காவல் 9:
கார்த்திக் பேசி முடிப்பதற்கும், வருண் அவனை முறைப்பதற்கும் சரியாக இருந்தது. ஆனால் கார்த்தியோ அதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சாவகாசமாக சாதானாவிடம் பேசிவிட்டு வைத்தான்.
“என்ன? வீம்புக்கு என் முன்னாடி பேசுறியா..? அப்படியே நீ பேசுறதைக் கேட்டு நான் மனசு மாறிடுவேன்னு நினைக்கிறியா..?” என்றான் வருண்.
“அதுக்கு எந்த அவசியமும் இல்லை..!” என்ற கார்த்தி, தன் கையில் இருந்த ஆதாரங்களை வருணிடம் கொடுத்தான். அதை வாங்கிப் பார்த்த வருணுக்கு குற்றவாளி யார் என்பது தெள்ளத் தெளிவாக விளங்கியது.
“இப்ப உங்க கூட வந்த பொண்ணு யார்ன்னு தெரிஞ்சுக்கலாமா..?” என்றான் கார்த்திக்.
“ஒரு கேஸில் சம்பந்தப்பட்ட பொண்ணு..!” என்றான்.
“இந்த கேஸ்லயா..?” என்றான்.
“இல்லை இது வேற கேஸ், அது வேற கேஸ்..!” என்றான் வருண் தெளிவாக.
“ஆனா, இறந்தவரை அண்ணன்னு சொல்லுச்சே…!” என்றான் கார்த்தி.
“நான் தான் தெளிவா சொல்றேனே… இது வேற கேஸ். அவ சம்பந்தப்பட்டிருக்குறது வேற கேஸ்..” என்றான் வருண் உறுதியாக.
“ஓகே..! வெறும் விசாரணைக்கு மட்டும் தான் கூட வச்சிருக்கியா..? இல்லை..!” என்று கார்த்தி அவனை யோசனையாக பார்க்க,
“நான் உங்களுக்கு இங்க ஆபீசர்..! அந்த நியாபகம் எப்பவும் இருக்கணும். எதுக்கு கூட வச்சிருக்கேன்னு எனக்குத் தெரிஞ்சா போதும். எல்லாருக்கும் விளக்கம் குடுக்கனும்ன்ற அவசியம் எனக்கு இல்லை..” என்றான் வருண் பட்டென்று.
“காதலிக்கிறதும், கல்யாணம் பண்ணிக்கிறதும் என்னோட தனிப்பட்ட விஷயம். நானும் யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை..” என்றான் கார்த்தியும் பட்டென்று.
“நான் தான் விளக்கம் கேட்கவே இல்லையே..?” என்றான் வருணும் விடாமல்.
எப்படிப் பேசினாலும் வழிக்கு வராத வருணை நினைத்து, கார்த்திக்கு கொஞ்சம் வருத்தமாகக் கூட இருந்தது. மனைவியின் வேண்டுகோள் வேறு அவனை பாடாய் படுத்தியது. அது வருணை அவன் சமாதனம் செய்ய வேண்டும் என்பதே. ஆனால் வருண் பேசும் பேச்சைப் பார்த்தால், அவன் சமாதனம் ஆவது மிகச் சிரமமாய் தெரிந்தது.
“ஓகே..! அக்யூஸ்ட் இவங்க தான்னு கன்பார்ம் பண்ணியாச்சு. அடுத்து அரெஸ்ட் பண்றதுக்கான ஸ்டெப்ஸ் எடுங்க. இன்னும் ஒருநாள் தான் உங்களுக்கு டைம்..!” என்றான் வருண்.
“ஓகே சார்..!” என்று சல்யூட் ஒன்றை வைத்து விட்டு கிளம்பினான் கார்த்திக்.
அங்கே தேவனும் வருணைப் பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தான். இத்தனை நாட்களில் ஒருமுறை கூட அவன் அவனை நேரில் சந்தித்ததில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் அவனுக்கு பலமான எதிரியாக மாறிக் கொண்டிருந்தான் வருண். அவனை முடிக்க வேண்டும் என்று எப்படி பிளான் போட்டாலும், அதை வருண் முறியடித்திருந்தான். முகம் அறியாத இவனைத் தான் வருணும் பல நாட்களாக தேடிக் கொண்டிருக்கிறான்.
“என்னண்ணா ஒரே யோசனையில் இருக்கீங்க..?” என்றான் லெனின்.
“இந்த வருணை நினைச்சு தாண்டா…! இவனை என்ன பண்ணுனா அடங்குவான்னு யோசிச்சுட்டு இருக்கேன்..!” என்றான் தேவன்.
“அவன் கைல இருக்குற ஐபிஎஸ் பதவியை பிடுங்கினாதான் அண்ணா அடங்குவான் அவன்..!” என்றான் லெனின் கோபமாக.
“அது அவ்வளவு லேசான காரியம் இல்லை. அதனாலத்தான் இங்க இருந்து அனுப்பிடலாம்ன்னு அவனுக்காக நான் டிரான்ஸ்பர் வாங்கிக் கொடுத்தேன். ஆனா, இன்னும் கிளம்ப மாட்டேங்குறான். சரி பேசாம இருக்கானான்னு பார்த்தா அதுவும் இல்லை. ஒரே குடைச்சல். அவன் என்னை நெருங்குறதுக்கு முன்னாடி அவன் கதையை முடிச்சுடலாம்ன்னு பார்த்தா அங்கயும் கோட்டை விட்டுட்டு வந்து நிக்குறாணுக. இப்ப அந்த சக்தி வேற அவன் கையில இருக்கா. அவ மட்டும் ஏதாவது வாயைத் திறந்து சொன்னா… அவ்வளவு தான். இதுக்கு ஒரு வழி பண்ணியே ஆகணும். முதல்ல அவளை அவன் கஸ்ட்டடியில் இருந்து நம்ம இடத்துக்கு கொண்டு வரணும்..!” என்றான் தேவன் தீவிரமாய்.
“அங்க தாண்ணா சிக்கல் ஆரம்பிக்குது. அந்த ஜிபிஎஸ் டிராக்கர் வேற வேலை செய்யலை. அவன் கெஸ் பண்ணிட்டானா..? இல்லை வேற பிரச்சனையான்னு வேற தெரியலை..?” என்றான் லெனின்.
“வாட்..! ஜிபிஎஸ் டிராக்கர் வேலை செய்யலையா..? இதை ஏன் என்கிட்டே முன்னாடியே சொல்லலை..!” என்று ஆத்திரத்தில் கத்தத் தொடங்கினான் தேவன்.
“சாரிண்ணா..! சொல்லனும்ன்னு நினைச்சுட்டு இருந்தேன். மறந்துட்டேன்..!” என்றான் லெனின்.
“நாம நினைக்குற மாதிரி அவன் அவ்வளவு சுலபத்தில் ஏமாற மாட்டான். என்னோட கணிப்பு சரின்னா வருண் தான் அதைக் கண்டுபிடிச்சிருக்கனும்..!” என்றான் தேவன்.
“அந்த சக்தி பொண்ணு கூட சொல்லியிருக்கலாம் அண்ணா..!” என்றான் லெனின்.
“முட்டாள் மாதிரி பேசாத லெனின்..! அவளுக்கே அது தெரியாது. அப்பறம் எப்படி அவ சொல்லியிருக்க முடியும். அவனாதான் கண்டு பிடுச்சிருப்பான்..!” என்றான் தேவன் தெளிவாக.
“இப்ப என்ன தாண்ணா பண்றது..?”
“இப்ப செய்ய வேண்டிய ஒரே விஷயம்…. அந்த சக்தியை அவன்கிட்ட இருந்து தூக்குறது தான்…! இவ கதையையும் அன்னைக்கே முடிச்சிருந்தா இப்போ இவ்வளவு பிரச்சனை இல்லை..!” என்றான் தேவன்.
“ஆனா, அந்த ஆதாரம் எல்லாம் எங்க வச்சிருக்கான்னு தெரியலையே அண்ணா…!” என்றான் லெனின்.
“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்..! இப்போதைக்கு அவ கதையை முடிச்சாதான் நாம நிம்மதியா இருக்க முடியும். முழு ஆதாரமா அவளே போய் அவன் கைல சிக்கியிருக்கா… இது அவனுக்குத் தெரியறதுக்கு முன்னாடி நாம முந்திக்கனும்…!” என்றான் தேவன்.
“நீங்க என்ன சொல்றிங்களோ…அப்படியே செஞ்சு முடிச்சுடலாம்..!” என்ற லெனினின் கண்களிலும் தீவிரம் குடி கொண்டிருந்தது.
அங்கு வருண் தன்னுடைய வீட்டிற்குள் நுழையும் போது பார்த்தது, ஹாலில் சோகமே உருவாய் அமர்ந்திருந்த சக்தியைத் தான். அவன் வந்தது கூடத் தெரியாமல் அவள் உலகம் மறந்து யோசனையில் இருந்தாள்.
“ம்ம்க்கும்..!” என்றான் வருண். அவனின் செருமலில் நிஜத்திற்கு வந்தவள்,
“சார் எங்க வீட்ல இருந்து எல்லாரும் வந்துட்டாங்களா சார்..!” என்றாள் வேகமாய்.
“இன்னும் இல்லை. வந்தாலும் பாடியை வாங்கிட்டு கிளம்பிடுவாங்க..!” என்ற வருண் அவளைப் பார்த்து,
“ஏன்..? நீயும் அவங்க கூட போறியா..?” என்றான்.
“ஆமா சார்..!” என்று சொல்ல வாயெடுத்தவள், சட்டென்று அந்த யோசனையை கைவிட்டாள்.
“என்ன..? ஏதோ சொல்ல வந்துட்டு அமைதியாகிட்ட..?” என்றான்.
“ஒண்ணுமில்லை சார். நான் அவங்க கூட போகலை..! நான் இங்க இருக்குற விஷயத்தையும் நீங்களும் அவங்க கிட்ட சொல்ல வேண்டாம்..!” என்றாள்.
“அதுதான் ஏன்..?” என்றான் வருண் கூர்மையான பார்வையுடன்.
“ஏன்னா..? என்னோட பெரியம்மாவுக்கு என்னைக் கண்டாலே ஆகாது. அவங்க கண் முன்னாடி போய், எதுக்காக அவங்க நிம்மைதியைக் கெடுக்கணும். ஏற்கனவே அவங்க இப்போ அண்ணா இறந்த துக்கத்தில் இருப்பாங்க..!” என்றாள்.
“மத்தவங்ககிட்டயாவது சொல்லலாமே..?” என்றான்.
“அதை விடுங்க சார்..! எங்க அண்ணாவை இந்த நிலமைக்கு ஆளாக்கினது யாருன்னு தெரிஞ்சிடுச்சா சார்…?” என்றாள் வேகமாக.
“குற்றவாளி யார்ன்னு கண்டுபிடிச்சாச்சு…! அரெஸ்ட் பண்ற வேலை மட்டும் தான் பாக்கி..!” என்றான்.
“யார் சார் அது..? எனக்குக் காட்டுங்க சார்..! ஒரு ஈ எறும்புக்கு கூட எங்க அண்ணன் துரோகம் நினைச்சதில்லை. அவனைக் கொள்ள எப்படி மனசு வந்தது சார்..?” என்றவளுக்கு கண்கள் கலங்க,
“மனுஷங்க சில நேரத்துல அவங்க சொந்த புத்தியை அடகு வைக்கிறதால வர வினைதான்… இப்படி எல்லாம் நடக்கக் காரணம்…” என்றான் வருண்.
“அந்த கொலைகாரன் யார் சார்..?” என்றாள் சக்தி விடாமல்.
“கொலைகாரன் இல்லை கொலைகாரி..!” என்றான் வருண்.
“என்ன சார் சொல்றிங்க..? ஒரு பொண்ணா..? பொண்ணா இருந்துட்டு எப்படி கொலை பண்ற அளவுக்கு..?” என்று அதிர்ந்தாள் சக்தி.
“ஏன் நீ இல்லை..? நீயும் ஒரு பொண்ணு தான். நீ என்னைக் கொலை செய்ய வரலை..?” என்றான் வேண்டும் என்றே.
“சார்..! பிளீஸ்..! நான் சொல்றதை தயவு செஞ்சு நம்புங்க. நான் உங்களை கொலை செய்ய வரலை. அது தான் உண்மை. நீங்க நம்பித்தான் ஆகணும்.” என்றாள் சக்தி.
“அடுத்த டிராமாவா..?” என்றான் வருண்.
“இது டிராமா எல்லாம் இல்லை சார். உங்களை கொலை செய்ய வந்திருந்தா, இந்த நேரத்துக்கு கொலை பண்ணியிருக்கணும். நான் தான் பண்ணலையே..?” என்றாள்.
“அதைத் தான் நானும் கேட்கிறேன். வந்த வேலையை ஏன் செய்யலை..?”
“ஏன்னா, நான் தான் கொலை பண்ணவே வரலையே..?” என்றாள் கோபமாக.
“இல்ல..! நீ கொலை பண்ணத்தான் வந்த..”
“இல்லை..நான் வரலை..!”
“இல்ல அதுக்குத் தான் வந்த..!”
“இல்லை..!” என்றாள் கத்தியபடி.
“ஆமா..! ஆமா..! நீ என்னை கொலை செய்யத்தான் வந்த…வந்த.. வந்த..” என்றான் அவனும் குரலை உயர்த்தி.
“இல்லை…இல்லை..இல்லை. நான் அவங்க கிட்ட இருந்து தப்பிச்சு தான் வந்தேன். உங்களை கொலை செய்ய வரலை..!” என்றாள் பேச்சு வாக்கில்.
சட்டென்று அமைதி நிலவியது அந்த இடத்தில். வருணின் முகத்தைப் பார்த்த சக்தி, தான் உளறிவிட்டதை நினைத்தாள்.
“அது வந்து சார்..!” என்று அவள் இழுக்க,
“சோ..! நீ என்னை கொலை செய்ய வரலை. அது தான் எனக்கும் தெரியுமே..?” என்றான் வருண்.
“தெரியுமா..?” என்றாள் அதிர்ச்சியாக.
“ம்ம்..! அதான் இப்ப நீயே சொன்னியே..?” என்று வருண் சொல்ல, சக்திக்கு கோபமாக வந்தது. தன் வாயாலேயே அனைத்தையும் அவன் கறந்து கொண்டிருக்கிறான் என்று கொஞ்சம் லேட்டாகத்தான் உணர்ந்தாள் சக்தி.
“சரி விஷயத்துக்கு வருவோம். எதுக்காக தப்பிச்ச..? யார்கிட்ட இருந்து தப்பிச்ச…? என்ன பிரச்சனை..?” என்றான் வருண்.
“முதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க வருண் சார். எங்க அண்ணாவை கொலை பண்ணின அந்த பொம்பளை யாரு..?” என்றாள் அழுகையுடன்.
“சொன்னா நீ நம்ப மாட்ட..!” என்றான் வருண்.
“நீங்க முதல்ல சொல்லுங்க. நம்புறதா இல்லையான்னு அப்பறம் யோசிக்கிறேன்..!” என்றாள்.
“அப்படிங்கிற..? சரி ஒவ்வொரு பிரச்சனையா முடிப்போம்..!” என்று பெருமூச்சு விட்டவன்,
“உங்க அண்ணனை கொலை செஞ்சது உங்க அண்ணி தான்..!” என்றான் அமைதியாக.
“என்னது..? எங்க அண்ணியா…?” என்று ஏகத்திற்கும் அதிர்ந்தவளுக்கு, மயக்கம் வருவதைப் போலிருந்தது. ஒரு நிலையில் தலை சுத்தி கீழே விழப் போக,
“ஹேய் சக்தி..!” என்று அவளைப் பிடித்த வருண், தன் நெஞ்சத்தில் சாய்த்துக் கொண்டான்.
“சக்தி..சக்தி..!” என்றவன் கொஞ்சம் தண்ணீரை எடுத்துத் தெளிக்க, சில நிமிடங்களில் கண் திறந்தாள்.