ஒளி 3 :-
வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற!
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற!
வளையல் ஓசை ராகமாக !
இசைத்தேன் வாழ்த்துப்பாடலை!
நெஞ்சமே பாட்டெழுது…!
அதில் நாயகன் பேரெழுது…!
பயணத்தின் ஏகாந்தமும் இதமான பாடலும் ஏனோ மனதிற்கு அமைதி தர, ட்ரைனின் ஜன்னலோர இருக்கையில் குளிர்ந்த காற்றை முகத்தில் வாங்கியபடியே சென்னையில் இருந்து தன் சொந்த ஊரான காஞ்சிபுரத்திற்கு பயணமானாள்.
பயணம் அவள் வாழ்க்கையில் முக்கியமான ஒன்று, எத்தனையோ விடியல்கள் எத்தனையோ இரவுகள் தனியாகவோ அல்லது நட்பின் கூட்டமாகவோ அவளின் முக்கால்வாசி வாழ்க்கை இந்த ட்ரைன் பயணங்களிலே சென்றது. இது போல் பாடல்கள் கேட்கும் போது எவ்வளவோ முறை தோழியர் கேலி செய்து உள்ளனர்.
“அடியே ரதி ! நீ என்ன நினைக்கறியோ அதை பேசணும்னு அவசியமே இல்ல, ஏன்னா அதை நீ பாட்டாவே பாடிடுவ, எப்படி தான் இப்படி தேடி தேடி பாட்டு வைப்பியோனு “ சலித்ததும் உண்டு.
இப்போது நினைத்தாலும் மனதில் நிறைவான மகிழ்ச்சியே, பொன்னான நாட்கள் அவை என நினைத்தபடியே அவளின் மலரும் நினைவுகளில் மூழ்கினாள்.
“அம்மா ! அம்மா ! சாப்பாடு கட்டிடீங்களா?”
“அப்பா! வண்டியை எடுத்து வெளில விட்டுட்டீங்களா ?”
“அம்மா ! என்னோட க்ளிப் எங்க ?”
“அப்பா! பொன்னியின் செல்வன் 3ம் பாகம் வண்டி டிக்கில போட்டு விடுங்க, கீது கேட்டாள்.”
“அம்மா! அம்மா !”
“அடியே நீ ஒருத்தி தான வீட்ல இருக்க என்னவோ பத்து பேர் இருக்க மாதிரி அது எங்க இது எங்கனு கேட்டுட்டு இருக்க? எடுத்த பொருள் எடுத்த இடத்தில வைக்கறது இல்ல, நீயே எடுக்க வேண்டியது அப்புறம் மறந்து எங்கனா வச்சுட்டு தேட வேண்டியது “
[the_ad id=”6605″]
“நீ மட்டுமே இருந்து வீட்டை ரெண்டா ஆக்கற அளவுக்கு இப்படி அலம்பல் பண்றியே இதுல உங்கூட ஒட்டுப்புல் யாரும் இருந்தா வீடு நாலாகிடும் போலவே” என புலம்ப,
அவளோ கூலாக , “அம்மா! இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை, அப்பா கிட்ட சொல்றேன் எனக்கும் ஒரு தம்பி இல்ல தங்கச்சி வந்தால் சந்தோஷந்தான் எனக்கும் உங்க கூட சண்டை போட்டு போட்டு போர் அடிக்குது “என கண் அடிக்க,
“அடிக்கும் டி அடிக்கும் , நான் உன்ன இப்ப அடிக்க போறேன் பாரு, டைம் ஆகுது நீ இன்னும் கிளம்பலையா”?
“அச்சோ …டைம் ஆச்சு!”
“போகும் போது இந்த விஜியை வேற கூட்டிட்டு போகணும்” என சொல்லியபடியே வெளியே வர, அவள் அப்பா வண்டியைத் துடைத்துக் கொண்டு இருந்தார்.
“போதும் போதும் ரொம்ப துடைக்காதிங்கப்பா என் வண்டி கலர் போய்ட போகுது” எனக் கூற, செல்லமாக அவளை முறைத்தார்.
“அப்பா! அம்மாவுக்கு தம்பி இல்லைனா தங்கச்சி வேணுமாம், உங்ககிட்ட கேட்க சங்கடப்படறாங்க அதனால நானே சொல்ல வேண்டியதா போச்சு, அது என்னனு பார்த்து வாங்கி கொடுங்கப்பா” என இருவரையும் வம்பிழுக்க ,
“அடிங்க! உன்ன…” என அவள் அம்மா ஓரடி முன்னே வைத்ததும், “நான் போயிட்டு வரேம்ப்பா”…. என வண்டியில் பறந்தாள்.
ரதிகுந்தவை, சாந்தி மற்றும் ராஜதுரையின் ஒரே செல்ல சீமாட்டி. காஞ்சியின் புகழ்பெற்ற பட்டு புடவை கடையில் விற்பனை பிரிவில் ராஜ துரை வேலை செய்ய, சாந்தி குடும்ப தலைவியாக வீட்டை நிர்வகிக்கிறார். இவர்களின் இளவரசி சென்னையில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலைக்கு செல்கிறாள்.
ராஜதுரையின் தந்தை சீனுவாசனோடு உடன் பிறந்தவர்கள் மூன்று பேர் அதில் ஒரு பெண்.. அவர்களில் இருவர் அருகருகே உள்ள இடமாக வீடு கட்டி இருக்க , இன்னொரு பாகத்தில் இவர்களும் ராஜதுரையின் அத்தை கமலாம்மாவின் பாகமும் உள்ளது.
அக்கம் பக்கமாக பங்காளிகளாக ஆறு குடும்பமாக வாழ்கின்றனர். ஒருவரை சார்ந்து ஒருவர் இல்லாத காரணத்தினால் அவர்கள் உறவும் சீராக தான் இருந்தது.
சீனிவாசனுடன் பிறந்தவர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் எல்லோரும் வழி வழியாக அரசு வேலையில் உள்ளனர். அவர்கள் வீட்டின் பெண் பிள்ளைகள் எல்லாரையும் வெவ்வேறு நல்ல வசதியான குடும்பங்களிலே மணம் முடித்துள்ளனர்.
கமலம்மாவை பக்கத்துக்கு ஊரான நெமிலியில் திருமணம் செய்து கொடுத்து இருக்க இங்கு அவரின் பங்கு இடத்தை சிறிய தோட்டமாக ரதி பராமரிக்கிறாள். இவர்கள் குடும்பத்தில் அதிக வசதியும் அரசியல்,பதவி என இருப்பது கமலம்மாள் தான்.
சீனுவாசன் மற்றும் அவருடன் பிறந்தவர்களில் தற்போது இருப்பதும் குடும்பத்தில் மூத்தவருமாக இருப்பதும் இவர் மட்டுமே… கமலாம்மாவிடம் பாசத்தை விட அதிகாரம் அதிகம்.. குடும்பம் உறவுகளை விட பணம் புகழ் பதவி தான் என எண்ணுபவர்…அதனால் எல்லோர்க்கும் இவர் மீது பயம் கலந்த மரியாதை உண்டு. ஆனால் அந்த மரியாதை அவரிடம் இருக்கும் பணத்திற்காக மட்டுமே..
இதில் சீனிவாசன் மட்டும் அந்த காலம் முதலே பட்டு நெசவு செய்யும் தொழில் செய்து வந்தார். பெரியதாக வருமானம் இல்லை என்றாலும் பரம்பரை தொழில் என விடாமல் அதையே செய்ய ராஜதுரையும் தந்தை வழியே பின்பற்றினார்.
காலம் செல்ல செல்ல முன்னேற்றத்தின் வெற்றி என பழமை மறையத் தொடங்கியதில் அவரின் தொழில் மதிப்பு குறைய தொடங்கியது, அதன் பின் தான் ராஜதுரை புடவை கடைக்கு வேறு வழியில்லாமல் வேலைக்கு செல்ல ஆரம்பித்தார்.
[the_ad id=”6605″]
ராஜதுரை தான் மொத்த குடும்பத்தில் மூத்தவர், அதே போல் ரதி தான் அந்த தலைமுறையின் முதல் பெண் வாரிசும் கூட..அக்கம் பக்கமே சித்தி சித்தப்பா என எல்லோரும் இருக்க அவ்வப்போது அத்தைகளும் வந்து செல்ல, அவளை சுற்றி எந்நேரமும் தம்பி தங்கை என ஒரு கூட்டமே இருக்கும்.
மற்றவர்கள் நல்ல வசதியானாலும் ராஜதுரையின் வருமானத்திற்கு ஏற்ப ஒரு நடுத்தர வாழ்க்கை தான் இவர்களுடையது. அதில் அவர்கள் மூவருக்கும் வருத்தம் ஏதும் இல்லை.
பெரிய வீடும் கூட இல்லை, ஒரே ஒரு ரூம் அதில் ஒரு தடுப்பு போட்டு சமையல் செய்ய ஏதுவாக ஒரு மேடை, வெளியே குளியறை கொண்ட ஓட்டு வீடு அவ்வளவு தான் அவர்கள் மாளிகை.
வசதி தான் இல்லை ஆனால் மனம் நிறைய மகிழ்ச்சியும் நிம்மதியும் இருந்தது அவர்கள் வாழ்வில்..
“இப்ப நம்ப இருக்க வீட்டை இன்னும் கொஞ்சம் பெரிதாக தளம் போட்டு கட்டணும் அம்மு…அப்ப இருந்து ஒரே ரூமில் இருக்கோம்… நாளைக்கு உனக்கு கல்யாணம் ஆனால் மாப்பிளை வந்து தங்குற அளவுக்கு ஒரு பெட் ரூம் குளியறை கூட சேர்த்து கட்டணும்” என அவள் அப்பா சொல்லும் போது எல்லாம் ,”ஏன்ப்பா! உன் மாப்பிளை என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா “ என நக்கல் அடிப்பாள்.
அவள் அப்பா எது சொன்னாலும் புன்னகையோடு அதனை ஏற்பாள். அவளுக்கு அம்மாவை விட அப்பாவிடம் நெருக்கம் அதிகம் , தினமும் காலையில் 5 மணிக்கு எழுந்து அப்பாவும் பொண்ணும் வாக்கிங் கிளம்பிடுவர்.
சுற்றி இருக்கும் நான்கு கோவில் ராஜவீதிகளையும் சுற்றிக் கொண்டே வீட்டு நடப்பு முதல் நாட்டு நடப்பு வரை அலசுவர்.
இப்படி செல்லும் போது யாரேனும் எதிரே வந்து பேச்சு கொடுத்தால் தந்தை பேசுவதை கூட இருந்து ரசிப்பாள்.
அவர்களிடம் “இவ என் பொண்ணு ரதி” என அறிமுகப்படுத்தும் போது மனதினுள் நான் ராஜதுரையின் மகள் என்பதில் கர்வம் கொள்வாள். எவ்வளவு பேர் கூட இருந்தாலும் தந்தை தானே மகள்களுக்கு முதல் ஹீரோ.. ரதியும் அதற்கு விதிவிலக்கல்ல…
அவள் அப்பாவிற்கு பிடிக்காமல் செய்யும் ஒரே விஷயம் இப்போது பார்க்கும் வேலை தான்…
பின்னே! காஞ்சிபுரத்தில் இருந்து தினமும் சென்னைக்கு வேலைக்கு சென்று வருகிறாள்..போக வர என என்று கிட்டத்தட்ட 5 மணி நேரப் பயணம்.. ராஜதுரைக்கு மகள் இவ்வளவு கஷ்டப்பட்டு வேலைக்கு செல்வதில் விருப்பம் இல்லை..
அதிலும் அந்த கூட்ட நெரிசலான ரயிலில் பயணம் செய்து போய் வருவதற்குள் நொந்து விடுவாள்.
இதையெல்லாம் எண்ணி அவர் வேண்டாம் என சொல்ல அவரிடம் எப்படியோ கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்து அனுமதி வாங்கிவிட்டாள்.
காலையில் 6.45 மணிக்கு கிளம்பினால் இரவு 9 மணிக்கு தான் வீடு திரும்புவாள். வீட்டில் அவளை சுற்றி இருக்கும் உறவு கூட்டம் போல ரயிலிலும் பயணம் செய்யும் போது ஒரு நட்பு வட்டம்.
இதோ அவள் நட்பு கூட்டத்தின் தோழி விஜியை கூட்டிட்டு ரயில் நிலையம் வந்தடையவும் ரயில் உள்ளே வரவும் சரியாக இருந்தது.
[the_ad id=”6605″]
விஜி , “ஒரு நாள் என் வண்டியில வராமல் உங்கூட வந்ததுக்கு காலையிலே என்னை இப்படி ஓட விட்டுட்டியே ”!
“சும்மா வாடி ! வண்டி உள்ள வந்துடுச்சு !’
இருவரும் ஓடி வந்து கடைசி பெண்கள் பெட்டியில் ஏறினர்.
ஏன் ரதி ! “எப்ப பாரு இப்படி கடைசி நிமிஷத்தில் ஓடி வர” ? என கீது கேட்க , அதற்கு ஒரு புன்னகையையே பதிலாக கொடுத்து விட்டு , மூச்சு வாங்க அவள் இருக்கையில் அமர்ந்தாள்.
“அவ பதில் சொல்லமாட்டானு தெரிஞ்சும் நீ ஏன் டி கேட்கிற? அவள் இப்படி ஓடி வரது கூட பிரச்சனை இல்லை டி ,இதுல ஓடி வரும் வழியில் எதிரில் பார்க்கறவங்ககிட்டலாம் நலம் விசாரிப்பு வேற… முடியலடி…” என புலம்பியபடியே விஜி அவள் எதிரில் அமர்ந்தாள்.
“சரி சரி புலம்பாத! தண்ணி குடி” என ரதி அவளிடம் தண்ணீர் பாட்டிலை நீட்டவும்,ரதியின் அலைபேசி அழைத்தது…
எத்தனையோ குறும்புகள் செய்தோம்!
எத்தனையோ சண்டைகள் பார்த்தோம்!
எத்தனையோ வம்புகள் செய்தோம்!
எத்தனையோ பாடங்கள் கற்றோம்!
அத்தனையும் நாங்கள்தான்!
நெஞ்சுக்குள் என்றென்றும் இருக்கும்!…
“சொல்லு ஜெய் !”
“வண்டி வந்துடுச்சா?..”
“ம்ம்ம்.. கிளம்பிடுச்சு… ஒரு சீட் தான் இருக்கு முதல்ல வேகமா ஏறிட்டினா உனக்கு கிடைக்கும்…”
“சரி ரதி! இன்னைக்கு என்னவோ கூட்டம் அதிகமா இருக்கு முடிஞ்ச வரைக்கும் முதல்லயே ஏற பார்க்கிறேன் இல்லனா கீழே உட்கார்ந்துக்கிறேன்.’
“சரி ஜெய் ! வா !”
“ஒருவழியா இன்னைக்கு மார்னிங் டாஸ்க் ஓவர் . நல்ல வேலை ஈவினிங்ல இவ கூட கிண்டியில் ஏறல இல்லனா எப்பவோ நான் கீழே விழுந்து என் வாய் வெத்தலை பாக்கு போட்டு இருக்கும்” என்று விஜி கூற , அதற்கு ரதி அவளை முறைக்க என அவர்கள் நாள் இனிதே ஆரம்பம் ஆனது.
பெண்மை பல உறவுகளாய் உருமாறினாலும்,
இன்னார் மகள் என்ற வரமான ஆதி அடையாளம் அடுத்து,
என் தேடல் என்னவோ உன்னவள் என்ற அடையாளமும் உந்தன் காதலும் தான்!!