இன்பன் சென்றுவிட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் அவன் வரவை எதிர்ப்பார்த்து கோகிலா ஆவலாய் வாசலை பார்க்க ஆரம்பித்துவிட்டாள். நிமிடத்திற்கு இருமுறை அடிவயிற்றில் கைவைத்து பார்ப்பதும், தனக்குத் தானே சிரிப்பதுமாய் நேரம் கடத்திக்கொண்டிருந்தவளை கலைத்தது அவள் அலைபேசி.
அழைப்பது ‘அன்னை’ என தெரிந்ததும், இருந்த சந்தோச மனநிலையில், அவள் உச்சரித்த, “சொல்லும்மா!” கூட அவள் உவகைக்கு உதாரணமாய் தெரிந்ததோ!?
“என்ன கோக்கிமா? ரொம்ப சந்தோசமா இருக்க போலருக்கு? ஏதாவது நல்ல விஷயமா?” என்றார் செல்லம்.
‘குரல்லயேவா தெரியுது?’ என நினைத்தவள், “ஹ்ம்ம்…! இன்னைக்கு டாக்டர பார்க்க போறோம்” என்றாள் சின்ன வெட்கத்துடன்.
அலைபேசி வழியே அவளுக்கு திருஷ்டி கழித்தவர், அளவில்லா சந்தோசத்தை பகிர்ந்துக்கொண்டு, “உன்னை இப்போவே பார்க்கணும் போல இருக்குடா! அங்க எல்லாருக்கும் கோவம் குறைஞ்சுதா? நாங்க வரலாமா?” என்றார் தயக்கமாய்.
கோகிலாவோ சிறிதும் தயங்காமல், “என்னை உங்ககிட்ட பேச அனுமதிக்குறதே பெருசும்மா! அவங்களா கூப்பிடாம நீங்க இங்க எதுக்காகவும் வர வேண்டாம்!!” என்றாள் பட்டென!
வருந்தும் மனதுடன் ‘ஹும்ம்’ என்றவர் மேற்கொண்டு என்ன பேச என்று தெரியாமல் இருக்க, “அப்பா எப்படி இருக்காரும்மா? ஈரோடு வர ப்ளான் என்னாச்சு?” என்றாள் கோகிலா.
“ஆசுரமத்தை எங்களுக்கு கைமாத்தி விட்டுட்டாங்க… இன்னும் ஒரு வாரத்துல நாங்க அங்க வந்துடுவோம்! உன் அப்பாதான் நாளுக்கு நாள் மெலிஞ்சுப் போறாரு”
“ஏம்மா? என்னாச்சு?”
“என் பொண்ணுக்கு எப்பேர்ப்பட்ட நரகத்தை குடுக்க இருந்தேன்னு நினைச்சு நினைச்சே மாய்ச்சு போறாரு கோக்கி! அவரை என்னால சமாதானப்படுத்த முடியல… இப்போ பேரப்பிள்ளை வர போகுதுன்னு சொன்னாலாவது தெளியுறாரான்னு பார்க்கணும்” என செல்லம் வருந்த, “இன்னும் எத்தனை நாளுக்குமா இதையே நினைப்பீங்க நீங்க?” என்று சற்றே எரிச்சலானாள் கோகிலா.
“மறக்க விடாத மாறி தினம் ஏதாவது சேதி காதுல விழுதே! என்னடி செய்ய சொல்ற?” என்றார் செல்லம்.
“இப்போ என்ன புதுசா?”
“அந்த சண்டாளனுக்கு ஜெயில் தண்டனை குடுத்துருக்குன்னு சொன்னேன்ல? இப்போ அவனை அங்கிருந்து மறுவாழ்வு மையத்துக்கு மாத்திருக்காங்க…” என செல்லம் சொல்ல, “யாரும்மா? கிஷோரா?” என்றாள் கோகிலா.
“அவன் பேரைக் கூட சொல்லாத நீ!!” என்றவர், “அந்த கழிசடை இங்கிருந்து பாரின் போறப்போவே போதை மருந்து பழக்கத்தோட தான் போயிருந்துருக்கு! அந்த பழக்கம் முத்திபோய் பல பிரச்சனை செஞ்சுதால தான் அவனை பாரின்ல இருந்து இங்க இழுத்துட்டு வந்துருக்கார் சிவகுரு அண்ணா! இப்போ ஜெயில்ல போதை மருந்து கிடைக்காம வெறி பிடிச்சவன் மாறி சுத்தி திரியவும், வேற வழியே இல்லாம அவனை மறுவாழ்வு மையத்துக்கு மாத்திருக்காங்கலாம்!!” என அவர் சொல்லி முடிக்கையில் கோகிலாவுக்கு பெரிய ஆச்சர்யமோ அதிர்ச்சியோ எதுவுமில்லை.
[the_ad id=”6605″]அவனை நல்லவன் என்று நினைத்திருந்தால் தானே ஆச்சர்யமும் அதிர்ச்சியும் வருவதற்கு!?
“சிவகுரு அங்கிள் எப்படி இருக்காங்க? லலிதா ஆன்ட்டி ரொம்ப பீல் பண்ணுவாங்களே?” என கோகிலா கேட்டிட, “அவங்க ஒடிஞ்சு போய்ட்டாங்கடி! ஒத்த பிள்ளைன்னு செல்லம் குடுத்து இப்படி வாழ்கையவே தொலைச்சுட்டு நிக்குறானேன்னு அவங்களுக்கு ரொம்ப மனகஷ்டம்” என்றார்.
அதைத்தொடர்ந்து பேசாது, பேச்சை மாற்றிய கோகிலா, சிறிது நேரம் இயல்பாய் பேசிவிட்டு அழைப்பை துண்டிக்க, வாசலில் தங்கம் வந்து நின்றார்.
அவர் வரவையே எதிர்ப்பார்த்திராதவள், தனக்காக தன்னுடனே தங்கிக்கொள்ள அவர் வந்திருக்கிறார் என அறிந்ததும், அவர் தூய அன்பில் கண்கள் கூட பனித்து போயின. அதன்பின், அவளுக்கு ஒரு வேலை இல்லை அவ்வீட்டில்.
போதும் போதும் என கதறும் அளவுக்கு மணிக்கு ஒரு ஆகாரம் அவள் வாய்க்குள் அவள் அனுமதியின்றியே சென்றுக்கொண்டிருந்தது.
“அட, தங்கமா இது? ஆத்தாடி யாத்தா, என் கண்ணு தானா இது? கனா ஒன்னும் காங்கலையே?”
“வீட்டை விட்டு வரமாட்டேன்னு கிடந்தியே… இப்ப புள்ளைங்கலுக்காக மனசிறங்கிட்டியோ?”
“ஏன் வெளியே தெருவ வந்தா நாங்கல்லாம் உன்னை கடிச்சா தின்னுப்புடுவோம்ன்னு நினைச்ச?”
“ராசி இல்லாதவன்னு நம்ம ஒதுக்கிடுவோம்ன்னு நினைச்சுட்டா போல..?”
வயலுக்கு மறுநாள் வேலைக்கு வந்தவர்கள் கண்ணில் தங்கம் சிக்கிவிட, பலதரப்பட்ட பேச்சுக்கள் வந்துக்கொண்டே இருந்தன. தங்கம் எதற்ககெல்லாம் பயந்து வீட்டோடு முடங்கினாரோ, அதை இப்போது இத்தனை வருடங்களுக்கு பின் எதிர்க்கொள்ள ஆரம்பித்தார்.
வருடங்கள் கடந்ததால் வார்த்தைகளின் வீரியம் குறைந்தாலும், அவரை பரிதாபமாய் பார்க்கும் சிலரது பார்வை அவரை ஒடுங்கிப்போக செய்தன.
கோகிலா, “சித்தி இதுக்கு பயந்து தானே ஒதுங்கியே இருந்தாங்க.. இப்போ பாருங்க, இவங்க பேச்சை எல்லாம் கேட்க வேண்டியதா இருக்கு… சில பேர் ஆறுதல் சொல்றேன்னு வேணுன்னே பழசெல்லாம் பேசுரமாறி இருக்கு” என இன்பனிடம் புலம்பிக்கொண்டிருக்க,
“ஊர் வாயை அடைக்க முடியாது! நம்ம காதை தான் அவங்க பேச்சுக்கு பழக்கிக்கணும்!” என்ற இன்பன், “இந்த சின்ன விஷயத்துக்கு பயந்து தான் அவங்க இத்தனை நாளும் வெளில தலை காட்டாம இருந்தாங்க… இனியும் அப்படி இருக்க வேணாம்! எதுவா இருந்தாலும் சந்திச்சு தெளியட்டும்!!” என்றான் முடிவாய்.
அவன் சொல்வதும் சரிதானே என கோகிலா இருக்க, முதலில் பேச்சுக்களுக்கு தயங்கிய தங்கம், நாளாக நாளாக அதற்க்கு பழகிக்கொண்டார். எத்தனை முறை நடந்ததை பேசி துக்கம் விசாரித்தாலும், நாலு நாளுக்கு மேல் பேச புதியதாய் ஒன்றும் இல்லாததால், அவர்களும் தங்கள் வேலைகளை பார்க்க தொடங்கிவிட்டனர்.
தங்கம் இப்போது தன் கூட்டில் இருந்து சிறிது சிறிதாய் வெளிவந்துக்கொண்டிருந்தார்.
இடையே இன்பன் இல்லாத நேரத்தில் காண்டீபன் சுசீலாவுடன் வந்து கோகிலாவை பார்க்க, சுசீ தன்மனமொப்ப கோகிலாவிடம் மன்னிப்பு கேட்டதில், தங்கம் தான் குளிர்ந்து போனார்.
கோகிலா அந்த மன்னிப்பை கூட சிறு தலையசைப்பில் ஒதுக்கிவிட்டு இயல்பாய் அவளிடம் உரையாட, ‘இன்பன் மாமாவும் இவங்களும் தான் சரியான பொருத்தம்’ என சுசியின் மனம் அடித்து சொன்னது. பின்னே காண்டீபன் அங்கிருந்து செல்வதற்குள் தங்கத்தை அவனிடம் கோகிலா பேச வைத்திருந்தாள் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை!!!
எல்லாம் இயல்பாய் சென்றுக்கொண்டிருக்க, அன்று மாலை ஜவுளிக்கடையில் இருந்த சத்தியராஜனுக்கு காண்டீபனிடம் இருந்து, ‘உடனே வீட்டுக்கு வரவேண்டும்’ என தந்தி போல அழைப்பு வர, வேலையை அப்படியே போட்டுவிட்டு வீட்டிற்கு வந்தார் அவர்.
சுசீலாவை இருநாட்கள் அவள் தாய்வீட்டுக்கு சென்று தங்கிவிட்டு வரும்படி முன்பே அவன் சொல்லியிருந்தான்.
சத்தியன் வீட்டிற்க்குள் நுழைகையில், “போனை போட்டு உடனே வீட்டுக்கு வாங்க தாத்தான்னு சொன்னான்… அதான் வந்தேன்… எங்க அவன்?” என ஒண்டிவீரர் சிவகாமியிடம் பேசிக்கொண்டிருப்பது கேட்க, ‘எதுக்கு அப்பாவையும் வர சொன்னான்?’ என யோசிக்கலானார் அவர்.
[the_ad id=”6605″]சிவகாமி, “எனக்கு போனை போட்டு வேலைக்காரங்களை எல்லாம் வீட்டுக்கு போக சொல்லி அனுப்புங்க, முக்கியமா பேசனும்ன்னு சொன்னான். எல்லாரையும் அனுப்பி வச்சுட்டு வாசலுக்கு வந்தா நீங்க வந்து நிக்குறீங்க?” என்றார் தனக்கு வந்த தகவலை சொல்லி.
“முக்கியமா ஏதாவது இருக்கும், இல்லனா எல்லாரையும் இப்படி அலைக்கழிக்க மாட்டான்” என்ற ஒண்டிவீரர் கூடத்தில் இருந்த நாற்காலியில் அமர, அப்போது தான் சத்தியனும் வந்திருப்பதை கண்டு, ‘அப்படி என்ன முக்கிய காரியமாய் இருக்கும்?’ என எண்ணினார்.
வெகுவாய் காக்க வைக்காது, சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்தான் காண்டீபன். வந்தவனது முகமும், உடையும் ஒரு சேர கசங்கியிருப்பதை வயோதிக கண்கள் கவனிக்கத் தவறவில்லை.
மௌனமாய் வந்து கூடத்தின் மத்தியில் நாற்காலி போட்டு அமர்ந்த காண்டீபன் கண்ணைமூடி சாய்ந்துவிட்டான். அவனை உலுக்கவோ, அவன் நிலையை கலைக்கவோ மனம் இல்லாது நின்றவர்களின் மனதில், ‘என்ன வரப்போகிறதோ?’ என்ற அபாய ஒலி கேட்காமலில்லை.
பொருத்து நின்ற சத்தியன், “என்ன காண்டீபா, எங்களை வர சொல்லிட்டு நீ பேசாம இருந்தா என்ன அர்த்தம்? என்ன விஷயம்ன்னு சொல்லு” என்றார்.
கண்களை திறந்தவன் அவரை பார்த்த பார்வையில் என்ன இருந்ததோ!?
ஒண்டிவீரர், “என்னனு சொல்லு” என்றார் தன்மையாய்.
எச்சில் கூட்டி விழுங்கி தன்னை சீர்ப்படுத்தியவன், “இன்னைக்கு எங்கயும் போகலையாப்பா?” என்றான் சத்தியனிடம்.
“நான் எங்கடா போகப்போறேன்? கடைல இருந்தேன், நீ வர சொல்லவும் ஆளுங்களை பாத்துக்க சொல்லிட்டு வந்துட்டேன்” என்றார் அவர்.
“ஹோ…”
ஒண்டிவீரர், “என்ன விஷயமுன்னு உடைச்சு பேசு காண்டீபா! எதுக்கு இந்த தயக்கம் உனக்கு?”
“பேசணும் தாத்தா… இன்னைக்கு பேசி தானே ஆகணும்” என்றவனின் குரலில் எப்போதும் இருக்கும் தெளிவும், அதிகாரமும் மருந்துக்கும் இன்றி மறைந்திருந்தது.
“அடிக்கடி பள்ளிப்பாளையம் பக்கம் நீங்க போறதா சொல்றாங்களேப்பா! அங்க யாரை பார்க்க போறீங்க?” என்ற காண்டீபனின் கேள்வியை எள்ளிலும் சிறிது கூட சத்தியன் எதிர்ப்பார்த்திருக்கவில்லை.
“நா… நான் யாரையும் பா…க்க போலயே?” என தடுமாறியவர், “உனக்கு யார் சொன்னது?” என்றார் சீற்றமாய்.
அடுத்து அவன் சொன்ன, “சேகர் சொன்னான்ப்பா” என்ற பதிலில் அவரது சர்வமும் ஒடுங்கியது.
‘மாட்டிவிட்டோம்’ என அந்த கணத்தில் புரிய, மூச்சு விடவும் நடுங்கி அவர் உறைந்து நிற்க, வாசல் பக்கம் பார்த்து, “டேய்…” என கத்தினான் காண்டீபன்.
அவன் குரலுக்கு ஓடி வந்தவனின் உடலில் எண்ண முடியாத அளவுக்கு இருந்த காயங்களே, காண்டீபனிடம் உண்மைகள் கடத்தப்பட்டுவிட்டன என்பதை தெளிவாக்க, நடப்பது புரியாது குழம்பிய பாவனையில் நிற்கும் தன் தாய் தந்தையை நிமிர்ந்து பார்க்கவும் கூசி, குனிந்து போனார் சத்தியராஜன்.
[the_ad id=”6605″]வந்தவனை காட்டி, “யாரு இவன்? இப்படி அடிபட்டுருக்கு…” என சிவகாமி கேட்க, “அடிச்சு கேட்டதால தான் அம்மாயி சில விஷயம் எல்லாம் வெளில வந்துச்சு” என்ற காண்டீபனின் பார்வை சத்தியனை மொய்த்தது.
“இவனை தேடி தானே மாசக்கணக்குல பள்ளிப்பாளையம் போய்க்கிட்டு இருந்தீங்க… உங்களுக்காக நானே கூட்டிட்டு வந்துருக்கேன்! என்ன பேசணுமோ பேசுங்க” என்றான் காண்டீபன்.
“நான் பேச… ஒன்னும் இல்ல… அது…” வியர்த்து ஒழுகிய முகத்தை கைகளால் துடைத்துக்கொண்டு திணறிய சத்தியனை பார்த்து, “என்ன மனுஷன்ப்பா நீங்க? உண்மையிலேயே நீங்க மனுஷன் தானா? அதுவே எனக்கு சந்தேகமா இருக்கு” என்றான் காண்டீபன்.
ஒண்டிவீரர் இடைப்புகுந்து, “காண்டீபா? யாரு இவன்? எதுக்கு இவனை கூட்டிட்டு வந்துட்டு சத்தியனை கேள்வி கேட்டுட்டு இருக்க நீ?” என்றார் அதட்டலாய்.
“அதை அவரே சொல்லுவாரு தாத்தா! பொறுங்க” என்றவன், “சொல்லுங்கப்பா, எதுக்காக இவனை தேடிட்டு இருந்தீங்க?” என்றான்.
தன்னை சற்று நிதானப்படுத்தி இருந்த சத்தியன், “நான் இவனைத் தேடி ஒன்னும் போகல, இவன் யாருன்னே எனக்கு தெரியாது” என சொல்ல, அடுத்த நொடி காண்டீபன் அந்த புதியவனிடம் பாய்ந்திருந்தான்.
சத்தியன் கண்முன்னே, அந்த சேகரை காண்டீபன் அடித்த அடியில், ஏற்கனவே வலியில் இருந்தவன், புதிய அடியில் வலி தாங்காது, “சார், இந்தாளு பொய் சொல்றான் சார், என்கிட்டே வந்து டீல் பேசுனது இவன்தான் சார்” என்றான் கதறலாய்.
“நான் இல்லை நான் இல்ல” என சத்தியன் மறுக்க, எங்கே மீண்டும் காண்டீபன் அடித்துவிடுவானோ என்ற பயத்தில், “பொய் சொல்லாத சார், நீதானே என்னைத்தேடி வந்து ஒருத்தன் போட்டோவ காட்டி அவனை கடத்தி வைக்க சொன்ன?” என்றான் சேகர்.
சிவகாமிக்கு ஏதோ மெலிதாய் புரிவதை போல இருக்க, அதற்கே அவர் தலை கிறுகிறுக்க ஆரம்பித்தது.
காண்டீபன் தன் மொபைலை உயிர்ப்பித்து அதில் இருந்த இன்பனை புகைப்படத்தை எடுத்து, “அது இவனா பாரு” என நீட்டினான் சேகரிடம்.
“ஐயோ இவரே தான் சார்! இவர் போட்டாவை காட்டி இதுல இருக்கவனை பத்து பதினைஞ்சு நாளு கடத்தி வைக்க சொல்லி இந்த ஆளு சொன்னாரு! காரியத்தை முடிச்சுட்டு தலைமறைவாகிடுன்னு சொன்னவரு இப்போ என்னை யாருன்னே தெரியாதுன்னு பசப்புறாரு” என சேகர் விஷயத்தை போட்டுடைக்க, தொய்ந்துப் போய் அருகே இருந்த நாற்காலியில் பொத்தென விழுந்தார் ஒண்டிவீரர்.
“நீ சொல்றது நிஜம்ன்னு நாங்க எப்படி நம்புறது?” என காண்டீபன் ஒப்புக்காய் கேட்க, “இந்த வேலையை செய்யுறதுக்கு இவர் அக்கவுண்ட்ல இருந்து மூணு லட்ச ரூபா என் தோஸ்த்து அக்கவுண்டுக்கு போட்டு விட்டுருக்குறாரு… இல்லன்னு சொல்ல சொல்லுங்க பாப்போம்” என்றான் அவன்.
சத்தியனிடம் கேட்கவே தேவையில்லை எனும்படி, அவரது வங்கி கணக்கு புத்தகத்தை தூக்கி டேபிளில் எறிந்தான் காண்டீபன்.
ஒரு வார்த்தையும் பேசாது, சத்தியனை காண்டீபன் பார்த்த அந்த ஒரு பார்வை அவரை உடல் கூசிப்போக செய்தது. குனிந்த தலையுடன் அவர் குறுகிப்போய் நிற்க, “எனக்கு இதுதான் புரியல, நீங்களே ஆள் வச்சு இன்பனை கடத்திட்டு, எதுக்காக கடத்துனவனை பார்க்க மாசக்கணக்குல சுத்திட்டு இருந்தீங்க?” என்றான் வேதனையாய்.
“நான் அவனை கடத்தி வைக்க மட்டும் தான் காண்டீபா சொன்னேன்! அவனை எதுக்காக வயித்துல குத்தினானுங்கன்னு கேட்க தான் நான் இத்தனை நாளும் இவனைத்தேடி அலைஞ்சேன்!” தன் தரப்பு நியாயம் என சத்தியராஜன் சொல்ல,
“அய்யோ கடவுளே! அவன் உனக்கு என்னடா செஞ்சான்? என் வயித்துல பொறந்தவனா நீ? பெத்த புள்ளைக்கு கெடுதல் நினைக்குறியே?” தலையில் அடித்துக்கொண்டு சத்தம் போட்டு அழுதார் சிவகாமி.
காண்டீபனின் பார்வையும், சிவகாமியின் கதறலும், ஒண்டிவீரரின் ஓய்ந்த உருவும் சத்தியராஜனை பாடாய் படுத்த, “நான் எதுக்காக அப்படி செஞ்சேன்னு கேளு காண்டீபா, என்னை யாரும் தப்பா நினைக்காதீங்க” என்றார் அவர்.
“கழுத்தறுத்து கொல்றவனுக்கு கூட தன்னை நியாப்படுத்த காரணம் இருக்கத்தான் செய்யும், அதுக்காக செஞ்ச தப்பு இல்லன்னு ஆகிடுமா?” என்றவன், “நான் கேட்குறதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க” என்றான் அவரிடம்.
“கோகிலாவை இன்பன் கல்யாணம் செஞ்சுக்க கூடாதுன்னு நினைச்சு இந்த சேகரை கிட்ட பணத்தை குடுத்து அவனை நீங்க தானே கடத்த சொன்னீங்க?”
“ஆமா”
“இன்பனை கடத்திட்டு கொஞ்ச நாளுக்கு தலைமறைவா இருக்கனும்ன்னு இவன்கிட்ட சொன்னது நீங்கதானே?”
“ஆமா.. ஆனா…” என்றவரை கை நீட்டி தடுத்தவன், “கொல்ல சொன்னது வேறாளா இருக்கட்டும்! உடந்தையா இருந்தது நீங்க தானே?” என்றான் அவன்.
“நான் இப்படி ஆகும்ன்னு நினைச்சு செய்யல காண்டீபா! இன்பன் ‘என்னை மீறி கோகிலாவை யார் கல்யாணம் செய்றான்னு பாத்துட்டுறேன்னு’ சொன்னப்போ எனக்கு மனசே சரியில்லை. ஏதோ தப்பா நடக்க போகுதோன்னு தோணுச்சு… அவனால எங்க அந்த பொண்ணோட வாழ்கை வீணா போகிடுமோ? ஊர் முன்ன கல்யாணம் நின்னா, அந்த பொண்ணுக்கும் நம்ம குடும்பத்துக்கும் அசிங்கமா போய்டுமோன்னு பயந்துட்டு இருந்தேன்… அப்போதான் அந்த கிஷோரும் ஷங்கரும் கல்யாணத்துக்கு முன்னாடி என்னை நேருல பார்க்க வந்தாங்க!” மூச்சு விடாமல் சொல்லிக்கொண்டிருந்தார் சத்தியராஜன்.
“கோகிலா சின்ன பொண்ணு, நடப்பு தெரியாம பேசுது! இன்பனுக்கும் அவளுக்கும் ஏணி வச்சா கூட எட்டாது. அவங்களுக்கு கல்யாணம் ஆனா, ரெண்டே மாசத்துல கிராம வாழ்க்கை பிடிக்கலன்னு கண்ணை கசக்கிக்கிட்டு என்கிட்டே தான் வந்து நிப்பான்னு ஷங்கர், இன்னும் என்னென்னவோ சொன்னான்! ஒரு அப்பனா அவன் பொண்ணு நல்லா இருக்கனும்ன்னு அவன் நினைக்கிறது எனக்கு புரிஞ்சுது!! அது சரின்னும் நினைச்சேன்”
“இன்பனால என் தங்கச்சி பொண்ணு வாழ்க்கை கேட்டுடக்கூடாதுன்னு நினைச்சேன்! இன்பன் என்னதான் நல்லது செய்ய நினைச்சாலும், அவன் பொறந்த நேரம் காலம் அவனுக்கும் நம்ம குடும்பத்துக்கும் கெட்ட பேரை தான் வாங்கித்தரும்ன்னு ஜோசியர் சொன்னது என் மனசுல ஆழ பதிஞ்சுப்போச்சு… நான் என்ன செய்ய? அவன் தப்பு பண்ண கூடாதுன்னு நினைச்சது தப்பா?” என கேட்டவரின் கண்களில் இருந்து கண்ணீர் சிந்தியது.
“ஷங்கர் என் கையை பிடிச்சு கெஞ்சுனான், இன்பனை கல்யாணத்துல கலந்துக்க விடாம செஞ்சுட்டா போதும், கோகிலாவுக்கு கிஷோரை கல்யாணம் செஞ்சு வச்சு, நான் சென்னைக்கே கூட்டிட்டு போய்டுவேன்னு…!!! இன்பன் கோகிலா கல்யாணம் நடக்கலன்னா யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்காதுன்னு நினைச்சு தான், நான் இந்த ஆளுங்களுக்கு காசு குடுத்து அவனை பத்து நாளுக்கு எங்கயாது ஒளிச்சு வைக்க சொன்னேன்! ஆனா, அவனை கொல்றதுக்கு முயற்சி செஞ்சுருப்பாங்கன்னு நான் நினைக்கவே இல்லை!” என அலட்றியவர்,
“என்னதான் எனக்கு அவனை பிடிக்காதுன்னாலும், அவன் என் ரத்தம் தானே? அவனுக்கு ஒண்ணுன்னா எனக்கு பதறாதுன்னு நினைச்சீங்களா? எதுக்காக அவனை கொல்லப்பார்த்தன்னு அடிச்சு கேட்கதான் இத்தனை நாளும் இந்த நாயைத்தேடி அலைஞ்சேன்!” என சேகரை காட்டியவர், “எவனை கேட்டாலும், பெரிய டீலுக்காக இவன் நார்த் இந்தியா போயிருக்கான்னு சொல்லிட்டே இருந்தாங்க! என்ன செய்யுறது, யார்க்கிட்ட சொல்றது, எதுவும் தெரியல எனக்கு!!!” என்றார்.
அதே கதறலுடன், “இது எல்லாமே இன்பனுக்கும் தெரியும்!!” என அவர் முடிக்க, ஆத்திரம் தலைக்கேறியது காண்டீபனுக்கு.
“அவனை கடத்த வந்த ஆளுங்களை எல்லாம் அடிச்சு தள்ளிட்டு, அவங்களை யார் அனுப்புனதுன்னு அவன் கேட்டுட்டு இருந்தப்போ, இதோ இந்த சேகருக்கு நான் போன் பண்ணேன்! அதை இன்பன் அட்டென்ட் பண்ணுவான்னு நான் சத்தியமா நினைக்கல! என் குரலை கேட்டதும், “அப்பா”ன்னு ஒரு வார்த்தை சொன்னவன் தான் அதுக்கு பிறகு அவனை நம்ம வீட்ல மூணு நாளைக்கு பிறகு தான் பாத்தேன்” என சத்தியன் சொல்ல,
அங்கிருந்த தூணில், மடங்கிய தன் கைகளைக்கொண்டு ஆத்திரம் மட்டுப்பட அடித்த காண்டீபன், “அவனுக்கும் தெரியுமா? அவனுக்கும் தெரியும்ன்னு தெரிஞ்சும் எப்படி அவன் முகத்தை உங்களால பாக்க முடிஞ்சுது! நெஞ்சு அறுக்கல” என கத்த, சத்தியனுக்கு தன் நெஞ்சில் சுருக்கென்ற வலியை உணர்ந்தார்.
“எல்லா கஷ்டத்தையும் மனசுல போட்டுக்கிட்டு யார்க்கிட்டயும் சொல்லாம சிரிச்சுக்கிட்டே அவன் சுத்துறதால தானே அவன் வலி உங்களுக்கு புரியல? உங்களுக்கு புள்ளையா பொறக்காம வேற யாருக்கு அவன் புள்ளையா இருந்துருந்தாலும், காசு பணம் இருக்கோ இல்லையோ சந்தோசமா இருந்துருப்பான்… அவனை உயிரோடு கொல்றீங்களே இப்படி? அவன் சொன்ன அந்த ‘அப்பா’க்கு பின்னாடி எத்தனை வலி இருந்துருக்கும் தெரியுமா? எனக்கு வலிக்குதே!! எனக்கு வலிக்குதே இப்போ!!! என் அப்பாவா இப்படின்னு நினைக்க நினைக்க எனக்கு உயிர் போற அளவுக்கு வலிக்குதே! அப்படி தானே அவனுக்கும் இருந்துருக்கும்?” என காண்டீபன் கதற, சத்தியனின் பேச்சை கேட்க கேட்க, ஒண்டிவீரருக்கு நெஞ்சு அடைத்தது.
‘தன் மகனா இது?’ என்ற அதிர்வே அவரை ஜடமாக்கியது. சிவகாமியின் ஒரு துளி கண்ணீருக்கு கூட பதறும் அவர், இப்போது தன் கால்மாட்டில் அமர்ந்து கதறும் மனைவியை தேற்ற மறந்து அமர்ந்திருந்தார்.
ஓரமாய் நின்று இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சேகர் என்பவன், “சார், இவர் சொல்றது நிசம் தான்! ஆளை கடத்தி வைக்க மட்டும் தான் இவர் காசு கொடுத்தாரு. ஆனா அதுக்கு அப்புறம் ஒருத்தன் வந்தான் சார், அந்த கல்யாணத்துல மாப்பிளையா இருந்தவன். அவன்தான் ஐஞ்சு லட்சம் குடுத்து அந்த போட்டோல இருக்கவனை போட்டு தள்ளிட்டு ஊரை விட்டு ஓடிடுன்னு சொன்னான்! காசு வந்தா கசக்குமா? நானும் சரின்னு சொல்லி ஒப்புக்கிட்டேன்!
ஆனா, அந்த ஆளு (இன்பன்) கிட்ட கூட போக முடியல எங்களால! அந்த அடி எங்களுக்கு அன்னைக்கு! இவர் போன் மட்டும் அன்னைக்கு வரலன்னா என்னை அவர் அடிச்சே கொன்னுருப்பாரு! இவர்கிட்ட இருந்து போன் வந்ததும் அசந்து போய் நின்னவரை என் கூட்டாளி ஒருத்தன் தான் இரும்பு கம்பில குத்துனான். அதுக்கு பிறகு நாங்க ஓடிட்டோம்! யாரோ ரெண்டு பேரு வந்து அவரை தூக்கிட்டு போறதை மட்டும் பார்த்துட்டு நான் ஊரை விட்டு போயிட்டேன்!
நீ வந்து பத்து லட்சத்துக்கு என் ஆளுங்க கிட்ட டீல் பேசவும் தான் அவசரப்பட்டு இங்க வந்து உன்கிட்ட மாட்டிக்கிட்டேன்” என்றான்.
இன்பனை தூக்கி சென்ற இருவர் அவனது ‘கிளிகள்’ தான் என காண்டீபனுக்கு சொல்லாமல் புரிந்தது.
முகத்தை அழுந்த துடைத்த காண்டீபன், “சரி நீ கிளம்பு” என்றான் அவனிடம்.
‘போ’ என்றதும், “சார், சார்.. இன்னும் நாலு அடிக்கூட அடிச்சுக்கோ! ஆனா போலிஸ்க்கிட்ட மட்டும் போட்டு விட்டுடாத! உனக்கு புண்ணியமா போகும்!” என கெஞ்ச, ‘உன்னை போலிஸ்க்கிட்ட சொன்னா, இவரையும் தானே சேர்த்து சொல்லணும்! இன்பன் அதை விரும்ப மாட்டேனே’ என சத்தியனை பார்த்தவன், “போ” என்றான் மீண்டும்.
தலைக்கு மேல் கும்பிடு போட்டவன் வெளியே போக, “ஏய்… இந்த விஷயம் வெளில போச்சு….” என மிரட்டலாய் காண்டீபன் இழுக்க, “கடுகளவும் போகாதுங்க சார்! சத்தியம்” என்றவன் விட்டால் போதுமென சென்றுவிட்டான்.