“எப்படி டி மன்னிக்க முடியும்? ஏன் இப்படி செஞ்ச? என்னை விட்டுட்டு போக உனக்கு எப்படி மனசு வந்துச்சு? என்னோட அருகாமையில நீ காதலை உணரலையா டி? என் காதல் உனக்கு புரியவே இல்லையா? அப்படி புரியலைன்னா கூட என் சட்டையை பிடிச்சு கேக்க வேண்டியது தானே டி? இப்படி பண்ணனுமா?”
“சாரி”, என்று சொன்னவள் அழ ஆரம்பிக்க அவள் அருகில் சென்று அமர்ந்தான். “நம்ம வீட்ல நம்ம கல்யாணம் பண்ண தான் டி பிளான் பண்ணினாங்க. உங்க அப்பா உனக்கு சர்பிரைஸ் கொடுத்தா நீ எல்லாருக்கும் ஷாக் கொடுத்து எல்லாரோட ரத்ததையும் உறைய வச்சிட்ட. நான் தான் உனக்கு பாத்துருக்குற மாப்பிள்ளை. ரெண்டு வாரத்துக்கு முன்னாடியே உங்க அப்பா கிட்ட நான் பொண்ணு கேட்டுட்டேன். நீ தான் என் வாழ்க்கைன்னு நான் எப்பவோ புரிஞ்சிக்கிட்டேன் டி”, என்றான்..
“நிஜமாவா?”, என்று கண்கள் மின்ன கேட்க ஆம் என்னும் விதமாக தலையசைத்தான். அடுத்த நொடி அவளாகவே அவனை அணைத்துக் கொண்டாள். இப்போது சகஜ நிலைக்கு திரும்பி இருந்தான் ராகவன்.
“ஏன் டி என்னைப் பாத்தா பாவமா இல்லையா?”, என்று ராகவன் கேட்க அவனை கேள்வியாக பார்த்தாள்.
“எத்தனை நாள் தான் நானும் கல்யாணம் முன்னாடி இதெல்லாம் தப்புன்னு என் மனசை மாத்திக்கிட்டு கட்டுப்பாடோட இருக்க?”, என்று புன்னகையுடன் கேட்க அவன் பார்வையிலும் குரலிலும் இருந்த குழைவு அவனுடைய மாற்றத்தைச் சொன்னது. இதற்கு மேல் வாழ்க்கையில் என்ன வேணும் என்று எண்ணிக் கொண்டாள்.
அவனை இன்னும் ஒட்டிக் கொண்டு “நான் எதையுமே தடுக்கலையே. என்னைப் பொறுத்த வரைக்கும் உங்களை என்னைக்கு பாத்தேனோ அன்னைல இருந்தே நீங்க என் கணவர் தான்”, என்றாள்.
அவள் பதிலில் நெகிழ்ந்தவன் அவள் முகம் முழுக்க முத்தமிட்டான். பின் அவளிடம் இருந்து விலகி “இது சரி வராது. நான் எல்லாரையும் கூப்பிடுறேன். நாம தனியா இருக்குறது ஆபத்து”, என்று சொல்லி எழுந்து கொண்டான்.
பின் மற்றவர்களும் அவளுடைய நிச்சயத்தைப் பற்றிச் சொல்ல அசடு வழிந்தாள். “ஏன் டி அண்ணாவை லவ் பண்ணினதை என் கிட்ட சொல்லலை?”, என்று தேன்மொழியிடம் கேட்டாள் ஸ்ருதி.
“நீ கூட தான் என் அண்ணன் கூட படத்துக்கு போனதைச் சொல்லலை. அதை நான் கேட்டேனா?”, என்று தேன்மொழி கேட்க அன்றைய நாளின் நினைவில் வெட்கத்துடன் சிரித்தாள் ஸ்ருதி.
என்ன தான் நட்பு என்றாலும் காதலர்களின் அந்தரங்கம் என்பது வேறு என்று புரிந்தது. அனைவரும் வீட்டுக்கு கிளம்பிச் சென்றார்கள்.
அடுத்த நாள் நிச்சயதார்த்தம் நல்ல படியாக நடந்து கொண்டிருந்தது. முழு அலங்காரத்தில் இருந்த தேன்மொழியை முறைத்து பார்த்த படி நவீன் மோதிரத்தைப் போட ஸ்ருதியை காதலாக பார்த்த படி அவள் கரத்தில் மோதிரத்தைப் போட்டான் ராகவன். இரண்டு ஜோடிகளும் பெரியவர்கள் முன்னே மோதிரத்தை மாற்றிக் கொண்டது சந்தோஷமாக இருந்தது.
முதலில் நவீன் தேன்மொழி திருமணமும் அடுத்த ஒரு வாரம் கழித்து ராகவன் ஸ்ருதி திருமணமும் முடிவு செய்யப் பட்டது. ராகவன் ஸ்ருதி திருமண செய்தி அனைவரிடமும் பரவியது. இருவரும் சேர்ந்தே பேட்டி கொடுத்தார்கள்.
அதற்கு பின்னர் திருமண வேலைகள் சூடு பிடிக்கத் துவங்கியது. நிச்சயத்துக்கு பின்னரும் நவீன் தேன்மொழியிடம் எதுவுமே பேச வில்லை. அது அவளுக்கு வருத்தமாக இருந்தாலும் ஸ்ருதியின் சந்தோசத்தைக் கண்டு சந்தோஷமாக இருந்தாள்.
அவள் மனது அமருக்கு மட்டுமே புரிந்தது. திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் போது ராகவன் ஸ்ருதி வீட்டுக்கு பத்திரிக்கை பத்தாமல் போனதால் வாங்க வந்திருந்தான்.
ஸ்ருதி வேலைக்கு லீவ் போட்டிருந்ததால் அவனால் அவளைப் பார்க்க முடியவில்லை. இதை சாக்கு வைத்துக் கொண்டு வந்து விட்டான்.
கதவைத் திறந்தது நவீன் தான். “வா டா மச்சான்”, என்று வரவேற்றான் நவீன்.
இருவரும் வா டா போடா என்றும் மாப்பிள்ளை மச்சான் என்றும் பேசிக் கொள்ளும் அளவுக்கு முன்னேறி இருந்தார்கள். இருவருக்கும் இடையே ஒரு வயது தான் வித்தியாசம் என்பதால் யாரும் அதை கண்டு கொள்ள வில்லை..
“பத்திரிக்கை வாங்க வந்தேன் மாப்பிள்ளை”, என்றான் ராகவன்.
“அம்மா எடுத்து வச்சிட்டு தான் போனாங்க டா. இதோ இங்க இருக்கு”
“அத்தை மாமா எங்க?”, என்று கேட்டவனின் கண்கள் அலைபாய “அவங்க பத்திரிக்கை வைக்க போயிருக்காங்க மச்சான். ஆனா நீ வேற யாரையோ தேடுற போல?”, என்று கேட்டான் நவீன்.
ராகவன் அசடு வழிய “ஸ்ருதி குளிச்சிட்டு இருக்கா. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. நான் கிளம்புறேன். அம்மா அப்பா சாயங்காலம் தான் வருவாங்க. நீ பாக்க வேண்டிய ஆளைப் பொறுமையா இருந்து பாத்துட்டு போ”, என்றான் நவீன்.
“நானும் கிளம்புறேன் டா; யாருமே இல்லைன்னா நான் மட்டும் எப்படி?”, என்று தயங்கினான் ராகவன்.
“இது உன்னோட வீடு மச்சான். எதுக்கு இன்னும் தயக்கம்? நீயும் என் தங்கையும் தனியா இருந்தா யார் என்ன சொல்லப் போறா? ஆனா ஒண்ணு மச்சான். அவ கையால வெறும் தண்ணி மட்டும் குடிச்சிக்கோ. வேற எதையும் சாப்பிட்டுறாத. ஸ்ருதிக்கு சுட்டு போட்டாலும் சமையல் வராது”, என்று எச்சரித்து விட்டே சென்றான்.
அவன் சென்றதும் வெளிக் கதவை உள்ளே இருந்து தாழ் போட்டவன் ஸ்ருதி அறையை நெருங்கி அவளுக்காக அறையின் வெளியே காத்திருந்தான்.
குளித்து முடித்து வந்த ஸ்ருதி தன்னுடைய அறையைத் திறக்க அதற்காகவே காத்திருந்தது போல அறைக்குள் நுழைந்தான் ராகவன். அவனது இந்த வேகத்தை எதிர்பார்க்காத அவள் திகைக்க அவனோ அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
சும்மாவே அவனை விட்டு விலகாதவள் இப்போது மட்டும் விலகுவாளா என்ன? அவன் கைகளுக்குள் தன்னைக் கொடுத்தவாறு அசையாமல் நின்றாள். அவனுடைய அருகாமையை அவளுடைய ஆழ்மனம் அனுபவித்தது.
சாதாரணமாக அவளிடம் பேசி விட்டுச் செல்ல தான் வந்தான் ராகவன். ஆனால் அவள் தன்னுடைய கைக்குள் இருக்கவும், அவள் மேல் வந்த சோப்பின் நறுமணமும் அவன் மனதை தகர்த்தது. ஆசை ஊற்றெடுக்க அவள் முகம் நோக்கி குனிந்தான்.
அவனுடைய இதழ்கள் அவளுடைய இதழ்களை சற்று வேகமாக தீண்டின. அவனுடைய இதழ் முத்தத்துக்காகவே காத்திருந்தவள் போல அவனுடைய முத்தத்தில் கரைந்தாள் ஸ்ருதி. இருவரின் மனதிலும் இருந்த காதலின் ஏக்கத்தில் விளைந்த வெளிப்பாடாக இருந்தது அந்த முத்தம்.
முத்தத்தின் வேகம் கூட அவன் கரங்கள் அவள் மேனியில் பதிந்தது. தன்னுடைய மேனியில் உரிமையாக தவழும் அவனுடைய கரங்களை தடுக்க கூட தோன்றாமல் மயங்கி இருந்தாள். அவள் நிலை உணர்ந்த அவன் இதழ்கள் அவளுடைய முகம் முழுக்க முத்தமிட்டது. இதெல்லாம் அவளுக்கு கனவு போல இருந்தது.
திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே மீதம் இருக்க இதற்கு மேல் எல்லை தாண்ட வேண்டாம் என்று அவன் மூளை எடுத்துரைத்தது. ஆனால் ஆசை கொண்ட மனதை கட்டுப்படுத்துவது அவனுக்கு எளிதானதாக இல்லை.
உணர்ச்சிகளின் பிடியில் சிக்கி இருந்தவனுக்கு அவளை விட்டு விலகவே விரும்பவில்லை. தன்னுடைய கரங்கள் இரண்டும் உணரும் அவளுடைய பெண்மையின் மென்மையில் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்துக் கொண்டிருந்தான் ராகவன். வீட்டில் யாரும் இல்லை என்பது வேறு அவனுக்கு வசதியாக போயிற்று.
தன்னுடைய உணர்வுகளை அவன் மீட்டிக் கொண்டிருக்கிறான் என்ற உண்மை புரிந்தாலும் எங்கே தான் விலகினால் அவன் சென்று விடுவானோ என்று பயந்து அவன் கரங்களுக்குள் ஐக்கியமாகி இருந்தாள்.
அவள் மனது எப்போதோ அவனிடம் சரணடைந்து விட்டது. இப்போதே கூட அவன் அவளை எடுத்துக் கொண்டால் அவள் மறுக்க போவதில்லை. உயிரே அவன் தான் என்னும் போது உடலுக்காக யோசிப்பாளா என்ன?
அவனுடைய கரங்கள் எல்லை மீற அவள் கரம் உயர்ந்து அவன் முதுகில் பதிந்தது. நிலைமை கை மீறிச் சென்று கொண்டிருக்கிறது என்று உணர்ந்த ராகவனால் இம்மியும் அவளை விலக்க முடியவில்லை.
“உன் மேல உயிரையே வச்சு இத்தனை வருசமா உன்னை அவ மனசுக்குள்ளே வச்சு பூஜை செஞ்சிட்டு இருக்கா. அவளோட காதலுக்கு நீ செய்ற நன்றி கடன் இது தானா? உன் மனைவி என்ற ஸ்தானத்தை கொடுத்து அவளை கவுரவப் படுத்திய பிறகு இதை நடத்தினால் என்ன?”, என்று கேள்வி கேட்டது அவன் மூளை.
அதற்கு பிறகு தான் தன்னுடைய உணர்வுகளில் இருந்து அவனால் மீண்டு வர முடிந்தது.
அப்போதும் அவளை விட்டு விலகும் முன் மீண்டும் அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட்டு விட்டே விலகினான்.
“வெளியே போய் உக்காரலாமா ஸ்ருதி? இங்க இருக்க வேண்டாம்”
அவனுடைய தீண்டலின் தாக்கத்தில் இருந்து இன்னும் அவள் வெளியே வந்திருக்க வில்லை என்பதால் அவன் கேள்வி அவளுக்கு புரியவே இல்லை. அதனால் அவள் பதில் சொல்லாமல் இருக்க அவள் நிலை உணர்ந்தவன் அவளுடைய கை பற்றி வெளியே அழைத்து வந்து சோபாவில் அமர வைத்தான்.
அதற்கு பின்னர் தான் சகஜ நிலைக்கு வந்தவள் எழுந்தாள்.
“எங்க போற டி? உக்காரு”
“உங்களுக்கு ஏதாவது குடிக்க எடுத்துட்டு வரேன்”
“ஸ்வீட் சாப்பிட்ட பிறகு என்ன குடிக்க?”, என்று அவளுடைய இதழ்களைப் பார்த்துக் கொண்டே கேட்க அவள் முகம் சிவந்தது. “கூடவே இவன் இப்படி எல்லாம் பேசுவானா?”, என்று வியப்பாக இருந்தது. “அப்பாடி டீ ல இருந்து தப்பிச்சிட்டோம்”, என்று எண்ணிக் கொண்டான் ராகவன்.
அவளுடைய பார்வையுடன் அவனுடைய பார்வையைக் கலந்தான். சிறு பார்வைக்காக ஏங்கியவளுக்கு அவனிடம் இருந்து ஆழ்ந்த பார்வையே கிடைத்தது. அதை நம்ப முடியாதவளாக பெருவுகைக் கொண்டாள்.
அடுத்து குடும்பத்தினர் அனைவரும் உடை எடுக்க கிளம்பும் போது ராகவன் தன்னுடைய புதுக் காரை வாங்கிக் கொண்டு வந்தான். “நீயும் ஸ்ருதியும் புதுக் கார்ல வாங்க. நாங்க பழைய கார்ல கிளம்புறோம்”, என்று பெரியவர்கள் சொல்லி விட “ஏறு டி”, என்றான் ராகவன்.
அவனுடன் தனியே காரில் போகப் போவது ஒரு வித அவஸ்தையைக் கொடுத்தது. ஒரு ஆனந்த அலை அவள் உடல் முழுவதும் பரவியது.
“நான் அவங்க கூடவே போகட்டா?”, என்று கேட்டாள்.
“ஏறு டி”, என்று சொன்னவன் அவளைத் தீர்க்கமாக பார்க்க மனம் படபடக்க அவன் அருகே ஏறிக் கொண்டாள்.
அருகில் அமர்ந்திருந்த ஸ்ருதியை சொந்தத்துடன் பார்த்த படி காரைக் கிளப்பினான் ராகவன். அவன் பார்வையில் அவள் முகம் சிவந்தது. தன்னைக் கண்டு முகம் சிவந்தவளை அள்ளி அனைத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது.
அவளுடைய கண்கள் காதலைச் சிந்த சிறிது தூரம் போனவன் காரை ஓரம் கட்டி நிறுத்தி விட்டான். அவள் திகைப்பாக அவனைப் பார்க்க அவளுடைய விரல்களைப் பற்றினான் ராகவன். நடுக்கத்துடன் அவள் விரல்களை உருவிக் கொண்டாள்.
அங்கே அமைதியே நிலவியது. தான் தொட்டது அவளுக்கு விருப்பம் இல்லை என்று அவன் நினைக்க வில்லை. அவனுக்கு தெரியாதா அவள் மனது
அது வெட்கத்தால் என்று உணர்ந்தவன் “ஸ்ருதி”, என்று அழைத்தான்.
“ம்ம்”
“இப்பாவாது உன் மனசுல இருக்குறதைச் சொல்லக் கூடாதா”, என்று ஆசையாக கேட்டான்.