“வாழ்நாளில் நினைக்காத புது நாளிது
தானாக கலையாத கலை தான் இது…
தேனோடு திணையாக இணையானது
மார்போடு மானாக துணையானது…
எண்ணம் தான் துள்ளுது…என்னமோ சொல்லுது
கண்ணம்மா..வண்ணம்மா இன்பமா பொங்கி வரும்…!”
அந்த இரவு நேர மின்னொளியில் இசைஞானியின் இசையில் உருவான பாடல் வரிகள் செவிகளுக்கு விருந்தாக, அந்த ஏகாந்தம் வருணின் மனநிலையை ரம்யமாக்கியிருந்தது. திண்டுக்கல்லை நெருங்கிக் கொண்டிருந்தான் வருண். சக்தியோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
“என்ன இவ இன்னும் இப்படி தூங்குறா..?” என்று எண்ணியவன், அவளை எழுப்பும் பொருட்டு, அவளைப் பார்க்க…. பார்த்தவனுக்கு எழுப்ப மனம் வரவில்லை. அப்படி ஒரு உறக்கம் அவளுக்கு. அந்த இரவின் ஒளியில்.. காரில் நிலவிய மிதமான வெளிச்சத்தில், ஓவியத்தின் வரிவடிவாய் தெரிந்த அவளை சற்று நேரம் பார்த்துக் கொண்டே இருந்தான்.
“யப்பா சாமி..! இன்னும் கொஞ்ச நேரம் பார்த்தா நம்ம டோட்டல் காலி போலவே..” என்று தனக்குள் பேசிக் கொண்டவன், அவளை விடுத்து, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தான்.
சிக்கல் சாதாரண சிக்கலாகத் தெரியவில்லை. அதற்கான நுனி எங்கு இருக்கிறது என்றும் அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் அவனுக்குத் தெரிந்த, தகவல் வந்த வகையில் அவனிடம் இருக்கும் ஒரே துருப்புச் சீட்டு சக்தி பிரியதர்ஷினி மட்டுமே. அவள் தன்னுடன் இருந்தால் மட்டுமே நினைத்த வேலையை செய்து முடிக்க முடியும் என்று எண்ணினான்.
ஆனால் அவளை என்ன சொல்லி அவனுடன் இருக்க வைப்பது என்று தெரியவில்லை. அதேசமயம் தன்னுடன் தனியாக வைத்துக் கொள்வது அவ்வளவு உசிதமில்லை என்பதையும் சேர்த்தே யோசித்தான் வருண். எப்படி இருந்தாலும் இனி சக்தி வருணின் பார்வையில் தான் இருந்தாக வேண்டும்.
இதை ஊரில் அவனுடைய வீட்டில் சொல்லி விட்டுத்தான் வந்திருந்தான். சத்யமூர்த்தி காவல்துறையில் பணியாற்றியவர் என்பதால், வருண் சொல்வதை உடனே ஏற்றுக் கொண்டார். ஆனால், நித்யாவிற்கு தான் யோசனையாக இருந்தது. அதையும் ‘அவனுக்குத் தெரியும்’ என்று முடித்திருந்தார் சத்யமூர்த்தி.
“இல்லைங்க..! வருண் கல்யாணம் ஆகாத பையன். அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு. இப்போதான் வரன் வேற பார்த்திருக்கோம். நாளைக்கு இதுனால அவனோட கல்யாணத்துல எந்த சிக்கலும் வந்துடக் கூடாதுங்கிறது தான் என்னோட பயம்..!” என்று நித்யா தன்மனதில் உள்ளதை கணவரிடம் தெளிவாக சொல்லி இருந்தார்.
இதைப் பற்றி தெரியாத வருண், தன்னையறிமால் கொஞ்சம் வசம் இழக்கத் தொடங்கியிருந்தான். அவன் பார்க்கும் வேலை அதற்கு மேல் அவனை செல்ல விடவில்லை.
இரண்டு மணியைப் போல, தன்னுடைய குவார்ட்ரசை அடைந்தான் வருண். அதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் தான், அவளைத் தன் தோளில் இருந்து சீட்டிற்கு இடம் மாற்றியிருந்தான்.
“சக்தி..! சக்தி..!” என்று அவளைப் பற்றி உழுக்க,
“ஞான்…! நான் இல்லை..நான் இல்லை..!” என்று அரண்டபடி விழித்த சக்தி, தன் முகத்திற்கு அருகில் இருந்த வருணின் முகத்தைப் பார்த்து திகைத்தாள். சட்டென்று அனைத்தும் நியாபகத்திற்கு வர, ஒரு நிம்மதிப் பெருமூச்சு அவளுக்கு. அவளின் ஒவ்வொரு செய்கையையும் தனக்குள் உள்வாங்கிக் கொண்டிருந்தான் வருண்.
“சாரி சார்…! நான் வேற யாரோன்னு நினைச்சு கத்திட்டேன்..!” என்றாள் தூக்கக் கலக்கத்தில்.
“இட்ஸ் ஓகே..! இறங்கு வீடு வந்திருச்சு..!” என்றான். அப்போதுதான் சுற்றுப் புறம் கவனித்தாள்.
“என்ன சார்..? அதுக்குள்ளவா வந்துட்டோம்..?” என்றாள் சந்தேகத்துடன்.
“நல்லா கேட்ட போ..! மிட்நைட் ரெண்டு மணி ஆகிடுச்சு. நீ தூங்கிட்ட. ஆனா நான் தூங்கலை. சோ இப்ப நீ இறங்கினா தான் உள்ள போக முடியும்..!” என்றான்.
“சாரி சார்..!” என்றவள் சற்றுத் தயக்கத்துடன் இறங்க, அந்த இரவு நேர இருட்டே, அவளுக்கு அதீத பயத்தைக் கொடுத்தது.
“என்னாச்சு..?” என்றான், வண்டியை நிறுத்தி விட்டு வந்தவன்.
“எனக்கு இருட்டுன்னா பயம் சார்..!” என்றாள்.
“உனக்குன்னு இல்லை, பொதுவா இருட்டுன்னா எல்லாருக்கும் பயம் இருக்கத்தான் செய்யும். சிலர் வெளிய காட்டிக்குவாங்க. சிலர் காட்ட மாட்டாங்க. அவ்வளவு தான்…!” என்று பேசிக் கொண்டே கதவைத் திறந்தான் வருண்.
“என்ன சார்..? வீடு இவ்வளவு பெரிசா இருக்கு…?” என்றாள் வீட்டைப் பார்த்துக் கொண்டே.
“பதவிக்குத் தகுந்து வீடு மாறுபடும்..!” என்றவன்,
“உன்னை என்ன வீடு பார்க்கவா கூட்டிட்டு வந்திருக்கேன்..?” என்றான் நக்கலாய்.
“சும்மாதான் சார் கேட்டேன்..!” என்றபடி உள்ளே சென்றாள். ஆனால் பயம், மனம் முழுவதும் பயம். அவனை நம்பலாம் என்று ஒரு மனம் சொன்னாலும், அவளுடைய வயசு ஒரு புறம் எச்சரிக்கை செய்து கொண்டே இருந்தது.
“இந்த டைம்ல சாப்பிட ஒன்னும் இருக்காது..! அங்க பழங்கள் இருக்கு. பசிச்சா சாப்பிடு..!” என்றான்.
“சார் நீங்க..!” என்றாள்.
“செம்ம டயர்ட்..! நான் தூங்கப் போறேன். கதவை லாக் பண்ணிட்டேன்..! நீ அந்த ரூம்ல தூங்கிக்கோ..! நீயும் கதவை லாக் பண்ணிக்கோ..! எந்த பயமும் இல்லை. பயப்படாம தூங்கு. குட்நைட்..!” என்றபடி அவன் ஒரு அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான்.
அவன் இப்படி படக்கென்று செல்வான் என்று எதிர்பார்க்காத சக்தி, அப்படியே நின்றாள். அந்த நடுஜாம இரவு நேர வண்டுகளின் ரீங்காரம் வீட்டைச் சுத்தி கேட்க, அவளுக்கு பயத்தில் கால்கள் வெடவெடத்து. வருண் அருகில் இருந்த போது மனதிற்குள் அவனை நினைத்து பயம் கொண்டவள், இப்போது மொத்தமாக பயந்தாள்.
அவன் சொன்ன அறைக்குள் சென்று தன் ஹேண்ட் பேக்கை வைத்தவள், அறையைப் பார்க்க, அது வெகு சுத்தமாக இருந்தது. இரண்டு பேர் அந்த அறையில் தாராளமாக தங்கலாம்.. ஜன்னல்கள் அடைக்கப்பட்டு, திரைசீலைகள் போடப்பட்டு இருந்தது.
மெதுவாக அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தவளுக்கு, ஆயாசமாய் வந்தது. சில நினைவுகள் வந்து தொல்லை கொடுக்க, அவளுக்கு உடல் அப்பட்டமாய் நடுங்கியது. தன்னை நிலைப்படுத்திக் கொள்ள, சுற்றும் முற்றும் பார்த்தாள்.
அங்கிருந்த டேபிளில் வருண் குடும்பத்துடன் இருக்கும் போட்டோ ஒன்று இருந்தது.
“அவனோட அம்மா,அப்பா வந்தா இந்த ரூம்ல தங்குவாங்க போல..!” என்று எண்ணிக் கொண்டவள், வருணின் புகைப் படத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“எவ்வளவு நல்லவன்..? நேத்து இருந்து ஒரு தப்பான பார்வை கூட இல்லை. எனக்கு உதவி செய்யணும்ன்னு அவனுக்கு என்ன தலைஎழுத்தா..? ஒரு இடத்துல கூட முகம் சுளிக்கவே இல்லையே..? மனசுல எந்த தப்பான எண்ணமும் இல்லாம இருக்கப் போய்த்தான், தைரியமா அவன் வீட்டுக்கே கூட்டிட்டுப் போனான்..!” என்று வருணைப் பற்றிய சிந்தனையில் இருந்தாள் சக்தி. அவளிடம் இருந்த பயம் கொஞ்சம் காணாமல் போயிருந்தது.
ஏனோ அவனையேப் பார்த்து கொண்டிருந்தவளுக்கு அவளையும் மீறி அவளின் மனதிற்குள் சென்று நாற்காலி போட்டே அமர்ந்து விட்டான் வருண். ஆனால் அதை வெளியில் சொல்லும் நிலையிலோ, காதல் செய்யும் நிலையிலோ அவள் இல்லை.
“காதல் ஒரு அற்புதமான உணர்வு. எப்போது, யார் மீது, எப்படி வரும்? என்று சொல்ல முடியாது..” இப்படி சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய். காதல் ஒரு அற்புதமான உணர்வுதான். அதே சமயம் கொஞ்சம் சுயநலமான உணர்வும் கூட. அதனால் எத்தனையோ குடும்பங்களில் இன்று நிம்மதியில்லாமல் தவிக்கின்றனர். அனைவரும் ஏற்றுக் கொண்டு கொண்டாடும் காதலைப் பெற்றவர்கள் வரம் பெற்றவர்கள். அனைவரும் நிராகரித்து, காதலை அடைந்து, பிறகு திண்டாடுபவர்கள் சாபம் பெற்றவர்கள். அதை ஷிவானியின் விஷயத்தில் நன்கு உணர்ந்து கொண்டாள் சக்தி.
இதுவரை இப்படிப்பட்ட காதல் உணர்வுகளுக்கு எல்லாம் அவள் இடம் கொடுத்தது கிடையாது. ஆனால் இன்று ஆபத்தில் உதவிய வருணின் மீது அவளுக்கு இருக்கும் உணர்விற்கு பெயர் காதலா? நன்றி உணர்ச்சியா..? இல்லை பாதுகாப்பு உணர்வா..? காவல் அளித்தவனிடம் காதல் கொண்டாளா..? என்று அவளுக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால் விடிந்தால் எந்த ஆபத்தில் சிக்குவோம் என்ற நிலையில் இருக்கும் அவளுக்கு காதல் அதிகப்படியான உணர்வு தான்.
சிந்தனையின் பிடியில் இருந்தவளுக்கு தூக்கம் அறவே வரவில்லை. நேரம் அதிகாலை மூன்று மணியைத் தாண்டியிருக்க…கொஞ்சம் அசதியில் படுத்துவிட்டாள். காரில் உட்கார்ந்து வந்தவளுக்கு, காலை நீட்டிப் படுப்பது கொஞ்சம் சௌகர்யமாக இருந்தது.
அதே நேரத்தில் வருண் அங்கே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். இரண்டு நாட்கள் இடைவிடாத அலைச்சலால் படுத்தவுடன் உறங்கிவிட்டான். யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்க, உறங்கிக் கொண்டிருந்தவனின் மூன்றாவது கண் விழித்துக் கொண்டது.
கதவைத் தட்டும் சத்தத்தில் மிரண்டு எழுந்தாள் சக்தி. பயத்தில் அவளுக்கு வியர்த்து வழிய, அறையைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். மெயின் கதவை இன்னமும் யாரோ தட்டிக் கொண்டிருக்க,
“திறக்கலாமா..? வேண்டாமா..?” என்று யோசித்துக் கொண்டிருந்தாள் சக்தி.
“இது போலீஸ்காரன் வீடு. முன் வாசல் வழியா வர, தப்பானவனுக்கு தோணாது. வருண் சார்க்கு வேண்டப்பட்டவங்களா இருக்குமோ..?” என்று யோசித்தவள், கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கதவின் அருகில் சென்றாள்.
கதவின் அருகில் சென்றவள், மீண்டும் யோசிக்க….பிறகு மெதுவாக கதவைத் திறக்கப் போனாள்.
அவள் கதவைத் திறப்பதற்கும்….வெளியே இருந்தவன் நீட்டிய கத்தி உள்ளே வருவதற்கும், அந்த கத்தி சக்தியின் வயிற்றுப் பகுதியை பதம் பார்க்கப் போகும் அந்த நூலிழை வித்தியாசத்தில் அதைப் பிடித்திருந்தான் வருண். எங்கிருந்து தான் அவ்வளவு வேகத்தில் வந்திருந்தானோ தெரியவில்லை. ஆனால் சில நிமிட வித்தியாசத்தில் உயிர் தப்பியிருந்தால் சக்தி.
வந்தவன் அதிர்ச்சியில் அப்படியே அந்த கத்தியை விட்டுவிட்டு ஓட, அவனைத் துரத்திக் கொண்டு சென்றான் வருண். சுற்றி இருந்த இருட்டு அவன் தப்பித்து செல்ல உதவ, அவனைத் துரத்திக் கொண்டு வந்த வருணின் கைகளில் அகப்படாமல், மெயின் ரோட்டினை அடைந்தவன், அங்கிருந்த காரில் உடனே தப்பிச்சென்றான்.
அவனைப் பிடிக்க, கைக்கெட்டும் தூரத்தில் சென்றும் பிடிக்க முடியாமல் போக, வருணுக்கு ஆத்திரம் தலைக்கேறியது. உடல் அசதி, தூக்கக் கலக்கம், பக்கத்தில் வந்தவனைப் பிடிக்க முடியாமல் போன எரிச்சல் எல்லாம் ஒன்று சேர, வருணின் முகத்தைப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது. அதே எரிச்சலுடன் மீண்டும் வீட்டிற்கு சென்றான் வருண்.
அங்கு சக்தி பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள். அவளின் முகத்தைப் பார்த்தவன், வந்த கோபத்தை தனக்குள்ளேயே அடக்கினான்.
“யாராவது வந்தா.. இப்படித்தான் பட்டுன்னு கதவைத் திறப்பியா..? கதவுல லென்ஸ் இருக்கே பார்க்க வேணாம்..? கொஞ்சமாவது அறிவிருக்கா… ஜஸ்ட் ரெண்டு நிமிஷம்… இந்நேரம் நீ எந்த நிலைமையில் இருந்திருப்பன்னு உனக்குத் தெரியுமா..?” என்றான் கொஞ்சம் கோபம் கலந்த குரலில்.
“இப்படி முன் கதவையே தட்டிக் குத்த வருவான்னு நான் என்ன கனவா கண்டேன். நீங்க நல்லாத் தூங்கிட்டு இருந்திங்க சார்..! அதான் எழுப்ப வேண்டாம்ன்னு நானே..!” என்று சொல்லிக் கொண்டிருந்தவளுக்கு அதற்கு மேல் பேச்சு வரவில்லை. அதற்கு காரணம் வருணின் கையில் இருந்து வலிந்து கொண்டிருந்த ரத்தம். கத்தியைப் பிடித்ததில் அவன் கையில் காயமாகி ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
“ஐயோ சார்..ரத்தம்..!” என்றாள் பதட்டமாக.
“அது, ஐயோ ரத்தமில்லை..! என்னோட ரத்தம்..!” என்றான் வருண்.
“ஏன் சார் இந்த நேரத்துலையும் காமெடி பண்றிங்க…? முதல்ல கையைக் குடுங்க சார்..!” என்றாள்.
“எதுக்கு…? நீ உன் துப்பட்டாவைக் கிழிச்சு என் கைல கட்டணும். அப்போ நான் இமைக்காம உன்னைப் பார்க்கணும்..! அப்படித்தான..?” என்றான்.
“சார்..!” என்று பல்லைக் கடித்தாள் சக்தி.
“இப்போதைக்கு இந்த சீன் இல்லை. அது மட்டுமில்லாம, நீயே பாவம் ரெண்டு நாளா ஒரே சல்வாரைப் போட்டுட்டு இருக்க. இப்ப இதையும் கிழிச்சுட்டு என்ன பண்ணுவ..?” என்றான்.
“சார்..! என்னை ஆளைவிடுங்க..! கையை நீங்க குடுக்கவே வேண்டாம். ஆனா, நீங்களாவது ஏதாவது பண்ணுங்க..!” என்றாள்.
அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவனுக்குத் தேவையான முதலுதவியை அவனே செய்து கொண்டிருந்தான்.
“குடுங்க சார்..! நான் போடுறேன்..!” என்றாள். ஆனால் வருணோ அவளை சட்டையே செய்யவில்லை. அந்த வேலையை அவனே அசால்ட்டாய் செய்து முடித்தான். இதெல்லாம் ஒரு காயமா அவனுக்கு.
ஆனால் அவனின் மூளைக்குள் ஓடிக் கொண்டிருந்தது எல்லாம், வந்தவனைப் பற்றித் தான். வந்தவன் ஒரு புரபஷனல் ரவுடி போல தெரியவில்லை. முகத்தை சரியாக பார்க்க முடியாவிட்டாலும் ஆள் பார்க்க டிப் டாப்பாக இருந்த மாதிரி தோன்றியது அவனுக்கு.
“வந்தவனைப் பத்தி தெரியுமா உனக்கு..?” என்றான் ஆழ்ந்த குரலில்.
அவனின் கேள்வியில் திகைத்தவள்,
“எ..எனக்கு.. யார்ன்னு தெரியாது சார்..!” என்றாள்.
“அதுக்கு ஏன் குரல் தந்தியடிக்குது..?” என்றான்.
“இல்ல சார்..! கொஞ்சம் பயம் அவ்வளவு தான்..!” என்றாள்.
“மனசுல தப்பில்லைன்னா…பயம் வராது..!” என்றான்.
“உயிருக்கு பயந்தா…பயம் வரும் சார்..!” என்றாள் வெடுக்கென்று.
“வாட்..!!!” என்றான்.
“அது வந்து…கத்தியைக் காட்டி குத்த வந்தா, பயம் வரத்தான சார் செய்யும். அதைச் சொன்னேன்..!” என்றாள்.
“ரொம்ப ஸ்மார்ட்டா ஆன்சர் பண்றதா மனசுல நினைப்பா..?” என்றவன், ஹாலில் இருந்த சோபாவிலேயே அமர்ந்தான்.
“ரொம்ப தேங்க்ஸ் சார்..! நீங்க மட்டும் இல்லைன்னா இந்நேரம்..!” என்று பேசியவளுக்கு தொண்டையை அடைக்க, கண்கள் கலங்கியது.
“இங்க பார் சக்தி..! தொட்டதுக்கு எல்லாம் கண் கலங்க கூடாது. நான் வரலைன்னா அப்படின்னு ஏன் யோசிக்கிற. அதான் நான் வந்துட்டனே அப்படின்னு யோசி. எனக்கு எப்பவும் பாசிட்டிவா திங்க் பண்ணத்தான் தோணும்..” என்றான் வருண்.
“பசியில இருக்கவனுக்கு பந்தி சோறும் ஒன்னு தான், பழைய சோறும் ஒன்னு தான்..!” என்றாள் விரக்தியாய்.
“இது நான் எந்த சோறு மேடம்..?” என்றான் நக்கலாய்.
“சார்…!” என்று அவள் முறைக்க,
“உனக்கு ஆட்சேபனை இல்லைன்னா… எனக்கு ஒரு பிளாக் டீ வச்சுத் தர முடியுமா…? ஐம் சோ டயர்ட்..!” என்றான் வருண். அவனின் குரலும் கொஞ்சம் சோர்வாகத்தான் இருந்தது.
“கண்டிப்பா சார்..!” என்று அங்கிருந்த அந்த சிறிய சமையல் அறைக்குள் சென்றாள் சக்தி. எதையும் தேட வேண்டிய அவசியம் இல்லாமல், டீ போடத் தேவையான அனைத்தும் அடுப்பிற்கு அருகிலேயே இருந்தது. அடிக்கடி இதைத்தான் குடிப்பான் போல..” என்று எண்ணிக் கொண்டாள் சக்தி.
தனக்கும் சேர்த்தே போட்டவள், அவனிடம் ஒரு கப்பைக் கொடுத்துவிட்டு, தானும் ஒரு கப்பை எடுத்துக் கொண்டாள்.
அந்த பிளாக் டீ உள்ளே போகப் போக வருணின் மூளை பிரஷானது. தூக்கம் கொஞ்சம் தள்ளிப் போக, வந்தவன் தப்பி ஏறிச் சென்ற காரை மீண்டும் மீண்டும் நினைவிற்குள் கொண்டு வந்தான்.
திடீரென்று அவன் முகம் பளிச்சென்று எறிய, கண்டு பிடித்து விட்டான் வருண். அவனைப் பாலோ பண்ணி வந்த கார் பாதியில் காணாமல் போக, அதற்கு பிறகு அவனின் காருக்கு பின்னால் வந்த மற்றொரு கார் தான் அது. அதில் தான் அவன் தப்பிச் சென்றான்.
ஆனால் அவன் டிரைவர் சீட்டில் ஏறி அமரவில்லை.ஓடிச்சென்றவன் காரில் ஏறி அமர, வேறு ஒரு நபர் தான் காரை எடுத்து. ஆனால் தன்னைப் பின் தொடர்ந்த காரில் இருந்த நபரோ ஒருத்தன் தானே..? அப்போ அவனும் இவனும் ஒண்ணா..? இல்லை ரெண்டு பேரும் வேற வேற ஆட்களா..? என்று அவன் யோசிக்க யோசிக்க, அவனுக்கு ஒவ்வொரு முடிச்சாய் போட்டுக் கொண்டே வந்தது.
வேகமாய் கண்ட்ரோல் ரூமிற்கு போன் செய்தவன்,தன்னுடைய காரின் நம்பரைச் சொல்லி, தான் வந்த நேரத்தையும் சொல்லி, தனக்கு பின்னால் வந்த காரின் முழு விபரத்தையும் எடுத்துத் தருமாறு சொன்னான். டிராபிக் சிசிடிவி புட்டேஜ், டோல்கேட் சிசிடிவி புட்டேஜ் அனைத்தையும் தன்னுடைய வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்புமாறு சொல்லி விட்டு போனை வைக்க, அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் சக்தி.
“என்ன அப்படிப் பாக்குற..?” என்றான்.
“உங்களுக்கு கொஞ்சம் கூட அசதியா இல்லையா சார்..! ஒரு பிளாக் டீக்கு இவ்வளவு சுறுசுறுப்பா..?” என்றாள்.
“எங்க வேலையில அசதியைப் பார்த்தா கதைக்கு ஆகாது. எந்த விஷயம் எப்ப மூளைக்குள்ள ஸ்ட்ரைக் ஆனாலும், அதை அப்பவே கிளியர் பண்ணி முடுச்சுடனும். இல்லைன்னா பெண்டிங் லிஸ்ட் பெருசாகிட்டே போய்டும்..!” என்றான்.
“அதுவும் உண்மைதான் சார்..!” என்றாள் சக்தி.
“ஓகே..! நான் இங்கயே கொஞ்ச நேரம் படுக்குறேன். நீ ரூம்ல போய் படுத்துக்கோ..! ஒன்னும் பயப்பட வேண்டாம். விடிஞ்சா நிறைய வேலை இருக்கு..” என்றவன் சோபாவிலேயே கால் நீட்டி படுத்துவிட்டான்.
“இல்லை பரவாயில்லை சார்..! இங்கயே இருக்கேன்..!” என்றவள் அந்த சோபாவை ஒட்டியே அமர்ந்து கொண்டாள். வருணும் தூங்காமல் கண்களை மட்டும் மூடியிருந்தான்.
அதே நேரம்…
“என்னடா காரியத்தை முடுச்சுட்டியா..?” என்று போனில் கேட்ட குரலுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான் எதிர்புறம் இருந்தவன்.
“என்னடா அமைதியா இருக்க…?”
“இல்ல சார்..! ஒரு சின்ன தப்பு நடந்து போய்டுச்சு சார்..! நான் பாலோ பண்றதை அவன் கண்டுபிடிச்சுட்டான். அதனால இடையிலேயே வேலையை விட வேண்டியதா போய்டுச்சு..!” என்றான்.
“முட்டாள் முட்டாள்..! படிச்சு படிச்சு சொன்னேன். இப்போ இப்படி வந்து சொல்ற…? உன்னை நம்பி இந்த காரியத்தை ஒப்படைச்சேன் பாரு..! என்னை சொல்லணும்..!” என்று காரித் துப்பாத குறையாக திட்டி விட்டு போனை வைத்தான் எதிர்புறம் இருந்தவன்.
அதே நேரம்…
“அண்ணா கொஞ்சம் மிஸ்சாகிடுச்சு.இல்லைன்னா நல்லா சொருகியிருப்பேன்..!” என்று ஒருவன் சொல்லிக் கொண்டிருக்க,
“பார்க்கலாம் எத்தனை நாள் தப்பிக்கிறான்னு…! அவகிட்ட இருக்குற ஜிபிஎஸ் ட்ராக்கர் அவளுக்குத் தெரியாத வரைக்கும், அவ நம்ம கண்ணை விட்டு எங்கயும் போக முடியாது..!” என்றவனின் கண்களில் அப்படி ஒரு ரௌத்திரம்.
“இப்போ இடையில அந்த போலீஸ்காரன் வேற வந்திருக்கான்ண்ணா..! அவனைப் பத்தித்தான் நமக்குத் தெரியுமே..! நிலைமை கொஞ்சம் சிக்கல் ஆகுதோன்னு தோணுதுன்னா. விஷயம் அவனுக்குத் தெரிஞ்சா நம்மளைக் கூண்டோட காலி பண்ணிடுவான்னா..!” என்றான் அவன்.
“அவனை அவ்வளவு லேசா நினைச்சது என்னோட தப்பு. எங்க போனாலும் இடைஞ்சலுக்கே வந்து நிக்குறான்..! இனி குறுக்க வந்தா தட்டிட்டுப் போயிட்டே இருக்கணும்..!” என்றான் அவன். அந்த குரலுக்கு சொந்தக்காரன் தேவன்.
“ஆனா அது அவ்வளவு ஈசி இல்லண்ணா..! ஏன்னு சொன்னா அவன் இதுவரைக்கும் எந்த கேஸ்லையும் தோத்துப் போனதா சரித்திரம் இல்லைன்னு அறிக்கை சொல்லுது. அவன் காதுக்கு நம்ம விஷயம் போகாம இருக்குற வரைதான் நம்ம சேப்..” என்றான். இவன் பெயர் லெனின்.
“பார்த்துக்கலாம் விடு..! எங்க போய்டப் போறா..?” என்றான் தேவன். இருவரின் கண்களிலும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற யோசனைக்கான ரேகைகள்.
விடிந்ததற்கான வெளிச்ச ரேகைகள் அறைக்குள் தெரிய, கண் விழித்தான் வருண்.
“அப்படியே தூங்கிட்டேன் போல..!” என்று சோம்பல் முறித்தவன், சக்தியைத் தேட, சோபாவின் அருகில் அமர்ந்து, அதில் சாய்ந்தவாறே தூங்கிக் கொண்டிருந்தாள்.அவளை ஒருநிமிடம் பார்த்தவன், தன்னுடயை செல்லை எடுத்து வாட்சப்பை திறக்க, அதில் அவன் கேட்ட வீடியோ புட்டேஜ் வந்திருந்தது.
வேகமாய் அதை ஒப்பன் செய்து, தனக்கு வேண்டிய வினாடிகளை மீண்டும் மீண்டும் ஓட விட்டு பார்த்தான். தன்னுடைய காரைத் தொடர்ந்து வந்த இரண்டு கார்களும் வேறு வேறு என்பதைத் தெரிந்து கொண்டான்.
தான் பார்த்த காரில் ஒருவன் மட்டுமே டிரைவர் சீட்டில் இருந்தது தெரிந்தது. மற்றொரு காரில் இரண்டு பேர் இருப்பதைப் போன்று தெரிந்தது. ஆனால் இரண்டு கார்களும், ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மேல் தன்னைப் பின் தொடரவில்லை. ஆனால் எப்படி சரியாக வீட்டைக் கண்டு பிடித்து வந்தான்…? என்று யோசித்தான் வருண். அவனுக்கு எங்கோ இடிப்பதைப் போன்று இருந்தது.
குவார்ட்ரஸில் இருந்த அத்தனை வீடுகளில் வீட்டை எப்படித் துல்லியமாகக் கண்டு பிடித்தான்..? வீட்டின் முன் கதவையே தட்டி, இதை செய்யும் அளவிற்கு எப்படி தைரியம் வந்தது..? என்று யோசிக்க, அப்போது தான் சக்தியைப் பார்த்தான். பார்த்தவனின் மண்டையில் மணி அடிக்க, அவளைத் தொந்தரவு செய்யாமல், அவள் தூக்கம் கலையாதவாறு மெதுவாக எட்டு வைத்து அவள் இருந்த அறைக்குள் சென்றான்.
அவளின் கைப்பையைத் தேட, அது அங்கிருந்த டேபிளில் இருந்தது. சக்தியை ஒரு பார்வை பார்த்தவன், தான் எழுப்பினால் மட்டுமே எழுந்து கொள்வாள் என்று தெரிய, அவளின் கைப் பையை எடுத்து ஆராய்ந்தான். ஆனால் அவன் சந்தேகப்படும் படி ஒன்றும் தெரியவில்லை. அவனுக்குத் தேவையான ஒன்றும் கிடைக்காமல் போக, பையை கீழே வைக்கும் போது, அவனின் கண்களில் அகப்பட்டது அந்த போட்டோ.
அதைப் பார்த்தவனின் கண்கள் அதிர்ச்சியாக, அப்படியே வைத்து விட்டு திரும்பி விட்டான்.அவன் தேடிய பொருள் அதுவல்ல.ஆனால் அவன் கையில் அகப்பட்டு மாட்டிக் கொண்டாள் சக்தி. அது அவளின் குடும்பப் புகைப் படம்.
தெரிந்து கொள்வானா வருண்..? புரிந்து கொள்வாளா சக்தி..?