காதல் 16:
“மிஸ்டர் தர்மராஜ் கிட்ட உன்னைப் பத்தி இன்பார்ம் பண்றேன். நீ அவங்க கூட போய் இருக்குறது தான் உனக்கு சேப்டி..!” என்றான் வருண்.
“நான் அவங்களை கஷ்ட்டப்படுத்த விரும்பலை..!” என்றாள்.
“அப்பறம் இப்படியே இருந்து என்னை மட்டும் கஷ்ட்டப் படுத்தலாமா..?” என்றான்.
“நான் எங்க சார் உங்களைக் கஷ்ட்டப் படுத்தினேன். நான் அவங்க கூட போனா, அவங்களுக்கும் சேர்த்து தான் கஷ்ட்டம். எதுவா இருந்தாலும் என்னோட போகட்டும்ன்னு தான் நான் இதுவரைக்கும் அவங்களைத் தேடி போகலை..!” என்றாள்.
“உங்க சிவாண்ணா எப்படி செத்தார் தெரியுமா..? எப்படி ஏமாத்தி கூட்டிட்டு வந்தா அந்த ருத்ரான்னு தெரியுமா..? இதுக்கெல்லாம் ஒரே விஷயம் நீ தான். உன்னைப் பார்க்க வரும் போது தான் அவர் செத்திருக்கார். அவர் மேல உனக்கு உண்மையாவே பாசம் இருக்குன்னு நீ சொன்னா, நீ அவங்க கூட போய் இருக்குறது தான் நியாயம்..!” என்றான் வருண்.
வருண் சொன்ன பிறகு தான் அவளுக்கே சில விஷயம் புரிந்தது. அவளுக்கும் ஆசை இருக்கத்தான் செய்தது. ஆனால் பெரியம்மா என்ன சொல்வாரோ..? என்று யோசிக்க,
“உங்க பெரியம்மா இப்ப வரைக்கும் மனசு மாறாம இருப்பாங்கன்னு நீ நினைக்கிறியா சக்தி. அன்னைக்கே அவங்க முகத்துல ஒரு மாற்றம் தெரிஞ்சது. அந்த ருத்ராவை தூக்கி வச்சு கொண்டாடினதைத் தவிர அவங்க எந்த தப்பும் செய்யலை. அவளோட உண்மை முகம், படிச்ச உங்களுக்கே தெரியாத போது… அவங்களுக்கு எப்படித் தெரிஞ்சிருக்கும்..?” என்றான்.
வருண் ஏன் அப்படி சொல்கிறான்..? எதற்காக அவர்களிடம் போக சொல்கிறான்? என்பது அவளுக்குத் தெளிவாகத் தெரிந்தாலும், ஏனோ அவனை விட்டு பிரிவது என்பது அவளுக்கு நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்றாகத்தான் இருந்தது. இது நாள் வரை இருந்த சக்தி இல்லையே..? அவன் மீது உள்ள காதலை எப்பொழுது உணர்ந்தாளோ அப்போதிலிருந்து அவள் அவளாகவே இல்லை.
கடைசி வரையில் அவனிடம் இருந்து தப்பிப்போம் என்ற நம்பிக்கை அவளுக்கு துளி கூட இல்லை. ஆனால் தப்பித்திருக்கிறாள். அதுவும் வருண் வந்து காப்பாத்தியிருக்கிறான் என்றால் என்ன அர்த்தம்..? அவளுக்கு ஏதோ ஒன்று புரிவதாய் இருந்தது. எதுவும் திட்டமிட்டு நடக்கவில்லை. வருணுக்கு அவள் தான் என்று எழுதி வைத்திருக்கும் போது அதை யாரால் மாற்ற முடியும்..?
“என்ன சக்தி யோசனை..? என்ன முடிவு பண்ணியிருக்க..?” என்றான் வருண் கொஞ்சம் யோசனையுடன்.
“நான் போறேன் சார்..!” என்றாள் பட்டென்று.
“போறேன்னா..?”
“அப்பா,அம்மா கூடவே போறேன் சார். என்னோட போன் இப்போ என்கிட்டே இல்லை..! நீங்களே அவங்களுக்கு இன்பார்ம் பண்ணிடுங்க…” என்று மரத்துப் போன குரலில் சொன்னவள்,
“இப் யு டோன்ட் மைண்ட்..! நீங்க என்னை என் வீடு வரைக்கும் கூட்டிட்டு போக முடியுமா..? என்னோட திங்க்ஸ் எல்லாம் எடுக்கனும். அது வரைக்கும் உங்க வீட்ல நான் தங்கிக்கலாமா சார்..?” என்றால் வெறுத்துப் போன குரலில்.
அவள் அப்படி பேசியதும் வருணுக்கு ஒரு மாதிரியாகிப் போனது. அவளை அவன் கட்டாயப்படுத்துவைப் போல் தோன்றியது அவனுக்கு.
“நான் ஒன்னும் தப்பா சொல்லிடலையே..?” என்றான்.
“நீங்க சரியாத்தான் சார் சொல்லியிருக்கிங்க. நான் தான் தப்புத் தப்பா..” என்று சொல்ல வந்தவளுக்கு தொண்டை அடைக்க,
“சாரி சார்..!” என்றாள்.
வருணுக்கு மண்டை காய்ந்தது. அவள் இல்லாதவரைக்கும் அவளைத் தேடிய அவன் மனம், அவளைக் கண்ட பிறகு கண்டுகொள்ளாதது தான் விசித்திரமான விந்தை. அவளைத் தேடிய மனதை, கடமையை செய்ய சொன்ன விதமாகவே எடுத்துக் கொண்டான் போலும்.
“நான் போகட்டுமா சார்..?” என்றாள்.
“என்ன அவசரம்..? இன்னும் என் விசாரணை முடியலை..!” என்றான்.
“எனக்கு இப்போ ரொம்ப தலை வலிக்கிற மாதிரி இருக்கு. நான் நாளைக்கு பேசுறேன் சார்..!” என்று சொன்னவள், அவனின் பதிலை எதிர்பார்க்காமல் சென்று விட்டாள்.
“என்னாச்சு இவளுக்கு…?” என்று அவன் யோசிக்க, ஒன்றும் பிடிபடவில்லை. கௌசியின் அறைக்கு சென்ற சக்திக்கோ அழுகை வரும் போல் இருந்தது. ஆனால் அழ முடியாதே.
“நீ அழாதே சக்தி. நீ எதுக்கு அழனும். உனக்கு தான் அவனைப் பிடிச்சிருக்கு. ஆனா, அவனுக்கு உன்னை சுத்தமா பிடிக்கலை போல. இதுக்குமேல அவன்கிட்ட இருந்து நீ எதையும் எதிர்பார்க்கக் கூடாது. அவன் உனக்கு செஞ்ச உதவியே இந்த ஜென்மத்துக்கு தாங்கும்..!” என்று தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டாள்.
“என்ன சக்தி…? ரொம்ப நேரமா ஒரே யோசனையில் இருக்க மாதிரி தெரியுது. நீ எவ்வளவு டயர்டா இருக்கன்னு உன் முகமே சொல்லுது. பேசாம படுத்துத் தூங்குமா. நடக்குறது எல்லாமே நல்லதாவே நடக்கும்..!” என்றாள்.
“சரிங்க..!” என்றவள் அப்படியே படுத்து விட்டாள். படுத்தவள் அப்படியே உறங்கியும் விட்டாள். ஆனால் வருணுக்குத் தான் தூக்கம் வருவேனா என்று அடம் பிடித்தது.புது இடம் என்பதைத் தாண்டி, அன்று சக்தி நடந்து கொண்ட விதமும் ஒரு காரணம்.
அவள் ஓடி வந்து அவனை அணைத்தது, அவளின் வாசம் இன்னும் தன் மேல் தொடர்வதாகவே எண்ணினான். கண்ணை மூடினால் சக்தி தான் வந்து நின்றாள்.அவள் முகத்தைப் புதைத்த அவனுடைய நெஞ்சாங் கூடு, லேசாகி பறப்பதைப் போல் உணர்ந்தான்.
“என்ன கொடுமைடா இது..? என்னைக்கும் இல்லாம இன்னைக்கு இவ நினைப்பு இந்த பாடு படுத்துது. இப்போ வரைக்கும் என் பக்கத்துல தான இருந்தா..! அப்பல்லாம் ஒன்னும் தோணாம, அவ போன பிறகு எல்லாமே வெறுத்துப் போன மாதிரி தோணுதே.. என்னவா இருக்கும்..?” என்று அவன் யோசித்து கொண்டிருக்க,
“அதுக்கு பேருதான் காதல் மாப்பிள்ளை..!” என்றான் முரளி.
“எதுக்குப் பேரு..?”என்றான்.
“இப்போ நீ புலம்புனையே..! அதுக்குப் பேரு..!” என்றான்.
“அது எனக்கும் தெரியும் மாமா..!” என்றான் வருண்.
அவன் அப்படி சொல்லவும் அவனை ஆச்சர்யமாய் பார்த்தான் முரளி. அப்பறம் ஏன் மாப்பிள்ளை அது வெளிய தெரியாத மாதிரி நடந்துக்கற. நம்ம வீட்ல எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு. உங்கப்பாவும் சரின்னு சொல்லிட்டார். வேற என்ன பிரச்சனை உனக்கு..?” என்றான் முரளி.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை மாமா..! எனக்கு காதல் சரிப்பட்டு வருமான்னு தெரியலை. அது மட்டுமில்லாம அவ மனசுல என்ன இருக்குன்னு தெரியாம எதையும் பேசக் கூடாதுல்ல, பார்ப்போம்..!” என்றான்.
“கண்டிப்பா அந்த பொண்ணு உன்னை லவ் பண்ணுது வருண்..!” என்றான் முரளி.
“அதை அவ சொல்றப்போ பார்ப்போம்..!” என்றான்.
“அடப்பாவி..! அதையும் அந்த பொண்ணு தான் சொல்லனுமா..? ஏன், துறை நீங்க சொல்ல மாட்டிங்களா..?” என்றான் கடுப்புடன்.
“அதுக்கு முன்னாடி எனக்கு சில வேலை இருக்கு மாமா. அதெல்லாம் முடிஞ்சாத்தான் எதையும் நான் உறுதியா சொல்ல முடியும்..!” என்றான் வருண்.
முரளி அவனை ஒரு மாதிரி பார்க்க,
“ஏன் அப்படிப் பார்க்குறிங்க..?” என்றான்.
“நானும் எத்தனையோ பேரை பார்த்திருக்கேண்டா..! ஆனா உன்னை மாதிரி ஒருத்தனை இப்பத்தான் பார்க்குறேன்..!” என்ற முரளி திரும்பிப் படுத்து விட்டான்.
மறுநாள் விடியல் கொஞ்சம் நல்லதாகவே அமைந்தது அனைவருக்கும்.
எவ்வளவு பெரிய மனச்சுமையும் அங்கு நிலவிய அந்த ஏகாந்த குளிரில் காணாமல் போய்விடும். எப்போதாவது அங்கு செல்பவர்களுக்கு அது ஏகாந்தம். அங்கேயே இருப்பவர்களுக்கு…?
காலையில் எந்த குழப்பமும் இன்றி தான் எழுந்தாள் சக்தி. அவள் மனம் இப்போது தெளிவாக இருந்தது. அன்றைக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
இன்னும் சிறிது நேரத்தில் வருணுடன் செல்ல போகிறாள். அவன் அருகாமையில் இருக்கும் வரை, அதை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தாள்.
“என்னாச்சு சக்தி..? எங்கயோ கிளம்பிட்ட மாதிரி தெரியுது..?” என்றால் சாதனா.
“ஆமாங்க..! நான் தங்கியிருந்த வீடு வரைக்கும் போகணும். அங்க, என்னோட திங்க்ஸ் கொஞ்சம் எடுக்கணும்..!” என்றாள்.
“தனியாவா போற..?” என்றால் சாது.
“இல்லங்க..! வருண் சார் கூட வரார்..!” என்றாள்.
“சொல்லவே இல்ல..!ம்ம்.. நடத்துங்க நடத்துங்க..! வேணும்ன்னா கார்த்தி பைக்க எடுத்துட்டு போங்களேன்..!” என்ற சாது, மார்க்கமாக சிரித்து வைக்க,
“வருண் சார் தாங்க சொல்லணும்..!”
“அப்ப உனக்கு ஓகே தான் இல்லையா..?” என்று அவளை வாரினாள் சாது.
“என்னங்க நீங்க காலையிலேயே ஆரம்பிச்சுட்டிங்க..!” என்றாள்.
சாது சொன்னது போலவே வருண், கார்த்தியின் பைக்கில் போவதாகத் தான் எண்ணியிருந்தான்.
“நாங்களும் கூட வரவா வருண்..?” என்றான் முரளி.
“மாம்ஸ்..! நான் என்ன சின்ன பிள்ளையா..? அது மட்டுமில்லாம நான் போலீஸ். ரவுடிங்க தான் என்னைப் பார்த்து பயப்படனும்..? நான் அவங்களைப் பார்த்து பயப்பட கூடாது. இந்த பிரச்சனை இதோட முடிஞ்சுடும்ன்னு தான் நினைக்கிறேன். பார்ப்போம்..” என்றவன், கார்த்தியை ஒரு அர்த்தமுள்ள பார்வை பார்த்தான்.
அதன் அர்த்தம் புரிந்த கார்த்தியும் தலையை அசைக்க, அவர்களின் பாஷை புரியாவிட்டாலும், ஏதோ இருவரும் பேசிக் கொள்கின்றனர் என்று புரிந்து கொண்டான் முரளி.
அந்த காலை நேரக் காற்றும், குளிர் பணியும், உடலை ஊடுருவும் குளிரும் இதமாக இருந்தது. வருண் அமைதியாக வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தான். முதன் முறையாக ஒரு அந்நியப் பெண்ணை பைக்கில் ஏற்றிச் செல்கிறான்.
மலைப்பகுதியின் வளைவுகளில் அவன் லாவகமாய் வண்டியை ஓட்ட, இது அவனுக்கு முதல் பயணம் அல்ல என்பது சக்திக்குப் புரிந்தது. இருவருக்கும் இடையில் சிறிது இடைவெளி விட்டே அமர்ந்திருந்தாள். இருவரும் தலையோடு சேர்த்து கவர் செய்யும் ஜெர்க்கின் அணிந்திருந்ததால் முகம் கொஞ்சம் தான் வெளியே தெரிந்தது.
ஏனோ வருணுடன் அப்படி பைக்கில் செல்வது அவளுக்கு அப்படிப் பிடித்திருந்தது. காரணமில்லாமல் மனம் லேசாக பறந்தது. அவள் மனதில் இருந்த இடைவெளி குறைய குறைய, வண்டியில் அவள் அமர்ந்திருந்த இடைவெளியும் குறைந்து கொண்டே வந்தது.
“என்ன இவ..? காலையிலையே மனுஷனை இந்த பாடு படுத்துறா…? நல்லாத்தான இருந்தா..? வருண் ஸ்டெடி ஸ்டெடி..! சிலிப் ஆகிடாத..” என்று தனக்குத் தானே சொல்லி கொண்டான் வருண்.
அவனை இறுக கட்டிக்கொண்டு செல்ல வேண்டும் போல் இருந்தது சக்திக்கு. ஆனால் செய்ய முடியாதே..? என்று என்னும் போதே மனம் கொஞ்சம் கனத்தது.
“என்னாச்சு சக்தி..? ஏன் அமைதியா வர..?” என்றான்.
“ஒன்னும் இல்லை சார்..!” என்றாள்.
“பயமா இருக்கா..?” என்றான்.
“நீங்க இருக்கப்போ எனக்கு என்ன பயம்..?” என்றவள்,
“லைட்டா இருக்கு..!” என்றாள்.
ஏனோ அந்த வார்த்தை வருணுக்கு மிகவும் பிடித்திருந்தது.
“உங்க வீட்டுக்கு இன்பார்ம் பண்ணியாச்சு சக்தி. எப்படியும் இன்னைக்கு மதியத்துக்கு மேல வந்துடுவாங்க. மேடம் நாளைக்கு ஊருக்கு போய்டுவிங்க..!” என்று வருண் சொல்ல, அவ்வளவு நேரம் அவளுக்குள் இருந்த ஏகாந்தம், இனிமை, சந்தோசம் எல்லாம் நொடியில் பட்டென்று அறுந்தது. அவன் இவ்வளவு சீக்கிரம் செயல்படுவான் என்று அவள் கனவா கண்டாள்..?
“ம்ம்..!” என்று சத்தம் மட்டுமே வந்தது. அதற்குப் பிறகு அவள் பேசவில்லை. அந்த பயணம் அமைதியில் கழிய, அவள் வீட்டிற்கும் வந்து சேர்ந்திருந்தனர்.
“இங்கயே இருங்க சார்..! ஹவுஸ் ஓனர்கிட்ட சாவி வாங்கிட்டு வந்துடுறேன்..!” என்று அவள் செல்ல,
“இரு நானும் கூட வரேன்..!” என்று அவளை விடாமல் தொடர்ந்தான் வருண்.
“இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை..!” என்று மனதிற்குள் முனங்கத்தான் முடிந்தது அவளால்.
அவளைப் பார்த்த ஹவுஸ் ஓனர்,
“எங்கம்மா போன பிரியா நீ…? உன்னைத் தேடி யார் யாரோ வந்துட்டு போனாங்க பிரியா. எனக்கு எதுவும் சரியா படலை. பார்த்து கவனமா இருமா..?” என்று அவர் சொல்ல,
“இல்ல..! அவங்க இனி இங்க இருக்க மாட்டாங்க. காலி பண்ணிடுவாங்க..!” என்ற வருண், அதற்கு மேல் அவரை பேசவிடாமல் சக்தியை அழைத்துக் கொண்டு வர,
கொஞ்சம் பதட்டத்துடனேயே தான் கதவைத் திறந்தாள் சக்தி. திறந்து வீட்டின் உள் அமைப்பைப் பார்த்த வருணுக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது. அனைத்துப் பொருட்களும் தரையில் கிடக்க, வீடே அலங்கோலமாக இருந்தது.
“பிரச்சனை வேற மாதிரி தெரியுது வருண். என்னவோ இருக்கு..!” என்று அவன் உள்மனம் உணர்த்திக் கொண்டே இருந்தது.
உள்ளே ஒரு அறைக்குள் சென்றவள், தனக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டிருக்க,
“பிரச்சனை வேற மாதிரி தெரியுதே..!” என்றான் அவள் பின்னால் வந்து நின்றபடி. சட்டென்று கேட்ட அவன் குரலில் பயந்து திரும்பியவள், பின் தான் ஆசுவாசம் அடைந்தாள்.
“இது வெறும் லெனின், ருத்ரா, நீ சம்பந்தப்பட்ட பிரச்சனையா எனக்குத் தெரியலை. உன்னைத் தேடி வந்திருந்தாலும், வீட்டையே இப்படி புரட்டிப் போட வேண்டிய அவசியம் என்ன..? எதையோ இங்க தேடி வந்திருக்காங்க..? அப்படின்னா..?” என்று அவன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று அவளைப் பார்க்க,
“அது வந்து சார்..!” என்று மென்று முழுங்கினாள் சக்தி. அவனிடம் சொல்லி விட வேண்டும் என்று தான் நினைத்திருந்தாள். ஆனால் அதை சொல்வதற்கான இடம் இது இல்லை.. என்று எண்ணினாள். அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, வருணின் போன் அடித்தது. புது நம்பராக இருக்க, அதை யோசனையுடன் எடுத்தான் வருண்.
“ஹலோ..!”
“என்ன எஸ்பி சார்..! இருக்குற எல்லா வேலையும் விட்டுட்டு, இங்க வந்து அவ பின்னாடி சுத்துறதையே வேலையா வச்சிருக்கிங்க போல..!” என்றான் தேவன்.
“யார் நீ..?” என்றான் வருண்.
“உங்களுக்கு ரொம்ப வேண்டப்பட்டவன் தான் சார். சரி அதெல்லாம் விடுங்க, அந்த லெனினை எங்க வச்சிருக்கிங்க..?” என்றான் தேவன்.
“அடடே, நம்ம தேவன் சாரா…? நேத்தே உங்க போனை எதிர்பார்த்தேன். ஆனா, இவ்வளவு லேட்டா கால் பண்ணியிருக்கிங்க..?” என்று வருண் கேட்க, தேவன் என்ற பெயரைக் கேட்டதும் சக்தியின் முகத்தில் வந்து போகும் மாறுதல்களை குறித்துக் கொண்டான் வருண்.
“என்ன எஸ்பி கிண்டலா..? எனக்கு லெனின் வேணும். அதுமட்டுமில்லாம இப்ப கூட இருக்கிங்களே அவளும் வேணும். உங்களுக்கு என்ன தேவையோ அதை நான் பண்ணித் தரேன்..!” என்றான் தேவன்.
“முடியாதுன்னு சொன்னா..?”
“இப்போ அவ வீட்லதான இருக்கீங்க ரெண்டு பேரும். உங்களைத் தூக்க ரொம்ப நேரம் ஆகாது..!” என்றான்.
“நாம இங்க வந்தது எப்படி அவனுக்குத் தெரியும்..?” என்று யோசித்த வருண், பார்க்காததைப் போல்,வெளியே பார்க்க.. அங்கு இந்த வீட்டை கண்காணித்து கொண்டே இருந்தான் ஒருவன். அவனைப் பார்த்தால் இப்போது வந்தவனைப் போல் தெரியவில்லை. தினமும் இந்த வீட்டைக் கண்காணித்துக் கொண்டு நிற்பவனைப் போல் தெரிந்தது.
“என்ன சார்..? சத்தத்தையே காணோம்..?” என்றான் தேவன்.
“உன்னால முடிஞ்சதைப் பாருடா..!” என்ற வருண் போனை வைத்து விட்டான்.
“இங்க வேற வழி இருக்கா..?” என்றான் சக்தியிடம்.
“இருக்கு சார்..!” என்றாள்.
“உனக்குத் தேவையானதை எடுத்தாச்சா..?” என்றான்.
ஒரு பேக்கை மட்டும் அங்கு வைத்தவள்..”எடுத்தாச்சு..!” என்றாள்.
“அப்போ கிளம்பலாமா..? வந்த வழி போக முடியாது. இந்த வீட்டை கண்காணிக்க ஒரு ஆள் இருக்கான். இவனை இங்க இருக்க சொன்னவனுக்கு தகவல் போய்டுச்சு. இனி அவன் சும்மா இருக்க மாட்டான். நாம வேற வழியில போறது தான் பெட்டர்.
ஒரு நிமிடம் யோசித்தவள் ஒரு முடிவுக்கு வந்தவளாக,
“ஒரு நிமிஷம் சார்..!” என்றபடி அங்கிருந்த சமையல் அறைக்குள் சென்றாள்.
“இப்ப எதுக்கு கிச்சனுக்குள்ள போறா..?” என்று யோசித்தபடி அவன் எட்டிப் பார்க்க,
அவள், அங்கே ஒரு பெரிய டப்பாவில் இருந்த கோதுமை மாவை தலைகீழாக கவிழ்த்து, அனைத்தையும் தரையில் கொட்டி விட்டாள்.
“இப்ப எதுக்கு மாவை எல்லாம் கீழ கொட்டிட்டு இருக்கா..?” என்று அவன் யோசனையுடன் பார்க்க,
அந்த மாவை கையை வைத்து அவள் பரசிப் பார்க்க, அதனுள் ஜிப் வைத்த ஒரு சின்ன கவர் இருந்தது. அதை வேகமாக எடுத்தவள், சட்டென்று வெளியே வந்தாள்.
“என்ன இது..?” என்றான்.
“இதுல அந்த தேவனை அரஸ்ட் பண்ணத் தேவையான எல்லா எவிடன்சும் இருக்கு சார். இதுக்கு முன்னாடி இதை யார்கிட்ட குடுக்குறதுன்னு தெரியலை. ஒரு போலீஸ்காரை நம்பி குடுத்ததால, வீணா ரெண்டு உயிர் போய்டுச்சு. இப்போ உங்களை நம்பிக் குடுக்குறேன் சார்..!” என்றாள்.
வருண் நினைத்தபடி விஷயம் கொஞ்சம் பெரிய விஷயம் தான். ஆனால் அதை இப்போது அவளிடம் கேட்க அவனுக்கு நேரமில்லை.அவள் கொடுத்த அந்த கவரை தனக்குள் பத்திரப்படுத்தினான்.
“வா போகலாம்..!” என்று ஒரு அடி எடுத்து வைத்தவன், அவள் அசையாமல் இருக்கவும்,
“என்ன…?” என்றான்.
“எனக்கு பயமா இருக்கு சார். இனி உங்களைப் பார்ப்பனான்னு கூட தெரியலை..!” என்று குரல் அடைக்க அவள் சொன்ன விதத்தில் வருணுக்கு ஒரு மாதிரி ஆனது.
“ஹே லூசு..!” என்று அவள் அருகில் சென்றவன்,அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். அதற்காகவே காத்திருந்தவள் போல, அவன் அணைப்பிற்குள் அடங்கிப் போக,
“நான் இருக்கேன்..! பயப்படாத..!” என்றவன், அவளைப் பார்க்க அவள் இப்போது கொஞ்சம் தெளிந்திருந்தாள். அதற்கு பின் அவனுக்கு ஏனோ மாற்று வழியில் வெளியே செல்ல மனம் ஒப்பவில்லை.
போனை எடுத்து கார்த்தியிடம் ஏதோ பேசினான். பேசிவிட்டு சக்தியிடம் திரும்பியவன்,
“அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணு..! நம்ம வந்த வழியிலேயே போகலாம்..!” என்றான்.
அவன் அப்படி சொல்லவும் அவளுக்கு ஆச்சர்யம்.
“ஏன் சார்..! வெளிய யாரோ இருக்குறதா சொன்னிங்க..?” என்றாள்.
“யார் இருந்தாலும் பரவாயில்லை. எவனும் ஒன்னும் புடுங்க முடியாது.வேற வழியில போனா, அவனுக்கு பயந்து போன மாதிரி ஆகிடும். அந்த வெற்றியைக் கூட அவனுக்கு ஏன் தரனும்..?” என்றான்.
இது தான் வருண் கிருஷ்ணா. அவன் இப்படி இருந்தால் தான் அவளும் தைரியமாக இருப்பாள் என்று அவனுக்குத் தெரியும்.
அடர்ந்த நெடிய மரங்களுக்கு நடுவில், அந்த ஆள் அரவமற்ற சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தனர் இருவரும். தேவனின் ஆட்களை கடந்து வருவது வருணுக்கு ஒன்றும் சிரமமாகத் தெரியவில்லை. என்ன கொஞ்சம் சுற்றிப் போவதைப் போல் ஆகிவிட்டது.
அந்த சாலையின் அமைதியே அவளை பயம் கொள்ள வைத்தது. மேலும்,கீழும் பார்த்துக் கொண்டே வந்தாள் சக்தி.
“என்னத்தை சுத்தி சுத்தி பாக்குற..?” என்றான் வருண்.
“பேரமைதியும் பேராபத்துன்னு..படிச்சிருக்கேன். ஆனா, இன்னைக்குத்தான் அதை பீல் பண்றேன்..!” என்றாள் சக்தி.
“ஆபத்துன்னு ஏன் நினைக்குற..? இதை அழகுன்னு கூட சொல்லலாம்..!” என்றான்.
“வீட்டுக்கு எப்போ சார் போவோம்..?” என்றாள்.
“போவோம்..! போவோம்..!” என்றவன், அங்கு ஒரு ஓரமாக வண்டியை நிறுத்த,
“இங்க ஏன் சார் வண்டியை நிறுத்துறிங்க..?” என்றாள்.
அவன் எதுவும் பேசாமல் அவளையே பார்க்க,
“மிஸ்டர் காவல்துறை எதுக்கு இப்படி நம்மையே பார்க்குறார்..? என் மூஞ்சில எதவாது தெரிஞ்சுடுச்சா..?” என்று அவள் மனதிற்குள் யோசிக்க,
“இப்ப சொல்லு..!” என்றான்.
“எதைப் பத்தி..?” என்று அவள் விக்கி விழுங்க,
“உனக்கும் தேவனுக்கும் என்ன பிரச்சனை..? என்ன நடந்தது..?” என்றான் தீர்க்கமாய்.
அவள் சுற்றும் முற்றும் பார்க்க,
“யாருமில்லை..!” என்றான்.
“தேவனுக்கும், எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்த பஞ்சாயத்தும் இல்லை. கல்யாணம் நின்ன கையோட, நான் வேலைக்காக வீட்டை விட்டு வெளியேற முடிவு செஞ்சேன். அதுக்கு காரணம் கூட ருத்ரா தான். அவளுக்கு அப்பவும் என்னை விட மனசு இல்லாமத்தான் இப்படி பண்ணியிருக்கான்னு எனக்கும் இப்பத்தான் தெரியும்.
தனக்கு ரொம்பத் தெரிஞ்சவர் இங்க ஸ்கூல் வச்சிருக்கிறதாவும், இங்க டீச்சர் போஸ்ட் காலியா இருக்குன்னும் சொன்னா. எனக்கும் அந்த நேரத்துல ஒரு மாறுதலும், அமைதியும் தேவைப் பட்டுச்சு. சிவாண்ணாவும் சொன்னதால, நான் இங்க வேலைக்கு வந்தேன்..!” என்றான்.
“அதாவது தேவனோட ஸ்கூல்க்கு..?” என்றான் வருண்.
“ஆமா..! இங்க வந்ததுல தான் ஷிவானி எனக்கு பழக்கம். அவளை மாதிரி ஒரு பிரண்ட் கிடைக்க குடுத்து வச்சிருக்கணும். நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் தங்கியிருந்தோம்.எல்லாமே நல்லாத்தான் போயிட்டு இருந்தது..” என்று அவள் நிறுத்த,
“மேல சொல்லு..!” என்று அவன் சொல்ல, அவன் பெருமூச்சு விட்டாள்.