“ச்ச… நான் வந்த மூடே போச்சு… எவ்வளவு ரொமாண்டிக்கா உன்னை வெல்கம் பண்ணனும்னு நினைச்சேன். அதுக்குள்ள ஒரு பஞ்சாயத்து.”
ரிஷி சொல்ல… சாதனா அவன் சும்மா பொய் சொல்கிறான் என நினைத்தாள். அதற்குள் கார் இருந்த இடத்திற்கு வந்திருந்தனர். ரிஷி லக்கேஜை டிக்கியில் வைத்து விட்டு வந்தவன், முன்புறம் கதவை திறந்து ஒரு மலர் கொத்தை எடுத்து சாதனாவின் கையில் கொடுத்தவன், அவளை இடையோடு சேர்த்து அனைத்து கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு “வெல்கம் மை டியர்.” என்றான்.
ஒரு நொடியில் எல்லாம் நடந்து விட…. சாதனா இன்ப அதிர்ச்சியில் இருந்தவள், பின்பே இருக்கும் இடம் உணர்ந்து “இங்க வச்சா இதெல்லாம் பண்ணுவாங்க.” என்றாள். வெளியே அப்படிச் சொன்னாலும் உள்ளுக்குள் அவளுக்கு மிகவும் மகிழ்ச்சி தான்.
“நான் ஏர்போர்ட் உள்ளேயே கொடுத்திருப்பேன். நீ வெட்கப்படுவியோன்னு தான் இங்க வச்சுக் கொடுத்தேன். எப்படி நம்ம சர்ப்ரைஸ் சூப்பரா…” ரிஷி இல்லாத காலரை தூக்கி விட…
“டக்குன்னு முடிஞ்சிடுச்சா… ஒன்னும் பீல் பண்ண ,முடியலை…” சாதனா வேண்டுமென்றே அலட்சியமாகச் சொல்ல….
“எனக்கு ஒன்னும் இல்லப்பா… எனக்கு எவன் பார்த்தாலும் கவலை இல்லை.” என்ற ரிஷி சாதனாவை இழுத்து தனக்கு முன்பாக நிறுத்தியவன், “நான் கூப்பிட்டதும் வந்ததுக்கு ரொம்பத் தேங்க்ஸ்.” என்றவன், அவளை முத்தமிட குனிய… கன்னத்தில் தானே என்று சாதனா நினைக்க… ரிஷி அவளின் இதழில் அழுத்தமாக முத்தம் வைக்க… சாதனாவின் பெரிய கண்கள் இன்னும் பெரிதாக விரிந்து பின்பு சுகமாக மூடிக் கொண்டது.
[the_ad id=”6605″]
சில நொடிகள் சென்று விலகிய ரிஷி “இப்ப ஓகேவா…” என்றதற்குச் சாதனா புன்னகையுடன் தலையாட்டினாள். பிறகு இருவரும் காரில் ஏறிக்கொண்டனர்.
காரில் ஏறி சீட் பெல்ட் போட்டதும், “பறக்க விடுவோமா….” என ரிஷி சாதனாவிடம் கேட்க…. நல்லவேளை கேட்டான் என நினைத்தவள் “நோ… நான் வேடிக்கை பார்க்கணும். மெதுவா போங்க.” என்றாள்.
மிதமான வேகத்தில் கார் செல்ல… சாதனா வெளியே வேடிக்கை பார்த்தபடி வர… அவளை ஒரப்பார்வையில் ஆராய்ந்த ரிஷி
“குளிக்காம…. நல்லா மேக்கப் மட்டும் பண்ணி ஆச்சு…” எனக் கேலி செய்ய…. சாதனா அலட்சியமாகத் தோளை குலுக்கினாள்.
“சாதனா இதுக்கு முன்னாடி நீ லண்டன் வந்திருக்கியா…”
“ம்ம்.. வந்திருக்கேன். நான் ஆறாவது படிக்கும் போது… குடும்பத்தோட வந்திருக்கேன். இங்க மட்டும் இல்லை முழு ஐரோப்பாவும் சுத்தியாச்சு. அம்மா இறந்ததிற்குப் பிறகு எங்கயும் போனது இல்லை.”
“ஓ… இவ்வளவு வசதிய வச்சிக்கிட்டு ஏன் கவர்மென்ட் காலேஜ்ல படிச்ச…. நீ நினைச்சிருந்தா பிரைவேட் காலேஜ்ல படிச்சிருக்கலாமே….”
“நான் தான் சொன்னேனே ரிஷி. சத்யா எந்தக் காலேஜ் சேர்ந்திருப்பானோ… அதுல தான் நானும் சேர்ந்திருப்பேன். அவன் மெடிக்கல் அப்ளை பண்ணான். நானும் பண்ணேன். ரெண்டு பேருக்கும் இங்கேயே சீட் கிடைச்சது. நானும் ஹாஸ்டல் போகவேண்டம்னு இங்கேயே சேர்ந்துட்டேன்.”
“ஓகே… சத்யாவை நம்ம வீட்டுக்கு ஒரு நாள் கூடிட்டு வா.”
“ம்ம்… கண்டிப்பா…”
“அப்புறம் பிளைட்ல வந்தது ஒன்னும் கஷ்ட்டமா இல்லையே….”
“நல்லவேளை நைட் ப்ளைட். அதனால முக்கால்வாசி நேரம் தூக்கத்தில போய்டுச்சு. இல்லைனா ரொம்பப் போர் அடிச்சிருக்கும்.”
“எனக்குத் தெரியும். அதனால தான் உனக்குக் காலையில ப்ளைட்ல டிக்கெட் இருந்தும், நான் தான் நைட் போட சொன்னேன்.”
ஒரு மணி நேர பிரயாணத்திற்குப் பின் இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். அந்தத் தெருவில் எல்லா வீடுகளும் வரிசையாக ஒரே மாதிரி இருந்தது.
பக்கவாட்டில் இருந்து கார் பார்க்கிங்கில் ரிஷி வண்டியை விட்டுவிட்டு வர… இருவரும் சேர்ந்து உள்ளே சென்றனர்.
கீழே பெரிய வரவேற்பு அறையும், அதோடு இணைந்து உணவு அருந்தும் அறையும் இருக்க… அதிலேயே ஒரு பக்கம் மது அருந்த பாரும் இருந்தது. அதற்கு அடுத்து சமையல் அறையும்,
அதற்குள்ளாகவே ஸ்டோர் ரூமும் இருந்தது.
டைனிங் ஹாலில் இருந்த பிரெஞ்சு டோரை திறந்து கொண்டு வெளியே வந்தால்… பக்கவாட்டில் சிறிய தோட்டமும் அதில் ஒரு சின்ன நீச்சல் குளமும் இருந்தது. அங்கேயே உட்கார்ந்து கொள்ள வசதியாக இரண்டு சாய்வு நாற்காலிகளும் போடப்பட்டு இருந்தது.
ரிஷி சாதனாவின் பெட்டியை எடுத்துக்கொண்டு படி ஏற… சாதனா அவள் கைப்பையோடு அவன் பின்னே சென்றாள். மாடியில் இரண்டு பெரிய படுக்கை அறைகள் மட்டுமே இருந்தது. அதில் பெரிதாக இருந்த அறையைத் தான் ரிஷி உபயோகப்படுத்தினான்.
சாதனாவிற்கு முதலில் குளிக்க வேண்டும். ஆனால் பசி அதிகமாக இருக்க…. எதாவது குடித்து விட்டு வருவோம் என நினைத்து சமையல் அறைக்குச் சென்றாள்.
குளிர்சாதன பெட்டியில் பால் இருந்தது. ஆனால் அங்கிருந்த அடுப்பை தான் பற்ற வைக்கத் தெரியவில்லை…. உண்மையில் அவளுக்குக் காபி கூடப் போட தெரியாது. அவள் வீட்டில் சமையலுக்கு ஆட்கள் இருப்பதால்… அவள் சமையல் அறைக்குச் செல்ல வேண்டிய நிலை இதுவரை வந்தது இல்லை. உணவு மேஜைக்குச் சென்று இருப்பதைப் போட்டு சாப்பிட்டு விட்டு வந்துவிடுவாள்.
இப்போது என்ன செய்வது என அவள் யோசிக்கும் போதே… ரிஷி அங்கே வந்துவிட்டான். பாத்ரூம் சென்றுவிட்டு வருவதற்குள் சாதனாவை காணவில்லை…. அவளைத் தேடிக்கொண்டு வந்திருந்தான்.
“என்ன மேடம் இங்க நிக்குறீங்க?”
“இல்லை பால் காய்ச்சனும்… எப்படின்னு யோசிச்சிட்டு இருக்கேன்.”
“நீ இப்படியே நின்னு பார்த்தா பால் தானா காய்ந்துடுமா…. தள்ளு…” என்றவன், அவளை விலக்கி விட்டு பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்தான்.
ரிஷி பாலை சூடு செய்து விட்டு “காபி போடட்டுமா…” என்றதற்கு, “இல்லை நான் பாலே குடிக்கிறேன்.” எனச் சாதனா சொல்ல… ரிஷி பாலில் சக்கரையைப் போட்டு ஆற்றி அவளிடம் கொடுக்க… அவள் குடித்த வேகத்தைப் பார்த்தவனுக்கு, அவள் நல்ல பசியில் இருக்கிறாள் எனப் புரிந்தது.
“நான் போய்க் குளிச்சிட்டு வந்திடுறேன்.” எனச் சாதனா குளிக்கச் செல்ல…. சமையல் செய்பவர், பதினோரு மணிக்கு தான் வருவார் என்பதால்… ரிஷியே காலை உணவை செய்ய ஆரம்பித்தான்.
விமானத்தில் அவள் எதுவும் சாப்பிட்டதாகத் தெரியவில்லை. வரும் வழியிலேயே அவளை எதாவது சாப்பிட வைத்து அழைத்து வந்திருக்க வேண்டும் என இப்போது தோன்றியது.
[the_ad id=”6605″]
அவன் இங்கு வந்ததில் இருந்து காலை உணவை சாப்பிடுவதே இல்லை…. இரவு படுக்கவே வெகுநேரம் ஆகும். அதனால் காலை தாமதமாக எழுந்து காபி குடிக்கும் போதே தாமஸ் வந்துவிடுவார். அவர் மதியத்துக்கும் இரவுக்கும் சேர்த்தே சமைத்து வைத்து விடுவார்.
ரிஷி மதியம் சாப்பிட்டு விட்டு வெளியே கிளம்புபவன், இரவு சில நேரம் வீட்டில் வந்து சாப்பிடுவான். இல்லையென்றால் வெளியேவே சாப்பிட்டு வந்துவிடுவான்.
அப்படி வெளியே சாப்பிடும் நேரங்களில் இரவு வீட்டிற்கு வந்ததும் உணவை எடுத்து மறக்காமல் குளிர்சாதன பெட்டியில் வைத்து விட்டால். மறுநாள் வரும் தாமஸ் அதைத் தேவைப்படுவோருக்கு எடுத்து சென்று கொடுத்து விடுவார். அதனால் உணவு வீணாகுமோ என்ற கவலை இல்லை.
இனி சாதனாவும் வந்திருப்பதால்… அவரை காலை சீக்கிரமே வர முடியுமா எனக் கேட்க வேண்டும் என நினைத்தவன், வேகமாகப் பாஸ்தா செய்து முடித்தான். அதற்குள் சாதனாவும் தலைக்குக் குளித்து விட்டு வந்துவிட்டாள்.
“சாதனா நீ சாப்பிடு. நான் நைட் சுத்தமா தூங்கவே இல்லை… நைட் வீட்டுக்கு வரவே ரொம்ப நேரம் ஆகிடுச்சு. அப்புறம் கொஞ்ச நேரத்திலேயே உன்னைக் கூப்பிட கிளம்பிட்டேன்.”
“லேசா தலை வேற வலிக்குது. நான் போய்க் கொஞ்ச நேரம் படுத்துக்கிறேன். நீயும் சாப்டுட்டு மேல வந்து ரெஸ்ட் எடு. தாமஸ் கிட்ட சாவி இருக்கு, அவரே கதவை திறந்து வந்துப்பாரு. நாம மதியம் சாப்பிட்டதும் வெளிய போகலாம்.” என்றான்.
“நீங்க போங்க ரிஷி…. நான் ப்ளைட்ல உட்கார்ந்தே வந்தேன். அதனால சாப்பிட்டதும், கொஞ்ச நேரம் நடந்திட்டு வரேன்.” என்று சாதனா சொல்ல… கவலை அகன்றவனாக ரிஷி மேலே அறைக்குச் சென்றான்.
சாதனா தட்டில் உணவை எடுத்துக்கொண்டு சென்று தோட்டத்துப் பெஞ்சில் அமர்ந்து பொறுமையாகச் சாப்பிட்டவள், சாப்பிட்டு முடித்ததும், சிறிது நேரம் அங்கேயே உலாவினாள்.
என்னதான் தைரியமாக விமானத்தில் கிளம்பி விட்டாலும், விமானம் மேல் ஏறும் போதும் சரி… கீழே இறங்கும் போதும் சரி… குழந்தைக்கு எதுவும் ஆகிவிடுமோ என நெஞ்சம் கொஞ்சம் தடத்தடக்கவே செய்தது.
இப்போது லேசாகக் கீழ் முதுகு வேறு வலித்தது. கொஞ்ச நேரம் படுத்து எழுந்தால் சரி ஆகிவிடும். ரிஷி உறங்க சென்றது கூட நல்லதிற்கே என நினைத்தாள்.
வெயிலில் உலாவியதில் கூந்தலும் காய்ந்து விட…. பக்கவாட்டு கதவை மூடிவிட்டு அவளும் மாடிக்கு சென்று ரிஷியின் அருகே இடைவெளி விட்டு படுத்துக்கொண்டாள்.
அவள் எவ்வளவு நேரம் தூங்கினாலோ தெரியாது. ஆனால் அவளுக்குத் திரும்ப விழிப்பு வந்த போது… ரிஷி அவளைப் பின்பக்கமிருந்து இறுக அணைத்தபடி உறங்கி இருந்தான். திருமணமாகி எத்தனையோ இரவுகள் ஒரே படுக்கையில் படுத்திருந்தாலும், இப்படி அவன் அவளை அணைத்துக்கொண்டதே இல்லை.
[the_ad id=”6605″]
ரிஷியின் கை சாதனாவின் வயிற்றில் இருக்க…. அவன் அவளோடு சேர்ந்து அவர்கள் குழந்தையையும் அனைத்துக்கொண்டதாகவே அவளுக்குத் தோன்றியது.
அந்தத் தருணம் மனதிற்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருக்க… தன் குழந்தை தந்தையின் சபரிசத்தை உணர வேண்டும் என்று நினைத்தவள், இன்னும் அழுத்தமாக ரிஷியின் கையை அவள் வயிற்றில் வைத்து அழுத்த…. அந்த அழுத்தத்தில் தூக்கம் களைந்து எழுந்த ரிஷிக்கு, மனைவியை அவ்வளவு நெருக்கமாகப் பார்க்கவும் வேறு எண்ணங்கள் கிளற…. அவன் அவளை ஆசையாக முத்தமிட்டான். பிறகு இருவரும் கூடலில் திளைத்தனர்.
ரிஷி மீண்டும் உறங்கி விட…சாதனா உறங்காமல் விழித்திருந்தாள். ஏனோ மனம் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. ரிஷி காலையில் அவளை விமான நிலையத்திற்கு அழைக்க வந்ததில் இருந்து ஒவ்வொன்றாக நினைத்து பார்த்தாள்.
அவன் அங்கே வைத்து அவளை முத்தமிட்டது, வீட்டிற்கு வந்ததும் அவளுக்காகச் சமைத்துக் கொடுத்தது. இப்போது அவளுடன் முழு மனதுடன் கூடி மகிழ்ந்தது என ஒவ்வொன்றாக நினைக்கும் போது…. இப்படியே எப்போதும் இருக்க வேண்டும் என்ற ஆசை நெஞ்சில் எழுந்தது.
வயிற்றில் இருக்கும் குழந்தையோடு மானசீகமாகப் பேச ஆரம்பித்தாள். செல்ல குட்டி அப்பாவே இப்பதான்டா என்கிட்டே இவ்வளவு க்ளோஸா இருக்காங்க. ஒரு பத்தே பத்து நாள் அப்பாவை எனக்கே எனக்கு மட்டும் தரியா… ப்ளீஸ்… அப்புறம் உனக்குத் தான் முழுசும் எனப் பேரம் பேசியவள், குழந்தையைப் பற்றி இப்போது ரிஷியிடம் சொல்லபோவது இல்லை என முடிவு எடுத்தாள்.