காதல் 20:
“யாருடா போன்ல..?” என்றான் கார்த்தி.
“வேற யாரு..? எல்லாம் நமக்கு வேண்டப் பட்டவங்க தான்..! சக்தி தான் கால் பண்ணியிருந்தா..” என்றான் வருண்.
“அடப்பாவி..! அந்த பொண்ணுகிட்ட தான் இப்படி பேசிட்டு இருந்தியா..?” என்று கார்த்தி ஆச்சர்யப்பட,
“வேற எப்படி பேச சொல்ற..? சும்மா வேலை நேரத்துல போன் பண்ணிக்கிட்டு..! அவனவனுக்கு ஆயிரத்தெட்டு டென்சன் இருக்கு. இப்ப போன் பண்ணி தேங்க்ஸ் சொல்லலைன்னு யார் அழுதா..?” என்று வருண் சிடுசிடுக்க,
“சக்தி போன் பண்ணது பிரச்சனையா..? இல்லை உனக்கு தேங்க்ஸ் சொன்னது பிரச்சனையா..?” என்றான் கார்த்தி.
“யப்பா சாமி..! ரெண்டுமே இல்லை. ஆளை விடுங்கடா..!” என்ற வருண் வேலையை பார்க்க, அவனைப் பார்த்த கார்த்திக்கு எதுவோ புரிவதைப் போல் இருந்தது.
“அதான் தேவன் கேஸ் முடிஞ்சதுல்ல. எப்போ சென்னைக்கு கிளம்பப் போற..?” என்றான் கார்த்தி.
“இப்போதைக்கு இல்லை. கேஸ் கோர்ட்க்கு போகணும், அவனுக்கு தண்டனை கன்பார்ம் ஆகணும், அதுக்கு பிறகு தான் ரிலீவ் ஆகுறதைப் பத்தி யோசிக்கணும்..!” என்றான் வருண்.
“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை. கேஸ் விஷயமெல்லாம் பார்த்துக்கலாம். எல்லாரும் சென்னை கிளம்புங்க..!” என்றான் கார்த்தி. இப்போது அனைவரும் வருணின் குவார்ட்ரசில் தங்கியிருந்தனர். எவ்வளவோ கூப்பிட்டும் சாதனா மட்டும் வர மறுத்து விட்டாள். வருண் கூப்பிடாமல் அவன் வீட்டிற்கு செல்ல, அவளுக்கு அப்படி ஒரு தயக்கம். ஒரு வழியாக வருணும் கடமைக்காக கூப்பிட, அந்த மட்டும் இறங்கி வந்தானே என்று அவர்களுடன் கிளம்பி வந்திருந்தாள். அதற்கு முழு காரணமும் கார்த்தி தான்.
“நீ கூப்பிடாம சாதனா வர மாட்டா வருண்..!” என்றான்.
“அதுக்காக, அவகிட்ட போய் கெஞ்சனுமா..?” என்றான்.
“கெஞ்ச வேண்டாம்..! வான்னு சொன்னா, அவளே வந்துடுவா..!” என்றான் கார்த்தி.
“என்னால முடியாது..!” என்று வருண் மறுக்க,
“இதுல நானே கோபத்தை மறந்து நார்மல் ஆகிட்டேன். நீ ஏண்டா இன்னமும் அதையே பிடிச்சுட்டு தொங்கிட்டு இருக்க..? ஒருவேளை என்னை விட தகுதியான ஒருத்தனை உங்க அக்காவுக்கு பார்க்கனும்ன்னு நினைச்சிருந்தியோ..?” என்று கார்த்தி கேட்டே விட, வருணுக்கு ஒரு மாதிரியாகிப் போனது.
“என்னைப் பத்தி உனக்கு நல்லாவே தெரியும் கார்த்தி. தெரிஞ்சும் என் வாயைப் பிடுங்கினா, அப்பறம் என்ன பேசுவேன்னு தெரியாது. எல்லாம் சரிதான், ஆனா, நீ அவளை விட சின்ன பையன்டா..!” என்றான் வருண்.
“ஒரு வருஷம் எல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லை. எந்த காலத்துல இருக்க நீ. நானே இதை பெருசா எடுத்துக்கலை. உனக்கு என்ன பிரச்சனை..?” என்று கார்த்தி சொல்லவும் தான், ஓரளவுக்கு இறங்கி வந்திருந்தான் வருண்.
இதோ இப்போது அனைவரும் கொடைக்கானலை விட்டு வந்து பத்து நாட்கள் ஆகிறது. வருணின் இடம் மாற்றம் உறுதி செய்யப்பட்டதால், கையோடு அவனையும் அழைத்துக் கொண்டு செல்வதற்காக குடும்பமே காத்திருக்க, வருண் அந்த தேவனுக்கு தண்டனை உறுதி செய்யப்படாமல், அந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தான்.
“உங்களுக்குள்ள எல்லாமே சரி ஆகிடுச்சா கார்த்தி. இல்ல, எப்பவும் போல… எங்களுக்காக நடிச்சுகிட்டு இருக்கியா..?” என்றான் வருண்.
“உன்கிட்ட பொய் சொல்ல விரும்பலை வருண். சரி ஆகிடுச்சுன்னு சொல்ல முடியாது. அதே சமயம் சரி ஆகவே முடியாதுன்னும் கிடையாது. கொஞ்சம் நாள் எடுக்கும்..!” என்றான் கார்த்தி.
வருண் அவனை யோசனையுடன் பார்க்க,
“ஏன் அப்படிப் பார்க்குற..?” என்றான் கார்த்தி.
“எதுவும் சரி ஆகலைன்னு சொல்ற..? ஆனா, குழந்தை மட்டும் எப்படி..?” என்று அதி முக்கியமான கேள்வியைக் கேட்க, அந்த கேள்வியில் கார்த்தியின் முகம் வேதனையை பிரதிபலித்தது.
“என்னாச்சு கார்த்தி..?” என்று நண்பனின் முக மாறுதலை வைத்து யோசனையுன் வருண் கேட்க,
“கல்யாணம் எப்படி சாதனா கட்டாயமோ..அதே மாதிரி இந்த குழந்தை கூட அவ கட்டாயத்துல தான்..” என்று அதற்கு மேல் சொல்ல முடியாமல் கார்த்தி திணற,
“அவளுக்கு அறிவில்ல. உனக்குமா அறிவில்ல..?” என்று வருண் கோபத்தில் கத்த,
“எனக்கு வேற வழி தெரியலை வருண்..! ஒரு குழந்தை வந்துட்டா, குடும்பமே ஏத்துக்கும்ன்னு அவ நினைச்சா… எல்லாமே அவ நினைச்சது தான, குழந்தையை வச்சு என் நண்பன் எனக்கு திரும்ப கிடைச்சா, அது எனக்கும் ஒரு வகையில சந்தோசம் தான..!” என்றான் கார்த்தி.
“நீ என்ன சமாதானம் சொன்னாலும் என்னால ஏத்துக்க முடியாது கார்த்தி. காதலே இல்லாம..?” என்று வருண் இழுக்க,
“யார் சொன்னா காதலே இல்லாமன்னு…? கல்யாணத்துக்கு முன்னாடி வேணும்ன்னா, நான் வேற பொண்ணை லவ் பண்ணியிருக்கலாம். அதுவும் ஒன் சைட். ஆனா, எப்ப சாதனா கழுத்துல தாலி கட்டினேனோ, அந்த நிமிஷம் நான் எல்லாத்தையும் மறந்துட்டேன். எது எப்படி இருந்தாலும், மனைவி தான எல்லாம்..!” என்றான் கார்த்தி.
“அதெப்படிடா…!” என்று வருண் மீண்டும் ஆரம்பிக்க,
“எப்பா சாமி..! உனக்கு என்னால விளக்கம் குடுக்க முடியாது. நான் கிளம்புறேன்..!” என்றான் கார்த்தி.
“போடா..! எங்க போய்டுவ..? வீட்ல வந்து வச்சுக்கறேன்..!” என்று வருண் சிரிக்க,
அந்த நிமிடம் அவர்களுக்கு இடையே இருந்த மனக்கசப்பு எல்லாம் முழுமையாக விலகி, பழைய நண்பர்களாக மாறியிருந்தனர். நண்பனே உறவாய் வந்து விட்டால் சொல்லவா வேண்டும்.
டியூட்டி முடித்து வீட்டிற்கு வந்த வருணுக்கு, குடும்பமே வாழ்த்து சொல்ல,
“இந்த கேஸ்ல முக்கியமான பங்குன்னா, அது சக்திக்கு தான். அவ மட்டும் இந்த ஆதாரத்தை எல்லாம் என்கிட்ட குடுக்காம இருந்திருந்தா, இவ்வளவு சீக்கிரம் இதை முடிச்சிருக்க முடியாது..” என்று வருண் சொல்ல,
“பாருங்க, சக்திக்கு எப்படி வக்காலத்து வாங்குறான்..!” என்று கௌசி, முரளியிடம் சொல்ல,
“அடியேய்..! அதுக்கு பேரு வக்காலத்து இல்லை. நடந்த உண்மையை சொல்றது. அதைத்தான் உன் தம்பியும் சொல்றான்..!” என்றான் முரளி.
“நாம எப்போ கிளம்பறோம் வருண். சாதனாவுக்கு வளைகாப்பு வேற பண்ணனும்..!” என்று நித்தியா சொல்ல,
“இன்னும் ரெண்டு நாள்ல கிளம்பிடலாம். உங்களுக்கு வேலை இருக்குன்னா, நீங்க முன்னாடியே கிளம்புங்க..!” என்றான் வருண்.
“அதெல்லாம் ஒரு வேலையும் இல்லை. நாளைக்கு நீ எங்க கூட வர முடியுமா..?” என்றால் கௌசி.
“எங்க போகணும்..?”
“எல்லாம் உனக்குப் பொண்ணு பார்க்கத்தான். மோகனா அத்தை பார்த்த பொண்ணுதான். உன்னைத்தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல நிக்குதாம்..!” என்று கௌசி சொல்ல,
“என்ன கிண்டலா..? நான் உங்க கிட்ட இப்போ கல்யாணம் கேட்டேனா..?” என்றான் எரிச்சல் மண்டிய குரலில்.
“அடப்பாவி..! இது ஏற்கனவே பேசி முடிச்சது தான..? உன்னைக் கூட வந்து மாப்பிள்ளை பார்த்துட்டு போனாங்களே..? நீ கூட சரின்னு தான சொன்ன..?” என்று அவள் விடாமல் அவனைத் துருவ,
“சொன்னேன்..! ஆனா இப்ப..” என்று அவன் இழுக்க,
“இப்ப…! சொல்லு, இப்ப என்ன..?” என்றனர் அனைவரும் ஆர்வமாய். அனைவரையும் உற்றுப் பார்க்க, சாதனாவின் கையில் இருந்த செல்போன், அவனுக்கு சந்தேகத்தைக் கிளப்பியது. அதில் யாரோ லைனில் இருப்பதைப் போல் பட்டது வருணுக்கு. வந்த சிரிப்பை அடக்கியவன்,
“போகலாமே..! எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. ஏற்கனவே பார்த்த இடம் தான..? எனக்கும் அந்த பொண்ணு ஓகே தான்..!” என்றவன், நமட்டு சிரிப்புடன் அறைக்குள் சென்று விட,
“என்ன கௌசிக்கா..? இவன் இப்படி சொல்லிட்டு போறான்..?” என்றால் சாதனா அதிர்ந்து.
“அதாண்டி சாதனா.. என்னாலையும் நம்ப முடியலை..!” என்று கௌசியும் ஒரு பக்கம் அதிர்ந்தாள். வருணின் விளையாட்டு சத்தியமூர்த்திக்கு நன்றாக விளங்கியது.
“இன்னைக்கு கூட, அந்த சக்தி பொண்ணு போன் பண்ணியிருந்தது. ஆனா, வருண் வேண்டா வெறுப்பா பேசி வச்சுட்டான்..!” என்று கார்த்தி தன் பங்குக்கு கொளுத்திப் போட, இதைக் கேட்ட மோகனாவிற்கு சந்தோசம் பிடிபடவில்லை.
“என் மருமகன் என்னை மாதிரி..! ஒரு முடிவு எடுத்துட்டா, அதுல இருந்து மாற மாட்டான். அப்பறம் என்ன மூர்த்தி, அவங்களுக்கு போன் போட்டு சொல்லிடு, நாளைக்கு வரோம்ன்னு. நீ சொல்றியா..? இல்லை நானே சொல்லிடட்டுமா..?” என்றார் மோகனா.
“அதெல்லாம் வேண்டாம்க்கா..! நானே சொல்லிடுறேன்..!” என்றபடி சத்யமூர்த்தி செல்ல,
நடந்த அனைத்தையும் செல்போனில் கேட்டுக் கொண்டிருந்த சக்திக்கு, கண்ணீரை அடக்க முடியவில்லை. அவளுக்கு இருந்த கொஞ்ச நம்பிக்கையும் போனது.
“சக்தி அது வந்து..!” என்று சாதனா இழுக்க,
“பரவாயில்லைங்க..! ஒன்னும் பிரச்சனையில்லை..!” என்றபடி போனை வைத்து விட்டாள் சக்தி.
“மிஸ்டர். காவல்துறை சரியா தான் இருந்திருக்கார். நான்தான் கண்டதெல்லாம் யோசிச்சு, கற்பனை பண்ணி..!” என்று தனக்குத் தானே நொந்து கொண்டவள், அதற்கு மேல் அவனைப் பற்றி யோசிக்கவே கூடாது என்று முடிவு எடுத்தாள். ஆனால் அது அவ்வளவு சுலபம் என்று தோன்றவில்லை அவளுக்கு.
அறைக்கு சென்ற வருணுக்கு மனம் முழுவதும் சக்தி பிரியதர்ஷினியின் நியாபகம் மட்டுமே.
‘நான் அப்படி பேசவும், மேடம் இங்க கால் பண்ணியிருக்காங்க. இதுல என்னை ஆராய்ச்சி வேற பண்றாக..’ என்று மனதுக்குள் பேசிக் கொண்டவன், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தான். எல்லா யோசனையும் சக்தியில் வந்தே முழுமை பெற,
“ராட்சசி..! என்னை பாடா படுத்தனும்ன்னே இருப்பா போல..!” என்றவன், குளித்து விட்டு வந்து சாவகாசமாய் அவளுக்கு அழைத்தான்.
முதலில் அவனிடம் இருந்து வந்த அழைப்பைக் கண்டு சக்திக்கு ஆச்சர்யம். நம்பவே முடியவில்லை. மீண்டும் மீண்டும் செல்போன் திரையைப் பார்த்து உறுதிப் படுத்திக் கொண்டவள், பிறகு தான் அட்டென் செய்தாள்.
“உனக்கு போனை எடுக்க இவ்வளவு நேரமா..?” என்றான் எரிச்சலுடன்.
‘இவனுக்கு நல்லாவே பேச வராதா..? எப்பப் பார்த்தாலும் எண்ணையில போட்ட கடுகு மாதிரி பொரிஞ்சு தள்ளிட்டே இருக்கான்..!’ என்று மனதிற்குள் திட்டிக் கொண்டவள்,
“எங்களுக்கும் வேலை வெட்டி இருக்கும் சார்..!” என்றாள் பட்டென்று.
“அப்படியா..? அப்படி என்ன வேலையை நீங்க வெட்டி முறிக்கிறிங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாம..?” என்றான் நக்கலாய்.
“அது உங்களுக்குத் தேவையில்லாத விஷயம்..!” என்றால் சக்தி.
அவன் எரிச்சலுடன் பல்லைக் கடிக்க,
“எதுக்குக் கூப்பிட்டிங்க..?” என்றாள்.
“அதுவா.. நாளைக்கு நான் பொண்ணு பார்க்க போறேன். பொண்ணு கோயம்புத்தூர் தான். உனக்குப் பக்கம் தான.. நீயும் வந்தா நல்லா இருக்கும்..!” என்றான் வருண்.
“உங்களுக்குப் பொண்ணு பார்க்க நான் ஏன் சார் வரணும். உங்க வீட்ல இருக்கவங்க வந்தா போதாதா..?” என்றாள். சொல்லும் போதே அவள் குரல் கமர,
“இல்ல, அவங்க என்னை மாப்பிள்ளை பார்க்க வந்தப்ப, நீ கூடத்தான இருந்த. அதே மாதிரி இப்போ நான் பொண்ணைப் பார்க்கப் போகும் போதும் நீ கூட இருந்தா தான சரியா இருக்கும்..!” என்றான் நக்கலுடன்.
“அப்படியா சார்..! ஆனா, என்னால வர முடியாது. நீங்க போய் பார்த்துக்கங்க. எனி வே.. ஆல் தி பெஸ்ட் சார்..!” என்றவள் பட்டென்று போனை வைத்து விட, வருணுக்கு ஒரு மாதிரியாகிப் போனது. அவள் போனை வைக்கும் போது அழுததைப் போல் இருந்தது.
“ஏண்டா, அவளைப் போட்டு இந்த பாடு படுத்தற..?” என்று மனசாட்சி அவனைக் கடிந்து கொள்ள,
“அவ படுத்துனதுக்கு மேலவா..?” என்று அதற்கு பதில் கூறியவன், அப்படியே தூங்கிப் போனான். அங்கே சக்தியின் நிலைதான் பரிதாபம்.
இரவெல்லாம் தூங்காமல் இருந்து, ஒருவழியாக காலையில் தான் தூங்கினாள் சக்தி. நல்ல தூக்கத்தில் இருந்தவளை, யமுனா தட்டி எழுப்ப,
“சொல்லுங்கம்மா..!” என்றால் கலக்கத்துடன்.
“மணி பத்தாகுது பிரியா..? என்னாச்சு உடம்புக்கு எதுவும் முடியலையா..?” என்று அவளைத் தொட்டுப் பார்க்க, உடம்பில் காய்ச்சல் எதுவும் இல்லை.
“சாரிம்மா..! நைட்டெல்லாம் தூக்கமே இல்லை. அதான் அசந்து தூங்கிட்டேன்..!” என்றாள்.
“அந்த வருண் தம்பிக்கு இங்க பக்கத்துல தான் பொண்ணுப் பார்த்திருக்காங்க போல. இன்னைக்கு பொண்ணை நேர்ல பார்க்க வராங்களாம். பார்த்துட்டு போகும் போது, நம்ம வீட்டுக்கும் வரதா சொல்லியிருக்காங்க..! நீ எந்திரிச்சு போய் குளிமா..!” என்றார் யமுனா.
‘இவன், நான் நிம்மதியாவே இருக்கக் கூடாதுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு சுத்துறானா..? பொண்ணுப் பார்க்க வந்தா, பார்த்துட்டு அப்படியே போக வேண்டியது தான..? இங்க எதுக்கு வரான்..?’ என்று எண்ணியவளுக்கு எரிச்சல் தான் மண்டியது.
‘என்ன சக்தி இப்படி பேசுற..? உனக்கு அந்த குடும்பம் எவ்வளவு செஞ்சிருக்கு. அதுக்கு பதிலுக்கு நீ தர மரியாதை இது தானா..? அவன் ஒருத்தனுக்காக எல்லாரையும் ஏன் அவாய்ட் பண்ணனும்..!’ என்று எண்ணியவள், வேகமாய் எழுந்து குளிக்க சென்றாள். குளித்து வந்து சிம்பிளாக ஒரு காட்டன் புடவையைக் கட்டியவள், எப்போதும் போல் சாதரணமாக இருந்தாள். அது கொஞ்ச நேரம் வரை மட்டுமே.
நேரம் ஆக, ஆக.. அவளுக்கு ஏதோ பாறாங்கல்லையே தூக்கி தன் மேல் வைத்ததைப் போல் பாரமாக உணர்ந்தாள்.
‘இந்நேரம் பொண்ணைப் பார்த்திருப்பான்..! அவனுக்கும் பிடிச்சிருக்கும்..!’ என்று அவளாகவே நினைத்துக் கொண்டிருக்க, கண்ணெல்லாம் சிவந்து போனது.
அபூர்வாவும் அவளைப் பார்த்து,
“ஏன் ஒரு மாதிரி இருக்க சக்தி..?” என்றாள்.
“ஒண்ணுமில்லை அண்ணி..!” என்றாள்.
“பாப்பாவை கொஞ்ச நேரம் வச்சிரு சக்தி. குளிக்க வச்சுட்டேன். பவுடர் போட்டு, இந்த டிரசை போட்டு விடு..!” என்று சொல்லி விட்டு அபூர்வா சென்று விட, அந்த வேலையில் மூழ்கிப் போனாள் சக்தி.
“அவங்க எல்லாம் வந்துட்டாங்க..!” என்று அபூர்வா மீண்டும் வந்து சொல்லும் வரை, அவள் அந்த உலகத்தில் இல்லை. தோன்றிய படபடப்பை அப்படியே மறைத்துக் கொண்டவள், குழந்தையைத் தூக்கிக் கொண்டு எப்பவும் போல், கீழே இறங்கி வந்தாள்.
“புடவைல செம்மையா இருக்கால்ல சாதனா..?” என்று கௌசி அவள் காதைக் கடிக்க,
“ஆமாக்கா..! கொஞ்சம் அழகு வேற கூடித் தெரியுது..!” என்று சாதனாவும் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“வாங்க அங்கிள், வாங்க ஆண்ட்டி..! வாங்க..!” என்று அனைவரையும் பொதுவாய் வரவேற்க, வருணைப் பார்க்க திரும்பியவளுக்கு, அவனைக் கண்டு எரிச்சலாக வந்தது. அவன் செல் போனை தீவிரமாய் பார்த்துக் கொண்டிருக்க,
‘இந்த ஜென்மத்துல இது திருந்துற கேஸ் இல்ல..’ என்று எண்ணியவள், அவனிடம் ஒன்றும் பேசவே இல்லை.
குழந்தையுடன் அவள் நின்றிருந்தது…பார்க்கவே அவ்வளவு பாந்தமாய் இருந்தது.
“உட்காரு சக்தி..!” என்றார் நித்யா. அவளும் அவருக்கு அருகில் அமர,
“இன்னைக்கு மதிய சாப்பாடு இங்க தான்..! எல்லாரும் சாப்பிட்டு தான் போகணும்..!” என்று யமுனா சொல்ல,
“அதெல்லாம் வேண்டாம்ங்க..! நாங்க வெளிய பார்த்துக்கிறோம்..!” என்று வருண் படக்கென்று சொல்ல,
“ஏன்..? துரை எங்க வீட்ல எல்லாம் சாப்பிட மாட்டானோ..?” என்று மனதில் எண்ணியவள், அதை முகத்திலும் காட்டிவிட, அவளுக்கு முன்பு யமுனா முந்திக் கொண்டார்.
“அதெல்லாம் முடியாது தம்பி. கண்டிப்பா நீங்க சாப்பிட்டு தான் போகணும். எங்களுக்கு எவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்கிங்க…!” என்று சொல்ல, தர்மராஜும் அவர்களை வற்புறுத்தினார்.
“சரிங்க சாப்பிட்டே போறோம்..!” என்று சொல்லி விட்டார் சத்யமூர்த்தி. அவர் அப்படி சொல்லவும் வருண் ஒன்றும் எதிர்த்து பேசவில்லை.
‘அப்படி சொல்லுங்க அங்கிள்..!மிஸ்டர்.காவல்துறை இப்ப வாயே திறக்க மாட்டான்..!’ என்று கருவிக் கொண்டாள் சக்தி.
“இந்த நேரத்துல இவ்வளவு தூரம் நீங்க டிராவல் பண்ணனுமா சாதனா…!” என்று அபூர்வா கேட்க,
“வருண் கட்டிக்கப் போற பொண்ணை நான் பார்க்க வேண்டாமா..? அதான் வந்துட்டேன்..!” என்றால் சாதனா.
“பொண்ணைப் பார்த்தாச்சா..? எல்லாம் ஓகேவா ..?” என்றாள் அபூர்வா.
“எல்லாம் டபுள் ஓகே…! எங்க வருணுக்கு தான் பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு..!” என்றான் முரளி முந்திக் கொண்டு.
இவர்கள் பேசியதைக் கேட்ட சக்திக்கு, கண்கள் கலங்குவதை நிறுத்த முடியவில்லை.
“அண்ணி..! பாப்பா தூங்குறா. நான் போய் தூங்க வச்சிட்டு வந்திடுறேன்..!” என்றபடி சக்தி எழுந்து செல்ல, அவளைப் பார்த்த அனைவருக்கும் பாவமாய் போனது.
“இதுக்கு மேலயும் இப்படியே இருந்த…இன்னைக்கு உனக்கு கண்டிப்பா உருட்டுக் கட்டையால அடி இருக்கு..!” என்றான் கார்த்தி.
“ஒரு நிமிஷம் சக்தி..!” என்றான் வருண். அவள் நின்று அவனைப் பார்க்க,
“அந்த கேஸ் விஷயமா, உன் கிட்ட இருந்து இன்னும் கொஞ்சம் டீட்டைல்ஸ் தேவைப்படுது..!” என்றான் வருண்.
“கேசு கேசுன்னு அந்த பொண்ணை லூசாக்கிட்டு இருக்கான் பாரு உன் தம்பி..!” என்று முரளி குனிந்து கௌசியிடம் சொல்ல, அவனை முறைத்தால் கௌசி.
“குடும்பமே..நல்லா முறைக்க கத்து வச்சிருக்கிங்கடி..!” என்றவன் சிரிக்க,
“நீங்க போய் பேசுங்க தம்பி..!” என்றார் தர்மராஜ்.