அவளுடைய அறையில் அவன்… அவள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. நடப்பது அனைத்தும் அவளுக்கு கனவாய் தெரிய,
“இன்னும் என்ன சார்..?” என்றாள், தன்னைக் கட்டுப் படுத்தியபடி. அவனோ அவளின் பேச்சை எல்லாம் காதில் வாங்காமல் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க,
“சார்ர்ர்..!” என்றால் அழுத்தி.
“என்ன..?” என்றான்.
“என்ன கேட்கணும்..?” என்றாள்.
“இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு..!” என்றான் வருண்.
“இன்னும் என்ன தான் பாக்கியிருக்கு. கேட்டு ஒரேயடியா முடிச்சுடுங்க. சும்மா சும்மா என்னைத் தொந்தரவு பண்ணாதிங்க..!” என்றாள்.
“நான் பேசுறது உனக்கு தொந்தரவா இருக்கா சக்தி..?” என்றான் ஆழ்ந்த குரலில், அவளைப் பார்த்துக் கொண்டே.
‘நீ பேசுறது எனக்குத் தொந்தரவா…?’ என்று எண்ணியவளுக்கு மூச்சை அடைத்தது. அவன் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருக்க,
‘இவன் எதுக்கு இப்ப இப்படிப் பார்த்து வைக்கிறான். இவன் சாதாரணமா பார்த்தாலே என்னால முடியாது. இப்ப ஒரு தினுசா பார்க்குறானே..?’ என்று மனதில் நினைக்க,
“நேத்து நைட், எதுக்காக அழுதுகிட்டே போனை வச்ச..?” என்றான் வருண்.
“நான் எங்க சார் அழுதேன்..? கனவு ஏதும் கண்டிங்களா..?” என்றால் சக்தி.
“இல்லையே..? நீ அழுத மாதிரி இருந்துச்சே..!” என்றான்.
“இல்லவே இல்லை..!” என்றாள்.
“அப்பா சரி..!இன்னைக்குப் பொண்ணு பார்க்க போனதைப் பத்தி நீ ஒன்னும் கேட்கவேயில்ல..!” என்றான்.
“அதான் கீழ கேட்டேனே..? இன்னும் கேட்க என்ன இருக்கு..?” என்றால் விரக்தியாய்.
“ஒன்னுமேயில்லையா..?” என்றான் எரிச்சலுடன்.
“ஒண்ணுமில்லை..!” என்று அவள் சொல்ல, அவன் பட்டென்று திரும்பிப் போனான்.
“ஏதோ கேட்கனும்னு சொன்னிங்க..?” என்றாள்.
“ஒன்னுமேயில்லை..!” என்று அவன் பட்டென்று சொல்லிவிட்டு செல்ல, அதுவரை அவள் அடக்கியது எல்லாம் கண்ணீராய் வெளியே வந்தது.
“எப்பப் பார்த்தாலும் என்னோட உணர்வுகளோட விளையாடுறதே இவனுக்கு வேலையா போய்டுச்சு..!” என்று மனதிற்குள் நினைத்தவளால் அதற்கு மேல் அழுகையை அடக்க முடியவில்லை.
“போலீஸ்காரன் பொண்டாட்டி எல்லாம் தைரியமா இருக்கணும். இப்படி எதுக்கு எடுத்தாலும் அழுது வடிய கூடாது..!” என்ற குரலில் விலுக்கென்று திரும்பினால் சக்தி. அவன் திரும்பி வருவான் என்று அவள் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை.
“அதையேன் என்கிட்டே சொல்றிங்க..?” என்று அவள் சொல்ல,
“உன்கிட்ட தான சொல்ல முடியும்..! நீ தான போலீஸ்காரனுக்கு பொண்டாட்டி ஆகப் போற ” என்றான் வருண் மந்தகாசமான புன்னகையுடன்.
“நான் எங்க..?” என்று ஆரம்பித்தவள், அதை அப்படியே நிறுத்த,
“நீங்க இப்ப என்ன சொன்னிங்க..?” என்றால் சக்தி, மொத்த உயிரையும் கண்ணில் தேக்கி.
“நீ தான் இந்த மிஸ்டர்.காவல்துறைக்கு ஏத்த, மிஸ்சஸ். காவல்துறைன்னு சொல்றேன் மக்கு..!” என்று அவன் சொன்ன வினாடி, அவன் சொன்னதன் அர்த்தம் புரிந்தவளுக்கு, சந்தோஷத்துடன் சிரிப்பும், அழுகையும் மாறி மாறி வர, அப்போதுதான் வருணுக்கும் புரிந்தது அவளின் தவிப்பின் அளவு.
“ஹேய் சக்தி..!” என்று அவன் சொன்ன மறுவினாடி, அவனின் இறுகிய அணைப்பிற்குள் இருந்தாள் சக்தி. சேர வேண்டிய இடம் வந்து சேர்ந்ததைப் போல் உணர்ந்தாள் சக்தி. அது அழுகையாய் மாறி, விடாமல் அழுது கொண்டிருந்தாள்.
“லூசு..!” என்று அவளின் முகத்தை நிமிர்த்தியவன், அவள் முகம் எங்கும் முத்தமிட, அது எதுவும் அவள் கருத்தில் பதியவில்லை. அவனின் அணைப்பு இறுக, இறுக அவளின் அழுகையும் கூடிக் கொண்டே போனது.
“ஏன் இப்படி பண்ணிங்க..?” என்று அவனின் அணைப்பில் இருந்தபடியே அவள் கேட்க,
“எப்படி சீண்டுனாலும், நீதான் அசரவேயில்லையே. அப்பறம் என்ன..? இன்னும் கொஞ்சம் விளையாடி பார்க்கலாம்ன்னு நினைச்சேன். உன்னோட முகம் கலங்குறதை இதுக்கு மேல பார்க்க முடியாது..!” என்றான்.
“ஏன்…?” என்றாள்.
“ஏன்னா..? நீ அழும் போது சத்தியமா தாங்க முடியலை. கண்ணுல இருக்குற மை எல்லாம் அழிஞ்சு, பாரு பார்க்கவே சந்திரமுகி மாதிரி இருக்க..!” என்று அவன் சொல்லி சிரிக்க,
“உங்களை..!!!” என்று நான்கு மொத்து மொத்தி எடுத்தாள்.
“என்னடி இப்படி அடிக்கிற..? உன்னைப் பார்க்க, என் மொத்த குடும்பத்துகிட்டையும் சம்மதம் வாங்கி, இங்க நான் வரப் பட்ட பாடு..!” என்று அவன் இழுக்க,
“நம்பிட்டேன்..! அதான் என்னை இப்படி படுத்தி எடுத்திங்களா..?” என்றாள்.
“பின்ன, சாதனா மொபைலுக்கு போன் பண்ணி, மேடம் என்னை செக் பன்றிங்களா..? அதான் கொஞ்சம் போக்குக் காட்டினேன்..!” என்றான் சிரிப்புடன்.
“எனக்கு உசுரே இல்ல..!” என்று சக்தி, அவள் அப்போதைய மனநிலையை சொல்ல,
“ஐ லவ் யு சக்தி..! நீ அழகா இருக்க அப்படின்னு நினைக்கிறேன். உன்னை எனக்கு பிடிக்குது. ஆனா, எங்க இதெல்லாம் நடந்து, என் வாழ்க்கை பலி ஆகப் போகுதோன்னு நினைக்கும் போது தான், கொஞ்சம் பயமா இருக்கு..!” என்றான் வருண் சிரித்தபடி.
“மனசுல பெரிய மாதவன்னு நினைப்பு..!” என்றவள்,
‘அவனை விட செம்மையா இருக்கார் காவல்துறை..’ என்று மனதிற்குள் கவுண்ட்டர் கொடுக்க,
“நீ என்ன நினைக்கறேன்னு எனக்குப் புரிஞ்சிடுச்சுடி..!” என்றான் வருண்.
“நீங்க பார்க்க வந்த பொண்ணு, உங்களைப் பிடிக்கலைன்னு சொல்லிட்டா .. என்ன பண்ணுவிங்க?” என்று அவள் காலை வார,
“யாரு அவ..? அவ கண்ணுலையே தெரியும் எனக்கான காதல். அவ எப்படி என்னைய வேண்டாம்ன்னு சொல்லுவா..?” என்று காலரைத் தூக்கி விட,
“ரொம்பத்தான்..!” என்றவள், மீண்டும் அவன் நெஞ்சத்தில் தஞ்சம் புக,
நிஜமா, ஐ லவ் யூ சக்தி. கல்யாணம் பண்ணிக்கலாமா..?” என்றான்.
“எப்போ பண்ணிக்கலாம்..?” என்றாள்.
“அதை நாங்க தான் முடிவு பண்ணனும்..!” என்று பின்னால் கோரசான குரல் கேட்க, அவர்களைப் பார்த்து வெட்கப்பட்ட சக்தி, அவனுக்குப் பின்னால் அப்படியே ஒளிய,
“ஏண்டா ஏன்..?” என்று வருண் வெட்கப்பட,
“காதல்ன்னா என்னன்னே தெரியாதுன்னு ஒருத்தன் சொன்னான். அவனைப் பார்த்தியா கார்த்தி..?” என்று முரளி அவனை வார,
“அந்த நல்லவனைத் தான் தேடிட்டு இருக்கேன் அண்ணா..!” என்று கார்த்தியும் தன் பங்கிற்கு வருணை வாரினான்.
“இன்னும் இங்க என்னடா பண்ணிட்டு இருக்கீங்க..? பொண்ணு பார்க்க போக வேண்டாமா..?” என்று மோகனா கீழே இருந்து கத்த,
“ஏங்க, கொஞ்சம் உங்க அம்மாவை போய் அப்டேட் பண்ணுங்க. இன்னும் பழைய வெர்ஷன்லயே இருக்காங்க..!” என்று கௌசல்யா சொல்ல, அனைவரின் சிரிப்பொலியும் அங்கு ஆனந்தமாய் கேட்டது.
அனைவரின் சம்மதத்துடன், ஒரு நன்னாளில் சக்தியின் கழுத்தில் மங்கள நாணைப் பூட்டி, அவளை தன்னில் சரிபாதியாய் ஏற்றுக் கொண்டான் வருண்.
அன்று இரவு அவர்களுக்கான அறையை, கௌசல்யா தயார் செய்து கொண்டிருக்க, சாதனா அதையெல்லாம் பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு சில விஷயங்கள் தாமதமாகத்தான் புரிந்திருந்தது.
“என்ன பெருமூச்சு எல்லாம் பலமா இருக்கு..! இந்த மாதிரி நேரத்துல இப்படி மூச்சு விடக் கூடாது. நீ போய் ரெஸ்ட் எடு சாதனா. நான் பார்த்துக்கறேன்..!” என்று கௌசல்யா அவளை அனுப்பி வைக்க, தன் அறைக்கு திரும்பியவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்தி.
“என்னாச்சு..?” என்றான்.
“ஒண்ணுமில்லை…!” என்றவளுக்கு துக்கம் தொண்டை வரை அடைத்தது. ஏதோ நினைத்தவள்,
“கார்த்தி..!” என்றாள்,
அவன் யோசனையுடன் திரும்ப,
“சாரி..!! எனக்குத் தெரியும், இந்த ஒரு சாரி கேட்கறதால எதுவும் சரியாகாதுன்னு. இருந்தாலும் சாரி..!” என்று அவள் குரல் கமர, கார்த்திக்கு ஒரு மாதிரியாகிப் போனது. என்னதான் அவள் மேல் தவறு இருந்தாலும், ஒரு நிலைக்கு மேல் அவனால் கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியவில்லை. மறந்து மன்னிப்பதால், தான் ஒன்றும் குறைந்து விடப் போவதில்லை என்று அவனுக்குத் தெரிந்திருந்தது. எப்படி இருந்தாலும், அவளுடன் தான் வாழ்க்கை என்றான பிறகு, இனியும் கோபத்தை சுமந்து கொண்டிருப்பது நியாயம் இல்லை என்று தோன்றியது அவனுக்கு.
“புருஷன் பொண்டாட்டிக்குள்ள எதுக்கு சாரி..?” என்று கார்த்தி கேட்க, அந்த ஒற்றை வார்த்தையே அவளை மீட்டெடுத்தது.
“நிஜமா கோபம் இல்லையா கார்த்தி..?” என்றால் சாதனா.
“கோபம் இருந்திருந்தா எப்படி குழந்தை வந்திருக்கும்..?” என்று அவன் கேட்டு சிரிக்க, அவன் தன்னை சமாதானம் செய்ய முயல்வது நன்றாகத் தெரிந்தது சாதனாவிற்கு.
“தேங்க்ஸ் கார்த்தி..!” என்று சாதனா சொல்ல,
“மறுபடியும் முதல்ல இருந்தா..? இதுக்கு வேற வைத்தியம் தான் பார்க்கணும்..!” என்றவன் பட்டென்று கதவை அடைக்க, அந்த நேரம் பார்த்து வந்தான் முரளி.
“எதுக்கு இப்போ இவன் கதவை அடைக்கிறான் கௌசி..?” என்று அவளிடம் கேட்க,
“இப்போ ரொம்ப முக்கியம்..! ஆகுற வேலையைப் பாருங்க..!” என்றால் கௌசி.
‘யாரோட வாழ்க்கை மாறினாலும், உன் வாழ்க்கை மாறாதுடா முரளி. உன் தலை எழுத்தை யாரால மாத்த முடியும். கடவுள் அழிக்க முடியாத பெயிண்ட்ல எழுதிட்டார் போல..’ என்று அவன் வாய் விட்டு புலம்ப,
“என்ன சொன்னிங்க..?” என்று முறைத்தால் அவள்.
“அழகான பொண்டாட்டிய குடுத்த கடவுளுக்கு நன்றின்னு சொல்லிட்டு இருந்தேன் கௌசி..!” என்று முரளி அந்த இடத்தில் இருந்து எஸ்கேப் ஆக, அவன் சென்ற பிறகு சிரித்துக் கொண்டாள்.
வீடே அமைதியாக இருக்க. அங்கே வருண் மட்டும் புலம்பிக் கொண்டிருந்தான்.
“என்னதான் பண்றா..? என்னோட அவசரம் புரியாம..?” என்று வாய் விட்டே புலம்பிக் கொண்டிருந்தான். சரியாக அதே நேரத்திற்கு வந்தாள் சக்தி.
“எம்மா தாயே..! நேரம் போதுமா..? இல்ல, இன்னும் ஏதாவது வேலை பாக்கி இருந்தா போய் முடிச்சுட்டு வா..!” என்றான்.
“அட ஆமாங்க..! இருங்க வந்திடுறேன்..!” என்று அவள் திரும்பி வெளியே போக, அவளைப் பட்டென்று உள்ளே இழுத்து கதவை சாத்தினான் வருண்.
“என்னங்க ஆச்சு உங்களுக்கு..? ஏன் இப்படிப் பண்றிங்க..?” என்றாள்.
“டைம் என்னடி ஆகுது. ஆடி அசஞ்சு வர..?” என்றான் வருண்.
“நீங்க ஆடி அசைஞ்சு தான, லவ்வை சொன்னிங்க. அப்போ எல்லாமே அப்படித்தான் நடக்கும்..!” என்று அவள் சாவகாசமாய் சொல்ல,
“என்ன பழிக்குப் பழியா..?” என்றான் முறைத்துக் கொண்டு.
“பின்ன.. எப்பப் பார்த்தாலும் இப்படியே பண்ணிட்டு இருந்தா என்ன தான் பண்றது. ஒன்னு ஓவர் ஸ்பீட்டா போறீங்க. இல்லைன்னா ஓவர் ஸ்லோவா போறீங்க. என்னை என்ன பாடு படுத்துனிங்க..? அதுக்கெல்லாம் ஏதாவது பண்ண வேண்டாம்..?” என்று சிரிப்புடன் சொல்ல,
“சரித்தாண்டி..! ஒரு முடிவோட தான் வந்திருக்க. நான் தான் அடுத்த வருஷம் ஒரு பிள்ளை, அதுக்கு அடுத்த வருஷம் ஒரு பிள்ளைன்னு தப்புக் கணக்கு போட்டுட்டு இருக்கேன். ஒன்னும் அவசரம் இல்ல, எப்படியும் பத்து வருஷத்துக்குள்ள பிள்ளைப் பெத்துக்கலாம்..!” என்றவன் படுத்துத் தூங்கவே ஆரம்பித்து விட்டான்.
‘சக்தி..! இந்த வாய் தாண்டி உனக்கு. பாரு அவன் தூங்க போறான்..!’ என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டவள்,
“ஏங்க..?” என்றாள். அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை,
“மிஸ்டர்.காவல்துறை.. நீங்க ரொம்ப ஓவராத்தான் போறீங்க..? இதெல்லாம் நல்லா இல்லை..!” என்று சொல்ல, அப்போதும் அவன் வாயைத் திறக்கவில்லை.
“அந்த லெனினை எப்படி என்கவுன்ட்டர் பண்ணிங்க..? நான் நீங்க விளையாட்டுக்கு சொல்றிங்கன்னு நினைச்சேன். ஆனா, நிஜமாவே என்கவுன்ட்டர் தான் பண்ணிட்டிங்க போல, இதெல்லாம் வெளிய தெரிஞ்சா என்ன ஆகும்..?” என்று அவள் கேட்க,
படாரென்று எழுந்தவன்,
“இது இப்ப ரொம்ப முக்கியம்டி.அவன் இந்நேரம் கொடைக்கானல் காட்ல இருக்குற புதை குழில இருப்பாண்டி.எவனாலயும் கண்டு பிடிக்க முடியாது. பொறுக்கிய என்கவுன்ட்டர் பண்ணாம, அவன் கூட பர்ஸ்ட்நைட்டா கொண்டாட முடியும். இதெல்லாம் வக்கனையா கேளு..! எல்லாம் என் நேரம்..!” என்றவன் மீண்டும் தூங்கப் போக,
“ஏங்க..!!”
“சக்தி..! என்னை கொலைகாரனா ஆக்காத..! பேசாம இரு..!” என்றவன், அவளுக்கு முதுகு காட்டி படுத்து விட்டான்.
“மிஸ்டர்.காவல்துறை..!” என்று அவள் தட்டி எழுப்ப,
“உன்னை எல்லாம் பேச விட்டது, என்னோட தப்புத்தாண்டி..!” என்று அவளை இழுத்து அணைத்தவன், அங்கிருந்த விளக்கையும் அணைக்க,
அவளின் செல்லத் சினுங்கல்களோடு, அவளை தாம்பத்யம் என்ற உலகிற்குள் அழைத்துச் சென்றான் அவளின் கணவன். அவர்களின் வாழ்க்கை புதிய பாதையை நோக்கி, பயணத்தை தொடங்கியிருந்தது.
சரியாக ஒரு வருடம் கழித்து,
“வாழ்த்துக்கள் சக்தி..! நீங்க இப்போ ஐம்பது நாள் சிசுவை சுமந்துட்டு இருக்கீங்க..!” என்ற டாக்டர் சொல்ல, சக்தியின் முகமெல்லாம் அப்படி ஒரு சந்தோசம்.
“தேங்க்ஸ் டாக்டர்..!” என்று அவள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த,
“எங்க வருண் அப்பா ஆகிட்டான்..! நான் அத்தை ஆகிட்டேன்..!” என்று உடன் வந்த சாதனா, மகிழ்ச்சியாய் சொல்ல,
“எங்க வருணை காணோம்..? போலீசா இருக்க வேண்டியது தான். ஆனா, இந்த நேரத்துல கூட வரவேண்டாமா..? என்று டாக்டர் கடிந்து கொள்ள,
“அவர் ஒரு முக்கியமான கேஸ் விஷயமா போயிருக்கார் டாக்டர். அதான் வரலை. இல்லன்னா, கண்டிப்பா வந்திருப்பார்..!” என்று சக்தி விட்டுக் குடுக்காமல் பேச,
“உன் புருஷனை நான் ஒண்ணுமே சொல்லலமா..! போதுமா..?” என்று அவர் ஜகா வாங்க, அதே மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். விஷயத்தை கேள்விப்பட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் அளவில்லாத சந்தோஷம்.கௌசி கைக்குழந்தையுடன் இருக்க, சாதனாவின் ஆண் குழந்தைக்கு பத்து மாதம் முடிந்திருந்தது.எல்லாமே மருமகள் வந்த நேரம் என்று அவளை கொண்டாடித் தீர்த்தனர்.
டியூட்டி முடித்து, அதீத களைப்புடன் வீடு திரும்பினான் வருண் கிருஷ்ணா. ஒய்வு என்பதெல்லாம் அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு வேலை. வந்தவன் குளித்து விட்டு சக்தியை தேட, அவள் இவனுக்கு டிபனை சூடு பண்ணிக் கொண்டிருந்தாள்.
“எல்லாரும் தூங்கிட்டாங்களா..?”
“ம்ம்..!” என்றாள். அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
“என்னடி ஆச்சு பொண்டாட்டி. ஏன் ஒரு மாதிரி இருக்க..?” என்று அவளை பின்னால் இருந்து அணைத்து, காதோரம் கவி பாடிக் கொண்டிருந்தான்.
“ஒன்னுமில்லையே..?” என்றாள்.
“இன்னைக்கு வேலை ஜாஸ்தி. நாளைக்கு கண்டிப்பா ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறேன்..! ரெண்டு நாள் லீவ் போட்டிருக்கேன்..!” என்றான். அதுவரை இல்லாத பிரகாசம், இப்போது சக்தியின் முகத்தில் சட்டென்று ஒட்டிக் கொள்ள,
“நிஜமாவா..?” என்றாள்.
“நிஜமா..!” என்று அவள் தலையோடு முட்ட,
“சாப்பிட வாங்க..!” என்று அவனுக்கு பரிமாறி முடிக்கும் வரை அவள் ஒன்றும் சொல்லவில்லை.
“ஏன் ஒரு மாதிரி இருக்க..?” என்றான்.
“நல்லாத்தான் இருக்கேன். கொஞ்சம் டயர்டா இருக்கு. எல்லாம் உங்களால தான்..!” என்று அவனை ஓரக் கண்ணால் பார்க்க,
“நான் என்னடி பண்ணேன்..?” என்று பாவமாய் முகத்தை வைக்க,
“பாவம்..! ஒண்ணுமே தெரியாத மாதிரி இருந்துட்டு, நீங்க இப்படி பண்ணுவிங்கன்னு நான் நினச்சு கூட பார்க்கலை..!”
“அப்படியா..? என்ன பண்ணேன்..?” என்று அவன் யோசிக்க,
“ரொம்ப நடிக்காதிங்க..! பச்சப் பிள்ளைய குடுக்கத் தெரிஞ்ச உங்களுக்கு, நடிக்கவா தெரியாது..?” என்றாள் சக்தி.
“என்ன பச்சப் பிள்ளை..!” என்று ஏதோ சொல்ல வந்தவன் அப்படியே நிறுத்த,
“ஹே நிஜமாவா சக்தி..?” என்றான்.
“ஆமா..!”
“இதை ஏண்டி வந்த உடனே சொல்லலை..?” என்று அவன், அவளை முறைக்க,
“நீங்க என்னை என்ன பாடு படுத்துனிங்க, கல்யாணத்துக்கு முன்னாடி. அதான்..!”
“அடிப்பாவி..! இன்னும் எத்தனை வருஷத்துக்கு அதையே சொல்லிட்டு இருப்ப..? உன்னை..!” என்று அவளை இழுக்கப் போக, அவனின் கைகளுக்குள் அகப்படாமல் ஓடப் பார்த்தாள் சக்தி.
“சக்தி இந்த நேரத்துல ஓடாத..!” என்று சொல்லவும் அவள் அப்படியே நிற்க, அவளை அப்படியே அல்லாக்காக தூக்கிக் கொண்டான் வருண்.
“என்ன பண்றிங்க…? விடுங்க..! நான் நடந்து வரேன்..!” என்று சக்தி கூச்சபட,
“சும்மா இருடி..!” என்று அவளைத் தூக்கிக் கொண்டு சென்றான். எதேச்சையாக கதவைத் திறந்து வந்த முரளியின் கண்களில் இந்த காட்சி பட,
“மாப்பிள்ளை..! என்னால முடியலைடா..! விட்ருங்கடா..” என்று அழாத குறையாக சொல்ல,
“கௌசி, மாமா என்னமோ சொல்றார் பார்..!” என்றான் வருண்.
“ஆளை விடுங்கடா சாமி..!” என்ற முரளி அங்கிருந்து செல்ல,
“ஏங்க இப்படிப் பண்றிங்க..?” என்று சக்தி சிணுங்க, அவளை அறையில் வந்து தான் இறக்கி விட்டான் வருண்.
“ரொம்ப தேங்க்ஸ்டி…! நானும் அப்பா ஆகப் போறேன்..!” என்று வருண் நெகிழ்ந்து சொல்ல, அவனின் தோளில் சாய்ந்து கொண்டாள் சக்தி.
“எனக்கு வாழ்க்கையில இப்படி எல்லாம் நடக்கும்ன்னு நான் நிஜமா எதிர்பார்க்கவே இல்லைங்க. எல்லாம் உங்களால தான். லவ் யு வருண்..!” என்றாள் முதன் முறையாக.
“அடிப்பாவி..! இதை இப்பத்தான் சொல்லனும்ன்னு தோணுச்சா..?” என்ற வருண் சிரிக்க,
“சிரிக்காதிங்க மிஸ்டர்.காவல்துறை.. எங்க சொல்ல விட்டிங்க..? எப்ப பாரு முறைச்சு முறைச்சு பார்த்துகிட்டு.அதான் சொல்ல முடியலை. இப்ப எனக்கு எந்த பயமும் இல்லை. ஒரு தடவை என்ன..? நூறு தடவை சொல்லுவேன்..!” என்று சக்தி பேசிக் கொண்டிருக்க, வருண் எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்னாச்சு..?” என்று அவள் கேட்டது தான் மாயம், அவளின் இதழ்கள் அவனுக்குள் அடங்கியிருக்க, அவளும் அவனுள் பாந்தமாய் அடங்கிப் போனாள்.அவனே அவளுக்கு…காத(வ)லனாக மாறிப் போனான்.
இனி வரும் காலங்கள் இருவருக்கும் இனிய காலங்களாய்…அவர்களுடைய வாழ்க்கைப் பயணம், இதே போல் தொடர்ந்து கொண்டிருக்க, நாமும் விடை பெறுவோம்.
நன்றி.