தாலி கட்டும் நேரம் நண்பர்களோடு கதிரும் மேடைக்கு வந்தான். நண்பர்கள் குழு சோலையைக் கிண்டல் செய்தபடி இருந்தது. கதிரின் புன்னகை முகத்தையும், நந்தினி அவனை அடிக்கடி ஓரக்கண்ணில் பார்ப்பதையும் பார்த்த சந்தியா, வாசு சொன்னது உண்மையோ என்று நினைத்தாள்.
கதிரை நந்தினியோடு சேர்த்து பார்த்த சந்தியாவுக்கு அவள் உடல், மனம் இரண்டுமே எரிவதை போல் இருந்தது. நொடியில் அவள் உடலில் உஷ்ணம் பாய, கண்கள் சிவந்து காய்ச்சல் வருவது போல் இருந்தது.
குனிந்த தலையுடன் அமர்ந்திருந்த சித்ராவின் காதில் சோலை “சந்தியா எங்க இன்னும் வரலை?” என்றதும், கவலையாக நிமிர்ந்த சித்ரா, சுற்றிலும் பார்த்தவள், தூரத்தில் நின்ற சந்தியாவைப் பார்த்ததும் முகம் மலர்ந்தாள்.
சித்ராவையே பார்த்துக்கொண்டிருந்த சோலையும், கதிரும் அவள் பார்வை சென்ற திசையில் பார்த்தவார்கள், அங்கே சந்தியா நிற்பதை பார்த்து, அவர்கள் முகமும் மலர்ந்தது. சித்ரா சந்தியாவை மேடைக்கு வரும்படி தலை அசைக்க, சந்தியா வேண்டாம் என்று மறுத்தவள் அங்கேயே நின்று கொண்டாள்.
சித்ரா ஏன் என்பது போல் பார்க்க, ஒன்றும் இல்லை என்று பார்வையாலேயே அவளுக்குச் சமாதானம் சொன்ன சந்தியா, சிரிக்க முயன்று தோற்றாள். அவளையே பார்த்துக்கொண்டிருந்த கதிருக்கும், சோலைக்கும் எதோ சரி இல்லை என்று புரிந்தது. கெட்டி மேளம் ஒலிக்க, மங்கள வாத்தியம் முழங்க, சோலை சித்ராவின் கழுத்தில் தாலிகட்டி தன் மனைவி ஆக்கிக்கொண்டான்.
திருமணம் முடிந்தாவது மேடைக்கு வருவாள் என்று பார்த்தால், சந்தியா திரும்பி வெளியே சென்று கொண்டிருந்தாள். கதிர், சோலை, சித்ரா மூவரும் மாறி மாறி ஒருவரின் முகத்தை மற்றவர்கள் பார்க்க,
கதிரிடம் சோலை “எதோ சரியில்லை மாப்பிள்ளை. நீ உங்க மாமாவுக்காகப் பார்த்து சந்தியாவை இழக்க போறியோன்னு தோணுதுடா.” என்று சொன்னதும், கதிர் வேகமாகக் கீழே இறங்கி சந்தியாவைநோக்கிசென்றான்.
வெளியே வந்த கதிர் சுற்றிலும் சந்தியாவைத் தேட, அவள் மண்டபத்தின் பக்கவாட்டில் நிறுத்தியிருந்த வண்டியை கிளப்பிக்கொண்டு இருந்தாள். வேகமாக அவள் அருகில் சென்ற கதிர் “ஏன் சந்தியா அதுக்குள்ள போற?” என்று கேட்டதும்,
அவனை நிமிர்ந்து பார்த்த சந்தியாவின் கண்கள் கலங்கி இருந்தது. “சும்மா தான். சீக்கிரம் ஊருக்குக் கிளம்பனும்…” என்று சம்பந்தமில்லாமல்பேசினாள்.
“இப்ப மணி பத்து தான் ஆகுது. இப்ப எப்படி ஊருக்குப் போகமுடியும்நைட் தான வண்டி.” என்றதும்,
“ஆமாம் நைட் தான் வண்டி, ஆனா நான் இப்ப போகணும்…” என்று பிடிவாதமாகச் சொன்னவள், வண்டியை போட்டு உதைக்க அது கிளம்பவில்லை.
“வண்டி ஏன் கிளம்பவே மாட்டேங்குது. எனக்குக் கால் எல்லாம் வலிக்குது…” என்றாள் திடிரென்று குரலில் அழுகையுடன்.
அவளிடமிருந்து வேகமாக வண்டியை வாங்கிய கதிர், அதை உதைக்கச் சென்றவன், அப்போது தான் கவனித்தான் வண்டியில் சாவியே போடவில்லை. சந்தியாவைப் பார்த்து “சாவி போடலை சந்தியா…” என்றதும், தலையில் அடித்துக்கொண்டவள் பர்சில் இருந்து சாவியைஎடுத்துக்கொடுத்தாள்.
அவள் முகத்தைப் பார்த்து “உடம்பு சரி இல்லையா சந்தியா…” என்ற கதிர் அவள் கையைத் தொட்டுப் பார்க்க, அவள் உடல் கொதிக்கத் தான் செய்தது.
உடம்பு சரி இல்லாததால் தான் அப்படி இருக்கிறாளோ என்று நினைத்தவன் “இந்த ஜுரத்தோட எப்படி வண்டி ஓடிட்டு போவ?” என்றான்.
“போய்டுவேன்…” என்றவள் அப்போது தான் அவர்கள் அருகில் வந்த நந்தினியை பார்த்தாள். சந்தியா அவளைப் பார்த்து முறைத்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொள்ள,
நந்தினி “என்ன சந்தியா அதுக்குள்ளே போற…” என்று கேட்டது தான் தாமதம். சந்தியா பொங்கி விட்டாள்.
நந்தினியின் முகம் நொடியில் மாற, கதிர் “ஹே உன் ஃபரண்ட் தான ஏன் இப்படிப் பேசுற…” என்று அதட்ட, சந்தியா “இவ ஃபரண்டா, வேண்டாம் மாமா என்னைப் பேச வைக்காத, அப்புறம் நான் எதாவது அசிங்கமா திட்டிட போறேன்…” என்றாள் கொதிப்பாக.
அவள் பேசுவதைக் கேட்டு திடுக்கிட்ட கதிர் நந்தினியை பார்க்க, அவள்அமைதியாகநின்றாள்.
“இதெல்லாம் என்ன பேச்சு சந்தியா? உனக்கு உன் ஃபரண்ட் மேல என்ன கோபம் இருந்தாலும் இப்படிப் பேசுறது தப்பு…” என்றவன் நந்தினியிடம் “அவளுக்கு உடம்பு சரி இல்லை. அதுதான். நீங்க போங்க.” என்றான் சமாதானம் செய்வது போல், நந்தினியும் உடனே திரும்பி சென்று விட, அது இன்னும் எரிகிற தீயில் எண்ணெய் விட்ட மாதிரி ஆனது.
“ஓ… அவளுக்குச் சப்போர்ட் எல்லாம் பலமா இருக்கு. அவ என்னை விட அழகா, கலரா இருக்கால்ல…” என்றது தான் தாமதம், கதிரின் கை சந்தியாவின் கன்னத்தில் இடியாக இறங்கியது.
சந்தியா அதிர்ந்து நிற்க “என்ன பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு, நீ எல்லாம் டாக்டருக்கு படிக்கிறேன்னு வெளியே சொல்லிடாத, எதை வச்சு என்னை அந்தப் பொண்ணோட சேர்த்து வச்சு பேசுற?” என்றான் கோபமாக,
சந்தியாவுக்கு அப்போது தான் உரைத்தது, கதிருக்கு எந்த விஷயமும் தெரியவில்லை என்று. தான் வாசுவின் பேச்சை கேட்டு வாய்விட்டதை அப்போது தான் உணர்ந்தாள். அவளுக்கு இப்போது உண்மையிலேயே பயமாக இருந்தது. கதிர் கோபத்தில் நந்தினியை கல்யாணம் செய்ய முடிவு செய்தால்? மண்டபத்தில் திருமணம் முடிந்து அனைவரும் சாப்பிட சென்றதால், வெளியே யாரும் இல்லை. இன்னும் சிறிது நேரத்தில் ஆட்கள் வெளியே வர ஆரம்பித்துவிடுவார்கள் என்பதை உணர்ந்த கதிர்.
சந்தியாவிடம் “சரி நீ வீட்டுக்கு கிளம்பு…” என்றவன், அவளிடம் வண்டியை கொடுக்க, சந்தியா விட்டால் போதும் என்று வண்டியை எடுத்துக்கொண்டுசென்றாள். கதிர் அவன் வண்டியை எடுத்துக்கொண்டு அவளைத் தொடர்ந்து வந்தான். சந்தியா எதோ யோசனையிலேயே வண்டி ஒட்டிக்கொண்டிருந்தாள்.
அவள் வீட்டுக்கு வந்ததும் தான் கதிரும் அவளோடு வந்ததைச் சந்தியா கவனித்தாள். சந்தியா எதோ சொல்ல வர, கதிர் கைகாட்டி அவளைத் தடுத்தான். அவன் முகம் கடு கடுவென்று இருந்தது. அவனைப் பார்க்கவே சந்தியாவுக்குப் பயமாக இருந்தது. இப்போது அவளுக்குக் காய்ச்சல் விட்டு குளிர் எடுக்க ஆரம்பித்தது.
அவள் வண்டி சத்தம் கேட்டு வெளியே வந்த வேதவல்லி “என்னடி அதுக்குள்ளே வந்துட்ட….” என்றவர் கதிரை பார்த்ததும் “வாப்பா கதிரு…” என்றார் மகிழ்ச்சியாக,
“இருக்கட்டும் அத்தை, நான் பிறகு வரேன். சந்தியாவுக்கு உடம்புக்கு முடியல போல, நீங்க அவளைப் பாருங்க. அவளைத் தனியா விடாதீங்க.” என்றவன், தன் வண்டியை எடுத்துக்கொண்டு சென்றான்.
சந்தியா வீட்டில் இருந்து வந்த கதிருக்கு எங்குச் செல்வது என்று தெரியவில்லை. மண்டபத்திற்குத் திரும்பி செல்வதா, அல்லது தன்னுடைய வீட்டுக்கு செல்வதா என்ற குழப்பத்தில் ரோட்டிலேயே ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு யோசித்தான்.
இவளை மனசுல நினைச்சதுக்கு என்னைத் தெருவில நிறுத்திட்டா, எதுக்கு இன்னைக்கு அப்படிப் பேசினா? என்ற குழப்பத்தில் இருந்தவன், இந்த மனநிலையில திரும்ப மண்டபத்திற்குப் போக முடியாது என்று தோன்றியதால், வண்டியை அவன் வீட்டிற்குத் திருப்பினான். கதிர் வீட்டிக்கு வந்த போது ஹாலில் வாசு பெரியசாமியுடன் பேசிக்கொண்டிருந்தார். அவனுக்கு இப்போது யாரோடும் பேச விரும்பமில்லை. அதனால் உள்ளே செல்லாமல் வெளி திண்ணையிலேயே உட்கார்ந்து விட்டான்.
“உங்க அக்கா கதிருக்கு நீ பொண்ணு பார்த்திருக்கிறதா சொன்னா…” என்று பெரியசாமி ஆரம்பித்ததும், சோர்ந்து போய் உட்கார்ந்திருந்த கதிர், இது என்ன டா வம்பு என்பது போல் நிமிர்ந்து உட்கார,
வாசு சந்தோஷத்தில் வாயெல்லாம் பல்லாக, “ஆமாம் மச்சான். ரொம்ப நல்ல இடம். அவங்க வீட்ல ஆண் ஒன்னு, பொண் ஒன்னு ரெண்டு பிள்ளைங்க தான். அதனால பொண்ணுக்கு நல்லா செய்வாங்க.” என்று சொல்லிக்கொண்டே செல்ல,
அவரைத் தடுத்த பெரியசாமி “நான் இப்ப கதிருக்குக் கல்யாணம் பண்றதா இல்ல. அவனுக்கு வயசு இப்போ இருபத்தி ஆறு தான் ஆகுது. இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும் பார்ப்போம்.” என்றார்.
“பொண்ணு படிப்பு முடிக்கவும் இன்னும் ஓர் வருஷம் ஆகுமே, நாம இப்ப பேசி வச்சிக்கிட்டா, இன்னும் ஒன்னு, ரெண்டு வருஷத்துல மெதுவா கல்யாணத்தை வச்சிக்கலாம். ஏன் சொல்றேன்னா, நந்தினி மாதிரி அழகு, படிப்பு, வசதி எல்லாம் சேர்ந்த மாதிரி வேற பொண்ணு நம்ம கதிருக்குக் கிடைக்கிறது கஷ்டம். உங்க தங்கச்சி பொண்னையே எடுத்துக்கோங்க டாக்டருக்கு படிக்குது, ஆனா, நம்ம கதிர் அளவுக்கு நிறம் இல்லையே….” என்று வாசு நந்தினியை உயர்த்திப் பேசுவது போல் சந்தியாவை மட்டம் தட்ட,
வாசு பேசியதை கேட்டு கோபத்துடன் வீட்டிற்குள் சென்றான் கதிர். அவனுக்கு இப்போது சந்தியா காலையில் பேசியதற்கான அர்த்தம் விளங்கியது. அவள் நந்தினி மீது ஏன் கோபப்ட்டாள் என்றும்புரிந்தது.
கதிர் பேசும் முன் “என் மருமகளுக்கு எதுக்கு நிறம், தங்கமாட்டம் குணம் அது போதாது.” என்றார் பெரியசாமி பெருமையாக,
“ஹா ஹா… நீங்க சொல்றது சரி தான் மச்சான்.” என்று சிரித்த வாசு “நந்தினியை நம்ம கதிருக்கு கொடுக்க அவங்க வீட்ல ரொம்பப் பிரியப்படுறாங்க…”என்றார்விடாமல்,
“நீ பொண்ணு வீட்ல சொல்லிடு, நாங்க கதிருக்கு இப்ப கல்யாணம் செய்யும் உத்தேசம் இல்லை. அவங்களை வேற மாப்பிள்ளை பார்த்துக்கச் சொல்லு.” என்றார் பெரியசாமி முடிவாக.
அவர் சொன்னதைக் கேட்டு வாசுவுக்குக் கோபம் வந்தது “நீங்க இன்னும் உங்க தங்கச்சி வீட்ல சம்பந்தம் பண்ணும் நினைப்பில இருக்கீங்களா மச்சான். உங்க மாப்பிள்ளை உங்க வீட்ல பொண்ணு கொடுக்க மாட்டான்.” என்றார் கிண்டலாக.
அவரை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்த பெரியசாமி, திரும்பி லக்ஷ்மியையும் ஒரு பார்வை பார்க்க, லக்ஷ்மி நடுங்கி விட்டார். அவருக்குப் பெரியசாமி என்ன நினைக்கிறார் என்று தெரியும்.
உனக்கு உன் பிறந்த வீட்டுச் சொந்தம் வேணும்னா, இதோட உன் தம்பிய வாய மூட சொல்லுன்னு அர்த்தம் என்று புரிந்து கொண்டவர்,
தன் தம்பி வாசுவிடம் “அது தான் அவர் சொல்றாருல, இப்ப கதிருக்குக் கல்யாணம் பண்ணப்போறது இல்லைன்னு. நீ அதோட விடேன். அவர் பார்த்து அவர் பையனுக்குக் கல்யாணம் பண்ணிப்பார்.” என்றார்லக்ஷ்மிபதற்றமாக.
அப்போதும் அடங்காமல் வாசு “நானும் அதே தான் சொல்றேன், அவரு நல்லா இருக்கும் போதே மகனுக்குக் கல்யாணம் பண்ணிட வேண்டியது தான். ஏற்கனவே முடியாமல் இருந்தவர்.” என்றதும் லக்ஷ்மிக்கே கோபம் வந்தது. கதிரை பற்றிக் கேட்க வேண்டுமா.