“உன்னோட கேரியரை நீ தான் செலக்ட் பண்ணின. அதே மாதிரி எங்க கிட்ட கூட கேக்காம படத்துல பாட்டுப் பாடுற அளவுக்கு போயிட்ட? அது எல்லாம் எங்களுக்கு இன்னும் கஷ்டமாக தான் இருக்கு. இந்த கல்யாண விசயத்துலயாவது எங்களுக்கு அப்பா அம்மான்னு நினைச்சு மதிப்பு கொடு மா”, என்று சொல்லி விட்டுச் சென்றார் தேவேந்திரன்.
சிறிது நேரத்திற்கு பிறகு அவள் அறைக்குச் செல்ல அங்கே தயாராக எல்லாம் எடுத்து வைத்திருந்தாள் வேணி. அதை எல்லாம் தூக்கி கடாச வேண்டும் போல இருந்தது.
அவள் இருந்த மனநிலையில் தேன்மொழியிடம் தேன்மொழி நவீன் காதலைப் பற்றி கேட்க வேண்டும் என்று கூட மறந்தாள்.
நாளை நிச்சயத்தை எண்ணி அவள் நெஞ்சமெல்லாம் காந்தியது. எவனோ ஒருவனுடன் என்னை இணை சேர்ப்பதா?
“அது நான் இருந்தா தானே நடக்கும்? நான் இருக்கவே மாட்டேன்”, என்று முடிவு எடுத்தவள் ஒரு நோட்டை எடுத்து எழுத ஆரம்பித்தாள்.
“அன்புள்ள அம்மா அப்பா, என்னை மன்னிச்சிருங்க. நீங்க சொன்ன மாதிரி எப்பவும் நான் என் இஷ்டத்துக்கு தான் செஞ்சிருக்கேன். அது உங்களை இந்த அளவுக்கு காயப் படுத்திருக்கும்னு தெரியாது. அண்ணா நீயும் என்னை மன்னிச்சிரு. இப்ப கடைசியா என்னோட கல்யாணத்தை உங்க விருப்ப படி செய்யணும்னு நினைக்கிறீங்க? அது சரியான எண்ணம் தான். ஆனா அது எனக்கு பிடிக்கலை. என் மேலே உயிரையே வச்சிருக்க உங்க கிட்ட என்னோட மறுப்பைச் சொல்ல எனக்கு தைரியம் இல்லை. அது மட்டுமில்லாம என் மனசுல இருக்குறவர் மனசுல நான் இருக்கேன்னு தெரிஞ்சாலாவது நான் உங்க கிட்ட பேசுவேன். ஆனா இப்ப வரைக்கும் அவர் என்ன நினைக்கிறார்ன்னு எனக்கு புரியவே இல்லை. அப்படி இருந்தும் அவர் தான் எனக்கு எல்லாம். அவரை நினைச்சிட்டு யாருன்னே தெரியாதவன் முன்னாடி அலங்காரம் செஞ்சு நிக்க நான் தயாரா இல்லை. நான் இருந்தா தானே இதெல்லாம் நடக்கும்? அது மட்டுமில்லாம என்னால என்னோட காதலோட போராட முடியலை. இந்த சாவு எனக்கு விடுதலையைத் தான் கொடுக்கும். என்னை மன்னிச்சிருங்க. நான் போறேன்”, என்று முடித்து விட்டு கட்டிலில் வைத்தாள்.
பின் அவசர அவசரமாக சாவை அவள் மூளை தேடியது. அப்போது கொசு விரட்டும் மருந்து அவள் கண்ணில் பட அவசரமாக அதை திறந்து வாயில் சரித்தாள்.
அது அவளுக்கே குமட்டலைக் கொடுக்க அப்படியே தூக்கி வீசினாள். ஆனால் சாக வேண்டும் என்ற எண்ணம் மட்டும் வலுப்பெற பிளேடைத் தேடி எடுத்தவள் தன்னுடைய கையை வெட்டிக் கொண்டாள்.
ரத்தம் ஆறாக பெருக அப்படியே மயங்கி தரையில் சரிந்தாள். “ஏய் சட்டையை போட்டுப் பாரு டி. அளவு சரியா இருக்கான்னு தெரியணும். சரியா இருந்தா இதை வச்சே எல்லா சட்டையும் தைக்கணும்”, என்று சொல்லிய படியே அறைக்குள் வந்த வேணி மகளின் கோலம் கண்டு “நவீன், இங்க வா டா. என்னங்க இங்க வாங்க”, என்று அலறி விட்டாள்.
தேவேந்திரனும் நவீனும் அங்கே வர ஸ்ருதியைக் கண்டு அதிர்ந்து போனார்கள். அவசரமாக அவளுடைய கைக்கு கட்டுப் போட்டவன் அப்போது தான் கொசு விரட்டும் மருந்தை அவள் குடித்திருக்கிறாள் என்று புரிந்து கொண்டான்.
அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அள்ளிக் கொண்டு சென்றார்கள்.
அதே நேரம் “எல்லா ஏற்பாடும் பண்ணிட்டீங்களாப்பா?”, என்று மதனிடம் கேட்டுக் கொண்டிருந்தான் ராகவன்.
“ஏங்க நாம சரியா ஏழு மணிக்கு கிளம்பினா சரியா இருக்கும் தானே?”, என்று கேட்டாள் ராஜி.
“சரியா இருக்கும் ராஜி”
“என்ன பேசுறீங்க எல்லாரும்? எனக்கு ஒண்ணுமே புரியலை”, என்ற படி அங்கு வந்தான் அமர்.
“அதானே எனக்கும் ஒண்ணும் புரியலை. யாருக்கு என்கேஜ்மெண்ட்?”, என்று கேட்ட படி வந்தாள் தேன்மொழி.
இதற்கு மேல் மறைக்க வேண்டாம் என்று எண்ணி “வேற யாருக்கு? உனக்கும் நவீனுக்கும் தான்”, என்று மதன் சொல்ல அமரும் தேன்மொழியும் அதிர்ந்து போய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“என்ன சொல்றீங்க?”, என்று கேட்டாள் தேன்மொழி.
“இப்ப எதுக்கு அதிர்ச்சியாகுற? நீ தானே நவீனை லவ் பண்ணுறன்னு சொன்ன? அதான் அவர் கிட்ட பேசினோம். அவங்க வீட்லயும் பேசினோம். அவங்க சரின்னு சொன்னதும் டேட் பிக்ஸ் பண்ணிட்டோம். நவீன் உன் லவ்வர் தானே? இதை உன் கிட்ட அவர் சொல்லலையா?”, என்று ராகவன் கேட்க திருதிருவென்று விழித்தாள்.
“நான் தான் டா மாப்பிள்ளை கிட்ட தேன்மொழி கிட்ட சொல்ல வேண்டாம், சர்பிரைசா சொல்லிக்கலாம்னு சொல்லிட்டேன்”, என்றார் மதன்.
“தேனு, அப்புறம் இன்னொரு விஷயம் தெரியுமா? நாளைக்கு உன்னோட ஃபிரண்ட் ஸ்ருதிக்கும் என்கேஜ்மெண்ட் தான்”, என்று ராஜி சொல்ல “என்னது?”, என்று அமரும் தேன்மொழியும் ஒரு சேரக் கேட்டார்கள்.
“ஆமா”
“மாப்பிள்ளை யாரு?”
“மாப்பிள்ளை உன் அண்ணன் தான்”, என்று சொன்னதும் இருவர் முகமும் மலர்ந்தது.
“அண்ணா நிஜமாவா? எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?”
“ஏய் வாலு, அவ கிட்ட சொல்லாத. அவ கிட்ட என்கேஜ்மெண்ட் மட்டும்னு தான் அவங்க வீட்ல சொல்லப் போறாங்க. நான் தான் மாப்பிள்ளைன்னு அவளுக்கு நாளைக்கு தான் தெரியும்”, என்று சொல்லி புன்னகைத்தான் ராகவன்.
“சர்பிரைஸ்சா? அண்ணா மேல இருக்குற லவ்வுக்கு அவ எப்ப என்ன செய்வான்னு தெரியலை. நீங்க எல்லாரும் ரொம்ப தப்பு பண்ணுறீங்க”, என்று தேன்மொழி சொல்லிக் கொண்டிருக்க மதன் போன் அடித்தது. அதை எடுத்து பேசினார். அனைவரின் கவனமும் அவர் பக்கம் திரும்ப அவர் முகத்தில் இருந்த அதிர்ச்சி மற்றவர்களுக்கு உவப்பானதாக இல்லை.
“என்னங்க ஆச்சு?”, என்று கேட்டாள் ராஜி.
“ஸ்ருதி அப்பா தான் பேசினாங்க. வேற யார் கூடவோ என்கேஜ்மெண்ட்ன்னு நினைச்சு ஸ்ருதி கையை வெட்டிக்கிட்டாளாம். விசத்தையும் குடிச்சிட்டா. மாப்பிள்ளையோட சீஃப் டாக்டர் அவளுக்கு டிரீட்மென்ட் கொடுக்குறாராம்”, என்று மதன் சொல்ல அனைவரும் அதிர்ந்து போனார்கள்.
ராகவன் இடிந்து போய் இருக்க “நான் சொல்லலை. அவ இப்படி தான்னு. எல்லாம் உங்களால தான். முதல்ல வாங்க ஹாஸ்பிட்டல் போகலாம்”, என்று சொல்லி அனைவரையும் கிளப்பினாள் தேன்மொழி.
ராகவன் மட்டும் அசையாமல் இருக்க “அண்ணா அவ உன் மேல உயிரையே வச்சிருக்கா. அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டு அவளால போக முடியாது. நீ வா”, என்று சொல்லி அவனையும் அழைத்துச் சென்றாள்.
இவர்கள் அங்கே போன போது தேவேந்திரன், வேணி, நவீன் மூவரும் இடிந்து போய் அமர்ந்திருந்தார்கள். வேணி அருகில் சென்ற ராஜி ஆறுதலாக அணைத்துக் கொண்டாள்.
தேவேந்திரன் கையை ஆறுதலாக பற்றிக் கொண்டார் மதன். நவீனுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய ராகவனோ இடிந்து போய் இருக்க “அவளுக்கு ஒண்ணும் ஆகாது ராகவன்”, என்றான் நவீன். அனைவருமே கடவுளிடம் வேண்டிக் கொண்டு தான் இருந்தார்கள். ரத்தம் அதிகம் போனதால் கொஞ்சம் சீரியஸ் நிலை தான் என்று சொல்லப் பட்டது.
சிறிது நேரம் கழித்து மருத்துவர் ஐ. சி. யுவில் இருந்து வெளியே வர ஆவலாக அவரைப் பார்த்தார்கள்.
“ஸ்டொமக் வாஸ் பண்ணிட்டோம். இனி பயப்பட ஒண்ணும் இல்லை. இப்ப மயக்கத்தில் இருக்காங்க. கண்ணு முழிச்சதும் ஃபிரெஷ் ஜூஸ் மட்டும் வாங்கிக் கொடுங்க. திருப்பி ஒரு செக்கப் பண்ணின பிறகு வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம். இன்னொரு தடவை இப்படி நடக்காம பாத்துக்கோங்க”, என்று சொல்லி விட்டுச் சென்றார் மருத்துவர்.
அவள் கண் விழிக்கும் போது மொத்த குடும்பமே அங்கு இருந்தது. தேன்மொழி, அமர், அவளுடைய அம்மா அப்பா என அனைவரும் இருந்தார்கள்.
அனைவரையும் அவள் சங்கடமாக பார்க்க “உடம்பு குணமாகி வெளிய வா. அப்புறம் இருக்கு உனக்கு? என்ன டி பழக்கம் இது?”, என்று கோபமாக கத்தினாள் தேன்மொழி.
“தற்கொலை செஞ்சிக்கிறது கோழைத் தனம்னு சொல்லியும் ரெண்டாவது தடவை நீ அதையே செஞ்சு வச்சிருக்க? என்ன பாப்பா இதெல்லாம்?”, என்று கேட்டான் நவீன்.
“சரி பேசுறது எல்லாம் அப்புறம் பேசலாம். அவ கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்”, என்று மதன் சொல்ல அனைவரும் வெளியே சென்றார்கள்.
“இது ராகவனுக்கு தெரியுமா? தெரிஞ்சா என்ன பண்ணுவாங்க?”, என்று அவள் யோசிக்க புயல் வேகத்தில் அவளுடைய எண்ணத்தின் நாயகனே அங்கு வந்தான்.
அவன் வந்ததும் மற்ற அனைவரும் அங்கிருந்து வெளியேறினார்கள். அவர்கள் முழுவதுமாக போய் விட்டார்களா என்று கூட கவனிக்காமல் அவளை நெருங்கினான்.
“வந்து விட்டானா?”, என்று ஏக்கத்தோடு அவள் அவனைப் பார்க்க அவனோ தன்னுடைய கட்டுப்பாடு மொத்தமும் தகர்ந்து போன நிலையில் அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்டான். அவன் விட்ட அறையில் அவள் பொறி கலங்கி போய் அவனைப் பார்த்தாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.
“என்ன டி நினைச்சிட்டு இருக்க உன் மனசுல? உன்னைப் பிடிச்சிருந்தும் எந்த கரணத்துக்காக உன்னை விட்டு ஒதுங்கி போனேனோ கடைசில அதையே செஞ்சிட்டல்ல நீ? யாரைக் கேட்டு டி நீ இப்படி ஒரு காரியம் பண்ணின? நீ செத்துட்டேன்னா நான் மட்டும் உயிரோடு இருப்பேன்னு நினைக்கிறியா?”, என்று கோபத்துடன் கேட்க அவளோ பிரம்மிப்பாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் அடித்தது எல்லாம் அவளுக்கு வலிக்கவே இல்லை.
“இப்ப என்ன உனக்கு கல்யாணம் தானே பேசினாங்க? கல்யாணமா நடந்துச்சு? நான் ஒருத்தன் இருக்கேன்னு மறந்துட்டு இப்படி ஒரு காரியத்தை செய்வியா? இப்படி ஒரு கோழையா நீ? இந்த நிமிஷம் நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ. இனி நீ யாரோ நான் யாரோ? இந்த நிமிசத்துல இருந்து நமக்குள்ள உள்ள உறவு முடியுது. என்னை மறந்துட்டு எப்ப சாகத் துணிஞ்சியோ அதுக்கு மேல என்ன இருக்கு?”, கோபத்தில் எரிமலையாக வெடித்துக் கொண்டிருந்தான்.
அவனுடைய கோபத்தை திகைப்பாக பார்த்துக் கொண்டிருந்தவள் “அவங்க வேற மாப்பிள்ளை பாக்கவும்…..”, என்று இழுத்தாள்.
“பேசாத சொல்லிட்டேன். நீ இப்படி பண்ணிட்டேன்னு எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா டி? உனக்கு ஒண்ணும் ஆகக் கூடாதுன்னு உயிரை கையில பிடிச்சிட்டு வந்துருக்கேன். நீ இப்படி பண்ணினது தெரிஞ்சதும் என்னோட இதயத்தையே யாரோ கையில பிடிச்சு கசக்குற மாதிரி இருந்துச்சு”, என்று சொன்னவன் நெஞ்சில் கை வைத்துக் கொண்டான். அவன் முகத்தில் வந்து போன வேதனையைப் பார்த்த பிறகு தான் எவ்வளவு பெரிய முட்டாள் தனம் செய்தோம் என்று புரிந்தது.
“ஏன் ஸ்ருதி நீ என்னை நம்பலை?”, என்று வேதனையாக கேட்டான்.
“நீங்க ஒண்ணுமே சொல்லலையே? இப்ப கூட நீங்க பேசுறது எனக்கு புரியலை. உங்க மனசுல நான் இருக்கேனா?”
“சொன்னா தான் காதலா டி? நீ சொன்னியா உன் காதலை. இல்லை தானே? ஆனா எனக்கு அது புரிஞ்சது. ஆமா காதல் இல்லாமலையா டி உனக்கு அத்தனை தடவை முத்தம் கொடுத்தேன்?”, என்று சொன்னதும் அவள் முகம் சிவந்தது.
அப்போது அவள் வெட்கத்தை ரசிக்காமல் அவன் முறைத்துப் பார்க்கவும் “என்னை மன்னிச்சிருங்க”, என்றாள்.