ஒளி 32 ::
வெள்ளித் தரைப் போலவே என் இதயம் இருந்தது!
மெல்ல வந்த உன் விரல் காதல் என்று எழுதுது!
ஒரு நாள் காதல் என் வாசலில்…!
வரவா? வரவா? கேட்டது!
மறுநாள் காதல் என் வீட்டுக்குள்!
அடிமை சாசனம் மீட்டுது!
அதுவோ? அது இதுவோ? இது எதுவோ?
அதுவே நாம் அறியோமே!
தனக்காக அவன் யோசித்து உரிமையாக செய்த விஷயங்களை அவன் சொல்ல சொல்ல என்ன மாதிரி உணர்ந்தாள் என்று அவளால் அறியமுடியவில்லை. தன்னை அணைத்தவளை கண்டு இன்பமாக அதிர்ந்தவன் கைகொண்டு அவளை இழுத்து தன் முன்னே நிறுத்தினான்.
“ஓய் ! என்ன ?” என்று அவளிடம் கேட்டவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“ஏன் ? எனக்காக இப்படி எல்லாம் பார்த்து பார்த்து செய்யறீங்க? அப்படி என்ன நான் உங்களுக்கு பண்ணிட்டேன்? நீங்க எனக்காக இந்த அளவுக்கு எல்லாம் செய்யும் போது நான் உங்களைப் பத்தி தெரிஞ்சுக்க கூட முயற்சி பண்ணலன்னு நினைச்சா எனக்கே என்மேல கோவம் வருது…” என்று கலங்கியவளை,
தன்னோடு சேர்த்து அணைத்தவனின் நெஞ்சில் சுகமாக சாய்ந்தவளிடம், “நான் உனக்கு எதுவும் சும்மா பண்ணலம்மா… இப்ப நான் செய்யற எல்லாத்துக்கும் நீ திரும்ப கொடுக்கணும்…” என்று அவன் சொன்னதும்,
வேகமாக நிமிர்ந்து அவனைப் பார்த்து “என்ன கொடுக்கணும் சொல்லுங்க நான் உங்களுக்காக எதுவானாலும் செய்வேன்…” என வாக்குறுதி வீசியவளை குறும்பாக பார்த்தான்.
“என்ன நீ இப்படி பொசுக்குன்னு வாக்கு கொடுக்கற? ஒரு முறைக்கு பலமுறை யோசிச்சுக்கோ?..” என்றவனிடம்,
“அதெல்லாம் நாங்க யோசிச்சுட்டோம் நீங்க சொல்லுங்க…” என விடாது கேட்டவளுக்கு பதிலளிக்கும் முன் பூஜைக்கு நேரமாகிறது என்று வெளியே இவர்களை அழைத்தனர்.
அவளை ஒரு முறை இறுக்கமாக அணைத்தவன், அவள் முகம் தாங்கி நெற்றியில் மென்மையாக தன் முதல் முத்தம் பதித்து வெளியே அழைத்து வந்தான். அவர்கள் இருவரும் மனையில் அமர்ந்து பூஜை செய்வதைப் பார்த்த எல்லோருக்கும் மனதிற்கு நிறைவாக இருக்க, சாந்திக்கோ ஆனந்தத்தில் கண்கள் குளமாகியது.
ரதிக்கு கேட்கவே வேண்டாம், என்னவோ இங்கே எதிரே தன் தந்தை மகிழ்ச்சி பொங்க தங்களைப் பார்ப்பது போல் உணர்ந்தவளுக்கு இந்த நொடி உலகமே அவள் வசமானது போல மகிழ்ந்தாள்.
அதன் பின் மற்ற சடங்கு எல்லாம் முடிந்து இருவரும் பார்த்திபன் வீட்டிற்கு செல்ல, பார்த்திபனின் தந்தை வெங்கடேசன் சோர்வின் காரணமாக முன்னே சென்றிருந்தார். இத்தனை நாள் பார்த்திபனும் இதே ஊர் என்றிருக்க, வண்டியோ ஒரு மணி நேர பயணம் கடந்து பாணாவரத்திற்குள் சென்றது. செல்லும் வழி யாவும் இருந்த பசுமையோ அல்லது ஏரி குளமோ ரதியின் கண்ணில் பதிந்தாலும் மனதில் பதியவில்லை.
புதிதாக வெள்ளை அடித்து வாசலில் பந்தலும் வாழைத்தோரணமும் கட்டிய வீட்டின் முன்பு வண்டி நின்றது. இறங்கியதும் பெரியவர்கள் ஆரத்தி எடுக்க பார்த்திபனோடு உள்ளே நுழைந்தாள்.
பூஜை அறைக்கு சென்று விளக்கேற்றும் போது தான் பார்த்திபனின் தாயின் படத்தை அங்கு கண்டாள்.. அதன்பின் பாலும் பழமும் சாப்பிட்டு மதிய விருந்து என்று நேரம் ஓட, அவளுள் இருக்கும் சோர்வையும் தாண்டி ரதியின் முகம் கலக்கத்தை அதிகம் காட்டுவதை உணர்ந்தவன் அவளை தன்னறைக்கு அழைத்து வந்தான்..
“இதான் நம்ப ரூம். நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன். நீ புடவையை மாத்திட்டு இப்போதைக்கு கொஞ்ச நேரம் தூங்கு…. நம்ப எதுவானாலும் அப்புறம் பேசிக்கலாம்…” என்று அவன் சொல்லி சென்றதை தட்டாமல் அவன் படுக்கையில் படுத்து கண்களை மூடிக் கொண்டாள்.
[the_ad id=”6605″]
மாலை வள்ளி வந்து எழுப்பி விட, உடல் அலுப்பு தீர குளிக்கலாம் என்று சென்றவளின் மனதின் சோர்வும் சற்று தளர்ந்திருந்தது. எதுவானாலும் அவங்க கிட்ட இன்னைக்கு பேசி தெரிஞ்சுக்கணும் என்ற முடிவோடு வெளியே வந்தவளுக்கு பார்த்திபனின் சிரிப்பு சத்தம் இனிமையாக கேட்டது.
அங்கு அவனின் தந்தையோடு பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்க, இன்னொரு புறம் மற்றவர்களோடு பார்த்திபன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தான். குழந்தைகளின் கலகலப்பில் வீடே நிறைந்திருந்தது.
ரதியின் வரவை உணர்ந்த சிவா அவளை வம்பிழுக்கும் பொருட்டு, “பார்த்திபன் ! இந்த ரதி உங்களை ஏதோ சாமியாரு அளவுக்கு சொல்லியிருந்தா, நான் கேட்டது எல்லாம் செய்வாரு. அவரை ஒரு முறை பார்த்துட்டா போதும் நான் நினைச்சது எல்லாம் நடக்கும்னு சொன்னது வைச்சு, நான் கூட நீங்க ஏதோ அட்வைஸ் ஞானப் பழம்னு நினைச்சேன்…”
“ஆனால் நீங்க இவ்ளோ ஜாலியா எங்க கூட சேர்ந்து பேசறது சிரிக்கிறது எல்லாம் பார்த்தா தான் தெரியுது அவ இந்த உண்மையா மறைச்சிருக்கான்னு…” என்று இழுத்தவன் ,
“ஒரு வேலை கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க வெகுளியான பழமா இருக்கறது தான் அவளுக்கு வசதின்னு நினைச்சு சொன்னாளோ… “என்று அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே கேட்டவனின் தலைக்கு மேலே டம்ளர் பறந்தது.
சிவாவோ பதறி எழுந்து , “ஐயோ! என் தலை தப்பிச்சுது….” என்றவன் தன்னுடைய பதறலில் சிரித்துக் கொண்டிருக்கும் பார்த்திபனை முறைத்து “என்ன நீங்க ஆள வைச்சு அடிக்கறீங்களா? உங்க பொண்டாட்டி கிட்ட சொல்லி வைங்க… நான் எந்த சேதாரமும் இல்லாம என் ஆளுக்கு பார்ஸல் ஆகணும்…” என்றான்.
பார்த்திபன் அதற்கு பதிலளிக்கும் முன் ரதி வேகமாக அவன் முன்னே வந்து, “இந்த குடும்பத்துக்கு போக மிச்ச மீதி தான் உன் ஆளுக்கு… ஏன்னா உனக்கு வர ஞானப் பழத்துக்கு அதுவே போதும்…” என்று அவனுடன் மல்லுக்கு நின்றாள்.
சிவாவிடம் அவள் சண்டை போடுகிறாளா அல்லது அவள் கணவனுக்கு பரிந்து பேசுகிறாளா என்பதை அவள் தான் உணரவில்லை… ஆனால் கண்களை விரித்து கையை நீட்டிக் கொண்டு ஆவேசமாக பேசியவளின் ஆதரவு யாருக்கு என்பதை அவள் மணவாளன் உணர்ந்தான்.
“இரண்டு பேரும் உங்க வேலையை ஆரம்பிச்சுட்டிங்களா? டேய் ! சிவா! எதுக்கு அவளை வம்பிழுக்கற? அது என்ன பெயர் சொல்லி கூப்பிடற? உன்னை விட ஒரு வயசு பெரியவங்க அண்ணன்னு கூப்பிடு…” என்று சரோஜா இடையில் வர,
“அப்படி சொல்லுங்க அம்மாச்சி! டேய் மாமா ! அவரை அண்ணன்னு கூப்பிட்டு என்னை அண்ணின்னு கூப்பிடு…“ என்று சிரிப்போடு சொன்னவளை கொலை வெறியோடு முறைத்தான்.
“அதெல்லாம் எதுவும் வேணாம் பாட்டி…” என்றவன், “சிவா இப்ப எப்படி பேசறியோ அப்படியே இரு…” என்று பார்த்திபன் சொன்னதும் சிவா திரும்பி ரதியை பார்த்து கேலியாக சிரிக்க, ரதி பார்த்திபனை முறைத்து விட்டு அறைக்குள் சென்றவளின் பின்னே செல்ல திரும்பிய பார்த்திபனை, “இப்ப நீங்க உள்ள போனா சேதாரம் அதிகமா இருக்கும்… அதனால இங்கயே இருங்க…” என்று சிவா அவனை நிறுத்தினான்.
“சிவா அவர் போகட்டும் விடு… மாப்பிள்ளை நீங்க அவளைக் கூட்டிட்டு கோவிலுக்கு போயிட்டு வாங்க…” என்று வாசுகி சொல்ல, அவளை அழைக்க உள்ளே சென்றான்.
கட்டிலில் உர்ரென்று அமர்ந்திருந்தவளைப் பார்த்து சிரிப்பு வர, “அத்தை கோவிலுக்கு போக சொன்னாங்க வா போகலாம்…” என்று அவன் அழைக்க, முகத்தை திருப்பினாள்.
“ஓய் ! என்ன ?”
“நீங்க ஏன் எனக்கு சப்போர்ட் பண்ணாம அவனுக்கு பேசறீங்க ? என்று கோபமாக கேட்டவளின் குரல் கூட அவனுக்கு சிணுங்கலாக தெரிந்தது.
“உனக்கு பேச இங்க இத்தனை பேர் இருக்கோம்… ஆனால் எனக்காக நீ தான் பேசணும்னு அப்படி சொன்னேன்… “என்றவனை அவள் புரியாமல் பார்க்க, ”இது போல என்னை யாராவது கிண்டல் கேலி பேசினா நீ எனக்காக அவங்க கிட்ட சண்டைக்கு போறது எனக்கு பிடிச்சிருக்கு…. “என்றவனை விசித்திரமாக பார்த்தாள்.
“கோவிலுக்கு போயிட்டு வந்து என்னை பொறுமையா பார்த்துக்கலாம்… இப்ப கிளம்பலாம் வா…” என்று இருவரும் கிளம்பி கோவிலுக்கு சென்றவர்கள் மௌனத்தை மட்டுமே பேசி விட்டு இரவு உணவு நேரத்திற்கு வீடு திரும்பினர்.
இத்தனை நாட்கள் வீட்டில் தனியாக உணவருந்தியவன் இன்று குடும்பமாக எல்லோருடனும் அமர்ந்து சாப்பிட்டது பார்த்திபனுக்கு நிறைவாக இருந்தது.
[the_ad id=”6605″]
சாப்பிட்டதும் எல்லோருடனும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவனை பாண்டியன் உள்ளே அனுப்பினார். இவன் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் ரதியை உள்ளே அனுப்பினர். இவ்வளவு நேரம் பெரியவர்கள் சொல்லிய அறிவுரை எல்லாம் வரிசையாக படையெடுத்து அவளை படபடக்க செய்தது.
“ஓய்! என்ன அங்கேயே நின்னுட்ட… உள்ள வா…” என்று பார்த்திபன் அழைக்க, அவளோ வேறேதும் பேசாமல் உள்ளே வந்து பால் சொம்பை அவனிடம் நீட்டினாள்.
அவளிடம் இருந்து பால் சொம்பை வாங்கி அங்கிருந்த மேசையில் வைத்தவன் அவள் கையைப் பிடித்து தன்னருகே கட்டிலில் அமர வைத்து, “குந்தவை! இப்ப எதுக்கு இவ்வளவு டென்ஷன்… நார்மலா இரு…” என்று அவள் கையை ஆதரவாக தட்டிக் கொடுத்தான்.
எப்போதும் போல அவனின் பேச்சில் அவள் இயல்பாவதை அறிந்தவன் அவளிடம் நிறைய பேச்சுக் கொடுத்தான்.
“காலையிலே எனக்கு என்னவோ கொடுக்கறேன்னு சொன்ன இப்ப வரைக்கும் தரலையே?” என்று அவன் குறும்பாக கேட்டதும் தான் அவளுக்கு அவனிடம் கேட்க வேண்டிய கேள்விகள் எல்லாம் வரிசைக் கட்டி வந்தன.
உடனே அவனிடம் திரும்பி, “நீங்க கேட்கற எல்லாம் அப்புறம் கொடுக்கறேன். முதல்ல உங்களைப் பத்தி எனக்கு சொல்லுங்க… எனக்கு எல்லா விஷயமும் தெரியணும்…” என்று தீவிரமாக கேட்டாள்.
அவனோ சிறு சிரிப்போடு, “உனக்கு என்ன என்ன தெரியணும் சொல்லு…” என்று கேட்டவனிடம், “உங்களைப் பத்தி, அத்தை பத்தி எல்லாமே சொல்லுங்க…” என்றாள்.
“ஃபர்ஸ்ட் நைட்ல என்னென்னவோ நடக்கும்னு சொல்லுவாங்க ஆனால் எனக்கு இப்படி நேர்காணல் நடக்கும்னு எதிர்பார்க்கல…” என்று பொய்யாக சலித்தவனின் ரகசியப் பேச்சில் தன்னாலேயே அவள் கன்னங்கள் சிவக்க உடனே சுதாரித்தாள்.
“இப்ப சொல்ல போறீங்களா இல்லையா? உங்க பெயர் கூட தெரியாம இவ்வளவு நாள் நீங்க காஞ்சிபுரம்னு நினைச்சுட்டு இருந்தேன்…. கவர்ன்மெண்ட் வேலைல இருப்பீங்கன்னு எதிர்பார்க்கல … அதே போல அத்தை மாமா….” என்று சொல்ல வந்தவள் நிறுத்தி, “என்னோட அனுமானத்துல நீங்க இப்படி தான்னு உங்களை நான் கொண்டு வந்து, உங்களைப் பத்தி தெரிஞ்சுக்காம இருந்தது எல்லாமே தப்பு… அதனால எதுவானாலும் இப்ப தெளிவா பேசிடலாம் ப்ளீஸ்…” என்று வேகமாக ஆரம்பித்தவள் கவலையாக முடித்தாள்.
“நீ இவ்வளவு கவலைப்பட அவசியமே இல்லை… நான் அழகா இருக்கேனா, என்கிட்ட பணம் இருக்கா, பெரிய வேலையில இருக்கேனா, என்னோட குடும்பம் சொத்துன்னு இப்படி எதையுமே நீ யோசிச்சது இல்லை… ஏன்னா என்னை தாண்டி வேறு எதுவும் நினைக்காத அளவுக்கு நீ மதித்தது என்னோட குணத்தையும் என்மேல நீ வைச்ச நம்பிக்கையும் தான்.. அதனால நீ ஃபீல் பண்ணாத… இப்ப என்ன? உனக்கு என்னைப் பத்தி தெரியணும் அவ்வளவு தானே… சொல்றேன்…” என்று அவனைப் பற்றி அவளிடம் சொல்ல ஆரம்பித்தான்.
“என் பெயர் உனக்கு தெரியும்ல என்று சிரிப்போடு கேட்டவன், எனக்கு சொந்த ஊர் எல்லாம் இந்த பாணாவரம் தான். எம்பிஏ முடிச்சுட்டு கொஞ்ச நாள் இங்க வேலூர்ல தனியார் கம்பெனியில வேலை செஞ்சுச்சுகிட்டே கவர்ன்மென்ட் வேலைக்கு படிச்சு அதுல செலக்ட்டும் ஆகிட்டேன். ஆனால் சென்னையில வேலை… அப்பாவை தனியா விட முடியல அதான் இங்க இருந்து தினமும் காஞ்சிபுரம் வந்து அங்கிருந்து ட்ரைன்ல வேலைக்கு போனேன். அங்க தான் நீயும் என்னை பார்த்த…” என்றவனிடம்,
“அத்தை மாமா பத்தி சொல்லுங்க…” என்று அவள் இடையிட,
“கண்டிப்பா சொல்லணுமா? அதெல்லாம் அப்புறம் சொல்றேனே… நீயாவது மதியம் தூங்கின நான் அது கூட தூங்கலை… “என்று எழுந்தவனின் கையைப் பிடித்து இழுத்து தன்னருகே உட்கார வைத்தவள், “ஒழுங்கா சொல்லிட்டு இந்த இடத்தை விட்டு எழுந்திரீங்க…” என்று அவன் கையை தன்னிரு கைகளால் சிறைப் பிடிக்க, அவனுக்கான அவளின் பிடிவாதத்தைப் பார்த்து மனம் குளிர்ந்தாலும், சொல்லாமல் அமைதி காத்தான்.
ஒரு பெருமூச்செடுத்து தன்னை சிறைப் பிடித்த அவள் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டவன்,
“எனக்கு பத்து வயசு இருக்கும் போதே அம்மா உடம்பு சரியில்லாமல் இறந்துட்டாங்க… அதுலயே அப்பா பாதி உடைஞ்சு போயிட்டாரு… இருந்தாலும் எனக்காக கொஞ்சம் கொஞ்சமா நிமிர்ந்து நின்னாரு…நான் வளர வளர அவருக்கு சர்க்கரையும், ரத்தக் கொதிப்பும் கூடவே சேர்ந்து வளர்ந்துச்சு… சரியான சாப்பாடு இல்லாததும் ஒரு காரணம்.. இப்ப கொஞ்சம் பரவால்ல… ஆனால் அவர் ஓய்விலே இருக்கனும்… இருந்தும் அப்ப அப்ப இப்படி தளர்ந்து போயிடுவாரு…”
“சாப்பாடு ,வீட்டு வேலைன்னு எல்லாமே அப்பா தான் செய்வாரு. அப்பா அம்மா இரண்டு பேரும் அவங்க வீட்ல ஒரே பசங்க… அதனால பெருசா சொந்த பந்தம் எதுவும் இல்லை…நான் கொஞ்சம் வளர ஆரம்பிச்சதும் சமைக்கறது,வீட்டு வேலைன்னு செய்ய ஆரம்பிச்சேன்…”
“அம்மா இல்லைன்னு புரியுது ஆனால் அதை ஏத்துக்கற பக்குவம் அப்ப இல்லை… அப்புறம் போக போக நிதர்சனத்தை ஏத்துக்கிட்டேன்… அப்பா என்னைப் பத்தி நினைச்சு அதிகம் புலம்புவாரு… நான் கஷ்டப்பட்டா அவரு இன்னும் கவலைப்படுவாருன்னு வெளிய எதுவும் சொல்லிக்க மாட்டேன்…
“உன்னை நான் சரியாய் பார்த்துக்கல… நீ தான் உன்னை பத்திரமா பார்த்துக்கணும்னு அப்பா எப்பவும் சொல்லுவாரு… அது அவர் அவர் சொல்ல சொல்ல எனக்கு மனசுல பதிஞ்சு போச்சு… என்னை நான் சரியாய் பார்த்துக்கிட்டா தான் மத்தவங்களை நான் சரியா பார்த்துக்க முடியும்னு… அது தான் நீ என்கிட்ட பார்த்த குணம்…”
“பத்து வயசு வரைக்கும் அம்மா கூட நான் இருந்தாலும் அவங்க முகம் தவிர அவங்க என்னை வளர்த்த எதுவும் எனக்கு இப்ப சரியா ஞாபகம் இல்லை… ஏன்னா அந்த பத்து வயசை விட இந்த இருபது வருஷ அனுபவம் தான் அதிகமா இருக்கு…”
[the_ad id=”6605″]
“வேலைக்கு போக ஆரம்பிச்ச அப்புறம் தான் வீட்டு வேலைக்கும் சமையலுக்கும் ஆள் வைச்சோம்… அப்பாக்கு உடம்பு சரியில்லாததால முதல்ல சாப்பிட்டுடுவாங்க, நான் தனியா தான் சாப்பிடுவேன்… இன்னைக்கு இங்க வீடு நிறைய எல்லோரும் இருக்கறது பார்க்க மனசுக்கு அவ்வளவு நிறைவா இருக்கு…”
“எனக்கு கல்யாணம் பண்ணனும்னு அப்பா பேசும் போது கூட படிச்சோம்,வேலைக்கு போனோம் அடுத்து கல்யாணம்னு இந்த அளவுக்கு தான் என் மனசுல எண்ணம் இருந்தது… எப்போவும் எந்த இடத்திலேயும் எனக்குன்னு ஒரு ஆறுதல் வேணும்னு பெருசா தேடினது இல்லை… ஆனால் உன்னை எப்ப முதல் முதல்ல பார்த்தேனோ அப்ப இருந்து எனக்கே தெரியாம உன்னை அதிகம் தேடினேன்… எனக்கு எல்லாமே நீ தான்… நீ மட்டும் தான் வேணும்னு அப்பவே எனக்குள்ளே ஆழமா இறங்கிடுச்சு…”
“வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு களைப்பா வந்தா தண்ணீர் கொடுக்க கூட யாரும் இருக்க மாட்டாங்க , ஏற்கனவே ட்ராவல்லேயே முக்கால்வாசி சோர்ந்து போயிடுவேன் இதுல வீட்டுக்கு வந்ததும் தனியா நானே எடுத்து போட்டு சாப்பிடறது இன்னும் சலிப்பா இருக்கும்… நிறைய நாள் அதனாலேயே சாப்பிடாம படுத்துடுவேன்… இதெல்லாம் எனக்கு முன்னாடி பெருசா தெரியல…”
“ஆனால் உன்னை பிரிஞ்சு இருந்த இந்த நாலு வருஷத்துல முதல் முதலா தனியா இருக்கோம் ,எனக்குன்னு யாரும் இல்லைனு ஒரு பயம் ஆரம்பிச்சது… உன்னை மறுபடியும் பார்க்கும் வரைக்கும் ரொம்ப தவிச்சு போயிருந்தேன்… வாழ்க்கையே ரொம்ப சலிப்பா இருந்தது…”
“அப்பாக்கு வேற அப்ப அப்ப உடம்பு சரியில்லாமல் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு….. என்னை நீ தான் பார்த்துக்கணும்ன்ற ஏக்கம் போக போக அதிகமானதே தவிர குறையல…” என்று தனது இருபது வருட வாழ்க்கையின் பக்கங்களை அவளிடம் திறந்து விட்டு அவளை நிமிர்ந்து பார்க்க, அவளோ அவனுக்கு எந்த பதிலும் அளிக்காமல் இந்நேரம் அவன் கையில் சிக்குண்ட தன் கையை அவனிடம் இருந்து பிரித்துக் கொண்டு எழுந்தாள்.
எண்ணங்கள் யாவும் நீ!
உணர்வுகளின் பிடியில் நான் !
கண்முன்னே மெய்யாக நீயில்லை!
ஆனால் எனத்தருகே நீ இருப்பதாய்…
என்னை உணரச் செய்த உந்தன் நினைவலைகளால்!
என்னில் துளிர்த்த அந்த கண்ணீர் !
கடல் நீராக பெருகாமல்…
கானல் நீராக மறைந்தது !
இன்று நீ என் அருகே இருப்பதனால்!….