மேடையின் அருகே நின்று சந்தியா ஆடுவதைப் பார்த்துக்கொண்டிருந்த நந்தினி பார்வையாளர்கள் பக்கம் தன் பார்வையைத் திருப்ப, மலர்ந்த முகமும், இதழில் புன்னகையுமாக அமர்ந்திருந்த கதிரை பார்த்துவிட்டாள். நந்தினி மனதில் அத்தனை நாள் ஆழத்தில் இருந்த கதிரின் நினைவு மேலே வர, அவள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
அப்போது ஆசிரியர் ஒருவர் நந்தினியை அழைத்து, அவளிடம் குளிர்பானங்கள் இருந்த தட்டைக் கொடுத்து முன் வரிசையில் இருந்த விருந்தினருக்குக் கொடுக்கச் சொல்ல, நந்தினியும் கதிரை அருகே பார்க்கலாம் என்ற ஆவலில் சென்றாள்.
எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டே வந்த நந்தினி, கதிரின் அருகே வந்ததும், தட்டை தவறவிட, அதில் இருந்த குளிர்பானம் கீழே கொட்டிவிட்டது.
“என்னங்க பார்க்கும் போது எல்லாம் எதையாவது தவற விடுறீங்க….” என்று புன்னகையுடன் கதிர் சொல்ல, நந்தினி “சாரி தெரியாம….” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாகச் சென்றாள்.
அவள் உள்ளே சென்று மறுபடியும் குளிர்பானம் எடுத்துக் கொண்டு வந்து பார்த்த போது கதிர் அங்கே இல்லை. நந்தினி அவனைத் தேட, அவன் தூரத்தில் நின்று கொண்டிருந்த காரில் ஏறிக்கொண்டிருந்தான். அவனுடன் சந்தியாவும், காவேரியும் சென்றனர். நந்தினி சோர்வோடு திரும்பி சென்றாள்.
மறுநாள் பள்ளி இடைவேளையில் சந்தியா பெஞ்சில் தலை வைத்து தன் நோட்டில் எதையோ கிறுக்கி கொண்டிருக்க,
“ஏன் டி நேத்து உன்னோட மாமன பார்த்ததும், எங்கக்கிட்ட சொல்லாம கூடப்போய்ட்ட…” என்று சித்ரா அவளை வம்பிழுக்க,
“நான் எங்க போனேன்? அதுதான் வான்னு இழுத்திட்டு போச்சு….” என்ற சந்தியா அப்போதும் கிறுக்கிக்கொண்டு தான் இருந்தாள்.
“ஒரே லவ்ஸ் ஆக்கும்…” என்று சித்ரா நொடிக்க,
“மாமன் மகன்னா கண்டிப்பா லவ் பண்ணனுமா என்ன?” இப்படிக் கேட்டது சந்தியா இல்லை நந்தினி.
“அது தான..!” என்று எழுந்தமர்ந்தாள் சந்தியா.
“என்ன அது தானன்னு இழுக்கிற. நீ உங்க கதிர் மாமாவை தான கட்டிக்கப் போற…” என்று சித்ரா கேட்க, நந்தினி இதற்கு சந்தியா என்ன சொல்லப் போகிறாள் என்பது போல் தவிப்பாக அவளைப் பார்த்தாள்.
“ஆமாம்! நான் எங்க கதிர் மாமாவை தான் கட்டிப்பேன்…” என்று தேங்காய் உடைத்தது போல், அதுவும் நந்தினியின் தலையில் உடைத்தது போல் பட்டென்று சந்தியா சொல்ல, நந்தினி தன் ஏமாற்றத்தை மறைக்க முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“பிறகு இது பேர் லவ்ஸ் இல்லாம என்ன?” என்ற சித்ரா சந்தியாவைப் பார்க்க,
“ம்ம்… எனக்கு இதுதான் புரியவே மாட்டேங்குது சித்ரா. எனக்கு என் கதிர் மாமாவை பிடிக்கும். ஆனா, அது லவ்வான்னு தெரியலை. லவ்னு எப்படிக் கண்டுபிடிக்கிறது…” என்று சந்தியா தன் கன்னத்தில் விரலை தட்டி யோசிக்க,
“என்னைக் கேட்டா? நான் மட்டும் என்ன இதுக்கு முன்னாடி பத்து பேரையா லவ் பண்ணியிருக்கேன்…” என்ற சித்ரா நந்தினியை காட்டி “இந்த மாதிரி அமுக்கினியை தான் நம்ப முடியாது. எதுக்கும் இவளைக் கேளு…” என்றாள்.
நந்தினிக்கு இவர்கள் பேச்சு எதுவும் ரசிக்கவில்லை. அவள் சித்ராவை முறைத்துவிட்டு எதோ படிப்பது போல் பாசாங்கு செய்தாள்.
“ஏய் என்னைப் போட்டு ஏன் டி இம்சைப் படுத்துற….” என்ற சித்ரா, சந்தியாவைத் தன் தோளில் இருந்து தள்ளிவிட்டவள்
“நீ சொல்றதைப் பார்த்தா இதுக்கு எதாவது துப்பறியும் நிபுணர் தான் வர சொல்லணும் போல. நீ இந்த சினிமாவெல்லாம் பார்த்தது இல்ல? லவ் பண்றவங்களுக்குப் பசிக்காது, தூக்கம் வராதுன்னு சொல்வாங்களே, உனக்கு இது மாதிரி எதுவும் அறிகுறி இருக்கா….” என்று சந்தியாவைப் பார்க்க, சந்தியாவின் முகம் அழுகைக்குத் தயாரானது.
“இல்லையே நான் இப்பவெல்லாம் முன்னாடிய விட அதிகமா சாப்பிடுறேனே. நைட்டும் நல்லா தூங்குறேன். அப்ப எங்க மாமா மேல எனக்கு லவ் இல்லையா….” என்று சந்தியா சொல்லிக்கொண்டிருக்கும் போதே, பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் கீதா அவளைத் தேடிக்கொண்டு வந்தாள்.
“இங்க தான் இருக்கியா புள்ள. நான் உன்னைத் தான் பார்க்க வந்தேன்…” என்று கீதா சொல்ல,
“சொல்லு கீதாக்கா எதுக்கு என்னைத் தேடின?” என்று சந்தியாவும் பொறுமையாக விசாரிக்க,
“நான் அடுத்த வருஷம் காலேஜ்ல கம்ப்யூட்டர் க்ரூப் எடுக்கலாம்ன்னு இருக்கேன். உங்க மாமாவும் MCA தான படிக்கிறாங்க. என்னை அவங்கக்கிட்ட கூட்டிட்டு போறியா, எனக்குச் சில விவரம் கேட்கணும். எனக்கும் காவேரிக்கும் சண்டை, இல்லைன்னா நான் அவளோடயே போயிருப்பேன்…” என்று கீதா சொல்லிக்கொண்டே வர, சந்தியா முகம் மாறியவள்
“இன்னைக்குப் பொட்டி கடையில கூடக் கம்ப்யூட்டர் இருக்குது. விரல் சூப்புற பிள்ளை கூடக் கம்ப்யூட்டர்ல தான் விளையாடுது. இதுல நீ என் மாமன்கிட்ட என்ன கேட்கப் போற? இந்த ஊர்லையே என் மாமா மட்டும் தான் கம்ப்யூட்டர் படிக்குதா? மேல தெரு மாலதி அக்கா, நம்ம கோவில் அய்யர் பொண்ணு காயத்ரி இவங்களும் கம்ப்யூட்டர் சம்பந்தமா தான் படிக்கிறாங்க.
அவங்களுக்குத் தெரியாததுதான், என் மாமனுக்குத் தெரியப் போகுதா? இந்த ரூட் விடுற வேலை எல்லாம் வேற யார்கிட்டையாவது வச்சுக்கோ. என் மாமன்கிட்ட உன் ஆட்டத்தைக் காட்டின….” பத்திரகாளியாகச் சந்தியா எழுந்து நிற்க,
அதற்குமேல் அந்தக் கீதா அங்கே நிற்பாளா என்ன? அவள் அலறி அடித்துக் கொண்டு அவள் வகுப்பிற்கு ஓடிவிட்டாள்.
சந்தியாவின் அவதாரத்தைப் பார்த்து நந்தினி அரண்டுவிட்டாள். அவள் சந்தியவையே பார்க்க, சித்ரா சந்தியாவின் தலையில் தட்டி உட்கார வைத்தவள் “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒருத்தி, நான் எங்க மாமனை லவ் பண்றேன்னான்னு தெரியலைன்னு சொல்லிட்டு, பாவம் படிக்க வந்த புள்ளைய விரட்டுறதப் பாரு…” என்றதும்,
“யாரு, இது படிக்கிற புள்ளையா? முதல்ல ஸ்கூல் முடிச்சு தாண்ட சொல்லு பார்க்கலாம்.” என்ற சந்தியாவின் முகம் திடீரென்று மகிழ்ச்சிக்கு தாவியது “இப்ப எதுக்கு அப்படிச் சொன்ன?” என்றாள் சித்ராவைப் பார்த்து.
“கீதா அப்படிக் கேட்டதும் உனக்கு ஏன் இம்புட்டுக் கோபம் வருது? உன் மாமனை நீ லவ் பண்றதுனால தான்…” என்று சித்ரா சொன்னதும், மகிழ்ந்த சந்தியா தான் கிறுக்கிக் கொண்டிருந்த புத்தகத்தைப் பார்க்க, அதில் அவள் கதிர், கதிர் என்று தான் விதவிதமாக எழுதி இருந்தாள்.
சந்தியாவின் முகத்தைப் பார்த்த சித்ரா புன்னகையுடன் “ஏய் புள்ள, நீ பாட்டுக்கு பாட்டு சீனுக்குப் போய்டாத. இப்ப நம்ம கணக்கு டீச்சர் வருவாங்க…” என்றதும், வெட்கப்பட்ட சந்தியா, பாடத்தைக் கவனிக்கத் தயாரானாள்.
அந்த வருடம் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை சந்தியா, நந்தினி, சித்ரா மூவரும் சிறப்பாகச் செய்தனர். எப்போதும் அவர்கள் ஊரில் வைகாசி மாதம் தான் திருவிழா நடக்கும். அப்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், அவர்கள் ஊரே ஜன வெள்ளத்தில் மிதக்கும். இந்த முறையும் திருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்தனர்.
கதிருக்கு எப்போதும் நண்பர்களோடு ஊர் சுற்றுவது, தெருவில் நின்று நண்பர்களுடன் அரட்டை அடிப்பது இதெல்லாம் பிடிக்காது. அவனுடைய பள்ளி நண்பன் ஒருவன் அதே ஊரில் கடை வைத்திருக்கிறான். கதிரும் அவன் மற்ற நண்பர்களும் அங்கே சந்தித்துப் பேசிக்கொள்வார்கள்.
கதிர் காலையில் கூட்டம் அதிகமாக இல்லாத நேரத்தில் கோவிலுக்கு வந்துவிட்டுச் சென்றுவிடுவான். ஆனால் சந்தியாவும், காவேரியும் தினமும் வித விதமான உடைகள் அணிந்து காலையும், மாலையும் கோவிலில் நடக்கும் அனைத்து விசேஷங்களிலும் பங்கெடுத்து, ஒரு கலக்கு கலக்கினர்.
இப்படியே திருவிழாவின் கடைசி நாளும் வந்தது. அன்று இரவு அவர்கள் ஊரில் ஆடலும், பாடலும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதைப் பார்க்க மொத்த ஊருமே வரும். சந்தியாவும், காவேரியும் தங்கள் அம்மாக்களுடன் வந்தனர். நந்தினியும், சித்ராவும் இரண்டு வரிசை முன்பு உட்கார்ந்திருப்பதைப் பார்த்த சந்தியா தன் அம்மாவிடம் சொல்லிக்கொண்டு அவர்களுடன் சென்று அமர்ந்தாள்.
நிகழ்ச்சி ஆரம்பிக்கச் சிறிது நேரம் இருந்த போது கதிர் வந்தான். அவனைப் பார்த்ததும் அவன் ஊர் இளவட்டங்கள் கதிர் அண்ணா என்று அழைத்து அவனிடம் மரியாதையாகப் பேச, கதிரும் அவர்களை நலம் விசாரித்துவிட்டு, தன் நண்பர்களின் அருகே சென்று நின்றான். சந்தியா எப்போது நிகழ்ச்சி ஆரம்பிப்பார்கள் என்று மேடையையேப் பார்த்து கொண்டிருந்தாள். அவளுக்கு ஆடலும், பாடலும் பார்க்க மிகவும் பிடிக்கும்.
நிகழ்ச்சி ஆரம்பித்தது, முதலில் சாமி பாட்டுக்கு வந்து ஆடினார்கள். அடுத்து விஜய் பாட்டு, அஜித் பாட்டு என்று நிகழ்ச்சி களைகட்டியது. சிறிது நேரத்தில் சந்தியாவின் அம்மாவும், அத்தையும் இதைப் போய் யாரு பார்க்கிறது என்று வீட்டுக்கு கிளம்ப, சந்தியாவும், காவேரியும் அவர்களுடன் செல்ல மறுத்தனர்.
‘சரி கதிரோட வாங்க..’ என்று சொல்லிவிட்டு அவர்கள் சென்றுவிட, ஒரு மணிநேரம் சென்று கதிர் காவேரியிடம் வா போகலாம் என்று ஜாடை காட்ட, அவள் சந்தியாவை அழைத்தாள்.
சந்தியா கதிரை பார்த்து ‘இன்னும் ஒரு பாட்டு பார்த்திட்டு வரேன்…’ என்று ஜாடையில் சொல்ல, கதிர் திரும்பி மேடையைப் பார்த்தான். அந்தப் பாட்டும் முடிந்து அடுத்தப் பாட்டு வர, இப்போது சந்தியா மீண்டும் இன்னும் ஒரே ஒரு பாட்டுப் ப்ளீஸ், என்று கண்களால் கெஞ்ச, கதிர் சரியென்று அப்போதும் அமைதியாக இருந்தான்.
ஆனால் அந்தப் பாட்டும் முடிந்தும் சந்தியா கிளம்பாமல் அமர்ந்திருக்க, கதிர் சந்தியாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“தெரியும், நீ அதைப் பார்க்காத. இன்னும் ரெண்டு பாட்டு பார்த்திட்டு போகலாம்.” என்ற சந்தியா மேடையிலேயே கவனமாக இருக்க, கதிருக்குக் கோபம் ஏறியது.
கதிருக்கு அவ்வளவு எளிதாகக் கோபம் வராது, வந்தால் போகாது. அவன் சந்தியாவையும், காவேரியையும் பார்த்து முறைத்தவன், அங்கிருந்து கிளம்ப, அதை ஓரக்கண்ணில் பார்த்துக் கொண்டிருந்த சந்தியாவும், காவேரியும் அலறியடித்துக் கொண்டு எழுந்து அவன் பின்னே சென்றனர். அவர்கள் வருவதைப் பார்த்த கதிர் நின்று அவர்களைத் தன்னுடன் அழைத்துக் கொண்டுச் சென்றான்.
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த நந்தினிக்கு சந்தியாவைப் பார்த்துப் பொறாமையாக இருந்தது. அவளும் கதிர் தனக்கு கிடைக்க மாட்டான் என்று மனதை தேற்றித் தான் வைத்திருந்தாள். (கவலைப்படாதே நந்தினி உனக்குச் சந்தியாவே ஒரு வாய்ப்பு தருவாள்) ஆனால் கதிரை பார்த்ததும் அவளால் தன் மனதை கட்டுப்படுத்த முடியவில்லை. கதிர் முன்னே நடக்க, சந்தியாவும் காவேரியும் சற்று பின்னே சென்றனர்.
“உங்க அண்ணன் ஏன் இதுக்கெல்லாம் மூஞ்சிய தூக்கி வச்சிட்டு வருது…” என்று முனங்கியபடி சந்தியா சென்றாள்.
முதலில் கதிர் வீடு தான் வரும், அடுத்த இரண்டு தெரு தள்ளி தான் சந்தியாவின் வீடு. அதனால் காவேரியை அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு கதிர் சந்தியாவுடன் சென்றான். வீட்டை விட்டு தள்ளி வந்ததும் “என்ன மாமா இந்தச் சின்ன விஷயத்துக்குப் போய் இவ்வளவு கோபப்படுற…” என்று சந்தியா ஆரம்பிக்க,
“உனக்கு நம்ம ஊர் பயலுங்களைப் பத்தித்தெரியாது. இன்னும் கொஞ்ச நேரத்தில எல்லோரும் எழுந்து ஆடுவானுங்க. அப்புறம் எல்லார் மேலையும் வந்து விழுவாங்க. இது தேவையா. அதுக்கு முன்னாடி வீட்டுக்கு போயிடலாம்னு தான் கூப்பிட்டேன்.” என்றான் கதிர்.
அவன் சொல்வது உண்மை என்பதால் சந்தியா அமைதியாக வந்தாள். அவர்கள் அடுத்தத் தெருவிற்குள் நுழைந்த போது, சற்று தள்ளி நாலைந்து பேர், இளவட்டங்கள் தான் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் வெளியூர் என்று கதிருக்குப் பார்த்ததும் தெரிந்துவிட்டது. அவன் வலது பக்கம் நடந்து வந்த சந்தியாவை இடது பக்கத்துக்கு விட்டு மெதுவாக அவளுடன் பேசியபடி சென்றான்.
சந்தியாவிற்கு ஏனோ அவர்களைப் பார்த்ததும் மனதிற்குள் கலக்கம் ஏற்பட்டது. அவள் பயந்த படியே, வலது பக்கம் இருந்தவர்கள் மெதுவாக நடப்பது போல் இடப்பக்கம் மாறி நின்றனர். சந்தியா கதிரின் முகம் பார்க்க, அவன் முகம் இறுகி இரும்பை போல் இருந்தது. அவளுக்கு அவனைப் பார்க்கவே பயமாக இருந்தது.
சந்தியாவும் கதிரும் அவர்களின் அருகே வந்ததும், ஒருவன் வேண்டுமென்றே மற்றொருவனைப் பிடித்துத் தள்ள, அவன் சந்தியாவின் மீது விழ பார்க்க, கண்ணிமைக்கும் நேரத்தில் கதிர் சந்தியாவைப் பிடித்து அவன் அருகில் இழுத்ததால், சந்தியா தப்பித்தாள். அவள் மீது விழ வந்தவன் ஏமாற்றமடைந்தான்.
சந்தியாவை வலப்புறம்விட்டு அவள் தோள் மீது கைப்போட்டு அணைத்தபடி கதிர் சென்றான். சந்தியா கதிரின் முகத்தையும், அவள் தோள் மீது இருந்த அவனின் கையையும் மாறி, மாறி பார்த்துக் கொண்டே வந்தாள். தங்கள் பின்னால் அந்தக் காலிப்பயல்கள் வருவதை உணர்ந்த கதிர் அங்கயே நின்றவன், சந்தியாவைப் பார்த்து “சீக்கிரமா வீட்டுக்கு போ…” என்றான்.
இன்னும் நாலைந்து வீடு தள்ளினால் அவளின் வீடு. சந்தியா கலக்கத்துடன் “நீயும் வா மாமா…” என்றாள்.
“போன்னு சொல்றேன் இல்ல…” என்று கதிர் கத்த, சந்தியா அவள் வீட்டை நோக்கி ஓடினாள்.
கதிர் நின்று திரும்பி அந்தப் பொறுக்கிகளைப் பார்த்து, “தைரியம் இருந்தா இப்ப வாங்கடா..” என்று அழைத்தான். அவர்களும் ‘நாம அஞ்சு பேர் இவன் ஒருத்தன் தான..’ என்று தைரியமாக முன்னேற,
வீட்டுக்கு சென்ற சந்தியா கதவை திறந்த தன் தந்தையிடம் “அப்பா நானும் கதிர் மாமாவும் வரும் போது, காலிப்பயளுங்க வந்து வம்பு இழுத்தானுங்கப்பா.. மாமா அவனுங்களோட தனியா இருக்குப்பா…” என்று சொல்லி கூட முடிக்கவில்லை,
சந்தியாவின் அப்பா துரை வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு கையில் கம்புடன் சென்றார். சந்தியா சொன்னதைக் கேட்டு கொண்டிருந்த அவளின் அப்பத்தாவும், அம்மா வேதவல்லியும் வீட்டில் இருந்த விலக்கமாரை ஆளுக்கு ஒன்று எடுத்துக் கொண்டு சென்றனர்.
அவர்கள் ஐந்து பேராக இருந்த போதிலும் கதிர் அவர்களை நன்றகவே துவைத்து எடுத்துக் கொண்டு தான் இருந்தான். இதில் துரையும் வந்து அவனுடன் சேர்ந்து அவர்களைத் தாக்கிக் கொண்டிருக்கும் போது, வீட்டு பெண்களும் அவர்களுடன் சேர்ந்து அந்தப் பொறுக்கிகளை வெளுத்து வாங்க ஆரம்பித்தனர்.
அடி தாங்காமல் காலிப்பயல்கள் தப்பித்து ஓடப் பார்த்தனர். இவர்களின் சத்தம் கேட்டு வெளியே வந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை வளைத்து பிடித்தனர். கதிரிடம் நடந்ததைக் கேட்டு தெரிந்து கொண்ட துரை, கதிரை வீட்டுப் பெண்களுக்குக் காவல் வைத்து விட்டு, அந்தப் பொறுக்கிகளை அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்றார்.
அப்பத்தா வெளியில் அமர்ந்து ஊர் பெண்களுடன் பேச, வீட்டுக்கு வந்த கதிருக்கு வேதவல்லி பால் கொண்டு வந்து கொடுத்துவிட்டு உள்ளே சென்று படுத்துவிட்டார். கதிர் ஹாலில் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டே பால் குடித்துக் கொண்டிருந்தவன், எதோ தோன்ற, சந்தியாவைப் பார்க்க, அவள் இமைக்காமல் அவனையே பார்த்து கொண்டிருந்தாள். அவள் கண்களில் இருந்த மயக்கத்தைப் பார்த்தவன், என்ன என்பது போல் புருவத்தை உயர்த்த,
“நீ சூப்பர் மாமா! நான் இது போல எல்லாம் சினிமாவுல மட்டும் தான் நடக்கும்னு நினைச்சேன்…” என்றாள் உற்சாகமாக.
அவள் சொன்னதைக் கேட்டு கதிர் புன்னகைக்க, சந்தியா எழுந்து சென்று அவன் அருகில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்தவள், மெதுவாக “ஐ லவ் யூ மாமா” என்றாள்.
இப்போது கதிர் அவளைப் பார்த்து முறைக்க. சந்தியா பயந்து அவள் முன்பு அமர்ந்திருந்த இடத்திற்கே சென்று அமர்ந்தாள்.
“பத்தாங்கிளாஸ் தான் முடிச்சிருக்க. அதுக்குள்ள லவ்வு.” என்றவன் “மனச அலைய விடாம, ஒழுங்கா படிக்கிற வழிய பாரு.” என்றான் கடுமையான குரலில்.
“ஆமா… இவரு மட்டும் ஆள முழுங்குற மாதிரி பார்ப்பாரு. நாம மட்டும் லவ் பண்றோம்னு சொல்லக் கூடாது.” சந்தியா வாய்க்குள்ளயே முனங்க,
“என்ன அங்க சத்தம்? நீ இப்படியெல்லாம் பேசினா…. இனி உன்னை நான் பார்க்க வரமாட்டேன்…” கதிர் எச்சரிக்க, சந்தியாவின் கண்கள் கலங்கியது.