நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்“அக்கா இந்த நீலக்கலர் கல்லை இங்க தானே வைத்து தைக்கணும்?” என்று கேட்டாள் சரளா.
“ஆமாம் சரளா பார்டர் மாதிரி அந்த ஸ்டோனை வைத்து தைக்கணும். நல்லா நிக்கிற மாதிரி தைக்கணும். சரியா?”
“சரி அக்கா.” என்றாள் மதுமிதாவிடம் தையல் வேலை செய்து கொண்டிருக்கும் சரளா.
கடை கிடைக்காததால் வீட்டிலேயே ஒரு அறையை ஒதுக்கி அதில் எம்பிராய்டரி மெஷின், தையல் மெஷின் போன்ற மெஷின்களை வாங்கிப்போட்டு தையல் தெரிந்த சரளாவை வேலைக்கு வைத்து தன் வேலையைசெய்து கொண்டிருந்தாள் மதுமிதா.
“கொஞ்சம் கேப் விட்டு தைக்கணும். ரொம்ப நெருக்கமா தைக்காதே. ரொம்ப நெருக்கமா நிறைய ஸ்டோன் வைத்தா டிரஸ் ரொம்ப கிராண்டா ஆயிடும். சிம்பிளா இருந்தா தான் இந்த புடவை நல்லா இருக்கும். நல்ல ரிச் லுக் வரும். அதனால பார்த்து அழகா செய்.”
“ஓகே ஓகே. அக்கா. புரிஞ்சுது. நீங்க சொன்ன மாதிரியே செய்கிறேன்.” என்று விட்டு தன் தையல் வேலையை தொடர்ந்தாள் சரளா.
அப்பொழுது மதுமிதாவின் கைபேசி சிணுங்கியது.
எடுத்து கைபேசியை பார்த்த மதுமிதா கீதா தான் கூப்பிடுகிறாள் என்று புரிந்துகொண்டு “சொல்லுடி” என்றாள். மதுமிதா
“மது நாளைக்கு காலையில அண்ணா டவர் பார்க் போகலாம் வரியா?”
“என்னடி திடீர்னு?”
“சும்மாதான் மது. தினமும் பக்கத்துல இருக்கிற பார்க்கல வாக்கிங் போய் போர் அடிக்குது அதான் அண்ணா டவர் பார்க் போகலாமான்னு கேட்கலாம்னு போன் பண்ணினேன்.” என்றாள் கீதா.
“எனக்கும் பக்கத்துல இருக்குற பார்க் கொஞ்சம் போர் தான் அடிக்குது. நாம அண்ணா டவர் பார்க் போகலாம். அது பெருசா இருக்கும். இல்லையா? சரி. நான் பார்க்கல நாளைக்கு ஏழு மணிக்கு உன்னை மீட் பண்றேன்.”
“ மது காலை போகும் போது என்னை அப்படியே கூட்டிட்டு போறியா?”
“
என்னது போகும் போதா? எங்க வீடு சூளைமேட்டில் இருக்கு. உங்க வீடு அமைந்தகரையில் இருக்கு. அண்ணா டவர் பார்க் அண்ணாநகரில் இருக்கு. சூளைமேட்டில் இருந்து அமைந்தகரை வழியா அண்ணாநகர் போகணுமா? எனக்கு என்ன வேண்டுதலா சுத்திகிட்டு போகணும்னு. நீயே வா.” என்றாள் மதுமிதா.
“அம்மா வீட்ல மைசூர் பாகு, முறுக்கு பண்ணினாங்க. உனக்கு கொடுக்கணும்னு சொல்லிட்டு இருக்காங்க. நான்இரண்டு நாள் கழித்து ஸ்கூட்டியில் எடுத்துட்டு வரலாம், ஆனால் முறுக்கு உடைந்தா, அதுக்கு நான் பொறுப்பில்லை நீ கார் எடுத்துட்டு வந்தா முறுக்கு உனக்கு முழுசா கிடைக்கும். எப்படி வசதி” என்று கேட்டாள் கீதா.
“என்னது மைசூர்பாகா? இதை முன்னாடியே சொல்றது இல்லையா? நாளைக்கு காலையில ஆறே முக்காலுக்கு உங்க வீட்டுக்கு முன்னாடி காரோட நான் இருப்பேன்.” என்று கூறி போனை வைத்தாள் மதுமிதா.
“ வாக்கிங் செல்வதற்கு டி ஷர்ட், பேன்ட் அணிந்து தயாராக வெளியே வந்தால் கீதா.
கார் வரும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தாள். அங்கு மதுமிதா தான் காரில் வந்து கொண்டிருந்தாள்.
கீதாவின் வீட்டுக்கு முன்பு காரை நிறுத்தி காரிலிருந்து இறங்கினாள்.
“கரெக்டா சொன்ன மாதிரி டைமுக்கு வந்துட்டியே. சூப்பர்டி.”
“ஆமாம் பின்னே உங்க அம்மாவோட மைசூர்பாகு, முறுக்கு வாசனை என்னை இங்க இழுத்துட்டு வந்திருச்சு.”
“ சரி உள்ளே வா.” என்று அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றாள் கீதா.
“என்னம்மா எப்படி இருக்க மது? அம்மா அப்பா, அண்ணன் எல்லாரும் நல்லா இருக்காங்களா?” என்று விசாரித்தார் கீதாவின் தாய் ஜானகி.
“நாங்க எல்லோரும் நல்லா இருக்கோம். ஆன்ட்டி. நீங்க நல்லா இருக்கீங்களா? அங்கிள், தம்பி கார்த்திக் நல்லா இருக்காங்களா?” என்று மதுமிதா விசாரித்தாள்.
“எல்லோரும் நல்லா இருக்கோம் மது. உனக்காக மைசூர்பாகு, முறுக்கு எடுத்து வைத்திருக்கிறேன்.” என்று இரண்டு பெரிய டப்பாக்களை காண்பித்தார் கீதாவின் தாய் .
“என்ன ஆன்ட்டி இவ்வளவு எடுத்து வச்சு இருக்கீங்க?”
“கொஞ்சம் தான் மது. கரெக்டா இருக்கும். ” என்றார் ஜானகி.
“சரிங்க ஆன்ட்டி.” என்று இரண்டையும் எடுத்து கார் டிக்கியில் இந்த பக்கம் அந்த பக்கம் ஆடாத படி டிக்கியில் இருந்த நியூஸ் பேப்பரை நடுவில் வைத்தாள்.
“என்னடி ரொம்ப பிரேபார்ட்டா வந்து இருக்க போல இருக்கு.
என்று கேட்டாள் கீதா.
“இல்லடி எங்க டிக்கியில் எப்பயுமே நியூஸ்பேப்பர் இந்த மாதிரி வேலைக்காகவே வைத்திருப்போம். அதனாலதான் இப்போ வசதியா இருக்கு.”
“ஓ சரிதான்.” என்றாள் கீதா.
ஜானகி இரண்டு காபி டம்ளரை தட்டில் வைத்து எடுத்து வந்து மதுமிதா கீதாவுக்கு கொடுத்தார்.
“காபி குடிச்சிட்டு பார்க் போயிட்டு வாங்க.” என்றாள் ஜானகி.
“சரிங்க ஆண்ட்டி.” என்றபடி மதுமிதா காபி டம்ளரை எடுத்துக் கொண்டு வீட்டு முற்றத்தில் போட்டிருந்த நாற்காலியில் மதுமிதா, கீதா உட்கார்ந்தனர்.
மதுமிதா காபியை சுவைத்தபடியே வீட்டின் முன்பு இருந்த பிள்ளையார் சிலையை பார்த்தாள்.
அந்த சிலையைப் பார்த்ததும் மதுமிதாவுக்கு அதை வாங்கிய இடம் ஞாபகம் வந்தது.
அன்று நடந்ததை நினைத்து பார்த்தாள்.
“கீதா, இந்த பிள்ளையார் சிலையை பாரேன். எவ்வளவு அழகா இருக்கு ?” என்று அந்தத் திருவிழாவில் வெவ்வேறு தெய்வங்களின் சிலையை விற்றுக்கொண்டிருந்த கடையை காண்பித்தாள் மதுமிதா.
அந்தக் கடையில் பிள்ளையார் சிலை, ஏசுநாதர் சிலை, வேளாங்கண்ணி மாதாவின் சிலை, முருகர் வள்ளி தெய்வானையுடன் இருக்கும் சிலை, கிருஷ்ணர் ராதை உடன் இருக்கும் சிலை, பிள்ளையார் சரஸ்வதி லட்சுமி உடனிருக்கும் சிலை மேலும் பற்பல சிலைகள் அழகாக இருந்தன.
“உங்க அம்மா பிள்ளையார் சிலை வேணும்னு சொன்னாங்கன்னு சொன்னியே. வாடி அதை போய் வாங்கிட்டு போகலாம்.” என்றாள் மதுமிதா.
“வேண்டாம்டி. இங்கு சூழ்நிலை நல்லாவே இல்லை. நாம போயிடலாம் வா.” என்று தோழியை அழைத்தாலும் அவளது கண் அந்த பிள்ளையார் சிலையின் மீதே இருந்தது.
அந்த சிலையை அவ்வளவு அழகாக வடிவமைத்து இருந்தனர்.
“இந்த சிலையை வாங்க நமக்கு எவ்வளவு நேரம் ஆக போகுது? வாடி. பத்து நிமிஷத்துல வாங்கிட்டு போயிடலாம். இந்தக் திருவிழாவில் நாம மட்டும் இல்லையே. இன்னும் நிறைய பேர் இருக்காங்க. எல்லோரும் தைரியமா தானே இருக்காங்க. நமக்கு என்ன பயம்? வாடி.” என்று மதுமிதா தைரியம் கூற கீதா ஓரளவு பயம் தெளிந்து
“சரி வா போகலாம்.” என்று கூற இருவரும் அந்த கடைக்கு சென்றனர்.
அருகில் சென்று பார்த்த இருவரும் அந்த சிலையின் அழகை ரசித்தனர் . அங்கு இருந்த பிள்ளையார் சிலைகளில் ஒன்றை இருவரும் தேர்ந்தெடுத்தனர்.
“இந்தப் பிள்ளையார் சிலையை பாரடி. எலியுடன் ரொம்ப அழகா இருக்கு.” என்று மதுமிதா காண்பிக்க
“ ஆமாம் மது . முகம் ரொம்ப அழகா தெளிவா இருக்கு.” என்று கீதாவும் ஒத்துக்கொள்ள இருவரும் அதனை பேரம் பேசாமல் கடைக்கார. பெண்மணி சொன்ன விலைக்கு வாங்கினர்
அவர் அந்த சிலையை செய்தித்தாள்களை சுற்றி ஒரு பையில் போட்டு கொடுத்தார்.
“மது இப்போ இந்த சிலையை எப்படி பத்திரமா நாம வீட்டுக்கு எடுத்துட்டு போறது? நம்மகிட்ட எந்த பையும் இல்லை. என்னடி பண்றது?” என்று யோசனையாக கேட்டாள் கீதா.
“இதெல்லாம் ஒரு பிரச்சனையா இருடி. நம்மகிட்ட இல்லைன்னா என்ன நம்ம கூட வந்த அவந்திகா கிட்ட பெரிய பேக் இருக்கு. இரு அவளை கூப்பிடுறேன்.” என்று கூறிய மதுமிதா “அவந்திகா”. என்று குரல் கொடுத்தாள்
அவந்திகா
“என்னடி?” என்று கேட்டபடி அங்கு வந்தாள்.
“இந்த பிள்ளையார் சிலையை உன்னோட பேக்ல வச்சுக்கோ. என்கிட்ட பேக் இல்ல அவந்தி.”
“ சரி மது. குடு.” என்று வாங்கி அவளது பெரிய பையில் வைத்துக் கொண்டாள் அவந்திகா.
“சரி வாங்க நாம மத்தவங்களையும் கூட்டிக்கிட்டு இங்கே இருந்து போய்டலாம்.” என்றாள் கீதா.
“நான் இன்னும் நிறைய கடை பார்க்க வேண்டி இருக்கு. என்றாள் அவந்திகா.
“ஆமாம் கீதா எனக்கும் இங்கே இருந்து வர்றதுக்கு மனசே இல்ல. அந்தப் பக்கம் இன்னும் நிறைய கடை இருக்கு. அதையும் பார்த்துட்டு போகலாம்.” என்றாள் மதுமிதா ஆர்வமாக .
“சொன்னா கேக்க மாட்டேங்கிறீங்க. இங்கே ஏதேதோ சத்தம் கேட்குது. வாங்க போகலாம்.” என்றாள் கீதா.
அப்போது விசில் சத்தம் கேட்டது.
“ கீதா போலீஸ் வந்துட்டாங்கன்னு நினைக்கிறேன். விசில் சத்தம் கேக்குது பாரு. இனிமேல் நமக்கு பயம் இல்லை.”. என்றால் மதுமிதா
“ஆமாண்டி இந்த பக்கம் தான் சத்தம் வந்தது.” என்று கையை காட்டி கூறினாள் அவந்திகா.
“வாங்கடி போய் பார்க்கலாம்.” என்று கூப்பிட்டாள். அவந்திகா
“ வேண்டாம் மது. இது நமக்கு தெரியாத இடம். போய்டலாம் வாங்க.” என்று மறுத்தாள் கீதா.
அவந்திகா “அதான் போலீஸ் வந்துட்டாங்க இல்ல? நமக்கு என்ன பயன்? வாங்க போகலாம்.” என்று கூற மற்ற இருவரும் அவளுடன் தயங்கியபடியே அங்கு சென்றனர்.
அங்கு ஒரு கூட்டம் சேர்ந்திருந்தது.. கூட்டத்துக்கு நடுவில் 8 ஆண்கள் அடித்துக் கொண்டிருந்தனர்
“என்னடி போலீஸ் வந்துடுச்சுன்னு சொன்ன. இப்போ இவங்க இப்படி அடிச்சிக்கிட்டு இருக்காங்க?” என்று கேட்டாள் கீதா.
“எனக்கும் அதுதான் புரியலை. விசில் சத்தம் கேட்டுச்சு தானே?” என்று ஞாபகப் படுத்தினாள் மதுமிதா.