ஒளி 30 :::-
இருதயம் முறைப்படி துடிக்கவில்லை!
இதற்கு முன் எனக்கிது நிகழ்ந்ததில்லை!
நான் கண்ட மாற்றம் எல்லாம் நீ தந்தது நீ தந்தது!
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே!
என்னில் இன்று நானே இல்லை!
காதல் போல ஏதும் இல்லை!
எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா!
என்ன நடந்தது என்று அவள் உணரவே சில நிமிடம் ஆனது. அவனை நிமிர்ந்து பார்க்க, அதிர்ச்சியில் விரிந்த அவள் விழியிலே தொலைந்தவன் சிறு சிரிப்போடு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
முதன் முதலாக அவனுடனான நெருக்கத்திலும் அவளுக்குள் என்னவென்று அறியமுடியாத ஏதோ ஒரு புதிய உணர்விலும் திணறிக் கொண்டிருந்தவளை “ஓய்!” என்று அவன் அழைக்க, அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் எதுவோ ஒன்று அவளைத் தடுத்தது.
முதன் முதலாக வெட்கம் என்ற உணர்வில் அவள் தடுமாற, அவனோ அவனால் நாணம் கொண்ட அவளின் வெட்கத்தில் தடுமாறியவன் மறுபடியும் அவளை அழைத்தான்.
அப்படியும் திரும்பாமல் இருந்தவளை, அணைத்த தன் கையைக் கொண்டு அவள் முகத்தை தன்னை நோக்கித் திருப்பி,
“ரொம்ப தேங்க்ஸ்! நீ பேசினது கேட்க கேட்க இப்ப தான் வாழ்க்கை மேல ஒரு பிடிப்பு வந்து மனசுக்கு நிறைவா வாழ்க்கையே ரொம்ப அழகா மாறினா போல இருக்கு…” என்று நெகிழ்வாக பேசியவனையே இமைக்காமல் பார்த்தாள்.
“கண்டிப்பா இன்னைக்கு நான் எடுத்திருக்க முடிவு சரியானதுன்னு நினைக்கற அளவுக்கு நம்ப வாழ்க்கை நல்லா இருக்கும்னு என்னை விட உங்கமேல அதிகமாக நம்பிக்கையிருக்கு… நீங்க என்னை நல்லா பார்த்துக்கிடுவீங்க…அதனால ஃபிரீயா விடுங்க பாஸ்! வாழ்ந்து தான் பார்த்துடுவோம்..” என்று அவன் மனதை மாற்ற சிறு சிரிப்போடு சொன்னாள்.
“ஆஹான்! அப்ப ரொம்ப மரியாதை வைக்கிற அளவுக்கு நான் ஒன்னும் பெரிய அப்பாடக்கர் இல்லைன்னு சொல்ற… அப்படி தானே…” என்று குறும்போடு அவன் கேட்டதும்,
அப்பாடக்கர் என்ற வார்தையைக் கேட்டு ஒரு நொடி வருந்தினாலும், உடனே சுதாரித்து.. “நீங்க அப்பாடக்கர் இல்லை தான் ஆனால் எனக்கு நீங்க டாப் டக்கரு தான் அதுல உங்களுக்கு சந்தேகமே வேணாம்…” என்று அவள் சொன்னதைக் கேட்டு பெருங்குரலெடுத்து சிரிக்க ஆரம்பித்தான்.
[the_ad id=”6605″]
அந்த சத்தத்தில் அக்கம் பக்கம் இருந்த எல்லோரும் திரும்பி பார்க்க அப்போது தான் இருவரும் இருக்கும் நிலை உணர்ந்து கூச்சத்தால் அவனிடமிருந்து விலக அவனும் அவள் மீதிருந்த கைகளை விலக்கினான்.
“சரி நீ கிளம்பு! என்றவனிடம், அதன்பின் எல்லாம் மின்னல் வேகம்தான்…இன்னும் நாற்பது நாட்களில் முஹூர்த்தமும் முந்தைய நாள் மாலை நிச்சயமும் அப்படியே பெண் அழைப்போடு கூடிய வரவேற்பும் மறுநாள் காலை திருமணமும் என்று முடிவு செய்யப்பட்டது.
திருமண வேலைகள்தான் வேகமா நடந்தது. ரதியின் மனநிலையோ கல்யாணம், கனவுகள், புதுப் பெண்ணிற்கு உரிய ஆர்வம் என்று எதுவுமில்லாமல் இதுவும் வாழ்க்கையின் ஓர் அங்கம் அவ்வளவு தான் என்ற மனநிலையில் இருந்தது.
அதைக் குறித்து பார்த்திபனுக்கு கவலையாக இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அவள் மனதை அவளுக்கே உணர வைக்கலாம் என்று பொறுமை காத்தான்.
பார்த்திபனின் முயற்சி இல்லாமல் ரதியே முதல் முறை தன் மனதை உணரும் சந்தர்ப்பமும் வந்தது. சேகர் அலுவகத்தில் எல்லோரையும் அவர் மகளின் திருமணத்திற்கு நேரிலேயே வந்து வற்புறுத்தி அழைத்திருக்க, திருச்சியில் திருமணம் என்பதால் மற்றவர்கள் தயங்க ரதியும் பார்த்திபனும் செல்லலாம் என்று முடிவெடுத்திருந்தனர்.
சில்லென்ற காற்று முகத்தில் வீச, கும்மிருட்டில் மினுமினுக்கும் நட்சத்திரங்களுக்கும் பிரகாசமான நிலவுக்கும் நடுவே வானிலே பயணிப்பது போல ஜன்னலோரத்தில் ரதியும் அவளருகே பார்த்திபனும் அமர்ந்திருக்க முதல் முறை அவனுடனான பேருந்து பயணம்.
அவள் எதுவும் பேசுவாள் என்று இவன் காத்திருக்க அவளோ இப்போது வேடிக்கை பார்ப்பது மட்டுமே என் வேலை என்பது போல வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்.
பொறுமை இழந்தவனின் “ஓய்” என்ற அழைப்பில் திரும்பி அவனை பார்த்து விட்டு மறுபடியும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
“என்ன பேச மாட்டியா?” என்று அவன் கேட்டதும்,
“ஆமா! நான் உங்க மேல கோவமா இருக்கேன்” என்றபடி அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.
“நான் என்ன பண்ணேன்” என்று அவளின் கோபத்திற்கான காரணம் தெரியாமல் குழப்பமாக அவன் கேட்க,
“பின்ன… நீங்க ஏன் கல்யாணத்தை வீட்டு பூஜைக்கு முன்னாடி வைக்க சொன்னீங்க… அது முடிஞ்சு பிறகு கல்யாணம் பண்ணலாம்னு இருந்தேன்.. அப்ப தான் எனக்கு மனசுக்கு நிம்மதியா இருக்கும்… வீட்ல பேசினால் எல்லாரும் இந்த முஹூர்த்தம் தான் நல்ல இருக்கு சொல்றதை கேளுன்னு என்னை பேச விடாம பண்ணிட்டாங்க…” என்று அவள் புலம்ப,
“உண்மையா அந்த மாசத்துல அதான் கடைசி முஹூர்த்தம்… அதனால தான் சொல்லியிருப்பாங்க… பெரியவங்க எல்லாம் காரணமாத் தான் சொல்லுவாங்க… நீ ஒன்னும் கவலைப்படாதே…” என்று அவன் ஆறுதலாக சொன்னதும்,
“போங்க நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணாம வீட்ல சொல்றது கேட்கறீங்க…” என்று சிறு குழந்தையாக சிணுங்க… அந்த சிணுங்களில் தொலைந்தே போனான். உடனே தன்னை சுதாரித்தவன்,
“ஓய்! நீ எதைப்பதியும் யோசிக்காதே… நான் பார்த்துக்கிறேன் சரியா…” என்று அவளை சமாதானப்படுத்த, அவள் கோபம் போயிருந்தாலும் வேண்டுமென்றே போலியாக அவனை முறைத்து விட்டு ஜன்னலோரம் திரும்பி விட்டாள்.
திடீரென அவள் காதருகே ஏதோ ஊர்வது போல் இருக்க பதறியவாறு திரும்பியவளின் இடது காதில் ஒரு ஹெட்போனை மாட்டிக் கொண்டிருந்தான்.
இன்னொரு ஹெட்போனை அவனின் வலது காதில் மாட்டியவாறு அவளின் காதோரம் குனிந்தவன், “எனக்கு இது போல நைட் ட்ராவல் ரொம்ப பிடிக்கும்… அதுல நீயும் நானும் நிறைய பேசிட்டே போகணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை… ஆனால் நீ தான் என்மேல கோவமா இருக்க… அதனால நான் என்னென்ன பேசணும்னு நினைக்கிறானோ அதெல்லாம் பாட்டா போடறேன்… அமைதியா கண்ணை மூடிட்டு கேளு… சரியா…” என்று ரகசிய குரலில் அவளிடம் சொல்ல, ரதியோ ஏதோ சொல்லப்படாத உணர்வுகளில் சிக்கித் தவித்தாள்.
அவன் சொன்ன விஷயமே அவளுக்கு ஆச்சர்யமாக இருக்க, அவனின் இதழ்கள் மெல்ல பட்டும் படாமலும் அவள் காதோரம் உரச அவன் சொன்ன விதமும், அவன் போட்ட முதல் பாட்டும் அவள் மனதையும் சேர்த்தே உரசியது.
ஒன்ன வச்சேன் உள்ள !
அட வெல்லக்கட்டி புள்ள!
இனி எல்லாமே உன்கூடத்தான்!
வேணாம் உயிர் வேணாம் உடல் வேணாம்!
நிழல் வேணாம் அடி நீ மட்டுந்தான் வேணுன்டி!
உருமும் வேங்கை ஒரு மான் முட்டித்தோத்தேனடி!
உசுறக்கூட தர யோசிக்கமாட்டேனடி !
அவன் போட்ட ஒவ்வொரு பாடலும் அவன் மனதை அப்பட்டமாக அவளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஆனால் இது எப்படி எப்போது சாத்தியமானது என்ற கேள்வி மட்டும் அவளுள் ஓடிக் கொண்டிருக்கையிலேயே உறங்கியவள் அதிகாலை அவன் எழுப்பிய பிறகு தான் எழுந்தாள்.
[the_ad id=”6605″]
அதன் பின் இருவரும் திருமணத்திற்கு சென்று மணமக்களுக்கு வாழ்த்தும் பரிசும் அளித்து விட்டு மாலை வரவேற்புக்கு வருவதாக சொல்லி சேகரிடம் விடைபெற்று திருச்சி உச்சிப் பிள்ளையாரைத் தரிசிக்க சென்றனர்.
என்னவோ அன்று வானம் மழையும் இல்லாமல் வெயிலும் இல்லாமல் நடுநிலையாக இருந்தது. அதனால் மலை ஏற அவர்களுக்கு வசதியாக இருந்தாலும் ரதி பாதி வழி ஏறியதற்கே சோர்ந்து போனாள்.
காலை திருமணத்திற்கு கட்டியிருந்த பட்டுப்புடவையை கலைந்து எப்போதும் அணியும் காட்டன் புடவையில் வந்திருந்தவளை அடிக்கடி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து முறைத்தாள்.
“இப்ப எதுக்கு என்னையே திரும்பி திரும்பி பார்க்கறீங்க? நானே சேலைக் கட்டிட்டு ஏற முடியலன்னு கஷ்டப்பட்டு ஏறிக்கிட்டு இருக்கேன்… நீங்க வேற பார்த்து பார்த்து கடுப்பாக்காதீங்க ஒழுங்கா நேரா பார்த்து ஏறுங்க?” என்று ரதி சொன்னதும் இத்தனை நேரம் மறைத்து வைத்திருந்த சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் சத்தமாக சிரித்தான்.
ஏறிக் கொண்டிருந்தவள் அப்படியே அவன் பக்கம் திரும்பி இடுப்பில் கை வைத்தவாறு மூச்சு வாங்க, “இப்ப எதுக்கு சிரிக்கறீங்க?” என்று கடுப்போடு கேட்டாள்.
“இல்லையில்லை ஒண்ணுமில்லை! வா போகலாம்” என்று அவன் அழைக்க,
“நீங்க சொன்னா தான் வருவேன்” என்றபடி அங்கேயே உட்கார்ந்து விட்டாள்.
“ஓய்! என்ன இங்கயே உட்கார்ந்துட்ட… அன்னதானம் இங்க இல்லையாம் மேல போனா தான்…” என்று அவன் இன்னும் கேலி பேச… ரதியோ உட்கார்ந்தபடியே அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.
அவள் முறைப்பதைப் பார்த்து தன் சிரிப்பை அடக்கியவன் “எழுந்திரு.. போகலாம்… போயிக்கிட்டே எதுக்கு சிரிச்சேன்னு சொல்றேன்..” என்று ஒரு வழியாக அவளை சமாதானப்படுத்தி கைக் கொடுத்து எழுப்பினான்.
நடக்க ஆரம்பித்ததும் ,” ஆயுத பூஜை அன்னைக்கு ஸ்டேஷன்ல சேலையை கட்டிக்கிட்டு தோள்ல உன் கைப்பை, கையிலே இன்னொரு ஒரு பெரியப்பை; அது சாப்பாடுன்னு நினைக்கிறேன் அதையும் தூக்கிக்கிட்டு சேலையை சும்மா வாரி கட்டிக்கிட்டு ட்ரைன் ஏற நீ ஓடி வந்த, இன்னைக்கு அதே சேலையை கட்டிக்கிட்டு இங்க படி ஏற முடியாம நடக்கறதை பார்த்ததும் சிரிப்பு வந்துடுச்சு…” என்று அன்றைய நாளை எண்ணி சிரித்தவாறே, அவளிடம் திரும்பி “அன்னைக்கு தான் உன்னை முதல் முதல்ல சேலையிலே பார்த்தேன்” என்று கூறி அவளைப் பார்த்து கண்ணடிக்க அவளோ அவன் சொன்ன பதிலில் அதிர்ச்சியடைந்தாள்.
“நீங்க என்னைப் பார்த்தீங்களா? நான் உங்களைப் பார்க்கலையே?” என்று ஆச்சர்யமாக ரதி கேட்டதும்… “நீ எப்ப முன்னாடி பார்த்து நடந்து இருக்க? சூறாவளி போல சுத்தி இருக்கவங்களை சுழற்றி அடிச்சுட்டு போயிட்டே இருக்க ஆளாச்சே…” என்று சிரிப்போடு சொன்னவனை முறைத்து விட்டு வேகமாக படியேற ஆரம்பித்தாள்.
“ஓய்! இரு நானும் வரேன் என்னை விட்டுட்டு போகாத..” என்று பின்னிருந்து கத்தியவனின் வார்த்தையில் அவள் அமைதியாக ஏற ஆரம்பிக்க, அவள் பின்னே ஓடியவன் அவளோடு இணைந்துக் கொண்டான்… ரதியோ அவன் சொன்ன நாளினை நினைத்துக் கொண்டிருந்தாள்.
ஆயுத பூஜைக்கு எல்லா பெட்டியையும் வாழைத் தோரணங்களும் வண்ண காகிதங்களும் பலூன்களும் கொண்டு அலங்கரித்து, ஆளுக்கொரு உணவு வகை சமைத்துக் கொண்டு வந்து செங்கல்பட்டில் முழு வண்டிக்கே ஒரு பெரிய பூஜை போட்டு அவர்கள் ட்ரைனே கொண்டாட்டமாக இருக்கும்.
அவன் சொன்னது போல அன்று எல்லோருக்கும் கேசரியும், புளியோதரையும் எடுத்துக் கொண்டு வந்திருந்தாள். அதிலும் புடவையைக் கட்டிக் கொண்டு எப்போதும் போல கடைசி நிமிஷத்தில் ஓடி வந்து ஏறியதும்,
முதல் முறை அவனை சந்தித்த பிறகு இந்த சம்பவம் நடந்ததால் விஜி கேட்ட முதல் கேள்வியே இவனையும் சேர்த்து தானே, “ஹே ! ரதி நீ ஓடி வந்ததுல சாப்பாட்டுக்கும் போதி மரத்துக்கும் எந்த சேதாரமும் இல்லை தானே…” என்றவளை பொய்யாக அடித்ததை நினைத்து இன்று அவளுக்கு சிரிப்பு வந்தது.
இரண்டாம் முறை சந்திப்பில் மட்டுமே இவனை நான் திரும்பி பார்க்க நினைத்தேன் இவனானால் என்னை முன்னாடியே கவனித்து இருக்கானா… என்று அவளுக்குள் யோசனையில் இருந்தவளை, “உள்ள வந்துட்டோம் சாமி கும்பிடலாம் வா” என்றவாறு அவளின் கைப்பிடித்து கூட்டி சென்றான்.
[the_ad id=”6605″]
அவளும் மற்றது மறந்து அவனோடு சேர்ந்து பிள்ளையாரை தரிசித்தப் பின் தாயுமானவரையும் தரிசித்து விட்டு கிளம்பினர். நிறைய நிறைய பேசினார்களா என்று தெரியாது ஆனால் அவன் பேச பேச நிறைவாக உணர்ந்தாள்.
பேச்சில் அவள் மீதான அவனின் உரிமையையும், சீண்டலால் முறைக்கும் போது அவன் மீதான அவளின் உரிமையையும் சேர்த்தே உணர்ந்தாள். அதன்பின் வரவேற்பில் கலந்துக் கொண்டு சேகரிடம் அவர்களின் திருமண விஷயத்தை கூறி அவரையும் தங்கள் திருமணத்திற்கு அழைத்து விட்டு அவரிடம் மனதார வாழ்த்தும் பெற்றுக் கொண்டு இரவு பஸ் ஏறினர்.
வரும் போது இருந்தது போலவே அவனுடன் இணைந்து பாடல் கேட்டுக் கொண்டு வந்தவள் இன்றைய அலைச்சலில் சீக்கிரமே உறங்கிப் போனாள். நடுநிசியில் திடீரென விழிப்பு வந்து அவனைத் திரும்பிப் பார்த்தவளின் இதயம் வேகமாக துடித்தது…
இமைத்தட்டாமல் விழித்து நின்றேன் !
கண்மூடினால் நீ மறைந்து விடுவாயோ என்று !
தூக்கம் கலையாமல் உறங்கியிருந்தேன் !
எந்தன் கனவான நீ கலைந்து விடுவாயோ என்று !