ஒளி 31::-
எனக்கே என்னை தெரியாமல்…
இருந்தேன் அன்பே! எதற்காக?
சிரிப்பால் உலகை கொடுத்தாயே!
இரண்டாம் தாய் போல் கிடைத்தாயே!
நான் உனக்கென இருப்பது தெரியாதா!
எதை நான் சொல்வேன் பதிலாக!
இனிப்பாய் என்னை நீ கவர்ந்தாயே!
இயல்பாய் மனதை திறந்தாயே!
கொடுத்தாய் உன்னை நீ முழுதாக!
எடுத்தாய் எனையும் அழகாக!
நடு இரவில் விழிப்பு வந்ததும் அவனை நோக்கித் திரும்பியவளின் முகம் அவன் முகத்தோடு நெருக்கமாக உரசியதும் அதிர்ந்து அவனைப் பார்க்க, அவனோ அவளின் கையை தன் இரு கைகளால் இறுக்கமாக பிணைத்துக் கொண்டு குழந்தையாக அவள் தோளில் சாய்ந்துக் கொண்டு சுகமாக உறங்கி கொண்டிருந்தான்.
அதைப் பார்த்ததும் உருகிப் போனவளின் கை தன்னாலேயே அவன் தலையை இதமாக கோதி விட்டது. அவளின் வருடலில் தூக்கத்திலே இன்னும் ஆழமாக அவளுள் புதைந்தான்.
அவள் தோளின் உயரத்திற்கு இறங்கி அமர்ந்திருந்ததால் அவளின் கழுத்தோரம் அவனின் கேசமும் கன்னமும் உரச உறங்கியவனைப் பார்க்க அவளுள் ஏதோ ஒரு தடுமாற்றம்.
அவன் மீதான மரியாதையை தாண்டி அவன் மீதான பிடித்தம் தான் தன்னை இத்தனை இயல்பாக அவனிடம் பேசவும் வைக்கிறது, அவனின் நெருக்கத்தை ஏற்கவும் வைக்கிறது என்பதை அவளின் இந்த தடுமாற்றம் அவளுக்கு உரக்க கூறியதைக் கேட்டதும் இன்பமாய் அதிர்ந்தாள்.
தனக்கு தெரிந்த நபரோடு திருமணம் என்ற அளவில் மட்டுமே இருந்த அவளின் மனம் முதல் முறையாக அவனோடு பிணைந்த வாழ்க்கையின் பிடித்ததை உணர்ந்தது.
வேறு யாரும் இருந்திருந்தால் கண்டிப்பாக இது எதையும் தன்னால் இயல்பாக ஏற்றிருக்க முடியாது என்று அவள் மனம் அடித்து சொன்னது, கூடவே அவன் மீதான நேசத்தையும்… வரும் போது இல்லாத அளவிற்கு முதல் முறையாக தன் மீதான அவன் நெருக்கத்தையும், மனதில் அவன் மீதான தன் நெருக்கத்தையும் சேர்த்தே உணர்ந்தவள் அப்படியே உறங்கிப் போனாள்.
[the_ad id=”6605″]
அதன்பின் நாட்கள் வேகமாக விரைய அவள் குடும்பத்தில் எல்லோருடனும் நெருக்கமாகி இருந்தான். புடவை எடுக்க குறித்த நாளில் இருவருக்கும் முக்கியமான அலுவல் வேலை வந்து விட, வீட்டில் உள்ளவர்களை தன்னையே சமாளிக்க சொல்லியவளுக்கு ஆதரவாக பழனியை அழைத்தான்.
“சித்தப்பா! கடைல இருந்து எனக்கு சேலையை போட்டோ எடுத்து அனுப்புங்க… நான் பார்த்து சொல்றேன் அதையே எடுங்க..”
“சரிங்க தம்பி!” என்று பழனி சொன்னவாறே செய்ய அவர் அனுப்பிய புடவைகளில் இருந்து இரண்டு புடவையை தேர்ந்தெடுத்தான்.
வேலையின் பளு காரணமாக அவர்களுக்குள் சரி வர பேச முடியாமலே கூட நாட்கள் ஓடியது. பார்த்திபனோ ஏதோ ஒரு யோசனையுடனே இருக்க ரதி அவனிடம் கேட்டும் ஒன்றுமில்லை என்று சமாளித்து விட்டான்.
அலுவகத்தில் இருவருமாக சேர்ந்தே எல்லோரையும் திருமணத்திற்கு அழைக்க எல்லோரும் வியந்தாலும் மகிழ்ச்சியாக அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
திருமணத்திற்கு முன்பு ரதிக்கு நலங்கு சாங்கியம் எல்லாம் நடைபெற இது எதுவும் தனது வீட்டில் தன் தந்தையோடு நடக்கவில்லையே என்று அவளின் மனதின் ஓரம் ஓடிக் கொண்டிருந்தது. அதை பார்த்திபன் உணர்ந்தானோ என்னவோ அவள் மனதை மாற்றும் பொருட்டு தினமும் இரு முறை அவளுக்கு அழைத்து ஏதேனும் பேசி அவளை சீண்டிக் கொண்டிருந்தான். இதோ அதோ என்று கண்மூடி திறப்பதற்குள் திருமண நாளும் வந்தது.
மாலை நிச்சயத்திற்காக மணமக்கள் மேடைக்கு அழைத்து வரப்பட, பார்த்திபன் தேர்ந்தெடுத்த தங்க நிற நிச்சயப்பட்டில் ரதியாக ஜொலித்த அவனின் குந்தவையையே கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அதிலும் அவனுக்கு நேரெதிரே அமர வைத்து எல்லோரும் அவளுக்கு நலங்கு வைப்பது அவனுக்கு வசதியாகப் போய் விட்டது. அவன் பார்வையின் வீச்சில் சிவந்த அவள் கன்னங்களை பார்க்க முடியாமல் எல்லோரும் அதற்கு சந்தானம் பூசியிருந்தனர்.
இருவருக்கும் இடையில் வந்து நின்ற சிவா, “ஹே ! ரதி! உன்னை இப்படி ஒரு இடத்தில அடக்க ஒடுக்கமா அதுவும் நீ வெட்கப்படறதை சேர்த்து பார்க்கும் போது எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது…” என்று அவளெதிரே நின்று சிரித்தவனைப் பார்த்து ரதி முறைக்க அதைப் பார்த்த பார்த்திபனுக்கும் சிரிப்பு வந்தது.
“வாவ்! இது நல்லாருக்கே ! இப்ப நான் உன்னை எவ்வளவு கிண்டல் பண்ணாலும் உன்னால ஒன்னும் பண்ண முடியாதுல்ல… என்னைத் திட்டவும் முடியாதுல்ல…” என்று மேலும் சிரிப்போடு தொடர்ந்தவனைப் பார்த்து அவளால் முறைக்க மட்டுமே முடிந்தது. இதை எல்லாம் பார்த்திபன் ரசித்துக் கொண்டிருக்க,
“டேய்! சிவா போய் வாசுகி அத்தையை மேடைக்கு கூட்டிட்டு வா! நிச்சயத் தாம்பூலம் மாற்றனும்” என்று அவனின் தாய் அவனை அனுப்பி வைத்தப் பின் தான் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். அப்போது தான் ரதி சுற்றம் உணர்ந்து பார்த்திபன் அருகில் இருந்தவரைப் பார்த்தாள்.
நிச்சயம் முடிந்ததும் பார்த்திபன் ரதியை அழைத்துக் கொண்டு போய் தன் தந்தையின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க, அவர் முகம் அந்த சோர்விலும் மலர்ந்து விகசித்தது.
“தாய் இல்லா பிள்ளைம்மா இவன் இனி உன் பொறுப்பு… பத்திரமா பார்த்துக்கோ…” என்று அவர் ரதியின் கையைப் பற்றி சொல்வதை கண்டு பார்த்திபன் சிரிக்க, அந்த நொடி தான் அவள் அறிந்தாள் அவனுக்கு தாய் இல்லை என்று…
அவர் இன்னும் தன் பதிலுக்கு காத்திருப்பது புரிய, அவர் கையின் மீது தன் கையை ஆறுதலாக வைத்து, “கண்டிப்பா மாமா !” என்றாள்.
அறிந்த உண்மை மனதை அழுத்தியது. ஆனால் அதைப் பற்றி யோசிக்கவோ பேசவோ நேரமில்லாமல் நிச்சயம் முடிந்து இருவரும் வரவேற்பில் நின்றனர். அவளின் குழப்ப முகம் கண்டவன் கிடைத்த இடைவெளியில்,
“ஓய்! என்னாச்சு ? என்ன யோசிச்சுட்டு இருக்க?” என்று பார்த்திபன் ரதியிடம் கேட்டான்.
இந்த நொடி வரை அவனின் குடும்பத்தைப் பற்றி தான் ஒன்றும் அறிந்திருக்கவில்லை என்று எப்படி அவனிடம் சொல்லுவாள். இத்தனை நாள் அவனைத் தாண்டி தான் வேறு எதுவும் யோசிக்காமல் அறிந்துக் கொள்ளவும் முயலாமல், தான் எப்போது இத்தனை சுயநலமாக மாறினோம்.
பெண் பார்க்க வந்திருந்த அன்று கண்டிப்பாக அவன் குடும்பத்தில் எல்லோரும் வந்திருப்பார்கள் ஆனால் அன்றைய நிலையில் தான் கவனிக்கவில்லை அதன் பின்னே கேட்டாவது தெரிந்துக் கொண்டிருக்கலாமே… என்று தன்னைத் தானே இன்று நொந்துக் கொண்டாள்.
[the_ad id=”6605″]
இருவரும் ஒரே அலுவகம் என்பதால் ஒருவரைப் பற்றி ஒருவருக்கு தெரியும் என வீட்டினர் நினைத்திருக்க லாம், அதே போல அவள் வீட்டில் உள்ளவர்கள் சொல்லியிருப்பார்கள் என்று அவனும் அதை பற்றி பேசவில்லை என்பதை யூகித்தாள்.
தான் கேட்டும் இன்னும் யோசனையிலே இருந்தவளின் கையை இறுக்கமாக பிடிக்க அந்த அழுத்தத்தில் அவனை நோக்கித் திரும்பினாள். அவளின் கலக்கமான பார்வையோடு தன் ஆறுதலான பார்வையைக் கலக்க விட்டவன்,
“எதுவானாலும் அப்புறம் யோசிக்கலாம் பேசிக்கலாம். இப்ப இந்த நொடி நமக்கானது. உனக்கும் எனக்கும் மட்டுமேயான நாள் இது. அதனால வேற எதைப் பத்தியும் யோசிக்காம இப்ப நடக்கறதுல இருக்க சந்தோஷத்தை மட்டும் எடுத்துக்கோ… அதான் நான் தான் கூடவே இருக்கேன்ல அப்புறம் என்ன… ஃபிரீயா விடு…” என்று அந்த நேரத்திலும் தன் மனநிலை அறிந்து பேசியவனைக் கண்டு அவள் மனம் அனுமதியில்லாமலே அவனிடம் ஓடியது. அதன்பின் அவனுடன் ஒவ்வொரு நிகழ்வையும் ரசித்தவளின் மனநிலையை உரைப்பது போல அவளுக்கு தோதாக பாடல் வேறு ஒலித்தது.
நீ என்னை பார்க்காமல் நான் உன்னை பார்க்கின்றேன்!
நதியில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா?
உயிருக்குள் இன்னோர் உயிரை!
சுமக்கின்றேன் காதல் இதுவா!
இதயத்தில் மலையின் எடையை…!
உணர்கின்றேன் காதல் இதுவா!
அதன்பின் அவளின் தோழிகள் எல்லோரும் மேடைக்கு வர தன்னாலேயே ரதியின் முகம் மலர்ந்தது. பார்த்திபனை ஒரு முறை மட்டுமே பார்த்திருந்ததால் அவர்களுக்கு அவனை அடையாளம் தெரியவில்லை. தோழிகளை பார்த்திபனுக்கு அறிமுகப்படுத்தியவள், குறிப்பாக விஜியை நோக்கி, “விஜி ! இவர் தான் நீ தேடின ஜிம்பாடி அலைஸ் போதிமரம்” என்று சிரிப்போடு சொன்னவளைப் பார்த்து பார்த்திபன் முறைக்க, தோழிகளோ அதிர்ந்து அவனைப் பார்த்தனர்.
“அடிப்பாவி வீட்ல பார்த்த வரன்னு சொன்ன, கடைசியில லவ் மேரேஜ்ஜா… அந்த லவ் கூட போதி மரத்துல தான் கிடைச்சிருக்கு போல…” என விஜி அவளின் கேலி பேச்சை ஆரம்பிக்க, பார்த்திபன் அவனின் பட்ட பெயரின் விளக்கம் கேட்க என்று அந்த இடமே கேலி கிண்டலில் கலகலத்தது.
அவள் குடும்பத்தினர் அனைவரின் முகத்திலும் சந்தோசம் நிரம்பி வழிந்தது. ஏதோ கடமைக்காக அல்லாமல் எல்லோருமே அவளின் இந்த சந்தோஷ தருணத்தை ஆழ்ந்து அனுபவித்தனர்.
உணர்வுகளை உயிராக நினைக்கும் உறவுகள் கிடைப்பது கூட வரம் தானோ… என எண்ணிய பார்த்திபன் நாளைக்கு முதல்ல எல்லோருக்கும் ஒண்ணா சுத்தி போடணும் என்று நினைத்தான்.
அதிகாலை நான்கு மணிக்கே முஹூர்த்தம். எல்லோரும் பரபரப்பாக ஏற்பாடுகளைக் கவனிக்க, சாந்தி முதல் வரிசையில் உட்கார்ந்து மனதில் கணவரோடு பேசிக் கொண்டு மகளின் சந்தோஷத்தை மனதுக்குள் நிறைத்துக் கொண்டிருந்தார்.
எல்லோரிடமும் ஆசீர்வாதம் வாங்கிய மாங்கல்யம் பார்த்திபனின் கைக்கு வந்தது. ஒரு படபடப்போடு அதை ஏற்பதற்கு தலைகுனிந்து அமர்ந்திருந்தவளின் மனதை உணர்ந்து அருகே குனிந்தவாறு அவளை அழைத்தான்.
“ஓய்!”
அந்த ஒற்றை அழைப்பில் அவளுக்கு சர்வமும் மறந்து போய் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவளின் அந்த பார்வையை தாங்கியபடியே “என்னை சுற்றி இந்த உலகமே இருந்தாலும் என்னோட ஆதியும் அந்தமும் நீ தான்!..” என்று சொல்லியபடியே அவள் கழுத்தில் மங்கள நாண் பூட்டியவனின் வசீகரிக்கும் கண்கள் எப்போதும் போல அவனின் உணர்வை பிரதிபலித்ததது.
இத்தனை நேரம் தோளோடு தோள் உரச இருந்த அவன் நெருக்கமோ, தாலி கட்டும் போது உண்டான தொடுகையோ அல்ல அவன் மூச்சு காற்று கன்னத்தோடு உரச அவன் பேசியதோ என்று எதுவுமே அவளை பாதிக்கவில்லை..
ஆனால் அவளிடம் புன்னகைக்கும் அந்த விழிகளிடம் விரும்பியே சிறையானாள்… இன்றல்ல பார்த்த முதல் நாளே, அந்த விழிகள் தன்னை சிறையெடுத்து இருப்பதை உணர்ந்து மகிழ்ச்சியாக மற்ற அனைத்து சடங்கையும் செய்தாள்.
பாதத்தை வருடியவாறே அவளின் காலில் மெட்டி அணிவித்தவனின் செயலே சொன்னது… இவன் தன்னை காவல் காப்பவன் மட்டுமல்ல காதல் செய்பவன் என்று!
இருவரையும் தனியாக போட்டோ எடுக்க ஆரம்பித்ததும், “போட்டோ எல்லாம் அப்புறம் பொறுமையா எடுத்துக்கலாம்… அங்க போயிட்டு நேரம் இருக்குமோ என்னவோ அதனால இந்த ஜூஸ் மட்டும் குடிச்சுட்டு கிளம்புங்க…” என்று வாசுகி வந்து ஜூஸ் கொடுக்க, ரதியோ ஏன் இந்த அவசரம் என்று கேள்வியாக அவரை ஏறிட்டாள்.
அதற்குள் பாண்டியன் வந்து, “வண்டி வந்துடுச்சு நேரமாகுது கிளம்புங்க…” என்று சொல்ல பார்த்திபன் ரதியை அழைத்துக் கொண்டு கிளம்பினான். இப்போதும் தன் வீட்டிற்கு செல்ல முடியாது என்ற உறுத்தல் அவளுள் எழ கண்மூடி இருக்கையில் சாய்ந்து விட்டாள்.
வண்டி நின்றதும், “ஓய்! இறங்கலாம் வா !” என்ற அவன் அழைப்பில் இறங்கியவள் வந்து சேர்ந்த இடத்தைப் பார்த்து மகிழ்ந்தாலும் குழப்பமாக பார்த்திபனை ஏறிட, அவனோ அவள் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே அழைத்து சென்றான்.
உள்ளே சென்று பார்த்தால் இவர்களுக்கு முன்னே மற்றவர்கள் வந்திருந்தனர். வாழைத் தோரணங்கள் வரவேற்க உள்ளே சென்றவளை புது வீட்டிற்கு பூஜைக்கான ஏற்பாடுகள் வரவேற்றது. அவளை மற்ற எதையும் யோசிக்க விடாமல் அங்கிருந்த ஒரு அறைக்கு அழித்து சென்றான் பார்த்திபன்.
[the_ad id=”6605″]
“நமக்கு நேரமில்லை. புதுமனை பூஜைக்கு நேரமாச்சு. இந்தா இந்த சேலையை மாத்திக்கிட்டு வா” என்று வெளியேறியவனின் கையைப் பிடித்து நிறுத்தினாள்.
“என்ன?” என்று அவன் திரும்ப…
“என்ன நடக்குது இங்க?என்கிட்ட ஏன் யாரும் எதுவும் சொல்லல?” என்று கோபம் பாதியும், ஏன் இன்றே என்ற குழப்பம் மீதியும் கொண்டு கேட்டவளின் கைகளை தன்னிரு கைகளில் புதைத்தவன் அவளைப் பார்த்து,
“இது உங்க அப்பாவுக்காக நீ ஆசையா கட்டின வீடு. இதுக்கான புதுமனை பூஜையை மத்தவங்களை விட நீ பண்ணினா மாமாவுக்கு இன்னும் நிறைவாக இருக்கும். ஆனால் கல்யாணம் ஆகாமல் தனியா நீ மனையில உட்காரக்கூடாதுன்னு பெரியவங்க சொன்னாங்க…”
“அதான் கல்யாணத்தை முன்னாடியே வைக்க சொல்லி நீயும் நானும் சேர்ந்து பூஜை பண்ணலாம்னு எல்லா ஏற்பாடும் பண்ணோம். என்ன தான் பாண்டியன் பெரியப்பா எந்த குறையும் இல்லாமல் நமக்கு எல்லாம் செய்தாலும் இன்னைக்கு நடக்கற எல்லா சடங்கிலும் ஒரு பொண்ணா நீ உன் பிறந்த வீட்டை தேடுவன்னு நான் தான் அவங்க கிட்ட பேசி இந்த ஏற்பாடெல்லாம் செஞ்சேன்”
“நானும் சிவாவும் தான் உனக்கு சர்ஃப்ரைஸ் கொடுக்கலாம்னு சொல்லாம இருந்தோம். ஒருவேளை நீ இதுக்குன்னு ஆசையா எதுவும் நிறைய யோசிச்சு வைச்சிருந்திருப்ப… அதெல்லாம் உங்கிட்ட கேட்காமல் நானே முடிவு பண்ணி பண்ணது தப்பு தான். சாரி!… இப்ப எதுவும் மாத்த முடியுமான்னு நான் பெரியவங்க கிட்ட கேட்கறேன்…” என்று செல்ல திரும்பியவனை பின்னிருந்து அணைத்திருந்தாள்.
உனக்கு ஆறுதலாக நான் இருந்தாலும்…
கவலையில் நீ அழும் போது…
பலமடங்கு நான் அழுகிறேன் !
மகிழ்ச்சியில் நீ சிரிக்கும் போது…
பலமடங்கு நான் பரவசப்படுகிறேன்!
காரணம் உன்னை என் அன்பால் கவருவதற்காக அல்ல !
என் உயிராக நீ இருக்கும் போது !
உன் உணர்வுகளாய் நான் இருப்பதனால்!