நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
“என்னப்பா எதுக்கு கூப்பிட்டீங்க?” என்று கேட்டபடி படியிறங்கி வந்தான் மாதவன்.
“மாதவா நான் இன்னிக்கு கடைக்கு வர முடியாது. என் மாமாவுக்கு ரொம்ப உடம்பு சரி இல்லையாம். அதான் போய் பார்த்துட்டு வரலாம்னு ஊருக்கு போறேன். நைட்டு தான் வருவேன். அதான் உன்கிட்ட சொல்லிட்டு போகலாமேன்னு கூப்பிட்டேன்.” என்றார்.
“சரிப்பா நான் பார்த்துக்கிறேன்.”
“இன்னிக்கு ரெண்டு லோடு வருது மாதவா. நீ தான் எல்லாத்தையும் பார்த்துக்கணும். கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும். இருந்தாலும் பாத்துக்கோ. மாமாவுக்கு ரொம்ப உடம்பு சரி இல்லையாம். ரொம்ப வயசாயிடுச்சி. எப்படி இருக்குமோ சொல்ல முடியாது. அதனால்தான் தள்ளிப்போட வேண்டாம்னு பார்க்கிறேன்.” என்றார் சிறுது சோகமாக.
“ஆமாம்பா. நீங்க சொல்றது சரிதான். போய் பார்த்துட்டு வாங்க. இதையெல்லாம் தள்ளி போடக்கூடாது.” என்றான் மாதவன்.
“சரி மாதவா. நான் போயிட்டு வரேன்.” என்று விட்டு பையை மாட்டிக் கொண்டு சென்றார் அண்ணாமலை.
மாதவனின் கைபேசி ஒலித்தது. எடுத்து பேசினான்.
“என்ன? லோடு வந்துடுச்சா? இறக்கிக் கொண்டு இருங்க. இதோ நான் வந்துவிடுகிறேன்.” என்று விட்டு தெருவை நோக்கி நடந்தான்.
“டேய் சாப்பிட்டுவிட்டு போடா.” என்று பார்வதி கூறினார்.
மாதவன் “இல்லமா. டைம் ஆயிடுச்சு. ஒரு முக்கியமான வேலை வந்துடுச்சு. நான் அங்க சாப்பிடுகிறேன்.” என்றுவிட்டு காரில் ஏறி கிளம்பி சென்றான்.
மாலை 5 மணி அளவில் தோட்டத்தில் பரித்த பூக்களை அங்கேயே உட்கார்ந்து கொண்டு மதுமிதா எடுத்து வைக்க மலர் கட்டிக் கொண்டிருந்தாள்.
அப்போது பக்கத்து வீட்டில் சத்தம் கேட்டது.
பக்கத்து வீட்டு பெண் வேகவேகமாக தோட்டத்திற்கு வந்தாள்.
அவளது கணவன் அவளைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான்.
“இல்லை மாலா. உன்கிட்ட சொல்லலாம்னு தான் நினைச்சுட்டு இருந்தேன். ஆனால் சொல்ல சந்தர்ப்பம் கிடைக்கல.” என்றான் மாலாவின் கணவன்.
“அது எப்படி உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போகும்? நீங்க என்கிட்ட சொல்லணும்னு நினைக்கவே இல்ல. அதனால தான் உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கல.” என்றாள் அவள் அழுதுகொண்டே.
“இல்லை மாலா. இது ஒரு சின்ன விஷயம் தானே? இதுக்கு ஏன் இப்படி ரியாக்ட் பண்ற?” என்று கேட்டான் அவன்.
“எது சின்ன விஷயம்? உங்களுக்கு தொழிலில் நஷ்டம் வந்தப்போ என்கிட்ட வந்து என் அப்பா கிட்ட பணம் கேட்க சொன்னிங்க.
நான் என்ன சொன்னேன்? எங்க அப்பாவை இந்த பிரச்சினையில் இழுக்க வேணாம்னு சொன்னேன். ஆனால் நீங்க எனக்கு தெரியாம அப்பாகிட்ட பணம் வாங்கி இருக்கீங்க. அப்படி வாங்கினதும் இல்லாம அதை என்கிட்ட மறச்சு இருக்கீங்க. இது சின்ன விஷயமா?” என்று கேட்டாள்.
“ஆனால் நான்தான் இப்ப திருப்பி கொடுத்துட்டேன் இல்லையா?”
“கொடுத்திட்டீங்க. இருந்தாலும் என்கிட்ட நீங்க ஒரு உண்மையை மறைத்தது மறைத்தது தானே? அது இல்லைன்னு ஆகாதே.”
“ஒரு சின்ன கொடுத்தல் வாங்கல் அவ்வளவுதான். அதுக்கு எதுக்கு இப்படி பிரச்சனை பண்ற?”
“ஒரு சின்ன கொடுக்கல்-வாங்கல் தானே? அதை என்கிட்ட சொல்லிட்டு செய்திருக்கலாம் இல்லையா? நான் அப்பாவை இந்த பிரச்சினையில் இழுக்க வேணாம்னு சொல்லி இருக்கும் போது நீங்க அதை மதிக்காமல் அவரை கஷ்டப்படுத்தி இருக்கீங்க.”
“இதுல அவருக்கு எந்த கஷ்டமும் இல்லை. அதான் நான் திருப்பி கொடுத்து விட்டேனே.”
“இருக்கட்டும் . ஆனால் நீங்க என்கிட்ட ஒரு உண்மையை மறைத்து இருக்கிறீர்கள். அது இல்லைன்னு ஆயிடுமா? நான் உங்களை நம்பினேன். ஆனால நீங்க என்னை ஏமாத்திட்டீங்க. எனக்கு உங்கள பாக்கவே பிடிக்கல. அதனாலதான் நான் கிளம்பி எங்க அம்மா வீட்டுக்கு வந்துட்டேன். இங்கேயாவது என்னை நிம்மதியா விடுங்க.” என்று வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.
இவர்கள் இருவரும் பேசியது மலர் மற்றும் மதுமிதா காதில் விழுந்தது.
மலர் மதுமிதாவிடம்
“புருஷன் பொண்டாட்டி ஏதோ பேசிக்கிறாங்க. நாம் இங்கே இருக்கவேண்டாம். வா போகலாம்.” என்று அழைக்க மதுமிதா மலர் இருவரும் வீட்டுக்குள் வந்தனர்.
மலர் இரவு உணவு சமைக்கும் வேலையில் இறங்கினாள்.
மதுமிதா அவளுக்கு உதவி கொண்டிருந்தாள்.
அதே நேரம் மாலாவின் அன்னை பார்வதியை பார்க்க வந்திருந்தார்.
தன் மகளும் மருமகனும் சண்டை போட்டதை பார்வதியிடம் கூறி வருத்தப்பட்டார்.
அங்கே இருந்த மலர் மதுமிதா இருவரும் கேட்டனர்.
எனினும் எதுவும் பேசவில்லை.
மாலாவின் அன்னை தொடர்ந்தார்.
“சரி மாப்பிள்ளை இந்த விஷயத்தை என் பொண்ணுக்கிட்ட மறைத்தது தப்புதான். அதுக்காக மாப்பிள்ளையை விட்டுவிட்டு இவள் இங்கே வருவது சரியா? இந்த பொண்ணுக்கு இது ஏன் புரிய மாட்டேங்குது? ஊர் உலகத்துல அவன் அவன் எவ்வளவு தப்பு பண்றான். அவனை எல்லாம் மன்னிச்சு பொண்டாட்டி ஏற்றுக் கொள்ளவில்லையா? இவளுக்கு ஏன் இவ்வளவு கோபம்? ஆனாலும் இந்த பொண்ணு இப்படி மாப்பிள்ளை வீட்டை விட்டு வந்திருக்க கூடாது. மாப்பிள்ளை கிட்ட இப்படி கோபமாக பேசி இருக்கக் கூடாது. சொன்னால் எங்க கேக்குறா? நாம சொல்லி எது இந்த காலத்து பசங்களுக்கு புரியுது?” என்று மகளை குறை கூறினார்.
அவர் பேசியதை கேட்டதும் மதுமிதாவுக்கு ஆத்திரம் பொங்கியது. ஏதோ பேச வாய் எடுக்க மலர் மதுமிதா கையை பிடித்து அழுத்தி அமைதியாக இருக்க சொன்னாள்.
மதுமிதா வேறுவழியின்றி மலர் சொன்னதற்காக அமைதியாக இருந்தாள்.
சிறிது நேரம் பேசிவிட்டு அவர் சென்றார்.
அவர் சென்றதும் மதுமிதா பார்வதியிடம்
“ அத்தை இதுல யாரு தப்பு பண்ணா? மாலாவா? மாலாவின் புருஷனா ? மாலாவின் புருஷன் மாலா கிட்ட இருந்து இந்த விஷயத்தை மறைத்தது தானே? அப்புறம் ஏன் மாலாவின் அம்மா மாலாவை தப்பு சொல்றாங்க?
என்னைக் கேட்டால் மாலா செஞ்சது தான் கரெக்ட். அவள் அவளோட புருஷன் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சு இருந்திருப்பா. இப்போ அவள் புருஷன் அவள்கிட்ட இருந்து ஒரு விஷயத்தை மறைத்து விட்டாள்னு அவளுக்கு தெரிய வந்தால் அது அவளுக்கு கஷ்டமா தானே இருக்கும். அவள் புருஷன் வீட்டில் இருந்து வந்ததுல என்ன தப்பு இருக்கு?
என்னைப் பொறுத்தவரைக்கும் மாலா செய்தது கரெக்டு தான். அவளோட சிச்சுவேஷன்ல நான் இருந்திருந்தாலும் இப்படி தான் பண்ணி இருப்பேன்.” என்று மதுமிதா ஆவேசமாக பேசி கொண்டிருந்ததை உற்சாகமாக வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்த மாதவன் கேட்க நேர்ந்தது .
இதனை கேட்டதும் மாதவன் சிலையாக நின்றான். அதற்கு மேலும் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் திரும்பி வெளியே சென்றான்.
மீண்டும் கடைக்கு வந்தான்.
அவனைப் பார்த்த நடராஜ் “என்ன தம்பி வீட்டுக்கு போயிட்டு திரும்ப வந்து இருக்கீங்க? எல்லா வேலையும் முடிச்சுட்டு தானே போனிங்க.” என்று கேட்டார்.
“இல்லை ஒரு முக்கியமான கணக்கு பார்க்க வேண்டியது இருக்கு. அதை மறந்துட்டேன்.” என்றுவிட்டு அறைக்கு சென்று கதவை சாத்திவிட்டு இருக்கையில் பொத்தென்று அமர்ந்தான்.
“அவளோட சிச்சுவேஷன்ல நான் இருந்திருந்தாலும் இப்படி தான் பண்ணியிருப்பேன். மாலா புருஷன் வீட்டைவிட்டு வந்தது கரெக்ட்டு தான்.” என்று மதுமிதா ஆவேசமாக பேசியது காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.
அவன் சோர்ந்து போனான்.
‘அப்போ நான் மறைத்து வைத்திருக்கிற விஷயம் உனக்கு தெரிய வந்தால் நீ என்னை விட்டு போய் விடுவாயா மது?’ என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டான்.
‘நீ இல்லாமல் என்னால இருக்கவே முடியாது. என்னை விட்டுப் போய் விடாதே மது.’ என்று புலம்பியது அவன் வாய்.
அன்று இரவு பதினோரு மணிக்கு மேல் தான் வீடு திரும்பினான் மாதவன். பார்வதி கதவை திறந்தார்.
மாதவன் இரவு உணவை முடித்துவிட்டு படியேறி தன் அறைக்கு சென்றான். அங்கு மதுமிதா புடவை அணிந்து அழகாக அலங்கரித்துக்கொண்டு படுக்கையில் உட்கார்ந்தபடியே தூங்கிக்கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்ததும் அள்ளி எடுத்து அனைத்தையும் சொல்ல வேண்டும் என்று தோன்றிய எண்ணத்தை கைவிட்டு விட்டு தரையில் பாயைப் போட்டு படுத்து உறங்கினான் மாதவன்.
தூக்கத்தின் நடுவில் கண்விழித்த மதுமிதா மாதவன் தரையில் படுத்து உறங்குவதை பார்த்தாள்.
“அச்சச்சோ எப்போ வந்தான் தெரியலையே? மாமா வெளியூர் போய் இருந்ததால வேலை நிறைய இருந்திருக்கும். அதான் லேட்டா வந்திருக்கான். பாவம். ரொம்ப டயர்டா வந்திருப்பான்னு நினைக்கிறேன் . சரி தூங்கட்டும்.” என்று நினைத்தபடி அவளும் சரியாக படுக்கையில் படுத்து உறங்கினாள்.
அதற்கு பிறகு வந்த நாட்களில் மாதவன் மதுமிதா இடம் பேசுவதை குறைத்திருந்தான்.
மதுமிதாவும் வேலை சுமை அதிகமாக இருப்பதால் பேச நேரம் இல்லை என்று நினைத்துக்கொண்டாள்.
அதிகாலையில் இவள் எழுந்திருக்கும் முன்பு எழுந்து செல்பவன் அவள் உறங்கிய பின்புதான் வீடு திரும்புவான். இது மதுமிதாவுக்கு வருத்தமாக இருந்தது. அவள் வருத்தம் அவள் முகத்தில் தெரிந்தது. அதனை வீட்டினர் கவனித்து வந்தனர். முக்கியமாக பார்வதி மற்றும் மலர் பார்வையாலேயே மதுமிதாவின் முகத்தை பார்த்து பேசிக் கொண்டனர்.
மதுமிதா, மலர் இருவரும் உட்கார்ந்து கொண்டு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். நகைச்சுவை காட்சி ஒன்று வர அதனை பார்த்து சிரித்தாள் மலர். ஆனால் மதுமிதா சிரிக்காமல் அமைதியாகவே இருந்தாள்.
மலர் மதுமிதாவை கவனிக்கவில்லை. ஆனால் மதிய தூக்கத்தை முடித்து விட்டு வெளியில் வந்த பார்வதி மதுமிதாவை கவனித்தார். அவள் தொலைக்காட்சியில் கவனத்தை செலுத்தாமல் எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள்.அவள் முகம் சோகமாக இருப்பது பார்வதிக்கு தெரிந்தது. தோட்டத்தில் இருந்த அண்ணாமலையை பார்க்க சென்றார்.