மாதங்கள் கடந்தன…
“எடேய், கொண்டம் தொடங்கிடுச்சு… வெடிய போடுங்கடே” வெள்ளைத்தலை பெருசு ஒன்றின் அறிவிப்பில், இளசுகள் விதவிதமான வெடிகளை வெடிக்கவிட்டு விளையாட, மேளதாளம் வெடி சத்தத்தையே மறைக்கும்படி, ஊர் எல்லை வரை கேட்குமளவு ஆரவாரமாய் ஒலித்தது.
“பாரியூர் கொண்டத்து மாரியம்மன் திருவிழா” தைமாத தொடக்கத்தில் கோபிசெட்டிப்பாளையம் முழுக்க கோலாகலமாய் கொண்டாடப்படும் திருவிழாக்களுள் ஒன்று! முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெகு விமர்சையாய் இன்று நடைப்பெருகிறதென்றால், அதற்க்கு இன்னொரு காரணம் ஒண்டிவீரர் சிவகாமியின் “சதாபிஷேகம்”
கொண்டத்தில் மக்கள் இறங்கி தங்கள் வேண்டுதலை சிறப்பாய் நிறைவேற்ற, போலிஸ் பட்டாளமே பாதுகாப்புக்காய் அங்கே குவிந்திருக்க, திருவிழாவை நேரலையில் ஒளிப்பரப்ப உள்ளூர் தொலைகாட்சி கேமரா மேன்கள் கூட்ட நெரிசலில் படாதப்பாடுபட்டுக்கொண்டிருந்தனர்.
கோவிலின் அருகே கூட செல்ல முடியாதபடி மக்கள் வெள்ளம் குவிந்திருந்தும், அக்கூட்டத்தை சமாளித்துக்கொண்டு கோவிலை நோக்கி சென்றார் அவர்.
இரு வருடங்களுக்கு முன்பு இத்திருவிழாவிற்கு வந்து சென்ற அனுபவம் இன்னமும் அவர் மனதில் பசுமையாய் இருக்க, தொழிலில் கூடிய முன்னேற்றத்தால், பாரியூர் அம்மனுக்கு நன்றி சொல்லிவிட்டு செல்ல ஆவலுடன் வந்திருந்தார் அவர்.
முன்பு வந்தபோது, நிழலுக்காக ஒதுங்கி நின்ற அதே வேப்பமரத்தின் திட்டில் சென்று அமர்ந்தவர், சுற்றிலும் கண்களை ஓட்டி வேடிக்கை பார்க்கத்தொடங்கினார்.
[the_ad id=”6605″]கோலாகலமான திருவிழாவை சிறிது நேரம் ரசித்தவருக்கு பயணக்களைப்பில் வயிறு தன் இருப்பைக் காட்டி கத்த, ‘அதான் அன்னதானம் போடுவாங்களே’ என நினைத்துக்கொண்டு அருகே இருந்தவரிடம் “அன்னதானம் எங்க போடுறாங்க?” என விசாரிக்க, அவரோ கோவிலை ஒட்டி இருந்த மண்டபத்தைக்காட்டி, “அங்க போங்க” என்றார்.
“மண்டத்துல கல்யாணம் ஏதோ நடக்குது போலருக்கே?”
“எங்க ஐயாவோட எண்பதாம் கல்யாணம் தானுங்க, யோசிக்காம போங்க! எல்லாருக்கும் இன்னைக்கு கல்யாண விருந்து உண்டு!!” என சொன்னதும், மென்சிரிப்புடன் அம்மண்டபத்தை அடைந்தார் அவர்.
வரவேற்ப்பில் பட்டு பாவாடை சட்டையில் நின்றுக்கொண்டு சந்தனமும் கற்க்கண்டும் எடுத்து நீட்டிய சிறுமிகளிடம் சிரித்தபடி அவர் வாங்கிக்கொண்டு நகர,
“டேய்… வாழையிலை கட்டை என்னத்துக்குடா தூக்கிட்டு போறீங்க?” என்ற அதிகார குரல் அவரை சட்டென நிற்க சொல்லியது. குரல் வந்த திக்கில் திரும்பியவர் கண்ணில் பட்டான் காண்டீபன்.
வெண்பட்டு சட்டையில் மடித்து கட்டியிருந்த வேஷ்டியுடன், கையில் இருந்த தங்கக்காப்பு முன்னும் பின்னும் அசைய முடியாது திணற, முன்பை விட இன்னும் கட்டுமஸ்த்தாய் அவர் பார்வையில் சிக்கினான்.
இலைக்கட்டை தூக்கிக்கொண்டு நின்றவர்கள் காண்டீபனிடம், “இன்பா அண்ணன் தான் பின்பக்கமா கொண்டு போக சொன்னாங்க!!” என சொல்ல, “அப்படியா சரி கொண்டு போங்க!!” என உடனே சொல்லிவிட்டான்.
இதை பார்த்துக்கொண்டிருந்தவருக்கு ஆச்சரியம்! போன முறை வந்தபோது அவர் கண்டதெல்லாம் காட்சி மாறாமல் அவர் நினைவில் இருக்க, ‘அண்ணனுக்கும் தம்பிக்கும் ஆகாம தானே இருந்துச்சு?’ என குழம்பிய போதே,
“அண்ணே! மதியத்துக்கு அப்பளமும் வடையும் சுட சுட போட்டுக்கலாம்ன்னு இன்பாண்ணே சொல்லிவிட்டுச்சு” என ஒருவன் வந்து காண்டீபனிடம் சொல்ல, “சரிதான்!! அண்ணன் சொன்னமாறியே செஞ்சுடுங்க” என்றான் அவன்.
[the_ad id=”6605″]கேட்டவருக்கோ ஆச்சர்யம் எல்லை கடந்தது. அப்போது அவர் தோளை ஒருவர் தொட்டு அழைக்க திரும்பியவரை அடையாளம் கண்டு, “ரொம்ப நேரமா உங்களை எங்கயோ பார்த்துருக்கேனேன்னு நினைச்சுட்டு இருந்தேன், இப்போதான் நினைவு வந்துச்சு! போன திருவிழால பாத்தோமே? தரகர் தானே நீங்க?” என்றார் பெரியவர் ஒருவர்.
“நல்ல நியாபக சக்தி உங்களுக்கு!” என அவரை மெச்சிய அத்தரகர், “உங்க அம்மனை பார்த்துட்டு போன பிறகு, ‘திருமண தகவல் மையம்’ வச்சுட்டேன்! எங்கயும் அழையாம ‘வரன்’ எல்லாம் தேடி வந்து எனக்கிட்ட பதிஞ்சுட்டு போறாங்க” என பெருமிதம் கொள்ள, “அதான் எங்க அம்மன் மகிமை” என சிலாகித்தார் அப்பெரியவர்.
தரகருக்கு தன் சந்தேகத்தை கேட்டே ஆக வேண்டும் என தோன்ற, “ஏங்க, போன முறை வந்தப்போ பெரிய வீட்ல அண்ணனுக்கும் தம்பிக்கும் ஆகாதுன்னு தானே சொன்னீங்க? நானும் கூட பார்த்தேனே! இப்போ தம்பி ராசி ஆகிட்டாரு போலயே” என்றதும், “ஆமாங்க! ராமன் லட்சுமணன் மாறி அவங்க சுத்துறதை பார்த்தா எங்களுக்கே கூட பொறாமையா இருக்கு! எந்நேரமும் முறைச்சுகிட்டு சுத்துன பசங்கன்னு சொன்னா ஒருத்தனும் நம்ப மாட்டான்” என கள்ளமின்றி சிரித்தார்.
அந்நேரம் அவர்கள் காதுப்பட, “அண்ணன் யோசிக்காம எதுவும் சொல்ல மாட்டான்! அவன் சொன்னது போலவே செய்ங்க, சரியா இருக்கும்” என சிலரிடம் சொல்லிக்கொண்டே காண்டீபன் இவர்களை கடந்து செல்வது தெரிய, தரகரும் பெரியவரும் மனதார புன்னகைத்தனர்.
மலர் அலங்காரத்தோடு அந்த பெரிய மண்டபம் முழுக்க மணமணக்க, விழா நாயகர்கள் மட்டும் இன்னமும் அறையை விட்டு வரவில்லை. மணமகன் அறையை நோக்கி வேகமாய் சென்றான் காண்டீபன்.
அங்கே ஒண்டிவீரர் தன் எண்பது வயதிலும் குறையாத கம்பீரத்தில் அமர்ந்திருக்க, அவரின் இரு புறமும் நின்றுக்கொண்டு அவர் பொறுமையை சோதித்துக்கொண்டிருந்தனர் காண்டீபனின் மாமனாரும், பேரின்பனின் மாமனாரும்!
சுசியின் தந்தை மாணிக்கம், “ஐயா, உங்களுக்கு மீசையை முறுக்கி விட்டா தானுங்க அழகே… அம்மா உங்களை பார்த்து அசர வேண்டாமா?” என கேட்க, கோகிலாவின் தந்தை ஷங்கரோ, “எங்க ஐயா எப்பவுமே அழகு தான்! அதுக்கு மீசையை முறுக்கனும்ன்னு எல்லாம் அவசியம் இல்லை! அவர் என்ன சண்டைக்கா போறாரு, முறுக்கி விட்டுக்கிட்டு சுத்த” என மல்லுக்கு நிற்க, ஒண்டிவீரரின் ஒரு பக்க மீசை முறுக்கியும், மறுப்பக்க மீசை, தொங்கியும், பார்க்கவே சிரிப்பு மூட்டுவதாக இருந்தது.
அங்கு நடந்த கூத்தை பார்த்த காண்டீபன், “முகூர்த்த நேரம் நெருங்கிடுச்சு! இன்னும் தாத்தாவ மேடைக்கு வர விடாம, நீங்க வெட்டியா பேசிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்?” என இரு மாமன்களுக்கும் சேர்த்து அதட்டல் போட்டவன், அங்கிருந்த மாலையை எடுத்து ஒண்டிவீரர் கழுத்தில் அணிவித்து, அவர் மீசையை முறுக்கியும் முறுக்காமலும் மத்தியமாய் வைத்தவன், “வாங்க தாத்தா, மேடைக்கு போலாம்” என அழைத்து சென்றான்.
மணமகனுக்கே இந்த அலட்டல் என்றால், மணமகள் கதியை சொல்லவும் வேண்டுமா?
“நான் ஜடை வச்சு தச்சு விடுறேன்னு சொன்னேன், என்கிட்ட ஒரேயடியா வேண்டாம்ன்னு சொல்லிட்டு, இப்போ இந்தக்கா ‘பன்னு’ கொண்டை போட்டு பூவை சுத்துது, அதுக்கு மட்டும் சரின்னு சொல்றீங்க? என்ன இருந்தாலும் பேத்தி வேற, மருமவ வேற தானே!!” இப்படி சொல்வது சுசீலா அன்றி வேறு யாராய் இருக்க முடியும்!?
ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் ‘மருமவ வேற, பேத்தி வேற தானே உங்களுக்கு’ என சொல்லாவிட்டால் அவளுக்கு போஜனம் செமிக்காது. கோகிலாவும் அதற்கேற்றார் போல எதையேனும் செய்து அவளை சீண்டிவிடுவாள். ஆனால், மீண்டும் கூட்டுக்குடும்பமாய் எல்லோரும் சேர்ந்த பின்னே, ஒருபொழுதும் அவளால் சண்டை சச்சரவு என்று அவள் உண்டு செய்ததே இல்லை! இந்த பேச்செல்லாம் வெறும் வாயளவே!!!
“அடியேய்! ஜடை தச்சு அலங்காரம் பண்ற வயசாடி எனக்கு? கொண்டைல பூவை சுத்திவிடுன்னு சொன்னேன், இவ என்னவோ அதை ஒரு தினுசா செஞ்சுட்டு இருக்கா!” சிவகாமி கண்ணாடி வழியே எட்டுமாத வயிற்றுடன் தன் ஓரகத்தியின் மகளுக்கு உணவூட்டிக்கொண்டிருந்த சுசீலாவுக்கு பதில் சொல்ல, “அவ்வளோதான் அம்மாயி! முடிஞ்சுது!! இப்போ தான் பார்க்க கல்யாண பொண்ணா லட்சணமா இருக்கீங்க” என கண்ணடித்து திருஷ்டி கழித்தாள் கோகிலா.
ஒருவயது தாண்டிய பெண் குழந்தைக்கு தாயான பின்பும் தன் குறும்புத்தனம் கொஞ்சமும் குறையாது, மெழுகு பொம்மையென நிற்ப்பவளிடம், “சீ, போடி” என அழகாய் வெட்கப்பட்டார் சிவகாமி.
“இன்னுமா பொண்ணு ரெடி ஆகல? இன்பன் வந்து கத்துவான்!” என கத்திக்கொண்டே காண்டீபன் வர, தன் கொழுந்தனிடம் திரும்பிய கோகிலா, “அவர் கத்துனா நான் பார்த்துக்குறேன்” என்றாள் திடமாய்!
“ம்க்கும்! நீயும் அவனும் பார்த்துக்கிட்டு நின்னா, கல்யாணம் நடந்த மாறிதான் இன்னைக்கு” என அவளை வாரியவன், “சீக்கிரம் மேடைக்கு அழைச்சுட்டு போ, தாத்தா வந்தாச்சு!” என பறக்க, “சரிடா காட்ஜில்லா” என பொறுமலோடு சிவகாமியை அழைத்து சென்றாள் கோகிலா.
அறையில் குழந்தையோடு இருந்த சுசீலாவை, “இன்னுமா சோரூட்டுற நீ? பட்டுக்குட்டி சாப்பிட்டாசுன்னா என்கிட்டே குடு!” என அவளை நெருங்க, சித்தப்பனை கண்டதும், அவனிடம் தாவியது இன்பன் கோகிலாவின் சின்னசிட்டு.
குழந்தையை கையில் வைத்து கொஞ்சியவன், “சரி வா மேடைக்கு போலாம்” என்றான்.
‘காண்டாமிருகம்’
முன்னே சென்றவன், “என்ன?” என திரும்ப, “ஒன்னும் இல்லையே” என்றாள் அவசரமாய்.
“ஒன்னும் இல்லையா?”
“இல்ல” குரல் தேய்ந்தது.
“மூஞ்ச ஏண்டி இப்படி உம்முன்னே வச்சுக்குவ?” காண்டீபன் கேட்க, “அதை கொஞ்சம் காதலா தான் கேளுங்களேன்! என்னவோ ஆடு மாடுக்கிட்ட பேசுறமாறியே என்கிட்டயும்!” என சத்தமாய் சொன்னவள், பின்னே மெதுவாய், “இப்படி உருட்டி மிரட்டியே என் வயித்தையும் நிறைச்சாச்சு” என முனக, அதை சரியாய் காதில் வாங்கிய காண்டீபன்,
“ஹோ, அப்போ நான் உன்னை மிரட்டி தான் இப்படி ஆக்குனேனா?” என்றான் அவள் மேடிட்ட வயிற்ரைக்காட்டி, புருவத்தூக்கலோடு!
[the_ad id=”6605″]“பின்ன?” என அவள் சடைக்க, “கொஞ்சம் பழசெல்லாம் ஓட்டிப்பாருங்க மேடம்! ஒழுங்கா இருந்தவன்க்கிட்ட வந்து ‘நம்ம புள்ள பெத்துக்கலாம் அத்தான், நம்ம புள்ள பெத்துக்கலாம் அத்தான்’ன்னு கெஞ்சி மிஞ்சி, நான் எதுக்கும் மடியலன்னதும், ரெண்டு நாள் உண்ணாவிரதம் இருந்து, காலேஜ் போக மாட்டேன்னு அடம் பிடிச்சு, என்னை மிரட்ட்ட்ட்டி……” காண்டீபனை மேற்கொண்டு பேச விட்டு தன் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிக்கொள்ளாமல், “கூப்பிட்டீங்களா அத்தே! இதோ வந்துட்டேன்” என இல்லாத அத்தைக்கு பதில் சொல்லிக்கொண்டு, வேகமாய் அவனை விட்டு நகர்ந்தாள் சுசீலா.
“ஏய்… ஏய்… முழுசா கேட்டுட்டு நியாயத்தை சொல்லுடி” என சிரித்துக்கொண்டே கத்தியவன், அவள் பழிப்பு காட்டுவதை கண்டு, “பார்த்து நட” என்றதோடு புன்னகை மறையாது மேடைக்கு சென்றான்.
மேடையில் குத்துவிளக்கு ஏற்றியதில் இருந்து, ஐயர் கேட்ட அருங்கம்புல் வரை பார்த்து பார்த்து தன் தாய்தந்தை திருமணத்திற்க்காக செய்துக்கொண்டிருந்தார் செல்லம்.
ஈரோடு அருகே ஒரு ஆதரவற்றோர் விடுதிக்கு பொறுப்பெடுத்து, சொந்தசெலவில் அதை பெரிதுப்படுத்தி ஆதரவின்றி துன்பப்படும் பல நூறு பேருக்கு ஆதரவு கொடுத்து அவர்களோடு தங்கள் வாழ்க்கையை இணைத்துக்கொண்டு நிம்மதியாய் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர் ஷங்கரும் செல்லமும்.
அவ்வப்போது கோகிலாவை பார்க்க, தங்கள் பேத்தியை பார்க்க என மனம் திருந்தி வந்து போனவர்களின் மீது பாராமுகம் காட்டவோ, வெறுக்கவோ அந்த பெரிய வீட்டில் யாருக்கும் சிறிய மனது இல்லாமல் போனது.
மேடையில் அமர்ந்து ஒண்டிவீரரும் சிவகாமியும் ஐயர் சொன்ன சம்பிரதாயங்களை நிறைந்த மனதுடன் செய்துக்கொண்டிருந்தனர். ஒண்டிவீரர் நிமிர்ந்து வந்திருந்தவர்களை வரவேற்ற முகமாய் சிரிக்க, மேடையில் தங்களை சுற்றி நிற்கும் தனது ரத்த சொந்தங்களை பெருமிதமாய் பார்த்துக்கொண்டிருந்தார்.
அங்கே இருவர் குறைவது கண்டு கோகிலாவை அருகே அழைத்தவர், “இன்பன் எங்கமா? தங்கத்தையும் ஆளைக்காணோம்?” என கேட்டதும், “மாமா வந்துடுறேன்னு சொல்லிட்டு போனாங்க தாத்தா!” என்றாள் சங்கடமாய்.
அவள் சொன்ன தொனியிலேயே, “பசங்களை கவனிக்க போயிருக்கானா?” என சரியாய் கேட்டார் அவர்.
எப்போதும் திருவிழாவில் அவனை சுற்றி வட்டமடிக்கும் இளசுகளின் வரம்பு மீறாத அன்றைய கேளிக்கைகளுக்கு முழு செலவும் இன்பனுடையதே! இன்றோ சதாபிஷேகமும் கூடுதலாய் சேர, காலையிலேயே அவர்களுக்கான செலவு தொகையை பிரித்துக்கொடுக்க கோகிலாவிடம் ரகசியமாய் சொல்லிவிட்டு நகர்ந்திருந்தான் அவன்.
“தங்கம் எங்க?” ஒண்டிவீரர் தன் மகளை கேட்க, கோகிலா பதில் சொல்லும்முன், கேள்விக்கு விடையாய் மெல்லிய கரையிட்ட மரூன் நிற புடவையில் மேடையை நோக்கி நிமிர் நடையுடன் வந்துக்கொண்டிருந்தார் தங்கம்.
செல்லம், “இவ்வளோ நேரமா அக்கா?” என உரிமையாய் கடிய, “அந்த பயலுகளுக்கு எல்லாம் சொல்லிட்டு வரதுக்குள்ள இத்தனை நேரமாகிடுச்சு!” என்றார் தங்கம்.
[the_ad id=”6605″]“எங்க சித்தி போனீங்க?” கோகிலா கேட்டதும், “மதிய விருந்துக்கு செய்ய சொல்லிருந்த பாயாசத்துக்கு போட வேண்டிய முந்திரி மூட்டையை காணோமாம்! போன் பண்ணாங்க! இடம் சொல்லியும் எடுக்க தெரியல! அதான் நானே ஓரெட்டு நேர்ல போயிட்டு வந்தேன்!” என்றதும், “கடைசி நேரத்துலையா அலைக்கழிப்பாங்க இப்படி? நாளைக்கு இருக்கு அவங்களுக்கு” என்றாள் சின்ன கோவத்தோடு!
“நான் திட்டிட்டு தான் வந்தேன், ஆனாலும் ஓனரம்மா ரெண்டு வார்த்தை கடிஞ்சா தான் கொஞ்சமேனும் திருந்துவானுங்க” என சிரிப்பை அடக்கி சொன்ன தங்கத்தை, “சித்தி…..!!!!” என போலியாய் முறைத்தாள் கோகிலா.
‘உனக்கென ஓர் அடையாளம் வேண்டும்’ என இன்பன் வலியுறுத்தியதில் இருந்து என்ன செய்யலாம் என சிந்தனையில் இருந்த கோகிலாவுக்கு ஏனோ தங்கத்தின் ருசியான சமையல் நல்ல யோசனையாய் அமைய, அவரை சமையல் மேற்ப்பார்வையாளறாய் வைத்து இன்பனின் உழைப்பில் விளைந்த பணத்தைக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டது ‘சுபிக்ஷம் உணவகம்’.
ஆரம்பத்தில் வெளியே வந்து நான்கு பேரிடம் பேசுவதற்க்கே தயங்கிய தங்கம், இன்று தனியாக தங்கள் கடைக்கு சென்று வேலையாட்களை கடிந்துக்கொண்டு வந்திருப்பதே முதலாளியான கோகிலாவுக்கு அலாதி மகிழ்வை கொடுக்கிறது.
“ஏய்…”
“ஏய்ய்…” கோகிலாவிடம் இருந்து சற்று தள்ளி நின்றிருந்த காண்டீபன் தான் அவளை அழைத்துக்கொண்டிருந்தான். அழைப்பது அவள் காதில் விழுந்தாலும் அவனை நிமிர்ந்தும் பாராது, “அண்ணின்னு கூப்பிடு, திரும்புறேன்” என்றாள்.
“அட ச்சீ… திரும்பு” காண்டீபன் அழைக்க, “அண்ணின்னு சொல்லு திரும்புறேன்” என பிகு செய்தாள் கோகிலா. இது அவர்கள் இருவருக்குள்ளும் எப்போதும் நடக்கும் விளையாட்டு என்பதால், இருவருக்கும் இடையே நின்றிருந்த சுசீலா கூட இதை கண்டுக்கொள்ளவில்லை.
காண்டீபன் வேறு வழியின்றி, “அண்ணீ” என பல்லைக்கடித்துக்கொண்டு அழைக்க, அவனிடம் திரும்பி ‘ஈஈஈ’ என சிரித்த கோகிலா, “சொல்லுங்க கொழுந்தா” என்றாள் நக்கலாய்.
“இன்பன் எங்க லூசு! ஆளே காணோம்! பாத பூஜைக்கு நேரமாச்சு” என கடிய, “வந்துடுவேன்னு சொன்னாங்க” என்றாள் கோகிலா.
“ஒரு போன் செஞ்சாவது கேளு”
“போன் பண்ணலாம் தான், ஆனா, அதுதான் என்கிட்டே இருக்கே” என இன்பனின் அலைபேசியை இவள் தூக்கிக் காட்ட தலையில் அடித்துக்கொண்டான் காண்டீபன்.
“பாத பூஜை பண்றவா மேல வாங்கோ!!” என ஐயர் பொதுவாய் அறிவித்து அதற்க்கான சடங்கை சொல்ல, மஞ்சள் நூல் சுற்றப்பட்ட பித்தளை கலசத்தை எடுத்துக்கொடுத்தார் செல்லம்,
“தம்பதியோட மூத்த வாரிசு வந்து பாத பூஜையை ஆரம்பிங்கோ!” என்ற ஐயர் குரலில் எல்லோர் பார்வையும் மேடையின் கீழே முதல் வரிசையில் தன் பேத்தியை இடக்கையில் தாங்கியபடி மென்மையான புன்னகையுடன் அமர்ந்திருந்த சத்தியராஜனை பார்க்க, ஆவலாய் எழுந்து தன் பேத்தியுடன் மேடையேறினார் சத்தியன்.
[the_ad id=”6605″]அன்று வலது தோள்ப்பட்டையில் வலுவாய் விழுந்த கல், அவரது வலதுதோள்மூட்டு எலும்பை சிதைத்திருக்க மயங்கி விழுந்தவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அறுவை சிகிச்சை செய்து ஓரளவு சரி செய்தாலும், அவரால் வலது கையை பெரும்பாலும் உபயோகிக்க முடியாமலே இருக்க, இன்பன் தான் அவர் மறுத்தும் கேட்காமல் கேரளா ஆயுர்வேத சிகிச்சைக்கு அழைத்து சென்றுக்கொண்டிருக்கிறான்.
‘எனக்கு எதுக்குடா? நான் இப்படியே போய் சேருறேன்’ என இன்பனின் கனிவால் எழுந்த குற்றவுணர்வில் சத்தியன் சொன்னபோது கூட, ‘என்னை திட்டிக்கிட்டு இருந்தப்போதே நல்லா இருந்த என் அப்பா, இப்போ திருந்தி என்னை ஏத்துக்கும்போது நல்லா இருக்க வேண்டாமா? இது என் ஆசை! விடுங்கப்பா’ என்றுவிட்டான்.
இந்த ஒரு வருடத்தில் சத்தியன் ஆளே மொத்தமாய் மாறியிருந்தார். பேச்சு பாதிக்கு பாதியாய் குறைந்தாலும், எந்நேரமும் அவர் முகத்தில் ஒரு சாத்வீக புன்னகை குடிக்கொண்டிருக்கும்!
அது அன்று நடந்த விபத்தினாலா? இன்பனின் கவனிப்பினாலா? அல்லது அவர் கைகளில் ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும் ‘வைதேகி’யினாலா என அவரே அறியார்!!!
தொலைத்த பொருளை தேடி அலைந்துக்கொண்டிருந்தவரின் கைகளில் பொக்கிஷமென வந்து விழுந்தாள் அவள்…! “வைதேகி”.
அன்னையின் பெயரைத்தான் பிள்ளைக்கு வைக்க வேண்டும் என இன்பன் திட்டம் எதுவும் போட்டிருக்கவில்லை. அது ஏனோ, அவள் முகத்தை பார்க்கையில் அவனுக்கு தன் தாயின் முகவடிவே நினைவு வர, அவனை மீறி ‘அம்மா’ என அழைத்திருந்தான்.
வைதேகியும் தாத்தனை கண்டுவிட்டால் அவரை விட்டு நொடிபொழுதும் அகலமாட்டாள். இப்போதும், சத்தியனின் இடது தோளை தனது சிம்மாசனமாய் கொண்டு அமர்ந்திருந்தவளை இறக்கி விட மனமின்றி, சரிவர இயங்காத வலது கையை கொண்டு பாத பூஜை செய்யவும் தயங்கி சத்தியன் நிற்க, அவரை அதற்குமேல் தயங்க விடாமல், அவரின் வலது கையை தன்னோடு சேர்த்து பிடித்திருந்தான் இன்பன்.
“ஹப்பாடி வந்துட்டான்!” என காண்டீபன் நிம்மதியடைய, “வர நேரத்தை பாரு” என பொருமினாள் கோகிலா.
“வாங்கப்ப்பா! உங்க கையை நான் பிடிச்சுக்குறேன்” என்ற இன்பன், தன் கை மூலம் அவர் கையை இயக்கி ஒண்டிவீரர் சிவகாமி தம்பதிக்கு பாதபூஜை செய்ய, அதில் வைதேகியின் பிஞ்சுக்கரங்களும் இணைந்துகொண்டது.
தங்கம் வந்து பூஜை செய்ததும், செல்லம் ஷங்கருடன் வந்து பாத பூஜை செய்ய, “அடுத்து பேரன் பேத்திங்க வாங்கோ” என அழைத்தார் ஐயர்.
மூத்த தம்பதியாய் இன்பன் கோகிலாவுடன் சென்று அவர்களுக்கு மரியாதை செய்ய, அடுத்து காண்டீபன் சுசீலா சென்றபோது, சுசீலாவை குனிய வைக்க வேண்டாம் என எத்தனை சொல்லியும், அவர்களின் பாசவேலியை தகர்த்து, ‘நான் இந்த வீட்டு மருமவ, நான் செய்வேன்’ என மிடுக்குடன் பாதபூஜையை முடித்தாள்.
ஊரின் ஆதர்ஷ தம்பதிகளிடம் இருந்து ஆசி பெற சொந்தபந்தம், அங்காளி பங்காளி என மேடையை நிறைத்துக்கொண்டிருந்தனர். ஐயரே சற்று கடுப்பாகி, “தாலி கட்டனுமா வேண்டாமா?” என சத்தம் போடும்வரை ஆசீர்வாதம் வாங்கும் படலம் நடந்துக்கொண்டிருந்தது.
இளையோர் அத்தனை பேரும் எழுந்து நின்று பிரம்பித்துப்பார்க்க, அறுவது வருடங்களாய் தன் சுக துக்கங்களில் பங்கெடுத்து, தன் உயிரோடும் உடலோடும் கலந்து இன்றுவரை தன் கரம் பிடித்து சௌந்தர்யமாய் உடனிருக்கும் மனையாளுக்கு, பொன்தாலியை ஒண்டிவீரர் கட்ட, மஞ்சள் அரிசி மழையில் நனைந்தபடி மனம் நிறைந்த ஆனந்தத்தோடு கடைவிழியோரம் இரு துளி நீர் கசிந்தது சிவகாமிக்கு.
[the_ad id=”6605″]ஷங்கரின் அலைபேசி மௌனமாய் அதிர்ந்தது. சிவகுரு தான் அழைத்திருந்தார். கூட்டத்தில் இருந்து சற்றே நகர்ந்து வந்தவர், அழைப்பை இயக்கி, “சொல்லு சிவகுரு” என்றார்.
“கல்யாணம் முடிஞ்சுதா நல்லபடியா?”
“முடிஞ்சுது சிவா…! இப்போ எங்க இருக்கீங்க?” என்றார் ஷங்கர்.
“டார்ஜிலிங் வந்தோம்! இங்க தான் அடுத்து ஒரு மாசம்!” என்ற சிவகுருவின் குரலில் சோகம் அப்பிக்கிடந்தது.
அன்று கிணற்றில் விழுந்த கிஷோரின் உயிர் பிரிந்திருக்கும் என எண்ணியே அவனை வெளியே எடுத்தனர். கடவுள் அவன் அனுபவிக்க வேண்டியது இன்னும் இவ்வுலகில் உண்டு என முடிவு செய்திருந்தார் போல!!!
தலையிலும் முதுகுத்தண்டிலும் அடிபட்டு உயிருக்கு போராடியவனின் உயிரை மட்டுமே மருத்துவர்களால் தக்க வைக்க முடிந்தது. தலை நிற்காமல் ஆடிக்கொண்டே இருக்க, வாயில் இருந்து எச்சில் ஒழுகிக்கொண்டே, கை கால் வராது படுத்த படுக்கையாய் கிடக்கும் தங்கள் மகனை சரிசெய்ய சிவகுருவும் லலிதாவும் பார்க்காத வைத்தியமில்லை! வேண்டாத தெய்வமுமில்லை! அத்தனை பேரும் கையை விரிக்க, இன்றும் கூட யாரோ சொன்னதை கேட்டு ஒரு மருத்துவரை பார்க்கவே டார்ஜிலிங் சென்றிருந்தனர்.
“நம்ம வைதேகி பாப்பாவை பார்க்கணும் போல இருக்கு ஷங்கர், கல்யாணத்துக்கு புது ட்ரெஸ் எல்லாம் போட்டு அழகா இருப்பாள்ள? எங்களுக்கு ஒரு போட்டோ அனுப்புறியா?” என ஆசையாய் கேட்ட சிவகுரு, “எங்களுக்கும் அவ தானே பேத்தி!” என்றார் கண்களில் நீர் சேர!
கோகிலா இன்பனுடன் நின்று சுசீலாவை ஏதோ சொல்லி வம்பு வளர்த்து சிரித்துக்கொண்டிருக்க, தன் மகளின் நிறைவான வாழ்வை எண்ணி பூரித்தபடி அழைப்பை துண்டித்தார் ஷங்கர்.
இன்பன் கிளிகளை தான் தேடிக்கொண்டிருந்தான். ‘எங்க போனானுங்க?’ என அவன் எண்ணுவதற்குள் அவன் பின்னிருந்து “இங்கதான் இருக்கோம்” என வந்து சேர்ந்தனர் பச்சைகிளியும் வெட்டுக்கிளியும்!
[the_ad id=”6605″]“டேய், வந்தவங்க எல்லாரும் திருப்தியா சாப்பிட்டாங்களான்னு கவனிங்கடா! நான் அடுத்த பந்திக்கு அங்க வந்துடுவேன்” என இன்பன் வேலை சொல்ல, “இப்போதான் பார்த்துட்டு வரோம்! எல்லாம் அமோகமா நடக்குது” என்றான் வெட்டுக்கிளி.
“கிளிகள் இருக்க பயமேன்?” என சிரித்தாள் கோகிலா.
முக்கியமான வேலை நடந்ததில் திருப்தியடைந்தவன், மேடையை விட்டு இறங்க போன தங்கத்தையும் செல்லத்தையும் சத்தமாய் அழைத்தான்.
“எங்க போறீங்க? கல்யாணம் முடிச்சுட்டு போட்டோ எடுக்காம எப்டி? வாங்க ஒரு பேமிலி போட்டோ எடுப்போம்” என்றான்.
“ஹை.. ஜாலி”
“தள்ளுங்க நான் இங்க நிக்குறேன்”
“நான் நல்லா தெரியுறேனா?”
விதவிதமான பேச்சுகளுக்கு நடுவே ஒண்டிவீரர் சிவகாமி அமர்ந்திருந்த சோபாவை சுற்றி எல்லோரும் குமிய, பளிச்சென்ற புன்னகையுடன் அமர்ந்திருந்த ஒண்டிவீரரின் அருகே குனிந்து, “என்ன தாத்தா? நம்ம வீட்ல ஒரு கல்யாணத்தை கூட சிறப்பா செய்ய முடியலன்னு வருத்தப்பட்டீங்களே!!! இப்போ உங்க ரெண்டு பேரு கல்யாணத்தை ஊரையே கூட்டி ஜாம்ஜாம்ன்னு பேரனுங்க நாங்க நடத்திட்டோம்! சந்தோசமா?” என்ற இன்பனுக்கு வார்த்தையால் பதில் சொல்லக்கூட முடியாத அளவு ஒண்டிவீரர் மனது மகிழ்ச்சியில் தத்தளித்துக்கொண்டிருந்தது.
அவன் தாடைப்பிடித்து கொஞ்சியவர், அவன் சிரத்தில் கரம்வைத்து, “நல்லா இருக்கணும்டா நீ!” என்றார் ஆத்மாத்தமாய். ஆயிரம் பாராட்டுகள் சொல்லாததை அந்த ஒற்றை வாழ்த்து சொன்னது!!!
கோகிலாவின் தோளில் கரம் பதித்து தன் அக்மார்க் புன்னகையுடன் அவன் நிற்க, போஸ்ட் கம்பம் போல நின்ற காண்டீபனின் விலாவில் தன் முழங்கையால் குத்தி, “கையை மேல போடுங்க” என மிரட்டி வாங்கிக்கொண்டாள் சுசீலா.
[the_ad id=”6605″]பல ஆங்கிள்களில் நிழல்படங்களை குடும்ப சகிதமாய் எடுத்துக்கொண்டபின்னே, “போட்டோக்ராபர் தம்பி, உனக்கு சரியா ரெண்டே நாள் தான் டைமு! அதுக்குள்ள எங்க வீட்டு டிவியை விட பெரிய சைஸ்ல எங்க பேமிலி போட்டோ வீட்டுக்கு வந்தாகணும்! என்ன?” என்றவன், அருகே இருந்த காண்டீபனிடம், “என்ன காண்டீபா? சரிதானே?” என்றான்.
காண்டீபனோ, “அண்ணன் சொன்னா சரிதான்!” என சிரிக்க, சத்தியராஜன், “என் புள்ளை சொன்னா அது சரியா தான் இருக்கும்” என சொல்ல, அவ்விடத்தில் சலசலப்பையும் மீறி ஒரு அமைதி உண்டானது. அது சங்கடத்தினால் வந்த அமைதி அல்ல! உள்ளம் நிறைந்து போய் அங்கே வார்த்தைகள் விடைபெற்றதால் வந்த அமைதி!!! ‘இந்த வார்த்தைக்கு தானே ஏங்கி இருந்தான் இன்பன்!’
காண்டீபனை மெல்ல சுரண்டி அழைத்த சுசீலா, “உங்க அண்ணனுக்காக விட்டுக்குடுக்குறீங்களா?” என்றாள் கேலி சிரிப்புடன் கிசுகிசுப்பாய்.
காண்டீபன் கொஞ்சமும் முகம் சுணங்காது, “விட்டுக்குடுக்கலை! இத்தனை நாளா குடுக்காம இருந்ததை குடுக்குறேன்” என மெதுவாய் சொல்ல, “புரியல” என்றாள் சுசீலா.
ஒரு நெடுமூச்செடுத்தவன் அளவான புன்னகையுடன், “மரியாதை குடுக்குறேன்” என சொல்ல, சுசீலாவின் கண்களில் கணவனை எண்ணிய வியப்பு. ‘எப்படி இருந்த நீ, இப்படி மாறிட்ட’ என்ற திகைப்பு இப்போதெல்லாம் அடிக்கடி தோன்றினாலும், அது அவள் மனதுக்கு பிடித்தே இருந்ததால் காண்டாமிருத்தின் கரங்களை தன்னோடு பிணைத்துக்கொண்டாள் சுசீலா.
சத்தியராஜனின் பேச்சால் எழுந்த மௌனத்தை கலைக்கும் பொருட்டு, வெட்டுக்கிளி சத்தமாக, “என்னத்த புள்ள, பெருசா புள்ள…” என நொடிக்க, பச்சைக்கிளி, “அதானே! மூத்தது முட்டாபீசு! சின்னத்து முரட்டு பீசு” என சொல்ல, ‘கொல்’ என பரவியது அங்கே சிரிப்பலை.
காண்டீபனும் இன்பனும் பொய்யாய் ‘ஏய்ய்ய்ய்…” என அடிக்க வர, சிரிப்பு குறையாத சிவகாமி, “என் பேரனுக்கு என்னடே குறைச்ச? சின்னவன் முரடன்னாலும் தங்கமானவன்…!” என்றவர், “என் பெரிய பேரன் குணத்துல அந்த ராமன்…! யாருக்கு வரும் அவன் மனசு” என சிலாகிக்க, கிளிகளுக்கும் சிவகாமிக்கு இடையே அங்கே ஓர் சொற்ப்போரே கலகலப்பாய் எழுந்தது.
[the_ad id=”6605″]கோகிலா வாயை மூடி கிளுக்கி சிரித்துக்கொண்டிருப்பதை ஓரக்கண்ணில் கண்டுக்கொண்ட இன்பன், அவள் அருகே சென்று, “என்னடி? கெக்கே பிக்கேன்னு இளிப்பு” என்றான் அதட்டல் போல.
அவன் அதட்டலுக்கு மடங்குபவலா கோகிலா? அசராது அவனை பார்த்தவள், “நீங்க ராமர் ன்னு சொல்றாங்க” என சிரிக்க,
“நான் ராமன் தாண்டி!! ஏகப்பத்தினி விரதன்… தெரியுமுல்ல?” என கேட்க,
[the_ad id=”6605″]
“அது தெரியும்!! ஆனா, பாவம் அந்த ராமன் தான் தெரியாம கோகுலத்துல மாட்டிக்கிட்டாரு” என கண்ணடித்தாள் கோகிலா.
அவள் கண்ணடித்த அழகில் சொக்கினாலும், “கோகுலத்துலயா? அங்க கண்ணன் தானே இருப்பாங்க?” என இன்பன் விளக்கம் கேட்க, மெலிதாய் நெற்றியில் அடித்துக்கொண்டவள், “மக்கு மாமா!! நான் யாரு!?” என்றாள்.
உடனே “கொக்கிமூக்கி” என அவன் சொல்ல, அவள் பொறுமை கரை கடந்தது.
அதை உணர்ந்தவன் போல, “சரி, சரி!!! நீ என் பொண்டாட்டி!!” என்றான் கண்கள் மின்ன…
“நான் உன் பொண்டாட்டி தான் என் மக்கு புருஷா!! அந்த பொண்டாட்டிக்கு பேர் என்ன?” என விளக்கமாய் கேட்க, “கோகிலா” என அவன் சொன்னதும்,
“அப்போ இந்த ராமன், கோகுலத்துல தானே மாட்டிக்கிட்டு இருக்காரு!!?” என்றாள் சிரிப்பை அடக்கி.
அவனுக்கு தலைக்கு மேல் பல்பு எரிந்தது.
“ஓ…! ஓஓஓ!!!!” என ராகம் போட்டான் ரசனையாய்.
அவனை மையலாய் பார்த்துக்கொண்டு அவள் நிற்க,
இன்பன், “ம்ம்ம்?” ‘அப்படியா?’ என்றான் கண்ணசைவில்.
“ம்ம்ம்ம்” என கோகிலா புன்னகைக்க, அதை பார்த்தபடி நின்றவனின் பார்வை நொடிக்கு நொடி மாறுவதை கண்டவள், “இது மண்டபம்” என இடித்துவிட்டு அவனைத்தாண்டி செல்ல, மையல் குறையாத பார்வையுடன் கோகிலாவை பார்த்தவனின் இதழ்களில் புன்னகை என்றும் உறைந்தே இருந்தது.
மனதில் பல வேதனைகளை சுமந்த போதே சிரிப்புடன் வளைய வந்தவன், இன்று ‘எத்தனை கோடி இன்பன் வைத்தாய்?’ என கேட்டுமளவு நெஞ்சம் முழுக்க மகிழ்வோடு இருக்கையில், அவன் இதழ்களில் தவழும் புன்னகையே அவனை பலமடங்கு அழகனை காட்டியது…!!
இனி என்றும் என்றென்றும்…
இன்பனுக்கு இன்பம்… பேரின்பம்… மட்டுமே!!!
-சுபம்-