
“அவங்களுக்கு நானே கொடுத்துப்பேன். இது உங்களுக்கு”, என்று சொல்ல ஆர்வமாக அதை பிரித்துப் பார்த்தான். உள்ளே டீசர்ட், கூலிங்க் கிளாஸ், ஷர்ட், பர்ஸ் என்று இருக்க “என் கிட்ட இருந்தது எடுத்ததுக்கு பதிலுக்கு கொடுக்குற போல?”, என்று கேட்டான். அவள் முகம் அதைக் கேட்டு வெட்கத்தில் சிவந்தது. “சரி கிளம்பு, தேங்க்ஸ்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான். அவன் வாங்கியதே அவளுக்கு போதுமானதாக இருந்தது.
அடுத்த நாள் அனைவரும் வீட்டுக்குச் சென்று விட்டார்கள். ஸ்ருதி வீட்டுக்கு வந்ததும் வீட்டில் இருந்த அனைவரும் அவளுக்கு வாழ்த்து சொன்னார்கள். எல்லாருக்கும் வாங்கிய பொருள்களை அவள் கொடுக்க “உனக்கும் ஒரு சர்பிரைஸ் இருக்கு ஸ்ருதி”, என்றாள் வேணி.
“என்ன மா?”
“நாளைக்கு நவீன்க்கு என்கேஜ்மெண்ட்”
“என்னது? என்கேஜ்மென்ட்டா? பொண்ணு யார்? என் கிட்ட சொல்லவே இல்லை”
“நீ எல்லாத்தையும் எங்க கிட்ட சொன்னியா?”, என்று கேட்க அவள் முகம் வாடியது.
“அண்ணா நிஜமாவா? இந்த தேனு ஒரு வார்த்தை கூட சொல்லலை பாரேன். எனக்கு ரொம்ப சந்தோஷம்”, என்று சொன்னவள் அவனைக் கட்டிக் கொள்ள அவனும் அவளை பாசமாக அணைத்துக் கொண்டான்.
“ஓ தேன்மொழி மூலமா தான் உனக்கு ராகவனைத் தெரியுமா? அவங்க உனக்கு ஏதோ வாங்கிக் கொடுத்தாங்க”, என்று சொல்லி ராகவன் கொடுத்த கவரை நவீனிடம் கொடுத்தாள்.
“தேன்மொழி மூலமாக தான் நவீனுக்கு ராகவனைத் தெரியும். ஆனா எங்களுக்கு உன் மூலமா தான் தெரியும்”, என்றார் தேவேந்திரன்.
“என்னப்பா சொல்றீங்க?”
“நீ பாட்டு பாடினதையும் உனக்கு அவார்ட் கொடுக்க போறதையும் சொன்னது யாருன்னு தெரியுமா? ராகவன் தான். நம்ம வீட்டுக்கு வந்து சொன்னார்”, என்று சொல்ல அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
அவள் அதிர்ச்சியாக இருக்கும் போதே “ஏய் என்ன இது? எனக்கு இதைப் போய் குடுத்துருக்க?”, என்று அதிர்வாக கேட்டான் நவீன். எல்லாரும் அவனைத் திரும்பி பார்க்க அவன் கையில் அவ்வளவு அழகாக ஒரு புடவை இருந்தது. அதை கண்டு அனைவருமே அதிர அந்த கவருக்குள் இன்னும் தேடினான்.
அதில் விலை உயர்ந்த ஆண்கள் அணியும் கடிகாரம் இருக்க “ராகவன் எனக்கு வாட்ச் தான் கொடுத்துருக்காங்க. நீ தான் அவங்க உனக்கு வாங்கிக் கொடுத்த சேலையையும் இந்த கவர்ல வச்சிட்ட”, என்று சொன்ன நவீன் அந்த கடிகாரத்தைப் பார்க்க ஸ்ருதியின் விரல்கள் அந்த சேலையை வருடியது.
“இது எனக்கா? எனக்கா கொடுத்தாங்க?”, என்று மனதுக்குள்ளே எண்ணிக் கொண்டாள். கூடவே தேன்மொழிக்கு மாப்பிள்ளையாக போகும் நவீனின் தங்கைக்காக தான் வாங்கி இருக்கிறான் என்று தவறாக எண்ணிக் கொண்டாள்.
“அப்படியே இன்னொரு சர்பிரைஸ் இருக்கே அதைச் சொல்லையா?”, என்று கேட்டாள் வேணி.
“என்ன மா?”, என்று அவள் கேட்டதும் “நான் சொல்றேன்”, என்று சொன்ன தேவேந்திரன் “நாளைக்கு உனக்கும் என்கேஜ்மெண்ட். மாப்பிள்ளை எல்லாம் நாங்க பாத்துட்டோம்”, என்று குண்டைத் தூக்கிப் போட்டார். அதிர்ந்து போனாள் ஸ்ருதி. “என்ன பா சொல்றீங்க?”
“ஆமா டா, எங்களுக்கு மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சிருக்கு. உனக்கு பொருத்தமா இருப்பார். சரி வா. நாளைக்கு நீ என்ன சேலை நகை எல்லாம் போடன்னு எடுத்து வைக்கணும்”, என்று சொல்லி விட்டு வேணி செல்ல சிலை போல அமர்ந்திருந்தாள் ஸ்ருதி.