அத்தியாயம் பதினைந்து
சோளப்பயிர்கள் செழித்து நின்று ‘எங்களை அள்ளிக்கொள்’ என அரைக்கூவல் விட்டுக்கொண்டிருந்தன. சோளத்தை சாகுபடி செய்ய அள்ளி சொருகிய புடவையுடன் பெண்கள் களத்தில் நிற்க,
‘களத்துக்குள்ள காலை வச்சு ஏலங்கிடி லேலோ
கிழட்டுமாடும் மிதிக்குதையா ஏலங்கிடி லேலோ
நெல்லுவேற வைக்கோல் வேற ஏலங்கிடி லேலோ
வயித்துபசி மாட்டுக்கு வைக்கோல் தானே லேலோ’
என வாய்ப்பாட்டு தொடங்க, குதூகலமாய் வேலையில் இறங்கினர் பெண்கள்.
“அட, என்னக்கா நீங்க… என்னை பாட சொல்லுவீங்கன்னு பார்த்தா, நீங்களே பாட ஆரம்பிச்சுட்டீங்க?” கதிரருவாலை கையில் ஏந்தியபடி வம்பு செய்ய ஆரம்பித்தான் இன்பன்.
“ஹ்ம்கும்! நீ பாட்டு படிக்குற லட்சணம் எங்களுக்கு தெரியாது பாருங்குறேன்!! ‘இனிப்பு இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரை’ன்னு உன்னிய வச்சு பொழுதை போக்கிட்டு திரிஞ்சோமே!!” என ஒரு கிழவி நொடிக்க,
“வித்தாரக்கள்ளி விறவொடிக்க போனாளாம்! கத்தால கண்ணால குத்தாத என்ன’ன்னு பாட்டு கேட்டுச்சாம்!! எங்களுக்கும் பழமொழி வரும் பாத்துக்க!!” என வம்பு வளர்த்தான் இன்பன்.
“அடேய், வாய்க்கு வந்ததை சொல்லிட்டு பழமொழிங்குறான்…! பேச்சை குறைச்சுட்டு வேலையை பாருடா” என கிழவி ஒன்று எந்த மூலையில் இருந்தோ கத்த, “பாரேன் கிழவிய, முதலாளியவே வேலை பாருன்னு அதட்டுது!!” என்றான் பச்சைக்கிளி.
“க்கும் டா!” என வெட்டுக்கிளி ஒத்து ஊத,
இன்பனை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே, “பாட்டுல நம்ம அண்ணனை அடிச்சுக்க முடியுமா?” என்றிட,
“அ…தா…னே!!! அண்ணே எம்.ஏ. பிலாப்பி ஆச்சே!” என பச்சைக்கிளி நமட்டு சிரிப்பு சிரிக்க, “ஏய்…..!!! என்னடா செய்யுறதையும் செஞ்சுட்டு கிண்டல் பண்றீங்களா?” என இன்பன் முறைத்ததும் அவனது கைக்கு எட்டாத தூரத்தில் நின்றுக்கொண்டு, “கீ கீ கீ!!!” என பழிப்பு காட்டின கிளிகள்.
இன்பன் மனதில் இருந்த பாரத்தை எல்லாம் கோகிலாவிடம் இறங்கி வைத்து பல நாட்கள் கடந்திருந்தது. அந்த ஒரு நாளைக்கு பிறகு சோகத்தின் நிழல் கூட இன்றி வழமையான தன் சிரிப்பை முகத்தில் கொண்டு வளைய வந்துக்கொண்டிருந்த இன்பனை, ‘இனி எப்போதும் மகிழ்வாய் வைத்திருக்க வேண்டும்’ என கோகிலா எண்ணியபோது அவ்வழி சென்ற தேவதைகள் ‘ததாஸ்து’ என்றதோ என்னவோ…!!! அடுத்து வந்து நாட்கள் எல்லாம் இருவரின் நெருக்கம் கூடிக்கொண்டே சென்றது.
[the_ad id=”6605″]
பெரிய வீட்டின் பக்கம் கூட இருவரும் போகாமல், ஊரையே ஜோடியாய் வலம் வந்துக்கொண்டிருக்க, பொருத்து பொருத்து பார்த்த ஒண்டிவீரர், ஒரு நாள் சோளக்காட்டிற்கே சிவகாமியுடன் வந்துவிட்டார்.
வந்துவுடேனே, ‘மூத்த வாரிசு, எனக்கு தான் உரிமைன்னு வாய் கிழிய பேசுனவனுக்கு, வீட்டுப்பக்கம் வரக்கூட வழி தெரியலையோ? வயசான ரெண்டு அங்க நம்மளை எதிர்ப்பார்த்து காத்திருக்குமே? தூக்கி வளர்த்த அத்தக்காரி வாசலையே பார்த்துட்டு இருப்பாளேன்னு தோணுனா தானே? எல்லாம் வெறும் பேச்சு!!’ என சிவகாமி சலித்துக்கொள்ள, இருவரையும் தாஜா செய்து அனுப்பி வைப்பதற்குள் பாதி ஜீவன் போய்விட்டது கோகிலாவுக்கு.
பேச வேண்டியவனோ, சிரிப்பை தவிர வேறு ஒன்றும் வாய்வார்த்தையாய் உதிர்க்கவில்லை. இவர்களாவது வந்து சென்றுவிட்டனர். வெளியாட்கள் கண்ணில் படாமலே காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் தங்கத்திற்கு ஒவ்வொரு நாளும், வாசலை பார்த்து காத்திருப்பதே தொழுவாடாய் போய்விட்டது. வாய்விட்டு கேட்டும் கூட, இவரை பார்க்க இன்பன் வரவில்லை என்பது அவருக்கு பெரும் வருத்தம்!!
இன்பனின் வாழ்வில் மேலும் ஒளி சேர்க்கவே பிறந்திருந்தது அன்றைய பொழுது!! கோகிலாவுக்கு ஒரு வாரமாகவே சந்தேகமாய் இருக்க, முந்தைய இரவு உறங்கும்போதே, நாளை, தன் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள வேண்டும் என எண்ணிக்கொண்டாள்.
அதேபோல, இன்பன் நேரமே சாகுபடியில் இறங்கியதும், முன்னமே வாங்கிவைத்திருந்த பரிசோதனை அட்டையை எடுத்துக்கொண்டு அவள் குளியலறை செல்ல, அவளை துளியும் ஏமாற்றாது, அந்த கர்ப்ப பரிசோதனை அட்டை தன் உடலில் இரு கோடுகளை வரைந்து அவளுள் அவன் உயிர் உதித்திருப்பதை உறுதிப்படுத்த, சந்தோசத்தில் திக்குமுக்காடி போனாள் கோகிலா.
வேகமாய் வீட்டின் வெளியே வந்தவள், “மாமாஆஆஆ…!!!” என அவனைப் பார்த்து கத்த, ஒட்டு மொத்த ஆட்களுமே சட்டென திரும்பினர் இவளை நோக்கி.
இருந்த மகிழ்வில், இன்பனை தவிர யாருமே அவள் கண்களில் படவில்லையே!!!
‘கொஞ்சம் வீட்டுக்கு வாங்க!! உடனே!!!” என இன்னும் சத்தமாய் கத்தியவள், வீட்டிற்குள் நாணம் கொண்டு ஓடிவிட, ‘என்னாச்சு இவளுக்கு?’ என ஆச்சர்யமானான் இன்பன்.
தங்களுக்குள்ளே பேசி சிரித்துக்கொண்டிருந்த பெருசுகளும், இன்பன் வீட்டை நோக்கி செல்வதை பார்த்து, “பொண்டாட்டி பகல்ல கூப்பிட்டதுக்கே இந்த ஓட்டம் ஓடுறான் பாரு!!” என சென்சார் போட்டு பேசி தங்கள் கதைகளையும் அங்கே தொடர்க்கதையாய் பேச ஆரம்பித்தது, பாவம்! அவன் செவிகளை தொடவில்லை.
வீட்டிற்க்குள் சென்றவன், “என்னமா ஆச்சு? எதுக்கு இப்படி அவசரமா கூப்பிட்ட?” என பரபரப்பாக, “அதுவா…..? சும்மா, உங்ககிட்ட பேசணும் போல இருந்துச்சு அதான்!!” என சுவரில் சாய்ந்து நின்று மந்தகாசமாய் சிரித்தவளை அப்படியே விட்டு செல்ல முடியுமா அவனால்!!!
‘என்னவோ? ஏதோ?’ என நினைத்திருந்தவனின் மனநிலை மாற, “நான் பேசனும்ன்னு வந்தா மட்டும் போ போன்னு விரட்டுவ?” தலையில் சுற்றியிருந்த துண்டை அவிழ்த்தபடி அவளை நெருங்கினான் இன்பன்.
வியர்வையில் குளித்திருந்த அவன் உடல் அவளை நெருங்கி உரசையில் அவன் மீதிருந்து எழுந்த வாசனையில் கொஞ்சம் கூட முகம் சுளிக்காது நிற்கும் மனைவியை பார்க்க, இன்பனுக்கு இன்னமும் ஆசை கூடியது அவள் மேல்.
அதற்குமேல் தாங்காது என்பது போல, அவள் இதழ்களை நெருங்கியவன் அழுத்தமாய் தன் இதழ்களை அதில் பூட்ட, ஒப்புக்கு கூட மறுக்காது கண்மூடி நின்ற கோகிலாவின் ஒத்துழைப்பில் மேலும் கிறங்கிப்போனான் இன்பன். மென்முத்தம் வன்முத்தமாய் உருவெடுக்க, அவன் கரங்கள் அவள் மேனியில் ஊர்வலம் போக, அவளை சுவரோடு புதைப்பவன் போல காற்றுக்கும் வழி விடாது அவளோடு ஒட்டியிருந்தான் இன்பன்.
நிமிடங்கள் கரைய, அவனோடு கரைந்துக்கொண்டிருந்தாள் கோகிலா. ‘இது மட்டும் போதாது’ என நினைத்தானோ! அவளை கைகளில் அள்ளிக்கொள்ள முனைந்தவனின் செயலில் கொஞ்சம் தெளிந்தவள், கையில் வைத்திருந்த பரிசோதனை அட்டையை தன்னோடு ஒட்டியிருந்த அவன் இதழ்களுக்கு இடையே நுழைத்து, அவனை தன்னில் இருந்து பிரிக்க, கொஞ்சமே கொஞ்சம் கோபமாய் விலகியவன், கண் முன்னே அவள் நீட்டிய அட்டையை தூக்கி வீசப்போனான்.
“ஏய் மாமா!!!” அவனிடம் இருந்து மீண்டும் பறித்துகொண்டாள்.
“என்னடி?” என்றவன் இப்போது அவள் கழுத்து வளைவில் தன் ஆதிக்கத்தை ஆரம்பிக்க, கடினப்பட்டு அவனை தள்ளி நிறுத்தியவள் மீண்டும் அதை அவன்முன் காட்டினாள்.
மெல்லிய எரிச்சலில் அசிரத்தையாய் அதை கண்டவன், “இன்னாதிது?” என்றான் எரிச்சலை மறைக்காது.
அவன் தலையில் ‘நங்’கென கொட்டிய கோகிலா, அட்டையை அவன் கையில் திணிக்க, அதை முன்னும் பின்னும் இருமுறை திருப்பிப்பார்த்தவனுக்கு, படங்களில் பார்த்த காட்சிகள் எல்லாம் மூளைக்குள் அணிவகுத்து வந்து நின்று உதவி செய்ய, புரிந்த விஷத்தில் வாயடைத்து போனான் இன்பன்.
‘எனக்கான உறவு’ என சொல்லிக்கொள்ள கோகிலா கிடைத்ததற்கே அத்தனை உணர்ச்சிவசப்பட்டவன், அவனுடைய உயிர் உதித்ததில் பேச்சிழக்கும் அளவுக்கு ஆனந்தத்தில் மூழ்கியிருந்தான்.
அந்த அட்டையையே பார்த்தபடி அமைதியாய் அமர்ந்துவிட்டவனை விசித்திரமாய் பார்த்தாள் கோகிலா. அவன் அருகே சென்று அமர்ந்தவள், “ஹும்! பொண்டாட்டி கன்சீவானா, அவளை தூக்கி சுத்துறது, ஊருக்கே விருந்து வைக்கிறது, நிமிஷத்துல அவ கேக்குறதெல்லாம் வாங்கி தரது இதெல்லாம் படத்துல மட்டும் தான் போல!!!” என்று சொல்லி முடிப்பதற்குள் அவளை இறுக அணைத்திருந்தான் இன்பன்.
அவன் அணைப்பின் இறுக்கத்தில் அவன் ஆனந்தத்தை உணர்ந்தவள் அதில் கட்டுண்டு கிடக்க, “நிஜமாவா கோக்கி?” என்றான் கிசுகிசுப்பாய்.
“டேய் மாமா, பண்றதெல்லாம் பண்ணிட்டு நிஜமான்னு கேக்குறியா என்கிட்ட?”
[the_ad id=”6605″]
“ஹாஹா!! மூக்கி… மூக்கி….” செல்லமாய் அவள் மூக்கை பிடித்து அவன் திருக, பொய் கோவத்துடன் அவன் கரத்தை தட்டிவிட்டாள் கோகிலா.
அவள் தோளில் கைபோட்டு தன்னோடு இழுத்தவன், “என்னால இதெல்லாம் தாங்கிக்க முடிலடி! எந்த நல்லதும் சந்தோசமும் எனக்குன்னு நடந்ததே இல்லை! நீ வந்த பின்னாடி இப்படி வரிசையா சந்தோசமா குடுத்துட்டு இருந்தன்னா நானும் என்னதான் செய்வேன், சொல்லு!!?” என்றவன், பனித்த கண்களோடு புகைப்படமாய் மாறியிருந்த தன் அன்னையிடம் சென்று நின்றான்.
அவனை பின்னோடு அணைத்துக்கொண்டவள், “நீ சந்தோசமா இருக்குறதை தானே அத்தை எதிர்ப்பார்ப்பாங்க! இனி நமக்கு எப்பவும் நல்லது மட்டும் தான் நடக்கும் மாமா!!!” என்றாள் ஆத்மாத்தமாய்! அடுத்து வரப்போகும் ஆபத்தை அறியாது!!!
“சரி வா நம்ம டாக்டரை பார்த்து கன்பார்ம் பண்ணிடலாம்” என இன்பன் பரபரக்க, “அங்க போனாலும் இப்டிதான் டெஸ்ட் பண்ணுவாங்க மாமா” என்றாள் கோகிலா.
“பரவால நீ வா!!” என அவன் சொல்ல, “ஈவனிங் போலாம்! நீங்க இப்போ நம்ம வீட்டுக்கு போய் தாத்தா, அம்மாயி, அத்தே, மாமா, அந்த காட்ஜில்லா அப்புறம் அவன் பொண்டாட்டி எல்லார்க்கிட்டயும் இதை சொல்லுங்க!! முதல்ல அவங்களுக்கு சொல்லிட்டு அப்புறம் தான் வெளில யாருக்கும் சொல்லணும் சரியா?” என்றாள் ‘சொன்னதை செய்’ என்ற தொனியில்.
“மகாராணி சொன்னால் மறுப்பேது!!?” என போலியாய் பணிந்தவன், அவள் நெற்றியில் அழுந்த இதழ்பதித்து, “தேங்க்ஸ்” என்று சொல்லி வெளியே ஓடினான்.
மில்லுக்கு கிளம்பிக்கொண்டிருந்த காண்டீபனுக்கு சில நாட்களாகவே நிம்மதியற்ற நிலைதான்! தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்றுக்கூட கவனிக்க இயலாத அளவுக்கு எந்நேரமும் யோசனையிலேயே உழன்றுக்கொண்டிருந்தான். அன்று தந்தைக்கு பின்னே அவர் காரை தொடர்ந்து சென்றவன், அதன் பிறகு அவரே போகாவிடினும், அடிக்கடி பள்ளிப்பாளையம் செல்வதை வாடிக்கையாக்கி விட்டான். ஏனோ?!
அவன் கிளம்புவதை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த சுசீலா, எதேச்சையாய் அவன் கண்ணில் சிக்க, “ஹே காலேஜ் போலையா நீ?” என்றான் அவளிடம்.
அவன் கேட்டதற்கு பதில் சொல்லாது, “இன்னைக்கு தான் நான் உங்க கண்ணுல படுறேனா?” என முகம் திருப்பியவளை பார்த்தபோது, சலிப்பாய் போனது அவனுக்கு. புது மனைவியை கூட கவனிக்க முடியாது உளைச்சலில் இருக்கும் தன் நிலையை வெறுத்தான்.
[the_ad id=”6605″]
காண்டீபன் அவள் அருகே அமர்ந்து அவள் கரத்தை எடுத்து தன்னோடு பிடித்துக்கொண்டதும், “ஒரு பார்வை பார்த்தவரு மறுப்பார்வை பார்க்க இத்தனை நாள் ஆச்சு! இப்போ கையை பிடிச்சுட்டு அடுத்து எப்போ என்னை கண்டுக்குறதா உத்தேசம்?” என கேட்க, ஒரு சிறுபெண் வாய்விட்டு கேட்கும் அளவுக்கு தான் நடந்துக்கொண்டதை எண்ணி உள்ளுக்குள் வெட்கிப்போனான் அவன்.
“அது… கொஞ்சம் வேலை டா மில்லுல… அதான்…” என அவன் இழுக்கும்போதே, “இதான் சொல்லுவீங்கன்னு எனக்கு தெரியும்!” என்றாள் சுசீலா.
“உங்களுக்கு என்னாச்சு? சரியா சாப்பிடுறது இல்ல, பேச்சு சுத்தமா கிடையாது! ஏற்கனவே நீங்க ரோபோ தான், இருந்தாலும் இப்போ ரொம்ப விறைப்பா சுத்துறீங்க!” என சுசீ கேட்க,
அவனுக்கே தெளிவுற தெரியாத ஒரு விஷயத்தை என்னவென்று அவளிடம் சொல்லுவான் அவனும்!