“அதெல்லாம் இல்லை. அவளுக்கு அவங்க அப்பா எப்பவும் அவளைத் தான் தாங்கனும்… இப்ப போட்டிக்கு நீ வந்திட்டேன்னு பொறாமை… அதே சமயம் உன்னை விட்டும் கொடுக்க மாட்டா… நீ வேணா பாரு இன்னும் கொஞ்ச நேரத்தில நீ வந்திட்டியான்னு போன் பண்ணுவா….” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே வீட்டின் தொலைபேசி ஒலித்தது.
வேதவல்லி புன்னகையுடன் சென்று போனை எடுக்க, அந்தப் பக்கம் சந்தியா தான் “சித்து வந்துட்டானா… சாப்பிட்டானா….” என்று விசாரித்தாள்.
“வீட்டுக்கு வந்தவங்களுக்குச் சாப்பாடு போட எனக்குத் தெரியும். நீ முதல்ல உன் மாமியாருக்கு வேலை பார்த்தியா அதைச் சொல்லு…” என்றதும்,
வேலை பார்த்தால் தானே சொல்வதற்கு. அங்கே சென்ற சிறிது நேரம் எல்லோரோடும் பேசிக்கொண்டிருந்தவர்கள், அதன் பிறகு அவர்கள் அறைக்குச் சென்றுவிட்டு இன்னும் கீழேயே இறங்கவில்லை. இதில் எங்கே வேலை பார்ப்பது.
இதைச் சொன்னால் தன் அம்மா திட்டுவார்கள் என்று சந்தியா “சித்துவை சாப்பிட்டதும் இங்க வர சொல்லுங்க.” என்று அதிகாரமாக சொல்லிவிட்டுப் போனை வைக்க, வேதவல்லி தனக்குள் சிரித்துக்கொண்டார்.
சித்தார்த் அங்கே சென்ற போது எல்லோரும் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர். “நீங்களும் சாப்பிடுங்க தம்பி.” என்று பெரியசாமி உபசரிக்க,
“இல்லப்பா.. இப்ப தான் அங்க சாப்பிட்டேன்.” என்றான் சித்தார்த் பவ்யமாக.
“சரி ராத்திரி இங்க தான் சாப்பிடனும்…” என்ற பெரியசாமி, தன் மனைவி லக்ஷ்மியை பார்க்க, அவரும் சித்தார்த்தை அழைத்தார்.
சாப்பிட்டு முடித்ததும் எல்லோருமாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். “இங்க மலை மேல எதோ கோவில் இருக்குன்னு சொன்னியே, அங்க போவோமா…” என்று சித்தார்த் ஆர்வமாகச் சந்தியாவைப் பார்க்க, கோவில் என்றதும் சந்தியா திருட்டு முழி முழிக்க,
கதிர் “போகலாமே…” என்றான்.
கதிர் செல்வோம் என்றதும் சித்தார்த் உடனே எழுந்து கொள்ள, “இரு நான் போய் டிரஸ் மாத்திட்டு வரேன்…” என்ற சந்தியா மாடிக்கு விரைய, அவள் பின்னால் கதிரும் சென்றான்.
இருவரும் கோவிலுக்குச் செல்வதால் வேகமாகத் தலைக்குத் தண்ணீர் ஊற்றி விட்டு வந்தனர். கதிர் குளித்தது தெரியவில்லை. ஆனால் சந்தியாவின் நீள கூந்தலில் இருந்து நீர் வடிய, அதைப் பார்த்த சித்தார்த் “காலையில குளிச்ச தான. அப்புறம் ஏன் திரும்பக் குளிச்ச…” என்று அப்பாவியாகக் கேட்க, அங்கிருந்த பெரியவர்கள் அவன் கேள்வி காதில் விழாதது போல் இருக்க, வெங்கி கிண்டலாகச் சிரித்தான்.
‘இப்படி எல்லார் முன்னாடியும் என் மானத்தை வாங்குறான்னே….’ என்று மனதிற்குள் புலம்பிய சந்தியா “இன்னைக்கு மீன் சாப்பிட்டேன்ல. அது தான் கோவிலுக்குப் போறதுக்கு முன்னாடி குளிச்சிடலாம்ன்னு நினைச்சேன்.” என்று சமாளித்தவள்,
“ஹப்பாடா…” என்று மனதிற்குள் நிம்மதி பெருமூச்சு விட, அதற்கு ஆயுள் சில நொடிகள் தான்.
“ஓ! அப்ப நானும் குளிச்சிட்டு வரவா……” என்று சித்தார்த் கேட்க, வெங்கி அடக்கமுடியாமல் சத்தமாகச் சிரிக்க… கதிர் அவனைப் பார்த்து முறைத்தான்.
மேலும் சித்தார்த் எதுவும் கேட்கும் முன் “வெங்கி நீயும், சித்துவும் ஒரு பைக்கில வாங்க. நானும் சந்தியாவும் ஒரு பைக்கில வர்றோம்…” என்ற கதிர் சந்தியாவுடன் முன்னாள் நடக்க…
“ப்ரோ உங்களை ஏமாத்துறாங்க. நீங்களும் சின்னப் பையன் மாதிரி அவங்க சொல்றதை நம்புறீங்களே….” என்று வெங்கி சொன்னது சித்தார்த்துக்குச் சுத்தமாகப் புரியவில்லை.
அவன் முழிப்பதை பார்த்த வெங்கி “உங்களுக்குக் கல்யாணம் ஆகும் போது புரியும்…” என்றதும், சித்தார்த்துக்கு லேசாகப் புரிய ஆரம்பிக்க
“ச்ச, லூசு மாதிரி கேட்டுட்டோம். இனி பார்த்து பேசணும்.” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.
மகேஷ் ஏற்பாடு செய்திருந்த ஆள் கதிர் எங்கோ வெளியே செல்வதை அவனிடம் சொல்லிவிட்டு கதிரை பின்தொடர்ந்து செல்ல, கதிர் முதலில் சோலை வீட்டிற்குச் சென்றான். கதிரும் சந்தியாவும் இன்னும் சோலை சித்ராவின் குழந்தையைப் பர்ர்க்கவில்லை. அதனால் முதலில் அங்குச் சென்றனர்.
சோலையும் சித்ராவும் அவர்களை அப்போது சுத்தமாக எதிர்ப்பார்க்கவில்லை. திடீரென்று வந்தவர்களைச் சந்தோஷமாக வரவேற்றனர். அதுவும் சித்துவை பார்த்ததும் அவர்கள் சந்தோஷம் மேலும் பெருகியது.
கதிர் குழந்தைக்குச் செயின் வாங்கி இருந்தான். அதைச் சந்தியாவிடம் கொடுத்து போட சொன்னவன், அவன் வாங்கி இருந்த உடையைச் சித்தார்த்திடம் கொடுத்துக் கொடுக்கச் சொன்னான். சித்தார்த் அப்போது தான் நாம் ஒன்றும் வாங்கி வரவில்லையே என்று நினைத்தான். கதிர் அவனிடம் உடையைக் கொடுத்ததும், நன்றி கலந்த புன்னகையுடன் அதை வாங்கிச் சித்ராவிடம் கொடுத்தான்.
அவனால் கதிரை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை. அது எப்படித்தான் இவருக்கு மட்டும் ஒவ்வொருத்தர் மனசும் புரியுதோ, நம்ம சேன்டி சும்மா ஒன்னும் மாமா மாமான்னு இவர் பின்னால சுத்தலை என்று நினைத்தான். அங்கே ஒரு மணி நேரம் இருந்தவர்கள் கோவிலுக்குக் கிளம்பும் போது அவர்களுடன் சோலையும், சித்ராவும் சேர்ந்து கொண்டனர்.
இவர்களைக் கோவில் வரை பின் தொடர்ந்து வந்த மகேஷின் ஆள் அவர்கள் கோவிலுக்குள் செல்வதை மகேஷிடம் தெரிவிக்க, அப்போது வீட்டில் இருந்த மகேஷ் உடனே கிளம்ப, நந்தினியும் அவனுடன் சென்றாள்.
“நீ எதுக்கு நந்தினி வர?”
“எனக்கு அந்தச் சந்தியாவைப் பார்த்து நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்கணும். என் மாமான்னு ரொம்ப அலட்டுவா. உன் மாமனோட யோகிதைய தெரிஞ்சிக்கோன்னு காட்டனும்…” என்றாள்.
“சரி வா…” என்று அவளை அழைத்துக்கொண்டு மகேஷ் சென்றான்.
இவர்கள் மலை ஏறி கோவிலுக்குச் சென்ற போது, அங்கே அவர்கள் எல்லோரும் சாமி கும்பிட்டுவிட்டு பேசிக்கொண்டிருந்தனர். சந்தியாவும் சித்ராவும் குழந்தையை வைத்துக்கொண்டு மண்டபத்தில் உட்கார்ந்திருக்க, அவர்களைச் சுற்றி மற்றவர்கள் நின்றனர்.சந்தியா குழந்தையை மடியில் வைத்திருக்க, அவளருகில் மண்டியிட்டு அமர்ந்த சித்தார்த் குழந்தையின் பிஞ்சு கை கால்களை மிருதுவாக வருடியவன்,
“ரொம்ப அழகா இருக்குல்ல. உனக்கு எப்ப சந்தியா இப்படி ஒரு பாப்பா வரும்?” என்று கேட்டதும், சந்தியா வெட்கப்பட, கதிர் புன்னகைக்க,
“டேய் குழந்தை என்னமோ ட்ரைன்ல பஸ்ல ஏறி வந்துட்டு இருக்க மாதிரி எப்ப வரும்னு கேட்கிற…” என்று சோலை சொன்னதும் எல்லோரும் சிரிக்க,
கதிர் மற்றும் சந்தியாவின் முகத்தைப் பார்த்த சித்ரா “சீக்கிரம் வந்திடும்னு தான் நினைக்கிறேன்.” என்றாள்.
அப்போது தான் நந்தினி உள்ளே நுழைந்தாள். இவர்கள் எல்லோரும் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்தவள், தன் அண்ணனுக்கு முன்பாக விரைந்து சென்று சந்தியாவின் எதிரில் நின்றவள் “என்ன நினைச்சது சாதிச்சிட்டோம்னு சந்தோஷமா இருக்கியா?” என்று கேட்க,
அவளைப் புரியாமல் பார்த்த சந்தியா குழந்தையைச் சித்ராவிடம் கொடுத்துவிட்டு எழுந்து நின்றவள் “என்ன சொல்ற நீ எனக்கு ஒண்ணுமே புரியலை….” என்றாள்.
“ஹா.. ஹா உனக்கு ஒண்ணுமே புரியாதே. இப்படித் தான் பத்தாவது படிக்கும் போது, நான் சரியாவே படிக்கலைன்னு சொல்லிட்டு டிஸ்ரிக்ட் ஃபர்ஸ்ட் வந்த. உன் நடிப்பை எல்லாம் நீ வேற யார்கிட்டயாவது காட்டு. என் கல்யாணம் நின்னுடுச்சுன்னு தான நீ சந்தோஷமா இருக்க…” என்று நந்தினி சந்தியாவைக் குற்றம் சாட்ட, அதைக் கேட்டு நந்தினி மட்டும் இல்லை அங்கிருந்த எல்லோருமே அதிர்ந்தனர்.
கதிருக்குக் குழப்பமாக இருந்தது. காலையில் ராஜ்குமார் நன்றாகத் தானே பேசினான். அதற்குள் என்ன ஆனது என்று யோசிக்க,
“உன் கல்யாணம் நின்னுடுச்சா? ஏன்? அதுவும் அதுக்கு நான் எப்படிப் பொறுப்பாவேன்?” என்று சந்தியா புரியாமல் கேட்க,
“நீ இல்லை உன்னோட மாமா தான் என் கல்யாணம் நிக்கக் காரணம்…” என்று நந்தினி கதிரைப் பார்த்துக்கொண்டே சொல்ல, கதிர் அதிர்ந்தான்.
“என் மாமா உன் கல்யாணம் நிக்க என்ன செஞ்சாங்க?”
“அது நீ அவங்களைத் தான் கேட்கனும். நேத்து வரை என் கிட்ட நல்லா பேசிட்டு, என்னை இன்னைக்குப் பார்க்க வரேன்னு சொன்ன ராஜ்குமார், நம்ம ஊர் வரை வந்துட்டு எங்க வீட்டுக்கு வரல. நாங்க போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கிறார். காலையில் அவர் கிட்ட உன் மாமா தான் பேசினார். அவர் ராஜ்குமார்கிட்ட என்னைப் பத்தி என்ன சொன்னாருன்னு கேளு?” என்று நந்தினி சந்தியாவைப் பார்க்க, சந்தியா திரும்பி கதிரை பார்க்கவே இல்லை.
“என் மாமா நிச்சயம் உன் கல்யாணம் நிக்கிற மாதிரி எதுவும் பேசி இருக்க மாட்டார்…” என்றாள் உறுதியாக.
“அதை நீ சொல்லாத உன் புருஷனை சொல்ல சொல்லு…” என்று மகேஷ் சந்தியாவின் முன்பு கை நீட்டி பேச, அவன் கையைப்பற்றிப் பின்னுக்குத் தள்ளிய சித்தார்த் “ஒழுங்கா மரியாதையா பேசு…” என்றான் கோபமாக.
“நீ யாருடா நடுவுல வர? ஓ! நீ தான இவளோட சென்னையில் ஊர் சுத்தினவன்…” என்று மகேஷ் நக்கலாகக் கேட்க, சித்தார்த் ஒரே குத்தில் மகேஷின் மூக்கை உடைத்திருந்தான்.
மகேஷின் மூக்கில் இருந்து ரத்தம் வடிய அவனால் வலி பொறுக்க முடியவில்லை. நந்தினி தன் அண்ணனின் அருகில் செல்ல,அந்த நிலையிலும் மகேஷ் “உண்மைய சொன்னா வலிக்குதா… சென்னையில ஊர் சுத்தினது பத்தலயா. இங்கயும் வந்துட்ட..” என்று கேட்க,
“சேர்ந்து படிக்கிறவங்களைச் சேர்த்து வச்சு அசிங்கமா பேசுற நீ. கதிர் சந்தியாவை விரும்புறார்னு தெரிஞ்சும், அவரைக் கல்யாணம் பண்ண நினைச்ச உன் தங்கச்சியைப் பத்தி என்னடா சொல்வ?” என்று சித்தார்த் கேட்டதும், நந்தினிக்கு அவமானத்தில் உயிரே போனது போல் இருந்தது.
“என் தங்கச்சிய பத்தி என்னடா சொன்ன?” என்று மகேஷ் ஆத்திரத்தில் சித்தார்த் மீது பாய,
“உன் தங்கச்சிய சொன்னா மட்டும் வலிக்குதா….” என்று சித்தார்த்தும் பதிலுக்குப் பாய, அவர்களோடு வெங்கியும் சேர்ந்து கொள்ள, அந்த இடமே போர்க்களம் போல் இருந்தது.
ஒரு பெண்ணைத் தாக்க வேண்டும் என்று நினைத்தால் ஆண்கள் கையில் எடுக்கும் முதல் ஆயுதம் பெண்ணின் ஒழுக்கத்தைப் பற்றித் தவறாகப் பேசுவது தான். அதுவும் சித்தார்த்தோடு தன்னை இணைத்துப் பேசியதில் சந்தியா கலங்கி போய் இருக்க, கதிர் அவளைத் தோளோடு சேர்த்து அணைத்து, நான் இருக்கேன் உனக்கு என்று சொல்லாமல் சொன்னவன், சத்தமாக “சித்தார்த்…” என்று அழைத்தான்.
சித்தார்த் சண்டையை நிறுத்தி விட்டு கதிரை பார்க்க, அவனை விடு என்பது போல் கதிர் தலை அசைக்க, சித்தார்த் விலகி நின்றான்.
மகேஷை நேராகப் பார்த்த கதிர் “ராஜ்குமார் என்னோட படிச்சவன் அதனால அவனோட பேசினேன். உன் தங்கச்சியைப் பத்தி நான் எதுவும் சொல்லை. அப்படி ராஜ்குமார் நான் சொன்னதா எதாவது சொன்னா, அப்ப வா சண்டைக்கு. நான் எங்க வீட்ல தான் இருப்பேன்.” என்றவன் சந்தியாவோடு நடக்க, மற்றவர்கள் அவனைப் பின் தொடர்ந்தனர்.
சிறிது தூரம் சென்றதும், கதிரின் முன் வந்து நின்ற வெங்கி “உனக்கு என்ன மனசுல காந்தின்னு நினைப்பா? அவனை அப்படியே விட்டுட்டு போற…?” என்றான் கோபமாக.
அவனை அழுத்தமான பார்வை பார்த்த கதிர் “கொஞ்சம் அவன் இடத்தில இருந்து யோசிச்சு பாரு. காலையில ராஜ்குமார் என்னோட தான் பேசினான். பிறகு அவன் ஆளும் வரலை… போன்னும் எடுக்கலன்னா என்ன நினைப்பாங்க? விடு ராஜ்குமார் கிட்ட பேசினா அவங்களுக்கே உண்மை தெரியும்.” என்றான்.
“அது சரி ஆனா அண்ணிய பத்தி தப்பா பேசுறான். அதைக் கேட்க மாட்டியா நீ…” என்று வெங்கி மனம் தாளாமல் சொல்ல,
சுற்றி ஒரு முறை எல்லோரையும் பார்த்த கதிர் “எனக்கு என் பொண்டாட்டிய பத்தி தெரியும். என் மாமனார் சித்துவை மகனாகவே நினைக்கிறாருன்னா, அவன் எப்படிப் பட்டவனா இருப்பான். அவங்க ரெண்டு போரையும் பத்தி எனக்கு யார்கிட்டயும் விளக்கனும்னு அவசியம் இல்லை. கண்டவங்க கண்டதையும் பேசினா நான் பதில் சொல்லனுமா?” என்றவனின் வார்த்தையில் அனல் பறந்தது.
மேலும் தொடர்ந்த கதிர் “மகேஷ்கிட்ட இந்த ஊர்க்காரன்ற முறையில பேசி இருக்கேன். அவன் தங்கச்சிக்கிட்ட சந்தியாவோட ஃப்ரண்டுன்னு பேசி இருக்கேன். அவ்வளவு தான். எனக்கு அவங்க யாரும் இல்லை…” என்றவன் சந்தியாவோடு அங்கிருந்து செல்ல,
அவன் நந்தினியின் பெயரைக் கூடச் சொல்ல விரும்பவில்லை என்று எல்லோருக்கும் புரிந்தது. நந்தினியின் பின்னால் நின்றிருந்த சித்தார்த் “இதை விட யாரும் அசிங்கப்படுத்த முடியாது. இனி மேலாவது திருந்தினா மனுஷ ஜென்மம்…” என்று சொல்லிவிட்டுநடக்க, மகேஷும், நந்தினியும் தலை குனித்து நின்றனர்.
சோலையும் சித்ராவும் அவர்கள் வீட்டிற்குச் சென்று விட, சித்தார்த்தும் வெங்கியும் ஊர் சுற்ற கிளம்ப, கதிரும் சந்தியாவும் மட்டுமே வீட்டிற்கு வந்தனர். அறைக்கு வந்த கதிர் இன்னும் கோபமாகவே இருக்க, சந்தியா கட்டிலில் அவன் அருகில் உட்கார்ந்தவள் “மாமா…” என்று அழைக்க,
“சந்தியா திரும்ப அங்க நடந்ததைப் பத்தி பேசாத…” என்றான் கதிர் சுள்ளென்று.
“ம்ம் இல்லை பேசலை…” என்றவளின் நெஞ்சத்தில் தன் மாமனை நினைத்து அத்தனை பெருமிதம் இருந்தது.
சந்தியா கதிரின் மார்பில் தலைசாய்க்க, கதிர் அவளின் முகத்தைப் பற்றி மெதுவாகத் நிமிர்த்த, அங்கே அவள் விழிகளில் தெரிந்த காதலில் தன்னைத் தொலைத்தவன், எல்லாவற்றையும் மறந்து அவளுடன் கூட, அங்கே நிறைவான தாம்பத்தியம் அரங்கேறியது.