“ஒன்னும் இல்ல சுசீ, கொஞ்சம் வேலை அவ்ளோதான்” என்றவனை அதற்குமேல் நோன்டாது, “சரி நான் சாப்பாடு எடுத்து வைக்கவா?” என்று எழுந்தாள் சுசீலா.
எழுந்தவளின் கரம் பிடித்து நிறுத்தியவன், “ஏய் காலேஜ் போலையா நீ?” என்றான் மீண்டும்.
“என் பிரண்ட்ஸ் ரெண்டு பேரு வரலை, அதான் நானும் போல” என்றாள்.
“பிரண்ட்ஸ் வரலன்னா போக மாட்டியா?”
“அது அப்படிதான் அத்தான்! எங்க கூட்டாளிங்க ஒருத்தர் லீவு போட்டாலும் நாங்க யாரும் காலேஜ் போக மாட்டோம்!!” என அவள் சொல்ல, அவளை ‘இது என்ன பழக்கம்?’ என அதட்ட வந்தவனின் பேச்சு அப்படியே நின்றது.
அவன் செவிகள் இன்னும் ஆழமாய் கவனிக்க, அந்த பைக்கின் சத்தம் அவளுக்குள் சிறு சிலிர்ப்பை உண்டாக்கியது என்றால் மிகையல்ல!
சட்டென எழுந்து அறையை விட்டு சென்றவன், மாடி வளைவில் நின்று எட்டிப்பார்க்க, பின்னோடு ஓடினாள் சுசீலா.
“என்ன அத்தான்…?”
“இன்பன் வந்துருக்கான்!!” என்றவனை விநோதமாய் பார்த்தாள் சுசீலா.
“அவங்க ஏன் வரப்போறாங்க? தாத்தா போய் கூப்பிட்டே வரலையாமே? அதுவும் அவர் வரது மாடில நிக்குற உங்களுக்கு எப்டி தெரிஞ்சுது?” என கேள்விகளை அடுக்க,
“அவன் பைக் சத்தம்!!” என்றவனை கண்டு வாயை மூடி சிரித்தாள் சுசீலா.
“பைக் சத்தம் வச்சு அது இன்பன் மாமான்னு எப்டி சொல்ல முடியும்!!” என அவள் சொல்லி முடிக்கையில் கீழே கூடத்தில், “அம்மாயி…!! அத்தே!!!” என ஏலம் போட்டபடி சோபாவில் வந்து அமர்ந்தான் இன்பன்.
காண்டீபனை விழிவிரிய பார்த்தாள் சுசீலா.
இன்பனை கண்டவனுக்கு அத்தனை நிறைவு. காதலில் மட்டும் தான் பிரிதுயரும், சந்திக்கையில் கடைவிழியோற நீறேற்றமும் இருக்குமா?
அங்கே இன்பனை பார்த்துக்கொண்டே நின்ற காண்டீபனின் கண்கள் மெலிதாய் கலங்கியது.
[the_ad id=”6605″]
‘எத்தன முறை தெரிஞ்சே உன் மனசை உடைச்சுருப்பேன் நான்? என்மேல நீ கோவப்பட்டதே இல்லையேடா!’ என்றான் மானசீகமாய்.
சுசீ அவன் தோள் தொட்டு, “மனசுல இத்தனை பாசம் இருக்குல அத்தான்? அதை வெளிக்காட்டுனா தான் என்ன?” என்றிட, தன்னை சமாளித்துக்கொண்டவன், “முதல்ல வீட்டுக்கு வந்தனை ‘வா’ன்னு கேளு, போ” என்றான் அவளிடம்.
‘நானா?’ என தயங்கியவளை ‘போ’ என அவன் அழுத்தமாய் சொல்ல, வேறு வழியின்றி கீழே இறங்கினாள் சுசீலா.
கடைசியாய் அவனிடம் அடி வாங்கியபோது இன்பனை பார்த்தது. அதன் பின் இன்று தான் நேர்க்கொண்டு பார்க்க போகிறாள். அவளுக்கோ பெருந்தயக்கம்!
கூடத்தில் இருந்தவன், “அட, வீட்டுல ஒருத்தருமா இல்ல?” என மீண்டும் சத்தமிட, பின்கட்டில் இருந்த தங்கத்துக்கு அப்போதுதான் அவன் சத்தம் கேட்டது போலும். நாலெட்டில் விரைந்து வந்தவர், “இன்பா…!! வந்துட்டியாடா?” என்றார் ஆவலாய்.
அவன் கன்னம் தொட்டு வருடியவர், “இங்க இருக்க வீட்டுக்கு வரதுக்கு உனக்கு இத்தனை நாள் தேவைப்பட்டுச்சா?” என்றார் மனம் தாங்காது.
“விடுங்க, அதான் வந்துட்டேன்ல இப்ப! வந்தவனுக்கு ஒன்னும் குடுக்காம சும்மா பேசிக்கிட்டு…!!” என்றதும் தான் தாமதம், நெற்றியில் அடித்துக்கொண்டவர், “நீ கேக்குற வரைக்கும் ஒன்னும் குடுக்காம இருக்கேன் பாரு” என சொல்லிக்கொண்டே அடுக்களைக்குள் ஓடினார்.
சென்றவரிடம், “செய்யுறதை இனிப்பா செய்யுங்க அத்தே” என்றான் இன்பன்.
தயங்கி தயங்கி மாடிப்படி ஓரம் நின்ற சுசீலா அவன் கண்ணில் சிக்க, “ஹே சுசீலா! எப்படி இருக்கமா?” என்றான் இன்பன், வெகு இயல்பாய்!
“ஹான்..? நல்லா இருக்கேன்!!” என்றவள், “நீ..நீங்க…?” என கேட்க, “நானும் கோக்கியும் நல்லா இருக்கோம்” என சேர்த்தே சொன்னான் இன்பன்.
“எங்க உன் புருஷன், இருக்கானா இல்ல கிளம்பிட்டானா?” என கேட்க, “இன்னும் யாருமே கிளம்பல!” என்றாள் சுசீலா.
“அப்புறம் என்ன, நான் வந்து இவ்வளோ நேரமாச்சு, தாத்தா அம்மாயி யாரையும் காணோம்!?”
“தெரியலையே”
இன்பன், “சரி, நான் வந்துருக்கேன்னு சொல்லு!!”
“அது…அது மாமா! யாரும் என்கிட்டே பேச மாட்டாங்க” என்றாள் சுசீலா.
‘பேசமாட்டாங்களா?’ என திகைத்தவனுக்கு, அது எதனால் என அதிகமாய் சிந்திக்க அவசியம் இருக்கவில்லை.
“அவங்க தானே பேச மாட்டாங்க, நீ போய் பேசு!! நான் வந்துருக்கேன்னு மட்டும் சொல்லு!!” என்ற இன்பனின் பேச்சை அவளால் ஒதுக்க முடியாது போக, தயக்கம் நீங்காது, ஒண்டிவீரரின் அறைப்பக்கம் சென்றாள்.
மேலிருந்து இது அத்தனையும் பார்த்துக்கொண்டிருந்த காண்டீபன், ‘ச்ச! இத்தனை நாள் இது நமக்கு தோணாம போச்சு! யாரும் பேசலன்னு சுசீ சொன்னபோ ‘சரி விடு’ன்னு சொன்னேனே தவிர, ‘நீ போய் பேசு’ன்னு சொல்ல தோணல எனக்கு!’ என அவனை அவனே நிந்தித்துக்கொண்டு நிற்க, கீழே இருந்தவனின் சிரம் பட்டென நிமிர்ந்தது இவனைநோக்கி.
அவன் மேலே பார்ப்பான் என எதிர்ப்பாராத காண்டீபன், ஒருநொடி அதிர்ந்து பின் முகத்தை இயல்பாக்கிக்கொள்ள, கடந்து சென்ற அந்த ஓர் நொடி பொழுது இன்பனின் கண்களில் அச்சு பிசகாமல் சிக்கி சிரிப்பை உண்டு பண்ணியது.
“துரை ஒரு வழியா இந்த கிழவியை பாக்க வந்துட்டீரு போல!!” ஒரு நொடிப்புடனே அங்கே வந்தார் சிவகாமி.
“என்ன அம்மாயி, என்னை பார்த்ததும் கட்டிப்புடிச்சு முத்தமழை பொழிவன்னு பார்த்தா, ஏன்டா வந்தங்குற மாறி பேசுற? சரி போங்க, நான் கிளம்புறேன்” என எழுந்துக்கொண்டவனை, “போயிடுவியா நீ? தென்னங்கூட்ட எடுத்து குறிப்பார்த்து வீசுனேன்னு வச்சுக்க, பின்னந்தலை முன்னுக்கு திரும்பிக்கும் ஜாக்கிரதை!” என்றார் போலியான ஆவேசத்துடன்.
“ஆத்தி..! என் பொண்டாட்டி தேவலாம் போலருக்கே!” வாயை கரத்தால் மூடிக்கொண்டு இன்பன் உட்கார்ந்த தினுசில் அங்கிருந்த அனைவருமே சிரித்துவிட, முறைப்புடன் அறையை விட்டு வெளியே வந்தார் சத்தியராஜன்.
[the_ad id=”6605″]
சுட சுட பால்பாயாசத்தை சிறு சிறு கோப்பைகளில் எடுத்துக்கொண்டு வந்த தங்கம், முதலில் அதில் ஒன்றை இன்பனிடம் நீட்ட, “எல்லாரும் இனிப்பு எடுத்துக்கோங்க, உங்களுக்கெல்லாம் ஒரு நல்ல சேதி சொல்ல தான் வந்தேன்” என்றான் இன்பன்.
இனிப்பை எடுக்கும்முன்னே இனிப்புண்டவர் போல மகிழ்ந்த சிவகாமி, “பேத்தி மசக்கையா இருக்காடா?” என்றார் ஆவலே உருவாய்!
இன்பன், “எப்படி அம்மாயி? சொல்றதுக்கு முன்னாடியே கண்டுப்புடிச்சீங்க?”
“நாலு நாளா குலசாமி கனவுல வந்துட்டே இருக்காரேன்னு நினைச்சேன்டா… கொள்ளுப்பேரன் வரப்போறானே, ஆண்டவா!!” என்றவர் வெகு மகிழ்வுடன் பூஜையறைக்குள் விரைந்தார்.
ஒண்டிவீரர் முகமெல்லாம் பூரிப்பாய், “கோகிலாவையும் அழைச்சுட்டே வந்துருக்கலாமே இன்பா?” என்றார் ஏக்கமாய்.
“அப்பறம் கூட்டிட்டு வரேன் தாத்தா!”
தங்கம், “உன் புள்ளையும் நான்தான் வளர்ப்பேன்! இப்போவே சொல்லிட்டேன்! மரியாதையா கோகிலாவை கூட்டிக்கிட்டு இங்க வந்து சேரு… இனி தனியா இருக்க வேணாம்”
இன்பன், “கொஞ்ச நாள்ல வரோம் அத்தே!”
தங்கம், “இத்தனை நாள் இருந்தது போதாதா? இனிதான் அவளுக்கு வாந்தி மயக்கம் எல்லாம் இருக்கும், கூட மாட ஒத்தாசைக்கு ஆள் வேணும்டா!”
கையில் விபூதி எலுமிச்சை பழத்துடன் வந்த சிவகாமி திருநீரை அவனுக்கு இட்டுவிட்டு, “பழத்தை சாமிக்கிட்ட வைக்க சொல்லு கோகிலாவை” என்றார்.
“சரி அம்மாயி, நான் கிளம்புறேன்! உங்க எல்லார்க்கிட்டயும் விஷயத்தை சொல்லிட்டு போகலாம்ன்னு தான் வந்தேன்!” என இன்பன் சொல்ல, “எப்போடா இங்க வந்து இருப்ப?” என்றார் சிவகாமி.
இன்பன் பதில் சொல்லும்முன், “அறுவடை முடியட்டும், அதானே!” என்றார் ஒண்டிவீரர்.
இன்பன், “ஹாஹா!”
சிவகாமி கோபமாய், “சிரிக்காதடா!!” என சொல்ல,
“கோக்கி தனியா இருக்கா அம்மாயி! நான் அப்பறம் வரேன்” என எழுந்துக்கொண்டான் பேரின்பன்.
செய்தித்தாளே பிரதானம் என அதில் மூழ்கிய பாவனையில் அமர்ந்திருந்த சத்தியராஜனை ஒருமுறை திரும்பி பார்த்த இன்பன், மேலே நின்றிருந்த காண்டீபனிடம், “உன் பிரண்ட் உன்கிட்ட ஸ்பெஷலா சொல்ல சொல்லி அனுப்புனா காண்டீபா! முடிஞ்சா சுசீயை அழைச்சுட்டு வீட்டுக்கு வா!!” என்றான் நேரிடையாய்.
தன்னிடம் நேரிடையாய் பேசுவான் என காண்டீபனே எதிர்ப்பார்க்கவில்லை. சத்தியராஜனோ இன்பன், காண்டீபனிடம் பேசியதும் அதிகமாய் முறைக்க, அதில் திருப்தியுற்றவனாய் கிளம்பினான் இன்பன்.
வாசல் வரை போனவனிடம் “இன்பா, நில்லு! நானும் உன்னோட வரேன்!!” என்றார் தங்கம்.
திகைப்பை தாண்டிய நிலை அங்கிருந்தோருக்கு!!!
‘இன்பனுடன் செல்கிறார் என்றால் என்ன அர்த்தம்?’ என வியந்த காண்டீபன் வேகமாய் கீழிறங்கி வர, அந்த கேள்வியை கேட்டிருந்தார் ஒண்டிவீரர்.
“கோக்கிய இந்த நிலைமைல தனியா விட முடியாதுப்பா! இவனும் இங்க வர மாட்டேன்னு பிடிவாதம் பண்றான்! அதான் நான் அங்க போய் இருக்கலாம்ன்னு” என்று சொல்ல, ஆச்சர்யம் தாளவில்லை அனைவருக்கும்.
அவர் வீட்டோடு முடங்கிப்போன இத்தனை வருடங்களில் அவர் வெளியே சென்று வந்தது எத்தனை முறை என கணக்கிட்டால், கைகளில் விரல்களே மீதமிருக்கும்!
இன்பன், “அத்தே, அங்க வீடு இதுமாறி இல்ல! ஆளுங்க எல்லாம் வந்து போக இருப்பாங்க!!” என சொல்ல, “உன்னையும் அவளையும் தனியா விட்டுட்டு நான் யாருக்காக இங்க இருக்கேன்னு தெரியலடா இன்பா! எனக்கு உங்கக்கூட இருக்கணும் போல இருக்கு, கூட்டிட்டு போயேன்!!” என்ற பின், யோசிப்பானா இன்பன்?
“பைக்ல வந்தேன் அத்தே! கொஞ்சம் பொறுங்க, செல்வத்துக்கிட்ட கார் வாங்கிட்டு வரேன்” என்றபடி நகர, “அதெல்லாம் வேண்டாம்! ஒளிஞ்சு ஒளிஞ்சு வாழ்ந்து என்னத்த கண்டேன்? உன் வண்டிலேயே என்னை அழைச்சுட்டு போடா” என்றார் முடிவாய்.
[the_ad id=”6605″]
எத்தனை வயதானாலும் பெற்றவனுக்கு பிள்ளைகள் குழந்தைகள் தானே! தங்கத்தின் வாழ்வு மட்டும் செழிக்காமலே போய்விட்டதே என வருந்தியதை விட, இவள் வீட்டோடே முடங்கி ஆயுள் தண்டனை அனுபவிக்கிறாலே? என வருந்தியதே அதிகம்!
அந்த வருத்ததை துடைக்கும்வண்ணம் அவரே முன்வந்து ‘என்னை வெளியே அழைத்துப்போ’ என சொன்னால், மறுக்க தான் மனம் வருமா?
அடுத்த பத்தாவது நிமிடம் இன்பனின் இண்டு சுசுக்கி தங்கத்தை கடத்திக்கொண்டு சோளக்காட்டை நோக்கி பறந்தது.
அவர்கள் போன வழியை பார்த்துக்கொண்டு நின்ற காண்டீபனிடம் வந்த சத்தியராஜன், “இவனை நம்பி போறா பாரு! இவனுக்கே அங்க சாப்பாடுக்கு வழி இல்லை!” என சொல்ல, அவரை ஒரு பார்வை பார்த்த காண்டீபன், மௌனமாய் கடந்து சென்றான்.
காண்டீபனின் பதிலற்ற விலகல் சற்றே உறுத்தல் கொடுக்க, அவன் சில நாட்களாகவே அவரிடம் இருந்து விலகி செல்வது ஏனோ அப்போது தான் உரைத்தது அவருக்கு!!!
–வருவான்…