“நான் போய் என் மருமகளைப் பார்த்துட்டு வரேன்.” என்று கை நிறையச் சந்தியாவிற்கு திண்பண்டங்களை அள்ளிக்கொண்டு தன் மகள் காவேரியையும் அழைத்துக்கொண்டு சென்றார்.அடுத்த அரை மணி நேரத்தில் சந்தியா பெரிய மனுஷி ஆனது, அந்த ஊர் முழுவதும் தண்டோரா போட்டு அறிவித்தது போல், எல்லோருக்கும் சென்று சேர்ந்துவிட்டது. கிராமம் என்றால் அப்படித்தான் ஒரு வீட்டில் ஒரு விஷயம் நடந்தால், அது காட்டுத் தீ போல் எல்லோருக்கும் பரவிவிடும்.அதே போல் நகரத்து மனிதர்கள் போல் அக்கம் பக்கம் என்ன நடந்தால் என்ன என்று கிராமத்து மனிதர்களால் இருக்க முடியாது. அவரவருக்கு என்ன முடியுமோ, அது பழமோ, பூவோ இல்லை இனிப்புகளோ வாங்கிக்கொண்டு வந்து சந்தியாவைப் பார்த்துவிட்டு சென்றனர். மாலை சித்ரா வந்த போது, கன்னத்தில் சந்தனத்துடன், தலை நிறையப் பூ வைத்து முகத்தில் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருந்த சந்தியா, சித்ராவை பார்த்ததும் ஆசையாக அழைத்துத் தன் அருகில் அமர வைத்து கொண்டாள்.
|