நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
“மது நானும் இவ்வளவு நேரம் இங்க தான் நின்னுகிட்டு இருந்தேன். அண்ணியும் அம்மாவும் பேசியது என் காதில் விழுந்தது.” என்றான்.
“அப்போ இவ்வளவு நாள் நீங்க என்கிட்ட இந்த விஷயத்தை மறைச்சு இருக்கீங்க.” என்றாள் மதுமிதா.
“மது என்ன சொல்ற? எந்த விஷயத்தை நான் உன்கிட்ட இருந்து மறைத்தேன்?” என்று கேட்டான் மாதவன்.
“அதான் நீங்க ரூபாவை லவ் பண்ண விஷயத்தை என்கிட்ட மறைத்து இருக்கீங்க.” என்றாள் குற்றம் சாட்டும் விதமாக.
“என்ன சொல்ற? “
“உங்களுக்கு எதுவும் புரியாது. நீங்கள் ரூபாவை லவ் பண்ணி இருக்கீங்க. அந்த விஷயத்தை என் கேட்டா மறைத்து இருக்கீங்க.” என்று அவனை பார்த்து கோபமாக சொன்னாள் மதுமிதா.
“மது நீ தப்பா புரிஞ்சுகிட்ட. நான் சொல்றதை கேளு. நான் ரூபாவை லவ் பண்ணவில்லை. நான் உன்னை மட்டும்தான் லவ் பண்றேன்.” என்றான் மாதவன்.
“இதை என்னை நம்ப சொல்றீங்களா?”
“ஆமாம். இதுதான் உண்மை. ஆனால் அத்தையும் மலரும் நீங்க ரூபாவை லவ் பண்ணியதா சொன்னாங்களே.”
“ஐயோ அவங்க தப்பா எடுத்துக்கிட்டு இருக்காங்க. நான் சொல்றதை கேளு.” என்று அன்று ரூபா அவனிடம் தான் வேறு ஒருவரை காதலிப்பதாகவும் அவர்கள் ஒன்று சேர்வதற்கு இவன் உதவி வேண்டும் என்று கேட்டதையும் விவரித்து கூறினான்.
எல்லாவற்றையும் கேட்ட மதுமிதா அவனை உற்றுப் பார்த்தாள். எதுவும் பேசவில்லை.
“சரி என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? இரு .நான் ரூபாவுக்கு கால் பண்ணி பேசுறேன்.” என்றவன் ரூபாவின் கைப்பேசிக்கு தொடர்பு கொண்டான்.
“ஹலோ ரூபா எப்படி இருக்க ?”என்று சாதாரணமாக பேசினான்.
“நான் நல்லா இருக்கேன் மாதவன். நீங்க நல்லா இருக்கீங்களா?” என்று கேட்டாள் அவள்.
“நான் நல்லா இருக்கேன் ரூபா. அப்புறம் எப்போ உனக்கும் உன் லவ்வரோட கல்யாணம்?” என்று கேட்டான்.
“அது என்னோட படிப்பு முடிஞ்சதுக்கு அப்புறம் தான் மாதவன். இந்த கலியாணம் நிச்சயம் ஆனதுக்கு நீங்கள் ஒரு முக்கியமான காரணம். ரொம்ப தேங்க்ஸ் மாதவன். நீங்க மட்டும் அன்னைக்கு நான் கேட்டு ஹெல்ப் பண்ணலன்னா இந்நேரம் என் கல்யாணம் என் லவ்வரோட நிச்சயம் ஆகி இருக்காது. ஊருக்கு தான் இது பெரியவங்க பார்த்து வைக்கிற அரேஞ்ச் மேரேஜ் ஆனால் உண்மையில் இது லவ் கம் அரேஞ்ச் மேரேஜ். அப்படி அரேஞ்ச் மேரேஜ் ஆகுறதுக்கு நீங்க பண்ணின ஹெல்ப் ஒரு முக்கியமான காரணம்.
அப்புறம் எனக்கு இன்னொரு ஹெல்ப் பண்ணனும். நான் அவரை லவ் பண்ணி அவர் வீட்டுக்கு எங்க அப்பா அம்மாவுக்கு தெரியாமல் ஓடிப் போன விஷயம் வேறு யாருக்கும் தெரியக்கூடாது. நீங்க இதை வேற யார்கிட்டயும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்.” என்றாள் ரூபா.
“கண்டிப்பா நான் சொல்லவே மாட்டேன். இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியாது. நீ நிம்மதியா சந்தோஷமா இரு.” என்று விட்டு தொடர்பை துண்டித்தான் மாதவன்.
“இப்போ உனக்கு புரியுதா மது? நான் ரூபாவை லவ் பண்ணலன்னு எங்க அம்மாகிட்ட என்னால சொல்ல முடியாது. அதனாலதான் அவங்க ஏதாவது நினைத்துக் கொள்ளட்டும்னு விட்டுட்டேன். அப்படி நான் ரூபாவை லவ் பண்ணலன்னு சொல்லணும்னா ரூபா வேறு ஒருவனை லவ் பண்ணதை சொல்ல வேண்டிவரும். அதனாலதான் அம்மாகிட்ட நான் எதுவும் சொல்லல. இப்போ கூட நீ கேட்டதால் தான் நான் சொன்னேன். நான் அவளை லவ் பண்ணவே இல்லை. அதனால அவளை பற்றி நான் உன்கிட்ட சொல்லவே இல்லை. இதுல என்னோட தப்பு என்ன இருக்கு?
நாம நம் வாழ்க்கையில் நிறைய பேரை சந்திக்கிறோம். அதுல ஒரு சிலருக்கு நம்மளை பிடிக்கும். ஒரு சிலருக்கு பிடிக்காது. அதுக்கு நாம ஒன்னும் பண்ண முடியாது. உன்னை கூட யாராவது லவ் பண்ணி இருப்பாங்க. அதுக்காக உன்னை தப்பு சொல்ல முடியுமா? நீ யாரையாவது லவ் பண்ணி இருந்தாலும் எனக்கு அது ஒரு பெரிய விஷயமே கிடையாது. அது உன்னோட பாஸ்ட். நான் உன்ன தப்பா நினைக்க மாட்டேன்.”
“ நீங்க அவளை லவ் பண்ணி இருந்தாலும் எனக்கு அது பிரச்சனை இல்லை ஆனால் அதை என்கிட்ட சொல்லலையேன்னுதான் கோபப்பட்டேன். இப்போ நீங்க தான் அவளை லவ் பண்ணவே இல்லைனு தெரியுதே. அதனால உங்க மேல எந்த தப்பும் இல்லை. சாரி சாரி மாதவன். நான் உங்களை தப்பா நினைச்சிட்டேன். “ என்று மனதார அவனிடம் மன்னிப்பு கேட்டாள் மதுமிதா.
“சரி என்னை புரிஞ்சுக்கிட்ட இல்ல. அதுவே போதும்.” என்றான்
அப்போது “சித்தப்பா” என்று அழைத்துக்கொண்டு ஆதி அங்கு வந்தான்.
“வாங்க விளையாடலாம்” என்று கூப்பிட மாதவன் அவனுடன் சென்றான்.
மதுமிதா ‘இவன் ரூபாவை லவ் பண்ணல. அப்புறம் ஏன் என்கிட்ட சகஜமா பழக மாட்டேங்குறான்?’ என்று புரியாமல் யோசித்தாள் மதுமிதா.
‘இல்லை இவனுக்கு உண்மையாக வேலை ஜாஸ்தியா இருப்பதினால் என்கிட்ட பேச நேரமில்லையா?’ என்று யோசித்து குழம்பினாள்.
சிறிது நேரம் விளையாடிய பின் வீட்டுக்குள் வந்தனர்.
“ மாதவா இங்க வா.” என்று அழைத்தார் பார்வதி.
“சரோஜா நம்ம எல்லோரையும் விருந்துக்கு கூப்பிட்டு இருக்கிறார். எனக்கும் அப்பாவுக்கும் ஒரு விசேஷத்துக்கு போக வேண்டிய வேலை இருக்கு. அதனால நாங்க ரெண்டு பேரும் வர முடியாது. நீ, ஆறுமுகம், மதுமிதா, மலர் நாலு பேரும் போயிட்டு வாங்க.” என்றார்.
இதைக்கேட்ட மலர் ‘அய்யோ சரோஜா சித்தியா? அவங்க ஏதாவது தேவை இல்லாம பேசிக்கிட்டே இருப்பாங்க. நாம போகவே கூடாது.’ என்று நினைத்த மலர்
“அத்தை நான் போகல. ஆதி டார்க் கலர் டிரஸ் வேணும்னு கேட்டான் இல்லையா? அதான் நாளைக்கு வாங்கி தரேன்னு சொல்லி இருக்கேன். இப்போ முடியாதுன்னு சொன்னா அவன் அழுது அடம் பிடிப்பான். அதனால மாதவன், மதுமிதா மட்டும் போயிட்டு வரட்டும். அவர்கள் ரெண்டு பேரும் சேர்ந்து எங்கேயும் போனது கிடையாது.” என்றாள் மலர்.
பார்வதி யோசித்தார். ‘மலர் சொல்றது சரிதான்’ என்று நினைத்தவர் மலரிடம் “சரி மலர். அவங்க போயிட்டு வரட்டும்.” என்றார்.
‘தூரத்து சொந்தகாரர் என்ற உரிமையில் தான் சரோஜா மலரிடம் அப்படி பேசுகிறார். மதுவிடம் அப்படி அவர் பேச மாட்டார்’ என்று நினைத்து மலர், மாதவன், மதுமிதா இருவரையும் சரோஜா வீட்டுக்கு போகச் சொன்னாள்.
ஆனால் சரோஜா வேறு திட்டத்துடன் இருப்பதை மலர் அறியவில்லை.
மதுமிதா மாதவன் இருவரும் பக்கத்து பக்கத்தில் அமர்ந்திருந்தனர்.
சரோஜா அவர்களுக்கு கேட்டு கேட்டு சாப்பாடு பரிமாறிக் கொண்டு இருந்தாள்.
“நல்லா சாப்பிடு மா. கல்யாணத்துக்கு அப்பறம் பொண்ணுங்க எல்லோரும் குண்டாவாங்கன்னு சொல்லுவாங்க. ஆனால் நீ இளைத்துப் போய் இருக்க. நல்லா சாப்பிடறியா இல்லையா?” என்று அவள் மீது அக்கறை உள்ளவர் போல கேட்டார் சரோஜா.
“அது அதுவந்து நான் டயட்டில் இருக்கிறேன்.” என்று சமாளித்தாள் மதுமிதா.
“அது என்ன டயட்டோ. கொஞ்சம் பூசினாற்போல இருந்தா நீ இன்னும் அழகா இருப்ப.” என்றார் அவர்.
மாதவன் மதுமிதாவை பார்த்தான். மதுமிதா இப்போதெல்லாம் சோகமாக இருப்பது அவனுக்கு தெரிந்தது.
எனினும் அவளிடம் நெருங்கி செல்ல முடியாமல் தவித்தான்.
அந்த நகையை பற்றி அவன் விசாரித்துக் கொண்டு தான் இருக்கிறான். ஆனால் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. துரை மற்றும் இன்னும் சில நண்பர்களிடம் சொல்லி இருக்கிறான். ஆனால் இதுவரை எந்த பலனும் இல்லை. விசாரித்து பார்த்த துரை அந்த மருத்துவமனையில் பணிபுரியும் வார்டு பாய், நர்ஸ் எடுக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டான்.ஆனாலும் நகையை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.
அதற்கு பிறகு கத்தி வீசியவனை அழைத்து வந்து இவளிடம் தான் கத்தி வீசவில்லை என்று நிரூபிக்க வேண்டும். ஆனால் இப்போது அவன் எங்கு இருக்கிறான் என்று தெரியவில்லை. அவனுடைய வீட்டில் இருக்கும் எவருக்கும் சொல்லாமல் அவன் வெளிநாடு சென்று விட்டதாக கேள்விப்பட்டான். அந்த வீட்டை துரை மூலம் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறான்.அவன் இதுவரை வீடு திரும்பவில்லை. எனவே மாதவனால் இப்போதைக்கு தன் மீது தப்பு இல்லை என்று நிரூபிக்க முடியாது. அப்படியிருக்கையில் அவனால் மதுமிதாவிடம் சகஜமாக பழகவும் முடியாது தவித்துப் போனான். இப்பொழுதாவது தினமும் மதுமிதாவை பார்க்க முடிகிறது. தான் மறைத்து வைத்திருக்கிற உண்மை தெரிய வந்தால் அவள் தன்னை விட்டுவிட்டு சென்று விடுவாள் அதற்கு பிறகு இப்படி பக்கத்தில் இருந்து பார்க்கக் கூட முடியாது என்பதனால் அந்த உண்மையை அவன் மறைத்தே வைத்திருந்தான்.
இது புரியாமல் கணவன் தன்னிடம் ஒதுங்கி இருப்பதன் காரணம் தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தாள் மதுமிதா.
சாப்பிட்டு முடித்த மாதவன்
“நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்.” என்று பொதுவாக எல்லோரிடமும் சொல்லி விட்டு வெளியில் சென்றான்.
சரோஜா மற்றும் அவரது கணவனுக்கு காத்திருந்த சந்தர்ப்பம் கிடைத்தது. சரோஜா கணவனைப் பார்த்து ஜாடை காட்டினார்.
அவர் “ஏன்மா மது நீ உன்னோட டைலரிங் வேலையை தொடர்ந்து செய்வதற்கு கடை தேடுவதா கேள்விப்பட்டேன். உண்மையா?” என்று கேட்டார்.