“இதையே தான் என் அப்பா, அம்மா, கீதா, அண்ணா எல்லோரும் சொல்லுவாங்க. இவங்க எல்லாம் என் மேல இருக்கிற பாசத்துல அப்படி சொல்றாங்கன்னு நான் நினைப்பேன். இப்ப நீங்களும் அதே மாதிரி சொல்றதை கேட்கும்போது நீங்களும் என் மேல அவங்க மாதிரியே பாசம் வச்சு இருக்கீங்கன்னு தெரியுது.” என்று மகிழ்ந்தாள் மதுமிதா.
அதிகாலை 6 மணி முகூர்த்தம் என்பதால் நான்கு மணிக்கு எல்லாம் எழுந்திருந்தாள் மதுமிதா. பழக்கம் இல்லாமல் அவ்வளவு சீக்கிரம் எழுந்த மதுமிதாவுக்கு சோர்வாக இருந்தது. அந்த சோர்வினை முகத்தில் பார்த்த மாதவன்
“நீ ரொம்ப டயர்டா இருக்க. தூங்கு.” என்றான்.
“ஆமாம் ரொம்ப டயர்டா தான் இருக்கிறேன். இந்த தலையில் வைத்த அந்த அலங்காரம் மட்டும் எவ்வளவு ஹெவி தெரியுமா? இப்பதான் கல்யாண பொண்ணுங்க எல்லோரும் ஏன் தலை குனிந்து கொண்டு இருக்காங்கன்னு தெரியுது . இவ்வளவு ஹெவியா தலை அலங்காரம் பண்ணினா, எப்படி நிமிர்ந்து பார்க்க முடியும்?” என்று அவள் சோகமாக கேட்க மாதவன் அவளைப் பார்த்து ரசித்து சிரித்தான்.
“என்ன சிரிக்கிறீங்க? என் நிலைமையை பார்த்தால் உங்களுக்கு சிரிப்பு வருதா?” என்று அவனைப் பார்த்து முறைத்தாள்.
“இல்லை இல்லை . நீ சொன்ன விதத்தில எனக்கு சிரிப்பு வந்துடுச்சு.”
“எனக்கு வேற சின்ன முடிதான். அதுக்கு ஒரு அடிஷனல் ஹேர் வைத்து பின்னல் போட்டு என் தலையே வலிக்குது.” என்றாள் மதுமிதா.
“சரி சரி. நீ போய் ரெஸ்ட் எடு .”என்றான்.
அவள் அதற்கு பிறகு பேசாமல் படுத்தாள். படுத்தவள் நிம்மதியாக உறங்கினாள்.
உறங்கிக்கொண்டிருந்த மனைவியை வைத்த கண் வாங்காமல் நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தான் மாதவன்.
‘உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு என் உயிர் இருக்கும் வரைக்கும் உன் கூட வாழனும்னு நான் ஆசைப்பட்டேன். கல்யாணம் நடந்துடுச்சு. இதுக்கு மேல எனக்கு வேற என்ன வேணும்? நான் உன் அழகுக்காக உன்னை கல்யாணம் பண்ணிக்கல. அதனாலே நீ சொன்ன அந்தக் கட்டுப்பாடு எனக்கு ஒரு பெரிய விஷயமே கிடையாது. ஆனால் என் ஆசை நிறைவேறின மாதிரி உன் ஆசையும் நிறைவேற வேண்டும். முதல்ல நான் செய்ய வேண்டியது உனக்கு ஒரு கடை ஏற்பாடு பண்ணி தரணும். உன் நகையை தேடி கண்டுபிடிக்கணும். அப்புறம் என் மேல தப்பு இல்லனு உனக்கு நிரூபிக்க வேண்டும். இதையெல்லாம் பண்ணினதுக்கு அப்புறம் என் மனசுல எந்த ஒரு உறுத்தலும் இல்லாமல் உன்னை தொடுவேன். அதுவரைக்கும் நாம இந்த கட்டுப்பாட்டிலேயே இருப்போம்.’ என்று நினைத்துக்கொண்டான் மாதவன்.
ஆனால் அவன் நினைத்ததை நடத்துவது அவனுக்கு அவ்வளவு சுலபமாக இல்லை.
இப்படி பலவாறு நினைத்தபடி தன்னையறியாமல் உறங்கினான் மாதவன்.
அதிகாலை 5 மணிக்கு எப்பொழுதும் போல எழுந்தான் மாதவன். பக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மனைவியை பார்த்தான். அவள் நெற்றியில் இருந்த தழும்பை பூ போல வருடினான்.
பிறகு எழுந்து அந்த பெரிய பால்கனியில் உடற்பயிற்சி செய்தான். உடற்பயிற்சிகளை முடித்துவிட்டு ஆறரை மணி அளவில் குளித்து முடித்து கீழே இறங்கினான்.
“என்னடா இன்னிக்கி லேட்டா எழுந்து வருவன்னு பார்த்தா டைமுக்கு கரெக்டா எழுந்து வந்திருக்க.” என்று கல்யாணத்திற்கு வந்து வீட்டில் தங்கியுள்ள வயதான பாட்டி ஒருவர் கேட்டார்.
“அது அது பாட்டி. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் வெளியே போகணும். அதனால தான் சீக்கிரமா வந்துட்டேன்.” என்றான் மாதவன்.
“அடப்பாவி கல்யாணமாகி ஒரு நாள்தான் ஆகுது. அதுக்குள்ள வேலைக்கு போறியா?” என்று அவன் ஏதோ தவறு செய்வது போல ஆச்சரியமாக கேட்டார்.
“வீட்டில் இருக்கும் அனைவரும் அவனை அப்படியே பார்த்தனர்.
“ என்னடா நெஜமாதான் சொல்றியா?” என்று பார்வதி நம்பமுடியாமல் கேட்டார்.
“ஆமாம் அம்மா. நம்ம கடையில கட்டிட வேலை முடிய போகுது இல்லை? அதை போய் பார்க்கணும்.” என்றான்.
பார்வதி அண்ணாமலையை பார்த்தார். அண்ணாமலையும் பார்வதியை அர்த்தமாக பார்த்தார்.
“உங்க தாத்தா கல்யாணம் ஆன புதுசுல வேலைக்கு போகாமல் என்னையே சுத்தி சுத்தி வருவாரு. நீ என்னடான்னா அடுத்த நாளே வேலைக்கு போகணும்னு சொல்ற.” என்று குறைபட்டுக் கொண்டார் பாட்டி.
பார்வதி மாதவனிடம் “மாதவா எங்கேயும் வெளியே போகாத. கல்யாணத்துக்கு வர முடியாதவர்கள் எல்லோரும் ரெண்டு மூணு நாளைக்கு வந்து போயிட்டு இருப்பாங்க. நீ ஒரு வாரமாவது வீட்டில் இரு.” என்றார்.
“அம்மா யாராவது வந்தாங்கன்னா என்னைக் கூப்பிடுங்க. அரை மணி நேரம் தானே, கூப்பிட்டதும் வந்துடப் போறேன்.” என்றான் மகன்.
பார்வதி அண்ணாமலையை பார்த்தார்.
அண்ணாமலை “அதுக்கு இல்ல டா. அந்த பொண்ணு நீ அவ கூட இருக்கணும்னு எதிர்பார்ப்பா இல்லையா?” என்று கேட்டார்.
“நான் போயிட்டு சீக்கிரம் வந்துடுவேன் அப்பா.” என்றவன்
“அண்ணி” என்று கூப்பிட்டுக் கொண்டே சமையலறையில் நுழைந்தான்.
“இன்னிக்கி காலைல என்ன டிபன்?” என்று கேட்டான்.
“இட்லி சட்னி, பொங்கல் சாம்பார், கேசரி.” என்றாள்.
“சரி எனக்கு 2 இட்லி ரெண்டு மட்டும் கொடுங்க.” என்று கேட்டு வாங்கி சாப்பிட்டுவிட்டு கடைக்கு சென்றான்.
“என்னங்க இவன் இப்படி இருக்கான்? ஒருவேளை இன்னும் அந்த ரூபாயை நினைச்சுக்கிட்டு மதுமிதாவை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறானோ?” என்றார்.
“எனக்கும் அதே யோசனையா தான் இருக்கு பார்வதி. சரி போக போக எல்லாம் சரியா போயிடும். கவலைப்படாதே.” என்று மனைவியை சமாதானப்படுத்தினார் அண்ணாமலை.