வருணின் நெஞ்சில் சாய்த்திருக்கிறோம் என்பதை உணர்ந்து விலக எத்தனிக்க, அவனின் இரும்புப் பிடியில் இருந்து விலக முடியவில்லை.
“எனக்கு ஒண்ணுமில்லை சார்..!” என்று அவள் விலக எத்தனிக்க, ஒரு நிமிடம் அவளை ஆழ்ந்து பார்த்தவன், மெதுவாக கைகளின் இறுக்கத்தைத் தளர்த்தினான்.
“ஆர் யு ஓகே..!” என்றான்.
“எஸ் சார்..! ஐ ஆம் ஓகே..!” என்றாள்.
“இதுக்குத்தான் உன்கிட்ட சொல்ல வேண்டாம்ன்னு நினைச்சேன்..!” என்றான் வருண்.
“இப்பவும் என்னால நம்ப முடியலை சார்..! எங்க அண்ணி அப்படிப் பட்டவங்க கிடையாது..! ரொம்ப நல்லவங்க..” என்றாள்.
“ஆதாரம் இல்லாம ஒருத்தர் மேல குற்றச்சாட்டை வைத்து, அவங்களை குற்றவாளி ஆக்கனும்கிற அவசியம் எனக்கில்லை..!” என்றான்.
“என்ன ஆதாரம் சார் வச்சிருக்கிங்க..?” என்றாள் சக்தி கோபமாக.
“எல்லா ஆதாரமும் இருக்கு..!” என்றவன், அவன் செல்லில் இருந்த சிசிடிவி புட்டேஜைக் காட்டினான்.
அதைப் பார்த்த சக்திக்கு ஒன்றும் புரியவில்லை. அது அவளுடைய அண்ணனும், அண்ணியும் காரில் கொடைக்கானல் வந்ததுக்கான சான்று. டோல்கேட்டில் கிடைத்த சிசிடிவி புட்டேஜ். இதை வைத்து எப்படி அண்ணி தான் குற்றவாளி என்று சொல்ல முடியும் என்று நினைத்தாள் சக்தி.
“இதை வச்சு எப்படி சார், எங்க அண்ணி தான் குற்றவாளின்னு சொல்றிங்க..?” என்றாள்.
“சிம்பிள்..! உங்க அண்ணியைக் காட்டிக் கொடுத்ததே இந்த கார் தான்..!” என்றான்.
“எப்படி..?” என்றாள்.
“இங்க பார்..! இந்த சிசிடிவி புட்டேஜை நல்லா பார்..” என்று ஒரு பெட்ரோல் பங்க்கில் எடுக்கப்பட்ட புட்டேஜைக் காட்டினான். அதிலும் சக்திக்கு ஒன்றும் புரியவில்லை.
“உனக்கு நான் வாய்ல சொன்னாத்தான் புரியும் போல..” என்று நக்கலாக சிரித்தவன்,
“இந்த பெட்ரோல் பங்க்ல பெட்ரோல் போடுறாங்க. அப்போ கார்ல முன்னாடி டிரைவர் சீட்ல டிரைவரும், அவருக்குப் பக்கத்துல உங்க அண்ணனும் இருக்காங்க. பின்னாடி ஒரு லேடி குழந்தையோட இருக்காங்க..! தெரியுதா..?” என்றான்.
சக்தியும் ‘ஆம்’ என்று தலையை ஆட்ட,
“இது அவங்க போன கார் திரும்பி வரும் போது, டோல்கேட்ல கிடைச்ச புட்டேஜ். இதைப் பார்..!” என்று காட்ட, அதிர்ந்தாள் சக்தி. ஏனென்றால் அதில் அவளுடைய அண்ணி முன்னால் இருந்தாள். அவளுடைய அண்ணனைக் காணவில்லை.
“சார்..!” என்று அதிர்ந்தாள் சக்தி.
“எஸ்..! போகும் போது பின்னாடி உட்கார்ந்துட்டு போன உங்க அண்ணி, வரும் போது முன்னாடி இருக்காங்க. இது ஒரு பெரிய விஷயமான்னு நீ கேட்கலாம்..” என்று நிறுத்தியவன்,
“வரும் போது உங்க அண்ணன் மிஸ்ஸிங். அது மட்டுமில்லாம கொடைக்கானல் போன கார், அங்க போகவே இல்லை. மலையேற ஆரம்பிச்ச முக்கால் மணி நேரத்துல அந்த கார் திரும்பவும் கீழ இறங்கியிருக்கு. அதாவது உங்க அண்ணனோட டெட்பாடியை நாங்க எடுத்த இடம் வரைக்கும் தான் கார் போயிருக்கு. உங்க அண்ணனும் அங்க தான் கொலை செய்யப் பட்டிருக்கணும். வந்த வேலை முடிஞ்சதால உங்க அண்ணி கொடைக்கானல் போகாமலேயே கீழ இறங்கியிருக்கணும்..” என்றான் வருண்.
“அதெப்படி அந்த இடத்துக்கு மேல கார் போகலைன்னு சரியா சொல்றிங்க..?” என்றாள்.
“வெரி சிம்பிள்..! மலையேற ஆரம்பிச்ச உடனே, முதல்ல இருக்குற போலீஸ் செக் போஸ்ட்டில் இந்த கார் நம்பர் என்ட்ரி ஆகியிருக்கு. அடுத்த முக்கால்மணி நேரத்தில் கீழ இறங்குன லிஸ்ட்ல இந்த கார் நம்பர் ரிஜிஸ்டர் ஆகியிருக்கு. அதுக்கு அடுத்து இருக்குற எந்த செக் போஸ்ட்லயும் இந்த கார் வந்ததுக்கான என்ட்ரி இல்லை..!” என்றான் தெளிவாக.
“எங்க அண்ணிதான் அந்த கொலையை செஞ்சதாகவே இருந்தாலும், அந்த டிரைவர் சொல்லியிருப்பாரே..?” என்றாள்.
“ஜஸ்ட் சிம்பிள். அந்த டிரைவரும் உங்க அண்ணிக்கு உடந்தையா இருக்கலாம்..!” என்றான்.
“எல்லாம் அனுமானம் தான் இல்லையா சார்..!” என்றாள் வெடுக்கென்று.
“நோ…! உங்க அண்ணிதான் கொலைக்காரி என்பதில் எந்த டவுட்டும் இல்லை. ஆனா, ஏன் கொலை பண்ணினான்னு அவளே சொன்னாத்தான் உண்டு..!” என்றான்.
“வேற யாராவது கொலை செஞ்சுட்டு எங்க அண்ணி மேல ஏன் பழியைப் போடக் கூடாது..?” என்றாள்.
“ நீயென்ன பாப்பாவா..?” என்று எரிந்து விழுந்தவன்,
“அப்படியே ஏதாவது நடந்திருந்தா, வேற பொண்ணு கூட போய்ட்டதா உங்க அண்ணி ஏன் வீட்ல இருக்கவங்ககிட்ட பொய் சொல்லணும். அன்னைக்கே நகையை எல்லாம் எடுத்திட்டு ஏன் அவங்க அம்மா வீட்டுக்கு போகணும். யாராவது அவங்க புருஷன் இன்னொரு பொண்ணுகூடப் போறதை நேர்ல பார்த்துட்டு சும்மா இருப்பாங்களா..? அப்படியே உங்க அண்ணன் போயிருந்தாலும் உங்க அண்ணி ரியாக்ஷன் எப்படி இருந்திருக்கணும். ஆனா, இங்க எல்லாம் தலை கீழா இருக்கு. இதைக் கூட யோசிக்க மாட்டியா…? இல்லை உங்க அண்ணன் தான் அப்படிப் பட்ட ஆளா..?” என்றான் எரிச்சலாய்.
“எங்க அண்ணன் அப்படியெல்லாம் கிடையாது சார்..!” என்றாள் பாவமாய்.
“உன்கிட்ட காட்டின ஆதாரம் எல்லாம் சும்மா ஒன்னு ரெண்டு தான். உங்க அண்ணி போன் நம்பர், அவங்க கால் டீட்டைல்ஸ், உங்க அண்ணன் கால் டீட்டைல்ஸ் இப்படி எல்லாமே எங்க கிட்ட இருக்கு. தகுந்த ஆதாரம் இல்லாம யாரையும் அரெஸ்ட் பண்ண முடியாது. அதுவாச்சும் தெரியுமா தெரியாதா..?” என்றான் கோபமாய்.
“எங்க அண்ணி இப்படிப் பண்ணுவாங்கன்னு நான் நினச்சுக் கூட பார்க்கலை சார்..?” என்ற சக்திக்கு உடல் லேசாக நடுங்கத் தொடங்கியது.
“வெளித்தோற்றத்தை வச்சு ஒருத்தவங்க குணத்தை எடை போட முடியாது. உங்க அண்ணி மனசுல இருந்தது எல்லாம் அழுக்கு. அதை அவ வாயாலேயே சொல்லுவா. அப்போ கேட்டுக்கோ..!” என்றான் எரிச்சலாய்.
சுவரோடு சாய்ந்து அமர்ந்தவளைக் கண்டு, வருணுக்கு ஒரு மாதிரியாகக் கூட இருந்தது. அவளைப் பார்த்ததில் இருந்து அவனுக்கும் பிரச்சனைகள் குறைந்தபாடில்லை. அவளுடைய பிரச்சனைகளும் குறைந்தபாடில்லை.
சக்திக்கோ தன் வீட்டை நோக்கி நினைவு சென்றது.
சிறுவயதிலேயே தாய்,தந்தையை இழந்த சக்தி பிரியத்ரிஷினிக்கு அவளுடைய பெரியப்பா தர்மராஜ் தான் தான் எல்லாமே. அப்படி ஒரு மனிதரைப் பார்ப்பது அரிதிலும் அரிது. ஆனால் அவரின் மனைவி யமுனாவுக்கு ஏனோ முதலில் இருந்தே சக்தியைப் பிடிக்கவில்லை. ஆனால் கணவருக்கு பயந்து அவளை ஏற்றுக் கொண்டது போன்ற பாவனையில் தான் இருப்பார்.
தர்மராஜ் – யமுனாவிற்கு பெண்குழந்தைகள் இல்லை. இரண்டு ஆண்கள் மட்டுமே. மூத்தவன் ஜெயப் பிரகாஷ் அவனுடைய மனைவி அபூர்வா. இளையவன் சிவப் பிரகாஷ் அவனுடைய மனைவி ருத்ரா.
இதில் ஜெயப் பிரகாஷ், சக்தியின் மேல பாசமாக இருந்தாலும், சிவப் பிரகாஷ் அண்ணன் என்பதையும் தாண்டி ஒரு நண்பன் போல் இருந்தான் அவளிடம். அவனிடம் எதையும் தைரியாமாக சொல்லுவாள் சக்தி.
யமுனாவைத் தவிர அந்த வீட்டின் மூன்று ஆண்களுக்கும் அவள் பிரியமானவள் தான். இவளுக்குத் திருமணம் முடிந்தால் தான், தான் திருமணம் செய்வேன் என்று உறுதியாக இருந்தான் சிவா. அவனின் உறுதியைக் கலைத்தவள் சக்தி தான்.
“அண்ணா..! அண்ணி பார்க்க செம்மையா இருக்காங்க. இப்போ விட்டுட்ட அப்பறம் இப்படி அண்ணி கிடைக்குறது எல்லாம் சந்தேகம் தான்..!” என்று அவனைக் காட்டயப்டுத்தி, திருமணத்திற்கு சம்மதம் வாங்கியவளே சக்தி தான்.
அதை இப்போது நினைத்தாலும் அவளுக்கு அழுகையாய் வந்தது. அவளை எப்படி நம்பினான் சிவா அண்ணன். தேவதை மாதிரி வச்சிருந்தான். அவனைக் கொள்ள அவளுக்கு எப்படி மனசு வந்தது என்று நினைத்து நினைத்தே மனம் வெறுத்துப் போனாள் சக்தி.
சக்திக்கு திருமண ஏற்பாடு செய்த போதும், முதல் ஆளாய் மகிழ்ச்சி கொண்டவன் சிவா தான். தங்கையின் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னாராகவே அமெரிக்காவில் இருந்து வந்துவிட்டான்.
யமுனாவிற்கு அவளைப் பிடிக்காது என்றாலும், அவளுக்கு காலாகாலத்தில் செய்ய வேண்டிய திருமணத்திற்கு அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்தார்.
குடும்பமே எதிர்பார்த்த அவளின் கல்யாணம், மேடைக்கு வராமலேயே, திருமண நாளின் காலை நேரத்திலேயே நின்று விட்டது. மாப்பிள்ளையை கைது செய்தது கூட வருண் கிருஷ்ணா தான்.
இப்படி கலவையான எண்ணங்களில் உழன்று கொண்டிருந்தாள் சக்தி.
“இதை ஜீரணிக்கிறது கொஞ்சம் கஷ்ட்டம் தான் சக்தி. பட் உண்மையை ஏத்துகிட்டு தான் ஆகணும். இப்படி இடிஞ்சு போய் இருக்குறதால, நடந்த எதுவும் மாறப் போறது இல்லை..! உங்க பேமிலி வரப்போ, அவங்களை நீ மீட் பண்றது பெஸ்ட்ன்னு எனக்குத் தோணுது..!” என்றான் வருண்.
“இப்போதைக்கு வேண்டாம் சார்..!” என்றாள் விட்டேறியாய்.அவன் கேள்வியாய் பார்க்க,
“நான் அங்க இருந்தா அண்ணாக்கும்,அண்ணிக்கும் சண்டை வருதுன்னு தான் சார் விலகி வந்தேன். இப்படி அவரையே கொல்லுவான்னு நினைக்கலை..!” என்றாள்.
“உன்னால பிரச்சனையா…?” என்றான் புரியாமல்.
“நீங்க அன்னைக்கு கல்யாண மண்டபத்துல அரஸ்ட் பண்ணின மாப்பிள்ளை… ருத்ரா அண்ணிக்கு சொந்தக்கார மாப்பிள்ளை தான். அவங்க பேச்சை நம்பித்தான் வீட்ல எல்லாரும் சம்மதம் சொன்னாங்க. எல்லாருக்கும் பிடிச்சிருந்தது. சோ எனக்கும் வேண்டாம்ன்னு சொல்றதுக்கு எந்த காரணமும் இல்லை. எல்லாமே நல்லா தான் போய்ட்டு இருந்தது.
சிவாண்ணா அவன் பொண்டாட்டியை முழுசா நம்பினான். அவங்க சொன்னா சரியா இருக்கும்ன்னு நினைச்சான். வீட்ல பெரியம்மா, பெரியப்பா கூட அப்படித்தான். ஆனா மூத்த அண்ணி அபூர்வா, அவங்களுக்கு முதல்ல இருந்தே கொஞ்சம் நெருடல் இருந்தது உண்மை. அதை என்கிட்டே நேரடியா சொல்லலைன்னாலும் முகத்துல உணர்த்திட்டே இருந்தாங்க.என்னால அப்போ அதை உணர முடியலை. இப்போ உணர்றேன்…” என்றாள் சக்தி.
“வாட்..! அந்த அயோக்கியன் உங்க அண்ணி பார்த்த மாப்பிள்ளையா…?” என்று அதிர்ந்தான் வருண்.
“ஆமா சார்..!” என்றாள் சக்தி.
வருணுக்கு அதற்கு மேல் அதிர்ச்சியாக ஒன்றுமில்லை. ருத்ராவிற்கு கொலையே சாதாரணம் எனும் போது, இதெல்லாம் எம்மாத்திரம் என்று எண்ணினான். வருணுக்கும் அன்றைய நாள் நியாபகத்திற்கு வந்தது.
அவன் கோயம்புத்தூரில் வேலை செய்து கொண்டிருத்த நேரம்,
ஒரு மைனர் பெண்ணை, கற்பழித்து கர்ப்பாக்கிய வழக்கில், குற்றவாளியை உடனடியாக கைது செய்தாக வேண்டிய கட்டாயம். அதற்காகத் தான், அவனை கைது செய்யத்தான் அன்று போனான் வருண்.
ஒரு இரண்டு மணி நேரம் கழித்து போயிருந்தால், அன்றே அந்த அயோக்கியன் சக்தியின் கழுத்தில் தாலி கட்டியிருப்பான். அவன் மணமேடைக்கு வருவதற்குள் அவனை கைது செய்ய வேண்டும் என்று நினைத்து, அதை செய்தும் முடித்தான் வருண்.
மணமகள் அறையில் இருந்த சக்திக்கு இதெல்லாம் தெரியவில்லை. விஷயம் கேள்விப் பட்டு வெளியே வந்து பார்த்தது என்னவோ, மாப்பிள்ளையை கைது செய்து கூட்டிப் போன வருணின் முதுகுப் புறத்தை தான். பரிதவிப்புடன் நின்றிருந்த குடும்பத்தைப் பார்த்தவள், அவனை மறந்தாள்.
அவனை ஜீப்பில் ஏற்ற சொல்லிவிட்டு முன்னால் அமர்ந்த வருண், எதேச்சையாக திரும்ப, அங்கு கண்களில் கண்ணீருடன் சக்தி நிற்க, அவளை சமாதானம் செய்து கொண்டிருந்த குடும்பமும் கண்ணில் பட்டது. ஏனோ அவளின் முகம் தெளிவாக தெரியாவிட்டாலும், ஓரளவிற்கு தெரிந்தது. ஒரு இரண்டு நிமிடம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் வருண். ஏன் பார்த்தான் என்றால் அவனிடம் பதில் இல்லை.
அங்கிருந்து கிளம்பிவிட்டாலும், அவளது அந்த அழுத முகம் மங்கலாக அவன் நினைவில் இருந்து கொண்டே இருந்தது. அவள் பரீட்சையமாகத் தோன்றியதற்கும் அதுவே காரணம்.
அவன் கிளம்பிய அடுத்த நிமிடம், ருத்ராவை அறைந்திருந்தான் சிவா.
“உனக்கு நாங்க என்னடி பாவம் பண்ணினோம்..? எதுக்காக என் தங்கச்சிக்கு இப்படி ஒரு அயோக்கியனை மாப்பிள்ளையாப் பார்த்த…? உனக்கு சொந்தக்காரன், நல்லவன்னு நீ சொன்னதை நம்பித்தான குடும்பமே தலையை ஆட்டுனோம்…? இப்ப என்னடான்னா.. அவன் ஒரு அக்யூஸ்ட். அதுவும் பதினாறு வயசுப் பிள்ளைய ரேப் பண்ணியிருக்கான். எப்படிப் பட்ட ஒரு அயோக்கியனை, நீ நல்லவன்னு சொல்லியிருக்க..?” என்று மீண்டும் அறைய,
“எனக்குத் தெரியாதுங்க..!” என்று நாடகமே நடத்தினால் ருத்ரா.
சிவா அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் அவளுடன் சண்டைக்கு நிற்க, குடும்பமே என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தனர்.
“இப்ப உனக்கு சந்தோஷமா..? இதைத்தான நீங்க எல்லாரும் எதிர்பார்த்திங்க…? எல்லாரும் சந்தோஷமா இருங்க. நான் போறேன்..!” என்றபடி ருத்ரா கிளம்ப, அவளுடைய குடும்பத்தினரும் அவள் மகுடிக்கு ஆடினர்.
“அண்ணி நில்லுங்க அண்ணி..! அண்ணா சொல்லுங்க அண்ணா..!” என்று மன்றாடினாள் சக்தி. சிவா கொஞ்சம் கூட மனசு இறங்கவில்லை.
“அண்ணா அவங்க இப்போ பிரக்னண்ட். இந்த நேரத்துல இப்படி பண்றது சரியில்லை..!” என்றாள் ருத்ரா.
“இவ ராசி தான்… அவ அப்பா, அம்மாவை முழுங்கினா. இப்ப கல்யாணம் நின்னு போய்டுச்சு. இப்போ என் மகன் குடும்பமும் பிரியுது. அவ என்ன வேணுமின்னா செஞ்சிருப்பா..? அவ வயித்துல என் வீட்டு வாரிசு வளருது. மூத்த மருமக தான் காய்க்காம இருக்கா. இவளாவது ஒரு வாரிசைப் பெத்துக் குடுப்பான்னு நான் நினைச்சுட்டு இருக்கேன். இப்படி என் வயித்துல மண்ணை வாரிப் போடுறிங்களே..?” என்று யமுனா ஒரு பக்கம் ஒப்பாரி வைக்கத் தொடங்கி விட்டார்.
“யமுனா…? என்ன பேச்சுப் பேசுற..? சக்தி மனசு என்ன பாடுபடும்ன்னு தெரியாதா..? எந்த நேரத்துல எதைப் பேசிட்டு இருக்க..?” என்றார் தர்மராஜ்.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. என் மருமக எங்கயும் போகக் கூடாது. அவ இங்க தான் இருக்கணும். டேய் சிவா..! கூப்பிடுடா அவளை..!” என்றார் யமுனா.
“நான் அவளைப் போக சொல்லை..!” என்றான் சிவா பட்டென்று.
“யம்மாடி ருத்ரா..! நீ போகாதமா. வாயும் வயிறுமா இருக்குற பிள்ளை. இப்படி அழுகக் கூடாது..!” என்று யமுனா மருமகளின் பக்கம் நின்றார்.
“அத்தை நம்ம சக்தி வாழ்க்கையே இங்க போய்டுச்சு. அதைப் பத்தி உங்களுக்குக் கொஞ்சம் கூட கவலை இல்லையா…?” என்று அபூர்வா வர,
“உனக்குத் தான் பெத்துக்க முடியலை. அவ மூலமா வர வாரிசும் என் வீட்டுக்கு வரக் கூடாதுன்னு நினைக்கிறியா..?” என்ற யமுனாவின் வார்த்தைகள், அபூர்வாவைக் காயப்படுத்த, அதற்கு மேல் அவள் வாயைத் திறக்கவேயில்லை.
பிறகு ஒரு முடிவெடுத்த சக்தி…
“அண்ணா ஏதோ என்மேல இருக்குற பாசத்துல அடிச்சுட்டான். எதையும் மனசுல வச்சுக்காதிங்க அண்ணி. நீங்க எங்கயும் போக வேண்டாம்..!” என்றாள்.
“எதுக்கு..? உன்னைப் பார்க்குற நேரம் எல்லாம் எல்லாரும் என்னைத் தான் பேசுவாங்க. எனக்கு இது தேவையா..?” என்று முறுக்கிக் கொண்டாள் ருத்ரா.
“வேணும்ன்னா நான் இங்க இருந்து போய்டுறேன்..!” என்றாள் சக்தி.
“சக்தி..!!!” என்று அதட்டினான் சிவா.
“நான் அந்த அர்த்ததுல சொல்லலை சிவாண்ணா. எனக்கு ஒரு மாறுதலுக்காகவாவது நான் வேலைக்குப் போய் ஆகணும். அதனால் நான் ஹாஸ்ட்டல்ல தங்கிக்கிறேன். அப்பப்போ வீட்டுக்கு வந்துட்டுப் போறேன்..!” என்றாள் சக்தி.
சக்தியின் இந்த முடிவுக்கு, ஆண்கள் மூவரும் சம்மதம் சொல்லவில்லை. அபூர்வாவிற்கும் சக்தியை நினைத்து பாவமாக இருந்தது. வெளியே சென்றால் நிம்மதியாக இருப்பாள் என்று எண்ணினாள்.
எப்படியோ சம்மதிக்க வைத்தவள், அடுத்த இரண்டு நாட்களில் வேலையை காரணம் காட்டி அங்கிருந்து கிளம்பிவிட்டாள். அதற்கு பிறகு அவர்களைத் தேடி அவள் செல்லவில்லை. அவள் கொடைக்கானலில் இருக்கிறாள் என்பது மட்டும் குடும்பத்தாருக்கு தெரிந்திருந்தது. அவளைப் பற்றிய முழு விபரமும் சிவாவுக்கு மட்டுமே தெரிந்திருந்தது.
அந்த ஜீவனும் இப்போது உயிருடன் இல்லை..! என்பதை நினைத்த சக்திக்கு தான் கணம் கூடிக் கொண்டே போனது.
“உங்க அண்ணியை உங்க வீட்ல இருந்தவங்க கண்மூடித் தனமா நம்புனதும் ஒரு வகையில் தப்புத்தான்..!” என்ற வருணின் குரலில், நிஜத்திற்கு வந்தவள்,
“எப்படியோ அந்த அயோக்கியனை நீங்க சரியான டைம்ல அரஸ்ட் பண்ணிட்டிங்களே சார்..! இல்லைன்னா இந்நேரம் என்னோட நிலைமை..?” என்றாள் சக்தி.
“சிம்பிள்..! உனக்கு புருஷனா இருந்திருப்பான். இப்படியே நிறைய மொட்டுக்களோட வாழ்க்கையை நாசம் பண்ணிகிட்டே… உன்கூட குடும்பம் நடத்தியிருப்பான்..!” என்றான் கோபமாக வருண்.
அந்த நாள் இப்பொழுது நியாபகம் வந்தாலும் , வருணால் கோபத்தைக் கட்டுப் படுத்த முடியாது. அந்த பிஞ்சின் வேதனையை நேரில் பார்த்தவன் வருண். அதானால் தானோ என்னவோ இந்த கேஸ் சம்பந்தப்பட்ட விபரங்கள் இன்னமும் அவன் நியாபகத்தில் இருந்தது.
“ஒரு பொண்ணுக்கு பொண்ணு தான் எதிரி இல்லையா..?” என்றான் வருண்.
“புரியலை..??” என்றாள்.
“உனக்கு நடந்த விஷயத்தை சொல்றேன். எனக்கு என்னவோ உங்கண்ணி தெரியாம பண்ணின மாதிரி தெரியலையே..? எல்லாமே பிளான் பண்ணி செஞ்ச மாதிரி தான் இருக்கு. எப்படியும் நாளைக்குள்ள அரெஸ்ட் பண்ணிடுவோம். அப்பறம் அவ வாயாலேயே சொல்லுவா..!” என்றான் வருண்.
“சிவாண்ணாவை உண்மையாவே அவ கொலை பண்ணியிருந்தா, அவளுக்கு கண்டிப்பா தண்டனை கிடைக்கனும் சார்..!” என்றாள் சக்தி தீவிரமாய்.
“அதை நாங்க பார்த்துக்கறோம்..! இப்போ நீ சொல்லு, யார்கிட்ட இருந்து தப்பிச்சு வந்த..?” என்றான்.
அவள் என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்க, வருணுக்கு போன் வர, அதை பேசிக் கொண்டே எழுந்து அறைக்குள் சென்றான், அவளின் மேல் ஒரு கண்ணை வைத்துக் கொண்டே.
“வருண்கிட்ட சொல்லிடு சக்தி..! எது வந்தாலும் அவன் பார்த்துப்பான்..!” என்றது அவள் மூளை.
“அவன்கிட்ட சொல்லாத சக்தி. அவனுக்கு ஏதாவது ஒண்ணுன்னா, நீ என்ன பண்ணுவ..?” என்றது மனசு.
“அவனுக்கு என்ன ஆனா உனக்கென்ன..? அவனை அவன் பார்த்துப்பான்..!” என்றது மூளை.
“நோ..! அவரோட பாதுகாப்பும் எனக்கு ரொம்ப முக்கியம்..!” என்றது மனசு.
“அவனோட பாதுகாப்பு முக்கியமா..? இல்லை அவனே உனக்கு முக்கியமா..?” என்று மூளை கேட்க, பதில் சொல்ல திராணியற்று, அவன் அறை வாயிலைப் பார்க்க, சட்டென்று எட்டிப் பார்த்த வருண்,
“கூப்பிட்டியா சக்தி..?” என்றான்.
“இல்லை..” என்பதைப் போல் அவள் தலையாட, அவளுடைய கண்களை பெரிதாக விரித்திருந்தாள்.
அவளின் பார்வையைப் பார்த்தவன்,
“விளங்கிடும் இப்படியே போனா…வருணு நீ செத்தடா. காதல் கடல்ல நீந்துற அளவுக்கு உனக்கு திறமை பத்தாது மவனே..! கொஞ்சம் தள்ளியே இரு..!” என்று அவனின் மனம் சொல்ல,
“சிறப்பான முறையில் செஞ்சுடுவோம்..!” என்றான் பதிலாய். காத்திருக்கும் பிரச்சனைகளை அறியாமல்.