சந்தியா இன்று கதிர் வீட்டுக்கு செல்வது சித்தார்த்துக்குத் தெரியும். அங்கே எல்லோரும் அவளிடம் நன்றாகப் பேசினார்களோ இல்லையோ, அவளை எதாவது திட்டிவிட்டால் என்ற கவலையில் மாலை அவளைப் பார்க்க, அவள் ஹாஸ்டலுக்கு வந்தான்.
சந்தியா இன்னும் வரவில்லை என்பதால், அவளுக்காக வெளியே காத்திருந்தவன் கதிரும், சந்தியாவும் ஒன்றாக பைக்கில் வருவதைப் பார்த்து மகிழ்ந்தான். அத்துடன் சந்தியா முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி, அவன் முகத்திலும் புன்னகையை வரவழைத்தது.
அவர்களுக்கு இடைஞ்சலாக இப்போது செல்ல வேண்டாம் என்று சற்று தள்ளி நின்றான். ‘சும்மாவே உலகத்தில என் மாமனை போல வருமான்னு பேசியே, என் காது ஜவ்வை கிழிப்பா. இப்ப அவங்க மாமாவோட ராசி வேற ஆகிட்டா போலிருக்கு. இனி தினமும் கதிரை பத்தித்தான் பேசுவா…’ என்று நினைத்தவனின் காதில் கதிர் சொன்ன “இனி எங்க வீட்டுக்கு வராதே…” என்ற வாக்கியம் விழுந்து அவனை நிலைகுலைய செய்தது.
அவனுக்கு கதிர் பேசுவதைக் கேட்டு மிகவும் கோபம் வந்தது. இப்போது, தான் எதாவது கோபத்தில் செய்யப் போய், அது சந்தியாவை மேலும் பாதித்தால் என்ற எண்ணத்தில் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்றான்.
கதிரும், சந்தியாவும் சென்றதும், சித்தார்த் அங்கிருந்த இருக்கையில் சிறிது நேரம் தலையை பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான். அவனுக்கே கதிர் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. சந்தியாவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அவளது அறையில் அவள் கண்ணீரில் மிதந்து கொண்டு இருந்தாள்.
சித்தார்த்துக்கு நன்றாகத் தெரியும் இப்போது தான் அழைத்தாலும் சந்தியா வரமாட்டாள் என்று. அதனால் அனுவுக்கு அழைத்து சந்தியாவைப் பற்றிக் கேட்டான்.
“வெளியே போயிட்டு வரும் போதே ரொம்ப டல்லா வந்தா. அவ பெட்ல படுத்திருக்கா சித்து. அழற மாதிரி இருக்கு. என்ன பண்றது?” என்றாள் அனு புரியாமல்.
“அப்படியே விட்டுடு. நாளைக்கு சரி ஆகிடுவா. ஆனா, நைட் நடுவுல எழுந்து என்ன பண்றான்னு பார்த்துக்கோ. நான் நாளைக்கு அவளை சரி பண்ணிடுறேன்…” என்றான்.
“சரி, உனக்கு தெரியுமா ஏன் இப்படி இருக்கான்னு?”
“ம்ம் ஒன்னும் இல்லை. அவங்க மாமாவோட சண்டை அதனால தான். அவளை பார்த்துக்கோ…” என்ற சித்தார்த் மனமே இல்லாமல் அங்கிருந்து கிளம்பிச்சென்றான்.
மறுநாள் கல்லூரிக்கு வந்த சந்தியா அமைதியாக இருக்க, சித்தார்த்தும் அவளை கண்டுகொள்ளாமல் இருந்தான். இரவெல்லாம் அழுதிருக்கிறாள் என்று அவளது வீங்கிய இமைகளைப் பார்த்து தெரிந்துகொண்டான். ஆனாலும் அவனாக எதுவும் கேட்கவில்லை. மதியம் சந்தியா உணவருந்த வர மறுத்தவள், தனியாகச் சென்று ஒரு பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளருகில் சென்று அமர்ந்த சித்தார்த் “என்ன மேடம் சாப்பிட வரலை….” என்று எப்போதும் பேசுவது போல் பேச,
“உனக்குத் தெரியுமா சித்து, கதிர் மாமா என்னை வேண்டான்னு சொல்லிட்டாங்க…” என்றாள் சந்தியா வேதனையாக.
“சொன்னா சொல்லிட்டு போறார். அவர் ஒருத்தர் மட்டும் தான் இந்த உலகத்தில இருக்காரா என்ன? எதுக்கு இந்த சோகம்…” என்று சந்தியா மனதில் இருப்பதை வெளியே கொண்டு வருவதற்காகச் சித்தார்த் அலட்சியமாகப் பேச,
“எனக்கு கதிர் மாமா தான் உலகம்…” என்றாள் சந்தியா அழுத்தமாக.
‘நேத்து தான இவ கதிர் கிட்ட, நீ எனக்கு வேண்டான்னு சொன்னா…’ என்று நினைத்த சித்தார்த்துக்குப் புன்னகை வர,
அதை அடக்கியவன் “ஆனா… நேத்து யாரோ நீங்களே இனி வந்தாலும், நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்னு கதிர் கிட்ட சொன்னாங்களே. நானே அதைக் கேட்டேனே, அவங்க யாருன்னு உனக்குத் தெரியுமா சந்தியா…” என்று அவளை சீண்ட, சந்தியாவின் விழிகள் கண்ணீரால் நிரம்பியது.
“அது உண்மை தான். அதுக்காக நான் கதிர் மாமாவை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிப்பேன்னு அர்த்தம் இல்லை.” என்றாள் ரோஷமாக.
“சரி அப்படியே இரு…” என்ற சித்தார்த் சந்தியாவின் போக்கிலேயே சென்றவன், அப்போது தான் தள்ளி நின்று இவர்களையே பார்த்துக்கொண்டிருந்த ஸ்ரீஜாவை கவனித்தான்.
சந்தியாவிற்கும் சேர்த்து உணவு கொண்டு வந்தவள், அதைக் கொடுப்பதற்காக அவளைத் தேட, சந்தியாவும், சித்தார்த்தும் எதோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து, அங்குச் செல்வதா, வேண்டாமா என்று தயக்கத்துடன் தள்ளி நின்று அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஸ்ரீஜாவை பார்த்த சித்தார்த் முகம் மலர “ஹாய் ஸ்ரீ, வா… ஏன் அங்கயே நிக்கிற….?” என்றதும், அவர்கள் அருகில் வந்த ஸ்ரீஜா இருவரின் முகத்தையும் மாறி மாறி பார்க்க, சந்தியா விழிகளைத் துடைத்துவிட்டு ஸ்ரீஜாவை பார்த்து புன்னகைத்தாள்.
“இந்தாங்க அக்கா உங்களுக்கு சாப்பாடு கொண்டு வந்தேன்…” என்று ஸ்ரீஜா உணவு பாத்திரத்தை கொடுக்க,
சந்தியா அதை மறுப்பதற்கு முன் வாங்கிய சித்தார்த் “உங்க அக்காவுக்கு மட்டும் தானா. எனக்கு இல்லையா…” என்று புன்னகையுடன் கேட்டவன், ஸ்ரீஜா இங்கிருந்தால் சந்தியா சாப்பிடுவாள் என்று நினைத்து.
“சரி நான் போய் என்னோட ஃபரண்ட்ஸ் கிட்ட சொல்லிட்டு வரேன்…” என்று ஸ்ரீஜா கிளம்ப,
“அப்படியே அங்க அனுக்கிட்ட எங்களோட லஞ்ச் இருக்கும், அதையும் வாங்கிட்டு வா ப்ளீஸ்…” என்றான் சித்தார்த்.
ஸ்ரீஜா வந்ததும் மூவரும் சாப்பிட அமர்ந்தனர். மூவரும் உணவை பகிர்ந்து கொண்டு சாப்பிட. சந்தியா விழிகளில் பெருகும் நீரை உள்ளே இழுத்தபடி உணவை அளந்து கொண்டு இருந்தாள். சித்தார்த் அவளை கண்டுகொள்ளாமல் ஸ்ரீஜாவுடன் பேசிக்கொண்டே சாப்பிட்டான்.
“உனக்கு டாக்டருக்கு படிக்கணும்னு சின்ன வயசுல இருந்து ஆசையா ஸ்ரீ…”
“அப்படியெல்லாம் இல்லை என்னோட அப்பா, அம்மாவுக்கு நான் டாக்டர் ஆகணும்னு ஆசை. அதனால தான் மெடிக்கல் காலேஜ் சேர்ந்தேன். ஆனா, இங்க வந்த பிறகு எனக்கே ரொம்ப பிடிச்சிடுச்சு…” என்று ஸ்ரீஜா புன்னகையுடன் சொல்ல,
“எனக்கும் அப்படித்தான். எங்க அம்மா, அப்பா ரெண்டு பேருமே டாக்டர்ஸ். அதனால தான் நானும் டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்டேன். ஆனா இங்க வந்த கொஞ்ச நாள்லயே, இங்க வர்ற நோயாளிங்க கண்ணுல தெரியற தவிப்பையும், பயத்தையும் அதே அவங்க குணமாகி போகும் போது, அவங்க முகத்தில தெரியிற மகிழ்சியையும் பார்த்து தான் மருத்துவம் படிக்கிறது எவ்வளவு பெரிய விஷயம்னு புரிஞ்சிக்கிட்டேன்…”
“மத்தவங்களோட துன்பத்தை தீர்க்க கடவுள் நமக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கும் போது, அதை இன்னும் சிறப்பா செய்யணும்னு நினைக்கிறேன். அதனால தான் இப்ப இன்னும் ஈடுபாட்டோட என்னால படிக்க முடியுது. நாம சில பேர பார்த்து நினைப்போம், இவங்களுக்கு என்ன கஷ்டம் இருக்குன்னு. ஆனா, அவங்களுக்குத் தான் எல்லோரையும் விட அதிகக் கஷ்டம் இருக்கும். அவங்க அதை வெளிய காமிச்சிக்கவே மாட்டங்க. அதுவும் நாம டாக்டர்ஸ் நம்மோட கஷ்டத்தை எப்பவும் வெளிய காமிச்சிக்கக் கூடாது…”
“நம்மக்கிட்ட வரும் நோயாளிங்க நம்மை பார்த்து இவங்களுக்கே எதோ பிரச்சனை இருக்கும் போலிருக்கே, இவங்க நமக்கு ஒழுங்கா வைத்தியம் பார்ப்பாங்களான்னு சந்தேகப்படுறது நல்லதா, அதோட நம்ம கஷ்டத்தையே நினைச்சிட்டு இருந்தா, நம்மால தான் ஒழுங்கா வைத்தியம் பண்ண முடியுமா, அதனால இப்ப இருந்தே மனசை கட்டுப்பாடா வச்சுக்க நமக்கு தெரியனும்.” என்று சித்தார்த் முதல் வருடம் படிக்கும் ஸ்ரீஜாவை பார்த்துப் பக்கம், பக்கமாக வசனம் பேச, அவள் தலை சுற்றி அமர்ந்திருந்தாள்.
“போதும் நிறுத்து, ஸ்ரீஜா காதுல இருந்து ரத்தம் வருது பாரு. இனி அவ நம்ம ரெண்டு போரையும் பார்த்தா தலை தெறிக்க ஓடப்போறா. ஏன் இந்தக் கொலைவெறி உனக்கு? அவ எனக்கு எதோ நல்ல சாப்பாடு கொண்டு வர்றா. அது உனக்குப் பொறுக்கலையா….” என்ற சந்தியா சித்தார்த்தின் முதுகில் அடிக்க, அதைப் பார்த்து ஸ்ரீஜா சிரித்தாள்.
சந்தியா உணவை முடித்து, முகம் கழுவி வந்தவள் “எனக்கு கொஞ்சம் படிக்க வேண்டியது இருக்கு, நான் க்ளாஸ்கு போறேன். பாவம் அந்தப் பிள்ளைய விட்ரு…” என்று சித்தார்த்தை பார்த்து சொல்லிவிட்டு, தெளிவாக தன் வகுப்பறையை நோக்கிச் சென்றாள். அவளுக்கு தெரியும் சித்தார்த் பேசியது தனக்காகத் தான் என்று.
சந்தியா சென்றதும், சித்தார்த் ஸ்ரீஜாவை பார்த்து “தேங்ஸ்…” என்றான்.
“எனக்கு உங்க ரெண்டு போரையும் பார்த்தா பொறாமையா இருக்கு. நான் உங்க ரெண்டு போரையும் பார்த்துட்டு முதல்ல லவ்வர்ஸ்னு நினைச்சேன்…” என்று யோசிக்காமல் சொன்ன ஸ்ரீஜா, சித்தார்த் எதுவும் தப்பாக எடுத்துக் கொள்வானோ என்று அவன் முகம் பார்க்க,
சித்தார்த் புன்னகையுடன் “நாட்ல ஏழு, எட்டு கேள் ஃபரண்ட்ஸ் வச்சிருக்கவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான். நான் இந்த ஒன்ன வச்சிக்கிட்டு படுற பாடு இருக்கே, இதுல இவளை நான் லவ் வேற பண்ணிட்டாலும் வெளங்கிடும்….” என்று அவள் சொன்னதைச் சாதரணமாக எடுத்துக்கொண்டு கிண்டலாகப் பேசினான்.