“உன் மாமனாருக்கு தான் எது எப்ப செய்றதுன்னு தெரியலைன்னா, நீயுமா கதிரு. இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் அங்க தான் தங்கணும்.” என்றார் பெரியசாமி கோபமாக.
“நீ இன்னைக்குக் கண்டிப்பா அங்க தான் தங்கணும். நீ அங்க போகலைன்னா கேட்கிறவங்களுக்குப் பதில் சொல்ல முடியாது. இன்னைக்கு ராத்திரி சடங்கு வேற இருக்கும்...” என்றார் லக்ஷ்மியும் தவிப்பாக.
“என்ன முறை…? என்ன சடங்கு…? அது எல்லாம் வேண்டாம்.” என்றான் கதிர் எரிச்சலாக.
அவன் எதற்கு அப்படிச் சொல்கிறான் என்று பெரியசாமிக்குப் புரிந்தது. அதனால் அவர் “நீ போ கதிரு. எந்தச் சடங்கும் வைக்காம நான் பார்த்துக்கிறேன். நீ இன்னைக்கு ஒரு முறைக்கு மட்டும் அங்க போய்த் தங்கிட்டு வந்திடு. பிறகு அங்க போறதும், போகாததும் உன் விருப்பம்...” என்றார்.
தன் தந்தை சொன்னதற்காகத் தான் கதிர் இங்கு வந்திருந்தான். அதைச் சொல்லி சந்தியாவை வருத்தப்பட வைக்க விரும்பாமல் அமைதியாக இருந்தான். சந்தியாவின் மடியில் படுத்திருந்த கதிர், அவள் முகத்தைப் பற்றி அருகில் இழுத்து, அவள் நெற்றியில் இதழ் ஒற்ற. அவளின் இதழ்களும் வா என்று அழைப்பதை போல் இருக்க. கஷ்டப்பட்டுத் தன்னை அடக்கியவன், அவள் மடியிலிருந்து விலகி படுத்து “ரொம்ப நேரம் ஆகிடுச்சு, நீ போய்த் தூங்கு சந்தியா.” என்றான்.
கட்டிலிருந்து எழுந்த சந்தியா பெரிய விளக்கை அணைத்து விட்டு, இரவு விளக்கை போட்டுவிட்டு, கதவை திறந்து கொண்டு பக்கத்து அறைக்குச் சென்றாள்.சந்தியாவுக்குக் கதிருடன் நடந்த திருமணமே போதும், அவள் இப்போதைக்கு வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை.
அவளுக்குக் காலையிலிருந்து கல்யாண அலைச்சல் வேறு. அதனால் படுத்ததும் உறங்கி விட்டாள். கதிர் தான் சிறிது நேரம் புரண்டு கொண்டே இருந்தான். பிறகு களைப்பின் காரணமாக அவனுமே சீக்கிரம் உறங்கி விட்டான்.
வேதவல்லியை தேடி மாடிக்கு வந்த துரை, சந்தியா தனியாக வேறொரு அறையில் படுத்திருப்பதைப் பார்த்து “ஏன் தனியா படுத்திருக்கு…?” என்றதும்,
அவரைப் பார்த்து முறைத்த வேதவல்லி “இன்னைக்கு நாள் நல்லா இல்லையாம். அண்ணன் சொன்னாங்க அதுக்குத் தான்.” என்றார். ஆனால் துரை அதை நம்பவில்லை.
அவரையே பார்த்த வேதவல்லி “ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு ஊர்ல இருக்கப் போறாங்க. ரெண்டு நாள் சேர்ந்துட்டு அப்புறம் பிரிஞ்சு இருந்தா கஷ்டமா இருக்காதா. அதனால வேண்டாம்னு கதிர் நினைச்சிருக்கும்...” என்றார்.
“ஒழுங்கா படிப்பை முடிச்சதும் கல்யாணத்தை வச்சிருக்கலாம். பாவம் சின்னஞ்சிறுசுங்க இன்னும் எவ்வளவு நாளைக்குப் பிரிஞ்சு இருக்கணுமோ….” என்று முனங்கிக்கொண்டே வேதவல்லி அவரின் வேலையைப் பார்க்க,
“ஏன் உன் அண்ணன் மகனை சென்னைக்கு வேலைய மாத்திட்டு வர சொல்லு…” என்று துரை வாயை விட,
“நல்லா என் வாயில வந்திடும். அவன் மாமனாரு தான் அங்க கம்பெனிய வச்சு நடத்துறது, கேட்டதும் வேலைய மாத்தி கொடுக்க…” என்று வேதவல்லி கொதிக்க, இதற்கு மேல் பேசினால் அவ்வளவு தான் என்று உணர்ந்த துரை வேகமாகக் கீழே இறங்கி சென்றார்.
தன் பெண் கதிரோடு சேர்ந்து ஊர் சுற்றுவதாக நினைத்துத்தான் அவர் வேகமாகத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார். ஆனால் அப்படி ஊர் சுற்றுபவனாக இருந்தால். திருமணம் முடிந்த பிறகு தன் மனைவியை விட்டு விலகி இருப்பானா? நாம் தான் யாரோ சொன்னதை வைத்து தவறாக நினைத்து விட்டோமோ, என்று முதன் முறையாக யோசிக்க ஆரம்பித்தார்.
கதிர் மறுநாள் காலை எழுந்ததும், ஓடிக்கொண்டிருந்த ஏசியை அணைத்தவன், அந்த அறையின் ஜன்னல்களைத் திறந்துவிட்டு குளியல் அறைக்குள் சென்றான். அவன் திரும்பி வந்த போது சந்தியா அங்கே இருந்தாள்.
தலை குளித்து இன்னும் சரியாகக் காயாததால் கூந்தலை விரித்து விட்டிருந்தாள். அதிகாலையில் பூத்த, புத்தம் புது மலரை போல் இருந்தவளைப் பார்த்ததும், அணைக்கத் துடித்த கரங்களை அடக்கினான் கதிர். அவனுக்கு நேற்றே புரிந்திருந்தது, ஆரம்பித்தால் நிறுத்துவது கஷ்டம் என்று.
சந்தியா கதிரை பார்த்து புன்னகைத்தவள், அவனுக்குக் கொண்டு வந்த காபியை ஊற்றிக் கொடுக்க, அவளைப் பார்த்தபடியே அதைக் குடித்து முடித்தான். சந்தியா அவள் உடைகளை எடுத்துப் பெட்டியில் அடுக்கி வைத்தாள்.
கதிர் குளிக்கக் கிளம்பியதும் “நான் போய் டிபன் எடுத்துட்டு வரேன்.” என்று சந்தியாவும் எழுந்துகொள்ள,
“ஹே! எதுக்கு என்னை ரூம் உள்ளயே அரெஸ்ட் பண்ணி வச்சிருக்க. நான் கீழயே வந்து சாப்பிட்டுக்கிறேன்.” என்று கதிர் சொன்னதும், சந்தியாவும் சரி என்றாள்.
துரை கதிரிடம் எப்படி நடந்து கொள்வாரோ என்று பயந்தே. அவனை அறையிலேயே வைத்திருக்கச் சொல்லி வேதவல்லி சொல்லியிருந்தார்.
கதிர் குளித்து முடித்து, தயாரான போது. சந்தியாவும் பட்டு புடவை உடுத்தி, தலையைப் பின்னி மல்லிகை பூ வைத்திருந்தாள். தலை நிறையப் பூவும், நெற்றி வகிட்டில் குங்குமும் வைத்து மங்களகரமான அழகோடு நின்றவளைப் பார்த்ததும்,
“ஹே! என்னை ஒழுங்கா இருக்க விடமாட்ட போலிருக்கே…” என்று சொல்லிக்கொண்டே கதிர் அவளை அணைக்க, சந்தியா புன்னகையுடன் அவன் மார்பில் சாய்ந்தாள்.
இருவருக்கும் விலகவே மனமில்லை. சந்தியாவை அணைத்தபடியே “என்ன உலக அதிசயமா இருக்கு. நீ வாயத் திறந்தா மூடவே மாட்ட, ஆனா இப்ப பேசவே மாட்டேங்கிற….” என்று கதிர் அவளை வம்பிழுக்க,
“அது அப்படித்தான்….” என்று கிசு கிசுப்பாகச் சொன்ன சந்தியா, இன்னும் அழுத்தமாகத் தன் கணவனின் மார்பில் ஒன்றினாள்.
கதிரும், சந்தியாவும் கீழே இறங்கி சென்றபோது. அங்கே உறவினர்கள் அனைவரும் பரப்பரப்பாக ஆளுக்கொரு வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இன்று மாப்பிள்ளை வீட்டினருக்குப் பெண் வீட்டில் விருந்து கொடுக்க வேண்டும் அதற்க்கு தான் இந்தப் பரபரப்பு.
கதிர் ஹாலில் அமர்ந்து உறவினர்களுடன் பேசிக்கொண்டிருந்தான். வேதவல்லி அவனைச் சாப்பிட அழைத்ததும், எழுந்து வந்தவன் “மாமா சாப்பிட்டாங்களா அத்தை…” என்று விசாரிக்கவும் மறக்கவில்லை.
“இல்ல கதிரு அவரு இன்னும் குளிக்கல எதோ வேலையா இருக்காரு. நீயும், சந்தியாவும் முதல்ல சாப்பிடுங்க.” என்ற உணவை வேதவல்லி பரிமாற, உள் அறையிலிருந்து துரை இதையெல்லாம் பார்த்துக்கொண்டு தான் இருந்தார்.
கதிர் சாப்பிட்டதும், நான் கொஞ்சம் நேரம் வெளிய போயிட்டு வரேன் என்றவன், சோலையின் கடைக்குக் கிளம்பி சென்றான்.மதிய விருந்துக்குக் கதிரின் குடும்பத்தாரும், உறவினர்களும் வந்தனர். சுபாஷை பார்த்ததும் சற்று இளகி இருந்த துரை மீண்டும் முறுக்கிக்கொண்டார்.
அதற்கு ஏற்றார் போல் வாசு வேறு “அன்னைக்கு என்னமோ அந்தக் குதி குதிச்ச, இப்ப நீயே உன் பெண்ணை அவங்க வீட்ல செஞ்சிருக்க….” என்று கிண்டலாகக் கேட்டதும், துரையின் முகம் கோபத்தில் சிவந்தது.
மதிய விருந்து முடிந்து கிளம்பிய கதிரின் குடும்பத்தாருடன் சந்தியாவும் கிளம்பிய போது, பெற்ற மகளைப் பிரியும் வருத்தத்தில் துரையின் கண்களும் கலங்கத்தான் செய்தது. அதுவும் சந்தியா அப்படியொரு அழுகை அழுதாள்.
சாதாரணமாக என்றால் அவள் அப்படி அழுதிருக்க மாட்டாள். அவளுக்குத் தன் தந்தையின் முழு விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டு செல்வது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
‘நீ என்ன வெளிய யார் வீட்டுக்கோ, வாக்கப்பட்டுப் போற மாதிரி இப்படி அழுகிற. உன் தாய் மாமா வீட்டுக்கு தான போற. அதுவும் அடுத்தத் தெருவில இருக்கிற வீட்டுக்கு.நீ அங்க இருந்து அம்மான்னு கூப்பிட்டா. உங்க அம்மா இங்கிருந்து ஓடி வரப்போறா. இதுக்கு இம்புட்டு அழுகையா...’ என்று நிலவரம் தெரியாமல் உறவினர்கள் கேலி செய்ய. சந்தியாவும் அழுகையை நிறுத்திவிட்டு தன் கணவன் வீடு சென்றாள்.
முன் தினமே புது மருமகள் செய்ய வேண்டிய சடங்கு, சம்பிரதாயங்களைச் சந்தியா செய்திருந்ததால், லக்ஷ்மி அவளை கதிரின் அறைக்குச் சென்று ஓய்வு எடுக்கச் சொன்னார். கதிரும் அவளுடன் சென்றான்.
சந்தியா நேராகச் சென்று கட்டிலில் விழுந்தவள். அதன் பிறகு ஒரே அழுகை தான். கதிரும் சமாதானம் செய்து களைத்து விட்டான். ஆனால் சந்தியாவின் கண்ணீர் மட்டும் நிற்கவில்லை. சிறிது நேரம் சென்று அழுதபடியே சந்தியா உறங்கி விட, கதிரும் தரையில் ஒரு தலையணையைப் போட்டு படுத்து விட்டான்.
மாலையில் எழுந்த சந்தியாவிற்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. முதலில் இது காலையா, மாலையா என்றே தெரியவில்லை. சுற்றி கடிகாரம் எங்கிருக்கிறது என்று பார்த்த போது தான். அது கதிரின் அறை என்பதே நினைவுக்கு வந்தது.பின் ஒவ்வொன்றாக நினைவுக்கு வர ‘அழுதிட்டே தூங்கிட்டோம் போலிருக்கு…’ என்று நினைத்தவள், தன் கணவன் எங்கே என்று தேட, கதிர் கீழே படுத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
அவனைப் பார்த்ததும் சந்தியாவுக்கு அவள் குறும்புத்தனம் தலைதூக்க “இரு மாமா வரேன்.” என்று நினைத்தவள், கீழே சென்று கதிரின் அருகில் நெருங்கிப்படுத்துக் கண்களை மூடிக்கொண்டாள்.
சிறிது நேரம் வரை ஒன்றும் நடக்கவில்லை. சந்தியா மெதுவாகக் கண் திறந்து பார்க்க, கதிர் அப்போதும் தூங்கி கொண்டு தான் இருந்தான்.
இது வேலைக்காகாது என்று நினைத்தவள், மெதுவாகத் தன் கால் கட்டை விரலால். கதிரின் பாதத்தை வருட, கதிரின் தூக்கம் கலைந்தது. சந்தியா நல்ல பிள்ளை போல் கண்களை மூடிக்கொண்டாள்.
தன் பெரிய விழிகளைக் கொஞ்சமாகத் திறந்த கதிர், வெகு அருகில் சந்தியாவைப் பார்த்ததும், புன்னகையுடன் அவளை அணைத்துக் கொண்டான். சந்தியாவுக்கு உடலெங்கும் புது வித மயக்கம். கதிர் அதோடு நிறுத்தாமல். மேலும் முன்னேற, இப்போது சந்தியாவுக்குத் தான் திண்டாட்டம்.
சந்தியாவின் கழுத்து, நெற்றி, கன்னம் என்று முத்தமிட்டுக்கொண்டே வந்த கதிர், அவள் இதழ்களை நெருங்கும் வேளையில் இருவரின் உதட்டுக்கும் சிறு நூல் அளவே இடைவேளை இருந்த போது “மாமா கதவு திறந்திருக்கு….” என்று சந்தியா முனங்க.
குளிர் நீரை முகத்தில் கொட்டியது போல் கதிர் துள்ளி எழுந்தான். எழுந்த வேகத்தில் “ஹே நீ எப்படி இங்க வந்த…?” என்று சந்தியாவைப் பார்த்துக் கேட்க, அப்போது சந்தியாவின் முகத்தைப் பார்க்க வேண்டுமே.
‘பொண்டாட்டிய பார்த்து கேட்கிற கேள்விய பாரு. தூக்கத்தில தான் கட்டி பிடிச்சிருக்கு போல.…’ என்று நினைத்தவள், பதில் சொல்லாமல் எழுந்து கட்டிலுக்குச் செல்ல,
கதவை சாற்றி விட்டு வந்த கதிர் “உனக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கா. கதவு திறந்திருக்கும் போது இப்படித்தான் கிட்ட வந்து படுப்பியா. யாரவது மாடிக்கு வந்திருந்தா…..” என்று சந்தியாவைத் திட்ட,
அவனைப் பார்த்து முறைத்த சந்தியா “அதெல்லாம் விடுங்க, நீங்க குடுக்க வந்ததைக் குடுங்க…” என்றதும் கதிர் என்னது என்று புரியாமல் பார்க்க,
கண் சிமிட்டி, உதடு குவித்து முத்தம் என்று சந்தியா ஜாடை செய்ய. “அடிங்க. கொழுப்பை பாரு..” என்று கதிர் அவளை அடிக்க வர,
“சரி நீங்க குடுக்கலைன்னா பரவாயில்லை. நான் குடுக்கிறேன்.” என்று சந்தியாவும் வர
“அடிப்பாவி….” என்று அலறியபடி கதிர் திரும்பி ஓட, சந்தியா அவனைத் துறத்த என்று இருவரும் சிறிது நேரம் கட்டிலை சுற்றி ஓடினார்கள்.
சிறிது நேரம் ஓடிவிட்டு “முடியல…” என்று கதிர் கட்டிலில் விழ, சந்தியாவும் அவன் அருகில் படுத்தாள். இருவரும் காரணமே இல்லாமல் சிறிது நேரம் சிரித்துக் கொண்டிருந்தனர். பின் சந்தியாவின் பக்கம் திரும்பிய கதிர் அவள் கேட்டதைக் கொடுத்தான்.
எதோ சொல்லப் போகிறான் என்று நினைத்துச் சந்தியா பார்க்க, கதிர் அவள் இதழில் தன் இதழை அழுத்தமாகப் பதித்தான்.
முத்தம் என்பது முடிவுரை அல்ல. அது தாம்பத்தியத்தின் முன்னுரை என்பதை அறியாத இரண்டு இள உள்ளங்களும், தங்கள் முத்தத்தில் திளைக்க, அது முடிவு பெறாமல் அடுத்தக் கட்ட தேடுதலை இருவருக்கும் தூண்டியது.
விலக மனமில்லாமல் விலகிய கதிர் “எனக்கு நீ இப்பவே வேணும் போல இருக்கு சந்தியா…” என்றான் ஏக்கமாக.
அதைக் கேட்டு திடுக்கிட்ட சந்தியாவிற்கு, அவன் உணர்ச்சிகளோடு விளையாடி விட்டோம் என்று புரிந்தது. அவளால் இப்போது என்ன பதில் சொல்ல முடியும். படிப்பையும் முடிக்காமல். ஆளுக்கொரு ஊரில் இருந்து கொண்டு தாம்பத்திய வாழ்க்கையைத் தொடங்க முடியுமா. அப்படியே தொடங்கினாலும், இன்று கூடி நாளை பிரிவது கதிருக்கு எவ்வளவு துன்பமாக இருக்கும் என்று நினைத்தவள். மெளனமாகத் திரும்பிப்படுத்தாள். அவள் கண்களிருந்து கண்ணீர் வழிந்தது.