நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பெயிண்டிங் வேலை இரண்டு நாட்களாக தொடர்ந்து கொண்டிருந்தது.
பழைய பாத்திரங்கள் மற்றும் பொருட்களை போட்டு வைத்து இருந்த அறையில் இருந்த அலமாரியை நகர்த்திக் கொண்டு இருந்தனர்.
அப்போது அலமாரி திறந்து கொண்டு அதிலிருந்து ஒரு பை கீழே விழுந்தது.
“ஏதோ ஒரு பை விழுது பாரு.” என்று ஒருவன் கூற இன்னொருவன் அதை எடுத்தான்.
“அண்ணா இந்தாங்க. பை அலமாரியில் இருந்து கீழே விழுந்தது. அந்த அலமாரியை பூட்டுங்கள்.” என்று கூறியபடி எடுத்து வந்து அவனிடம் கொடுத்தான்.
“சரி தம்பி நான் பாத்துக்கிறேன்.” என்று வீட்டு அலமாரியை பூட்டினான். பிறகு அதனை வாங்கி பிரித்து பார்த்தான்.
அந்தப் பையில் நிறைய புகைப்படங்கள் இருந்தன. அதை ஆர்வமாக ஒவ்வொன்றாக எடுத்து பார்த்தான்.
அப்பொழுது ஆதித்யா அங்கு வந்தான்.
“சித்தப்பா என்ன பாத்துட்டு இருக்கீங்க?” என்று ஓடி வந்து அவன் மடியில் உட்கார்ந்தான்.
“இதெல்லாம் பழைய போட்டோஸ். இங்க பாத்தியா உன் அப்பா. “என்று ஆறுமுகத்தின் சிறுவயது புகைப்படத்தை காட்டினான் மாதவன்.
அதனை பார்த்த ஆதித்யா “அப்பா என்ன மாதிரியே இருக்கிறார் இல்லை சித்தப்பா?”
“ஆமாண்டா. உன்னை மாதிரிதான் இருக்காரு.”
“ரொம்ப க்யூட்டா இருக்காரு.” என்றான் ஆதித்யா .
“இங்க பாருடா தாத்தா-பாட்டி போட்டோ.” என்று அவர்கள் புகைப்படத்தை காட்டினார்.
மாதவன் “ரெண்டு பேருமே சூப்பரா இருக்காங்க.” என்றான் ஆதித்யா .
அடுத்தது மாதவன், ஆறுமுகம், அண்ணாமலை, பார்வதி, தங்கை சுதா ராணி இருந்த குடும்ப புகைப்படத்தை காட்டினான்.
அதைப் பார்த்த ஆதித்யா
“எல்லாருமே ரொம்ப சின்னதா இருக்கீங்க.” என்று இரு கைகளையும் சேர்த்து சைகை காட்டி கொஞ்சம் குரலில் கூறினான்.
“ இப்போ எல்லோரும் பெருசா ஆயிட்டீங்க.”
“ஆமாண்டா தங்கம். நீயும் இப்படி தான் வளர்ந்து பெருசா ஆயிடுவ. அதுக்கு நல்லா சத்தான சாப்பாடு சாப்பிடணும். நல்லா சாப்பிட்டாதான், எங்கள மாதிரி பெருசாவும் ஸ்ட்ராங்காவும் ஆகமுடியும்.
எப்ப பாத்தாலும் பிஸ்கேட், சாக்லேட் சாப்பிட்டுகிட்டு இருந்த இப்படி வளர மாட்ட.” என்று மேலே சைகை காட்டி பிறகு
“இப்படி வளர்ந்து விடுவ.” என்று குறுக்கில் கைகாட்டினான் மாதவன்.
“நல்லா சொல்லு மாதவா. என்ன ஆதி இனிமேலாவது சத்தான சாப்பாடு ஒழுங்கா சாப்பிடுறியா?. என்று கேட்டபடி அங்கு வந்து அமர்ந்தாள் மலர்.
“.சரிமா சாப்பிடுறேன்.” என்று சலித்துக் கொண்டே கூறினான் ஆதித்யா.
“இப்ப இப்படி தான் சொல்லுவ. அப்புறம் பிஸ்கெட், சாக்லெட் கேட்டு அடம் பிடிப்ப. “ என்றாள் மலர்.
அப்போது பக்கத்து வீட்டு பத்து வயது பையன் “ஆதி” என்று கூப்பிட்டுக் கொண்டே அங்கு வந்தான்
“ஹாய் ரித்தீஷ்” என்று ஆதித்யா அவனிடம் சென்றான்.
“வா நாம தோட்டத்தில போய் விளையாடலாம்.” என்று கூப்பிட இருவரும் தோட்டத்திற்கு விளையாட சென்றனர்.
மலர் அந்த புகைப்படங்களை எடுத்து ஆர்வமாக பார்த்தாள். வீட்டு குழந்தைகளின் புகைப்படங்களும் பள்ளியில் எடுத்த புகைப்படங்களும் இருந்தன. தன் கணவனின் சிறுவயது புகைப்படத்தை ரசித்துப் பார்த்தாள். எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக மலரும் மாதவனும் பார்த்துக்கொண்டிருந்தனர்.
சமையல் வேலை முடிந்த பிறகு சமையல் அறையை சுத்தம் செய்துவிட்டு பார்வதியும் வந்து இவர்களுடன் சேர்ந்து அமர்ந்து எல்லா புகைப்படங்களும் பார்த்து பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.
“மாதவா இங்க பாரு. உங்க அப்பா சின்ன வயசுல எடுத்த போட்டோ.”. என்று அதனை காண்பித்தார் பார்வதி.
“ என்னது அப்பா ஸ்கூல் படிக்கும்போது எடுத்ததா?”
“காட்டுங்க பார்க்கலாம்.” என்று வாங்கி பார்த்தால் மாதவன்.
“ஸ்கூல் இல்லை மாதவா. காலேஜ் படிச்ச அப்போ எடுத்தது.” என்று மகனை திருத்தினார் பார்வதி.
“இதுதான் உங்க அப்பா.”. என்று ஒரு பையனை காண்பித்து கூறினார் பார்வதி
“அப்பா அப்படியே அண்ணா மாதிரியே இருக்காரு இல்லமா?” என்று கேட்டான் மாதவன்
“ஆமாம் மாதவா. ஆறுமுகம் அப்படியே உங்க அப்பா மாதிரி. நீயும் சுதா ராணியும் என்னை மாதிரி.” என்று பெருமைப்பட்டுக் கொண்டார் பார்வதி .
அப்போது மாதவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.
“அம்மா இதுல இருக்கிற மத்தவங்க பேரு உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டான் மாதவன்.
“அது எல்லாம் எனக்கு தெரியாதுப்பா. உங்க அப்பா கிட்ட கேட்டு பாரு. அப்பாவுக்கு ஞாபகம் இருக்குமான்னு எனக்கு சந்தேகம்தான். எதுக்கும் கேட்டு பாரு.” என்றார் பார்வதி.
‘ட்ரிங் ட்ரிங்’ என்று வீட்டு தொலைபேசி அடித்தது.
மாதவன் அதனை எடுத்தான். “யார் பேசுறது” என்று கேட்டான்.
“நான்தான் ராணி பேசுறேன்.” என்று அந்த பக்கம் பதில் வர மாதவன்
“எந்த ஊரு ராணி?” என்று வேண்டுமென்றே கேட்டான்.
“திருச்சி யோட ராணிதான் பேசுறேன். “ என்றாள்.
“சரிங்க மகாராணி. என்ன வேணும் உங்களுக்கு. அடியேன் உங்கள் ஆணைக்காக காத்திருக்கிறேன்.” என்று பணிவாக கேட்பதுபோல கேட்டான் மாதவன்.
“மகாராணி திருச்சிக்கு வரணும்.”
“அதுக்கு அடியேன் என்ன செய்யணும்?”
“அதுக்கு மகாராணியின் அண்ணன் பல்லக்கு எடுத்துக்கொண்டு வந்து கூட்டிக்கொண்டு போகணும்.”
“என்னது?” என்று அதிர்ச்சியாக கேட்டான்.
“அண்ணா அண்ணா எனக்கு காலேஜ்ல நாலு நாள் லீவு கிடைச்சிருக்கு. திடீர்னு லீவு கிடைச்சதால டிக்கெட் எங்கேயும் எனக்கு கிடைக்கல. நீ வந்து என்னை கூட்டிட்டு போறியா?” என்றாள் கெஞ்சும் குரலில்.
“இப்போதெல்லாம் ஏதாவது காரணம் சொல்லி என்னை சும்மா சும்மா சென்னைக்கு கூப்பிடுற. “
“இல்லைனா மட்டும் நீ சென்னை பக்கம் வரவே மாட்ட! நீ இங்கே அடிக்கடி வந்துட்டு போறது, எனக்கு தெரியாதுன்னு நினச்சிட்டு இருக்கியா?” என்று கேட்டாள் சுதாராணி.
“அது அது வந்து நான் வேலை விஷயமா வரேன்.”
“ஏதோ ஒரு விஷயம் வருகிறாயா இல்லையா? அதை தான் சொன்னேன். அதுக்கு ஏன் இப்படி தடுமாறற? ஏதோ இருக்கு. கூடிய சீக்கிரம் தெரிய வரும்.” என்றாள் சுதாராணி பூடகமாக.
“சரி சரி அது தெரியவரும்போது தெரிய வரட்டும். என்னிக்கி நான் அங்க வரணும்? சொல்லு.” என்று பேச்சை மாற்றினான் மாதவன்.
“நாளை கழித்து அடுத்த நாள் வா. “
“ ஆமா. எதுக்காக உனக்கு திடீர்னு லீவு விட்டுருக்காங்க?”
“அதுவா இந்த ஹாஸ்டல்ல சாப்பாடு சரி இல்லைன்னு பசங்க கம்ப்ளைன்ட் கொடுத்தாங்க. ஆனால் மேனேஜ்மென்ட் கிட்ட இருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்ல. அதனால பசங்க எல்லாம் சேர்ந்து ஸ்ட்ரைக் பண்ணலாம்னு பேசிட்டு இருந்தாங்க. இந்த விஷயத்தை தெரிஞ்சுகிட்ட மேனேஜ்மெண்ட் கொஞ்சம் டைம் கொடுங்க எல்லாத்தையும் சரி பண்ணி விடுவோம் அப்படின்னு சொல்லி டைம் கேட்டு இருக்காங்க. அப்படியே எங்களுக்கும் லீவு விட்டுருக்காங்க.”
“ஓ அப்படியா. எனக்கு கடையில கொஞ்சம் வேலை இருக்கு. முடிந்தால் நான் வரேன். அப்படி இல்லன்னா டிரைவர் கிட்ட சொல்லி காரை எடுத்துட்டு அங்க வர சொல்றேன்.” என்று கூறி போனை வைத்தான் மாதவன்.
அன்று இரவு அண்ணாமலை சாப்பிட அமர்ந்தார். மலர் ஆதித்யாவுக்கு சாப்பாடு ஊட்டி கொண்டிருந்தாள்.
சப்பாத்தியும் குருமாவும் பார்வதி பரிமாறினார்.
சப்பாத்தியை பிட்டு நவரத்தின குருமாவில் நனைத்து வாயில் வைத்த அண்ணாமலை
“குருமா ரொம்ப சூப்பரா இருக்கே. யாரு மருமகள் பண்ணியதா
?”என்று கேட்டார்.
ஆமாம் அவள் தான் பண்ணினாள்.
சப்பாத்தி நான் செய்தேன் என்று கூறினார் பார்வதி.
“சப்பாத்தி சுமார்தான். குருமா தான் சூப்பர்.” என்று கூறவும் பார்வதி அவரை முறைத்தார்.
அவரது பார்வையை புரிந்துகொண்ட அண்ணாமலை
“இல்லமா. சப்பாத்தி இந்த குருமாவில் நனைத்து சாப்பிடும்போது எவ்வளவு டேஸ்டா இருக்கு!” என்று ரசித்து சாப்பிட்டார்.
“சரி சரி. நல்லா இருந்தால் சரி. இன்னும் ஒரு சப்பாத்தி சாப்பிடுறீங்களா?” என்று கேட்டு பரிமாறினார்
அப்போது மாதவன் வீட்டுக்குள் நுழைந்தான்.
“அப்புறம் நாளை கழிச்சு உங்க நண்பர் சேதுராமன் மகன் கல்யாணம் இருக்கு.” என்று ஞாபகப்படுத்தினார் பார்வதி.
“ஆமா பார்வதி நான் மறந்தே போயிட்டேன் பாரு. சென்னையில் தானே கல்யாணம்.”
“ஆமாம் அது கூட மறந்து போச்சா?”. என்று கேட்டார் பார்வதி
“எத்தனை மணி முகூர்த்தம்?”
“காலை ஆறரை மணி முகூர்த்தம். வர வர உங்களுக்கு ஞாபக மறதி அதிகமாயிடுச்சு.”
“அப்படியா? அப்போ முன்னாடி நாள் கிளம்பி போய் ஹோட்டலில் தங்கி பார்த்துட்டு வர வேண்டியதுதான்.”
“ஆமாம் நான் உங்களுக்கு டிரஸ் எடுத்து வச்சுட்டேன். கண்டிப்பா போயிட்டு வாங்க. அவர் ஆறுமுகம் மலர் கல்யாணத்துக்கு வந்திருந்தார்.”
“சரி நான் போயிட்டு வரேன். மாதவா நாம ரெண்டு பேரும் போயிட்டு வரலாம்.” என்றார் அண்ணாமலை.
இருவரும் பேசிக்கொண்டிருந்தது அவன் காதில் விழுந்தது.
“சேதுராமன் வீட்டு கல்யாணத்துக்கு தானே. கண்டிப்பா போகணுமா அப்பா?” என்று ஆர்வமில்லாமல் கேட்டான் மாதவன்.
சுதா வேற அவளை கூட்டிட்டு போக என்னை கூப்பிட்டு இருக்கா. நாளை கழிச்சி அவளை கூட்டிட்டு வரணும்.”