நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
திருச்சியில் அந்த பெரிய திருமண மண்டபத்தின் முன்பு மாதவன் வெட்ஸ் மதுமிதா என்று எழுதி அலங்கரித்து இருந்தது.
பட்டு வேஷ்டி பட்டு சட்டையில் கல்யாண மாலையுடன் அமர்ந்திருந்தான் மாதவன். அவனுக்கு பக்கத்தில் குங்கும நிற பட்டுப்புடவையில் அதற்கு ஏற்ற குங்கும நிற கல் வைத்த தங்க நகையில் பேரழகியாக தோன்றினாள் மதுமிதா. திருமணம் வெகு சிறப்பாக நடந்தது .
திருமணம் முடிந்ததும் மேடையை விட்டு கீழே இறங்கிய மணமக்கள் பெற்றோர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.
பிறகு மதுமிதா மாதவனிடம்
“தாத்தா பாட்டிகிட்ட ஆசீர்வாதம் வாங்கலாம். நீங்களும் என் கூட வாங்க.” என்று அவனையும் அழைத்துக் கொண்டு அமர்ந்திருந்த முருகையன் ஈஸ்வரி கால்களில் பொதுவாக விழுந்தார்கள்.
இதனை சற்றும் எதிர்பாராத அவர்கள் முதலில் தடுமாறினார்.
பிறகு அங்கு இருந்தவர் எல்லோரும்
“பொண்ணு மாப்பிள்ளை உங்க கால்ல விழுந்து இருக்காங்க. அவங்களுக்கு நல்ல வார்த்தை சொல்லி எழுப்புங்கள்.” என்று கூற வேறு வழியின்றி முருகையன்
“நல்லா இருங்க.” என்று ஒரு வார்த்தையில் வாழ்த்தி விட்டு நகர்ந்தார்.
ஈஸ்வரி பேத்தியை தொட்டு நெட்டி முறித்து திருஷ்டி கழித்தார்.
பிறகு தன் கழுத்தில் இருந்த ஒரு சங்கிலியை எடுத்து அவளுக்கு போட்டுவிட்டார்.
“எப்பவுமே சந்தோஷமா இருக்கணும்.” என்று கண்கலங்கியபடி மனதார வாழ்த்தினர்.
மகளின் சாமர்த்தியத்தை கண்ட சிதம்பரம் மகிழ்ந்தார். மதுமிதாவுக்கு தாத்தா தன்னிடம் முதன்முறையாக பேசியதை எண்ணி மகிழ்ச்சிதான்.
மலர் ஆரத்தி எடுத்து மணமக்களை உள்ளே அழைத்தாள். மதுமிதா மருதாணி போட்டு இருந்த அவளது வலது காலை எடுத்து வைத்து வீட்டுக்குள் நுழைந்தாள்.
மாதவன் நினைத்த மாதிரியே மதுமிதாவை திருமணம் செய்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். பூஜையறையில் விளக்கேற்றி விட்டு ஹாலில் மாதவனுடன் அமர்ந்து இருந்தாள் மதுமிதா.
மலர் பால் பழம் எடுத்து வந்தாள்.
பார்வதி அதனை வாங்கி புதுமண தம்பதிகளுக்கு கொடுத்தார்.
அப்போது அண்ணாமலை
“இந்த ஸ்வீட் எல்லாத்தையும் எங்க வைக்கணும் பார்வதி? என்று கேட்க பார்வதியும் மலரும் அந்த பக்கம் திரும்பினர்.
“அந்த லட்டு ஜிலேபி இரண்டையும் கிச்சனில் வைங்க. மத்ததை ஹாலில் ஓரமாக வைங்க. எல்லாருக்கும் கொடுக்கணும்.” என்று பார்வதி கூறிவிட்டு மாதவன் பக்கம் திரும்பவும் மாதவன் கையில் இருந்த பால், பழம் இரண்டையும் காலி செய்திருந்தான் .
“டேய் டேய் ஏன்டா இப்படி?” என்று அவனை பார்த்து கோபமாக கேட்டார் பார்வதி.
“என்னம்மா ?என்ன?” என்று கேட்டான் மாதவன்.
“ பாதி பால், பாதி பழம் சாப்பிட்டு விட்டு மீதியை அவளிடம் கொடுக்கணும்.” என்று கூறினார்.
“அதை நீங்க முன்னாடியே சொல்லனும் இல்ல?” என்று பழியை அவர் மீது போட்டான் மாதவன்.
“ஏன்டா உனக்கு இது தெரியாதா?” என்று கேட்டார் பார்வதி.
“தெரியும். ஆனால் இவளுக்கு நான் எச்சி பண்ண பால் பிடிக்குமான்னு தெரியல.” என்றான்.
“கல்யாணமாகி ஒரு நாள் கூட இன்னும் முழுசா முடியல. அதுக்குள்ள பொண்டாட்டிக்காக எப்படி யோசிக்கிறான் பாரு.” என்று மலைத்துப் போனார் பார்வதி.
“சரிசரி. இவளுக்கு வேற ஒரு டம்ளரில் பாலும் பழமும் எடுத்துட்டு வந்து கொடுங்க.” என்று பார்வதி கூற
“மதுமிதா பரவாயில்லை. நான் குடிப்பேன்.” என்றாள் அதைக் கேட்ட அனைவரும் கொல்லென்று சிரித்தனர்.
“சரி சரி. கொஞ்சம் பால் எடுத்துட்டு வந்து பழம் போட்டு ஸ்பூனில் கொடுத்திடு.” என்று பார்வதி கூற
மலர் அதே டம்ப்ளரில் பால் பழம் எடுத்து வந்து அதில் ஸ்பூன் போட்டு ஒரு வாய் அவனுக்கும் ஒரு வாய் அவளுக்கும் கொடுத்தாள்.
அறையில் மெல்லிய நறுமணம் பரவியிருந்தது. சுவர்களில் சிகப்பு நிற ரோஜாக்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருந்தது. பலவித இனிப்புகள் மற்றும் பழங்கள் மேசையில் வைக்கப்பட்டிருந்தது. கட்டிலை சுற்றி குண்டுமல்லி சரங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. படுக்கையில் ரோஜாப் பூக்களின் இதழ்கள் இதய வடிவில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மாதவன் படுக்கையில் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தான்.
பெண்களின் சிரிப்பு சத்தத்துடன் அவர்களின் வளையல்கள் மற்றும் கொலுசு சத்தமும் கேட்க மாதவன் நிமிர்ந்து அறை வாயிலை பார்த்தான்.
அப்போதுதான் மதுமிதா உள்ளே நுழைந்து கொண்டிருந்தாள். வெளிர் மஞ்சள் நிற புடவையில் ஒரு அழகிய மஞ்சள் பூ போல தெரிந்தாள் அவள்.
உள்ளே நுழைந்தவள் மெல்ல நடந்து அவனிடம் வந்தாள். மாதவன் அவள் கையிலிருந்த பால் சொம்பை வாங்கி மேஜை மீது வைத்தான்.
“உட்காரு” என்று சொல்ல மதுமிதா உட்கார்ந்தாள். ஆனால் அவனை பார்க்காமல் வேகமாக வேறு பக்கமாக முகத்தை திருப்பிக் கொண்டாள்.
இதை கவனித்த மாதவன்
“என்னாச்சு?” என்று கேட்டான்.
“நான் உங்க மேல ரொம்ப கோபமா இருக்கேன்.” என்றாள் மதுமிதா அவனை பார்க்காமல்.
“என்ன கோபம்?” என்று புரியாமல் கேட்டான்.
“நிச்சயம் ஆனதுக்கு அப்புறம் நீங்க எனக்கு ஒரு போன் கூட பண்ணல. தாம்பூலம் மாற்றும்போது கூட நீங்க வரல. அதுக்கு மேல நானே உங்களுக்கு போன் பண்ணி பேசின போது கூட நீங்க என்கிட்ட ஒழுங்காவே பேசல . என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் என்னை கேட்டப்போ, எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா?” என்று சிறு குழந்தை போல பேசினாள்.
அவள் சாதாரணமாக கேட்டாலும் அதில் இருக்கும் அவளது எதிர்பார்ப்பு அவனுக்கு புரிந்தது .
“சாரி எனக்கு நிறைய வேலை இருந்தது. அதனால தான் பேச முடியல.” என்றான் மாதவன்.
“ஒரு சாரி சொல்லிட்டா, சரியா போச்சா? நான் உங்களைப் பற்றி தெரிஞ்சுக்கணும். நீங்க என்னை பத்தி தெரிஞ்சுக்கணும். நாம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கணும் . முதல்ல ஃப்ரெண்ட் ஆகணும், அப்புறம் லவ்வர் ஆகணும். அதுக்கப்புறம் இதெல்லாம் கேஷுவலா நடக்கணும்னு நினைத்தேன். ஆனால் இப்போ உங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என்னைப் பற்றியும் உங்களுக்கு எதுவும் தெரியாது. (pacifictiregroup.com) நாம பிரண்ட்ஸ், லவ்வர் ஆகல. ஆனால் இப்போ இங்கே இருக்கிறோம்.” என்று தயங்கித் தயங்கிக் கூறினாள்.
“சரி. இனிமே நாம பேசி, பழகி, பிரெண்ட் ஆகலாமே அதுக்கப்புறம் லவ்வர் ஆகலாம்.” என்றான்.
“கரெக்ட் நானும் இதையே தான் நினைச்சேன். நாம முதலில் நல்லா பேசி, பழகி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டு லவ் பண்ணுவோம். அதுக்கு அப்புறம் இதெல்லாம் கேஷுவலா நடக்கும்.” என்று முடித்தாள்.
“இவ்வளவுதான். இதுக்கு ஏன் இப்படி தயங்கி தயங்கி சொல்ற? எனக்கும் இதுல சம்மதம்தான்.”. என்றான் மாதவன் சாதாரணமாக.
“இதுக்கு நீங்க ஒத்துக்க மாட்டீங்கன்னு. நினைத்தேன். பரவாயில்லை ஒத்துக் கொண்டீர்கள்.” என்று அவன் முகம் பார்த்து புன்னகையுடன் கூறினாள் மதுமிதா.
“அப்புறம் நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.”
“என்ன விஷயம்?” என்று அவள் கண்களில் தெரிந்த ஆர்வத்தை பார்த்து கேட்டான் மாதவன்.
“நான் என்னோட பிரண்டு கல்யாணத்துக்கு போயிருந்தேன்…” என்று ஆரம்பித்து திருவிழாவில் நடந்ததை சொல்லி முடித்தாள்.
அவள் சொன்னதை பொறுமையுடன் கேட்ட மாதவன்
“நீ சொல்றதை பார்த்தா, அந்த நர்ஸ் தான் அவன் மேல பழி போட்டு இருக்க மாதிரி தெரியுது. மற்றபடி அவன் மேல தப்பு இருக்குற மாதிரி எனக்கு தெரியல.” என்று தனக்காக பேசினான் மாதவன்.
“இந்த கதையை கேட்ட எல்லோருமே அப்படித்தான் சொல்றாங்க. ஆனால் என்னால ஒத்துக்க முடியல. அவன் மேல தப்பு இல்லைன்னு ப்ரூ பண்ணா தான் நான் நம்புவேன். அதுக்கு மேல எனக்கு என்னோட நகை வேணும். அது எங்க குடும்ப நகை எங்க குடும்பத்தை சேர்ந்தவங்ககிட்ட தான் அது இருக்கணும். அப்புறம் எனக்கு கிடைக்கவேண்டிய கடை, அந்த கடை அவனால தான் எனக்கு கிடைக்காமல் போச்சு. அதே மாதிரி எனக்கு ஒரு கடை கிடைச்சு என்னோட வேலையை நான் அங்க ஆரம்பிக்கணும். இது எல்லாம் நடந்தால் தான் எனக்கு அவன் மேல இருக்கும் கோபம் போகும்.
இதோ இந்த தழும்பு அவனால வந்ததுதான்.” என்றால் மதுமிதா தன் நெற்றியில் இருந்த தழும்பை காட்டி.
“நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க கூடாது.”
“சரி எடுத்துக்க மாட்டேன் சொல்லுங்க. என்னைப் பொருத்தவரை இந்த தழும்பு உன்னோட அழகை கூட்டி இருக்குன்னு தான் சொல்லுவேன்.”