காதல் 19:
வருண்-சக்தி வீடு வந்து சேர மாலை மங்கியிருந்தது. அவர்களை நினைத்து ஒவ்வொருவரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்க, உல்லாசமாய் வந்து வண்டியை நிறுத்தினான் வருண். அவன் மனதில் அப்படி ஒரு கவலை எல்லாம் இல்லை போல. அதிலும் மோகனாம்பாள் முறைத்துக் கொண்டே நின்றார்.
“இவங்க வேற..? என்னமோ நான் வருண் சாரை கடத்திட்டு போகப் போற ரேஞ்சுக்கு, எப்பப் பார்த்தாலும் முறைச்சு முறைச்சு பார்த்துகிட்டு..! எல்லாம் காலக் கொடுமை..!” என்று சக்தி மனதில் நினைக்க,
“என்ன வருண்..? காலையில போனவங்களுக்கு இப்போதான் வரணும்ன்னு தோணுச்சா..? இங்க நாங்க என்னன்னு நினைக்கிறது..?” என்று மோகனா முந்திக் கொண்டு சத்தம் போட,
“இதென்ன அத்தை புதுசா இருக்கு..? வேலை விஷயமா நான் எப்பவும் போறதுதான..?” என்றான் வருண்.
“இதுக்கு முன்னாடி எப்படியோ..? இன்னைக்கு கூடவே ஒரு பிரச்சனையைக் கூட்டிகிட்டு தான போன..? அதனால வந்த பயம் தான்..!” என்றார்.
“போன விஷயம் எல்லாம் முடிஞ்சதா மாப்பிள்ளை..!” என்றான் முரளி.
“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை மாமா..? ஆமா, கார்த்தி எங்க..?” என்றான் வருண்.
“நீ ஏதோ போன் பண்ணியாமே..? அப்போ கிளம்பிப் போனவன் தான். இன்னமும் ஆளைக் காணோம்..? அங்க சாதனா வேற பயந்து போய் இருக்கு..!” என்றான் முரளி.
“இதுல பயப்பட என்ன இருக்கு..? போலீஸ் வேலையில இதெல்லாம் சகஜம்ன்னு தெரிஞ்சு தான கல்யாணம் பண்ணாங்க. இப்போ மட்டும் கசக்குதாமா..?” என்றான் எரிச்சலுடன்.
“மத்த நேரம்ன்னா தெரியாது வருண். ஆனா, இப்போதான் பிரச்சனையா இருக்கே..? அதான் சாதனா பயப்படுறா..!” என்றான் முரளி.
“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை. ஒரு வேலையா போயிருக்கான். இப்போ வந்துடுவான். எதையும் நினைக்க வேண்டாம்ன்னு சொல்லுங்க..!” என்றான் சாதனாவை பார்க்காதவன் போல்.
வருண் அப்படி சொல்லியதும் சாதனாவிற்கு கண்கள் கலங்க, அறைக்குள் சென்று விட்டாள்.
“எதுக்கு வருண் சார் இப்படி பட்டும் படாம பேசுறிங்க..? பாருங்க அவங்க முகமே மாறிப் போய்டுச்சு. இந்த நேரத்துல இப்படிப் பேசலாமா..? மாசமா இருக்கும் போது, சின்ன சின்ன விஷயத்துக்கும் எமோஷனலா லாக் ஆவாங்க. இந்த நேரத்துல அவங்க சந்தோஷமா இருக்கணும். இல்லைன்னா, அது அவங்க வயித்துல இருக்குற குழந்தையும் தான் பாதிக்கும்..!” என்று சக்தி சொல்ல, அவளை முறைத்தான் வருண்.
நித்யாவிற்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. சக்தி தன் மகளுக்கு சாதகமாக பேசியது, அவருக்கு ஒரு வகையில் சந்தோஷத்தை கொடுத்திருக்க, அந்த நிமிடம் அவளை மருமகளாகவே எண்ணத் தொடங்கிவிட்டார்.
“அப்படியா..? எனக்கு எல்லா விளக்கெண்ணையும் தெரியும். உனக்கு விட்ட வேலையை மட்டும் நீ பாரு..! தேவையில்லாத விஷயத்தில் எல்லாம் மூக்கை நுழைக்காத..!” என்று வருண் பட்டென்று சொல்லிவிட, சக்திக்கு ஒரு மாதிரியாகிப் போனது. அதுவரை இருந்த இனிமையான மனநிலை, சட்டென்று அறுந்த மாதிரியாகிப் போனது.
“உங்க குடும்ப விஷயத்தில் தலையிட்டது என் தப்பு தான் சார்..! இனி எனக்கு விட்ட வேலையை மட்டும் பார்க்குறேன்..!” என்றவள், நித்தியாவின் பின்னால் சென்றுவிட,
“இப்ப எதுக்கு மாப்பிள்ளை அந்த பொண்ணை அப்படிப் பேசுற..? சக்தி ஒன்னும் தப்பா சொல்லிடலையே..?” என்றான் முரளி.
“என்ன மாமா…? நீங்களும் புரியாம பேசிட்டு இருக்கீங்க. இவ இஷ்ட்டத்துக்கு கல்யாணம் பண்ணுவா..? இவ இஷ்ட்டத்துக்கு எல்லாமே பண்ணனும்ன்னு நினைப்பா..? நம்மமெல்லாம் இவ போடுற தாளத்துக்கு ஆடணுமா..? ஏற்கனவே ஒருத்தன் ஆடிட்டு இருக்கானே..? அது பத்தலையா இவளுக்கு.?” என்றான் வருண்.
“யாரை மாப்பிள்ளை சொல்ற..?”
“ம்ம்..! எல்லாம் கார்த்தியைத் தான் சொல்றேன்..!” என்றான் வருண்.
“அவன் என்ன பண்ணினான்..?” என்றான் முரளி.
“ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காதிங்க மாமா..! இவ கட்டாயத்துல தான் அவன் கல்யாணம் பண்ணியிருப்பான். எனக்கு அது தெரியாதுன்னா நினைக்கிறிங்க..?” என்றான்.
“அதெப்படி மாப்பிள்ளை சரியா சொல்ற..? அப்பறம் ஏன் கார்த்தி கூட இத்தனை நாள் பேசாம இருந்த..?” என்றான் முரளி.
“இவ சொன்னா.. அவன் கேட்பானா..? என்கிட்டே சொல்லனும்ன்னு தெரியாதா அவனுக்கு..? இவ போட்ட தாளத்துக்கு ஆடியிருக்கான். அது தான் எனக்கு கோபம். மத்தபடி அவனைப் பத்தி எனக்கு நல்லா தெரியும் மாமா. எனக்கு ஒரு கஷ்ட்டத்தை, நினைப்புல கூட தரக்கூடாதுன்னு நினைக்கிறவன்..!” என்ற வருணைப் பார்த்து முரளிக்கு ஆச்சர்யமாக இருந்தது.
அவன் சொல்வது, அவன் கணிப்பு இப்படி எல்லாமே சரியாக இருக்க, அதனால் வந்த ஆச்சர்யம் தான் அது.
“அவ இஷ்ட்டத்துக்கு கார்த்தி ஆடுனது தப்புத்தான். ஆனா, தற்கொலை பண்ணிப்பேன்னு உன் அக்கா மிரட்டும் போது அவன் என்ன செஞ்சிருக்கணும்ன்னு நீ நினைக்கிற..?” என்றான் முரளி.
“சிம்பிள்..! பண்ணிக்கோன்னு சொல்லியிருக்கணும்..!” என்றான்.
“என்ன வருண் இப்படி சொல்ற..?” என்றான் முரளி.
“வேற எப்படி மாமா சொல்ல சொல்றிங்க..? மிரட்டி கல்யாணம் பண்ணி அவ என்னத்த சாதிச்சா..? அவன் மனசுல என்ன இருக்குன்னு அவளுக்கு கொஞ்சமாவது நினைப்பு இருந்துச்சா..? எனக்குத் தெரியும் கார்த்தி மனசுல என்ன இருந்ததுன்னு..?” என்றான் வருண்.
“என்ன இருந்தது..?” என்றான் முரளி.
“கார்த்தி வேற ஒரு பொண்ணை லவ் பண்ணான். அது எனக்கு மட்டும் தான் தெரியும். ஏன் அந்த பொண்ணுகிட்டையே அவன் லவ்வை சொல்லலை. அதுக்கு இடையில, திடீர்ன்னு சாத்னாவை கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னா, அதுக்கு யார் காரணம்ன்னு நினைக்கிறிங்க..?” என்றான் வருண்.
“என்ன வருண் சொல்ற..? நிஜமா கார்த்தி விரும்பினது வேற ஒரு பொண்ணையா..?” என்றான் முரளி.
“ஆமா, மாமா..! அதையெல்லாம் மனசுக்குள்ளயே போட்டு புதைச்சுட்டு, இவ மிரட்டலுக்கு பயந்து தாலி கட்டியிருக்கான்னு சொன்னா, அது யாருக்காக மாமா..? எனக்காகத் தான மாமா..? எதுக்காக அந்த முட்டாள்தனத்தை அவன் செய்யணும். அப்படி அவனுக்கு நான் என்ன பண்ணிட்டேன்..? என்கிட்டே சொல்லியிருக்கலாம். நான் இதுக்கு ஏதாவது பண்ணியிருப்பேன். அப்படி இல்லாம, அவன் வாழ்க்கையும் கெட்டு, எங்க நட்பும் கெட்டு… இதெல்லாம் யாரால..? சாதனா மட்டும் தான் இதுக்குக் காரணம். அதனால அவ்வளவு சீக்கிரம் எனக்கு மனசு மாறாது. அது தானா நடந்தாத்தான் உண்டு..!” என்று வருண் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவனின் எதிரில் வந்து நின்றான் கார்த்தி.
“இவன் எப்ப வந்தான்..?” என்று வருண் யோசித்துக் கொண்டிருக்கும் போதே,
“சாரி மச்சான்..! தேங்க்ஸ் மச்சான்..!” என்றபடி கார்த்திக் அவனைக் கட்டிக் கொள்ள, அவனின் அணைப்பில் பழைய வருண் திரும்பியிருந்தான். அவன் கண் கலங்கியதை வருணால் தாங்க முடியவில்லை.
“விடுறா கார்த்தி..!” என்று வருண் சொல்ல, அதைப் பார்த்த முரளி,
“என்னடா..? என்னைய டீல்ல விட்டுட்டிங்க..?” என்றபடி அவர்களுடன் ஐக்கியமானான்.
“என்னை கடைசி வரைக்கும் புரிஞ்சுக்காம போய்டுவியோன்னு நினைச்சுட்டேன் வருண்..!” என்றான் கார்த்தி.
“உன்னைப் புரிஞ்சதனால் வந்த கோபம் தாண்டா இது..!” என்று மீண்டும் இருவரும் அணைத்துக் கொள்ள,
“என்னடா இன்னும் நீங்க ரெண்டு பேரும் கட்டி பிடிச்சுட்டு இருக்கீங்க..?அவனவன் பொண்டாட்டியை கட்டிப் பிடிச்சாலும் அதுல ஒரு நியாயம் இருக்கு..?” என்று முரளி காலை வார,
“எனக்கு தான் இன்னும் பொண்டாட்டி வரலையே..?” என்றான் வருண் சிரிப்புடன்.
“டேய்..! காதல் இல்லை, கத்தரிக்கா இல்லைன்னு வாய்ல தான் சொல்ற. ஆனா, இந்நேரம் வரைக்கும் அந்த புள்ள கூட ஊர் சுத்திட்டு வந்திருக்க. அதுவும் பைக்ல. ஏண்டா எங்களை இன்னும் பைத்தியம் ஆக்கிட்டு இருக்க..?” என்று முரளி புலம்ப, அவனைப் பார்த்து சிரித்தனர் வருணும், கார்த்தியும்.
“நான் சொன்ன வேலை முடிஞ்சதா கார்த்தி..!” என்றான் வருண்.
“எல்லாமே பக்காவா இருக்கு..!” என்றான் கார்த்திக்.
அவனிடம் சக்தி சொன்ன எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொண்டவன், அதற்கு அடுத்து செய்ய வேண்டிய அனைத்தையும் வரிசையாக சொன்னான்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, சக்தியின் வீட்டினர் வந்து இறங்கினர்.
“இவங்க எதுக்காக இங்க வராங்க..?” என்றான் முரளி.
“அவங்க சக்தியை கூட்டிட்டு போக வந்திருக்காங்க மாமா..!” என்றான் வருண்.
“நீ என்ன மாப்பிள்ளை சொல்ற..? சக்தி அவங்க கூட போகப் போகுதா..? அப்போ..” என்று முரளி ஏதோ கேட்க வர,
“இப்போதைக்கு இந்த பேச்சு வேண்டாம் மாமா..! அவங்க அவளைக் கூட்டிட்டு போகட்டும்..!” என்றான் வருண் முடிவாய்.
“பாவம்டா அந்த பிள்ளை..!”
“யாரு… அவ..?” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே, அவர்கள் அருகே வர, அங்கே வந்த தர்மராஜ், வருணின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.
“உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை தம்பி..!” என்றார் அவர்.
“எப்படி சொல்றதுன்னு தெரியலைன்னா விட்டுடுங்க..! சிரமப்படாதிங்க..!” என்று முரளி சிரிக்காமல் சொல்ல, அதைக் கேட்ட கார்த்திக்கும், வருணுக்கும் சிரிப்பாய் வந்தது.
“எதுக்கு நன்றி அப்படின்னு பெரிய வார்த்தை பேசறிங்க..? நான் என்னோட கடமையைத் தான் செஞ்சேன்..! இதுல நன்றி சொல்ல ஒண்ணுமே இல்லை..!” என்றான் வருண்.
“எங்க மகன் சாவுக்கு காரணமானவங்களை உடனடியா அரெஸ்ட் பண்ணியிருக்கிங்க. நீங்க மட்டும் இதை கண்டு பிடிக்கலைன்னா.. நாங்க இன்னும் அந்த கேடுகெட்டவளைத் தான் நம்பிட்டு இருந்திருப்போம்..!” என்று யமுனா சொல்ல,
“செஞ்ச குற்றத்துல இருந்து யாரும் தப்பிக்க முடியாது. இனியாவது சக்தியை உங்க கூட வச்சுப் பார்த்துக்கோங்க..!” என்றான் வருண்.
“கண்டிப்பா தம்பி..! அந்த ருத்ரா பேச்சைக் கேட்டு நாங்க பட்டதெல்லாம் போதும். பிரியா இங்க இருந்து கஷ்ட்டப் பட்டது எல்லாம் போதும். நாங்க எங்க கூடவே அழைச்சுட்டு போயிடுறோம் தம்பி..!” என்று யமுனா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, பேச்சுக் குரல் கேட்டு வெளியே வந்தாள் சக்தி பிரியதர்ஷினி.
“அப்பா..!!!!” என்றவள், வேகமாய் வந்து தர்மராஜை அணைத்துக் கொள்ள, அவளைப் பார்த்தவுடன் கண் கலங்கினார் தர்மராஜ்.
“எப்படிமா இருக்க…? என்னை மன்னிச்சுடு பிரியா..?” என்றார் யமுனா.
“என்னம்மா நீங்க…? என்கிட்டே மன்னிப்பெல்லாம் கேட்குறிங்க..?” என்று சக்தி ஒரே நிமிடத்தில் அவருடன் சமாதானம் ஆகிவிட, அவர்களையே அனைவரும் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
“அப்போ நாங்க கிளம்புறோம் தம்பி..!” என்று தர்மாஜ் சொல்ல,
“என்ன வந்த உடனே கிளம்புறிங்க..? அவ்வளவு தூரம் டிராவல் பண்ணிட்டு வந்திருப்பிங்க. வந்த உடனே எப்படி கிளம்புவிங்க..? இருந்துட்டு காலையில போங்க..!” என்று வருண் சொல்ல,
“இதென்ன மடமா..? வரவங்க போறவங்க எல்லாமே தங்குறதுக்கு..?” என்று மனதில் நினைத்த மோகனா வெளியில் சொல்லவில்லை.
“உங்களுக்கு எதுக்குத் தம்பி சிரமம். நாங்க ரூம் புக் பண்ணியிருக்கோம். அங்க தங்கிட்டு காலையில போய்டுவோம்..!” என்றார்.
“உள்ள வாங்க..! காபியாவது சாப்பிட்டு போங்க. நீங்க காலையில கிளம்பும் போது சக்தியை வந்து கூட்டிட்டு போங்களேன்..! இன்னும் கொஞ்சம் சக்திகிட்ட டீட்டெயில்ஸ் கேட்க வேண்டியது இருக்கு..! அது மட்டும் இல்லாம, சக்தி வந்து சாட்சி சொல்ல வேண்டியது இருக்கும்..!” என்று அவன் சொல்ல,
“வேண்டாம் தம்பி. ஏற்கனவே ஒருமுறை மேடை வரைக்கும் வந்து கல்யாணம் நின்னு போய்டுச்சு. இப்போ கோர்ட்,கேஸ்ன்னு அலைஞ்சா… நாளைக்கு பொண்ணுக் கேட்டு வரவே யோசிப்பாங்க..!” என்றார் தர்மராஜ்.
“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் வராது. நான் பார்த்துக்கறேன். என்மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்குதானே..?” என்றான்.
“என்ன தம்பி இப்படி சொல்லிட்டிங்க..? நீங்க என்ன சொல்றிங்களோ.. அப்படியே செய்றோம் தம்பி..!” என்றவர்கள், நித்யாவின் காபியினை அருந்திவிட்டு,
“காலையில ரெடியா இருமா..! ஊருக்கு போக..” என்று சொல்லி விட்டு கிளம்பி சென்றனர்.
காலையில் ஊருக்கு போக வேண்டும் என்ற நினைப்பே அவளுக்கு வேப்பங்காயாய் கசந்தது. அதிலும் வருணை விட்டு செல்வது என்பது அவளுக்கு முடியாத காரியமாய் இருக்க, அது முகத்தில் தெரியாத வண்ணம் மறைத்துக் கொண்டாள். எவ்வளவு மறைத்தாலும் அது வருணின் கருத்தில் பதியத்தான் செய்தது. அவனால் இப்போது என்ன செய்ய முடியும்..? முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கே..?
“என்ன மாப்பிள்ளை..? ஊடலா..?” என்றான் முரளி நக்கலாக.
“இப்போ அது மட்டும் தான் குறைச்சலா இருக்கு..!” என்றவன், அடுத்து முக்கியமான வேலைகளில் ஆழ்ந்து போக, அங்கே சக்தியின் நிலை தான் பரிதாபம். விட்டால் அழுது விடும் நிலையில் இருந்தாள்.
“நாளைக்கு ஊருக்குப் போன பிறகு பேசுவ தான சக்தி..?” என்று சாதனா கேட்க,
“என்ன இப்படி கேட்குறிங்க..? கண்டிப்பா பேசுவேன்..!” என்றவளின் குரல் கமர,
“நான் ஒன்னு சொன்னா, தப்பா நினைக்க மாட்டியே..?” என்று சாதனா பீடிகை போட,
“சொல்லுங்க..!”
“பேசாம நீயே போய், வருண்கிட்ட லவ்வ சொல்லிடு. அவன் சொல்லனும்ன்னு நீ நினைச்சா, அது இந்த ஜென்மத்துல நடக்காது..!” என்றாள்.
“நீங்க என்ன சொல்றிங்க..? எனக்குப் புரியலை..?” என்றால் சக்தி.
“நீ எவ்வளவு மறைச்சாலும் உன் முகத்துலதான் தெரியுதே..! சில சமயங்கள்ல நமக்குத் தேவையானது கேட்டாதான் கிடைக்கும். இன்னும் ஆம்பிள்ளைங்க தான் சொல்லனும்ன்னு எதிர்பார்க்கக் கூடாது..!” என்று சாதனா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வந்தாள் கௌசி.
“சரித்தாண்டி…! அவளையும் சேர்த்துக் கெடுக்குறியா நீ..?” என்ற கௌசி, சாதனாவை முறைக்க,
“அதெல்லாம் ஒன்னும் இல்லங்க..! சும்மாதான் பேசிட்டு இருந்தாங்க..!” என்றவள் அங்கிருந்து செல்ல எத்தனித்தாள்.
“எங்க போற சக்தி..?”
“இல்லை, வெளிய கொஞ்சம் காத்து வாங்கலாம்ன்னு..!” என்றாள்.
“காத்து வாங்க இதென்ன கோயம்புத்தூரா..? கொடைக்கானல்மா..கரண்ட் வேற இல்ல. இந்த குளிர்ல வெளிய போன, ஜன்னி வந்துடும்..!” என்றால் சாதனா.
“இல்லைங்க சும்மா..! இதோ வந்திடுறேன்..!” என்று எதையோ உளறிவிட்டு வெளியே வந்தவளுக்கு, அப்போது தான் மூச்சே வந்ததைப் போல் இருந்தது. அந்த இருளும், குளிரும் அவள் மனதில் இருந்த பாரங்களை கொஞ்சம் தணிக்க, எதைப் பற்றியும் யோசிக்காமல், வீட்டின் முன்னால் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள்.
“மாம்ஸ்..!” என்றபடி வந்த வருண், அவளைப் பின்னால் இருந்து அணைக்க, அவளுக்கு விதிர்விதித்துப் போனது.
“இந்த இருட்ல இங்க என்ன பண்றிங்க மாம்ஸ்..!” அணைப்பை விடாமல் பேச, அவளால கத்தவும் முடியவில்லை. வாயைத் திறந்தால் காத்து தான் வந்தது. அவன் அணைப்பு அவளுக்குள் தீயாய் தகிக்க, ஒரு நிமிடம் மெய் மறந்து நின்றவள், உள்ளுணர்வு உந்த, பட்டென்று அவனைப் பின்னால் தள்ளி விட்டாள்.
“மாமா..!” என்று அவன் கத்தவும், கரண்ட் வரவும் சரியாக இருந்தது.
“கூப்பிட்டியா மாப்பிள்ளை..!” என்று முரளி உள்ளிருந்து வர,
“அப்ப இது யாரு..?” என்று பார்க்க, அங்கே சக்தி கோபமாய் நின்றிருந்தாள்.
“ஹோ..!சாரி சக்தி… முரளி மாமான்னு நினைச்சு..!” என்று வருண் இழுக்க,
“நினைச்சு… என்னடா பண்ண வருண்..?” என்றான் முரளி.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல மாமா..!” என்று வருண் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சக்தி கோபமாய் உள்ளே சென்று விட்டாள்.
“நான்னு நினச்சு சக்தியை கட்டிப் பிடிச்சியா மாப்பிள்ளை..?” என்றான் முரளி.
“எப்படி மாமா சரியா சொல்றிங்க..?” என்று வருண் கேட்க,
“நம்பிட்டேன்டா..! ஆனா, ஒன்னு… கொடைக்கானல் கூட்டிட்டு வந்து, இப்படி என்னைப் படுத்துற பாட்டுக்கு, எதிர்காலத்துல நீ அனுபவிப்படா..!” என்று வராத கண்ணீரை துடைத்து விட்டு சென்றான் முரளி.
அவன் சென்றவுடன், தலையைக் கோதிக் கொண்ட வருணுக்கு, அது ஒரு புது வித அனுபவமாக இருக்க,
“இதுவும் கூட நல்லாத்தாண்டா இருக்கு வருண்..!” என்று தனக்குத் தானே சொல்லி சிரித்துக் கொண்டான்.
பத்து நாட்களுக்குப் பிறகு…
கோவைக்கு அருகில் உள்ள அந்த ஊரில் உள்ள வீட்டில், ஹாலில் அமர்ந்து குழந்தையுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தாள் சக்தி பிரிதர்ஷினி. கொடைக்கானலில் இருந்து வந்து பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதற்குப் பிறகு வருணிடம் இருந்து எந்த போனும் இல்லை, தகவலும் இல்லை. தர்மராஜ் அவளுக்கு வரன் பார்க்க ஆரம்பிக்க, இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று முடிவாக சொல்லிவிட்டாள் சக்தி.
சிவாவின் குழந்தையை, குழந்தையில்லாத ஜெயப்பிரகாஷும்,அபூர்வாவும் தங்கள் குழந்தையாகவே தத்தெடுத்துக் கொண்டனர் மனதளவில். பெண்குழந்தையாக இருந்தாலும், அவளைப் பார்க்கும் போதெல்லாம் சிவா தான் நினைவுக்கு வருவான் சக்திக்கு.
குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தாலும், நினைவு முழுவதும் வருண் மட்டுமே இருந்தான். அன்று தான் தேவன் அரஸ்ட் செய்யப் பட்டிருந்தான். அவன் முக்கியமான புள்ளி என்பதால், அவனுக்கான ஆதாரங்களை முழுமையாக ஒப்படைத்து, அரஸ்ட் வாரண்ட் வாங்கி, அவனை அரஸ்ட் பண்ண, வருணுக்கு அதிக நாட்கள் எடுத்துக் கொண்டது என்றே சொல்லலாம். ஆனால் லெனினைப் பற்றிய தகவல் வெளியே வரவில்லை. அவன் என்ன ஆனான்..? எங்கே போனான்..? என்பது பற்றி யாருக்கும் தெரியாமல் போனது. ஏன் தேவனுக்கே கூட தெரிந்திருக்கவில்லை.
தேவனும், வருணிடம் கெஞ்சிப் பார்த்து விட்டான். வருண் எதற்கும் அசையவில்லை. இந்த நியூஸ் எல்லாம், அன்றைய பத்திரிக்கை, டிவி என அனைத்திலும் ஓடிக் கொண்டிருக்க, பத்து நாட்கள் கழித்து, வருணின் முகத்தை டிவியிலும், பேப்பரிலும் தான் பார்த்தால் சக்தி. இன்று அவள் நிம்மதியாக குடும்பத்தினருடன் வாழ்வதற்கு அவன் மட்டுமே காரணம் என்று சக்திக்கு தெரியும்.
“என்னாச்சு பிரியா..? ஏன் டிவியவே வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு இருக்க..?” என்று அபூர்வா கேட்க,
“அதெல்லாம் ஒண்ணுமில்லை அண்ணி..!” என்றால் சக்தி.
“இந்த கேஸ்ல நீயும் ஒரு சாட்சி தான..?உன்னை எப்பக் கூப்பிடுவாங்க..? அந்த வருண் சார் வருவாரா..? இல்லை நாம போகனுமா..?” என்று அபூர்வா கேள்விகளை அடுக்கிக் கொண்டிருக்க, அது எதுவுமே சக்தியின் காதில் விழவில்லை. அவளுக்கு கண் முன் தெரிந்தது எல்லாம் வருண் மட்டுமே. அவனின் பிம்பத்தை ஒவ்வொரு சேனலாக மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டே இருந்தாள்.
“எனக்கு தான் தவிப்பா இருக்கு. அவரோட நினைப்பாவே இருக்கு. நடக்காதுன்னு தெரிஞ்சாலும் மறக்க முடியலை..!” என்று தனக்குத் தானே பேசிக் கொள்ள,
“எதையாவது அவன்கிட்ட சொன்னாத்தான அவனுக்குத் தெரியும். முயற்சியே பண்ணாம, எப்படி நடக்காதுன்னு சொல்ற..? அன்னைக்கு சாதனா சொன்ன மாதிரி, நீ சொல்லனும்ன்னு நினைக்கிறானோ என்னமோ..?” என்று அவளின் மனம் அவளுக்கு எடுத்து கூற,
“இல்லை..! அப்படி ஏதாவது ஒரு எண்ணம் இருந்திருந்தா, கண்டிப்பா அவர் சொல்லியிருப்பார். நான் சொல்லப் போக, அவர் பிடிக்கலைன்னு சொல்லிட்டா.. அது இதை விட அசிங்கம். அதுக்கு அவர் நினைப்போடவே இருக்குறது எவ்வளவோ பரவாயில்லை..!” என்று பதில் கொடுத்தால் மனதிற்கு.
“சரி..! இன்னைக்கு அந்த தேவனை அரஸ்ட் பண்ணிட்டான். அதுக்காக ஒரு வாழ்த்து சொல்லலாம் தான..?” என்று மனது சொல்ல,
“ம்ம்..!! இது தான் பேச சந்தர்ப்பம். எப்படியாவது குரலைக் கேட்டா கூட போதும்..!” என்று நினைத்தவள், வருணுக்கு போன் செய்ய, முதல் இரண்டு முறையும் அவன் எடுக்கவில்லை.
“இனி எங்க போனை எடுக்கவெல்லாம் சாருக்கு நேரம் இருக்குமா..?” என்று மனதிற்குள் குமைந்தவள், மீண்டும் ஒரு முறை போன் செய்ய, இந்த முறை எடுத்தான் வருண்.
“ஹலோ..!” என்ற அவனின் கம்பீரமான குரலில், அப்படியே வாயடைத்துப் போனது சக்திக்கு.
“ஹலோ..!!!” என்றான் மறுபடியும்.
“நான் சக்தி..!” என்றாள்.
“எந்த சக்தி..?” என்றான் வருண்.
அவனின் கேள்வியில், அவளுக்கு கோபம் கண்மண் தெரியாமல் வந்தது.
“உங்களுக்கு எத்தனை சக்தியைத் தெரியும்..?” என்றால் எரிச்சலுடன்.
“அதெல்லாம் உங்ககிட்ட சொல்லிட்டு இருக்க நேரமில்லை..!” என்றான் பட்டென்று.
“நான் சக்தி பிரியதர்ஷினி..!” என்றால் பல்லைக் கடித்துக் கொண்டு.
“ஹோ..! நீயா..? சொல்லு இப்ப என்ன பிரச்சனை..?” என்றான் வருண்.
“பிரச்சனை இருந்தாத்தான் போன் பண்ணனுமா..?” என்றாள்.
“நீங்க எப்பவும் பிரச்சனைன்னு வந்தா தான என்னைத் தேடுவிங்க. அதான் கேட்டேன்..!” என்றான்.
“நியூஸ் பார்த்தேன்..! கங்கிராட்ஸ். அப்பறம் தேங்க்ஸ்..!” என்றாள்.
“ரொம்ப சீக்கிரம் சொல்லிட்ட..? சரி, வேறென்ன..?” என்றான்.
“வேற ஒண்ணுமில்லை..!” என்றாள் உள்ளே போன குரலில்.
“ஒன்னுமில்லையா..? அப்ப சரி.. போனை வை..!” என்றவன், பட்டென்று வைத்து விட்டான்.
“ஹலோ…ஹலோ..!” என்று இவள் இந்த பக்கம் கத்திக் கொண்டிருக்க, அங்கு வருணோ வேலையில் மூழ்கிப் போனான்.
“என்ன மனுஷன் இவனெல்லாம்..? என்னையப் பத்தி தெரியாம திரியறான்…! ஏதோ ஹெல்ப் பண்ணானே, தேங்க்ஸ் சொல்லலாம்ன்னு கூப்பிட்டா, ரொம்ப ஓவராத்தான் போயிட்டு இருக்கான்..” என்று சக்தி கருவ, அவளின் அமைதி கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் பறந்து கொண்டிருந்தது.