மறுவாரம் சனிக்கிழமை விடியற்காலையிலேயே வந்த கதிர் கதவை திறந்த தன் அம்மாவிடம் “நான் போய் அத்தையை பார்த்துட்டு சந்தியாவைக் கூட்டிட்டு வர்றேன் மா…” என்று சொன்னவன், அவர் பதிலை கூட எதிர்பார்க்காமல் அங்கிருந்து விரைய,
‘இப்ப கதிர் நிஜமாவே வந்தானா இல்லை கனவா…’ என்ற குழப்பத்திலேயே லக்ஷ்மி உள்ளே சென்றார்.
“யாரோ வந்த மாதிரி இருந்ததே யாரு?” என்று கேட்டபடி பெரியசாமி வர,
“எல்லாம் உங்க பிள்ளை தான். வந்தவன் உள்ளே கூட வராம அவன் பொண்டாட்டிய பார்க்க போய்ட்டான்.” என்று லக்ஷ்மி குறை சொல்ல,
“பாவம் அவனும் என்ன பண்ணுவான். கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆகப்போகுது. இன்னும் அவன் பொண்டாட்டியோட நிலையா ஒரு இடத்திலிருந்து அவனால குடும்பம் நடத்த முடியுதா. நாளை சந்தியா ஒரு பக்கமும் அவன் ஒரு பக்கமும் போகனும். இங்க இருக்கிற வரை அவன் பொண்டாட்டியோட இருந்துட்டுப் போறான் விடு…” என்று பெரியசாமி சொன்னது லக்ஷ்மிக்கு நியாயமாகவே பட்டது.
“சந்தியா மணி ஆறு ஆச்சு எழுந்து குளி. கதிர் வரும்னு சொன்னியே…” என்று வேதா சந்தியாவை எழுப்ப,
“இவ்வளவு சீக்கிரம் வர மாட்டாங்கம்மா…” என்ற சந்தியா குப்புற படுத்து மீண்டும் உறங்க, வாசலில் அழைப்பு மணியின் ஒலி கேட்டது.
கதவை திறந்த துரையிடம் கதிர் பேசும் குரல் கேட்டு சந்தியா விழுந்து அடித்து எழுந்து அமர்ந்தாள். அதுக்குள்ளே எப்படி வந்தாங்க என்று சந்தியா யோசிக்க,
“குளின்னு சொன்னா கேட்டியா. இப்ப கதிர் வந்தாச்சு. வேகமா இங்கயே குளிச்சிட்டு வா…” என்ற வேதவல்லி மருமகனை வரவேற்க வெளியில் சென்றார்.
வேதவல்லியை பார்த்ததும் “நீங்க ஏன் அத்தை வந்தீங்க நானே உள்ளே வந்திருப்பேனே…” என்ற கதிர் தன் அத்தையை நலம் விசாரிக்க,
“இப்ப எவ்வளவோ பரவாயில்லை கதிர். வலி இல்லை மெதுவா நடக்க முடியுது…” என,
“அப்படியா சந்தோஷம். இருந்தாலும் இன்னும் கொஞ்ச நாள் கவனமாவே இருங்க.” என்ற கதிரின் விழிகள் சந்தியாவைத் தேட, அதை உணர்ந்த வேதா “சந்தியா இப்பதான் குளிக்கப் போனா… நீ முகம் கழுவிட்டு காபி குடி அவ அதுக்குள்ளே வந்திடுவா..” என்றார்.
கதிர் பல் துலக்கி முகம் கழுவி வர, அங்கே அவனுக்காகச் சூடான குழி பணியாரம் தயாராக இருந்தது.கதிர் அதைச் சாப்பிடும் போதே காபியும் வந்தது. கதிர் காபி குடித்துக்கொண்டே பேப்பர் படித்தான்.
அப்போது குளித்து விட்டு வந்த சந்தியா சென்று கதிரின் அருகில் உட்கார, இதமான சோப்பின் நறுமணத்தில் தலை நிமிர்ந்த கதிர் சந்தியாவைப் பார்த்ததும் முகம் மலர, சந்தியாவும் பதிலுக்குப் புன்னகைத்தாள்.இருவரும் ஒருவரை ஒருவர் பார்வையால் வருடியபடி இருக்க, அப்போது சந்தியாவிற்கும் காபியும் பணியாரமும் வந்தது.
“நாம மாடிக்குப் போனா சீக்கிரம் வரமாட்டோம்னு தெரிஞ்சு இப்பவே காலை பலகாரமும் தர்றாங்களோ….” என்று கதிர் சந்தியாவிற்கு மட்டும் கேட்கும் படி சொல்லி சிரிக்க, சந்தியா வெட்கப்பட்டாள்.
அவர்கள் இருவரும் பேசுவதை பார்க்காதது போல் பார்த்துக்கொண்டிருந்த துரையின் முகத்தில் பெருமிதமே இருந்தது.அறைக்கு வந்த கதிருக்கும் சந்தியாவிற்கும் நேரம் சந்தோஷமாகக் கழிந்தது. அன்று மதியம் வரை இங்கிருந்து விட்டு பிறகு கதிரின் வீட்டிற்கும் சென்றனர். மறுநாள் சித்தார்த் வருவதாகப் போன் செய்ததும், இருவரும் மகிழ்ந்தனர்.
மறுநாள் காலை சித்தார்த்தை அழைக்க கதிர் பஸ் ஸ்டான்ட் சென்றிருந்தான். அப்போது ரொம்ப நாள் கழித்து அவனுடன் படித்த நண்பன் ராஜ்குமாரை சந்தித்தான். ஒருவரை ஒருவர் பார்த்ததும் நலம் விசாரித்துக்கொண்டனர்.
“என்னடா எங்க ஊரு பக்கம்?” என்று கதிர் கேட்க, ராஜ்குமார் முகத்தில் அசடு வழிந்தது.
அவனின் முகத்தைப் பார்த்தே யூகித்த கதிர் “யாருடா அது உனக்குப் போய் எங்க ஊர்ல பொண்ணு தர்றது?” என்று ஆச்சர்யப்பட,
“டேய் நீ பொண்ணு தர்றவங்களையும் தர விடாம பண்ணிடுவ போலிருக்கே.” என்று ராஜ்குமார் போலியாக வருந்த,
அவனைப் பார்த்து சிரித்த கதிர் “அதெல்லாம் செய்யமாட்டேன். நீ முதல்ல பொண்ணு யாருன்னு சொல்லு?” என்றான் ஆவலாக.
“பேர் நந்தினி. இன்ஜினியரிங் படிச்சிருக்கு. உனக்குத் தெரியுமா….” என்ற ராஜ்குமார் கதிரின் முகமாற்றத்தை கவனிக்காமல் தொடர்ந்து “ஒரே ஊரு உனக்கு எப்படித் தெரியாமல் இருக்கும்.” என்றவன் கதிரின் முகம் பார்க்க,
அதற்குள் இயல்புக்கு வந்திருந்த கதிர், இவ்வளவு சின்ன ஊரில் நந்தினியை தெரியவில்லை என்று சொன்னால் அது நம்பும்படி இருக்காது என்று புரிந்தவன் “தெரியுமே… சந்தியாவும் நந்தினியும் ஒரே க்ளாஸ் தான் படிச்சாங்க. அதனால தெரியும்…” என்றான் முகத்தில் எதையும் காட்டிவிடாத கவனத்துடன்.
“யாரு சந்தியா?” என்று ராஜ்குமார் புரியாமல் பார்க்க,
“சந்தியா என்னோட மனைவி…” என்றான் கதிர் பட்டென்று.
“என்னடா இவ்வளவு கூலா சொல்ற? உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சா…. எப்போ?”
“அது ஆகப்போகுது ரெண்டு வருஷம். ஆமாம் நீ என்ன இவ்வளவு காலையில வந்திருக்க, வீட்ல சொல்லிட்டு வந்தியா இல்ல சொல்லாம வந்தியா…” என்று கதிர் கேட்டதும்,
அசடு வழிந்த ராஜ்குமார் “அது எப்படிச் சொல்லிட்டு வர முடியும். சொல்லாம தான் வந்தேன். நிச்சயம் முடிஞ்சிடுச்சு ஆனா கல்யாணம் வரை தனியா பார்த்து பேச கூடாதுன்னு வீட்ல ஒரே கண்டிஷன். அது தான் நேரா பெங்களூர்ல இருந்து இங்க வந்துட்டேன்….” என்ற போது அவன் செல்லுக்கு அழைப்பு வர, அவன் அதை எடுத்து பேசும் நேரத்தில் சித்தார்த்தும் வந்து விட்டான்.
கதிரின் கவனம் சித்தார்த் மீது இருந்ததால், அவன் ராஜ்குமாரின் பதற்றத்தை கவனிக்கவில்லை. அதோடு கதிர் தூரத்தில் வந்து கொண்டிருந்த மகேஷை பார்த்ததால், இனி தான் இங்கிருப்பது நல்லது இல்லை என்று புரிந்தவன், சித்தார்த்தை அழைத்துச் செல்லும் சாக்கில் ராஜ்குமாரிடம் விடைபெற,
ராஜ்குமாரும் “சரி பிறகு பார்ப்போம் டா…” என்று அங்கிருந்து விலகி செல்ல, கதிர் தன் பைக்கில் சித்தார்த்துடன் கிளம்பினான்.
ராஜ்குமாரின் பாட்டி தவறி விட்டதாக வந்த செய்தியால், ராஜ்குமார் உடனே அங்குக் கிளம்பி கொண்டிருந்த பஸ்சில் சென்று ஏறிவிட்டான்.அவன் வருவது நந்தினிக்கு மட்டும் தான் தெரியும் என்று நினைத்திருந்தான். அதனால் மகேஷ் வருவான் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
பஸ் கிளம்பி சிறிது தூரம் சென்றதும் மகேஷிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வர, கல்யாணம் நிச்சயம் ஆகி இருப்பதால், இப்போது துக்க விஷயத்தை அவர்கள் வீட்டில் சொல்ல வேண்டாம் என்று அவனின் தந்தை சொல்லியிருந்ததால், அவன் மகேஷின் அழைப்பை எடுக்கவில்லை.மகேஷுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. நந்தினி இன்று காலையில்தான் ராஜ்குமார் வரும் விஷயத்தை அவனிடம் சொல்லியிருந்தாள்.
“என்ன இவன் வந்தான். வந்துட்டு அடுத்தப் பஸ்லயே எரிப்போறான். போன் பண்ணாலும் எடுக்க மாட்றான்.” என்று குழம்பியவனுக்கு, அப்போது தான் அவன் கதிருடன் பேசியது நினைவுக்கு வந்தது.
அவன் இவனிடம் நந்தினியை பற்றி எதுவும் சொல்லி விட்டானோ என்று சந்தேகப்பட்டவன் கோபத்துடன் அங்கிருந்து சென்றான்.ராஜ்குமாரின் சொந்த ஊர் கோவில்பட்டி. அவன் பெற்றோருக்கு அவன் ஒரே பிள்ளை. பெற்றோர் சொந்த ஊரில் இருக்க, இவன் மட்டும் பெங்களூரில் வேலை பார்க்கிறான்.
அதிகக் கட்டுப்பாடான குடும்பம். நந்தினியை பார்த்ததும் ராஜ்குமாருக்கு மிகவும் பிடித்துவிட்டது. இவன் தொல்லை தாங்காமல்தான் திருமணத்தைச் சீக்கிரம் வைக்க நினைத்தனர். ஆனால் இவர்கள் கேட்ட தினத்தில் மண்டபம் இல்லாததால், திருமணத்தை ஐந்து மாதங்கள் தள்ளி வைக்கும் நிலையானது.
ஏற்கனவே வீட்டினருக்குத் தெரியாமல் நந்தினியை பார்க்க வந்த குற்ற குறுகுறுப்பில் இருந்த ராஜ்குமார், நந்தினிக்கு அழைத்துத் தான் வரவில்லை என்று சொல்ல கூட மறந்துவிட்டான்.சித்தார்த் இப்போது துரையின் செல்லப் பிள்ளை ஆனதால், அவனுக்கு ஆர்ப்பாட்டமான வரவேற்பு கிடைத்தது. துரை அவனை விழுந்து விழுந்து உபசரித்தார்.
காலைவந்ததும் அவனுக்குக் காபி, டீ எல்லாம் கொடுக்கவில்லை நேராக ஆட்டுக்கால் சூப்தான். அவனுக்கு என்று தனி அறை ஒதுக்கப்பட்டது.அடுத்த முறை சித்து வருவதற்குள் அந்த அறையில் குளிர்சாதனம் பொருத்திவிட வேண்டும் என்று துரை சொன்னது, சந்தியாவின் காதில் விழுந்து அவள் பொறாமையைத் தூண்டி விட, அவள் காதில் இருந்து புகை வருவதைக் கதிர் தவிர வேறு யாரும் கவனிக்கவில்லை.
சித்து வந்தது தெரிந்து வெங்கியும் வந்து விட்டான். காலையில் டிபன் பூரியும், நாட்டுக்கோழி குழம்பும். சித்தார்த்தும், வெங்கியும் ஒரு வெட்டு வெட்ட, கதிரும் அவர்களோடு அமர்ந்து சாப்பிட்டான்.
“மதியம் ஆத்து மீன் வாங்கி இருக்கு… நீ சாப்பிட வீட்டுக்கு வந்திடு ராசா…” என்று அப்பத்தா கரிசனையாகச் சித்தார்த்திடம் சொல்ல, சந்தியா சோபாவில் அமர்ந்து முறைத்து பார்த்துக்கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த கதிர் சிரிப்பை அடக்கிக்கொண்டிருந்தான்.
சித்தார்த் சாப்பிட்டதும் வெங்கியுடன் வெளியே கிளம்ப, ‘மதியம் கண்டிப்பா வீட்டுக்கு வந்திடனும் சாப்பிட…’ என்று ஆளாளுக்குச் சொல்லியே வழி அனுப்பினர்.
சித்தார்த் சென்றதும் சந்தியாவைப் பார்த்து வேதவல்லி “உனக்குச் சாப்பிட வான்னு தனியா சொல்லனுமா… சாப்டிட்டு சட்டுபுட்டுன்னு கிளம்பி உன் வீட்டுக்கு போ… மருமக வந்த பிறகும் உங்க அத்தை ஒத்தையாவே எல்லா வேலையும் பார்கிறாங்க. நீயும் கூடமாட ஒத்தாசை செய்…” என்றார் எதார்த்தமாக….
அவ்வளவுதான் சந்தியா பொங்கி எழுந்துவிட்டாள் “ஓ… உங்க மகன் வந்ததும், மகளை விரட்ரீங்களா….” இதுவரை ஒற்றைப் பெண் அரசியாய் தன் வீட்டை ஆண்டவளுக்கு, இன்று சித்து வந்ததும் தான் இரண்டாம்பட்ச நிலைக்குத் தள்ளப்பட்டதைப் பொறுக்க முடியவில்லை.
எந்த நொடியும் தன் மனைவி வெடிப்பாள் என்று ஆவலாகக் காத்துக்கொண்டிருந்த கதிர், கால் மேல் கால் போட்டுச் சாவகாசமாக அமர்ந்து அவள் சண்டையை ரசிக்க ஆரம்பித்தான்.
“நேத்து வந்த என் புருஷனுக்கு வெறும் காப்பித் தண்ணி அவனுக்கு மட்டும் ஆட்டுக்கால் சூப்பா….”
“வெறும் காப்பித் தண்ணி மட்டுமா கொடுத்தோம் கூட பணியாரமும் கொடுத்தோமே….” என்ற அப்பத்தாவை பார்த்து முறைத்த சந்தியா தொடர்ந்து “அவனுக்கு வக்கனையா ஆத்து மீன் ஆக்கி போடுவீங்க. என்னை மட்டும் என் மாமியார் வீட்டுக்கு விரட்டுறீங்க. என்னைக்கோ ஒரு நாள் வர்றவனுக்கு ஏசி ரூம் கேட்குதோ….” என்று ஒருவரையும் விட்டு வைக்காமல் சந்தியா சரமாரியாகத் தாக்க,
“என்ன பாப்பா இப்படிப் பேசுற…” என்று தன் மகளின் கோபத்தைப் பார்த்து துரை பதற, வேதவல்லி ‘நீ என்ன வேணா பேசு…’ என்று ரீதியில் அமர்ந்திருந்தார்.
“உன்னை யாரு இங்க வர வேண்டாம் போக வேண்டாம்னு சொன்னது. அவ்வளவு தூரம் இருந்து வந்த பையனுக்கு ஆசையா சமைச்சு போட்டா, உனக்கு எங்க வலிக்குது. வசதியான்ன வீட்டு பையன்… இங்க வந்து கஷ்டப்படக் கூடாது. அதோட நாளைக்கு அவன் பொண்டாட்டி பிள்ளைங்களோட, வந்து தங்க வீடு வசதியா இருக்க வேண்டாம். அதுக்குச் சொன்னா, நீ எதுக்குக் கிடந்து குதிக்கிற…” என்று வேதவல்லி தன் மகளைக் கடிந்து கொள்ள,
“எதுக்குத் திட்டுற… சொன்னா புரிஞ்சிக்கப் போறா. நான் அன்னைக்குச் சித்துவை என் மகன்னு சொன்னது பேச்சுக்கு இல்லை. உண்மையா முழு மனசோடதான் சொன்னேன்…” என்றார் துரை நெகிழ்ந்த குரலில்.
அதுவரை அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த கதிர் “மாமா இவ பேசுறதை எல்லாம் பெரிசா எடுத்துக்கிட்டு, இதே நீங்க சித்துவை சரியா கவனிக்காம இருந்திருந்தா, அப்பவும் இவ உங்க கிட்ட சண்டைக்கு வந்திருப்பா…” என்று அவன் சிரிக்க,
“கரெக்ட் கதிரு… இதுவரை இவளே செல்லமா இருந்துட்டா இல்லை… அது தான் பொறுக்க முடியலை….” என்ற வேதவல்லி தன் மகளைப் பார்த்து “நீ செல்லமா இருந்த காலம் எல்லாம் போய்டுச்சு… இனி உனக்குப் பொறக்க போற பிள்ளைங்க தான் எங்க செல்லம்…” என்றார் கெத்தாக.
அதற்கு அப்பத்தாவும் தலையாட்ட, சந்தியா அவரை முறைக்க “யாரு வந்தாலும் நீ தான்டா அப்பாவுக்கு எப்பவும் செல்லம்…” என்று துரை மகளைச் சமாதானம் செய்ய, சந்தியா அவர் தோளில் சாய்ந்து, தன் தாயை பார்த்து அழகு காட்டினாள். அதைப் பார்த்து கதிரும் வேதவல்லியும் மன நிறைவுடன் சிரித்தனர்.
கதிர் தான் தங்கள் வீட்டு மாப்பிள்ளையிடம் எதோ சொல்லி கொடுத்துவிட்டான் என்று நினைத்து வீட்டிற்கு வந்த மகேஷ் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தான். நந்தினியும் ராஜ்குமாரை செல்லில் அழைத்துப் பார்க்க, அவன் செல் ஸ்விட்ச் ஆப் என்று வந்தது.
“கல்யாணம் மட்டும் எதாவது காரணத்தில நிற்கட்டும், நான் அவனைக் கொன்னுட்டு ஜெயிலுக்குப் போகக் கூடத் தயங்க மாட்டேன்…” என்று மகேஷ் ஆத்திரத்தில் அறிவிழந்து பேச, நந்தினியும் தன் அண்ணனுக்குச் சற்றும் குறையாத கோபத்தில் இருந்தாள்.
மதியம் சித்து வந்ததும், வேதவல்லி அவனுக்குப் பார்த்து பார்த்து பரிமாற “நீங்க ஏன் மா வேலை பண்றீங்க? நானே போட்டு சாப்பிடுறேன்.”
“இருக்கட்டும்ப்பா, இன்னைக்கு ஒரு நாள் வேலை பார்க்கிறதுனால ஒன்னும் ஆகாது…” என்றார் வேதா.
“சந்தியா எங்கம்மா?”
“அவ அவங்க வீட்ல இருக்காப்பா….”
“சந்தியாவுக்கு மீன் குழம்புன்னா ரொம்பப் பிடிக்குமே. நான் வேணா கொண்டு போய்க் கொடுத்திட்டு வரவா….”
“வேண்டாம்… அவங்க மாமியாரும் இன்னைக்கு இதே தான் அங்கயும் சமச்சிருப்பாங்க.” என்று சொன்னவருக்குச் சந்தியா காலையில் செய்த கலாட்டா நினைவுக்கு வர,சிரித்துக்கொண்டார்.