ஜுரம் அதிகமாகி உறக்கத்திலிருந்து கலைந்து இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தான் கந்தன். அவனை பார்த்ததும் அருகில் வந்து அவன் நெற்றியில் கை வைத்து சூடு அதிகமானதை தெரிந்துகொண்டாள் சாதனா.
அதற்குப் பிறகும் விக்ரமுக்காக காத்து கொண்டு இருக்க முடியாமல் அவளே மருந்து பாட்டிலை எடுத்து அவனுக்கு கொடுக்க முடிவு செய்தாள். அவனை கைத்தாங்கலாக பற்றி நிமிர்த்தி மருந்தினை அவன் வாயில் ஒரு ஸ்பூன் ஊட்டி விட்டு தண்ணீர் கொடுத்தாள். அவன் அதை முழுங்கிவிட்டு மீண்டும் சரிந்து படுத்து உறங்கினான்.
அவளும் படுத்து உறங்கினாள். மருந்து எடுத்துக் கொண்டதால் சற்று தெளிந்தான் கந்தன். வயிற்றில் பசி கிள்ளியது. பசியினால் தூக்கத்திலிருந்து எழுந்தான். வயிற்றை தடவிக் கொண்டான்.
‘மதியம் ஒழுங்கா சாப்பிடல. நைட்டும் சாப்பிடல. பசிக்குது. இங்க எது எங்க இருக்குன்னு தெரியல. யார் கிட்ட கேட்கிறது?” என்று நினைத்தபடி பக்கத்தில் பார்த்தான்.
சாதனா ஒரு குழந்தை போல உறங்கிக்கொண்டிருந்தாள். இவ்வளவு பக்கத்தில் நெடுநாட்களுக்கு பிறகு அவன் இப்போது தான் பார்கிறான். அவளை தன்னை மறந்து நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தான். பசி கூட அவனுக்கு மறந்து போனது. அவள் முகத்தில் விழுந்த கற்றை கூந்தலை ஒதுக்குவதற்கு கையை நீட்டினான். அதேநேரம் அவள் திரும்பி படுக்க அவன் கை அவள் நெற்றியில் லேசாக இடித்தது.
அவள் மீது இவன் கை பட்டதும் தன் கையை இழுத்துக் கொண்டு மீண்டும் படுத்து கண்ணை மூடிக் கொண்டான்.
சுகந்தன்கண்ணை மூடிக்கொண்டாலும் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.
தன் மீது ஏதோ பட்டதை உணர்ந்து சாதனா திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள்.
‘நம்ம மேல ஏதோ பட்ட மாதிரி இருந்தது. என்னவாயிருக்கும்?” என்று யோசித்தபடி பக்கத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த இல்லை இல்லை உறங்கிக் கொண்டு இருப்பதை போல நடித்துக் கொண்டிருந்த கந்தனை பார்த்தாள்.
‘இவன் நம்ம மேல கை வைச்சி இருப்பானா?” என்று ஒரு நிமிடம் அவனை உற்றுப்பார்த்தாள்.
ஆனால் இவளைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்த அவன் சற்றும் சலனமில்லாமல் படுத்தது படுத்தபடி இருந்தான்.
‘தூங்கிட்டு தான் இருக்கான் போல இருக்கு. சரி ஏதாவது கனவா இருக்கும்.’ என்று நினைத்தவள் எழுந்து குளியலறை சென்றாள்.
அவள் படுக்கையிலிருந்து எழுந்து செல்வதை உணர்ந்த சுகந்தன்லேசாக கண் திறந்து பார்த்தான். அவள் குளியலறை செல்வதை பார்த்துவிட்டு எழுந்து அமர்ந்தான். அமர்ந்ததும் கை தன்னிச்சையாக அவன் வயிற்றை தடவியது. கண்கள் அவள் வருகிறாளா என்று பார்த்துக்கொண்டு இருந்தது.
அவள் கதவை திறக்கவும் பார்வையை ஜன்னல் பக்கம் திருப்பினான். குளியல் அறையில் இருந்து வெளியே வந்த அவள் கந்தனை பார்த்தாள். அவன் கை வயிற்றில் இருப்பதை கவனித்தாள்.
‘பசிக்குது போல இருக்கு. கேட்கலாமா?’ என்று அவனை பார்த்தாள்.
அவனது பார்வை ஜன்னலில் இருக்கவும் அவளும் ஜன்னலை பார்த்தபடி ‘நான் போய் கஞ்சி காய்ச்சி எடுத்துட்டு வர்றேன்.’ என்று விட்டு சமையலறை வந்தாள்.
அவனுக்கு பிடித்த அரிசிக்கஞ்சி காய்ச்சி ஒரு கண்ணாடி கிண்ணத்தில் ஸ்பூன் போட்டு மாங்காய் ஊறுகாய் ஒரு தட்டில் வைத்து எடுத்து வந்தாள். அவனுக்கு பக்கத்தில் இருந்த மேஜை மீது வைத்து விட்டு திரும்பினாள்.
அப்பொழுது அவள் கையை பற்றினான் கந்தன்.
அவள் வேகமாக திரும்பி “கையை விடு” என்று அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள கையை உதறினாள்.
ஆனால் அவன் விடாமல் அவள் கை மணிக்கட்டை இந்த பக்கமும் அந்த பக்கமும் திரும்பிப் பார்த்தான்.
அங்கு ஒரு பழைய காயம் மிக லேசாக தெரிந்தது.
“இல்ல அன்னிக்கு மாதிரி இன்னிக்கும் கஞ்சி காய்ச்சும் போது கையில் காயம் பட்டு விட்டதான்னு பார்த்தேன். பரவாயில்லை ஒன்னும் ஆகல.” என்று அவள் கையை விடுவித்தான்.
‘ஆமாம்! என் மேல ரொம்ப அக்கறை இருக்கிற மாதிரியே கேட்கிறான். உன்னை பற்றி எனக்கு தெரியாது? போடா.” என்று நினைத்தபடி அவனை பார்த்தாள்.
அவள் கண்களில் அவள் மனதைப் படித்த அவன்
“ஆமாம்” என்றான் ஒற்றை வார்த்தையில்.
“என்ன ஆமாம்?” என்று கேட்டாள்.
நீ மனசுல கேட்டதற்கு “ஆமாம்.” என்றான்.
“நான் என்ன கேட்டேன்u உனக்கு தெரியுமா?”
“தெரியும்.” நின்றுவிட்டு கஞ்சியை எடுத்து ஸ்பூன் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான்.
ஒருவாய் சாப்பிட்டதும் கஞ்சியின் ருசியால் ஈர்க்கப்பட்டு 2,3 வாய் வேகமாக சாப்பிட தொண்டையில் அடைத்தது கஞ்சி.
சாதனா தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள். வாங்கி குடித்துவிட்டு பொறுமையாக சாப்பிட்டான்.
சுகந்தன்பழையபடி படுத்து கண் மூடிக் கொண்டான். சாதனா
“மெடிசன்.” என்று சொல்ல அவன் அதனை சாப்பிட்டான்.
சாதனா அவளிடத்தில் வந்து அவனுக்கு முதுகு காட்டி திரும்பி படுத்து உறங்கினாள்.
பகல் முழுவதும் தூங்கி கொண்டு இருந்தால் கந்தனுக்கு தூக்கம் வரவில்லை. நடந்த நிகழ்ச்சிகள் அவன் கண் முன் தோன்றியது.
சாதனா தாய் வீடு சென்றிருந்தாள். சுகந்தன் அவன் வீட்டில் தொலைக்காட்சியில் ஒரு நகைச்சுவை காட்சி பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். சுகன்யா அவன் பக்கத்தில் பெருத்த வயிறுடன் நைட்டியில் அமர்ந்து அந்த காட்சியை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள் தாமரை ஒரு தட்டில் வெங்காய பஜ்ஜி, சட்னி எடுத்து வந்து வைத்தார்.
“வெங்காய பஜ்ஜி எனக்கு ரொம்ப பிடிக்கும்.” என்று ஆர்வமாக அதனை எடுத்து வாயில் வைத்தாள் சுகன்யா.
“தெரியும். அதனால தான் செய்தேன்.” என்றார் தாமரை.
“அம்மா சாதனாவுக்கும் இந்த பஜ்ஜி ரொம்ப பிடிக்கும். அவள் இருக்கும்போது ஒரு தடவை செய்ங்க.” என்றான் அவன்.
“ஆமாண்டா உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் வேலை செய்யறதுக்கு தானே நான் இருக்கேன். மருமகள் வீட்டுக்கு வந்தா எனக்கு உதவியா இருக்கும்னு பாத்தா, நீ என்னை அவளுக்கு வேலை செய்ய சொல்ற.” என்று ஆரம்பித்தார் தாமரை.
“அம்மா, நான் அவளுக்காகவா உங்கள செய்ய சொன்னேன்? இவளுக்கு செய்யும்போது அவளுக்கும் கொஞ்சம் சேர்த்து செய்ய சொன்னேன். இது ஒரு தப்பா? சரி உங்களுக்கு தப்பா தெரிஞ்சா, என்னை மன்னிச்சிடுங்க. இதை வச்சி ஒரு பிரச்சனை வேண்டாம்.. தெரியாம சொல்லிட்டேன்” என்று கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொண்டான் கந்தன்.
“அம்மா, அண்ணன் கேட்டதில் என்ன தப்பு?” என்று அண்ணிக்காக பேசினாள் சுகன்யா.
“உன் அண்ணிக்கு நல்லா வக்காலத்து வாங்கற நான் என்ன வேனும்னா அவள் இல்லாத நேரம் பார்த்து செய்கிறேன். இன்னிக்கி எனக்கு நேரம் இருந்தது. அதனால செய்தேன். உங்க அண்ணி தான் எப்படா சனி, ஞாயிறு வரும் அம்மா வீட்டுக்கு போகலாம்னு காத்துகிட்டு இருக்கா. நான் என்ன பண்றது? வேணா அவளை ஒரு வாரம் இங்க இருக்க சொல்லு. எல்லோரும் சேர்ந்து சாப்பிடலாம்.” என்றார் தாமரை.
“அய்யோ ஆளை விடுங்க. இதை நான் அவகிட்ட சொன்னா, நானே எங்க அப்பா அம்மாவை வாரத்துக்கு ஒரு தடவை தான் பார்க்கிறேன். அதுவும் உங்களுக்கு பொறுக்கலையான்னு ஆரம்பிப்பாள்.” என்று சொல்லிவிட்டு அதற்கு மேல் அங்கே இருந்து பதில் வாங்கிக்கொள்ளாமல் இடத்தை காலி செய்தான் சுகந்தன்.
அப்போது அவன் கைபேசி ஒலித்தது.
சாதனா தான் பேசுகிறாள் என்று தெரிந்து கொண்டு எடுத்து
“ஹாய் சாது, எப்போ வீட்டுக்கு வர்ற?” என்று கேட்டான்.
“என்னடா நிஜமா தான் என்னை மிஸ் பண்றியா? இல்லை விட்டது தொல்லைன்னு நிம்மதியா இருக்கியா?” என்று விளையாட்டாக கேட்டாள்.
“என்னடி இப்படி கேட்டுட்ட? எப்போ நீ வருவன்னு வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறேன்.” என்று ராகமாக இழுத்து சொன்னான் அவன். சொன்ன விதத்தில் அவளுக்கு சிரிப்பும் பூரிப்பும் ஒன்று சேர்ந்து வந்தது.
“சரி அப்போ என்னை வந்து பிக்கப் பண்ணிட்டு போ.” என்றாள் அவள்.
‘இவள் வீட்டுக்கா?’ என்று மனதில் யோசித்தாலும்
வெளியில் “சரி. எத்தனை மணிக்கு வரணும்?” என்று கேட்டான்.
“எப்ப வேணாலும் வரலாம். இப்பவே கூட வா.” என்றாள்.
“சரி வரேன்.” என்று சொல்லி தொடர்பை துண்டித்து விட்டு வீட்டுக்குள் வந்து சுகன்யாவிடம்
“சுகன்யா நான் போய் சாதனாவை கூட்டிட்டு வந்துடறேன். அம்மா கேட்டா சொல்லு.” என்று சொல்லிவிட்டு பைக்கை கிளப்பிக் கொண்டு சென்றான் சுகந்தன்.