“ஏங்க இந்த மாதவன், மதுமிதா கிட்ட சரியா பேசுறது கிடையாது போல இருக்கு. கவனிச்சீங்களா?”
“ஆமா பார்வதி எனக்கும் அப்படி தான் தோணுது. ஆனா நான் என்ன பண்றது?”
“நாமதான் ஏதாவது பண்ணனும். வீட்ல மகனும் மருமகளும் ஒத்துமையா இருக்காங்களான்னு பார்க்கிறது நம்ம கடமைதான். அவங்க அப்படி இல்லைனா நாசுக்கா அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறது நம்ம வேலையை தானே.”
“அது சரி பார்வதி. இப்ப என்ன என்னை மாதவன் கிட்ட பேச சொல்றியா?”
“இல்லை நேரடியா புருஷன் பொண்டாட்டி விஷயத்தில் தலையிடற அளவுக்கு அவங்களுக்குள் ஒன்னும் பிரச்சனை இருக்கிற மாதிரி எனக்கு தெரியல. அதனால நாம இதை முதல்ல மறைமுகமா செய்வோம்.”
“சரி என்ன பண்ணலாம்? நீயே சொல்லு பார்வதி.”
“நீங்க கடைக்கு இப்போ போய் மாதவனை வீட்டுக்கு அனுப்புங்க. அவன் ஏதாவது வேலை இருக்குன்னு சொல்லுவான். இருந்தாலும் பரவாயில்லை. எதையாவது சொல்லி அவனை வீட்டுக்கு அனுப்புங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல ஆதித்யா வீட்டுக்கு வருவான். தினமும் ஆதித்யா வந்ததும் மதுமிதா அவனோடு கொஞ்ச நேரம் தோட்டத்திலே விளையாடுவா. மாதவன் அந்த நேரத்துல இங்கே இருந்தால் அவனையும் நான் அவங்க கூட தோட்டத்துக்கு விளையாட அனுப்பறேன். அப்போ அவங்க ரெண்டு பேரும் பேசி பழகுவார்கள். மதுமிதா கூட அவன் பேசி பழகினாலே போதும். அவர்களுக்குள் இருக்கிற இடைவெளி தீர்ந்துவிடும்.”
“நல்ல ஐடியா தான். நான் போய் மாதவனை வீட்டுக்கு அனுப்பறேன்.” என்றுவிட்டு அண்ணாமலை கடைக்கு கிளம்பினார்.
.
“மாதவன் ஜன்னல் வழியாக சாலையில் ஓடிக்கொண்டிருந்த வாகனத்தை வெறித்தபடி ஏதோ யோசனையில் இருந்தான்.
“மாதவா மாதவா” என்ற அண்ணாமலையின் குரல் கேட்டு கலைந்து
“ என்னப்பா கடைக்கு வந்து இருக்கீங்க? நான் தான் இங்கே இருக்கேன் இல்லையா? நீங்க ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே”
“ எனக்கு வீட்ல ரொம்ப போரடிக்குது. அதான் கடைக்கு வந்தேன். நீ வீட்டுக்கு போ. நான் இன்னிக்கி மேற்பார்வை பார்க்கிறேன்.” என்றார்.
“இல்லப்பா எனக்கு நிறைய கணக்கு பார்க்க வேண்டியிருக்கு.” என்றான் வழக்கம்போல.
“அது எல்லாம் நாளைக்கு பாத்துக்கோ. இப்போ நீ வீட்டுக்கு போ. நீங்க இங்க இருக்கணும்னா இருங்க. எதுக்காக என்னை வீட்டுக்கு போகச் சொல்றீங்க?”
“அது அது வந்து இன்னிக்கி பார்வதியின் சொந்தக்காரங்க யாரோ வராங்களாம். அதான் பார்வதி உன்னை வர சொன்னாள்.”
“அப்படியா? அம்மா என்கிட்ட எதுவுமே சொல்லவே இல்லையே?”
“மறந்திருப்பாள். நீ கிளம்பு. சும்மா கேள்வி கேட்டுக்கொண்டே இருப்ப” என்று அவனை அங்கிருந்து விரட்டினர்.
ஆதித்யா பள்ளியில் இருந்து வந்திருந்தான்.
மலர் அவனுக்கு பால் கலந்து கொண்டிருந்தாள்.
மதுமிதா ஆதித்யாவிடம் பள்ளியில் நடந்தவைகளை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தாள்.
மாதவனை பார்த்ததும் பேச்சை நிறுத்திவிட்டு அவனை கவனித்தாள்.ஆனால் பேசவில்லை. அவனும் அவளிடம் பேசவில்லை.
‘இவன் ஏன் தான் இப்படி என்கிட்ட ஒதுங்கி இருக்கான்னு தெரியல.’ என்று நினைத்துக் கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் பார்வையை நேராக எதிர்கொள்ள முடியாமல் மாதவன்
“அம்மா வீட்டுக்கு யாரு வராங்க?” என்று கேட்டான்.
“யாரும் வரலடா.” என்றார் பார்வதி.
“அப்படியே அப்பா யாரோ வருவதா சொன்னார்.”
இதனைக் கேட்ட பார்வதி சுதாரித்துக்கொண்டு
“ஆமாம் ஆமாம். வரேன்னு சொல்லி இருந்தாங்க. ஆனால் வரல.”
“என்னம்மா சொல்றீங்க?”
“அதாண்டா. இன்னிக்கி வர்றதா சொன்னாங்க. அப்புறம் வேற ஏதோ அவசர வேலை வந்துட்டதால வர முடியலையன்னு போன் பண்ணி சொன்னாங்க.”
“அப்படியா? சரி. நான் தோட்டத்துக்கு போகிறேன்.” என்று விட்டு எழுந்து தோட்டத்திற்கு சென்றான்.
மலர் பால் கலந்து எடுத்துவந்து ஆதித்யாவிடம் கொடுத்தாள்.
அப்போது பார்வதி “ஆதி இங்க வா. இன்னிக்கு ஸ்கூல்ல என்ன நடந்தது சொல்லு.” என்று கேட்டபடி அவனை அழைத்தார்.
அவன் “இன்னிக்கி டீச்சர் அடிசன் சப்ரேக்சன் சொல்லிக் கொடுத்தாங்க. அப்புறம் எனக்கு புது ரெண்டு கிடைச்சிருக்காங்க.” என்று ஆர்வமாக பள்ளியில் நடந்தவற்றை சொன்னான்.
“சரி பாட்டி. எல்லாத்தையும் நான் சொல்லிட்டேன். நானும் சித்தியும் தோட்டத்தில் போய் பால் விளையாடப் போகிறோம். “என்றான் ஆதித்யா.
“ஆதி இன்னிக்கி சித்தப்பா வீட்ல இருக்கான் இல்லையா? அதனால அவனையும் விளையாட கூப்பிடு. நீங்க மூணு பேரும் சேர்ந்து விளையாடுங்க.” என்றார் பார்வதி.
“சரி பாட்டி. நா ஜாலியா விளையாடிட்டு வரேன்.” என்றுவிட்டு ஓடிச்சென்று மதுமிதா கையைப்பிடித்து
“ வாங்க சித்தி விளையாடலாம்.” என்று இழுத்தான்.
“சரிடா விளையாடலாம் வா.” என்று அவளும் தோட்டத்திற்கு சென்றாள்.
தோட்டத்தில் ஏற்கனவே மாதவன் அமர்ந்து இருந்தான்.
அவனை பார்த்ததும் ஆதித்யா அவனிடம் சென்றான்.
“சித்தப்பா நீங்களும் எங்க கூட விளையாட வாங்க .”என்று அழைத்தான்.
மதுமிதா எதுவும் பேசாமல் அவனை பார்த்து கொண்டிருந்தாள்.
மாதவன் “இல்லடா. எனக்கு டயர்டா இருக்கு.” என்று மறுத்தான்.
ஆனால் ஆதித்யா விடவில்லை
“அதெல்லாம் பரவாயில்லை. என்கூட கொஞ்ச நேரம் விளையாடுங்க. நீங்க வரலனா நான் அழுவேன்.” என்று அழுது காண்பித்தான்.
“சரி சரி. வர்றேன்.” என்றபடி எழுந்து அவர்களுடன் விளையாடினான்.
மூவரும் தூர தூரமாக நின்று கொண்டு பந்தை போட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு முறை பந்து மதுமிதா மாதவன் இருவருக்கும் நடுவில் வர இருவரும் ஓடி வந்து அதை பிடிக்க முயற்சிக்க இருவரும் மோதிக் கொண்டனர்.
ஆதித்யா இருவரும் மோதிக் கொள்வதை பார்த்து கைதட்டி சிரித்தான்.
“போதும் விளையாட்டு.” என்றான் மாதவன்.
ஆதித்யா “முடியாது. நாங்க தினமும் ஒன் அவர் விளையாடுவோம். அதனால இன்னிக்கும் அப்படி விளையாடனும். இல்லனா நான் அழுவேன்.” என்று மீண்டும் அழ ஆரம்பித்தான்.
“வர வர உனக்கு பிடிவாதம் ஜாஸ்தியா ஆயிடுச்சு.” என்று முறைத்தான் மாதவன்.
ஆதித்யா அதற்கும் அழுதான்.
“சரி சரி விளையாடலாம் வா.” என்று மூவரும் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது ஆதித்யா வேகமாக பந்தை தூக்கி போட திடீரென்று வீசிய காற்றில் பந்து பறந்து தூரத்தில் விழுந்தது.
“எதுக்குடா இப்போ இவ்வளவு வேகமா தூக்கி போட்ட?” என்று கேட்டான் மாதவன்.
“நான் எப்போதும் போல தான் தூக்கி போட்டேன். ஆனால் திடீர்னு காத்து அடிச்சுதா, அதான் பால் ஓடிப்போச்சு.” என்றான் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு.
“சரி நான் போய் பார்க்கிறேன்.” என்று விட்டு பந்தை தேடிச் சென்றான்.
மதுமிதாவும் பந்தை தேடிச் சென்றாள். ஓரிடத்தில் பந்தை பார்த்த மதுமிதா அதனை எடுப்பதற்காக அங்கு சென்றாள்.
அப்போது வீட்டு ஜன்னல் வழியாக பேச்சு குரல் கேட்டது.
“அத்தை இந்த ரூபா போட்டோ இன்னும் ஏன் நம்ம வீட்ல இருக்கு? கொடுத்து அனுப்பலயா?” என்று மலரின் குரல் கேட்டது.
‘ரூபாவா யார் அந்த ரூபா? நமக்கு தெரியாம?” என்று யோசித்தாள் மதுமிதா.
“இன்னுமா இந்த போட்டோ நம்ம வீட்ல இருக்கு? இந்த பொண்ணால தான் இவ்வளவு பிரச்சனை. இவளை மட்டும் நாம மாதவனுக்கும் பெண் பார்க்காமல் இருந்திருந்தால் மாதவன் இந்நேரம் மதுமிதா கூட சந்தோஷமா இருந்திருப்பான். இவளை ஏன் தான் அவனுக்கு காட்டினேன்னு தெரியல. அவனுக்கு வேற பிடிச்சி போச்சுன்னு சொன்னா. இன்னும் இவளை நெனச்சிகிட்டு தான் இவன் மதுமிதா கூட சரியா பேசி பழக மாட்டேங்குறான். எப்பதான் இவன் மனசு மாறுமோ தெரியல. அந்த போட்டோவை தூக்கி போடு.” என்று பார்வதியின் குரல் கேட்டது
அதனைத் தொடர்ந்து அந்த புகைப்படம் ஜன்னல் வழியாக வெளியில் வந்து மதுமிதாவின் காலடியில் விழுந்தது.
விழுந்த புகைப்படத்தை எடுத்து திருப்பி பார்த்தாள் மதுமிதா.
அதில் அழகாக ஒரு பெண் சிரித்துக்கொண்டிருந்தாள்.
‘இவளை மனசுல வச்சிக்கிட்டு தான் மாதவன் என்கிட்ட இப்படி நடந்து கொள்கிறானா?’ என்று நினைத்தாள்.
‘இந்த பொண்ணு என்னைவிட ரொம்ப அழகாக இருக்கிறாள்.’ என்று அந்தப் புகைப்படத்தை தடவிக்கொடுத்தாள்.
அதேநேரம் “மது” என்ற குரல் கேட்டு திரும்பினாள் மதுமிதா.
மாதவன் அங்கு நின்று கொண்டிருந்தான் .