ஓய்ந்து போய் அமர்ந்திருந்தார் வித்யா. காலையில் நினைத்தது அன்று நடந்துவிட்டது. இப்படி ஒரு நிகழ்வை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. அதிலும் கனகவேலை அவர் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. இத்தனை வருடங்கள் கழித்துப் பார்த்தும், அவரின் முகத்தை கண்டவுடன் அப்படி ஒரு வெறுப்பும், கோபமும். எதுவும் மாறவில்லை. அப்படியே தான் இருந்தது.
“இவன் எப்ப ஈரோடு வந்தான். சென்னைல இருக்கான்னு தான கேள்விப் பட்டேன்..!” என்றார் ரத்னவேல் தாத்தா.
“தொழில் எல்லாம் இங்க தான மாமா..! தொழிலை அவரு பொண்ணு பார்க்க, இவரு அரசியலைப் பார்த்துக்கிறதா பேச்சு..!” என்றார் சுரேஷ்.
“அவனுக்கு எல்லாம் என்ன மரியாதை வேண்டி கிடக்கு மாப்பிள்ளை…? விளக்கமாத்துக்கு பட்டுக் குஞ்சம் கேட்குது..!” என்று வள்ளியம்மை பொரிந்து தள்ளினார்.
“அவரை அப்படிப் பேசி நம்ம தரத்தை நாம குறைக்க வேண்டாமே அத்தை. என்ன இருந்தாலும் அவரு இப்ப ஒரு அமைச்சர்..!” என்றார் சுரேஷ், வித்யாவினை ஆழம் பார்க்கும் பொருட்டு.
“மண்ணாங்கட்டி..! அவன் எப்படி ஜெயிச்சுருப்பான்னு எங்களுக்குத் தெரியும். அவனுக்கு ஜாதியை விட்டா ஒன்னும் தெரியாது. வச்சுகிட்டவளைக் கூட ஜாதி பார்த்து தான் வச்சுகிட்டான்..” என்றாள் வித்யா.
“மெதுவா பேசு வித்யா. துளசிக்கோ,பிரவீணுக்கோ யாருக்கும் உண்மை தெரியாது. நாமளே சொன்ன மாதிரி ஆகிடும்..!” என்றார் ரத்னவேல்.
“என்னால முடியலைப்பா..! அந்த ஆளுக்கு எவ்வளவு திமிர் இருந்தா, நம்ம வீட்டுக்கே வந்து, நம்ம விஜய்க்கே பொண்ணுக் குடுக்குறேன்னு சொல்லுவான்..?” என்றார் வித்யா.
“வீட்ல இருக்குறவங்க சரிப்பட்டு வந்தா… ஏன் கண்ட நாயெல்லாம் வீட்டுக்குள்ள வரப் போகுது..!” என்று வள்ளியம்மை புலம்ப, ரத்னவேலுவிற்கும் அது சரி என்று பட்டது. பழைய படி வீட்டில் இருந்த சந்தோஷமும், ஒற்றுமையும் திரும்ப வேண்டும் என்றே நினைத்தார் அவர்.
“நீ பேசாம கோபத்துல சொல்லிட்ட வித்யா. ஆனா துளசி இதுக்கு மாட்டேன்னு அடம் பிடிக்கிறப்போ நாம என்ன செய்ய முடியும்..?” என்று வள்ளியம்மை பாட்டி சொல்லிக் கொண்டிருக்கும் போது வந்த துளசி, அவரை முறைத்தார்.
“என் பொண்ணு என் பேச்சை மீற மாட்டா அத்தை. நான் அவகிட்ட கேட்குற ஒரே ஒரு விஷயம் இதுவாகத்தான் இருக்கும்..” என்று சொன்னது வித்யா அல்ல, சுரேஷ்.
“அப்பா..!!” என்று துளசி அதிர்ச்சியுடன் சொல்ல,
“அப்படிக் கூப்பிட நான் உயிரோட இருக்கனும்ன்னு நினைச்சா, நீ விஜய்யைக் கல்யாணம் பண்ணிக்க துளசி. இதுக்கு மேல உன்னோட விருப்பம். ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப பேச எனக்கே எரிச்சலா இருக்கு..” என்றவர்,
“எனக்கு முக்கியமான வேலை இருக்கு. கண்டதையும் நினைக்காம ரெஸ்ட் எடு வித்யா..!” என்றபடி வெளியேறி விட்டார் சுரேஷ்.
ரத்னவேல் தாத்தாவிற்கும், வள்ளியம்மைப் பாட்டிக்கும் இப்போது தான் நிம்மதியாக இருந்தது. சுரேஷ் சொன்னால் விஷ்வ துளசி மாற மாட்டாள் என்று அவர்களுக்கும் தெரியும். ஆனால் துளசி மனதிற்குள் நொறுங்கிப் போனாள்.
பெண்களை ஒரு விஷயத்திற்கு சம்மதிக்க வைக்க காலம் காலமாக உபயோகப்படுத்தும் ஆயுதம் இது தான் என்று நம்பினாள் துளசி. அவள் பெண்ணியம் பேசுபவள் அல்ல. ஆனால் தன்னுடைய வாழ்க்கையில் தன்னைத் தவிர அனைவரும் முடிவு எடுப்பதை அவள் விரும்பவில்லை.
தொழில் விஷயத்தில் அவள் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்கும் என்று நம்பும் குடும்பத்தினர், வாழ்க்கை விஷயத்தில் மட்டும் ஏனோ தனக்கு எதுவும் தெரியாது என்பதைப் போல் பேசுவதைத் தான் அவளால் நம்ப முடியவில்லை.
பெண்கள் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், அவர்களை வீழ்த்தும் ஒரே ஆயுதம் எமோஷனல் பிளாக்மெயில். அதையும் தாண்டி சில பெண்கள் சுயமாக முடிவெடுத்தால், அதற்கு பெயர் அவளின் அதிகாரத்தில் தன்னம்பிக்கை. மற்றவரின் பார்வையில் திமிர்.
தன்னுடைய அறைக்கு சென்ற வித்யாவிற்கு பழைய நினைவுகள் மனதில் படம் எடுக்கத் தொடங்கின.
அப்பொழுது வித்யாவிற்கு இருபது வயது. வீட்டிற்கு செல்ல பெண். இரண்டு ஆண்களுக்குப் பிறகு பிறந்த கடைக்குட்டி என்பதால் அந்த வீட்டின் இளவரசியாகவே வளைய வந்தாள்.
“நம்ம ராஜசேகருக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு..! பொண்ணும் நல்லா மூக்கும் முழியுமா இருக்குறா…பேசாம பேசி முடிச்சுட வேண்டியது தான்..!” என்று ரத்னவேல் சொல்ல,
“அப்பா முதல்ல வித்யாவுக்கு முடிப்போம். பிறகு என் கல்யாணத்தைப் பத்தி யோசிப்போம்..! வீட்ல வயசுப்பிள்ளைய வச்சுகிட்டு, நான் கல்யாணம் செஞ்சா நல்லா இருக்காது..!” என்றார் ராஜ சேகர்.
“சேகரு சொல்றதும் சரிதாங்க..! முதல்ல வித்யாவுக்கு ஒரு நல்ல வரனா பார்ப்போம்..!” என்றார் வள்ளியும். அப்படி வித்யாவிற்கென வந்தவன் தான் கனகவேல்.
“பையன் வீடு உங்க அளவுக்கு வசதியில்லை. அதுக்காக வசதிக்கு குறைச்சலும் இல்லை. குடும்பத் தொழில் இருக்கு. ஆனா, அரசியல்ல தான் பையனுக்கு நாட்டம். கூடிய சீக்கிரம் அரசில்ல நல்ல நிலைமைக்கு வருவார்ன்னு பேச்சு அடிபடுது…” என்று தரகர் சொல்லிக் கொண்டே போக,
“அரசியல்வாதியா..?” என்று முகம் சுழித்தாள் வித்யா.
“அப்படி சொல்லாத வித்யா. எதுல இருந்தாலும் நேர்மையா இருக்கணும். அவ்வளவுதான்..!” என்ற ரத்னவேல், வித்யாவின் வாயை அடைத்து விட்டார்.
உண்மையில் வித்யாவைப் பெண் கேட்டு, தரகர் மூலமாக அனுப்பியது கனகவேல் தான். வித்யாவின் அழகில் மயங்கியவர், அவளைப் பற்றி விசாரிக்க, கிடைத்த தகவலில், அவருக்கு அப்படி ஒரு நிம்மதி.
பின்னே சும்மாவா..? ஈரோட்டில் அவர்களின் குடும்பம் பேர் சொல்லும் வகையில் இருக்கும் குடும்பம். குடும்பத் தொழிலில் கொடி கட்டி பறந்த காலம். அது மட்டுமில்லாமல் அவர்களின் பின்னால் இருக்கும் ஜாதி ஓட்டுக்களை கணக்குப் பார்த்தார் கனகவேல். அந்த குடும்பத்தின் மருமகனாக மட்டும் ஆகிவிட்டால், அரசியலில் அவருக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று உடன் இருந்தவர்கள் ஏற்றி விட, சரியாக காய் நகர்த்தினான் கனகவேல்.
விசாரித்துப் பார்த்ததில் அவருடைய பின்புலமும் சரியாக இருக்க, வித்யாவினை கனகவேலிற்கு கொடுக்க சம்மதித்தனர் வீட்டினர். ஆனால் வித்யாவிற்கு ஏனோ கனகவேலை முழுமனதுடன் பிடிக்கவில்லை. அதற்காக வேண்டாம் என்று மறுக்கவும் அவரிடம் சரியான காரணம் இல்லை.
வித்யா-கனகவேல் திருமணம் அதி விமர்சையாக நடைபெற்றது. பிடிக்காத மாப்பிள்ளை என்பதை எல்லாம் மறந்தே போனாள் வித்யா. திருமணத்தில் அவ்வளவு பிஸி. வீட்டில் நடக்கும் முதல் கல்யாண விசேஷம் என்பதால், ரத்னவேல் வீடே கலை கட்டியிருந்தது.
திருமண வைபவங்கள் அனைத்தும் நல்ல முறையில் நடந்தேற, கனகவேல் வீட்டில் தன் வாழ்க்கையைத் தொடங்கினாள் வித்யா. ஆறு மாதங்கள் வரை வாழ்க்கை நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது.
இடையில் தேர்தல் நெருங்க…கனகவேல் வீட்டிற்கு வருவது குறைந்தது. தேர்தல் வேலையில் பிசியாக இருந்தான் கனகவேல். வித்யாவும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால் நடந்து முடிந்த தேர்தலில், கனகவேல் சிறப்பான தோல்வியைத் தழுவியிருக்க, அவன் மனிதனாகவே இருக்கவில்லை. தோல்வியை ஏற்றுக் கொண்டு அமைதியாகப் போக சொல்லி அனைவரும் சொல்ல, அவனுக்கு வெற்றியின் வெறி கூடிக் கொண்டே போனது.
இரண்டு மாதம் வரை பொறுமையாக இருந்தவன், தன்னுடைய ஆதரவாளர்கள் உதவியுடன் அவன் தொகுதியில் நின்றவரை போட்டுத் தள்ள, இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டது. கொலைப்பழியை ஏற்றுக் கொண்டு விசுவாசி ஒருவன் உள்ளே சென்று கம்பி என்ன, கனகவேல் கச்சிதமாக காய் நகர்த்தினான். அவருக்கு மனைவி என்று ஒருத்தி இருப்பது மறந்தே போனது.
கனகவேலின் நடத்தையைக் கண்டு பயந்த வித்யா, அதை அப்படியே ரத்னவேலிடம் சொன்னாள்.அவருக்கு முதன் முறையாக எங்கோ தவறு செய்து விட்டதைப் போன்று தெரிந்தது.
“எனக்கு பயமா இருக்குப்பா..! இந்த அரசியல் எல்லாம் வேண்டாம்ன்னு சொல்லுங்கப்பா..!” என்று வித்யா மன்றாட, மகளுக்காக குடும்பமே கனகவேலிடம் பேசினர்.
“நான் என்ன உங்க வீட்டு வேலைக்காரன்னு நினைச்சிங்களா..? உங்க இஷ்ட்டத்துக்கு ஆட்டி வைக்க…? என்ன நினைச்சுட்டு இருக்கீங்க மனசுல..?” என்று வானத்திற்கும் பூமிக்கும் குதித்தான் கனகவேல்.
“நீங்க அரசியல்ல இருக்குறது எங்களுக்குப் பிரச்சனை இல்லை. அது தெரிஞ்சு தான் பொண்ணைக் கொடுத்தோம். ஆனா, இப்படி கொலை பண்ற அளவுக்கு போவிங்கன்னு நாங்க நினச்சு கூட பார்க்கலை. இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை… இதெல்லாம் விட்டுட்டு வாங்க..! வித்யா கூட சேர்ந்து சந்தோஷமா வாழ்ற வழியைப் பாருங்க..!” என்றார் ரத்னவேல்.
“என்ன மாமா மிரட்டுறிங்களா..? இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க..! வர்ற இடைத் தேர்தல்ல நான் மறுபடியும் நிக்குறேன். நம்ம ஜாதி ஓட்டு முழுசா எனக்குத் தான் விழுகனும். அது உங்க கைல தான் இருக்கு. நீங்க சொன்னா, ஒரு பய பேச்சு மாற மாட்டான். உங்க பொண்ணுக்காக இதை நீங்க செஞ்சு தான் ஆகணும்..!” என்றார் கனகவேல்.
“இல்லைன்னா…?” என்றார் ரத்னவேல்.
“இல்லைன்னா அத்து விட்டுட்டு போயிட்டே இருப்பேன்..” என்றார் கனகவேல்.
“அது அவ்வளவு சுலபம் இல்லை. எங்க போய் என்ன செய்யனும்ன்னு எங்களுக்கும் தெரியும்..!” என்றார் ராஜ சேகர்.
“என்ன மச்சான்..? மாப்பிள்ளைக்காக இதைக் கூட செய்ய மாட்டிங்களா..? உங்க தங்கச்சி என்கூட வந்து வாழனுமா..? வேண்டாமா..?” என்றார் கனகவேல்.
“அதுக்காக நீ செய்ற அக்கிரமத்துக்கு எல்லாம் துணை போக சொல்றியா..?” என்றார் ராஜ சேகர்.
“நாளைக்கு உங்க வீட்டு மாப்பிள்ளை அமைச்சர் ஆனா, அது உங்களுக்குத் தான பெருமை..!” என்றார் கனகவேல்.
“அது என்ன தேவைக்கு..?” என்றார் சுந்தர்.
“இப்ப முடிவா என்ன சொல்ல வரீங்க..?” என்றார் கனகவேல்.
“இதையெல்லாம் விட்டுட்டு வந்தா வித்யா வாழ வருவா..!”
“இல்லைன்னா…?” என்றார் கனகவேல்.
“அதுக்கு மேல என்ன செய்யணுமோ…அதைத் தான் செய்யணும்…!” என்று ரத்னவேல் சொல்ல,
இதில் எதிலும் தலையிடாமல் இருந்தாள் வித்யா. தன் வீட்டினருக்கு கனகவேலின் இன்னொரு முகம் தெரியவில்லை என்றே எண்ணினாள். அவன் செய்யும் அனைத்தையும் அருகில் இருந்து பார்த்தவள் ஆயிற்றே. ஒரு பெண்ணின் வீட்டிற்கு அவன் அடிக்கடி சென்று வருவதையும் அறிந்திருந்தாள். ஆனால் வீட்டில் சொல்ல வில்லை.வீட்டில் யாரும் தாங்க மாட்டார்கள் என்றே எண்ணினாள் வித்யா.
அந்த தேர்தலில் ரத்னவேல் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி கனகவேலிற்கு சீட்டு கிடைக்காமல் செய்திருந்தார். அப்படியாவது மருமகன் திருந்தி விட மாட்டானா..? என்ற எண்ணம் தான் அவருக்கு. ஆனால் கனகவேல் அடிபட்ட புலியாய் உள்ளுக்குள் சீறிக் கொண்டிருந்தான்.
“என்னங்கண்ணே…உங்க மாமனார் இப்படிப் பண்ணிட்டார். அவரு பொண்ணைக் கட்டுனா அவர் சிபாரிசுல அரசியல்ல கொடி கட்டி பறக்கலாம்ன்னு கனவு கண்டிங்க. ஆனா, அவரு இப்படி எல்லாத்தையும் இழுத்து மூடிட்டாரே..!” என்று உடன் இருந்த எடுப்புகள் உசுப்பேத்தி விட, கோபம் அனைத்தும் வித்யாவின் மேல் திரும்பியது.
வித்யாவிற்கு வீட்டில் தினமும் சித்திரவதையாய் இருக்க, அந்த நேரத்தில் தான் ராஜ சேகருக்கு திருமணமும் ஏற்பாடாகியிருந்தது. அவரின் திருமணம் முடியும் வரை பொறுமையாக இருக்க வேண்டும் என்று நினைத்த வித்யா, வீட்டினரிடம் எதுவும் சொல்லவில்லை.
ராஜ சேகரின் திருமண நாளும் வந்தது. அண்ணனின் திருமணத்திற்கு ஆசையாக புறப்பட்டு சென்றார் வித்யா. ஆனால் விதி வலியது. அப்போது சென்றவர் மீண்டும் கனகவேல் வீட்டிற்கு வரவில்லை. அவர்களின் வாழ்க்கையும் அன்றோடு பிரிந்தது.
ராஜசேகர் திருமணம் முடிந்த மறுநாள், நியூஸ் பேப்பரில் வித்யாவினைப் பற்றிய செய்திதான்.
“பிரபல தொழில் அதிபரின் மகளும், பிரபல அரசியல்வாதியின் மனைவியுமான வித்யாவின் கள்ளக் காதல் அம்பலம். நேரடியாகப் பார்த்த கணவர் அவமானம் தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை முயற்சி..” என்று பெரிய பெரிய எழுத்தில் வந்த செய்தியைப் பார்த்து, குடும்பமே அதிர்ந்து, அவமானத்தில் தலைகுனிந்து நின்றது.
திருமணத்திற்கு வந்திருந்த மணப்பெண்ணின் அண்ணன் சுரேஷுடன், வித்யா பேசிய எதார்த்தமான புகைப்படங்கள் அங்கே, கள்ளக் காதல் புகைப்படங்களாக சித்தரிக்கப் பட்டிருந்தது. செய்தியைப் பார்த்த சுரேஷின் குடும்பமும் அதிர்ந்து நின்றது.
“என்ன சம்பந்தி.. இதெல்லாம்..?” என்று சுரேஷின் அப்பா கோபத்துடன் கேட்க, யாருக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. யார் இதை செய்தது என்று கூட தெரியவில்லை.
‘கனகவேல் தற்கொலை முயற்சி ‘ என்ற செய்தியைப் பார்த்து,அவர்கள் கனகவேலை நினைத்து பயம் கொள்ள,
மறுநாள் வந்த கனகவேலோ….
“கொஞ்சம் அவசரப் பட்டுட்டேன் மாமா..! என் பொண்டாட்டியைப் பத்தி எனக்குத் தெரியும். எவன் என்ன சொன்னாலும் அதைப் பத்தி எனக்குக் கவலை இல்லை..!” என்று பச்சையாக நடித்தார் கனகவேல்.
அப்போது இருந்த சூழ்நிலைக்கு கனகவேல், அவர்களுக்கு கடவுளாகவே தெரிந்தார்.
“உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு மாப்பிள்ளை..!” என்று வள்ளியம்மை அவரிடம் நன்றி சொல்லிக் கொண்டிருக்க, உள்ளே இருந்த வித்யாவோ உயிருடன் எரிந்து கொண்டிருந்தாள். அவளுக்கு சுத்தமாக கனகவேல் மீது நம்பிக்கை இல்லை. யாருடைய முகத்தைப் பார்த்துப் பேசவும் வித்யாவிற்கு அவமானமாக இருந்தது.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, வெளியில் இருந்து ஆங்காரமாய் வந்த சுந்தர்..
“ஏண்டா நாயே..? இதெல்லாம் நீ பண்ண வேலைதானா..? என் தங்கச்சியை இப்படி கேவலப் படுத்தணும்ன்னு எத்தனை நாளா திட்டம் போட்டிருந்த…?” என்று அவரின் சட்டையைப் பிடித்து அடிக்க ஆரம்பிக்க,
“சுந்தரு.. என்ன நடந்துச்சு..? எதுக்கு மாப்பிள்ளையைப் போட்டு அடிக்கிற..?” என்று ரத்னவேலும், வள்ளியம்மையும் தடுக்க,
“இவன் ஒண்ணா நம்பர் அயோக்கியன்ப்பா..! இப்படி ஒரு செய்தியை போட சொன்னதே இவன் தான்ப்பா. எடிட்டரை விசாரிக்கற விதத்தில் விசாரிச்சதுல உண்மையைக் கக்கிட்டான். சொந்தப் பொண்டாட்டின்னு கூட பார்க்காம இந்த கேவலமான வேலையை செஞ்சிருக்கு இந்த நாயி..!” என்று மீண்டும் ஆங்காரம் எடுத்து அடிக்கத் தொடங்கினார்.
இதையெல்லாம் உள்ளே இருந்து கேட்டுக் கொண்டிருந்த வித்யாவிற்கு அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. இவ்வளவு அசிங்கப்பட்ட பிறகு வாழ்வதில் அவருக்கு விருப்பம் இல்லை. அவள் விபரீதமாய் யோசித்துக் கொண்டிருக்க் அவளின் அறைக்கதவு தட்டப்பட்டது. அழுது வீங்கிய முகத்துடன் கதவைத் திறந்தாள் வித்யா. சுரேஷும்,அவரின் தங்கையான ராஜ சேகரின் மனைவியும் நின்றிருந்தனர்.
“சொ..சொல்லுங்க அண்ணி..!” என்றாள் வித்யா.
“கீழ வாங்க அண்ணி..! மாமா கூப்பிடுறார்..!” என்றார் அவர்.
சுரேஷ் யோசனையுடன் வித்யாவைப் பார்த்துக் கொண்டே செல்ல, அங்கே கனகவேல் வாங்கிய அடியில் வீங்கிப் போய் இருந்தார்.
“நீ சொல்லும்மா..! இனியும் இவன் கூட வாழப் போறியா..?” என்றார் ரத்னவேல் சட்டென்று. வித்யாவிற்கு அவன் கணவன் என்பது மறந்து, மரணித்துப் போயிருந்தாள்.
“வேண்டாம்..!” என்பதைப் போல தலையை ஆட்ட, கனகவேல் கொண்டிருந்த கொஞ்ச நம்பிக்கையும் போனது.
வித்யாவின் பேரைக் கெடுத்தால், மாமனார் வீட்டினர் தான் எது சொன்னாலும் ஆடித்தான் ஆக வேண்டும் என்று கனகவேல் ஒரு கணக்குப் போட்டிருக்க, கடவுளோ வேறு கணக்கைப் போட்டிருந்தார் போலும்.
அப்படியும் அவர் வன்மம் அடங்காமல்,
“பொண்டாட்டியோட தப்பான நடத்தையை தட்டிக் கேட்டதுக்கு கிடைச்ச பரிசைப் பாருங்க..! பணக்காரனா இருந்தா என்ன வேண்ணா செய்யலாமா..?” என்று ஊருக்குள் மீண்டும் மீண்டும் வித்யாவை அசிங்கப்படுத்தியிருந்தார் கனகவேல்.
வித்யாவின் திருமண வாழ்க்கை ஒரே வருடத்தில் நிறைவுக்கு வந்திருந்தது. ஆனால் அதற்கு வித்யா கொடுத்த விலை தான் அதிகம்.
அவள் தப்பான முடிவை எடுத்து விடுவாள் என்று எண்ணி அனைவரும் வித்யாவிற்கு காவல் இருக்க, ராஜ சேகரின் மனைவி தான் வித்யாவைத் தேற்றினார்.
புது மருமகள் வந்த நேரம், வீட்டுப் பொண்ணு வாழா வெட்டியா வந்து நிக்குது..” என்று ஒரு சுற்றத்தார் பேச,
“நெருப்பில்லாம புகையாது..! அவ மேல தப்பு இருக்கப் போயித்தான் கட்டுவன் விட்டுட்டுப் போறான்..!” என்று இன்னொரு சுற்றத்தார் நாக்கு கூசாமல் பேசினர். வித்யா தான் கனகவேலை வேண்டாம் என்று சொன்னாள் என்பதை அவர்கள் உணரவேயில்லை.
“சாரி மாமா..! என்னால தான் எல்லாம். இப்படி நடக்கும்ன்னு எனக்குத் தெரியாது. நீங்க நினைக்கிற மாதிரி..!” என்று சுரேஷ் ஏதோ சொல்ல வர,
“நீங்க விளக்கம் சொல்லவே தேவையில்லைப்பா. எங்க பெண்ணைப் பத்தி எங்களுக்கு நல்லாத் தெரியும். அவ நெருப்பு. அதே சமயம் அந்த கேடு கெட்டவனைப் பத்தியும் தெரியும்..!” என்றார் ரத்னவேல்.
தன்னுடைய தங்கை வாழ்விற்கு ஏதேனும் பிரச்சனை வந்துவிடுமோ என்று சுரேஷ் பயந்தார். ஆனால் அப்படி எதுவும் ஆகவில்லை. நாட்களின் ஓட்டத்தில் பிரச்சைனையின் சாயல் கொஞ்சம் கொஞ்சமாக மாறியிருக்க, அடுத்த ஒரு மாதத்திலேயே தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, சட்ட ரீதியான விவாகரத்தையும் வாங்கியிருந்தார் ரத்னவேல்.
அதற்கு அடுத்த முகூர்த்தத்திலேயே ராதிகாவை கைப் பிடித்தார் கனகவேல். ஒருத்தி இல்லைன்னா இன்னொருத்தி என்பதைப் போல் இருந்தது அவரின் செய்கை. வித்யா தப்பானவளாக தெரிந்ததால் கனகவேலின் கல்யாணம் பேசு பெருளாக ஆக்கப்பட வில்லை.
ராதிகாவைக் கைப்பிடித்த கனகவேலின் அரசியல் வாழ்க்கை அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டது. அதற்கு காரணம், ராதிகாவும் ஒரு அரசியல்வாதியின் வாரிசு என்பதால் தானோ என்னவோ..?
ஆனால் வித்யாவின் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. திருமண வாழ்க்கையில் வாங்கிய அடி, அவரை அவ்வளவு சீக்கிரம் மேலே எழும்ப விடவில்லை.கனகவேல் திருமண செய்தி கூட வித்யாவிற்கு பெரிதாக தோன்றவில்லை.
வித்யாவின் இந்த நிலைக்கு தானும் ஒரு காரணம் என்று எண்ணிய சுரேஷும் தன்னுடைய கல்யாணத்தைப் பற்றி யோசிக்காமல் இருக்க, அவருடைய பெற்றோர் வற்புறுத்தத் தொடங்கினர்.
யோசித்து ஒரு முடிவுக்கு வந்த சுரேஷ், தன் தங்கையின் கணவனான ராஜ சேகரிடம், வித்யாவை தானே மணந்து கொள்வதாக சொல்ல, சேகருக்கு சந்தோசம் பிடிபடவில்லை. ஊர் என்ன பேசும் என்பதை எல்லாம் அவர் பெரிது படுத்தவில்லை.
ரத்னவேல்,வள்ளி இருவருக்கும் விஷயம் தெரியவந்த போது,ஒரு பக்கம் சந்தோஷமாகவும் இருந்தது. இன்னொரு பக்கம் வித்யா என்ன சொல்லுவாளோ? என்ற கவலையும் இருந்தது.
அவர்களின் கவலை சரியே என்பதைப் போல் இருந்தது வித்யாவின் செய்கை. முடியவே முடியாது என்று மறுக்க,
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதைப் போல், வித்யாவின் மனம் பெற்றோருக்காக கொஞ்சம் கரைந்தது.
தப்பு செய்த அவனே அடுத்த திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருக்கும் போது, எந்த தப்பும் செய்யாத தான் மட்டும் ஏன் இப்படி ஒரு தண்டனையையும், அவப் பெயரையும் சுமக்க வேண்டும் என்று ஒரு கட்டத்தில் யோசிக்கத் தொடங்கிவிட்டார் வித்யா.
எந்தவித ஆடம்பரமும் இல்லாமல், கோவிலில் எளிய முறையில் திருமணம் நடந்தது. சுரேஷின் பெற்றோருக்கு அவ்வளவு விருப்பம் இல்லை. இருந்தாலும், மகனே சரி என்று சொன்ன பிறகு, அவர்களுக்கும் வேறு வழி தெரியவில்லை.
மகள் வாழ சென்ற வீடு வேறு. அதனால் மறுப்பின்றி வித்யாவை மருமகளாக ஏற்றுக் கொண்டனர்.
அதற்கும் பேசியது ஊர். புருஷனை கழட்டி விட்ட வேகத்தோட வச்சிருந்தவனைக் கல்யாணம் பண்ணிகிட்டா என்று ஆளாளுக்குப் பேச, வீட்டிற்குள் குறுகிக் கொண்டார் வித்யா. தாய் தந்தையரின் அரவணைப்பு மட்டுமே அவருக்கு மருந்தாய் அமைந்தது.
வித்யாவை தன்னுடைய மனைவியாக முழுமையாக மாற்றுவதற்கே சுரேஷிற்கு சில வருடங்கள் பிடித்தது. எதற்கெடுத்தாலும் அழும் வித்யா, தானாக முடிவெடுக்காத வித்யா இப்படி கூண்டுப் பறவையாய் இருந்தவரை சுரேஷும் முடிந்த அளவிற்கு மாற்ற முயற்சி செய்தார். ஆனால் இன்று வரை முடியவில்லை. காலங்கள் ஓடினாலும் அவர் மனதில் இருந்த காயங்களின் வடுக்கள் மறையவில்லை.சுரேஷே தன் வாழ்க்கையில் முதல் ஆணாக வந்திருக்கக் கூடாதா என்று முப்பொழுதும் நினைக்கும் அளவிற்கு வித்யாவைத் தாங்கினார் அவர்.
தன் வாழ்க்கையின் இருண்ட பக்கங்களில் இருந்து வெளி வந்தார் வித்யா. இப்பொழுது நினைத்தாலும் உடல் நடுங்கும் அளவிற்கு இருண்ட பக்கங்கள்.
இத்தனை வருடங்கள் கழித்து கனகவேலை இன்று தான் பார்த்தார் வித்யா. பார்த்ததும் அப்படி ஒரு ஆங்காரம். அந்த நாளில் வெளிப்படுத்தத் தவறிய கோபம் இன்றைக்கு வெளிப்பட்டு விட்டது.
“இவ்வளவு பிரச்னைக்கு அப்பறமும் வீட்டுப் படியேறி வந்து மாப்பிள்ளை கேட்க அவனுக்கு என்ன தைரியம் இருக்கணும்..?” என்று வெகுண்டு போயிருந்தார் வித்யா.
வீட்டிற்குள் வந்த கனகவேலின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் ராதிகா. அவரின் முகத்தில் இருந்த கோபமே ராதிகாவை மேற்கொண்டு பேசவிடவில்லை.
“என்ன சொன்னாங்க டாடி..?” என்று திவ்யா தான் ஆரம்பித்தாள்.
“சொன்னாங்க..! சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு..!” என்று எரிந்து விழுந்தார் கனகவேல்.
“என்னாச்சு டாடி..? யார் உங்களை என்ன சொன்னா..?” என்றாள் திவ்யா கோபமாக.
“இங்க பார் திவ்யா..! இது நடக்கும்ன்னு எனக்குத் தோணலை. ஏற்கனவே அந்த குடும்பத்துக்கும் எனக்கும் பல பிரச்சனை இருக்கு. இதுல புதுசா இது வேறயா. அந்த பையனை மறந்துட்டு, வேற வேலை இருந்தா பாரு. உனக்கு பொருத்தமான மாப்பிள்ளைய நான் கொண்டு வந்து நிறுத்துறேன்..!” என்றார் கனகவேல்.
“உங்களால முடியலைன்னா…நான் பார்த்துக்கறேன். வேற மாப்பிள்ளை பார்க்குற வேலை எல்லாம் உங்களுக்கு வேண்டாம்..!” என்று சொன்ன திவ்யா, அங்கிருந்து செல்ல, கனகவேல் அவளிடம் கோபத்தைக் காட்ட முடியாமல் ராதிகாவை முறைத்து விட்டு வெளியே கிளம்பி சென்றார்.