கதிர் வந்ததைக் கவனிக்காமல் சந்தியா அவள் பாட்டுக்குப் பேசிக்கொண்டே செல்ல “நான் எதுக்கு உன்னைக் கூட்டிட்டு போகணும். உன் பக்கத்தில ஒருத்தர் உட்கார்ந்திருக்கார் பாரு அவர் கிட்ட கேளு…” என்று சித்தார்த் புன்னகையுடன் சொல்ல,சந்தியா புரியாமல் திரும்பிப் பார்க்க, அங்கே கதிரை பார்த்ததும் ஆச்சர்யத்தில் கண்களைப் பெரிதாக விரித்தாள்.
கதிரை நேரில் பார்த்தும், அவன் வந்ததை இன்னும் சந்தியாவால் நம்ப முடியவில்லை.கனவோ என்று நினைத்து, அவள் கையில் கிள்ளிப் பார்க்க சென்றவள், எதோ தோன்ற குறும்பு புன்னகையுடன் கதிரின் பக்கம் கிள்ளுவதற்குக் கையைக் கொண்டு செல்ல, அவளைப் பார்த்துப் பொய்யாக முறைத்த கதிர், சித்தார்த் பக்கம் கண்ணைக் காட்ட, புரிந்து கொண்ட சந்தியா சித்தார்த்தை கிள்ளுவதற்கு எழுந்து சென்றாள்.
அதுவரை இருவரும் விழிகளால் பேசிக்கொள்வதைப் பார்த்துக்கொண்டிருந்த சித்தார்த் “அடங்…. கொய்யால…. உங்களுக்கு நான்தான் கிடைச்சேனா டெஸ்ட் பண்ணி பார்க்க. ஆள விடுங்கடா சாமி….” என்று எழுந்து ஓட, சந்தியா அவனைத் துரத்திக்கொண்டு ஓடினாள்.
சித்தார்த் ஓடுவதையும் சந்தியா அவனைத் துரத்துவதையும் பார்த்த அனுவும். ஸ்ரீஜாவும் அங்கு வர, சித்தார்த்தை பிடிக்க முடியாமல் சந்தியா வந்து கதிரின் அருகில் அமர்ந்தாள். கதிர் அவளைப் பார்த்து சிரிக்க, அப்போது தான் அனுவும், ஸ்ரீஜாவும் கதிரை கவனித்தனர்.
கதிரை பார்த்ததும் அவர்கள் இருவரும் அவனிடம் சென்று நலம் விசாரிக்க, சித்தார்த்தும் வந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டான். எல்லோரும் பேசிக்கொண்டிருக்க, சந்தியா மட்டும் எதுவும் பேசாமல் கதிரையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளுக்குக் கதிரை பார்த்தது அவ்வளவு மகிழ்ச்சி. மற்றவர்களுடன் பேசினாலும் கதிரின் கண்களும் சந்தியாவை அடிக்கடி தழுவி சென்றது.கதிர் மற்றவர்களுடனே பேசுவதைப் பார்த்த சந்தியா பொறுமை இழந்தவள் “நீங்க போகல டைம் ஆகுது….” என்று அனுவையும், ஸ்ரீஜாவையும் பார்த்துக் கேட்க,
மற்ற நாட்களில் எல்லோரும் கிளம்பினாலும் கிளம்பாமல், மற்றவர்களையும் கிளம்ப விடாமல் செய்பவள், இன்று ரொம்ப நல்லவள் மாதிரி பேசவும், அனுவும் ஸ்ரீஜாவும் சந்தியாவை வெறுப்பேற்றுவதர்க்காகவே கதிருடன் சிரித்து சிரித்துப் பேசினர்.சந்தியா செய்த கண் ஜாடைகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் அவர்கள் இருவரும் இன்னும் தீவிரமாகக் கதிருடன் பேச, அதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கதிர் சிரிப்பை அடக்கிக் கொண்டு இருந்தான்.
அவள் என்னதான் செய்கிறாள் பார்ப்போம் என்று கதிர் நினைக்க, சந்தியாவா விடுவாள். அவர்கள் இருவரிடமும் தன் வேலை நடக்கவில்லை என்றதும், சந்தியா சித்தார்த்தை பார்த்துப் பாவமாக ஒரு லுக் விட, புரிந்து கொண்ட சித்தார்த் அனுவையும் ஸ்ரீஜாவையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
நண்பேன்டா என்று சித்தார்த்தை பற்றிப் பெருமையாகச் சந்தியா மனதிற்குள் சொல்லிக் கொண்டாள். சிறிது தூரம் சென்ற அனு திரும்பி வந்தவள் “நீ இப்ப ஹாஸ்டலுக்கு வருவியா…” என்று சந்தியாவைப் பார்த்துக் கேட்க, அவள் திரும்பி கதிரை பார்க்க,
“இல்ல இப்ப வெளிய போயிட்டு நைட் கொண்டு வந்து விடுறேன்.” என்றான் கதிர்.
“அப்ப உன் பையைக் கொடு, நான் கொண்டு போறேன்.” என்று அனு சந்தியாவின் புத்தகப் பையை வாங்கிக்கொண்டு செல்ல, தன் தோழியின் அக்கரையில் சந்தியாவிற்குப் புல்லரித்தது.
அவர்கள் சென்ற பிறகு கதிர் சந்தியாவைப் பார்த்து “போகலாமா…” என்றான்.
சந்தியா காது கேட்காதது போல் அமர்ந்திருக்க… கதிருக்கு தெரியும் அவளுக்குக் கோபம் என்று.அவனும் பேசாமல் இருக்க, சிறிது நேரம் பொறுத்த சந்தியா முடியாமல் கதிரை ஓரக்கண்ணில் பார்க்க, அவளையே பார்த்துக் கொண்டிருந்த கதிர் சிரித்து விட்டான். சந்தியாவிற்கும் சிரிப்பு வந்தது.
“இவ்வளவு நேரம் என்னைக் கண்டுக்காம இருந்திட்டு, இப்ப மட்டும் எதுக்குச் சிரிக்கிறீங்க. நீங்களும் அவங்களோட சேர்ந்துட்டு என்னை வெறுப்பேத்துறீங்க இல்ல.” என்று கேட்டுச் சந்தியா கதிரை அடிக்க,
கல்லூரியில் இருந்த சிலர் அவர்கள் இருவரையும் ஆர்வமாகப் பார்ப்பதை உணர்ந்த கதிர் “இது காலேஜ் சந்தியா. வா வெளிய எங்காவது போகலாம். தனியா இருக்கும் போது அடிப்பியாம்.” என்று அவளை அழைத்துக்கொண்டு சென்றான்.
கதிருடன் பைக்கில் இரு பக்கமும் கால் போட்டு அமர்ந்து, அவன் இடையை இறுக்கிக்கட்டிக்கொண்டு, சாலையில் பறந்த போது சந்தியாவிற்கு அவள் கண்ட கனவு பலித்த சந்தோஷம்.
அவள் முகத்தைக் கண்ணாடி வழியாகப் பார்த்த கதிர் “அன்னைக்குச் சிக்னல்ல மேடம் யார் கிட்டயோ சண்டைக்குப் போனீங்க. இப்ப நீங்க மட்டும் இப்படி உட்கார்ந்து வரலாமா…” என்று அவன் கேலியாகக் கேட்க,
“அவங்க லவ்வர்ஸ் அதனால தப்பு. நாம புருஷன், பொண்டாட்டி தான அதனால் தப்பு இல்லை…” என்ற சந்தியாவின் மொக்கை காரணத்தைக் கேட்டு கதிர் தனக்குள் சிரித்துக் கொண்டான்.
அன்று இரவு வரை இருவரும் சேர்ந்து சென்னையை வளம் வந்தனர். இரவு உணவிற்குப் பிறகு கதிர் சந்தியாவை ஹாஸ்டலில் விட்டுவிட்டு காலை சீக்கிரம் வருவதாகச் சொல்லி சென்றான்.பொதுவாகச் சனிக்கிழமைகளில் ஹாஸ்டலில் உள்ளவர்களும் வெளியே சென்று விட்டுத் தாமதமாகத் தான் வருவார்கள் என்பதால் அன்று சந்தியாவை யாரும் பார்க்கவில்லை.
மறுநாள் காலை சீக்கிரம் எழுந்து குளித்துத் தயாரான சந்தியா, எழு மணிக்கே வந்த கதிருடன் வெளியே சென்று விட்டாள். கதிருக்கும், சந்தியாவிற்கும் இவ்வளவு அதிகாலையில் எங்கே செல்வது என்று தெரியவில்லை. கோவில் தான் இந்நேரம் திறந்திருக்கும் என்பதால், இருவரும் அஷ்டலக்ஷ்மி கோவில் சென்று வழிபட்டுவிட்டு, அப்படியே அங்கிருந்த கடற்கரையில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
“உங்க அப்பா கூடப் போன் பேசிட்டு தானே இருக்க…”
“அம்மாவோட தினமும் பேசுவேன். அப்பா கூட ரெண்டு மூணு நாளைக்கு ஒரு தரம் பேசுவேன். அதே மாதிரி அத்தை, மாமாவுக்கும் வாரத்தில ஒரு நாள் நான் போன் செய்வேன். இன்னொரு நாள் அவங்களே பண்ணுவாங்க…”
“ம்ம்.. தெரியும் அப்பா சொன்னார்.” என்று கதிரும் சந்தியாவும் பேசிக்கொண்டிருந்த போது, பாலா கதிரை கைப்பேசியில் அழைத்தான்.
“ஹாய் பாலா எப்படி இருக்க? என்ன காலையிலேயே போன் பண்ணியிருக்கே?”
“ஏன்டா கேட்க மாட்ட, சென்னைக்கு வந்திருக்க ஒரு போன் கூடப் பண்ணல. சித்தார்த் சொல்லித்தான் நீ வந்திருக்கேன்னு தெரியும். பெங்களூர் போனதும் என்னை மறந்துட்டியா….” என்று பாலா குறை பாட,
“அப்படியெல்லாம் எதுவும் இல்லை. சந்தியாவைப் பார்த்து ஒரு மாசம் ஆச்சு. இந்த வாரம் கொஞ்சம் வேலை கம்மியா இருந்தது. அது தான் கிளம்பி வந்தேன். முன்னாடியே பிளான் பண்ணியிருந்தா உனக்குக் கண்டிப்பா சொல்லியிருப்பேன்…”
“யாரு நீ…. சும்மா காரணம் சொல்லாதடா…. சரி அதை விடு. இப்ப எங்க இருக்க?”
“பெசன்ட் நகர் பீச்ல…”
“சந்தியாவைக் கூட்டிட்டு எங்க வீட்டுக்கு வா. மதியம் எங்க வீட்ல தான் உங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு.” என்றதும், கதிர் தயங்க பாலா அவன் சம்மதிக்கும் வரை விடவில்லை.
கதிர் சந்தியாவிடம் “பாலா அவங்க வீட்டுக்கு நம்மைக் கூப்பிடுறான், போவோமா….” என்று கேட்டதற்கு, சந்தியாவும் சரி என்றாள்.
பாலாவிடம் வருவதாகச் சொல்லிவிட்டுப் போன்னை வைத்த கதிர் சந்தியாவை அழைத்துக்கொண்டு காலை உணவு சாப்பிட ஹோட்டல் சென்றவன், சாப்பிட்டதும் ஸ்வீட், பழங்கள் வாங்கிக்கொண்டு பாலா வீட்டிற்குச் சென்றான்.கதிரையும், சந்தியாவையும் பாலா தம்பதியினர் சிறப்பாக வரவேற்றனர். பாலாவின் மகள் ரியா அப்போது தான் தூங்கி எழுந்திருந்தாள். டீ குடித்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தனர்.
சிறிது நேரம் சென்று பாலாவும், ராஜியும் கடைக்குக் கிளம்ப,
“ராஜி வேணா வீட்ல இருக்கட்டுமே. நான் உன்னோட வரேன்.” என்று கதிர் சொல்ல,
“வேணாம்டா… அப்புறம் நான் நிறைய மறந்துடுவேன். இவ என்னைத் திரும்ப, திரும்பக் கடைக்கு அனுப்புவா. இவளோட போனா ஒரே தடவையில எல்லாத்தையும் வாங்கிட்டு வந்திடுவேன். ப்ளீஸ் நான் பாவம்.” என்று பாலா சோகமாகச் சொல்ல, ராஜி அவனின் தோளில் இடித்தாள்.
“சரி ஆனா ரியா எங்களோட இருக்கட்டும்…”
“அவ இருக்கமாட்டா…” என்று பாலா சொல்லும் போதே, “நான் இருப்பேன்..” என்ற ரியா பாலாவிடமிருந்து கதிரிடம் தாவியிருந்தாள்.
அதற்கு மேல் எதாவது சொன்னால், கதிர் இப்போதே சந்தியாவுடன் கிளம்பிவிடுவான் என்பதை உணர்ந்த பாலா, தன் மனைவியை மட்டும் அழைத்துக்கொண்டு சென்றான்
“என்ன உங்க ஃபரண்டுக்காகப் பெரிய திட்டம் போட்டீங்க. ஆனா அவர் உங்க திட்டத்தைத் தகர்த்திட்டார் போல….” என்று ராஜி கிண்டல் செய்ய,
“எனக்கு அவனைப் பத்தி நல்லாவே தெரியும். அதுவும் நம்ம வீட்ல, வாய்ப்பே இல்லை. அவன் கல்யாணத்துக்கு முன்னாடியே சொன்னான், சந்தியா படிச்சு முடிக்கிற வரை எதுவும் இல்லைன்னு. இல்லைனா இங்க ஹோட்டல்ல ரூம் போட்டிருக்க மாட்டானா. அவன் சந்தியாவோட ப்ரீயா பேசிட்டு இருக்கட்டும்ன்னு நினைச்சேன்….” என்ற பாலா தன் பைக்கை கிளப்ப, ராஜி பின்னால் ஏறி உட்கார்ந்தாள்.
பாலாவும், ராஜியும் ஒரு மணி நேரம் சென்று கடையில் இருந்து திரும்பி வந்த போது, கதிர் ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தான். சந்தியாவும் ரியாவும் படுக்கை அறையைத் தவிர இருந்த இன்னொரு அறையில் பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
அதைப் பார்த்த பாலாவுக்கு எதாவது சுவற்றில் முட்டிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. ராஜி அவனைப் பார்த்து கிண்டலாகச் சிரித்து விட்டு உள்ளே சென்றாள்.
“ரியா செல்லம் உன்னோட ஃபரண்ட்ஸ் எல்லாம் கீழ பார்க்ல விளையாடுறாங்க, நீங்க போகலயா….” என்று பாலா தன் மகளிடம் கொஞ்ச,
“ம்ம்… சரி போறேன்.” என்றவள் சந்தியாவை “நீயும் வா…” என்று அழைக்க, பாலா “அவங்க வேண்டாம், நான் வரேன்.” என்று அழைத்துக் கொண்டு சென்றவன், கீழே சென்று ரியாவை அவள் நண்பர்களுடன் விளையாட விட்டு வந்தான்.
பாலா வந்த போது கதிரும், சந்தியாவும் ஹாலில் அமர்ந்து டீவி பார்த்துக்கொண்டிருந்தனர். கதிர் சந்தியாவை ராஜிக்குச் சமையலில் உதவும்படி சொல்லிக்கொண்டிருந்தான். சந்தியாவும் சரி என்று எழுந்து உள்ளே சென்றாள்.
பாலா கதிருடன் பேசாமல் டீவி பார்க்க “என்னடா ஆச்சு? உர்ன்னு இருக்க…”
“ஏன் சொல்லமாட்ட. நீ என்னை உண்மையாவே ஃபரண்டா நினைக்கிறியா கதிர். எங்க வீட்ல சந்தியாவோட சாதாரணமா இருக்க ஏன் இவ்வளவு யோசிக்கிற? அதுக்கு நீங்க எங்க வீட்டுக்கு வராமலே இருந்திருக்கலாம். எங்கயாவது வெளிய போயிருந்தா கூட ப்ரீயா இருந்திருப்பீங்க. நான் தான் தேவையில்லாம உங்க ரெண்டு போரையும் கஷ்டப்படுத்துறேன்….” என்று பாலா வருத்தப்பட,
“நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்லடா. நாங்க நேத்துல இருந்து தனியா தான் இருந்திருக்கோம். இப்ப உங்களோட சேர்ந்து இருக்கிறது சந்தோஷம்தான்.” என்று கதிர் பாலாவை சமாதனம் செய்தான்.
சமையல் அறையில் ராஜி பழங்களை நறுக்கி கொண்டிருக்க, சந்தியா அவளோடு பேசிக்கொண்டிருந்தாள்.
“எதாவது காய் நறுக்கனுமா? நான் நறுக்கி தரேன் ராஜி தாங்க…”
“இன்னைக்கு மட்டன் பிரியாணி சிக்கன் வறுவல் தான். அதனால பெரிசா வேலையில்லை. சீக்கிரம் முடிஞ்சிடும். பாலா ஹெல்ப்பண்ணுவார். நீ போய் கதிரோட பேசிட்டு இரு…” என்று ராஜி சொல்லிக்கொண்டிருக்கும் போதே, பாலா உள்ளே நுழைந்தான்.
பாலா வசதியாகச் சமையல் மேடையில் ஏறி அமர்ந்துக்கொள்ள, ராஜி அவனிடம் நறுக்க வேண்டிய காய்களைக் கழுவி கொடுக்க, பாலா அதை அழகாக நறுக்க ஆரம்பித்தான். ராஜி கோழி வறுவலுக்கு மசாலா சேர்த்து ஊற வைத்தாள்.
அப்போது கதிர் சந்தியாவை அழைக்கும் குரல் கேட்க, ராஜி அவளிடம் பழங்கள் இருந்த தட்டை கொடுத்து “போய் ரெண்டு பேரும் சாப்பிடுங்க…” என்று அனுப்பி வைத்தாள்.
ஹாலில் இருந்த கதிரிடம் சென்று சந்தியா தட்டில் இருந்த பழங்களைக் கொடுக்க, கதிர் ஒரு கையில் தட்டை வாங்கிக்கொண்டு மறு கையால் சந்தியாவின் கைப்பற்றி அவன் அருகில் அமர வைத்துக் கொண்டான்.இருவரும் பேசிக்கொண்டே பழங்களைக் காலி செய்தனர். சாப்பிட்டதும் கதிர் டீவியை அனைத்து விட்டு, சந்தியாவை அழைத்துக்கொண்டு அவளும் ரியாவும் விளையாடிய அறைக்குச் சென்றான்.
அங்கே இருந்த பால்கனியில் நின்று இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். பிறகு அறையின் கதவை தாழிட்டு விட்டு வந்த கதிர், வசதியாகச் சுவற்றில் சாய்ந்து கொண்டு, சந்தியாவைத் தன் மடியில் படுக்க வைத்துக்கொண்டான்.
“மாமா ராஜி அக்கா சமைக்கிறாங்க. பாலா அண்ணா ஹெல்ப்பண்றார். பார்க்கவே நல்லாயிருக்கு தெரியுமா? நமக்கு இது மாதிரி ஒரு வீடு எப்ப வரும்…” சந்தியா ஆசையாகக் கேட்க,கதிருக்கு அவளது ஏக்கம் புரிந்துதான் இருந்தது.
ஆனால் அதை மேலும் அதிகமாக்க விரும்பாமல் “முதல்ல நீ எனக்கு ஒரு விஷயம் சொல்லு. இப்ப நாம நம்ம வீட்லயே இருக்கோம்னு வச்சுக்கோ, உனக்கு முதல்ல சமைக்கத் தெரியுமா…” என்று அவன் பதில் கேள்வி கேட்க,
சந்தியா தெரியாது என்று பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தாள். அப்போது அவள் மிகவும் அழகாக இருந்தாள். கதிருக்கு அவளை உடனே முத்தமிட வேண்டும் போல் தோன்ற, அவள் இதழில் இதழ் பதித்தவன் “தெரியாதுல்ல. முதல்ல நீ ஊருக்கு போகும் போது உங்க அம்மாக்கிட்ட எங்க அம்மாக்கிட்ட சமையல் எல்லாம் கத்துக்க. பிறகு நாம தனிக் குடுத்தனம் போவதை பற்றி யோசிப்போம்.” என்றான்.