நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சாப்பிட்டு முடித்த மதுமிதா மற்றவர்களும் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தாள்.
எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும் அனைவரும் எழுந்தனர்.
முதலில் எழுந்த மதுமிதா கையை கழுவிக்கொண்டு இருந்தாள். பார்வதி மூட்டு வலி காரணமாக சட்டென்று எழுந்திருக்க முடியாமல் தன் கால்களை நீட்டி மடக்கி எழுந்திருக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.
இதனை கவனித்த ஆறுமுகம் அவருக்கு உதவ நினைத்து அவரை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தான்.
அதேநேரம் மாதவன் மதுமிதாவை பார்த்து
“மதுமிதா அம்மா எழுந்திருக்க கஷ்டப்படுறாங்க. எனக்கு அண்ணன் கிட்ட ஒரு வேலை இருக்கு. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க.” என்றான்.
மதுமிதாவும் “ஓகே. நான் ஹெல்ப் பண்றேன்.” என்று கூறிவிட்டு பார்வதியிடம் வந்தாள்.
மதுமிதாவிடம் அப்படி சொன்னவன் ஆறுமுகத்திடம் திரும்பி
“அண்ணா அந்த சமையல் காரனுக்கு பணம் கொடுத்து விட்டீர்களா?” என்று பேச்சுக் கொடுத்து அவனை பார்வதியிடம் செல்லாமல் தடுத்தான்.
மதுமிதா பார்வதியிடம் சென்று அவருக்கு கைகொடுத்து லேசாக தூக்கி விட்டாள்.
அவரும் எழுந்து நின்றார்.
“ரொம்ப தேங்க்ஸ் மா.” என்றார்.
மாதவன் மதுமிதாவை பற்றி வீட்டு பெரியவர்கள் நல்ல விதமாக நினைக்க வேண்டும் என்பதற்காகவே அவன் அப்படி செய்தான்.
இரவு ரயிலில் சிதம்பரம் குடும்பத்தினர் சென்னைக்கு திரும்பினர்.
காலை உணவு உண்ணும் பொழுது வேண்டுமென்றே மாதவன் மதுமிதாவின் பேச்சை ஆதித்யாவை வைத்து ஆரம்பித்தான்.
“என்னடா உன்னோட புது பிரண்ட் கூடவே சுத்திக்கிட்டு இருந்தாயே. உனக்கு அவங்களை ரொம்ப பிடிச்சுப் போச்சா?” என்று சாதாரணமாக கேட்பது போல கேட்டு அவளை குடும்பத்தினருக்கு ஞாபகப்படுத்தினான்.
“ஆமாம். எனக்கு மதுமிதா அக்காவை ரொம்ப பிடிச்சு போச்சு. அவங்க என்னை திட்டாம ஜாலியா என்கூட விளையாடிக்கிட்டு இருந்தாங்க. நிறைய குட்டி கதை சொன்னாங்க. ஜோக்ஸ் சொன்னாங்க. அவங்க சொன்ன ஸ்டோரிஸ் எல்லாத்தையும் ஸ்கூல்ல என்னோட பிரெண்ட்ஸ் கிட்ட சொல்ல போறேன்.” என்றான் உற்சாகமாக ஆதித்யா.
“அப்படியா அவங்க சுதாராணி க்கு தான் பிரெண்டுனு நினைச்சேன். உனக்கும் பிரண்டு ஆகி விட்டார்களா?” என்று ஆச்சரியமாக கேட்பதுபோல கேட்டான் மாதவன்.
“என்ன சுதா? உன்னோட பிரண்டை வீட்ல இருக்கிற எல்லோருக்கும் ரொம்ப பிடிச்சு போச்சு போல இருக்கே.” என்று கேட்டான்.
“ஆமாண்டா எனக்கு கூட அவளை ரொம்ப பிடிச்சிருக்கு. நேத்து நான் சாப்பிட்டு முடிச்சதும் எழுந்திருக்க முடியாமல் கஷ்டப்பட்டுட்டு இருந்ததை பார்த்து அவள் என் கிட்ட வந்து எனக்கு ஹெல்ப் பண்ணினா தெரியுமா?” என்று பார்வதியும் சேர்ந்துகொண்டார்.
“ஆமாம் அத்தை. நேத்து நான் போட்டு இருந்த கோலத்தை பார்த்து ரொம்ப அழகா இருக்குன்னு பாராட்டினாள்.” என்றாள் மலர்.
“பரவாயில்லை சுதா. உனக்கு நல்ல பிரண்டு.தான் கிடைச்சிருக்காங்க போல இருக்கு” என்றான் மாதவன்.
“ஆமாம் ரொம்ப நல்ல பிரண்டு. இந்த ஆதி பையனை பாத்துக்க எனக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணினாங்க.” என்று அவள் பங்கிற்கு அவளும் மதுமிதாவை பற்றி நல்ல விதமாக பேசினாள்.
“மாதவா. நீ இன்னும் கடைக்கு கிளம்பவில்லை?” என்று கேட்டுக்கொண்டு அங்கு வந்தான் ஆறுமுகம்.
“.இதோ கிளம்பி விட்டேன் அண்ணா” என்று விட்டு கடைக்கு கிளம்பினான் மாதவன்.
அவன்சென்ற பிறகு பார்வதி அண்ணாமலையை அழைத்தார்.
“என்னங்க எனக்கு ஒரு விஷயம் மனசுல படுது.” என்று ஆரம்பித்தார்.
அவரை புரிந்து கொண்ட அண்ணாமலை
“அது என்னன்னு எனக்கு தெரியும் பார்வதி. மாதவனுக்கு மதுமிதாவை கேட்கலாம்னு நினைக்கிற. சரியா?” என்றார்.
“ஆமாங்க. நம்ம வீட்ல இருக்குற எல்லோருக்குமே அவளை ரொம்ப பிடிச்சிருக்கு. உங்க பிரண்டு கிட்ட பேசி பாருங்க. “. என்றார்
“எனக்கும் ஆசையாத்தான் இருக்கு. நான் சிதம்பரம் கிட்ட பேசி பார்க்கிறேன். இந்த தடவை எந்த தப்பும் நடக்காமல் பாத்துக்கணும்.
நாம முதல்ல சிதம்பரத்துக்கு கால் பண்ணி அவங்களுக்கு சம்மதமானு கேட்டுட்டு மாதவன் கிட்ட சொல்லுவோம்.”. என்றார் அண்ணாமலை
அன்று மாலை அண்ணாமலை சிதம்பரத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.
“சிதம்பரம், நல்லபடியா ஊருக்கு போய் சேர்ந்து விட்டீர்களா?”என்று விசாரித்தார்.
“வந்துட்டோம் அண்ணாமலை.” என்றார் சிதம்பரம்
“.சிதம்பரம் எங்க வீட்டு பங்ஷனுக்கு வந்ததுக்கு ரொம்ப நன்றி. எங்க வீட்ல எல்லோருக்கும் உங்க குடும்பத்தை ரொம்ப பிடிச்சு போச்சு .”
“எங்களுக்கும் உங்க வீடு குடும்பத்தில் இருக்கும் எல்லோரையும் ரொம்ப பிடிச்சிருச்சு. ரொம்ப நாளைக்கு அப்புறம் அந்த பக்கம் வந்து உங்க எல்லாரையும் பார்த்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். எங்க அப்பா அம்மாவை கூட பார்த்தோம்.”
“ அவங்க உன்கிட்ட பேசினார்களா?” என்று ஆர்வமாக கேட்டார் அண்ணாமலை.
“இல்லை அண்ணாமலை. என்கிட்ட எதுவும் பேசல. நானும் அவங்க கிட்ட பப்ளிக்கா எப்படி பேசறதுன்னு விட்டுட்டேன். அப்புறம் எப்பயாவது பார்த்தால் பேசலாம்னு நினைச்சுட்டு இருக்கேன்.”
“ஆமாம் சிதம்பரம். நீ இவ்வளவு நாள் அங்கேயே இருந்திட்ட. சரி பரவாயில்லை. ஆனால் இனிமேலாவது இந்த பக்கம் வரப் போக இரு. அப்பதான் உங்க அப்பா அம்மா உன்னை ஏற்றுக் கொள்வார்கள்.”. என்றார் அண்ணாமலை
“நீ சொல்றது சரிதான். ஆனால் எனக்கு வேலையே சரியா இருக்கு. அப்புறம் எங்க அந்த பக்கம் வருவது?
நான் பேசல. ஆனால் மதுமிதா அவங்ககிட்ட பேசி இருக்கா.”
“அப்படியா சிதம்பரம்? தாத்தா, பாட்டி மதுமிதாகிட்ட பேசினார்களா?”
“அம்மா மட்டும் பேசி இருக்காங்க. அப்பா இன்னும் பேசவில்லை. . அதே கோபத்தோடு இருக்காங்க” எ.ன்று இறங்கிய குரலில் வருத்தமாக கூறினார் சிதம்பரம்
அவர் வருத்தத்தை புரிந்துகொண்ட அண்ணாமலை
“இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருப்பாங்க சிதம்பரம்?
எல்லாம் கூடிய சீக்கிரம் பேசி விடுவார்கள். நீ கவலைப்படாதே. மதுமிதா மாதிரி நீயும் கூட அவங்க கிட்ட .பேசி இருக்கலாம்”
“எனக்கும் ஆசை தான் அண்ணாமலை. பார்ப்போம்.”
“சரி சிதம்பரம். நான் ஒரு முக்கியமான விஷயம் உன்கிட்ட பேசலாம்னு கால் பண்ணி இருக்கேன்.”
“சொல்லு அண்ணாமலை. என்ன முக்கியமான விஷயம்?” என்று ஆர்வமானார் சிதம்பரம் .
“அது வந்து. மதுமிதாவுக்கு நீ மாப்பிள்ளை தேடி கிட்டு இருக்கிறதா சொன்னாய் இல்லையா?”
“ஆமாம்” என்று ஆர்வமாகக் கேட்டார் சிதம்பரம்.
“நாங்களும் மாதவனுக்கு பெண் தேடி கிட்டு இருக்கோம். எங்க வீட்ல இருக்கிற எல்லோருக்கும் மதுமிதாவை ரொம்ப பிடிச்சிருக்கு. அதனால மதுமிதாவை மாதவனுக்கு பெண் கேட்கலாம்னு கால் பண்ணினேன். உனக்கும் உங்க வீட்ல இருக்கிற எல்லோருக்கும் முக்கியமா மதுமிதாவுக்கு இதுல விருப்பம் இருந்தால் நாம இதைப் பற்றி மேலே பேசுவோம். இல்லையென்றாலும் பரவாயில்லை. நாம பழையபடி நண்பர்களாகவே இருப்போம். என்ன சொல்ற சிதம்பரம்?” என்றார் அண்ணாமலை.
சிதம்பரத்திற்கு இதைக்கேட்டதும் ஆனந்தமே. எனினும் குடும்பத்தினரை ஆலோசித்த பிறகு இவருக்கு பதில் சொல்லலாம் என்று முடிவு செய்தார்.
எனவே “அண்ணாமலை இதுக்கு பதிலை நான் நாளைக்கு சொல்லட்டுமா? ஏன்னா நான் எல்லோரையும் கேக்கணும் இல்லையா?”
“கண்டிப்பா சிதம்பரம். நீ உன் வீட்டில் எல்லோரிடமும் கலந்துபேசி எனக்கு கூடிய சீக்கிரம் பதில் சொல்லு. போதும். மாதவனுக்கு கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணும் எண்ணத்தில் இருக்கிறோம். அதனாலதான்.”
“சரி அண்ணாமலை. கண்டிப்பா நாளைக்கு நா.ன் உனக்கு போன் பண்ணி சொல்றேன்” என்று கூறிய சிதம்பரம் தொடர்பை துண்டித்தார்.
சிதம்பரத்திற்கு உண்மையில் மிகுந்த மகிழ்ச்சி. தான் நினைத்த மாதிரி மகள் நிறைய சொந்த பந்தங்களுடன் ஒரு பாசமான குடும்பத்தில் வாழ ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதைப்பற்றி நாம் இன்றே குடும்பத்தினரிடம் பேசவேண்டும் என்று நினைத்துக்கொண்டார்.
அன்று இரவு உணவு சாப்பிட்டு முடித்தபிறகு சிதம்பரம் அனைவரையும் ஹாலிற்கு அழைத்தார்.
“நான் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி பேச போகிறேன். இதைக் கேட்டு நீங்க எல்லோரும் அவங்கவங்க அபிப்பிராயத்தை சொல்லுங்க.” என்று ஆரம்பித்தார்.
வள்ளிக்கு இந்த விபரம் ஏற்கனவே தெரியும் என்றாலும் அமைதியாகவே இருந்தார்.
“மதுசுதா, என்னோட பிரெண்ட அண்ணாமலையின் அறுபதாம் கல்யாணத்துக்கு போயிருந்தோம் இல்லையா? அங்க அவரோட ரெண்டாவது பையன் மாதவனை எனக்கும் அம்மாவுக்கும் ரொம்ப பிடிச்சுப் போச்சு.
ரொம்ப நல்ல பையன். பொறுப்பா அப்பாவின் வியாபாரத்தை கவனித்துக் கொண்டு இருக்காரு. எங்ககிட்ட மட்டும் இல்லை எல்லோர்கிட்டையும் மரியாதையா நடந்து கொள்கிறார்.” என்றார் சிதம்பரம்.
“சரி அப்பா. மாதவன் ரொம்ப நல்ல பையன். இப்போ எதுக்காக எங்களை இங்க கூப்பிட்டு அவரைப்பற்றி சொல்லிக்கிட்டு இருக்கீங்க?” என்று புரியாமல் கேட்டான் மதுசுதன்.
“இருப்பா சொல்றேன்.” என்று அவனிடம் கூறிவிட்டு
“மது நீ மாதவனை பற்றி என்ன நினைக்கிற?” என்று கேட்டார்.
“நான் என்ன அப்பா சொல்றது? அதான் நீங்களே அவரைப்பற்றி எல்லாத்தையும் சொல்லிட்டீங்களே.” என்றாள் மகள்.
“அதுக்கு இல்லமா. அவரை உனக்கு பிடிச்சிருக்கா?” என்று மகளின் கண்களை பார்த்து கேட்டார் சிதம்பரம்.
அவளுக்கு புரிந்து விட்டது. எனினும்
“என்னப்பா அவரை எனக்கு….” என்று முடிக்காமல் கேட்டாள் மதுமிதா.
“ஆமாமா. அவரை உனக்கு மாப்பிள்ளை பார்க்கலாம்னு நானும் அம்மாவும் யோசிச்சிட்டு இருக்கிறோம்.” என்றார்
சிதம்பரம்.
“என்னப்பா இப்படி திடீர்னு கேட்டா? நான் என்ன சொல்றது? நான் அந்த மாதிரி அவரை பார்க்கவே இல்லை.” என்றாள் மகள்.