வேதவல்லி நொந்து போய் விட்டார். வேறு எந்த மாப்பிள்ளை வீட்டினர் என்றாலும் இந்நேரம் இந்தப் பிரச்சனையை பெரிசாக்கி இருப்பார்கள். தன் அண்ணன் என்பதால் பொறுத்து போகிறார் என்று தெரியும். அவர் பதற்றத்துடன் மாடியை நோக்கி செல்ல, துரையும் அவர் பின்னே சென்றார்.சிறிது நேரம் சென்று சந்தியாவின் அறையிலிருந்து கதிர் வெளியே வர.
“டேய் உனக்கு ரொமான்ஸ் பண்ண வேற நேரமே கிடைக்கலையா. தாலி கட்ற நேரத்தில, எல்லோருக்கும் தண்ணிய காட்ற…” என்று பாலா சொன்னதும், கதிர் புன்னகைக்க, அவன் சிரிப்பே வித்தியாசமாக இருந்தது.
அவனை ஆழ்ந்து நோக்கிய சோலை “டேய் மாப்பிள்ளை! நீ இப்படி எல்லாம் பண்றவன் இல்லை. ஒரு நிமிஷம் எல்லாருமே அரண்டுட்டாங்க தெரியுமா…..” என்றதும்,
“தெரியும், என் மாமனாரு ரொம்ப ஆடினாறு. பதிலுக்கு நான் கொஞ்சம் ஆடினா, எப்படி இருக்கும்னு காட்டத்தான் இப்படிப் பண்ணேன். இனி அவரு அடங்குவாரு பாரு.” என்றான் கதிர்.
இதுவரை கதிரை அமைதியானவன், மென்மையானவன் என்று மட்டும் நினைத்திருந்தவர்களுக்கு, சாது மிரண்டா காடு கொள்ளது என்பதைக் கதிர் நிரூபித்தான்.கதிரின் இந்தப் புதிய அவதாரத்தைப் பார்த்து சித்தார்த்தே திகைத்து விட்டான். அவன் வேகமாகச் சந்தியாவின் அறையை எட்டிப் பார்த்தான். அவனுக்குச் சந்தியா அழுகிறாளோ என்று கவலை. ஆனால் அங்கே சந்தியா புன்னகையுடன் நின்றிருந்தை பார்த்ததும் தான் நிம்மதியடைந்தான்.
பெரியசாமிக்கும் என்ன ஆச்சு, கதிர் ஏன் இப்படி நடந்துகொள்கிறான் என்று புரியவில்லை. அவருக்கு மாடிப்படி ஏறுவது கஷ்டம். இருந்தாலும், அவர் மாடியை நோக்கி செல்ல, கதிர் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தான். தன் தந்தை மேலே வருவதைப் பார்த்தவன், இன்னும் வேகமாகக் கீழே இறங்கி வந்தான்.அவனைப் பார்த்த பெரியசாமி மேலும் அவனை ஆராய. அவன் இயல்பாக இருப்பது போல் தான் இருந்தது.
“சரி மேடைக்குப் போ…” என்று அவனை அங்கே அனுப்பியவர், தானும் மெதுவாக மேடையில் ஏறினார்.
முகூர்த்தம் முடிய இன்னும் சில நிமிடங்களே இருந்ததால். சந்தியாவும் அழைக்கப்பட்டாள். நல்ல நேரத்தில் பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர்கள் முன்னிலையில், கதிர் தங்க சங்கிலியில் கோர்த்திருந்த திருமாங்கல்யத்தைச் சந்தியாவின் கழுத்தில் அணிவித்து அவளைத் தன் மனைவியாக்கிக் கொண்டான்.
திருமணச் சடங்கு எல்லாம் முடிந்த பிறகு, மணமக்களைக் குதிரை சாரட்டில் அமரவைத்து, பேண்ட் வாத்தியம் முழங்க, ஊர்வலமாக வந்து மாப்பிளையின் வீட்டிற்கு அழைத்துச் செல்வது அவர்கள் ஊரின் வழக்கம்.
அதே போல் கதிரையும், சந்தியாவையும் குதிரை சாரட்டில் அமரவைத்து ஊர்வலமாகச் அழைத்துச் சென்றனர். மற்றவர்கள் நந்தினியை மறந்திருந்தாலும் சித்தார்த் மறக்கவில்லை. நந்தினியின் வீட்டை சித்ரா சித்தார்த்துக்குக் காட்ட,அந்த இடத்தில் மட்டும் கிட்டத்தட்ட இருபது நிமிடங்களுக்கு மேல் நின்று வாத்தியம் முழங்க, சித்தார்த்தும், வெங்கியும் சேர்ந்து குத்தாட்டம் போட்டனர்.
பத்தாததற்குச் சோலை வேறு நந்தினின் வீட்டு வாசலில் சர வெடியை கொளுத்தி விட. நந்தினியின் வீடே அதிர்ந்தது.கதவெல்லாம் சாற்றிக்கொண்டு தன் அறையில் காதை மூடிக் கொண்டு அமர்ந்திருந்த நந்தினி, சிறிது நேரத்திற்குப் பின் பொறுக்க முடியாமல் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்ததும் தான், அவள் வரவிற்காகக் காத்திருந்தது போல் ஊர்வலம் மெல்ல நகர்ந்தது.
கம்பீரமான மணமகனாகக் கதிரையும், அருகில் ஒரு இளவரசியைப் போல் அமர்ந்திருந்த சந்தியாவையும் பார்த்த நந்தினியின் மனதில் பொறாமை தான் தோன்றியது. ‘நாம் எவ்வளவு தடுக்கப் பார்த்தும், கல்யாணம் முடிஞ்சிடுச்சே. ஆனாலும் இவ எப்படி டாக்டர் படிப்பை முடிக்கிறான்னு பார்ப்போம். கல்யாணம் முடிந்த பிறகு படிப்பது அவ்வளவு சுலபமா என்ன…’ என்று அடுத்ததற்குத் தாவினாள்.
நந்தினியை வெளியே வரன்லைனா விட்டுவிடுவோமா, யார்கிட்ட என்பது போல் சித்தார்த் அவளை ஒரு பார்வை பார்க்க, நந்தினியின் அருகில் நின்ற அவளின் அம்மா “யாருடி அவன்…? உன்னைப் பார்த்து இந்த முறை முறைக்கிறான்.” என்றதும்.
நந்தினி “என்னைக் கேட்டா எனக்கு எப்படித் தெரியும்.” என்று எரிந்து விழுந்தபடி உள்ளே சென்றாள்.
‘இவளுக்கு முதல்ல ஒரு மாப்பிள்ளையைப் பார்த்துக் கல்யாணத்தை முடிக்கணும், அப்ப தான் இவ திருந்துவா…’ என்று நினைத்தபடி அவள் அம்மாவும் உள்ளே சென்றார்.
அவரவர் மனம்படி தான் வாழ்க்கை அமையும். ஆயிரம் தடைகள் வந்த போதும், சந்தியா தான் விரும்பியவனையே கை பிடித்துத் தன் புகுந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தாள்.
நேரம் இரவு எட்டு மணி, இடம் சந்தியாவின் அறை. குளியல் அறையிலிருந்து குளித்துவிட்டு வெளியே வந்த கதிர், தன் உடைகளை எடுத்து அணிய. சந்தியா கைகளில் பாத்திரங்களுடன் உள்ளே நுழைந்தாள்.
கதிர் என்ன என்பது போல் அவளைப் பார்க்க. “நைட் சாப்பாடு மாமா…” என்றாள் சந்தியா அவளாகவே புரிந்து கொண்டு.
“இங்க ஏன் எடுத்துட்டு வந்த. நானே கீழே வருவேன் இல்ல…..”
“இல்ல, அம்மா தான் சொன்னங்க, ரூமுக்கு எடுத்திட்டுப் போகச் சொல்லி. கீழே நிறையப் பேர் இருக்காங்க அதுதான்.…” என்ற சந்தியா, அந்த அறையில் ஓரமாக இருந்த சின்ன டேபிளில் கொண்டு வந்த பாத்திரங்களை வைக்க, வெளியே வேதவல்லி சந்தியாவை அழைக்கும் குரல் கேட்டது.
வெளியே சென்ற சந்தியா திரும்பி வரும் போது. அவள் கையில் இன்னும் சில பாத்திரங்கள் கொண்டு வந்தாள். கதிர் சாப்பிட உட்கார்ந்ததும், சந்தியா கதிருக்கு புது வெள்ளி தட்டில் பரிமாற,
கதிர் முதல் வாய் உணவை எடுத்து சந்தியாவின் வாய் அருகே கொண்டு செல்ல, நின்று டம்ளரில் நீர் ஊற்றிக்கொண்டிருந்த சந்தியா கதிரின் செயலில் திடுக்கிட்டு போய், பதற்றத்தில் ஊற்றிக்கொண்டிருந்த நீரை கீழே சிந்தினாள்.
அவளைப்பார்த்து சிரித்த கதிர் “நீ என்ன அடிக்கடி ஜெர்க் ஆகுற…” என்று கிண்டல் செய்தவன், அவளைப் பிடித்து அருகில் இருந்த சேரில் உட்கார வைத்து, கையில் வைத்திருந்த இட்லியை அவளுக்கு ஊட்டி விட்டான். சந்தியா வெட்க புன்னகையுடன் வாங்கிக்கொண்டாள்.
“நீயும் சாப்பிடு சந்தியா…” என்று கதிர் சொன்னதும், சந்தியா தனக்கும் தட்டில் உணவை எடுத்துக்கொண்டாள்.
வேதவல்லி மருமகனுக்காக இட்லி, தோசை, சப்பாத்தி என்று விதவிதமாக சமைத்து கொடுத்திருந்தார்.
சந்தியா எடுத்த முதல் வாய் உணவை, கதிர் அவனுக்கு ஊட்டி விடச் சொல்லி கேட்க. சந்தியா வெட்கத்துடன் முடியாது என்று மறுக்க,
“ஹே ப்ளீஸ் சந்தியா. இன்னைக்குத் தான் நமக்குக் கல்யாணம் ஆகியிருக்கு. இந்த நாள் நமக்கு ஸ்பெஷல் இல்லையா….” என்றதும், சந்தியா கதிரின் முகம் பார்க்காமல். வேறு பக்கம் பார்த்துக்கொண்டு அவனுக்கு ஊட்டி விட்டாள்.
அவளது செய்கையில் கதிரின் முகத்தில் புன்னகை மலர்ந்தது, மேலும் அவளைச் சங்கடத்தில் ஆழ்த்தாமல். அங்கிருந்து தொலைக்காட்சியை உயிர்பித்தவன், அதைப் பார்த்துக்கொண்டே மெதுவாகச் சாப்பிட்டான்.
சந்தியா கதிரை அடிக்கடி பார்ப்பதும். பின் தலை குனித்துச் சாப்பிடுவதுமாக இருந்தாள். அவள் பார்வையை உணர்ந்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல் கதிர் இருந்தான்.இருவரும் சாப்பிட்டு முடித்ததும், பாத்திரம் எடுக்க வந்த வேதவல்லியிடம் சந்தியா எல்லாவற்றையும் எடுத்து கொடுத்துவிட்டு வந்தாள்.
கதிர் சென்று கட்டிலில் சாய்ந்து அமர. சந்தியா என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க. அவளையும் கட்டிலில் உட்கார சொன்ன கதிர், சந்தியா அமர்ந்ததும், அவளது வலது கையைத் தன் கையில் எடுத்துக் கொண்டான்.
மருதாணி வைத்திருந்த சிவந்த விரல்களை நீவி விட்டவன் “நம்ம கல்யாணம் நடந்துடுச்சு. இப்ப உனக்குச் சந்தோஷமா…” என்றதும், சந்தியா வெட்கத்துடன் ஆமாம் என்று தலையாட்ட, கதிர் மருதாணி வைத்திருந்த அவள் உள்ளங்கையில் தன் இதழ் பதித்தான்.
அவனின் முதல் முத்தம் சந்தியாவின் உடல் முழுவதும் சிலிர்க்க செய்ய. அவள் தன் கையை அவனிடமிருந்து உறுவப் பார்க்க, அவளின் வெட்கத்தை உணர்ந்து கையை விட்ட கதிர், கட்டிலில் சாய்த்திருந்த தன் தலையை அவளின் மடிக்கு இடம் மாற்றம் செய்தான்.
சட்டென்று கதிர் மடியில் படுத்ததும், சந்தியாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவளுக்கு ஒரே படபடப்பாக இருந்தது. அறையில் ஏசி ஓடிக்கொண்டிருந்ததால். கதவு சாற்றி தான் இருந்தது. கதிர் அதை எல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை. அவன் எதோ யோசனையில் இருந்தான். சந்தியாவின் விரல்களை அப்போதும் நீவி விட்டுக் கொண்டு தான் இருந்தான்.
சிறிது நேர தயக்கத்திற்குப் பின், சந்தியா கதிரின் தலையை மெதுவாக வருடி விட, கதிருக்கு அது மிகவும் சுகமாக இருக்க. அவன் கண்களை மூடிக்கொண்டான்.சந்தியா இன்று தான் கதிரின் முகத்தை இவ்வளவு அருகில் பார்க்கிறாள். அடர்த்தியான புருவமும், பெரிய விழிகளும், வழவழப்பான கன்னங்களும், அளவான மீசையும், சிவந்த இதழ்களும் என்று ஒவ்வொன்றாக ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
இருவரும் எதோ ஒரு மோன நிலையில் இருந்தனர். சந்தியா அவன் தலையை வருடி விட்டபடி இருக்க, திரும்பிப்படுத்த கதிர், சந்தியா புடவை கட்டியிருந்ததால், தெரிந்த அவளின் இடையில் விரல்களால் கோலம் வரைய, சந்தியாவின் உடலெங்கும் புது ரத்தம் பாய்ந்தது போல் இருந்தது. அதோடு அவளுக்கு மிகவும் கூச்சமாகவும் இருந்தது.
அவளால் கதிரின் கையைத் தள்ளிவிடவும் முடியவில்லை. தடுக்கவும் பயமாக இருந்தது. சந்தியா கூச்சம் தாங்காமல் நெளிய ஆரம்பிக்க, அவளின் அசைவில் அதுவரை மோக வலையில் இருந்த கதிர் வெளியே வந்தான்.
‘இவ பக்கத்தில் இருந்தா. நம்ம கன்ட்ரோல் எல்லாம் போய்டுது…’ என்று நினைத்தவன், அதற்காக உடனே அவளிடமிருந்து விலகவில்லை. அப்படி விலகினால் அது சந்தியாவை வருத்தப்பட வைக்கும் என்று தெரியும். அதனால் சந்தியாவிடம் சிறிது நேரம் வேறு பேசினான்.
“இந்நேரம் சித்து, பாலா எல்லாம் ட்ரைன்ல ஏறி இருப்பாங்க. மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் பார்த்துட்டு, கிளம்பறதா சொல்லி இருந்தாங்க. அதனால் தான் மதியம் சாப்பிட்டதுமே கிளம்பிட்டாங்க.”
சந்தியாவின் முகத்தைப் பார்த்த கதிர் “கல்யாண நாள் அதுவுமா அழுதுட்ட இல்ல நீ. நாம எதிர்ப்பார்க்காதது எல்லாம் நடந்துடுச்சு...” என்றான் வருத்தத்துடன்.
சந்தியா பதில் சொல்லாமல் மெளனமாக இருந்தாள். ஆனால் அவள் கைகள் கதிரின் தலையை வருடுவதை மட்டும் நிறுத்தவில்லை.
“சந்தியா உனக்குக் காலேஜ்க்கு தேவையான டிரஸ் எல்லாம் நாளைக்கு எடுத்துத் தயாரா வச்சுக்கோ. இனி நான் உன்னைப் படிக்க வைக்கிறேன். அதனால் உங்க அப்பாக்கிட்ட பணம் எதுவும் வாங்காத. அப்பாக்கிட்ட நீ காலேஜ்ல போட்டுகிற மாதிரி மெலிசா தான் தாலி செயின் செய்யச் சொல்லியிருந்தேன். அதனால் அது ஒன்னும் பிரச்சனை இல்லை...” என்றவன், சந்தியாவின் மார்பின் மீதிருந்த தாலியை கையில் எடுத்து பார்க்க, அவன் விரல்களின் தீண்டலில் சந்தியாவிற்கு மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது.
ஆனால் அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் கதிர் இல்லை. அவன் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.
“உனக்கு ரொம்பத் தேவையான நகைகள் மட்டும் எடுத்துட்டு, மிச்சத்த உங்க வீட்லயே கொடுத்துட்டு வந்திடு...” என்றான்.
துரையின் முழுச் சம்மதமில்லாமல் நடந்த திருமணத்தில், அவர் கொடுக்கும் சீரை மட்டும் வாங்கிக்கொள்ளக் கதிர் விரும்பவில்லை. அதனால் அப்படிச் சொல்கிறான் என்று சந்தியாவுக்கும் புரிந்தது.
காலையில் தன் தந்தை அடித்த கூத்துக்குக் கோபப்படாமல் இந்த அளவு பொறுமையாகப் பேசுகிறானே. அதுவே பெரிய விஷயம் என்று சந்தியா நினைத்தாள். ஆனால் அவளுக்குத் தெரியாது திருமணம் முடிந்து, சந்தியா வீட்டிற்கு வர மாட்டேன் என்று கதிர் சொன்னது.
மறு வீட்டிற்குச் செல்லும் நேரத்தில் தன் தந்தையிடம் வந்த கதிர் “நான் அங்க போக மாட்டேன்.” என்றான் எங்கோ பார்த்துக்கொண்டு.
அவன் சொன்னதைக் கேட்டு திடுக்கிட்ட பெரியசாமியும், லக்ஷ்மியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.