திவ்யா அப்படி சொல்லி விட்டு சென்றதும் கனகவேலின் கோபம் இன்னமும் கூடியது. ராதிகாவைப் பார்த்து முறைத்தவர்,
“நல்லா வளர்த்து வச்சிருக்க பொண்ணை..!” என்று அவரிடம் எரிந்து விழுந்தார் கனகவேல்.
“நான் என்னங்க செய்யட்டும். உங்களை மாதிரியே அவளும் பிடிவாதம் பிடிச்சா, அதுக்கு நான் பொறுப்பா..? அவ ஆசைப்படுற வாழ்க்கையை அவளுக்கு அமைச்சுக் கொடுக்க வேண்டியது, ஒரு அப்பாவா உங்களோட கடமை. அதை விட்டுட்டு என்னை சத்தம் போடுறிங்க. சின்ன வயசுல இருந்து நீங்கதான செல்லம் குடுத்து வளர்த்திங்க. இப்ப பேச்சு மட்டும் எனக்கா..?” என்ற ராதிகா, கோபமாய் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டார்.
“அந்த ஒரு காரணத்துக்காகத் தாண்டி, ஆகாதவன் வீடுன்னு தெரிஞ்சும் அங்க போனேன். போய் அசிங்கப்பட்டது தான் மிச்சம்..!” என்றார் கனகவேல்.
‘அவங்களை அசிங்கப்படுத்தியத்தை விடவா..?’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார் ராதிகா.அவரால் அதை வெளியில் சொல்ல முடியாதே.
“இந்த கல்யாணம் நடக்குறதுக்கான வாய்ப்பே இல்லை..! அது மட்டும் உறுதி..!” என்றார்.
“திவ்யாவும் மனசை மாத்திக்கிற மாதிரி தெரியலை..!” என்றார் ராதிகா.
“இனி அவனைக் கடத்திட்டு வந்து கல்யாணம் பண்ணி வச்சாத்தாண்டி ஆச்சு..!” என்று கனகவேல் எரிச்சலுடன் சொல்ல,
“உங்க பொண்ணு அந்த அளவுக்குப் போனாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல..!” என்றார் ராதிகா.
“கட்சிலையே ஆயிரத்தெட்டுப் பிரச்சனை.இப்ப புதுசா இந்த பிரச்சனை வேறயா..? விளங்கிடும்..!” என்ற கனகவேல், தன்னுடைய அலுவலக அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டார்.
ஆனால் ராதிகாவிற்கு தான் மனதில் ஆயிரம் சிந்தனைகள் ஓடியது.திவ்யாவை எப்படியாவது விஜய்க்கு கட்டி வைத்தால் போதும் என்று தான் ராதிகாவும் நினைத்தார். அதற்கு காரணம் வேறு எதுவுமே இல்லை.பெண்ணை ஒரு நல்லவன் கையில் கொடுக்கும் ஒரு சராசரி தாயின் மனநிலை மட்டுமே. ஆனால் அதற்கு பையனின் சம்மதமும் வேண்டும் என்பதை மறந்தே போனார் ராதிகா.
கனகவேலுவையே ஜீரணிக்க முடியாதவர்கள், திவ்யாவை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்..?
விஜய் முற்றிலும் இறுகிப் போனான். பிரவீனிடம் கேட்டு அவன் எந்த பதிலையும் சொல்லவில்லை என்பதாலேயே அவன் தனக்குள் மீண்டும் இறுகிப் போனான். சில விஷயங்களை யாராவது சொன்னால் மட்டுமே அவனுக்குத் தெரியும். அப்படி ஒரு நிலையில் தான் இருந்தான் விஜய். ஆனால் அதற்கு அங்கு யாரும் தயாராய் இல்லை என்பது, அனைவரின் மௌனத்திலும் தெரிந்தது.
கனகவேல் வருகையும், அதைத் தொடர்ந்து வீட்டில் குடிகொண்டிருந்த அமைதியையும் அவனும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான். பிரவீனோ அதற்குப் பிறகு விஜயிடம் பேசவே பயந்தான். தன்னை மீறி எதுவும் சொல்லி விடுவோமோ என்ற பயம் தான் அவனுக்கு.
ராஜ சேகர் தூக்க மாத்திரையின் உதவியுடன் தூங்கிக் கொண்டிருந்ததால், கனகவேலின் வருகையை அவர் அறிந்திருக்கவில்லை.மொத்தத்தில் அந்த நாள் அந்த வீட்டில் யாருக்கும் நிம்மதியான நாளாக அமையவில்லை.
“என்ன துளசி..? வெளிய போகணும்ன்னு சொன்ன..?” என்று வள்ளி தான் மெதுவாக ஆரம்பித்தார்.
“வீட்ல நடக்குற ஒவ்வொன்னையும் பார்த்தா, சந்தோஷமா வெளிய போற மாதிரியா இருக்கு..?” என்றாள் அமைதியாக.
“இங்க நடக்குற எதையும் போட்டு நீ குழப்பிக்காத.நாங்க எது செஞ்சாலும் உன்னோட நல்லதுக்குத்தான்.இந்த பாட்டி சொல்றதை கேளு துளசி..!” என்றார் வள்ளி.
“உங்க பேச்சைக் கேட்குறதுக்கு, நான் கிளம்பி வெளியவே போய்டுவேன்..!” என்றவள், போனை எடுத்து ரோஸ்லினுக்கு அழைத்தாள்.
“ரோசு..! நீ அங்க வந்துடு..! நானும் வந்துடுறேன்..!” என்று சொல்லிவிட்டு போனை வைக்க,
“தனியா போகவேண்டாம் துளசி. விஜய்யைத் துணைக்குக் கூட்டிட்டுப் போ..!” என்று வள்ளியம்மை சொல்ல,அவரை முறைத்தாள் துளசி.
‘இந்த கிழவித் தொல்லை, எனக்கு என்னைக்குத்தான் விடுமோ..!’ என்று அவள் மனதிற்குள் பேசிக் கொண்டிருக்க,
அதற்குள் வள்ளி,
“விஜய்..விஜய்..!” என்று அழைக்க, அவரின் குரலில்… வந்து எட்டிப் பார்த்தான்.
“சொல்லுங்க பாட்டி..!” என்றான் வெறுமையான குரலில்.
“அது ஒண்ணுமில்லை. நம்ம துளசி வெளிய போகணும்ன்னு சொல்றா. பிரவீண் எங்கையோ கிளம்பிப் போய்ட்டான். நீ துணைக்குப் போயிட்டு வாப்பா..!” என்றார் நயந்த குரலில்.
“அருண் இருந்தா அவனை அனுப்புங்க. எனக்கு வேலை இருக்கு. என்னால முடியாது..!” என்றான் விஜய் பட்டென்று.
அவன் அப்படி சொல்லவும் துளசி எரிச்சலுடன் வள்ளியைப் பார்த்த பார்வையில், நெருப்பு கொழுந்து விட்டு எரிந்தது.
“நான் என்ன சின்ன பிள்ளையா..? எனக்குத் தெரியும். நீங்க உங்க வேலையைப் பாருங்க..!” என்று எரிந்து விழுந்தாள்.
“நீ சும்மாகிட..! உனக்கும் ஒன்னும் தெரியாது..!” என்றவர்,
“எனக்காக போயிட்டு வா விஜய். உனக்கும் ஒரு மாறுதலா இருக்கும்ல..!” என்றார் வள்ளி.
அவர் அப்படி சொல்லவும், துளசியையே ஆழ்ந்து பார்த்தவன், மனதிற்குள் என்ன நினைத்தானோ…
“கிளம்ப சொல்லுங்க..! வரேன்..!” என்று சொல்லிவிட்டு சென்றான்.
“இதைக் கூட துரை அதிகாரமாத்தான் சொல்லுவாரோ..? இதான் சாக்குன்னு வரான் பாரு. என் கிரகம் இதெல்லாம் தாங்கித்தான் ஆகணும்ன்னு இருக்கு..!” என்று மனதிற்குள் எண்ணியவள், வள்ளியை முறைத்துக் கொண்டே தான் சென்றாள்.
“இப்ப எதுக்கு அத்தை இந்த வேண்டாத வேலை. அவங்க ரெண்டு பேருக்கும் சுத்தமா ஆகமாட்டேங்குது. இப்ப போய் ரெண்டு பேரையும் ஒண்ணா அனுப்பி வைக்கிறிங்க..? சண்டை கட்டிட்டு தான் வரப்போறாங்க..!”என்றார் நீலாவதி.
“எனக்குத் தெரியும் என்ன செய்யனும்ன்னு. உனக்கு விட்ட வேலையை மட்டும் நீ பாரு நீலாவதி..!” என்றார் வள்ளி அதிகாரமாக.
அவ்வளவு தான்…! அதற்கு பிறகு நீலா வாயைத் திறப்பாரா என்ன..? ஆனால் அவரின் மனதிற்குள் இருப்பது இவர்கள் யாருக்கும் தெரியாதே.
அறைக்குள் சென்ற விஜய்க்கு ஒரே குழப்பம்.
‘இப்ப எதுக்கு அவகூட போக சரின்னு சொன்ன..?’ என்றது அவனின் மனம்.
‘இவ வாயைக் கிண்டுனா ஏதாவது கிடைக்குமான்னு பார்க்கத்தான்..’ என்று பதில் சொன்னான்.
‘இதுக்காக மட்டும் தான் சரின்னு சொன்னியா..?’ என்றது மனம்.
‘கண்டிப்பா..! வேற எந்த காரணமும் இல்லை’ என்றான் பதிலுக்கு.
‘நம்பிட்டேன்டா உன்னை..! அவளை, வேண்டாம் வேண்டாம்ன்னு சொல்ல வேண்டியது. அப்பறம் அந்த மூஞ்சிய பார்த்த உடனே தலையை ஆட்டிட வேண்டியது..!’ என்று சொல்லி எக்காளமிட்டது மனசாட்சி. ஆனால் அதையெல்லாம் விஜய் காதில் வாங்கவில்லை. அவனுடைய குறிக்கோள் ஒன்று தான். அதை அவன் மட்டுமே அறிவான்.
ஜீன்சும் குர்தியுமாக கிளம்பி வந்தவள் அவளுடைய காரை எடுக்க செல்ல, விஜய்யோ அவனின் காரில் அமர்ந்திருந்தான். துளசி வீம்புக்கென்று நின்று நின்று பார்க்க, விஜய்யோ அவன் காரை விட்டு இறங்கினான் இல்லை.
“உடம்பு முழுக்கத் திமிர் மட்டும் தான் இருக்கு இவனுக்கு. துரையோட கார்ல தான் போகனுமா..? ஏன் இவன் என்னோட கார்ல வரமாட்டானா…? எல்லாம் திமிர்..உடம்பு முழுக்க திமிரை மட்டுமே வளர்த்து வச்சிருக்கான் தடி மாடு..!” என்று ஏகத்திற்கும் மனதிற்குள் வசை பாடிக் கொண்டே, அவனுடைய காரில் வந்து அமர்ந்தாள். வீம்புக்கென்று பின்னால் அமர,
“நான் என்ன உனக்கு வேலைக்காரனா…?” என்று பல்லைக் கடித்தான் விஜய்.
“அதுக்குக் கூட உனக்குத் தகுதியில்லை. இந்த ஆசை வேற உனக்கு இருக்கா..? நெவர்..” என்றாள் திமிராய்.
அவனின் கை முஷ்டிகள் இறுகியது. “எந்த ராங்கிகிட்டையும் புருஷனா வேலை பார்க்கணும்ன்ற அவசியம் எனக்கு இல்லை. சோ, பயப்படாம முன்னாடி வந்து உட்காரு..!” என்றான் விஜய்யும் பதிலுக்கு.
வேறு வழியில்லாமல் அவள் தான் இறங்கிப் போக வேண்டியதாய் இருந்தது. அதே எரிச்சலுடன் முன்னால் சென்று அமர்ந்தாள். அவள் அமர்ந்தவுடன் வண்டியை எடுத்தவன், எதுவும் பேசாமல் ஓட்டினான்.
துளசிக்கு போன் வர,
“சொல்லு ரோசு..! நான் கிளம்பிட்டேன். ஆன் தி வே..!” என்றவள் அவள் வர வேண்டிய இடத்தை, அவளுக்கு சொல்வதைப் போல் விஜய்க்கும் சேர்த்து சொன்னாள்.
“கோயம்புத்தூர் வரைக்கும் என்னால வர முடியாது. இப்பவே லேட். அங்க போக நினைச்சவங்க காலையில சீக்கிரம் கிளம்பி போயிருக்கனும்..!” என்றான்.
“காலையில சீக்கிரம் கிளம்பி போற நிலமையில இன்னைக்கு நம்ம வீடு இருந்துச்சு. இஷ்ட்டம்ன்னா வா..! இல்லையா போயிட்டே இரு. நாங்க ரோசு கார்ல போய்க்குவோம்..!” என்றாள் பட்டென்று.
“எனக்கு எதுவும் வேலை இல்லைன்னு நினைச்சியா..? ஏதோ உள்ளூர்ல ஊரு சுத்தப் போறிங்கன்னு பார்த்தா, கோயம்புத்தூர் வரைக்கும் போகணும்கிற. ஏன் ஈரோட்ல இல்லாத இடமா..?” என்றான் எரிச்சலுடன்.
“அது எங்க இஷ்ட்டம். லேட் நைட் ஆனாலும் பரவாயில்லை. நாளைக்கு விடுஞ்சாலும் பரவாயில்லை. நாங்க பார்த்துப்போம்..!” என்றாள்.
“அப்படியெல்லாம் விட முடியாது. இங்கயே என்ன வாங்கணுமோ வாங்குங்க..! எப்படி கூட்டிட்டு வந்தேனோ அப்படியே கூட்டிட்டு போய் வீட்ல விட்டுடுறேன். அதுக்கப்பறம் நீ எங்க வேண்ணாலும் போ..! என்ன வேண்ணாலும் செய். ஐ டோன்ட் கேர்..!” என்றான்.
“இவரு பெரிய கடமை கண்ணாயிரம். இவரு கடமையில இருந்து கொஞ்சமும் தவற மாட்டாரு..!” என்றாள் நக்கலாய்.
“சொன்னாலும் சொல்லாட்டியும் எடுத்த பொறுப்பை இடையில விடுறவன் இல்லை இந்த விஜய்..!” என்றான்.
“பார்டா..! சார் பண்ற காமெடியை..! இப்படியெல்லாம் வெளிய சொல்லிடாத. சிரிச்சுடுவாங்க..!” என்றாள் பேச்சு வாக்கில்.
“இதுல சிரிக்கிற அளவுக்கு என்ன இருக்கு..?” என்ற விஜய்யின் வார்த்தைகள் எதார்த்தமாக இருந்தாலும், அவனின் பார்வை, அவள் சொல்லப் போகும் பதிலையே எதிர் நோக்கியிருந்தது.
“உன்னை நம்பிக் கொடுக்குற பொறுப்பை.. நீ எப்படி எல்லாம் பார்த்துப்பன்னு நம்ப குடும்பத்துக்கேத் தெரியும். இதெல்லாம் தெரியாத மாதிரி நீ பண்ற காமெடி தான் அதிகம்..!” என்றாள் சிரிப்புடன்.
“அதான்.. அப்படி என்ன பண்ணிட்டேன்னு கேட்குறேன்..?” என்றான் விடாமல்.
“அதை என் வாயால வேற சொல்லனுமா..?” என்றாள் துளசி.
“உன்கிட்ட கேட்டா உன் வாயால தான் சொல்லணும்..!” என்று சொன்ன விஜய்க்கு பொறுமை போய்க் கொண்டிருந்தது.
அவள் மீண்டும் ஏதோ சொல்ல வாயைத் திறக்கும் போது… முன்னால், ரோட்டின் ஓரத்தில் தோழியைக் கண்டு விட்ட சந்தோஷத்தில், விஜய்யை மறந்தாள்.
“ஹேய்… அங்க நிறுத்து. என் பிரண்ட் ரோசு நிக்குறா..?” என்றாள்.
எரிச்சலில் பல்லைக் கடித்த விஜய்.. “பேரைப் பாரு ரோசு..லூசுன்னுட்டு…!” என்று முனங்கினான்.
“ஹாய் துளசி..!” என்றவள், அருகில் இருந்த விஜய்யைப் பார்த்து அதிர்ந்தாள். பின்பு தெளிந்தவள்,
“ஹலோ விஜய் அண்ணா..! எப்படி இருக்கீங்க..?” என்றாள் சம்பிரதாயமாய்.
“நல்லா இருக்கேன் ரோஸ்லின். நீ எப்படி இருக்க..?” என்றான் அவனும்.
“நான் நல்லா இருக்கேன் அண்ணா..!” என்றவள் பின்னால் ஏறிக் கொண்டாள்.
விஜய்யை கண்டிப்பாக துளசியுடன் எதிர்பார்க்கவில்லை அவள். ஆனால் அவளுக்கு விஜய்யை நன்றாகத் தெரியும். அதனால் எப்போதும் போல் பேசி வைத்தாள்.
அவர்கள் ஈரோட்டையே ஒரு சுத்து சுத்த, விஜய்க்கு நேரம் ஆக ஆக பொறுமை பறந்து கொண்டிருந்தது. துளசி வீம்புக்கு செய்வதைப் போல் இருந்தது அவனுக்கு. இருந்தாலும் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டான்.
அவர்கள் ஒரு பெரிய துணிக்கடையில் நுழைய, சாலையின் எதிர்புறம் வந்த திவ்யா விஜய்யைக் கண்டு கொண்டாள். அவனிடம் பேசி விடும் பொருட்டு, காரைத் திருப்பிக் கொண்டு வந்து, அவன் காரின் அருகிலேயே பார்க் செய்து விட்டு, கடைக்குள் சென்றாள்.
அங்கு விஜய், துளசியின் அருகில் நிற்க, அவளும் ரோஸ்லினும் மும்பாரமாய் பேசிக் கொண்டு, அவர்களுக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டிருந்தனர். ஏனோ அதைப் பார்த்த திவ்யாவிற்கு பத்திக் கொண்டு வந்தது.
அதே நேரம் விஜய்க்கு ஒரு போன் வர, பேசிக் கொண்டே அவள் அருகில் இருந்து நகர்ந்தான் விஜய். அந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டாள் திவ்யா. ஏனோ அவளுக்கு, முதல் முறை கை கொடுக்காமல் திமிராய்ப் பார்த்த துளசியை சுத்தமாக பிடிக்காமல் போனது. அதிலும் விஜய்க்கு அத்தை மகள் என்று தெரிந்தவுடன் அறவே பிடிக்கவில்லை.
ரோஸ்லின் ஒரு உடையை எடுத்துக் கொண்டு டிரையல் ரூமிற்கு செல்ல, துளசியின் அருகில் சென்றாள் திவ்யா.
“ஹெல்லோ மிஸ். துளசி..!” என்றாள் திவ்யா.
அவளை மேலும் கீழும் பார்த்தவள், அவளைத் தெரியாது என்ற பாவனையை கண்ணில் படரவிட்டாள்.
“என்னைத் தெரியலையா..?” என்றாள் திவ்யா, உள்ளே இருந்த புகைச்சலை வெளியே காட்டாமல்.
“இல்லை தெரியலை..! யார் நீங்க..?” என்றாள் விஷ்வ துளசி.
“நான் திவ்யா..!” என்றாள்.
“சாரி…! அப்படி யாரையும் எனக்குத் தெரியாது..!” என்றபடி துளசி திரும்பப் போக,
“அதெப்படித் தெரியாமப் போகும். அப்படித் தெரியலைன்னாலும் இனிமேல் தெரிஞ்சுக்க வேண்டியது உன் கடமை இல்லையா..?” என்றாள் திமிராக.
“என்ன உளர்ற..?” என்றாள்.
“நான் சரியாத்தான் பேசிட்டு இருக்கேன்.எங்கப்பா உங்க வீட்டுக்கு விஜய்யைக் கேட்டு வந்தாரே… உனக்குத் தெரியாதா..?” என்றாள் திவ்யா.
“அந்த கருமம் எல்லாம் தெரியும். இப்ப அதுக்கு என்னாங்குற..?” என்று துளசி எரிச்சலாய் கேட்க,
“இல்லை.. எப்படியும் விஜய் சம்மதம் சொல்லிடுவாரு. அதனால நீ ரொம்ப ஒட்டி உரசாம நில்லு..!” என்றாள்.
“ரொம்ப சந்தோசம்..! அவன் சம்மதம் சொல்லிட்டா ரெண்டு பெரும் கல்யாணம் பண்ணி, சந்தோஷமா பிள்ளை குட்டிங்களோட வாழுங்க..!” என்றாள் துளசி, விஜய் மீதிருந்த எரிச்சலில்.
அது புரியாத திவ்யா… “ என்ன விஜய் சம்மதிக்க மாட்டாருன்னு திமிர்ல பேசுறியா..? எப்படி சம்மதிக்க வைக்கிறேன்னு பாரு..!” என்றாள் திவ்யா.
“அட அற்ப பதரே..?” என்று மனதில் நினைத்த துளசி,
“அது தான் உனக்கே தெரியுதுல்ல.அப்பறம் ஏன் வழிய வந்து வாங்கிக் கட்டுற. வேலையைப் பார்த்துட்டு போவியா..?” என்றாள்.
அவளின் இந்த திமிரான பேச்சும், மதிக்காத தன்மையும் திவ்யாவை சீண்டி விட,
“நான் யாருன்னு தெரியுமா..?” என்றாள் எரிச்சல் மிகுந்த குரலில்.
“அது என்ன தேவைக்கு..?” என்று அசால்ட்டாய் திரும்பப் போன துளசிக்கு, அடுத்து திவ்யா பேசிய அனைத்தும் கொஞ்சம் அதிர்ச்சி தான். அதுவரை திமிராக பதில் சொல்லிக் கொண்டிருந்த துளசி, திவ்யாவின் வார்த்தைகளில் மேலும் மேலும் இறுகினாள்.
அவள் முன் அழுதுவிடக் கூடாது என்பதற்காகவே தன்னைக் கட்டுப் படுத்தி வைத்திருந்தாள் துளசி.
“என்ன பேச்சு வரலையா…? உனக்கு எப்படி வரும்…? உங்க வரலாறு எல்லாம் கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் தெரியும். நான் யுஎஸ்ல இருந்து வந்த உடனே எல்லாமே கேதர் பண்ணிட்டேன்…” என்றாள் துவேஷத்துடன்.
அதற்கு மேல் துளசி பொறுக்கவில்லை. அவளுடைய குணமும் அதுவல்ல. எதையும் பட்டென்று பேசும் ரகம்.
“ஆமாண்டி..! அப்படித்தாண்டி..! என்னடி செய்வ..? என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ..!” என்றாள் ஆத்திரத்துடன்.
“அதுக்கு எதுக்கு உன் கண்ணெல்லாம் கலங்குது..?” என்று திவ்யா நக்கலாகக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, அங்கு வந்தான் விஜய்.
“ஷாப்பிங் ஓவரா துளசி..! கிளம்பலாமா..?” என்றபடி அவளின் சிவந்த முகத்தைப் பார்த்தவன் அதிர்ந்தான். அப்போது தான் அருகில் இருந்தவளை கவனித்தான்.
“ஹெல்லோ விஜய்..! நான் திவ்யா..!” என்றாள்.
“சோ..!” என்றான் ஆராய்ச்சிப் பார்வையுடன்.
“அன்னைக்கு பார்ட்டில மீட் பண்ணோமே..! எங்க டாடி கூட..!” என்று அவள் முடிக்கவில்லை.
“வில் யு ஸ்டாப். நீ யாரா வேணும்ன்னாலும் இருந்துட்டுப் போ..! உனக்கு இங்க என்ன வேலை….?” என்று கேட்டது விஜய் இல்லை துளசி.
துளசியின் கோபத்தைக் கண்டு விஜய்க்கு கொஞ்சம் அதிர்ச்சி தான். ஆனால் திவ்யாவைக் கண்டவுடன் அவனுக்கும் பிடிக்கவில்லை. அவளுடன் பேசி, துளசியை வெறுப்பேற்றும் எண்ணம் அவனுக்கு சுத்தமாக இல்லை. அதனால் அமைதியாக இருந்தான். அதற்கும் தப்பர்த்தம் கற்ப்பித்தாள் துளசி.
அவனைப் பார்த்து முறைக்க,
“போகலாமா..?” என்றான்.
“விஜய் பிளீஸ்..! எனக்கு உங்க கூட கொஞ்சம் தனியா பேசணும்..!” என்று திவ்யா கெஞ்சும் குரலில் கேட்க, அங்கு வந்த ரோஸ்லினை இழுத்துக் கொண்டு பில்லிங் செக்ஷன் சென்றால் துளசி.
“எதுக்கு துளசி இவ்வளவு கோபம்..? ஆமா அவ யாரு..? செம்ம பிகரா இருக்கா..!” என்று ரோஸ்லின் சொல்ல,
“மண்ணாங்கட்டி..! வாயை மூடுடி..!” என்றவள், அங்கிருந்து பார்வையால் விஜய்யை எரிக்க, அவனோ திவ்யாவுடன் இரண்டு நிமிடம் பேசிவிட்டு வந்தான். அவன் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை. ஆனால் திவ்யா அவன் பேசியதை தனக்குள் மறைத்துக் கொண்டவள், அதீத சந்தோஷத்துடன் அங்கிருந்து சென்றாள்.
அதைக் கண்ட துளசிக்கு உடம்பெல்லாம் எரிந்தது. துளசியிடம் அவள் பேசிய வார்த்தைகள் அவளுக்கு மீண்டும் மீண்டும் நியாபகத்திற்கு வர, தன்னை அடக்க பெரும்பாடு பட்டுப் போனாள்.
“வேற எங்க போகணும்..?” என்றான் விஜய்.
“வீட்டுக்கு..!” என்றாள் பட்டும் படாமல். துளசியிடம் ரோஸ்லின் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. அவளை ஏற்றிய இடத்திலேயே இறக்கி விட்டனர். அதுவரை இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை. துளசிக்கு அவள் மனசுடன் போராடவே நேரம் சரியாக இருந்தது.
“அவனைத்தான் உனக்கு வேண்டாம்ன்னு சொல்லிட்ட. அப்பறம் எவ அவளைக் கட்டுனா என்ன..? இல்லை அவன் தான் யாரைக் கட்டுனா உனக்கென்ன..? எந்த நினைப்புல அவனை முறைக்கிற..? அப்போ உன் மனசுல அவன் மேல ஆசை இருக்கா..?” என்று மனம் கேட்க,
“ஒரு மண்ணும் இல்லை. ஆனா, அவ ஏன் என்னை அப்படிப் பேசணும்..? இவன் ஏன் அவளைத் தெரியாத மாதிரியே நடிக்குறான். அவ பேசுறதுக்கும், இவன் நடந்துக்கறதுக்கும் சம்பந்தமே இல்லையே..?” என்று யோசித்துக் கொண்டு வந்தாள்.
இப்படியே இருந்தால், விஜய்க்கு முன்பு தனக்கு கிறுக்குப் பிடித்துவிடும் என்று அவளுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவளுடைய சந்தேகத்திற்கு விடை எல்லாம் பிரவீனிடம் தான் உள்ளது என்று எண்ணினாள். இனி அவளுடைய முதல் வேலையும் அது தானே.
மொத்த சிக்கலுக்கும் விடை பிரவீனிடம் மட்டுமே இருந்தது. ஆனால் அவன் வாயைத் திறப்பானா என்று தெரியவில்லை. அவனிடம் உண்மையை வாங்கும் சக்தியைப் பெற்றவள் துளசி மட்டுமே.
“எதாச்சும் சாப்பிடுறியா..?” என்றான் விஜய்.
“இல்லை வேண்டாம்..!” என்றவள் அவன் முகத்தைப் பார்க்க,
“நமக்குத் தெரிஞ்சு இவனோட ஒரிஜினல் குணம் இது இல்லையே. அமைதியா இருக்கானா..? இல்லை அப்படி இருக்குற மாதிரி நடிக்குறானா..?” என்று ஆராய,
“என் முகத்துல என்ன எழுதி ஒட்டியிருக்கு..?” என்றான்.
“ம்ம்..! நான் ஒரு பொறுக்கின்னு..!” என்றாள். அவள் சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. பழக்க தோஷத்தில் வாயில் இருந்து வார்த்தைகள் வந்து விழுந்திருந்தது.
அவனுடைய கன்னத்து நரம்புகள் மட்டும் புடைத்தது. அதற்குப் பிறகு அவன் எதுவும் பேசவில்லை. வீடு வரை அவளை அழைத்து சென்றவன், வாசலிலேயே அவளை இறக்கி விட்டுவிட்டு, காரை படு வேகமாக ஓட்டிச் சென்றான். அவனும் இறங்கி வருவான் என்று எதிர்பார்த்த துளசி, அவன் சென்ற வேகம் கண்டு திகைத்தாள்.
அவள் மட்டும் தனியாக வருவதைப் பார்த்த வித்யா,
“என்ன துளசி..? விஜய் கூட போனதா அம்மா சொன்னாங்க..? எங்க விஜய்யைக் காணோம்..!” என்று கேட்க,
அவருக்கு பதிலும் சொல்லவில்லை. ஹாலில் நிற்கவும் இல்லை. யாரையும் சட்டை செய்யாது அவளின் அறைக்கு சென்றவள், அனைத்தையும் கட்டிலின் மேல் விட்டு எரிந்தாள்.
திவ்யா கேட்ட கேள்வியில் இவள் கோபம் கொள்ள, துளசி சொன்ன ‘பொறுக்கி’ என்ற வார்த்தையில் அவன் கோபம் கொண்டிருந்தான்.
கீழே அவளின் பாட்டியோ,
“நாளைக்கே ஜோசியரை வர சொல்லுங்க..! நல்ல நாளாப் பார்த்து அடுத்த முகூர்த்தத்துலையே ரெண்டு பேருக்கும் கல்யாணத்தைப் பண்ணி வச்சுடுவோம். இவங்க ரெண்டு பேரையும் இப்படியே விட்டா இனி கதைக்கு ஆகாது. கதையை படிக்கிறவங்களுக்கும் ஆகாது.கல்யாணத்துக்கு அப்பறம் முட்டிகிட்டாலும் சரி,மோதிகிட்டாலும் சரி…” என்று வள்ளிப் பட்டி சொல்ல, ரத்னவேல் தாத்தாவிற்கும் அதுவே சரியெனப் பட்டது.
“நீ என்ன சொல்ற வித்யா..?” என்றனர்.
“எனக்கும் அப்படித்தான் தோணுது..!” என்றார் வித்யா.
“எப்ப எந்த பிரச்சனை வரும்ன்னு தெரியலை. அதனால் நல்ல காரியத்தை தள்ளிப் போடாம சீக்கிரம் பண்ணிடனும். கண்ட நாயெல்லாம் வீட்டுக்குள்ள வருது..!” என்றார் ரத்னவேல்.
“சரிப்பா..!” என்ற வித்யா, அடுத்த கட்ட வேலையில் இறங்க, விஜய்- விஷ்வ துளசி சம்மதம் இன்றி கல்யாண ஏற்பாடுகள் தொடங்கியிருந்தது.
வித்யா, பிரவீணுக்கு அழைத்து விஷயத்தைச் சொல்ல, அவனுக்கும் சந்தோசம். தங்கையின் வாழ்க்கையும், நண்பனின் வாழ்க்கையும் ஒரே நேரத்தில் சீராகப் போகிறது என்று அகம் மகிழ்ந்து போனான்.
விஷயத்தைக் கேள்விப்பட்ட உடன் துளசி முதலில் பிரவீனுக்குத் தான் அழைத்தாள்.
“சொல்லு துளசி..!”
“அண்ணா.. ! எங்க இருக்க..?” என்றாள்.
“வெளிய இருக்கேன்மா..!. என்ன விஷயம் துளசி..?” என்றான்.
“நடக்குறது எல்லாம் உனக்குத் தெரிஞ்சு தான் நடக்குதா..? என்றாள்.
“துளசி உன் நல்லதுக்காகத்தான்..!” என்று அவன் இழுக்க,
“மண்ணாங்கட்டி..! ரெண்டாந்தாரமா வாக்கப்பட நான் தயாரா இல்லை.எனக்கு வரப் போற புருஷன் ராமனா இருக்கணும். இவனை மாதிரி இல்லை.” என்றாள் துளசி.
துளசியின் மனதில் இப்படி ஒரு எண்ணம் இருக்கும் என்று பிரவீணுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதிர்ந்தான் அவன்..!