“வசதியா போச்சு. நாளை கழிச்சு தானே மாதவா. இந்த கல்யாணமும் நாளை கழிச்சு தான். அதனால நாளைக்கு சாய்ந்திரம் இங்கிருந்து கிளம்பி போய் ஹோட்டலில் தங்கி அடுத்தநாள் கல்யாணத்தை பார்த்து விட்டு ராணியை கூப்பிட்டுட்டு வந்துவிடலாம். என்ன சொல்ற? உனக்கு தான் சென்னை போகணும்னா ரொம்ப பிடிக்குமே. அப்படி அங்க என்னதான் இருக்கோ தெரியல.”
‘உங்க மருமக தான் இருக்கா.’ என்று சொல்ல தோன்றிய மனதை அடக்கிக் கொண்டான்.
‘குடும்பத்தினரை வைத்துக்கொண்டு அவளை பின் தொடர முடியாதே.” என்று நினைத்துக்கொண்டு ஆர்வமில்லாமல் பதில் கூறினான் மாதவன்.
“யாராவது ஒருத்தங்க போனால் போதும்னா நான் மட்டும் போயிட்டு வரேன். என்ன சொல்றீங்க அப்பா?” என்று கேட்டான் மாதவன்.
“சரி நான் நாளைக்கு சொல்றேன் மாதவா.” என்றார் அண்ணாமலை.
சாப்பிட்டு முடித்த ஆதித்யா
“சித்தப்பா வாங்க. நாம ‘மெமரி கேம்’ விளையாடலாம்.” என்று மாதவனின் ஒரு விரலை ஆதித்யாவின் கையால் பிடித்து இழுத்து கூப்பிட்டான்.
“அது என்னடா மெமரி கேம்?” என்று ஆர்வமாக கேட்டபடி சாப்பிட்டு முடித்த அண்ணாமலை பேரனிடம் பேச்சுக் கொடுத்தபடி வந்தார்.
“அதுவா தாத்தா உங்களுக்கு தெரியாதா? நான் சொல்லி தரேன். என்று அவனது சிறிய கண்களில் ஆர்வத்தை காண்பித்து கூறினான்.
“இங்க பாருங்க. நிறைய கார்டு இருக்கு இல்லையா?” என்று அவன் பிஞ்சு கையில் வைத்திருந்த கார்டுகளை காட்டினான்.
“ஆமாம் ஆதி” என்று அவரும் வாத்தியாரிடம் பாடம் கேட்கும் மாணவன் போல பவ்யமாக உட்கார்ந்துகொண்டு பேரனிடம் பாடம் கேட்க ஆரம்பித்தார்.
“இந்த எல்லா கார்டுலேயும் ஒரு சைடு ஒரே மாதிரியே இருக்கும். இன்னொரு சைடு போட்டோஸ் இருக்கும். இங்க பாருங்க.” என்று இரு பக்கத்தையும் காட்டினான்.
“சரி” என்று கேட்டுக்கொண்டார் அண்ணாமலை.
“இப்போ, நா இந்த கார்டை போட்டோஸ் தரையில படற மாதிரி கவுத்து வெச்சுடுவேன். “என்று கூறியபடி அந்த கார்டுகளை பரப்பி புகைப்படம் தெரியாத மாதிரி வைத்தான்.
“இதுல இருந்து ஏதாவது இரண்டு கார்டு எடுங்க தாத்தா.” என்று பேரன் கூற அவர் எடுத்தார்.
“இந்த போட்டோஸ் நல்லா பார்த்து மெமரியில் வச்சுக்கோங்க.” என்று ஆள்காட்டி விரலால் தலையை தொட்டு மூளை குறைக்குமாறு கூறினான்.
“அப்புறம் அதை திரும்ப எடுத்த இடத்திலேயே அப்படியே வச்சுடுங்க.” என்று பேரன் கூற அவரும் அதை செய்தார்.
“ இப்போ சித்தப்பா. நீங்க இரண்டு கார்டு எடுங்க.” என்று கூற
மாதவன் இரண்டு கார்டை எடுத்து பார்த்துவிட்டு திரும்பவும் அப்படியே வைத்து விட்டான்.
“இப்போ நான் ரெண்டு கார்டு எடுக்க போறேன்.” என்று கூறிய ஆதித்யா சொன்னதை செய்தான்.
“இப்போ பாருங்க இந்தக் கார்டுல இருக்கிற மாதிரியே மிக்கி மவுஸ் நீங்க எடுத்த கார்டுல இருந்ததை நான் பாத்து மெமரியில் வச்சிருக்கேன். இப்போ நான் அதை எடுக்கப் போறேன்.” என்று கூறியவன் அதனை எடுத்தான்.
அதிலும் அதே புகைப்படம் இருக்க
“இப்போ இந்த இரண்டு கார்டும் எனக்கு.” என்று எடுத்து வைத்துக் கொண்டான்.
“இப்படிதான் விளையாடனும்.” என்று விளக்கினான்.
“சூப்பர்டா பையா.” என்று பாராட்டினார் அண்ணாமலை.
“ஆனால் உனக்கு யாரு இந்த கேம் சொல்லிக்கொடுத்தா? அதுவா பக்கத்து வீட்டு அண்ணன் தான் சொல்லிக் கொடுத்தான்.” என்றான் ஆதித்யா.
“இப்போ நீங்க விளையாடுங்க தாத்தா.” என்று பேரன் கூற அவர் விளையாடினார்.
“மாதவனுக்கு இந்த விளையாட்டு சுலபமாகவே இருந்தது. எனினும் ஆதித்யாவின் வயதை மனதில் கொண்டு அவனுக்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் விட்டுகொடுத்து விளையாடினான்.
அண்ணாமலைக்கு வந்த புகைப்படம் எதுவும் மனதில் நிற்கவில்லை . எனவே தோற்றுக் கொண்டே இருந்தார்.
எனவே அங்கு வந்த பார்வதி அவரை பார்த்து
“பேரன் கிட்ட தோத்து போயிட்டு இருக்கீங்க போல இருக்கு.” என்று கிண்டலடித்தார்.
“ஆமா பார்வதி. எனக்கு இந்த விளையாட்டு உண்மையாகவே கஷ்டமா தான் இருக்கு.” என்று ஒத்துக்கொண்டார்.
“ ரொம்ப நாளைக்கு அப்புறம் உன் தாத்தா ஒரு உண்மையை ஒத்துக்கிட்டு இருக்காரு ஆதி.” என்று பேரனிடம் கூறி சிரித்தார் பார்வதி.
“தாத்தாவுக்கு மெமரி இல்லை. “ என்று விட்டு ஆதித்யாவும் கலகலவென குலுங்கி குலுங்கி சிரித்தான்.
“தாத்தாவுக்கு வயசாயிடுச்சு இல்ல? அதான் ஞாபகம் வச்சுக்க முடியல.”என்று பேரனுக்கு விளக்கம் கொடுத்தார் பார்வதி.
மனைவி தன்னை பார்த்து சிரிப்பதை பார்த்து சிறிது கடுப்பான அண்ணாமலை
“அது அப்படி இல்லை பார்வதி. இந்த படத்தை எல்லாம் ஆதித்யா வுக்கு ஏற்கனவே பார்த்து பழக்கம். எனக்கு அப்படி இல்லை. அதனாலதான் நான் தோத்துட்டேன்.” என்று ஒரு காரணத்தை கண்டுபிடித்து கூறினார்.
“அப்போ நீங்க ஏற்கனவே பார்த்த ஃபோட்டோ இருந்தால் கண்டு பிடித்து விடுவீங்க. அப்படித்தானே அப்பா?” என்று ஒரு யோசனையுடன் கேட்டான் மாதவன்.
“கண்டிப்பா.” என்று உறுதியாகக் கூறினார் அண்ணாமலை.
“சரிப்பா. உங்க மெமரி பவரை நீங்க எல்லோருக்கும் ப்ரூவ் பண்ணுங்க.”
என்று வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அவன் பத்திரப்படுத்தி வைத்திருந்த புகைப்படத்தை காட்டினான் மாதவன்.
அவர் அதனை வாங்கி பார்த்து
“இது நாங்க காலேஜ் படிக்கும்போது எடுத்தது.” என்று கூறினார்.
“அது எங்க எல்லாருக்கும் நல்லா தெரியும். அதுதான் அங்கே எழுதி இருக்கே. இதுக்குள்ள இருக்கிற எல்லாரோட பெயரையும் சொல்லணும். ஞாபகம் இருந்தால் அவர்களைப் பற்றியும் கொஞ்சம் சொல்லணும்.” என்று கேட்டான் மாதவன். “அதுக்கு என்ன? சொல்லிட்டா போச்சு.” என்று தன் மூக்குக் கண்ணாடியை சரி செய்துகொண்டு அந்த புகைப்படத்தை வாங்கினார் அண்ணாமலை.
“இவன் பேரு கபாலி. நாங்க தஞ்சாவூர்ல இருக்கும்போது எங்க தெருவுல இருந்தான். இவள் கயல்விழி பெயருக்கேற்ற மாதிரி கண்ணு ரொம்ப அழகா இருக்கும். பாரேன். எப்படி மை வச்சிருக்கா!” என்று அந்த கருப்பு வெள்ளை படத்தை காண்பித்து கூறினார்.
“அதெல்லாம் எங்க கண்ணுக்கு ஒன்னும் தெரியல. உங்களுக்கு நல்லா தெரியுமே.” என்று அந்த நல்லாவில் அழுத்தம் கொடுத்து கூறினார் பார்வதி.
“சரி சரி அதை விடு. இது மாலதி, இது சௌமியா…..” என்று அந்த புகைப்படத்தில் இருந்த அனைத்து பெண்களின் பெயரையும் கூறினார் .
பிறகு “இவன் பேரு ……”என்று யோசித்தார்.
பார்வதி “பொண்ணுங்க பேரு எல்லாம் நல்லா ஞாபகம் இருக்கு. பையன் பேரு மறந்து போச்சு.” என்று பார்வதி அவரை பார்த்து முறைத்தபடி கூற .
“என்னடா இது வம்பா போச்சு?” என்று மாதவனை பார்த்து கேட்டார் அண்ணாமலை.
இவர்களை கவனித்துக் கொண்டிருந்த ஆறுமுகமும் மலரும் ஆர்வமாக வந்து அமர்ந்தனர்.
“என்ன மாமா நல்லா யோசிச்சு பாருங்க.” என்று மாமனாருக்கு ஆதரவாக பேசினாள் மலர்.
“இது இது…. ஆம் ஞாபகம் வந்துடுச்சு. மோகன். அப்புறம் ராமன்” என்று பெயர்களைக் கூறி அவர்களைப் பற்றி இரண்டு வாக்கியங்கள் கூறினார்.
வெகுநேரமாக தான் எதிர்பார்த்து கொண்டிருந்த பெயர் வராததில் ஏமாற்றமாக உணர்ந்தான். மாதவன் எனினும் இன்னும் ‘இரண்டு பேர் இருக்காங்க’ என்று மனதை தேற்றிக் கொண்டான்.
அப்போது அண்ணாமலை
“இவன் பேரு” என்று பலமாக யோசித்துவிட்டு
“வேலன்” என்றார்.
“அப்பா சூப்பர். இன்னும் ஒரே ஒரு பையன் தான் இருக்கு.” என்று ஆர்வமாக கேட்டான் ஆறுமுகம்.
“இவன் பெயர் எனக்கு நல்லாவே தெரியுமே. இவன் பெயர் சிதம்பரம்.” என்று கூறவும் மாதவனின் முகம் பளிச்சிட்டது.
“என்னப்பா சொல்றீங்க? உங்களுக்கு இவரை நல்லா தெரியுமா ?என்று ஆச்சரியமாகக் கேட்டான் மாதவன்.
“தெரியுமே. இவன் என்னோட நெருங்கிய நண்பன்.”
“என்னது நெருங்கிய நண்பனா?” என்று ஆச்சரியமாக கேட்டார் பார்வதி.
“உங்க நண்பர்கள் எல்லோரையும் எனக்கு தெரியுமே. ஆனால் இவரை நான் பார்த்ததே கிடையாதே!” என்றார் பார்வதி.
“எப்படி பார்வதி பார்த்திருப்ப? இவனும் நானும் காலேஜில் ஒன்றாக படித்தோம். அப்புறம் இவன் இதே காலேஜ்ல வேற கிளாஸ் படிச்ச வள்ளின்ற ஒரு பொண்ணை லவ் பண்ணி ஓடிப்போய் கல்யாணம் பண்ணிகிட்டான். அதுக்கப்புறம் அவங்க வீட்டிலேயும் அந்தப் பொண்ணு வீட்டிலேயும் சேர்த்துக் கொள்ளவே இல்லை. அதுக்கப்புறம் என் அப்பா சொத்து பிரிஞ்சி வந்த பணத்தை வைத்து விவசாய நிலம் அப்புறம் நம்ம அண்ணாமலை ஸ்டோர் இருக்கிற இடத்தையும் நல்ல விலையில் வந்ததால் வாங்கினார்.
நாங்க திருச்சி பக்கத்துல இருக்கிற இந்த கிராமத்தில் வீடு வாங்கி இங்கேயே இருந்துட்டோம். அதுக்கப்புறம் நானும் அவன பார்க்கல.
அவன் சென்னையில் இருப்பதா கேள்விப்பட்டேன். ஆனால் எங்க இருக்கான்னு எனக்கு தெரியாது. அவன் ரொம்ப நல்லவன். அந்த பொண்ணு கூட ரொம்ப நல்ல பொண்ணு. அவங்க அப்பா அம்மா அவனை சேர்த்துக் கொண்டு இருக்கலாம்.” என்று ஆதங்கப்பட்டார் அவர்.
“சரி அதை விடுங்க. இப்போ நீங்க எல்லோரும் என்னோட ஞாபக சக்தியை பத்தி என்ன நினைக்கிறீங்க?” என்று குடும்பத்தினரை பார்த்து கேட்டார் அண்ணாமலை .
“கலக்கிட்டீங்க.” என்று ஒரே வார்த்தையில் வெளிப்படையாக புகழ்ந்தாள் மலர்.
“ஆமாம்பா. சூப்பர்.” என்றான் ஆறுமுகம்.
“என் தர்மபத்தினி என்ன சொல்றீங்க?” என்று பார்வதியை வம்புக்கு இழுத்தார்.
“சரி சரி ஒத்துக்கறேன் ஒத்துக்குறேன்.” என்றார் பார்வதி.
மாதவன் எதுவும் பேசாமல் யோசிக்க ஆரம்பித்து விட்டான்.
தன்னுடைய வருங்கால மாமனார் அப்பாவின் நெருங்கிய தோழன் என்பதை தெரிந்து கொண்ட மாதவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
‘இந்த ஒரு விஷயம் போதுமே இதை வச்சு நாம நினைச்சதை முடிச்சிடலாம்’ என்று கணக்குப் போட்டான் மாதவன்.
“ சரி எனக்கு தூக்கம் வருது. நான் போய் தூங்குறேன். மாதவா நீ சொன்னதை நான் யோசிச்சு பார்த்தேன். நீ கல்யாணத்துக்கு போயிட்டு வா. அதுவே போதும்.” என்று அண்ணாமலை கூறினார்.
இதனைக்கேட்ட மாதவனுக்கு கணநேரத்தில் ஒரு நல்ல யோசனை தோன்றியது .
“அப்பா நீங்கதான் கண்டிப்பா இந்த கல்யாணத்துக்கு போகணும்.” என்றான்.
“என்னடா சொல்ற? நான் கல்யாணத்துக்கு போகணும்னு சொன்னப்போ என்னை குழப்பி விட்டுட்டு இப்போ திரும்பவும் நான் கல்யாணத்துக்கு போகணும்னு சொல்ற.” என்று அவனைப் பார்த்து ஆச்சரியமாக கேட்டார் அண்ணாமலை.
“அது அது வந்து நீங்க இப்ப பேசினதை பார்த்த பிறகுதான் எனக்கு பல விஷயங்கள் புரிஞ்சுது. அதனாலதான்.”
சிதம்பரம் அவரது நெருங்கிய நண்பன் என்று கூறியதை நினைத்து சொன்னான்.
“அப்படி என்ன விஷயம் நான் இப்போ சொன்னேன்?” என்று புரியாமல் கேட்டார் அண்ணாமலை.
‘ஐயையோ இப்ப என்னடா சொல்றது என்று யோசித்தான்.
“அது அது நட்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்னு எனக்கு இப்பதான் புரிஞ்சது. அதைத்தான் சொன்னேன்.” என்று சமாளித்தான்.
“சரிடா இப்ப என்னதான் சொல்ல வர? அதை தெளிவா புரியிற மாதிரி சொல்லு.” என்று கேட்டார் அண்ணாமலை.
நாளைக்கு சாய்ந்தரம் நாம ரெண்டு பேரும் கிளம்பி போகலாம். ஹோட்டலில் தங்கி அடுத்த நாள் கல்யாணத்தை பார்த்துட்டு சுதாவை கூட்டிக்கிட்டு வந்துடலாம். சரியா அப்பா?” என்று கேட்டான்.
“இதைத்தானே டா நானும் சொன்னேன். சரிப்பா அப்ப எனக்கு புரியல.”
“இப்போ புரிஞ்சுதா சரி . அப்படியே பண்ணலாம்.” என்று கூறி விட்டு தன் அறைக்கு சென்றார் அண்ணாமலை.
மாதவனுக்கு தான் போட்ட திட்டத்தில் முதல் அடி எடுத்து வைக்க போகும் ஆனந்தம். அந்த ஆனந்தத்தில் உறங்கினான்.